logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது

(கோயமுத்தூர் கந்தசாமி முதலியார்)

    • காப்பு
      வெண்பா
      பிள்ளை மதிமுடியெம் பேரூர்ப் பெருமான்மேற்
      கிள்ளை விடுதூது கிளத்தவே – ஒள்ளீயபூங்
      காவிரியக் கும்பமுனி கைக்கரகநீர் கவிழ்த்துக்
      காவிரியைத் தந்தவன்றாள் காப்பு
  • நூல் 

கலிவெண்பா
மாமேவு செங்கமல மாதரசும் வெண்கமலப்
பூமேவு பாமகளாம் பூவையரும் – மாமதுர

வாக்கியத் தாற்போற்றி மலர்க்கரங்கள் தாஞ்செய்த
பாக்கியத் தானாய பயனெய்தப் – பூக்கொய்து

தூவச் சிவந்துபரஞ் சோதிதிரு மேனியொடு
மேவச் சிவந்தசத்தி மெய்யொளிபோற் – பாவலர்கள்

மெச்சி உவமைபகர் மேனியெல்லாம் அழகாய்ப்
பச்சைப் பசுத்தசெழும் பைங்கிளியே- இச்சையாற் 

சத்திகொடு சமைத்த தம்பிரான் மேனிநிறம்
ஒத்திலகுஞ் செவ்வா யொளிர் குருகே – நித்தநித்தம் 5

அத்தனவன் எவ்வுயிரும் ஆட்டுவான் அம்பலத்திற்
றத்தெயென ஆடுமெனுந் தத்தையே - மித்தைப்ர 

பஞ்சமென்று முக்கட் பசுபதியின் பாதமொன்றே
அஞ்சுகமென் றேமொழியும் அஞ்சுகமே - மிஞ்சுசுரர் 7 

கண்ணைப் பிசைந்து கலங்காமல் முன்னமிந்த
மண்ணையுண்டோன் மேனி வருந்தாமல் – விண்ணவர்கள் 8

வாடி மயங்காமல் மங்கலியப்பிச்சையென்று
தேடிமலர்மாதர் தியங்காமல் – நீடுருவ .9

வாசுகியும் பாற்கடலும் மந்தரமும் தங்களுக்கு
நாசமுற்ற தென்று நடுங்காமல் – பேசரிய 10

ஆற்றல் படைத்த அரக்கரையும் அங்கவர்பால்
சீற்றம் மிகவுடைய தேவரையும் –வேற்றறவே 11

சேர்த்தியிட வந்துதித்த தேவாமிர்தம்போல
வார்த்தை சொலவல்ல மரகதமே –கூர்த்தவிழித் 12 

தோழியரை நோக்கியென்றுந் தோற்றமொடுக்கமிலா
வூழி முதல்வனாம் ஒருத்தன்முன் – கீழாகச் 13

செத்துப் பிறந்துழலும் தேவரையும் மூலமென்று
சித்திரமே பேசுதலைச் சீர்தூக்கி – உய்த்துணர்ந்து 14

தக்கதனைத் தேராது தர்க்கமிடுவோர் மதிபார்
அக்கக்கா வென்னு மவந்திகையே - பொற்கனகப் 

பஞ்சரத்தில் வாழும் பசுங்குதலாய் -நின்றனக்குக்
கிஞ்சுகமென்னும் பெயருங் கேட்டிலார் - நெஞ்சின் 16

மகிழ்ந்து மலைமாது மருங்கில் நினைவைத்துப்
புகழ்ந்துமொழி கேட்கின்ற பொற்பு – நெகிழ்ந்தமலர் 17

ஐங்கோலான் நின்னுடைய ஆதரவு வாய்த்தமையால் 
செங்கோல் நடாத்துந் திறமுமுனம் – எங்கோனை 18

ஆதரவால் அர்ச்சித்து அதனால் சுகவனத்து
நாதரெனப் பூதலஞ்சொல் நன்னலமே - ஆதியவாம் 

வல்லமையும் ஓரார்நின் வார்த்தையினால் யாவர்மனக்
கல்லுங் கரையும் கருத்தறியார் வெல்லரிய 20


விக்கிரமா தித்தனெனும் வேந்தனையோர் தட்டான்செய்
அக்கிரமந் தீர்த்த தறிகிலார் – துக்கந் 

தணவுதவ யோகியர்கள் தம்மைப் போல்நிற்கிங்
குணவு கனிகாய்தளிரென் றுன்னார் – மணவணிகள் 22

ஏயுமுனைப் பைங்கிளியே யென்றுபல கண்ணிசொன்ன
தாயுமா னார்தந் தமிழுணரார் – நேயத் 23

திருப்புகழ்ப்பா வாணருன்போற் சென்றடைந்து சோணப்
பொருப்புறு தல்கேட்டும் பொருந்தார் – விருப்பில் 24

சுகருந்தன் தொல்குலத்தில் தோன்றியதால்ஞானா
திகரான வண்ணந் தெளியார் – பகருமறை 

வாதவூ ராளிதிரு வாசகத்தே பத்தங்கம்
ஓதவுனைச் சொன்ன துணர்கிலார் – தூதுவிட்டோர் 26

தங்காரிய மெல்லாந் தப்பாதுட்கொண் டதையுன்
றன்காரியமாய்த் தலைக்கொண்டு – - முன்குறிப்பிற்

காலமிடமறிந்து காரியத்தை முற்றுவித்துக்
கோலமுடன் எய்துங் குறிப்பறியார் – - போலிகளாம் 28 

வெள்ளைமதி யோரறிவின் மிக்கவுனைத் தங்கள்சிறு
பிள்ளைமதி கொண்டுகிளிப் பிள்ளையென்பர் –-கிள்ளையே 

வீரர்களின் மேலான வீரரெனத் தேவர்புகழ்
சூரர்களை மாளத் தொலைத்தானைச் – சீரரவம் 30 

பூண்டானுக்குங் குருவைப் பொற்கொடியா ரோரிருவர்க்
காண்டகையாய் மாலையிட்ட ஆண்பிளையை – வேண்டுகின்ற 31

கோலமெலாங் கொள்ளுங் குறிஞ்சிக் கிழவனையோர்
பாலனென ஓதுகின்ற பண்புகாண் – பாலின் 32

சுவையைப் பழித்துமொழி சொல்லுதலால் நின்னைச்
சுவையுடைய கீரமெனச் சொல்வர் – அவையகத்துத்

தூது சுகமாகச் சொல்லுதலினாற் சுகமென்
றோது முலகம் உனைவியந்து – தீதறியாப் 34

பிள்ளை மழலையும் பெண்க ளின்மொழியுங்
கிள்ளை மொழியாமென்று கேட்டிடுவர் – வள்ளுவனார் 35 

குழலினிது யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச் சொற்கேளா தவரென் – றழகுபெறச்

சொன்னதுவும் நின்சொற் சுவையறிந்தே யல்லவோ
உன்னைவிடத் தூதுக் குரியார்யார் – தன்னேரில்

அன்பை யுடையாய் அறிவுடையாய் ஆய்ந்திடுஞ்சொல்
வன்மை உடையாய் மகிதலத்தில் – இன்னபுகழ்

எய்தி உயர்வாம் இளங்கிளியே எந்தனது
செய்திசில எடுத்துச் செப்பக்கேள் – வையத்துள் 

வீசுபுகழ்சேர் வியன்பதியென் றிவ்வுலகம்
பேசு கருவூரிற் பிறந்தென்யான் – மூசுதிறை 40

வெள்ளப் புனன்மே வியசீர்க் கங்காகுலத்தில்
பிள்ளையென வந்துபிறந் தேன்யான் – வள்ளல்பேர்

பூணுலக நாதன் பொருந்தவரும் பார்ப்பதிபாற்
பேணு மகவாகப் பிறந்தேன்யான். -பூணற்

கரிய புகழ்சேர் அரங்கசாமிக்குப்
பிரிய மருகராய்ப் பிறந்தேன்யான் – உரியபல

சீரிட்ட நாளினலஞ் சேர்கந்த சாமியென்று
பேரிட் டழைக்கப் பிறந்தேன்யான்- வாரிட்ட 

நற்றொட்டி லேற்றி நலம்பலபா ராட்டியெனைப்
பெற்றவர்கள் போற்றப் பிறந்தேன்யான் – உற்ற 45

களங்க முளவெல்லாங் காசினியிற் றோன்றி
வளர்வதே போல வளர்ந்தேன் – இளமையிலே

தந்தை யிறந்தொழியத் தாயர்பிறந் தகத்தில்
வந்துவளர்க்க வளர்ந்தேன்யான் – செந்தமிழும்

அல்லாமல் இந்நாள் அரசுபுரி ஆங்கிலியர்
சொல்லதுவுங் கற்கத் தொடங்கினேன் – கல்லூரிக்

கோர்பெயராம் பள்ளிக் குயர்வில் சிறுசாதிப்
பேர்கா ரணமாய்ப் பெறும்வண்ணம்- சேருமொரு 

பள்ளியிடைப் புக்கந்தப் பள்ளிச் சிறார்களுடன்
உள்ளிருந்து பாடங்க ள்:ஓதினேன்- எள்ளுமந்த 50

அன்னியபா டைக்கிணங்க அன்னியமார்க் கச்சிறப்பும்
அன்னியர்பாற் கற்றே அமர்ந்தேன்யான் – அன்னோர்

மருட்டு வழியான் மதிமயங்கி அந்தக்
குருட்டுவழி யென்னுளத்துட் கொண்டேன் – இருட்டின்கண்

கண்ட கயிரரவாய்க் காணுதல் போலாங் கவர்கள்
விண்ட பொருள்யாவும் மெய்யாயுட்- கொண்டதனாற்

றெய்வச் சிறப்புஞ் சிவனடியார்தஞ் சிறப்பும்
சைவச் சிறப்புந் தரிக்கிலேன் - பொய்யார் 

புலைத்திரளின் சேர்க்கையாற் புத்தி வரத்தக்க
கலைத்திரளை யேதொன்றுங் கல்லேன் – கொலைசேர் 55

விவிலிய நூற்கொள்கை மிகுத்தலா லான்றோர்
நவிலிய னூலொன்றும் நவிலேன் – அவமாகக்

காலங் கழித்தேன் கழித்தேன் குலவொழுக்கஞ் 
சீலங் கழித்தே திரிதந்தேன் – ஞாலமுடன்

காசு பணத்திற்கும் கண்மயக்கும் வேசைகட்கும்
ஏசுமதத்திற்கும் இச்சை வைத்தேன் – சீசீயென

நல்லாரைக் கண்டால் நடுங்குவேன் நல்லார்க
ளல்லாரைக் கண்டால் அகங்களிப்பேன் – பொல்லாத

துன்மார்க்க மென்றாற் சுகித்திடுவேன் சுத்தசைவ
சன்மார்க்க மென்றாற் சலித்திடுவேன் – என்மார்க்கங் 60

குற்ற முளதேனும் குலத்தில் அபிமானத்தான்
முற்றத் துறந்து முடிந்ததிலைச் – சிற்றறிவால்

ஏசுமதம் பெரிதென் றிச்சைவைத்தேன் ஆனாலும்
தேசுவிடுத்து அதிலே சேர்ந்ததிலைப் – பேசிடுதல்

எல்லாமதன் முடிவே என்றாலும் தீயேனப்
பொல்லச் சமயம் புகுதவிலைக் - கொல்லும்

புலியானது பசுத்தோல் போர்த்த விதமென்னப்
பொலிவார் திருநீறும் பூண்பேன் – குலவொழுக்கம்

இல்லாத பெண்டிர் இருமனம்போல் என்னகமும்
அல்லாப் புறமும் வேறா யிருந்தேன் – வல்லார் 65

சிலையி லெழுத்தாய்ச் சிறுவயதிற் கல்வி
நிலையுறுதல் பொய்யோ நிலத்தின் – மலதேகப்

பன்றி மலமருந்தப் பார்த்திருந்த நல்லாவின்
கன்றும் மலமருந்தக் காணாமோ – துன்றும் 

பழக்கத்தி னாலே பலிக்கும் உலக
வழக்கத்தை யார் தடுக்க வல்லார் – சழக்கார்

மனக்கிசைந்த வாறெல்லாம் செய்யென்னும் வார்த்தை
எனக்கிசைந்த நூலா யிராதோ – இனக்கேடாய்ச்

சின்னஞ் சிறுவயதிற் சிற்றினத்தைச் சேர்ந்ததனால்
அன்னார் தமதுருவ மாயினேன் – முன்னாளில் 70

என்னதவஞ்செய்தேனோ ஏதுநலனோ அறியேன்
பின்னர்வரச் சென்றடுத்தேன் பேரூரைச் – என்னொடொரு

மித்துவரும் வீணாதி வீணரொடும் பேய்மோகப்
பித்தரொடும் சென்றடுத்தேன் பேரூரை- சித்தத்

தரியபொருள் பேணாமே ஆயிழையார்ப் பேணும் 
பிரியமுடன் சென்றடுத்தேன் பேரூரைக் – கூறரிய

பன்னாள் அவமாகப் பாழுக்கிறைத்தல்விட்டுப்
பின்னாளிற் சேர்ந்தேன்யான் பேரூரை – அந்நாள் 75

