logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவாலய ஸேவா விதி


ஆசிரியர்: ஶ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கோயிலில்லாவூரில் குடியிருக்க வேண்டாம் என்ற மூத்தோர் சொல் வார்த்தை அம்ருதம். ஆலயம், கோயில் என்றால் இறைவன் இருப்பிடம். ஆன்மாக்கள் லயிக்கும் இடம் என்று பொருள். எங்கும் ஈச்வரன் இருந்தாலும் உலகத்தவருக்குத் துன்பத்தை நீக்கி, இன்பத்தைத் தர வேத மந்த்ரங்களால் பகவானது அருள் புரியும் சக்தி ஆலயத்திலேயே அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. பசுவின் உடலெல்லாம் பால் இருந்தாலும் பாலாகக் கறக்கும் இடம் மடியே. அதேபோல் பகவானது அருளைக் கறக்கும் இடம் ஆலயம்.

      காலை, உச்சிவேளை, மாலை இந்த மூன்று காலங்களே ஆலய தர்சனத்திற்கேற்ற காலம். சேவைக்குச் செல்பவர் ஸ்நாநம் செய்து மடி உடுத்தி விபூதி அணிந்து, கிடைத்தால் ருத்ராக்ஷம் அணிந்து, தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம், எண்ணெய், திரி இவைகளை அல்லது சக்திக்கேற்ற ஒன்றையாவது எடுத்துப் போகவேண்டும். தேங்காய், பழம், புஷ்பம் இவைகளை ஜலத்தினால் அலம்பி முழங்காலுக்குக் கீழ் தொங்கவிடாமல் செல்ல வேண்டும். செருப்பு, குடை, சொக்காய் இவைகளுடன் போகக் கூடாது. நடந்து போவதே நல்லது.

      சிவாலயத்தின் அருகிலுள்ள புண்ய தீர்த்தத்தை முதலில் கையால் எடுத்துத் தலைமீது ப்ரோக்ஷித்துக்கொண்டு பிறகு அதில் காலைக் கழுவி ஆசமதம் செய்யவேண்டும். ஆலயம் சென்று திரும்பி வரும் வரை மனதினால் சிவனைத் தவிர வேறு எதையும் நினைக்கலாகாது. சிவநாமத்தைத் தவிர வேறு எதையும் சொல்லக் கூடாது. த்வஜஸ்தம்பத்தின் அருகே பலிபீடமும் நந்தியும் இருக்கும்.

      அங்கே ஸாஷ்டாங்கமாக ஐந்து முறை நமஸ்காரம் செய்யவேண்டும். பெண்களுக்கு பஞ்சாங்க நமஸ்காரமே. இரு கரங்கள், இரு முழங்கால்கள், மார்பு, தலை, மநஸ், வாக்கு, கண் என்பன ஸாஷ்டாங்க நமஸ்காரம். பெண்கள் முழங்கால், தலை, மநஸ், வாக்கு, கண் என்ற பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். பலிபீடத்தினருகே நான் எனும் அஹங்காரத்தைப் பலிகொடுத்துவிட்டு நந்திகேசர் அருகே சென்று,

                நந்திகேச மஹா ப்ராக்ஞ, சிவ த்யாந பராயண

       மஹா தேவஸ்ய ஸேவார்த்த2ம் அநுக்ஞாம் தா3தும் அர்ஹஸி ||

      மஹா புத்தி உள்ளவரே சிவ த்யாநத்தில் ஈடுபட்ட நந்திகேச, சிவ தர்சரம் செய்ய உத்தரவு அளியும் எனக் கேட்டுக் கொண்டு விநாயகரை முதலில் தர்சிக்க வேண்டும்.

                சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

       ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ந உப சாந்தயே ||

               

வெள்ளை வஸ்த்ரம் அணிந்து எங்கும் பரவி நிற்பவரும், சந்த்ரனைப் போல் ப்ரகாசமானவரும், நாலு கை உள்ளவரும் ஸந்தோஷமான முகமுள்ளவருமான விநாயகரை ஸர்வ விக்நங்களும் அகல த்யாநம் செய்கிறேன் என்று கூறி ஐந்து முறை குட்டிக் கொண்டு மூன்று தோபகர்ணம் போட வேண்டும்.

திருவும், கல்வியும், சீரும் தழைக்கவும்கருணை

பூக்கவும், தீமையைக் காய்க்கவும்பருவமாய்

நமதுள்ளம் பழுக்கவும், பெருகும் ஆழத்துப்

பிள்ளையைப் பேணுவாம்.

 

என்று துதித்து முருகன் சன்னதிக்குப் போய்

உமா கோமள ஹஸ்தாப்ஜஸம்பா4வித லலாடிகம்

ஹிரண்ய குண்டலம் வந்தே குமரம் புஷ்கரஸ்ரஜம். ||

 

பார்வதி கரபத்மத்தால் நெற்றியைத் தடவ ஸ்வர்ண குண்டலம் அணிந்து, தாமரை மாலை அணிந்திருக்கும் ஸ்கந்தனை நமஸ்கரிக்கிறேன்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே

 

என்று துதித்து தேவி ஸன்னதிக்குச் செல்ல வேண்டும்.

 சதுர்பு3ஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராக3சோணே |

புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||

 

நாலு கைகள் உள்ளவளே! சந்த்ர கலை தரித்தவளே! உன்னதமான மார்புள்ளவளே! குங்குமம்போல் சிவந்தவளே! நாமக்கரும்பு, பாசம், அங்குசம், புஷ்ப பாணம் இவைகளைக் கரத்தில் ஏந்தியவளே! ஜகன் மாதாவே! உமக்கு நமஸ்காரம்.

