logo

|

Home >

shaiva-vina-vidai >

ruttiraakka-iyal

உருத்திராக்க இயல்

 

  1. விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன?

     

    விபூதி உருத்திராக்ஷமும் சிவ சின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேளை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் உருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை. ராக்ஷதரால் பீடிக்கப்படுகிற பாபம் அணுகாது.

     

  2. உருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது?

     

    தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்துகொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு உருத்திராக்ஷம் என்கிற பெயருண்டாயது. (உருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம். ) அதற்குச் சிவ கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் உருத்திராக்ஷ மில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் உருத்திராக்ஷ கண்டிகை அவசியம் தரித்துக்கொள்ள வேண்டும்.

     

  3. எத்தனை உருத்திராக்ஷம் தரித்துக்கொள்ள வேண்டும்?

     

    உச்சியி லொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு, இவ்வாறு தரிக்க வேண்டும். மணிகள் ஒன்றை ஒன்று தொடக்கூடாது.

     

  4. உருத்திராக்ஷங்களி னிடைகளில் ஏதாவது மணிகள் கோக்கலாமா?

     

    இடையிடை பவளம், ஸ்படிகமணி, பொன்மணி யிவைகளைக் கோத்து அணியவேண்டும். இவைகளுமின்றி வில்வப்பழ வோட்டையுஞ் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் உருத்திராக்ஷங்களை மாத்திரம் கோத்துத் தரித்துக்கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி யணிந்ததா லுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த உருத்திராக்ஷங்களில் ஒருமுகம், பதினொருமுகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததா லுண்டாகும் பலன் கிடைக்கும்.

     

  5. உருத்திராக்கம் அணிவதற்கு தகுதியானவர் யார்?

     

    மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர்.

     

  6. உருத்திராக்கம் தரித்துக்கொண்டு மதுபானம், மாமிச உண்டி முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

     

    நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர்.

     

  7. குளிக்கும் காலத்தில் உருத்திராக்ஷசத்தை அணியக் கூடாதா?

     

    அணியலாம், குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.

     

  8. உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

     

    ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரையும் உண்டு.

     

  9. உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?

     

    பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.

     

  10. உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?

     

    குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், என்பவைகளாம்.

     

  11. இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?

     

    ஆம். தலையிலே இருபத்தி இரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.

     

  12. இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?

     

    காதுகளிலும், கண்டத்திலும் எப்போதும் தரித்துக் கொள்ளலாம், மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசல மோசனத்திலும் அணிந்து கொள்ளலாகாது.

     

  13. உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?

     

    சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிற்கு அறிகுறி.

     

    1. பொருளடக்கத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

சிவ மூலமந்திர இயல்