திருநாளாய் எங்கோன் தெருவிற் பவனி
வருநாளாய் நேர்ந்த வகையால் – அருவுருவச் 

சோதியான் தோன்றாச் சுயம்புவான் செஞ்சடையிற்
பாதிமதி சூடும் பரமனவன் – மாதினையோர்

கூறுடையான் எட்டுக் குணமுடையான் பால்வெள்ளை
நீறுடையான் கையில் நெருப்புடையான் - ஆறுடைய 

சென்னியான் ஆறுடைய சென்னியான் றன்னை
முன்ன மளித்த முதல்வன் – பன்னகத்தின்

பூணுடையா னோரிந்தப் பூமிமுழுதுஞ் சுமந்த
நாணுடையான் முப்புரிசேர் நாணுடையான் – காணுமவர்க் 80 

கஞ்சக் கரத்தான் அருள்பெறுவோர் உச்சரிக்கும்
அஞ்சக் கரத்தான் அரியகருப் – பஞ்சிலையால் 

ஐயம்பெய்யுங் கரத்தான் அங்கமழ லூட்டினான்
ஐயம் பெய்யுங் கரத்த னாதியான் – பொய்பாத

கக்கிரியை ஓர்விலாக் கண்டகர் சாகக்கன
கக்கிரியை யோர்விலாக் கைக்கொண்டான் – மிக்கடியோ

முக்கண்ணா நல்லமிர்தம் ஒப்பாவான் முச்சுடரும்
முக்கண்ணாய் வாழு முகமுடையான் – தக்கார்

மறந்தும் பிறவி வரநினையான் தானும்
மறந்தும் பிறவியிடை வாரான் – துறந்தோர் 85

தவந்திரண்ட தென்னத் தவளநிறம் வாய்ந்து
நிவந்துலக மூடுருவி நின்று – நவந்தரும்பல் 

விம்மிதங்க ளோங்கி விமலமாய் வேதத்தின்
சம்மதமாம் வெள்ளித் தடவரையும் – தம்மதருட் 

சத்தியுறையுந் தடங்கிரியும் சங்கேந்தும் 
புத்தே ளயன்வாழ் பொருப்பிரண்டு – நத்திக்

கருத மலவில்லாமற் கந்தனருள் செய்யும்
மருத மலையென்னும் மலையும் – ஒருபடித்தாய்ப்

பஞ்சப் பிரமமே பஞ்சவரை யானதென
மஞ்சடரும் பஞ்ச வரையுடையான்- எஞ்சாது 90 

நீர்த்தரங்கத் தாலே நெருங்கும் அகன்கரையைப்
பேர்த்தெறிந்து வெள்ளப் பெருக்காகி – ஆர்த்தெழுந்தே 

அந்நாட் பகீரதற்கா ஆங்கிழிந்த கங்கையைப்போல்
இந்நாட் பலவுலக மீடேறப் – பொன்னார்

பொலிந்த ரசிதப் பொருப்பி லுலாவி
மலிந்த பொருள்பற் பலவும் வாரிக் – கலந்து

தொடும்பொருளை யெல்லாம் சுவர்ன மயமாக்கி
விடும்பரிசாற் காரணப்பேர் மேவிக் – கடும்பவநோய்

யாவும் அகற்றி அறம்பொருளின் பாக்கியலை
வாவிவருங் காஞ்சி மாநதியான் – மேவுபுகழ் 95

ஏட்டில் அடங்காமல் எவ்வுலகுந் தன்மணமே
நாட்டுவிக்கும் கொங்குவள நாட்டினான் – போட்டிவிளைத் 

தூரூரெல் லாஞ்சின்ன வூராய்ப் புறங்கொடுக்கப்
பேரூரெனத் திகழ்பே ரூரினான் – ஆரூரர்

பாமாலைசூடும் பணைத்தோளில் என்றன்புன்
பாமலை சூட்டப் பணித்ததுபோற் – பூமாலை

நேசமாய் மாசகன்ற நின்மலமாய்ப் பொன்மயமாய்
வாசமார் கொன்றைமலர் மாலையான் – வாசிக்

கடும்பரியி லேறுவோ ரல்லாதார் காணப்
படும்பரி சொன்றில்லாப் பரியான் –இடும்பச் 100

சிலையின் பொருட்டு வெள்ளைச் சிந்துரமும் நல்குங்
கொலைவல்ல கம்பமத குஞ்சரத்தான் – அலையாமல் 

ஈண்டும் அடியவர்கட் கெய்தும்பே ரின்பமென
மூண்டு முழங்கும் முரசத்தான் – ஆண்டவன்றன்

சேவேறு சேவடியை அல்லதில்லை யென்றசையும்
கோவேறு கொற்றக் கொடியினான் – பூவேறும்

அந்தணனும் நாரணனும் அண்டபகி ரண்டமொடு
வந்தடங்கும் ஆணி வலியுடையன் – மைந்தர்களாம் 

பட்டிவி நாயகனும் பன்னிருகைப் பண்ணவனும்
கிட்டி யருகே கிளர்ந்துவரத் – தொட்டரனார் 105

உண்டபரிகலமும் ஒண்மலரும் பெற்ற எங்கள்
சண்டிப் பெருமானும் சார்ந்துவர – மண்டியபேர் 

அன்பாற் றமிழ்பாடும் அப்பருடன் சம்பந்தர்
வன்பால் அடிமை கொண்ட வன்றொண்டர் – தென்பார்

விளங்கவரும் வாதவூர் வேந்த ரிவரெல்லாம்
துளங்காது பக்கலிலே சூழ – உளந்தனிலே

இச்சையறிந் துலக மெல்லாம் படியளக்கும்
பச்சைவல்லித் தாயாரும் பாங்கர்வர – அச்சுதனோ

டிந்திரனே யாதி இமையோர்குழாந் திரண்டே
அந்தரத்தின் கண்ணே அலர்தூவத் – துந்துமியே 110

யாதிமுழவம் அதிர முழங்கியெழ
வீதி நிரம்ப விருதடையக் – கோதில் 

குணவடியா ரெல்லாங் குழாங்கொண்டு கூடிப்
பணிவிடைகள் வேண்டியவா பண்ண – அணிகிளரும்

வேதமொரு பாலும் விமலத் தமிழ்வேத
நாதமொரு பாலும் நவின்றிலங்கச் – சீதப்

பனிவெண் மதியங்கள் பார்க்கவந்த தென்னக்
கனிவெண் குடைகள் கவிப்ப – நனிவிரைந்து 

கங்கைத் திரளும் வந்த காட்சியென மேலோங்கித்
துங்கக் கவரிபுடை துள்ளவே – எங்குமாம் 115

மூவர்பெருமான் முடியாமுதற் பெருமான்
தேவர் பெருமான் சிவபெருமான் – காவலராஞ் 

சிட்டிப்பெருமான் திதிப்பெருமான் காண்பரிய 
பட்டிப்பெருமான் பவனி வந்தான் – சிட்டரெலாம்

ஆடுவார் தித்தித் தமுதமெனக் கானவிசை 
பாடுவார் நின்று பரவுவார் – நாடுவார்

கண்ணே கருத்தே கதியே வான்கற்பகமே
எண்ணே எழுத்தே எனத்துதிப்பார் –நண்ணாப் 

பதிதரெனினும் பவனி பார்க்கக் கிடைத்தாற் 
கதிதருங் காணென்றே களிப்பார் – துதிசெய்யும் 120

விண்ணோரும் மண்ணோரும் வேட்ட துனதுகடைக்
கண்ணே அளித்தருளும் காண்என்பார் –விண்ணவர்க்காய்க்

கல்லைக் குழைவித்த கண்ணுதலே யெம்மனமாங்
கல்லைக் குழைத்தல் கடனென்பார் – அல்லைப்

பொருவு மிடற்றிலெங்கள் புன்மலமுஞ் சேர்த்தால்
இருமைக் கருப்பாகு மென்பார்- திருநுதலில்

தீவைத்த தெங்கள்பெருந் தீவினையெல் லாமொருங்கே
வேவித்தற் கேயோ விளம்பென்பார் –சேவித்தோர்

தங்கள்மலம் போக்கவோ தண்புனலைச் சென்னிவைத்தாய்
திங்களையும் வைத்ததென்ன சேர்த்தென்பார் – எங்கள்பொருட் 125

டாயோர் நரவுருவு மானாய்க்கு வெங்கொடிய
பேயோடு மாடலென்ன பெற்றி யென்பார்.- தீயபவக் 

காடெறியவோ கணிச்சியினைக் கைக்கொண்டாய்
மாடாயொரு மானேன் வைத்த தென்பார் – பீடரு

யோகத் திருந்தும் உமையாளைச் செம்பாதி
பாகத்தில் வைத்ததென்ன பற்றி யென்பார் – ஆகத்தில்

கந்தபொடி பூசக் கருதாமல் வெண்ணிறமாய்
வெந்தபொடி பூசலென்ன விந்தை யென்பார் – இந்தவகை

தத்தமனக் கிசைந்த சாற்றித் தொழுதுநிற்ப
எத்தனையோ பேர்சூழ்ந் திரங்கி நிற்பப் – பித்தனேன் 130

கொஞ்சமு முள்ளத்திலன்பு கொண்டதிலைக் கல்லான
நெஞ்சமுருக நைந்து நின்றதிலைத் – தஞ்சமெனக்

கண்ணருவி பாயவிலை கைதலைமேற் கொள்ளவிலை
மண்ணதனில் வீழ்ந்து வணங்கவிலைத் – துண்ணெனவென்

ஆகம்புளகம் அரும்பவிலை இவ்விழவின்
மோகம் ஒருசற்றும் முயங்கவிலை – வேகப்

பறவைவிலங் கோட்டிப் பயமுறுத்த நாட்டி
நிறுவுமொரு புல்லுருவை நேர்ந்தேன் – வெறுமையேன்

ஆனாலும் அந்நா ளடியரடிப் பொடியென்
மேல்நான்செய் புண்ய விசேடத்தாற் – றானாகப் 135

பட்டங்கிரசம் பரிசனவே திப்பரிசப்
பட்டதனாற் பொன்னாம் பரிசேபோல் – விட்டகன்றும்

குற்றியென நிற்குங் குறிபார்த் தெனக்கருளும்
பெற்றி நினைந்து பெருங்கருணை – உற்ற கரு

ணாகரனேயென் பொருட்டோ ராசிரியனாய்ச் சந்த்ர
சேகர னென்றோர் திருப்பேர் சேர்த்தியே – சாகரஞ்சூழ்

இவ்வுலகி லுள்ளமத மெத்ததனையோ அத்தனைக்கும்
பௌவமெனும் வேதப் பயோததியைத் – திவ்யாக

மத்தின்வழியே மதித்தநவ நீதசைவ
சித்தாந்த மெய்யுணர்த்துந் தேசிகனாய்க் – கத்துகின்ற 140

கற்பனா மார்க்கமெனுங் கட்செவிக்கு வல்லிடிபோற்
சொற்பிர யோகஞ்செய் சுகோதயனாய்ப் –பொற்பார்

மதமாவை மாக்கள் வசமாக்க மற்றோர்
மதமாவைக் கொண்டே மடக்கும் – விதமவனென்

போலோர் மனிதவுருப் பூண்டுஞ் சிவசின்னத்
தாலே பிரானாந் தகைவிளங்க – ஆலடியில்

அன்றமர்ந்த வாபோல் அரசமரத் தருகே
நின்றெளியேன் காணநேர் நின்றருளி – என்றன்னை

அன்பொட ழைத்தங் கருகிருத்திப் பற்பலவா
முன்பழமை பேசி முடித்ததற்பின் – என்பேரில் 145

வைத்த பெருத்ததயா வால்என்முக நோக்கி
வித்தகனே யெங்கோன் விழவிலுன் – மத்தனென

நின்றாய் என்னேயுன்றன் நெஞ்சமிரும்போ கல்லோ
ஒன்றாலும் உருகா ஒருபொருளோ – சென்றோடிப் 

பார்க்குங்கண் ணோவியன்செய் பாவையின்கண் ணோவோசை
சேர்க்குஞ்செவி யிரும்பிற் செய்செவியோ – பார்க்குங்கால்

