logo

|

Home >

to-practise >

sivarchana-chandrika-ubachaaram

சிவார்ச்சனா சந்திரிகை - உபசாரம்

 

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை

உபசாரம்

இவ்வாறு விரிவாக உபசாங்களனைத்தையும் செய்ய இயலவில்லையாயின், பதினாறு அல்லது ஐந்து உபசாங்களையாவது செய்யவேண்டும்.

பதினாறு உபசாரங்களாவன:- ஆவாகனம், ஆசனம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனம், அபிஷேகம், ஆடைதரித்தல், உபவீதந்தரித்தல், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், முகவாசம், தோத்திரத்துடன் கூடின நமஸ்காரம், பிரதக்ஷிணத்துடன் கூடின அனுப்புதல் என்பன.

அல்லது ஆசனம், ஆவாகனம், பாத்தியம், ஆசமனம், அர்க்கியம், அபிஷேகம், ஆடைதரித்தல், சந்தனம், புஷ்பம், நைவேத்தியம், தாம்பூலம், தூபம், தீபம், ஆரத்தி, பஸ்மம், சுளுகோதகம் என்னும் இவற்றைப் பதினாறு உபசாரமாகக் கொள்ளலாம்.

ஆவாகனம், ஆசனம், பாத்தியம், ஆசமனம், அ£¢க்கியம், அபிஷேகம், ஆடை, சந்தனம், புஷ்பம், நைவேத்தியம் எனப்பத்து உபசாரங்களைக் கொள்ளுதலுமுண்டு.

ஐந்து உபசாரங்களாவன:- சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் என்பன.

பிருதிவி முதலிய ஐந்து பூதங்களின் சம்பந்தமான உபசாரங்களை ஐந்து உபசாரமெனக்கூறுதலுமுண்டு. அவை வருமாறு:-

பிருதிவி சம்பந்தமான உபசாரமாவது:- சந்தனம், புஷ்பம், கிழங்கு, வேர், பழமென்னுமிவயாம்.

அப்பு சம்பந்தமான உபசாரமாவது:- ஜலம், பால், ஆடை, தயிர், கோஜல மென்னுமிவையாம்.

அக்கினி சம்பந்தமான உபசாரமாவது:- சுவர்ணம், இரத்தினம், தீபம், ஆபரணம் முதலியன.

வாயு சம்பந்தமான உபசாரமாவது:- சாமரம், தூபம், விசிறி, ஓலை விசிறியென்னுமிவையாம்.

ஆகாச சம்பந்தமான உபசாரமாவது:- கானஞ்செய்தற்குரிய வாத்தியம், புல்லாங்குழல், வீணை முதலியனவும், வேதகோஷமுமாம்.

இவ்வாறு ஐந்து உபசாரங்கள் சாத்திரத்தை யறிந்தவர்ளால் விரிவாகக் கூறப்பட்டிருக்கவும் சந்தனம் முதல் நைவேத்தியம் ஈறாகவுள்ளவற்றை ஐந்து உபசாரங்களாகக் கூறிய கருத்தென்னை யெனின், விரிவாகக் கூறப்பட்ட அவ்வுபசாரங்களைச் செய்ய முடியாதவர்கட்கு சந்தனம் முதல் நைவேத்தியம் ஈறாகவுள்ள இவையே அவையாக ஆகின்றனவென்பது கருத்தென்க.