 

தநம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வு அறியா

மனம்தரும் தெய்வ வடிவம் தரும் எல்லாம் தரும் அன்பர் வஞ்சமிலா

இநம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கநம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்ணே.

 

என்று துதித்து சிவ ஸன்னதிக்குப் போக வேண்டும்.

ப்ரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பா4ஷித சோபித லிங்கம் |

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ||

 

ப்ரும்மா, விஷ்ணு, முதலிய தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், வேதத்தால்  ப்ரகாசமானவரும், ஜநந, மரண துக்கத்தை அகற்றுபவருமான ஸதாசிவ லிங்கத்தை நமஸ்கரிக்கிறேன்.

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக

பாதத்தைத் தொழுநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் |

வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே ||

 

என்று பாடி சிவனுக்கு நான்கு திக்குகளிலும் ஸத்யோ ஜாத, தத்புருஷ, அகோர, வாமதேவ என்ற முகங்கள் இருப்பதாகவும், ஈசாநம் என்ற முகம் மேனோக்கியுள்ளது, நம்மைக்காக்க குனிந்து நம்மைக் கடாக்ஷிப்பதாகவும் எண்ண வேண்டும். சிவனிடம் அனைவரும் ப்ரார்த்திக்க வேண்டிய ச்லோகம்.

நடராஜரிடம்

       அநாயாஸேந மரணம், விநா தை3ன்யேந ஜீவநம் |

       தேஹிமே க்ருபயா சம்போ, த்வயி பக்திம் அசஞ்சலாம் ||

 

      ஆயாஸம் இல்லாத மரணம், ஏழ்மை இல்லாத ஜீவனம், உன்னிடம் சஞ்சலமில்லாத பக்தி இவைகளை எனக்குத் தயையோடு அளியும்.

      இரண்டாவது ப்ரதக்ஷிணத்தில் நடராஜர், ஸோமாஸ்கந்தர், சந்த்ரசேகரர் இவர்களைத் தரிசிக்க வேண்டும்.

                க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரினேத்ரம்

              ஜடாத4ரம் பார்வதி வாம பா4கம் |

ஸதாசிவம் ருத்ரம் அநந்த ரூபம்

              சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி ||

               

கருணைக் கடல், ஸுமுகன், முக்கண்ணன், ஜடாதாரிஇடது புறம் பார்வதியை வைத்திருப்பவன் ஸதாசிவனான சிதம்பரேசனை த்யாநம் செய்கிறேன்.

                உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

       நிலவுலாவிய நீர்மலி வேணியன்

       அலகில் ஜோதியன் அம்பலத்து ஆடுவான்

       மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

               

என்று கூறி மூன்றாவது ப்ரதக்ஷிணத்தில் தக்ஷிணாமூர்த்தியைத் தர்சித்து,

                குருர் ப்ரும்மா குருர் விஷ்ணு: | குரு தேவ மஹேச்வர: |

       குரு: ஸாக்ஷாத் பரப்ரும்ம, தஸ்மை ஶ்ரீகுரவே நம: ||

               

என்று கூறி அவர் ஸன்னதியில் உபதேசம் ஆனவர் பஞ்சாக்ஷரீ ஜபம் செய்யலாம்.

      சண்டிகேசரிடம் சென்று மெதுவாக மூன்று முறை கையைத் தட்ட வேண்டும்.

                நீலகண்ட2 பதாம்போ4 பரிஸ்பு2ரித மனஸை |

       சம்போ: ஸேவாப2லம் தேஹி சண்டிகேச நமோஸ்துதே. ||

               

சிவன் திருவடியில் ஸதா மனதைச் செலுத்திய சண்டிகேச! சிவஸேவையின் பலனைத் தாரும். (ஓங்கிச் சத்தம் செய்து அவர் சிவ த்யாநத்தைக் கலைக்கக் கூடாது.)

      பைரவரைத் தரிசித்து விட்டு மறுபடி நந்தியின் பின்புறத்திலிருந்து சிவலிங்கத்தைத் தர்சநம் செய்துவிட்டு கோபுரவாசற்படியில் சிறிது உட்கார்ந்து,

                மஹாபலி முகா2ஸ் ஸர்வே சிவாக்ஞா பரிபாலகா: |

       மயா நிவர்த்திதா யூயம் கச்சத்4வம் சிவஸன்னதிம். ||

               

மஹாபலி முதலிய சிவ ஸேவகர்களே என்னுடன் வந்து சிவ தர்சநம் செய்வித்த நீங்கள் நீங்கள் உள்ளே செல்லுங்கள். நான் போய் வருகிறேன் எனக் கூறி வீட்டிற்குச் செல்ல வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் உட்கார்ந்து பிறகே கால் அலம்ப வேண்டும்.

நந்திக்கும், சிவனுக்கும், தேவிக்கும் சிவனுக்கும் குறுக்கே சென்றால் ஏற்கனவே செய்த புண்யமும் போய்விடும்.

மெதுவாக மூன்று ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். த்வஜஸ்தம்பத்தினருகில் தான் நமஸ்கரிக்கலாம். மற்றவிடத்தில் கூடாது. கோவிலில் பேசக் கூடாது. சிரிக்கக் கூடாது. எச்சில் துப்பக் கூடாது.

சுபம்        சுபம்        சுபம்

Related Content