நல்லகுடிப் பிறந்தாய் நாடிளமை யோடழகும்
புல்லும் வடிவம் பொருந்தினாய் – கல்லுங்

கரையும் எம்மான் செல்பவனி கண்டுங்கரையா
துறையும் பெருமமதை யுற்றாய் - முறையே 150

வழிவழியாய்ச் சைவத்து வந்தமைக்குன்முன்னோர்
மொழிபெயரே சான்றுமொழிய- வழுவிநீ

பேயின்கோட் பட்டாயோ பேதைமையோ வேற்றவர்தம்
வாயின் கோட்புற்ற வகைதானோ – ஆயவிதஞ்

சொல்லென்றான் காட்டினில்வாழ் துட்டவிலங்கனையேன்
சொல்லன்று சொல்லத் தொடங்கினேன் –கல்லாத

மாந்தரென என்னை மதித்தனரோ இந்தப்பார்
வேந்தரெனைக் கொண்டாடி மெச்சிடுங்காற் – போந்தெனைநீர்

கல்லுக்கும் மண்ணுக்கும் காசடிக்கும் செம்புக்கும்
மெல்ல வணங்க விலையென்று – சொல்லுதல்தான் 155

அன்னத்தைப் பார்த்தொருகொக் கானதுவான் மேற்பொய்கை
யின்னத்தை மீனாதி யில்லையெனச் – சொன்னத்தை

யொப்பாகும் நீவிர் உயர்ச்சியெனுஞ் சைவமோ
தப்பாகும் ஏசுச் சமயமொன்றே – இப்பாரை

நீதி மிகவோதி நிலைநிறுத்த லாலதுவே
ஆதி யெனலாமென் றறைந்தேன்யான் – ஓதியவை

கேட்டும் பொறுத்துக் கிருபையாய் என்மீது
மீட்டும் அருட்கடைக்கண் வீட்சணியம் நாட்டி

அழகழகுன் செய்கை அழகழகுன் கல்வி
அழகழகுன் சொற்பிறந்த ஆற்றல் – அழகாருஞ் 160

சைவத்தைப் போலாஞ் சமயமொன்றும் சங்கரனாந்
தெய்வத்தைப் போலான தெய்வமொன்றும் – வையத்தில்

ஆதித்தன் போலா யனைத்திருளை யுந்துறக்கும்
சோதித் தனியாஞ் சுடரொன்றும் – பூதலம்போல்

ஏற்றுநாஞ் செய்கின்ற எப்பிழையையும் பொறுத்துப்
போற்றியுண வளிக்கப் பூமியொன்றும் – பாற்றுளிபோற் 
சூற்கொண் டுலகிற்குத் தோற்றுந் துணையாக
மேற்கொண்டு பெய்தளிக்க மேகமொன்றும் – ஏற்கெனவே

யில்லை யில்லை யில்லை யெனவே பறையறைந்து
தொல்லைமறை யாவுந் துணிந்துரைக்கும் – தொல்லுயிர்கட் 165

கொன்றுந் தகைய விதிவிலக்கை யோதுவித்தே
என்றுந் திரியாஇயல்பினதாய் – அன்றாலின் 

கீழிருந்தி யோகியர்கள் கேட்க வுணர்த்தியதாய்
ஊழிதொறும் நிற்கும் உறவினதாய் - ஆழியின்கண் 

ஆறனைத்தும் சென்றுபுகு மாறுபல சமயப்
பேறனைத்தும் வந்தொடுங்கும் பெற்றியதாய்க் – கூறுமுயிர்ப்

பக்குவத்திற் கேற்பவருள் பாலிக்க வல்லதாய்
மிக்குயர் சோபாந விதானமுடன் – ஒக்கவே

எல்லா இலக்கணமும் எல்லா மகத்துவமும்
எல்லா நலமும் இயைந்துளதாய்க் – கொல்லா 170 

விரத முடையதாய் வேதாந்த மோன 
சரதமெனு மோலி தரித்தே – கரதலத்தில்

ஆமலகம் போல வருட்சத்திப் பேறளித்துக்
காமக் குரோதங் களைவதாய் – நேம

நிலையுள்ளதாய் முன்பின் நேர்ந்த மலைவற்ற
கலையுள்ளதாய் ஞானக் கண்ணாய் – மலையே 

இலக்காய் அடைந்தோர்கட் கெய்தற் குரித்தாய்க்
கலக்காத இன்பக் கலப்பாய் – மலக்கன்மம்

வீட்டித் திரும்பவரா வீட்டில் அருளின்முழுக்
காட்டுவிக்கத் தக்க அருமருந்தாய் – நாட்டிலே 175

சாது சமயமொன்றாய்த் தான்சமைந்தாலும் சமையா
தீதப்பயம் பொருளைச் சேர்த்துவதாய் – ஓதும் 

பதிநிலையும் பாசநிலையும் பசுக்க
ளதுநிலையுந் தப்பா தறைந்தே - எதுநலமும்

ஓங்கி உயர்வெல்லாம் உடைய சமயஞ்சைவம்
ஆங்கதனில் நீவந் தவதரித்தும் – ஈங்கதனை

உள்ளபடியே உணராது சான்றோரால்
தள்ளப்படும் புன்சமயமாய் – எள்ளுங்

கொலைசெய்யக் கற்றுக் கொடுப்பதாய் முன்பின்
மலவாய் மொழிவிகற்ப மார்க்கம் –நிலையுளதாய் 180

இவ்வுலகில் வாழ்வோ ரிடர்ப்பட் டமைத்ததாய்த் 
தெவ்வர்களால் வேறுபடச் செய்ததாய் – ஒவ்வாத

சீவபர தத்துவங்கள் செப்புவதாய்ப் புண்ணியமும்
பாவமும் அவ்வாறே பகருவதாய் – யாவரையும்

சண்டைக் காளாக்கித் தளஞ்சேர்க்க வல்லதாய்த்
தண்டெடுப்போர் யாவர்க்குந் தாயகமாய் – உண்டுடுத்தீண்

டெய்துஞ் சுகமே பேரினபமெனத் தேற்றியருள்
எய்துதற்கு முற்றும் எதிர்மறையாய் – வெய்தாக

மாசு திரண்டோ ருருவாய் வந்ததென வந்துதித்த
ஏசுமதமோ மனத்தில் எண்ணினாய் – காசினியில் 185

வீட்டிற் பெரிய விளக்கிருக்க மின்மினியைக்
காட்டிற் போய்த் தேடுங் கயவரையும் – ஈட்டியசெம்

பொன்னை மடுவுட் புகப்பெய் தரிப்பரித்துப்
பின்னைப் பொருளீட்டும் பித்தரையும் – பன்னுசெழுந்

தேனிருக்க உண்ணாமற் செந்தாமரை படர்ந்த
கானிருந் துலாவுமண் டூகத்தினையும் – மானிடர்கள்

உண்ணத் தகும்பல் லுணவிருக்க வீதியிலே
மண்ணுண்ணும் புத்தியற்ற மைந்தரையும் – நுண்ணுணர்வான்

நூல்நிரம்பக் கற்றெங்கோன் றாள் பரவாமல்
மானிடரைப் பாடும் பாவாணரையும் - மேனி 190

கருமையாய் ஊற்றைக் கலக்கி நீருண்ணா
எருமையையும் ஒத்தாய்நீ என்றான் – உருவமொன்றும்

இல்லான் குணமொன்றும் இல்லான் குறியொன்றும் 
இல்லான் இறையென்றே எம்மனோர் – சொல்லிப்பின்

மாறுபடக் கோலம் வகுப்பாரேல் மற்றதற்கு
வேறு குறிப்பிருகவேண்டாமோ – கூறுமவர்

சொல்லும் பொருளுணராத் தோடத்தால் மூர்த்திகளைக்
கல்லொடு செம்பொன்றிகழக் கற்றனையால் – நல்லதுபின்

நீயுரைத்த ஏசுமத நீணிலத்தில் உற்பத்தி
யாயவிதஞ் சற்றே அறையக்கேள் – ஆயிரத்தை 195

நான்மடங்கு செய்யாண்டின் நாளிலிந்தப் பூமிமிசை
மேன்முடங்கு நாட்டு மிலேச்சர்பலர் – கூன்முடங்கும்

வெய்ய நிருவாண விலங்கொத் துழிதருங்கால்
தெய்வ உணர்ச்சி சிறிதுதிப்ப – நொய்தாகும்

ஏகோவா வென்றங் கியம்பு துட்டதேவதையை
ஏகோபித் தேத்தும் இயல்புற்றார். - ஏகோவாக் 

கோபத்துக் காயாட்டைக் கொன்று மாட்டைக் கொன்றுந்
தீபமெடுத் துதிரத்தைத் தெளித்துந் – தூபமிட்டுங்

கொண்டாடிச் சாதியாய்க் கூலித் தொழில்செய்து
திண்டாடி வாடித் திரியும்நாள் – உண்டான 200

மோசேயத் தேவின் முழுநோக் கடைந்ததாய்
மோசஞ்செய்து சூது மொழிகிணங்கி - ஆசையினால்

ஆங்கவன் செய்மாயம் அனைத்தினையும் தேவனே
தீங்ககலச் செய்ததெனத் தேறியே – தாங்களும்போய்ச்

சண்டைசெய்து நாடுசயங்கொள்ளு மோர்வுணர்வே
கொண்டதனால் பண்டைவினை கூட்டியிடச் – சண்டையிலே 

வெற்றி யடைந்தம் மிலேச்சர்க் கதிபதியாய்
மற்றவரைத் தங்கண் மயமாக்கி – உற்றிடுங்காற்

பூசாரி மார்க்குப் புகழும் பெருவாழ்வும்
காசாதி சேருதலும் காரணமாய்க் - கூசாது 205 

கோர்க்கும் விடுகதையின் கொள்கையயாய்ப் பல்பொருள்சேர்
தீர்க்கதரி சனங்கள் செப்பியே – பார்க்குள்ளே

ஏழைமதி யோர்கள்தமை யெத்திமத மாய்ச்சேர்த்திப்
பீழை பெருகப் பிழைத்தார்காண் – கோழையா

அந்தவுரைப் பௌவத்தில் ஆழாமல் தேற்றியிட
முந்தச் சகுன மொழிவதொத்து – வந்ததிலே

கள்ளக் குருமார் கணக்கில்லோர் தோன்றியுல
கெள்ள வெளிப்பட் டிறந்ததற்பின் – பிள்ளையெனத்

தச்சக் குலத்திலொரு தாய்வயிற்றின் நால்வரொடு
முச்சப்பட வொருவன் உற்பவித்து - நச்சியே 210 

முப்பான் வயது முடியளவுஞ் சூனியங்கற்
றப்பாற் சகப்புரட்ட னாகியே – இப்பாரில்

ஏசுவெனப் பேர்பூண் டிருக்களவுங் கல்விமணம்
வீசு மிடங்களிலு மேவாது – பேசும்

வலைஞர் பரதர் மலசர் முதலான
புலைஞருட னுறவு பூண்டு - மலையா

திகளில்வசித் தலைந்தும் ஏழைகள் தம்மாலே
புகழாதி மேன்மை பொருந்தி – மகிதலத்தில்

ஊமைக்குத் திக்குவா யுற்பாத பிண்டமென்று
நாமறியக் கூறும் நகுமொழிபோற் – சாமியமாய்க் 215

காட்டு மனிதர்கட்குக் கண்கட்டு வித்தை செய்து
காட்டி யவராலே கனம்படைத்து –மேட்டிமையோர்

பொய்ய னிவன்செய்யற் புதங்களும்பொய்யென் றுவசை
செய்ய மறைந்து திரிதந்து – வையத்திற் 

சஞ்சரிகுங் காலத்தே தந்தொழிலுக் கானியென்று
வஞ்சவினைப் பூசாரி மார்திரண்டு –நெஞ்சில் 

விரோதத்தி னாலவன்றன் மேலே தஞ்சாமித்
துரோகமெனுங் குற்றஞ் சுமத்த – ஏரோதென்பான்

அற்புதங்கள் செய்தக்கா லாக்கினைசெய் யாதுயிரைத்
தப்பு விப்பதாய் வாக்குத் தந்திடவும் –அப்படிச்செய் 220

துய்யாமல் நெஞ்சம் உலர்ந்து பிலாத்தென் பவன்றன்
கையாற் கொலைதீர்ப்புக் கட்டளைபெற் – றையோ

சிலுவைதனி லேயழுது சின்னப் பட்டேறி
வலுவிலுயிர் போக வருந்தித் - தலைவிதியாற்

செத்தபின்னர் அன்னவன்றன் சீடர்சில ரந்தச்ச
வத்தைத் திருடி மறைத்துவிட்டுச் – செத்தோன்

கடவுளே யென்றுமிந்தக் காசினியோர் பாவம்
படக்கழுவிற் பட்டிறந்தா னென்றும் –புடவிமிசை

மாரியம்மை பேச்சியம்மை மாடன்பொம்மன் மதுரை
வீரனு தேவென்னும் விதம்போலும் – ஊரகத்தே 225

செத்தார்மேற் பொய்ப்புகழைச் சேர்க்கும் வகைபோலும்
பித்தேறி வாயார் பிதற்றுங்கால் – ஒத்துப்