வெளியே செல்லும் காற்று உள்ளே செல்லும் காற்று என்னும் இவற்றைச் சந்திர சூரியர்களுடைய கதியாகப் பாவித்து அடக்கி யெவ்வாறு ஆவாகனம் செய்கின்றோமோ அவ்வாறே வாயுக்களை அடக்கிக்கொண்டு எல்லாவுபசாரங்களையும் சிவனுக்குச் செய்ய வேண்டுமென்று ஆகமங்களில் பிரசித்தமாகக் காணப்படுகின்றது. உபசாரங்களில் மாத்திரைகளைக் கணித்துக் காலநியமங்கொள்ளும்படியும் ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றது. அவை வருமாறு:-

ஆவாகனத்தில் பன்னிரண்டு மாத்திரைகள். பாத்தியத்தில் ஐந்து மாத்திரைகள், ஆசமனத்தில் மூன்று மாத்திரைகள், அருக்கியத்தில் ஒரு மாத்திரை, சந்தனத்தில் ஆறு மாத்திரைகள், தூபத்தில் பன்னிரண்டு மாத்திரைகள், தீபத்தில் ஆறு மாத்திரைகள், நைவேத்தியத்தில் இருபத்து நான்கு மாத்திரைகள், ஆரத்தியில் ஏழு மாத்திரைகள், நீராசனத்தில் பதினாறு மாத்திரைகள். பஸ்மத்தில் ஏழு மாத்திரைகள், குடையில் ஐந்து மாத்திரைகள், சாமரத்தில் பத்து மாத்திரைகள், விசிறியில் மூன்று மாத்திரைகள்.

இவ்வாறு சந்திர சூரியர்களுடைய போக்கு வரவாகப் பாவிக்கப்பட்ட நிசுவாச உசுவாசங்களை அடக்கிக்கொண்டு செய்யப்படும் உபசாரங்களிலுள்ள அந்தந்த மந்திரங்களை மனத்தினாலேயே செபிக்க வேண்டும். மந்திரங்களாவன:- பிராசாதம் சிவமந்திரம், பஞ்சப்பிரமம், ஷடங்கம் என்னும் இவையாம். இவற்றை அந்த அந்த உபசாரங்களில் முறைப்படி உபயோகிக்க வேண்டும்.

ஆவாகனம், பாத்தியம், ஆடைதரித்தல், சந்தனம், பூசுதல், ஆபரணமணிதல், கண்ணாடி, குடை, சாமரம், ஓலை விசிறி, செபம், தோத்திரம், நமஸ்காரம் ஆகிய உபசாரங்களிலும் விசேடமாய் விதிக்கப்படாத ஏனைய உபசாரங்களிலும் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது, மந்திரங்களின் முடிவில் நம: என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். அருக்கியம், அபிஷேகம், தூபம், தீபம், நைவேத்தியம், நீர், முகவாசம், நீராசனம், பவித்ரம், செபத்தைச் சமர்ப்பித்தல், பூசையைச் சமர்ப்பித்தல், ஆன்மாவைச் சமர்ப்பித்தல், ஓமம் ஆகிய உபசாரங்களில் மந்திரங்களின் முடிவில் சுவாஹா என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். துடைத்தல், நனைத்தல், புஷ்பம் சாத்துதல், பூரணாகுதி ஆகிய உபசாரங்களில் மந்திரங்களின் முடிவில் வெளஷட் என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். அழுக்கை நீக்குதற்குரிய அபிஷேகம், சுத்தி செய்தல், பாசச் சேதம், புரோக்ஷணம், தாடனம், பேதனம், விக்கினங்களைப் போக்குதல், ஆகிய உபசாரங்களில் மந்திரங்களின் முடிவில் ஹும்பட்என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். இரட்சையில் பட் என்னும் பதத்தையும், ஆசமனத்தில் ஸ்வதா என்னும் பதத்தையும் மந்திரத்தின் முடிவில் உபயோகிக்க வேண்டும்.

Related Content

சிவார்ச்சனா சந்திரிகை- வைகறைத் தியானம்

சிவார்ச்சனா சந்திரிகை - மலசலம் கழிக்குமுறை-

சிவார்ச்சனா சந்திரிகை - தந்த சுத்தி

சிவார்ச்சனா சந்திரிகை - மலஸ்நான விதி

சிவார்ச்சனா சந்திரிகை - அஸ்திர சந்தியின் முறை