logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)

மகாவித்துவான் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார்  இயற்றியது

        காப்பு - வெண்பா

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்பதிகங் கூறுதற்குத் தொந்திக்
கணபதியைக் கைதொழுதக்கால்.  

        ஆசிரிய விருத்தம் 

நினைவாகிமூல நிலையாகிநேச நிசரூபமான வடிவே
மனமாய்கைமூடி யறிவேகலங்கி மனமும்மயங்கி வெகுவாய்
யினமோடிருந்து வவதிக்குலைந்து வெமதூதரோடி வருமுன்
மனவேகமாக வருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.  (1)

கயிலாயமேரு அதிலாறுவீடு கரைகண்டதில்லை யொருவர்
வெயிலானசோதி விளையாடும்வீடு வெளிமாய்கையேது மறியேன்,
பயிலானகொம்பிற் பசுங்காயுமாகி பழமாயுதிர்ந்து விழுமுன்
மனவேகமாக அருணாசலீசர் வரவேணுமென் றனருகே.  (2)

நதியோடுதும்பை முடிமீதணிந்து நலமானவெள்ளை விடைமேல்
பதியாயிருந்து வுமைபாதிகொண்ட பரனேயுன் னாமமறவேன்
விதினாதனேவ  யெமதூதர்வந்து வெகுவாதைசெய்து விடுமுன்
மதியேபுனைந்த வருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.  (3)

உற்றாருமில்லை யுறவில்லையாரு முறைசொல்லி யிப்பரவவே
பெற்றாருமில்லை மறைதேடுகின்ற பிரானேயுன் னாமமறவேன்
கற்றாருமேற்ற வடியாரிருந்து கனியாயமர்ந்த கனியே
மற்றாருமில்லை யருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.  (4)

கொங்கைக் குரும்பை முலைமாதராசை கொடிதான மோகமதனாற்
சங்கற்பமொன்று மறியாமல்வீணே தடுமாறி யாவிவிடுமுன்
திங்கட்கொழுந்து முடிமீதணிந்த சிவனேயுன் னாமமறவேன்
மங்கைக்கிரங்கு மருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.  (5)

உருவானகாய மதிலாறுவீடு வுதிரங்கலந்த தேகம்
கருவாகிநின்று புவிமீதில்வந்து கபடேதுமொன்று மறியேன்
அருவாகி நின்ற சிவஞானசோதி குருவேநின் னாமமறவேன்
மருவீசுசோலை யருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.   (6)
 
பணியாதகோயி லணியாதநீறு பசியாதசோறு தருவாய்
துணியாதவாசி சிவஞான மோனசுகமே யெனக்கருளுவாய்
தணியாதகோப முடலோடிருந்து சலியாதமாய்கை வெளியே
மணியாடு நாதமருணாசலீசர் வரவேணு மென்றனருகே. (7)

சூதாகிநின்ற சிவசூத்திரங்கள் சுளுவாயமர்ந்த சுழியே
பாதாதிகேச முடலோடிருந்து படுகானி லாடுநடனம்
வேதாவுமாட மதியாடமூவர் விளையாடிநின்ற வெளியே
வாதாடிநின்று வருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.  (8)

அடிமூலவட்ட மதிலாறுதிட்ட வதின்மே லிருந்தபரனே
துடியானசத்தி சிவரூபவல்லி சுகமான வேதவடிவே
அடியார்களுள்ளத் தெரிவாய்விளங்கு மரனேநின் னாமமறவேன்
வடிவானசோதி அருணாசலீசர் வரவேணுமென்ற னருகே. (9)

உரைதங்கிநின்ற வுயிரெங்குமாதி யுலகெங்கு மேகவடிவாய்
கரைகண்டதில்லை வெகுகோடி காலங்கலிகாலமாய் கையதனால்
இரைதேடியாசை பசியான் மெலிந்துயிர்கண் டியங்கிவிழுமுன்
வரைதங்கிநின்ற வருணாசலீசர் வரவேணுமென்ற னருகே.  (10)

    அருணாசலீசர் பதிகம் முற்றிற்று.
 

Related Content