பவுலென்னும் பொய்யிற் பயின்றோன் ஒருவன்
கவுலாய்த்தன் பண்டைமதங் கைவிட் – டவலமுள்ள 

ஏசுவின்றன் சீட ரெழுதிய தென்றுமேசு
பேசுசுவிசேட ப்ரசங்க மென்றும் - வாசகங்கள்

கூட்டிக் குறைத்தெழுதிக் கொண்டுகுருப் பட்டமுடன்
நாட்டினிலிவ் வேசுமதம் நாட்டினான் – கேட்டனையோ

வந்தமதம் இன்னும் அனேகவகை யாய்ப்பிரிந்த
விந்தையெல்லாஞ் சொன்னால் விரியுங்காண் – அந்தமத 230

ஆசிரியருந் தெருக்க ளாதியிலே செய்யுமுப
தேசிகரும் பட்டத்திற் றேர்ந்தவிசு – வாசிகளும்

எம்மதத் தையும்வீண் இகழ்ச்சிசெயினும் பொய்யாந்
தம்மதத்தை மெய்யென்று சாதிக்க – அம்மதத்தைத்

தாபித்தோன்றா யுதரந் தங்கி மதியம் நிறைந்து 
சோபித்தி யோனித் துவாரம் வந்துங் – கோபித்துக்

கொல்ல வருவாரென்று கூசிப்பயந் தொளித்தும்
எல்லவருங் காணவழு தேயிறந்தும் – புல்லும்

உடலம்நரம்பென் புதிரந் தசைசேர்ந்
திடவிளமை யாதி பருவங்கள் – அடைவாகக் 235

கொண்டே மனிதகுணங் கொள்கையில் பேதமதா
யுண்டே யுறங்கி யுழன்றவெலாங் – கொண்டேயவ்

வேசுமனிதனே யென்பார் வாய்க்குப் பயந்து
யோசப் பெனுங் கருமானுக் குமணம் – பேசிவைத்த

கன்னிவயிற்றிற் றெய்வீகத்திலுதித்தா னென்றுஞ்
சென்னிமிசை யாவிவந்து சேர்ந்ததென்றும் – தொத்ததென்று

தன்னுயிர்போய் செத்த மூன்றாநாள்தன் சீடர்கள்காணப்
பிழைத்து முத்தியடைந் தானென்று முன்னுரைவந் -தொத்ததென்று 

மானிடர்தந் தத்துவமும் வானவர்தந் தத்துவமும்
ஆனவிரு தத்துவத்தி னானென்றும் – ஞானியர்கள் 240 

விண்மீ னொன்றினாலே வெளிப்படக் கண்டாரென்றும்
எண்மீறி யற்புதம்வந் தெய்துமென்றும் – உண்மையிலே 

இல்லாக் கருமமெல்லாம் ஏசுதலை மேற்சுமத்தி
எல்லாரும்நம்பு மெனவிசைப்பார் –அல்லாத

வேற்றுமதத்துட் குறிப்பாய் மேவுபொருளைத் தமக்குத்
தோற்று விதமாய்ப் பொருள்கள் சொல்லியே – தூற்றுவார்

மட்டடங்கா மோகி மடலூரத்தான் விரும்பப்
பட்டவளைப் போலெழுதும் பாவனையுஞ் – சிட்டர்

அரியவொலி வடிவா மக்கரத்தை யாருந்
தெரிய வரிவடிவிற் றீட்டுதலும் – பொருவவே 245 

தம்மனத்துட் கொண்ட தலைவனைத்தந் தியானாதி
செம்மைபெறவோர் வடிவஞ் செய்துளரேல் – அம்மலவர் 

நுந்தேவின்கண் நும்மை நோக்குமோ காலாலே
வந்தேநீர் கேட்கும் வரம்தருமோ – வந்தே

கதிதருமோ செய்தானுங் கம்மியனே யன்றொ
மதியிலிகா ளென்றெமரை வைவார் – பதிதான் 

இணையில் ஒருவ னெனினும் அவனைச்சேர்ந்
தணையு மடியர்பல ராமே – துணையாக

மன்னவனைச் சேவைசெய்வோர் மந்திரிக ளாதியரை
முன்னர்ப் பணியு முறைபோல – வுன்னிப் 250

பலவடியார் தம்மைப் பணிந்தா லுமக்குப்
பலதேவ ரென்றே பழிப்பார் – குலதேவன்

ஏகன்தமக் கென்பார் ஏகோவா வொன்றுபுறாக்
காகவுயி ரொன்றேசுக் கத்தனுமொன் – றாகவே

தோன்றிய வெவ்வேறு சொருபகுண பேதமுள்ள
மூன்றும் அதன்மேலும் மொழிவார்கள் – ஊன்றியவவ்

வேசுவெகு நீதிஇசைத் தான்என்பா ரிப்பாற்
பேசுலகு நாகரிகம் பெற்றதென்பார் – ஏசுதான்

மாதாபோற் றோன்றி வகுத்ததெனு நீதியெலாந்
தீதார் புன்கல்விச் சிறார்களெடுத் – தோதாத்தி 255

சூடியெனும் புத்தகத்திற் சொல்லியுள நீதிகளிற்
கோடியிலோர் கூறெனவுங் கூடுமோ – நாடில்

இதுகாலமிக்க இழிதொழில் பொய்ச்சான்று
மதுபானம் நாகரிகம் ஆமோ – பொதுமையறத்

தேவனுலகத்தைச் சிருட்டித்த காரணமும்
பாவம்வந் தவாறும்அந்தப் பாவந்தான் – போம்வழியும்

எந்தவகை யென்றக்கால் எவ்வுயிருங் தோற்றத்துள்
வந்தவகை சொல்ல அறியாமல் – புந்தியிலாத்

தஞ்சிறர் சோறுண்ணத் தாயர்சொல்லுங் கதைபோல்
எஞ்சியுரைவைவி லெனுந்திரட்டுட் – சஞ்சரித்துச் 260

சாமியசை வாடச் சலம்வரும் பின்னேயொளியும்
பூமியொடு வானும் பொருந்தவரும் – பூமியைநீ

தானேபுல் பூண்டாதி தாவென்னச் சாற்றவரும்
வானே ரிருசுடரும் வந்துதயம் – ஆனதன்முன்

நாளுண்டென் றோதவரும் நாட்டைத் தனைவணங்க
வாளுன்னிச் சிட்டித்த தாக்கவரும் – மூளுமுன்னைச்

சென்மமிலைச் சென்மத்திற் சேர்ப்பதற்குச்செய்பழய
கன்மமிலையென்றே களரவரு – நன்மைசெய்ய

வாதமெலும் பாலொருபெண் ணாக்கியவ னுக்களித்துச்
சாதகஞ்செய் திட்டதெனச் சாற்றவரும் – ஏதனெனுந் 265

தோட்டமொன்று செய்தந்தத் தோட்டத்திற் சீவமரங்
காட்டி யதிலான கனிபுசித்தாற் – கேட்டினாற்

சாவாய்என் றோதவரும் சர்ப்பமொன்று சற்பனையாய்
மேவியதை யுண்ணும் விருப்பளித்துத் – தேவியினால்

உண்ணுவிக்க வல்லதென ஓதவரும் உண்டவுடன்
கண்ணுடைய ராய்மானங் காணவரும் – கண்ணாலே

நன்மைதின்மை ஓர்ந்து நரனுமொளி பெற்றுயர்ந்த 
தன்மைகண்டு பொங்கிச் சபிக்கவரும் – முன்மெலிந்தே

ஆறு நாளுரை யமைத்தலுப்ப தாகியிளைப்
பாறுநாளொன்றென் றறையவருங் - கூறுலகம் 270

பீடுபெறன் முன்னமே பெய்துநனைந் துளதா
மூடுபனி யென்றும் மொழியவரு – நாடிலுயிர்

ஒன்றி லிருந்துமற் றொன்றுண்டாகிப் பல்கியதாம்
என்றெ டுத்துக் கூசா தியம்பவரும் – சென்றவர்க்கு

நித்தியமாம் சொர்க்க நிரயம் வகுக்க வரு
நித்திரையாய்ச் செத்தவர்கள் நிற்கவரும் – மெத்தியே

சீடர்களையூரெங்குந் தேடித் திரட்டுதலே
பீடுடையசெய்கை யென்று பேசவரும் – மாடுமுத

லாமுயிரின் காதி லமைத்தோன் உயிரினையூ
தாமையினாற் சீவனற்ற தாக்கவரும் – யாமெவையும் 275

தீனியெனக் கொண்டு தின்னவரும் வேதமெலாம்
மானிடதங் காதையென வைக்கவரும் - மேல்நிரையே

சாமியசை வாடச் சலமிருந்தா லச்சலந்தான்
பூமியிருந் தல்லாற் பொருந்துமோ – பூமியது

முன்னே யுண்டாகி முடிந்துளதேற் றேவனதைப்
பின்னேயுண் டாக்கியதாய்ப் பேசுவதென் – முன்னமிருட்

கண்ணுறைந்த வேகோவா காரிருளும் பேரொளியும்
பண்ணினா னென்றல் பழுதலவோ – மண்ணதனைப்

பல்பூண்டைச் செய்யப் பணித்தால் அஃதெல்லாப்
புல்பூண்டுந் தேர்ந்து புரிந்திடுமோ- அல்லும் 280

பகலுமிது வென்னப் பகலவன் இல்லாமற்
புகல வகையுண்டோ புகலாய் – பகலவனாம்

செஞ்சுட ரில்லாமற் றினமூன்று சென்றதாய்
அஞ்சாது உரைப்பதுமோ ராச்சரியம் – தஞ்சாமி

மானிடரின் சாயலது வாய்த்துளனேற் சாயலுக்குத்
தானிடமாம் ரூபம்வந்து சாராதோ – வேனவனைத்

தோற்ற வரூபியெனச் சொல்லுவத்தித் தோற்றமெலாந்
தோற்றா விடத்துத் தொழிலென்னோ – ஆற்றலுடன்

தன்சாயல்போல் நரனைத்தந்து நரன்கண்ணிலனேற்
கொன்சாருந் தேவன் குருடனோ – முன்சேர்ந்து 285

தன்னை வணங்கச் சமைத்தானேன் மாக்கள்பலர்
என்னைவணங் காதிகழ்ந் துரைத்தல் – முன்னை

வினையின்றிச் சீவர்களை மேல்கீழாய்ச் செய்த
தெனையோ விருப்பு வெறுப்பென்னோ – மனையாளை

நல்லதுசெய் தோம்ப நரனெலும்பி லேபடைத்தால்
அல்லதுவுஞ் செய்தல் அழகேயோ – நல்லதென

ஒன்றை நினைக்க அதுவொழிந்திட் டொன்றாயிற்
றென்றல் கடவுட் கியல்பாமோ – அன்றவனோர்

தோட்டமன்று செய்தததிற் தோற்றும் பலன்பெறவோ
வாட்டமிலாச் சீவ மரம்வைத்த – நாட்டந்தான் 290

என்னோ மனிதனைமுன் னேமாற்றிக் கொல்வதற்கோ
பின்னோக்க மென்னோநீ பேசிடாய் – அந்நாளின்

மாறாகத் தேவனையும் வஞ்சிக்கப் பாம்புளதேல்
வேறாயோர் தேவால் விதித்துளதோ – கூறுமந்தப்

பாம்பு நரனுக்கரிய பார்வைதந்தத் அந்தத்தேவன்
சாம்பரிசு தந்தான் சதுரரெவர் – நாம்புசிக்கப்

பக்கிமிருகத் தையுண்டு பண்ணினால் யாமவற்றின்
குக்கிற் கிரையாதல் கூடுமோ - மிக்கிளைத்து

வேலைசெய்வோ ரோர்நாள் விடாயாற்ற நின்றிடுதல்
போலிருப்போன் தேவனெனப் போகுமோ –ஞாலத்து 295

வானமழை பெய்யாமுன் வந்துபனி பெய்ததென்றால்
ஏனதனைக் கேட்போ ரிகழார்கள் – தானியா

மோர்விளக்கில் வந்தே உதிக்கும் விளக்கென்னச்
சார்வதற்குச் சீவன் சடப்பொருளோ –நேரொவ்வாத்

தீவினையி லற்பத்தைச் செய்தோர் பலசெய்தோர்
தீவினையே முற்றாகச் செய்திடுவோர் –தீவினைக்கண்

எத்தனையோ பேதமிருக்க அவையா வினுக்கும்
நித்ய நரகத்தழுத்தல் நீதியோ – நித்திரைதீர்

ஞாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளின்றே வந்துறினும்
மாயும் மனிதரெல்லாம் வந்தெழுந்தாற் – சாயாது 300

நிற்குமோ பூமி நெருங்க நெருங்க மென்மேல்
ஒக்கவடைத் தாலும் உலகங்கொள் –கிற்குமோ

ஆற்று மணலெலாம் அளவிட்டாலும் உலகில்
தோற்றியிறந் தோரெண் தொலையாதே – ஆற்றவே

தாகித்தோர்நீர் தேடுந் தன்மையெனச் சற்குருவை
மோகித்தோர் தேடன் முறையன்றி - ஊகித்துச்

சீடர்களைத் தாம்வலுவிற் சேர்க்கத் தெருத்தெருவாய்த்
தேடிக் குருமார் திரிவாறோ – கூடியுள

சீவன் சரமடையச் செய்யவிலையே லவைகள்
யாவுநமைப் போல்வாழ் வமைவானேன் – சீவன் 305 

அறிவினுயர் வென்னில் அவையைந்தா றாய்மாறப்
பிறிதுபிறி தாதிலனே பேதாய்- அறிவன்

விதியா யென்றென்றும்விதித்தவிதி தப்பிப்
புதிதாய்ப் பழதாய்ப் போமோ – இதுபோற்

பலசரக்கு குப்பையெலாம் பார்த்தால் அவற்றுள்
சிலசரக்குங் கிட்டாது சேர்த்தே – அலகிலந்தச்

சொற்பதரெல்லாம் புடைத்துத் தூற்றினால் ஆங்கவற்றுள்
அற்பமணியேனும் அகப்படா – விற்பனர்கள்

தர்க்க நிறைகோலாற் சரிதூக்கி உத்தியெனும்
கற்கிடையே மாற்றுரைத்துக் காட்டினால் - பற்கெஞ்சிப் 310

பையவிழித்துப் பதைப்புற்று நாக்குளறிக்
கைவிரித்துத் தேவசித்தங் காணென்பார் – மெய்யுணர்ந்தோர்

தட்டிப்பேசாது விட்டாற் சண்டப்ரசண்டமதா
யெட்டிப்பார்ப் பார்கள் இவர்கள்வயப் – பட்டுநீ

பாம்பின்வாய்த் தேரை பருந்தின்கா லாகுவெனத்
தேம்பி மடியாமல் திரும்பென்றான் – வீம்புரைத்து

நின்றமனம் சோர்ந்து நெடுமூச்செறிந் துதிகைத்
தொன்றுந் தெரியா தொருமுகூர்த்தஞ்- சென்றதற்பின்

அந்தக் கிறிஸ்தேசு அவதரிக்கப் பல்கால 
முந்தவதைக் கண்டு மொழிந்ததனால் -அந்தவுரை 315

வேதமென்று சொல்லி வெகுபே ரனுசரிக்க
ஏதிப்ப டிக்குரைத்தீர் என்றேன்யான் – ஓதக்கேள்

பின்னர்நி கழ்வதனைப் பேசுவது தான்வேதம்
என்னப் படுமோ இனிவருதல் – முன்னுணர்ந்து

சோதிடங் கற்றோர்கள் சுலபமா யாவருக்கும்
ஓதிடநாங் காணாத துண்டோதான் – வாதிடுமப் 

பித்துரை யிலேசு பிறப்பதுவுஞ் சாவதுவும்
ஒத்தே யெடுத்துரைத்த துண்டுகொலோ – சத்தியமாய்

அன்னோன் சரிதங்கள் ஆதியந்தமாய் அதனுட்
சொன்னால் ஓர்கால்நாம் துணியலாம் – பின்னவர்கள் 320 

வேலிதனக்குக் கரட்டோணான் சாட்சியெனல்
போலப் பலவும் பொருத்துவர்காண் –மேலதுவென்

றன்னதொரு நூலை அனுசரிக்கும் யூதரெலாம்
இன்னமதைப் பொய்யென்ப தென்னையோ – அன்னவருள்

சுன்னத்தைத் தள்ளாத் துருக்கரதைப் பொய்யாமென்
றென்னத் தினாலின் கியம்புகின்றார்- அன்னதைத்தான்

அந்நாட்டி லுள்ளோர் அனேகர் அருவருத்தால்
எந்நாட்டில் உள்ளோருக் கேற்குமது – முன்னோர்

பெரிதும் வருந்திப் பிழைத்திறந்த முன்னைச்
சரிதமெலாம் வேதமோ சாற்றாய் - சரிதங்கேள் 325

பெட்டியொன் றினோவாதன் பெண்டுபிள்ளை யாதியுடன்
சிட்டியொவ் வொன்றா யொருங்கே சேர்ந்தேறிப் – பெட்டியோடு

அந்தரத்திலே மிதந்து அரராத் மலைமேலே
வந்தடைந்தா ரென்ற மசக்கதையும் – வந்திடுங்காற்

சாமி யெதிர்வந்து சலத்திரளி னாலினிமேற்
பூமியழி யாதென்று போதிக்க – நேமியொன்றை

வானத்தில் வைத்ததுவும் வன்மதுவாற் றைந்தையினைக்
கானான் சிரித்த களிக்கதையும் – மானவர்

பாபேலின் கோபுரத்தைப் பார்த்துப் பலபிரிவாய்
மாபேதஞ் செய்து வகுத்ததுவும் –ஆபிரகாம் 330

சந்ததியைப் பெற்றதுவுஞ் சக்களத்தியாற் சாராள்
சந்ததியைப் பெற்ற தனிக்கதையும் – அந்தநாள் 

ஆண்குறியின் தோலை அறுத்தலுந் தேவார்ப்பணமாய்
நாண்குலையுஞ் செய்கை நடத்தியதும் – வீண்குறித்துச்

சோதேம்கொமோறா வாய்ச் சொல்லுந் தேயங்களின் மேல்
தீதோர்ந்து தேவன் சினந்ததுவும் – தூதோர்கள்

புக்கதுவும் அந்நாட்டோர் பும்மைதுனம்விரும்பித்
தொக்கதுவும்தேடித் தொடர்ந்ததுவும் – மிக்கவவர்

லோத்தின் மனையில் நுழைந்து விருந்துண் டிருந்தத்
தேத்தவரைக் கண்கெடவே செய்ததுவும் – லோத்தை 335

மலையேற்றி ஊரழித்த அந்நிலைமை நோக்கித்
தலைவியப்புத் தூணாய்ச் சமைய – மலைமுழையிற்

கண்ணுறங் கும்போது களிமதுவை யூட்டியவன்
பெண்கள் புணர்ந்த பெருங்கதையும் – மண்மிசையே

ஈசாக்குக் கண்கெட்டிருக்கு நாள் யாகொபு
ஏசாபோல் வஞ்சித்தே ஏத்தியதும் – ஏசா

கொலைசெய்யத் தீர்மானங் கொண்டதற்குத் தப்பி
அலைவான் யாகோபும் அகன்றே – விலையாகி

ஆடுகளின் மேய்ப்பால் அனேகமணஞ் செய்ததுவும்
ஆடுகளை மோசத்தால் ஆர்ச்சித்து – வீடடங்க 340

ஓட்ட மெடுத்ததுவும் ஓர்சாதி மாக்கள்வந்து
காட்டிலவன் மகளைக் கற்பழிக்கக் – கேட்டஞ்சி

வஞ்சித்துக் கொன்ற மதிக்கதையும் மூத்தமகன்
மிஞ்சியவன் பெண்டுடனே மேவியதுஞ் – சஞ்சரித்தே

யூதா மருமகளை யோரிரவி லேபுணர்ந்து
தீதார் கருப்பமுறச் செய்ததுவும் – சூதாக

யோசேப் மறுதேய முற்றதுவௌம் ஆங்கொருத்தி
ஆசையாய்ச் சேரற் கழைத்ததுவும் – யோசனையாற்

சொற்பனத்தி னுட்பொருளைச் சொல்லியபின் வாழ்வுபெற்றுப்
பற்பலவாய் வாழ்ந்த பழங்கதையும் – அற்பவிலைக் 345

காலத்திற் சுற்றத்தார் கண்டெடுத்து வாழ்கதையும்
ஞாலத்தவன் என்பு நாட்படவே – கோலத்தில்

வைத்தகதை யும்அவர்கள் வர்த்திக்க நாட்டரசன்
கைத்தகதை யும்கொல் கடுங்கதையும் – அத்ததியின்

மோசே பிறந்ததுவும் மூடியொரு பேழையிலே 
மாசேற்றிப் புற்புதரில்வைத்ததுவும் – நேசமுடன்

அந்நாட்டரசன்மகள் அக்குழவியை வளர்த்த
பின்னாளவன் பிழைத்த பெற்றிமையும் – அந்நாளில்

தங்கள் குலப்பகைவன் தன்னைத் தனிமையிற்கண்
டங்கவனைக் கொன்றுகர வாயொழுகித் – தயங்கியதும் 350

சண்டைவினை யாலச் சதிக்கொலைமை தான்வெளிப்பட்
டண்டை அயலார்க ளறிந்துகொண்டு – மிண்டதனை

அரசற் கறிவிக்க ஆங்கவனுங் கோபம்
விரவிக் கொலைபுரிய வேண்டித் – துருவிடுங்கால்

ஆக்கினைக்குத் தப்பிப்போய் ஆசாரியன் ஆடு
மேய்க்கி யெனவடைந்து விஞ்சைசெறி – மார்க்கமெலாம்

கற்றுத்தன் துட்டதெய்வங் கைவந்திடச் சித்தி
பெற்றுத்தன் சாதியரைப் பின்கூடி – எத்தி 

அடிமைத் தனம்நீக்கி ஆறாகப் பால்தேன்
வடியும் நல்லதேயத்தே வைத்துக் – குடியேற்றும் 355

ஆசைகொளுத்தி அழைத்துவந்து தந்தேவைப்
பூசைபலி யாதிகளாற் போற்றுவித்து – மாசனங்கள்

தப்பிவிட லாகாதுசண்டையிடற் குந்தனதெண்
ணப்படியே கேட்டு நடத்தற்கும் – ஒப்பியதோர்

மார்க்கமெனப் பற்பலவா மாயவித்தை செய்ததுவும்
தீர்க்கவிதி விலக்குச்செப் பியவை – யார்க்குமினி

யென்றுமிருக்க இயம்பியதை விட்டுப்பொன்
கன்றுதொழத் தேவன் கனன்றதுவும் – அன்றொருவன்

வேலைசெய்யா நாளில் விறகெடுக்கக் கொன்றதுவும்
சீலமெல்லாம் ரத்தத்தாற் செய்ததுவும் –மேலடைய 360

எண்ணிவந்த தேயம்போ யெய்தாமுன் மோசேயிம்
மண்ணி லிறந்து மடிந்ததுவும் – அண்ணலா

யோசுவா என்பான்பின் னுற்றதுவும் அன்னவனைத்
தேசம்பெருகச் செயித்ததுவும் - ஆசையினால்

ஈப்தா எனவொருவ னீன்றமகளைப் பலியிட்டு
ஆப்தமுடன் ஊரையர சாண்டதுவும் – தீப்தியுடன்

சிம்சோனொரு சிங்கத் தேன்கதைக்காய் முப்பதுபேர்
தம்சோர்வு கண்ட தனிக்கதையும் - எம்சோர்வை

மாற்றலரும் எய்தி மடிகவென வீடிடிக்கும்
ஆற்றலுளோன் கண்ணறைய னாகியே - சீற்றமுடன் 365

பட்டதுவும் லேவியன்வைப் பாட்டியைப் பல்லோர் புணர்ந்து
விட்டதனாற் போர்புரிந்து வீந்ததுவும் – இட்டபந்துக்

காகக் கொலைசெய்து கன்னியரைத் தேடியதும்
ஏகும் வழியிற்பெண் ணெடுத்ததுவும் – சாகக்

கணவன்ற னைக்கொடுத்த காரிகை ரூத்துக்கோர்
கணவன் நிருமித்த கதையும் - மணமகனாய்ச் 

சாமுவேல் தோன்றியதுஞ் சாட்சியாம் பெட்டிகவர்
காமுகரை நோயாற் கருக்கியதுஞ் – சாமுவேல்

சவுலென் றொருவன் தனக்கரசு தந்து
நவமாய் முடிசூட்டு நண்புஞ் – சவுலரசைத் 370

தாவீதடையச் சபித்ததுவும் தாவீதை
யோவாது கொல்ல உசாவியதும் – தாவீது

நாபால் மதுவப்ப நல்கேனென நோக்கிக்
கோபா வேசத்தால் கொலச்செல்லக் – கோபாலர்

தம்மொழியால் நபாலின் தாரமெதிர் தோன்றியதும்
இம்மெனவே நாபால் இறந்ததுவும் – செம்மி

யவன்பெண்டைத் தாவீ தணைந்ததுவும் போரில்
சவுலிறந்து நேர்ந்த சழக்கும் – தவமாகத்

தாவீது பூசைசெய்து சாமிசெய்ய நோக்கியிகழ்ந்
தாவீதென்னென்ற மனை யாட்டி பிள்ளை - மேவாது 375

வன்மலடி யாகவருந் தியுழலும் படித்தே
வன்மைசெய் ததுந்தா வீதரசன் – றன்மனையில்

உப்பரிகை மேலே உலாவுகையில் மாதவிடாய்க்
கப்பின்முழுகு பற்சோ பாளைக்கண் – டப்பொழுதே 

கொண்டுவரச் செய்தவளைக் கூயவள் கருப்பங்
கொண்டுவிட் டாளென்ற குறிப்புணர்ந்து – தண்டுடன்போந் 

தன்சேவக னாமத் தையல்கண வற்கூவி
உன்சேரி செல்லென் றுரைக்கஅவன் – மன்சேனை

யுத்தமுடியா துடன்படேன் என்றிடவன்
மத்தை மனத்தில் வைத்து மாற்றோரால் – தந்திரமாய்க் 380

கொல்லும் படிக்குக் குறித்தெழுதிக் கொல்லுவித்துப்
புல்லும் பற்சேபாளைப் புல்லியே – நல்லவன்போற்

சாலோமோன் என்ற தனயனைப்பெற் றீந்ததுவும்
நோலாவொருமகன் அம்நோனென்பான் –மாலேறித்

தன்னோ டுடன்பிறந்த தாமாரை வஞ்சித்தம்
மின்னோடு வன்மையாய் மேவியபின் –பென்னோ

அவளை மிகவெறுக்க அப்சலோம் கோபித்
தவனை வதைத்த அழகும் – புவனியது

தன்குடையின் கீழடங்கச் சாலோமோன் ராசாங்கம்
நன்குடைய தென்றுபுகழ் நாளையிலே – முன்குறித்த 385

கோவிலொன்று கட்டியதும்கொண்டாட்டஞ் செய்ததுவும்
தேவியர் பல்லோர் தோளைச் சேர்ந்ததுவும் – பாவியெனப்

பட்டிறுதியின் மாறு பட்டிறந்தபின் கன்றுக்
குட்டிக்குப் பூசைவந்து கூடியதும் – ஒட்டி

மலிவா யரசர்முன் னைமார்க்கத் திற்சேர
எலியா எலிசா இயற்றியதுஞ் – சலியாது

நாடாண்டி றந்தொழிந்த ராசாக்கள் தங்கதையும் –
மாடார் பிரசங்கி வன்கதையும் - பீடழியச்

சாத்தான்செய் யோபு சரித்திரமும் சாலோமோன்
தோத்திரமும் வேறுபலர் சொற்றிரளும் –சேர்த்தியே 390 

வேதமென்று சொன்னலிம் மேதினியில் எக்கதையை
வேதமல வென்று விலக்குவது – வேதத்துள்

வந்ததெல்லாங் கேட்க வழங்காக் கதியானால்
அந்தக்கதை மறைதான் ஆகுமே – இந்தக்

கதைபலவும் பற்பலவி கற்பமுள வேல்யாம்
எதைமுதல்நூல் தேவன்நூல் என்பாம் – அதையன்றி

யேசுகதை சீட ரெழுதுநிருபக் கதைவீண்
வாசகங்களும் வேத மாயினவே – பூசைக்

குருமார் சரிதமவர் கூட்டத்தின் கொள்கை
ஒருசாரார் வேதத் துரைப்பார் – கருதுங்கால் 395

ஆலையில்லா வூருக் கிலுப்பைப் பூச்சர்க்கரையைப்
போலினிதா மென்றல் புதுமையோ – மூலையிலே

தங்குங் கிணற்றுத் தவளையொப்பார் நாட்டுவளம்
எங்கறிவாரையோ இதுபோல்மற் – றங்குள்ள

கோட்டாலை சொல்லவொரு கோடிநாட் செல்லுமிதைக்
கேட்டாரும் கொட்டுவார் கெக்கலிகாண் – நாட்டிலே

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்

தவத்தளவே யகுமாந் தான்பெற்ற செல்வங்
குலத்தளவே யாகுங் குணங்காண் – கலப்பாய் 400

நிலத்திற் பிறந்தவை கார்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்லென் – றிலக்கியத்துட்

சொன்னவிதிக் கேற்பவர் தொன்னூலி னாசாரஞ்
சென்னீர் தெளித்தல் கொலைசெய்தலே- பின்னூலுள்

ஏசுசதையும் இரத்தமும் உட்கொண்ட்டப்பங்
கூசுமதுவுங் குடித்திடுதல் – பேசிடுங்கால்

நல்லா றெனப்படுவ தியாதெனில் யாதொன்றுங் 
கொல்லாமை சூழு நெறியென்று – வல்லார்

வகுத்தமைக்கு முற்றிலும்நேர் மாறாய்க் கொலையே
மிகுத்தமையால் யாங்கூறன் மேலென் –றொகுத்தாற் 405

பெருமைகும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
கருமமே கட்டளைக் கல்லாஞ் –சரிதமெலாம்

வேதமாம் என்று வெகுபேர் மதிப்பதால்
ஆதிமத மாமென் றறைந்தாய்நீ- பேதாய்

உலகின் மலிந்தவெலாம் உத்தமமோ செம்பொன்
நிலைகுறைந்துந் தாழ்வுபட்டோ நிற்கும் – அலைகடல்தான்

பென்னம்பெரிதே யெனினுஞ் சிற்றூறலென
நன்னீர் மனிதர்க்கு நல்குமோ – இன்னும் 

விரிவாய்ப் பலவுலகின் மேயவருள் ஞானி
அரிய னொருவனென ஆன்றோர் – தெரிய 410

உரைத்தா ரதனால் உயர்வு குறைந்து
தரைப்பா லிழிவுமிகச் சாரும் – உரைப்பானேன்

நன்றேல்லாந் தீதாயும் தீதெல்லாம் நன்றாயும்
கன்றிவரத் தக்க கலிகாலம் – என்றென்றும்

பொல்லாதார் நல்லாராய்ப் பொங்கி யருமறைநூல்
கல்லாதார் வாழுங் கலிகாலம் – இல்லாளை

அன்னியர் தோள்சேர்த்தி அரும்பொருளைத் தேடியிழி
கன்னியர்தோள் சேருங் கலிகாலம் – மன்னரென்போர் 

பாதகங்கள் செய்து பணம்பறிக்கு மாந்தரொத்துக்
காதகங்கள் செய்யுங் கலிகாலம் – தீததனால் 415

எள்ளுண்போர் தள்ளுண்போ ரேசுண்போர் மாசுண்போர்
கள்ளுண்போர்க் கான கலிகாலம் – முள்ளுள்ளே 

எக்குப்பெருத்து மதமேற் படுத்தித் தூஷணைத்தீ
கக்குங் கொடிய கலிகாலம் –மிக்குலகில் 

ஈட்டுந் தவமாதி யின்மையாய்த் தெய்வநிலை 
காட்டா தொழிக்கும் கலிகாலம் – கூட்டுகலி

காலமெலாம் வந்தோர் கனத்தவடி வெடுத்தாற்
போலவந் திங்குப் புகுந்ததுகாண் – மேலும்

அரசர்கள்தம் கோட்பாடும் ஆனமையால் ஓங்கி
முரசமென நின்று முழங்கும் - பிரசைகள்தாம் 420

மன்னவர்கள் செல்லும்வழியே வழிக்கொள்வார்
என்னுமுரை யெம்மால் இயம்பியதோ – பின்னுமது 

சற்சமய நூலுணர்ச்சி சாராநாட்டுப் புறத்தி
னிற்செறிந்த கீழ்மக்க ளென்றறையுங் –கற்செறீந்த

புல்லறிவோ ராஞ்சிறிய புட்குலத்தை யுட்படுத்த
மெல்லியராங் கண்ணிபல மேவுவித்தும் – வல்லகல்விச்

சாலையென்று சொல்பஞ் சரமமைத்துங் கைக்கூலி
வேலையென்று சொல்லும்வலை மேல்விரித்து –மூலைதொறும்

பண்ணுமுப தேசப் பயில்குரலிற் கூவுவித்தும்
உண்ணுபல பண்டமெனும் ஒட்டுவைத்தும் – மண்ணவரைச் 425

சேர்த்துத் திரட்டவல்ல செய்கையெலாஞ்செய்தக்காற்
பேர்த்தும்அந் தக்கூட்டம் பெருகாதோ – பார்த்துணரா 

தையோமதிமயங்கி அம்மதத்திற் சேர்ந்ததன்றி 
மெய்யோர்ந்து தேர்ந்ததன்கண் மேவினர் யார் –உய்யுநெறி

காட்டுமென் றுள்ளாய்ந்து கலந்தவரார் தங்கள்பவம்
ஓட்டுமென்று நாடி உணர்ந்தவர்யார் – மீட்டுமதில்

வந்துபுகுந்த மனிதருள்ளும் வன்மையுடன்
முந்தவதி லுள்ள மூப்பருள்ளுஞ் – சிந்தைப்

புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்த
நிலையுணர்ந்து நீங்கியார் நின்றார் – தொலையா 430

அபசார மெல்லாம் அகற்றா விடினும் 
விபசாரஞ் செய்யா தார்விட்டார் – சுபமாக

மாதுசங்கஞ் சேர்ந்து மருவினரல்லா துயர்ந்த
சாதுசங்கந்தேடிச் சார்ந்தார்யார் –வாதமிட்டுச்

சந்தைக்கடைபோலச் சண்டைசெய்வா ரல்லாது
சிந்தைமையல் சற்றேனுந் தீர்ந்தார்யார் – அந்திசந்தி

மூக்கறையர் ஞானமென மூலைதொறும் பேசலன்றி
யாக்கைநிலைசோதித் தறிந்தார்யார் – ஊக்கமுடன்

செல்வத்தைத் தேடுதற்குச் சிந்தைவைத்தா ரல்லததை
அல்லலென் றுகைவிட் டகற்றினர் யார் – புல்லும் 435

இனக்கோட்ட மெம்முள் இலையென்ப தல்லால்
மனக்கோட்டம் நீங்கினார் மற்றார் – கனக்கவேறு

எந்தச் சமயத்தும் எய்தாச் சுகமதனை
அந்தச் சமயத் தடைந்தார்யார் – அந்தச் 

சமயம் பெருகிடினும் தாழ்காலம்வந்தால்
இமையி லழிவெய்தி இறுதல் – அமையுமந்தத்

துப்பற்ற மார்க்கத்திற் றோயாதே
கைப்புற்று நிஞ்சிற் கவலாதே – எய்ப்புற்றுப்

பேய்த்தேரை நீரென்று பின்றொடர்ந்து நீர்நசையாற்
போய்த்தே டல்போலப் புலம்பாதே – வாய்த்தவெளிப் 440 

பட்டப் பகலிற்கண் பார்வையிலாக் கூகையைப்போற்
றட்டித் தடவித் தவியாதே – கிட்டி

அவசமயத் துள்ளாழ்ந் தலையாதே யுன்றன்
சுவசமயந் தேரென்று சொன்னான் – சிவசமயத்

துண்மையெல்லாம் நெஞ்சத் துறுத்தினான் வேற்றுமதத்
திண்மையெலாம் நில்லாமற் செய்திட்டான் – அண்மை

பத்திநெறி யும்பழ வடியார் தாள்பணியும்
புத்திநெறியும் எனக்குப் போதித்தான் –சித்திநெறி

காட்டினா னென்கட் கலந்துநின்ற தீக்குழுவை
ஓட்டினான் வேறோர் உருச்செய்தான் - வேட்டுவனோர் 445 

மென்புழுவைத் தன்படிவம் எய்துவித்த வண்ணமெனைத்
தன்புதிய கோலஞ் சமைப்பித்தான் – முன்பு

பதைப்பற் றிறுமாந்து பாறையொத்த நெஞ்சைப்
பதைப்புற் றுருகப் பணித்தான் - புதைத்தவன்பால்

எங்குமிருப்பான் இறையெனினும் மூர்த்தியிடைத்
தங்கும் விசேடமெனச் சார்வித்தான் –அங்கெனக்குக்

கண்ணிணைநீர் வார்க்கவுடல் கம்பிக்க மெய்புளகம்
நண்ணவொருசாலம் நவிற்றினான் – மண்ணிலையன்

தாள்துணையிலென் றலையைத் தாழ்த்திப் பணிந்தெழுந்து
மீட்டும் மொழிந்தேனோர் விண்ணப்பம் – வாட்டும் 450

மனவிருளை நில்லாமல் மாற்ற வுதயஞ்செய்
தினகரனே ஆனந்தத் தேனே – இனிதான

சொந்தச் சமயத்தைத் தூஷணித்துக் கைப்பான
வந்தசமயத்தை ஆதரித்தே – எந்தை

தனையும் அவனடியர் தங்களையும் வேடத்
தினையும் பலஇகழ்ச்சி செய்த – எனையும் 

பொறுக்குமோ கோபித்துப் புன்னரகில் தள்ளி
ஒறுக்குமோ வேண்டா தொதுக்கி – வெறுக்குமோ

செய்நெறி வேறொன்றுந் தெளிகிலேன் தீவினையேற்
குய்நெறிதா னுண்டோவென் றோதினேன் –பையவே 455

என்முகத்தை நோக்கி இரங்கியருளி எங்கோன்
புன்முறுவல் சற்றே புரிந்தருளி – முன்மதித்த

ஏசு சமயத்து உணர்த்தும் எந்நாளும் மீளாத
வாச நரகை மதித்தனையோ – ஈசன்

நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன்பேர் சங்கரன்காண் – மலையெடுத்த

வல்லரக்க னுக்கும்மிக வன்மம்செய் தக்கனுக்கும்
நல்ல வரம்பலவும் நல்கினான் – எல்லவரும்

ஆரமிர்தம் உண்டிடுவான் ஆலாலம் உண்டமைந்த
காரமரும் நீலமணிக் கந்தரத்தான் நீரகமாம் 460

அன்பில்லார் மால்பிரம ரானாலுங் காண்பரியான்
அன்புடையார் புன்புலைய ராயிடினும் தன்பெருமை

எண்ணா தெழுந்தருள்வான் எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும்
தண்ணா ரருளளிக்குந் தாயானான் – மண்ணகத்தே 

பெற்றெடுத்த தாயேதன் பிள்ளையைக் கைவிட்டக்கால்
மற்றதனைக் காப்பாற்று வார்யாரே – குற்றமொன்றுங்

கொள்ளான் குணமாகக் கொள்வான் தொழிலனைத்துந்
தள்ளான்நின் அச்சந் தவிர்திகாண்- வள்ளல்தனைப்

பற்றினா லுன்னையவன் பற்றுவா னெப்பற்றும்
பற்றாமல் நின்ற பரமேட்டி – உற்று 465

மருத்துவன்றான் மந்த்ர மணிமருந்தா னோயைத்
திருத்துதல்போற் சற்குரவன் தேர்ந்தே – பெருத்தபவ

மூர்த்திதலந் தீர்த்தமெனும் மூன்றா லறமாற்றித்
தீர்த்திடுவ னென்றுமறை செப்புதலால் – ஆர்த்திகொடம்

மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்குங்காண் – கூர்த்தறிவாற்

றேராது முன்னிழைத்த தீவினைக்கா யச்சமுடன்
ஆராமை நின்பா லடைந்தமையால் – சாராத 

வேற்றுச் சமயந் தனைமதித்த வெம்பாவம்
மாற்றுங் கழுவாய் வகுக்கக்கேள் – தோற்றுகின்ற 470

இந்தத்த லம்போல எல்லா விசிட்டமும்மற்
றெந்தத் தலத்து மிலைகண்டாய் – முந்தையோர்

போற்றுதலம் பாவங்கள் போக்குதலம் வேதத்திற்
சாற்றுதலம் தானாய்ச் சமைந்ததலம் – ஏற்றற்

குரியதல மிவ்வுலகத் துள்ள தலத்துள்ளே 
பெரியதலம் எம்மாலே பேசற் – கரியதலம்

ஆனாலுஞ் சற்றே அறைவேன் அதன்பெருமை
மானார் கரத்து மழுவலத்தெங் -கோனானோன் 

புற்றிற் சயம்பாகப் போந்தலந் தேவர்கடங்
கற்றாத் தொழுது சிட்டி கற்றதலஞ் – சற்றேனும் 475

மாலவனும் காணா மலர்த்தாள்கண் டர்ச்சித்துக்
காலவனார் முத்தி கலந்ததலம் – மேலாந்

தலத்தி லுயர்ந்த தலம்தேடி வானோர்
நலத்ததெனக் கண்டடைந்து நண்ணுதலம் – வலத்தாலே

கொம்பின் குளம்பின்வடுக் கொண்டருளி மெய்யடியார் 
தம்பிறவி மாசுவடுத் தள்ளுதலம் – அம்போரு

கக்கண்ணான் கோமுனிவ னாகியடி யர்ச்சித்துத்
தெக்கணகை லாயமொன்று செய்ததலம் – புக்கு

நடையனத்தான் பட்டிமுனி நாமமொடு போந்து
வடகைலை செய்து வசித்ததலம் – நடனமவர் 480

பார்க்கும்படி ருத்ர பாதத்திற் றீவினைகள்
தீர்க்கும் திருநடனம் செய்ததலம் – சேர்க்குமிகு
சீரார் மருதமலைச் செவ்வேளால் அன்றமரர்
சூராதி வாட்டித் துதித்ததலம் – நேராத

பாவஞ்செயுஞ் சுமதிப் பார்ப்பான் இறந்தொழியத்
தேவத்தலத் தவனைச் சேர்த்ததலம் – தேவர்

சமுகத்தவ மானத் தான்முசுகுந்தன்றன்
சுமுகம்பெற் றோங்கிச் சுகித்த தலம் – கமுகங்

களத்தாள் பிருகுமகள் கைப்பற்று சாபம்
உளத்தாம லிந்திரனா ருய்ந்ததலம் – பளத்தின்கண் 485

வேதியனாம் ஏனத்தை வேந்தறியா தெய்தபழி
காதியருள் நல்குங் கடவுள்தலம் – தூதிருளில் 

சென்றாண்ட தொண்டருக்குத் தேவியொடு நெல்வயற்கண்
அன்றுபள்ள னாய்ப்போ யருளுதல் – நன்றுணர்ந்த

தில்லைமுனி வோரழகு சிற்றம்பல செய்திங்
கெல்லையறு பூசை யியற்றுதலஞ் – சொல்லைநம்பக்

கைதூக்கிவ் யாசன்முனங் காசித்தலத் துரைத்த
பொய்தூக்கு பாவத்தைப் போக்குதலம் – மெய்தூக்கிக்

கோசிகனார் போற்றியருள் கொண்டுதிரி சங்கினுக்குக் 
காசினிவே றேயமைக்கக் கற்றதலம் - பேசிடுவோர் 490

எல்லாங்கதி செலல்பார்த் தேமனிந்த நற்றலத்தில்
நல்லார்க்கே பத்திவர நாட்டுதலம் – பொல்லாக்

கிராதனாய் வாழங்கிர னிறந்துங் கீழாய்
வராதுகதி மேலேற வைத்ததலம் – பராபரையாள்

நற்றவத்தைச் செய்துபட்டி நாதரிடப் பாலமரப்
பெற்றுமகிழ் அந்தரங்கம் பெற்றதலம் – கற்றவர்கள்

தாங்குசிவ சின்னந் தவத்தோர் சரிதமெலாந்
தீங்ககல எங்கோன் தெருட்டுதலம் – ஆங்குவிளை

நீற்றா லொருத்தியின்பேய் நீக்கி யந்தப்பேயினுக்கு
மாற்றாலே முத்தி யளித்ததலம் – சாற்றுமதன் 495

பேர்பலவாம் பேரூர் பிறவாநெறி வளருஞ்
சீர்பலசேர் மேலைச் சிதம்பரமிப் –பார்பரவும்

ஆதிபுரம் தென்கயிலை யாவினுயர் தேனுபுரம்
போதிவனம் ஞானபுரம் போகபுரம் – ஆதியவாம்

தோய்ந்தோர்கள் பாவஞ் சுடர்முன் இருளென்னத்
தேய்ந்தோடத் தீர்த்தளிக்கும் தீர்த்தங்கள் – ஆய்ந்தக்கால் 

காஞ்சிநதி யாதி கணிப்பிலவாம் ஒவ்வொன்றும்
வாஞ்சை யறிந்தே யுதவ வல்லனவாம் – பூஞ்சினைசேர்

திந்திருணி யும்பனையுஞ் சென்மமிலை யிங்கடைந்தோர்க்
கந்தமிலை யென்பதனுக் கத்தாக்ஷி – இந்தநகர் 500

ஆவின்மயம் கிருமியாதி யடையா தென்னிற்
பாவ நிரயத்தின் பயமுண்டோ – பாவமெலாஞ் 

சேர்த்திவி ழுங்கவொரு தீபகம்போல் வந்தபட்டி
மூர்த்தி விசேட மொழிவானேன் – மூர்த்திதனை

வந்தித்தோர் வேண்டும் வரம்பெறுவர் சிந்தையுள்ளே
சிந்தித்தோர் பாவமெல்லாந் தீய்த்திடுவர் - - சந்தித்தே

தோத்திரித்தோர் எய்தாச் சுகமுண்டோ பாவங்கள்
மாத்திரமோ சன்மவிடாய் மாறுமே – கோத்திரத்தில்

எள்ளால் தருப்பணஞ்செய் திட்டோர்பெறும் பேற்றை
வெள்ளெலும் புங்கல்லாய் விளம்புங்காண் – உள்ளவெலாம் 505

என்னாற் சொலமுடியாது எண்ணிறந்த நாவுள்ளோன்
சொன்னாலும் பன்னாட் தொலையுமால் – உன்னிடத்து

நற்காலம் வந்த நலத்தா லிஃதுணர்ந்தாய் 
துற்கால மெல்லாந் தொலைந்ததுகாண் – முற்காணும்

பட்டிப் பெருமானைப் பச்சைவல்லித் தாயுடன்கண்டு
இட்டசித்தி யெல்லாம்நீ எய்துவாய் – துட்டசங்கஞ்

சேர்ந்தொழுகு பாவமுன் சென்மாந்தி ரப்பவமுந்
தீர்ந்தகல நெஞ்சந் தெளிந்துகளி – கூர்ந்தே

அருமையாய் யாரும் அடைதற்கரிய
பெருமையெலாம் நல்கப் பெறுவாய் – ஒருமையாய் 510 

இவ்வண்ணம் பன்னாள்நீ எம்மான்பணி புரிந்தால்
அவ்வண்ணல் கண்ணுற்று அருளியே – செவ்வண்ணக்

கோலமொளித்தோர் குருவடிவாய் வந்துதவ
சீலமுடன் தீக்கையெலாஞ் செய்தருளி – மேலாகுந்

தன்னிலையும் நின்னிலையும் சாரும் உயிரின் நிலையும்
முன்னிலையாய்க் காட்டி முரணறுப்பான் - இந்நிலையில்

ஐயமொன்று மில்லையென்று எனையனருள் செய்துதிருக் 
கையதனாலே நுதலிற் காப்பணிந்தான் – மெய்யை

விரிந்த பொருளால் விளம்பிய என்னையன் 
பிரிந்தருளினான் என்னைப் பின்னர்த் – தெரிந்துணரா 515

தங்கையுறும் பொன்னை அவமதித்து மண்ணினைத்தஞ்
செங்கையுறக் கொள்ளும் சிறாரென்னத் – தங்கினேன்

கல்லெறியப் பாசி கலைந்து நன்னீர்தானும் நல்லோர்
சொல்லுணரில் ஞானம்வந்து தோன்றுமெனச் – சொல்லுகின்ற

மூதுரையி னாலென்றன் மூடஞ் சிறிதகன்றப்
போதுசிறு ஞானமென்றன் புந்திவர- ஓதும்

புனிதமொழி யுரைத்த போதகனை யானோர்
மனிதனென மதித்த மாண்பால் - இனிதாக

மெஞ்ஞானம் முற்றும் விளங்கவிலை உள்ளத்தில்
அஞ்ஞான முற்றும் அகலவிலை – அஞ்ஞான்று 520

தேசிகன்தன் நோக்கஞ் சிறிதடைந்த வாற்றாலும்
பேசியவனோடு உறைந்த பெற்றியினும் – நேசமது

பேரூரிற் பற்றிப் பிடர்பிடித் துந்தி யென்னைத்
தேரூர் தெருவிற் செலுத்தவே - நேரேபோய்க் 

கங்கா சலத்துயர்ந்த காஞ்சிப் புனலாடிப்
பொங்குபல தீத்தம் புகுந்தாடித் – தங்குதிரு

நீற்றுத் திடரில்விளை நீ றாடித் தேவர்குழாம்
போற்று மருகிற் பொடியாடித் – தேற்றுபுகழ்

கொண்டாடி மேருவன்ன கோபுரத்தைக் கண்ணாரக்
கண்டாடி யுள்ளக் கசிவாடித் – தொண்டர்தொழும் 525

பட்டிக் களிற்றின் பருத்தவிமானத் தடைந்து 
கிட்டிக்கன் மப்படலங் கீறவே – குட்டிக்கொண்

டோரிரண்டு கையா லுபயசெவியும் பிடித்துப்
பாரிற்படிதோப் பணம்போட்டு –நேராய்

வலம்வந்து போற்றி வரமிரந்து நீங்கிப்
புலம்வந்து கோவிலினுட் போகி – நலம்வந்த

கோபுரத்தி லுட்புகுந்து கும்பிட்டுத் தெண்டெனவீழ்ந்
தேபுரளு மங்கப்ப்ர தெக்கணமாய்த் – தீபுரத்தில்

இட்டான்திருச்சந் நிதிகண்டு தாழ்ந்தெழுந் தங்
கட்டாங்க பஞ்சாங்கத் தாற்பணிந்து – வெட்டுதுண்ட 530

நந்திப்பெருமா னகைமணிப் பொற்றாள் வணங்கி
வந்தித்துட் போக வரமேற்றுச் – சந்தித்

திரண்டாம் பிரகாரத் தெய்திக் கல்லாற்கீழ்ச்
சரண்தொழுவார் சன்மார்க்கஞ் சாரக் – கரங்காட்டி

மோன வழிதேற்றுபு சின்முத்திரையோ டாங்கமர்ந்த
ஞானகுரு தேசிகன்றாள் நான்பணிந்தேன் – வானங் 

குடியேற்றித் தேவர்கள்தங் கோமான்தலைக்கு
முடியேற்றி மூவுலகுஞ் சேவற் –கொடியேற்றிப்

பன்னிரண்டு கண்கள் படைத்தருளுஞ் செவ்வேளை
என்னிரண்டு கண்களால் யான்கண்டேன் – முன்னர் 535

வணங்கிப் புறத்தொட்டி வார்புனலை யள்ளி
இணங்கிப் புரோகித்துள் ளேகி –மணங்கமழும்

சிங்கதீர்த்தத்தைச் சிரத்தில் எடுத்துத் தெளித்துள்
ளங்கையினாற் மூன்றுதர மாசமித்துப் -பொங்கிமேற் 

போந்திரண்டு துவாரம் புரப்போர் பதம்போற்றி
ஏந்தல்திருச் சந்நிதிவந் தெய்தினேன் – தேய்ந்து

வினையெனை விட்டேக விடைகேட் காநிற்ப
நனையவிரு கண்ணீர் நனைப்பத் -தினையளவும்

இல்லாத அன்பு பனையென்ன நனிபெருகச்
சொல்லாத வானந்தந் தோன்றியெழப் – பொல்லாப் 540

பொருட்செறிவு சேர்ந்தடர்ந்த புந்தியி லன்றேதோ
தெருட்சி மருட்சி திகழ – அருட்செறிவொன்

றில்லையென்று சொல்லும் எனக்கும் அஃதுண்டென்ன
வல்லையிலே பிரத்யட்ச மாய்விளங்க – நல்லவெலாம்

பெற்றேன்போற் பட்டிப் பெருமானையான் காணப்
பெற்றேன்என் கண்படைத்த பேறுற்றேன் – சற்றேனுங்

கூசாதுனை யிகழ்ந்த குற்றம் பொறுத்தியென்று
வாசா கயிங்கரியம் ஆற்றினேன் – பூசாரி

சாற்றுதிரு வெண்ணீறு தந்தாரிதுபோல
வேற்று நிமித்த மிலையெனவே – யேற்றுடலில் 545

அங்கந் திமிர்ந்தேன் அகங்கொண்டேன் உள்மாசுந்
தங்கு புறமாசுந் தள்ளினேன் – அங்கப் 

பெருமான் றனக்கெனது பின்காட்டா தேகி
ஒருமா நடனசபை யுற்றேன் – திருமான்

அழகாத்திரிநா யகன்பொன்னாற் செய்தங்
கழகார் திருக்கயிலை யாக – அழகுசெய்து

கண்கொண்டு பார்த்தற் கடங்காத ஓவியமா
எண்கொண்ட தேவர்க் கிருப்பிடமாய் – விண்கொண்டு

நின்றுநிலாவு நிலைபார்த்துத் தாயினைப்போய்க்
கன்றுதொடர்ந்த கணக்கேபோற் – சென்றழலிற் 550

பட்ட மெழுகென்னப் பதைத்துருகிக் கோமுனிவர்
பட்டிமுனிவர் பதம்போற்றி – நெட்டிலைவேற்

கண்ணுடைய வெங்கள்சிவ காமியுமை கண்களிப்ப
விண்ணுடையோர் கண்கள் விருந்தயர – எண்ணுடைய

தோற்றம் துடியதனில் தோன்றுந் திதியமைப்பிற்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாம்

ஊன்றுமலர்ப் பதத்தே உற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடுகவென் –றான்றோர் சொல்

ஐந்தொழிற்குந் தானே அதிபனெனக் காட்டுதற்கஞ்
சுந்தரமார் திவ்ய சொரூபமுடன் – வந்தனையோ 555

இன்றென்ற னைப்பார்த் திளமுறுவல் காட்டியைந்தும்
வென்றுளோர் சிந்தை விமலமென – நின்றிலகும்

அம்பலத்தே யாடுகின்ற ஆனந்தச் செந்தேனைச்
செம்பதும பாதங்கள் சேவித்தேன் – கம்பிதங்கொண்

டச்சந்நிதியை அகலா தகன்று சென்று
பச்சைக் கொடிபாற் படர்ந்துற்றேன் – நச்சியே.

துற்கை யொருபாலும் துளவோ னொருபாலும்
நிற்கும் நிலைகண்டு நேசித்தேன் – சொற்கத்

திருப்போர் மனித ரெனவடைந்து போற்றி
விருப்போடு கூட்டமாய் மேவும் – நெருக்கத்துட் 560

புக்கேன் விரைந்துகரும் பொன்காந்தஞ் சேருதல்போல்
மிக்கேன் நனிவிரைந்துள் மேவினேன் – அக்காலத்

தெண்ணில் புவனங்கள் எல்லாங் கடைத்தேறக்
கண்ணிற் பொழியருணோக் கத்தழகும் – எண்ணில்

வளமை திகழும் வதனத் தழகும் 
களமாரும் மங்கலநாண் காப்புந் – தளதளவென்

றெங்கும் ப்ரகாசித் திருளகற்றி மேனியெலாந்
தங்கியொளி வீசுபணிச் சார்பழகும் – செங்கைச்சுட்டிச் 565

சம்பந்தப் பிள்ளை தமிழ்பாடப் பால்சுரந்த
கும்பத் துணைநேர் குயத்தழகும் – நம்பினருக் 

கொல்லைப் புறச்சமயத் துள்ளுதிக்கு மொஇன்பமென
வில்லையுண்டென்னும் இடையழகும் – மெல்லப்

புலம்பலம்பல் போலப் புரிநூ புரத்தின்
சிலபலம்பு சேவடியின் சீரழகும் – நலம்பலவும் 

கண்ணாரக் கண்டு களிகூர் மரகதமாம்
பெண்ணா ரமுதப் பெரும்பிழம்பை – அண்ணா

அயர்ந்தே ஒருசற்ற வசமுற்று மீட்டுப்
பெயர்ந்தே மதிகூடப் பெற்றேன் – வயந்தவறி

நாக்குளிரப் போற்றி நவின்றதுதி செப்பியங்கு
நீக்கமுற வொண்ணாமல் நின்றிடுங்கால் – பாக்கியத்தால் 570 

கைத்தலத்தில் உன்னிருக்கை கண்டேன் களிகூர்ந்து
சித்தத்தை நின்பாற் செலுத்தினேன் – தத்தையே

நேராயெனை நோக்கி நீயாரென்றாற் போலோர்
சீரான வாக்குச் செவிபுகலும் – ஆராயாது

என்னையோ தோற்றம்அஃ தென்றெண்ணி யாய்ந்தபசும்
பொன்னை யொக்கும் வாக்கைப் புறக்கணித்தேன் – பின்னரிவ்வூர்

நேயத்தால் நீங்காமல் நீங்கிக் குணதிசைக்கட்
கோயம்பதியில்குடிபுகுந்தேன் – ஓயாமே

அன்றுதொட்டு மார்கழியில் ஆதிரையும் மீனமதி
யொன்றும் திருநாளாம் உத்திரத்தும் – நன்றுசெறி 575

நாட்களிலுஞ் சென்றுசென்று நாயகனார் நாயகியார்
தாட்களிலே நாயேன் சரண்புகுந்தேன் – வேட்கையினால்

சின்னாளில் நாயைச் சிவிகைமிசை யேற்றலென
என்னால் அறியா இயல்பளித்தான் – ஒன்னார்போல்

மாறா யெதிர்த்தபல மாற்றலரை மாற்றிமகப்
பேறாதி பேறும் பெறுவித்தான் – வீறாக

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எனக்களித்தான்
மண்ணிலுள்ளோர் என்னை மதிக்கவே – பண்ணுந்

திருப்பணியும் கொண்டருளிச் செந்தமிழ்ப்பாப் பாடும்
விருப்பருளி யாண்டுகொண்டான் மேனாள் – திருக்கனைத்தும் 580

நீக்கி வலியவந்து நேர்நின் றொருமனிதன்
ஆக்கி அருளும்பழய ஆசிரியன் – வாக்கியத்துள்

அண்ணல் குருவாய்த்தம் அருமைத் திருவுருவங்
கண்ணெதிரே காட்டிக் கருணையொடு – நண்ணுமெனும்

ஒன்றொழிய எல்லாம் உறப்பெற்றேன் அவ்வொன்றும்
என்றெய்துங் கொல்லோவென் றெண்ணினேன் – அன்றொருநாள்

என்கனவினூடே எழுந்தருளித் தன்கோலம்
முன்கோலமாய் வந்து முன்னின்று – நின்சரிதம்

எல்லாம் அமைய இயற்றமிழால் தூதொன்று
சொல்லாய்நீ சொல்லுமந்தத் தூதேசென் – றெல்லாந் 585

தருமென்றான் எம்பெருமான் சற்குருவாய் உன்முன்
வருமென்றான் சொல்லி மறைந்தான் – குருவாய்

நனவகத்து வந்தஅந்த நாளினைஇப் போலவேயென்
கனவகத்துங் காட்டிக் கரந்தான் – நினைவெய்தி

ஏதொன்றுங் கல்லா எனைப்பார்த்துக் கற்றவர்சொல்
தூதொன்று சொல்லென்று சொல்லியதால் – தீதொன்று

தன்மையேன் சொல்லத் தரமில்லே னாயினுமென்
மென்மையே நோக்கி மெலியாமல் – வன்மையுள்ள

போதகன் சொல்லாகும் புணைதுணையாக் கொண்டுதுணிந்
தோத ஒருவாறு ஒருப்பட்டேன் – யாதினையாந் 590

தூதுசெல முன்னிலையாய்ச் சொல்லுவதென் றெண்ணிமனம்
வாதுசெய வுள்ளே மதித்துணரும் – போதுதனில்

தாயார் கரத்திடைநீ தங்கியெனைப் பார்த்தொருநாள்
நீயாரென் றோதல் நினைவுவர – வாயார

என்சரிதம் நின்பால் எடுத்துரைத்தல் தக்கதென்று
முன்சரித மெல்லாம்மொ ழிந்தனன்காண் -வன்சரிதம் 

உள்ளே னானாலும் உற்றதுரைத் தேன்அதனால்
எள்ளேல் என்மீதில் இரங்குவாய் – தள்ளுகிலா

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கென்று – முன்புகன்ற 595

பொய்யா மொழியுணர்ந்த புந்தியெற் குதவி
செய்யா தொழிதல் திறமன்றே – மெய்யாயென்

அம்மையுடன் அப்பன் அருளுஞ் சமயங்கள் 
தம்மை உணர்வாய்நீதான் அன்றோ – அம்மையப்பர்

மேவுமிடஞ் சேறல் விண்ணோரின் மண்ணோரில்
யாவருக்கும் ஒண்ணாதே ஆயிடினும் – தேவியார்

கையூ டிருத்தலினால் காதூடு தூதோதற்
கையமிலை நிற்கெளிதே யாகுங்காண் – பையவே

எவ்வாறென் செய்தி இயம்பினால் ஏற்றிடுமோ
அவ்வா றெல்லாம்நீ அறிந்தோதி- எவ்வமுறும் 600

மாலவற்கும் இந்திரற்கும் வானவர்க்கும் தானவர்க்கும்
மேலவர்க்கும்நீ அருளா விட்டாலும் – சால

வெளியா ரெங்குள்ளா ரெனத்தேடியாள்தல்
அளியாரும் நிற்கே அணியாய் – மொழிதலால்

அன்னவனை யாள்த லழகா மஃதன்றி
இன்னமொரு வாற்றால் இசைவாகும் – அன்னவன்றான்

புன்மதத்தி லாழ்ந்தலைந்து புந்திவரப் பெற்றுப்பின்
நின்மதத்தை ஆதரித்து நின்றமையால்- தொன்மை

முருகாரும் நின்சமயம் முற்றத் துறந்து
திருகார் சமணமதஞ் சேர்ந்தங் –கருகான 605

சொற்கோவை யாண்ட தொடர்பானுங் காத்தாளல்
நிற்கே கடனென்று நேர்ந்துணர்த்திச் – சற்குருவாய்

இன்னமொருகால் எழுந்தருளி என்முன்வரச்
சொல்நீ பசுங்கிள்ளாய் தூது. 607

திருச்சிற்றம்பலம்


திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது முற்றுப்பெற்றது.

Related Content