logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

முதலாவது - மதுரை காண்டம்

(இந்திரன் பழிதீர்த்த படலம் முதல் திருமணப் படலம் வரை)

01. இந்திரன் பழி தீர்த்த படலம்

344
மின்பயில் குலிசப் புத்தேள் விருத்திரா கரனைக் கொன்ற 
வன்பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தில் எய்தி 
என்பர வாரம் பூண்ட விறைவனை யருச்சித் தேத்திப் 
பின்பது கழிந்து பெற்ற பேற்றினை யெடுத்துச் சொல்வாம் 

345
முன்னதா முகத்தில் வண்டு மூசுமந் தார நீழற் 
பொன்னவிர் சுணங்குண் கொங்கைப் புலோமசை மணாளன் பொற்பூண் 
மின்னவிரிந் திமைப்பச் சிங்கஞ் சுமந்தமெல் லணைமேன் மேவி 
அன்னமென் னடையா ராடு மாடன்மேல் ஆர்வம் வைத்தான்

346
மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப் 
பூவலர் கொடிபேர்ந் தன்ன பொன்னனார் கூத்து மன்னார் 
நாவலர் அமுத மன்ன பாடலு நாக நாட்டுக் 
காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலி லாழ்ந்தான்

347
பையரா வணிந்த வேணிப் பகவனே யனைய தங்கள் 
ஐயனாம் வியாழப் புத்தேள் ஆயிடை யடைந்தா னாகச் 
செய்யதாள் வழிபா டின்றித் தேவர்கோ னிருந்தா னந்தோ
தையலார் மயலிற் பட்டோர் தமக்கொரு மதியுண் டாமோ

348
ஒல்லெனக் குரவ னேக வும்பர்கோன் றிருவி னாக்கம் 
புல்லெனச் சிறிது குன்றப் புரந்தர னறிந்திக் கேடு 
நல்லதொல் குரவற் பேணா நவையினால் விளைந்த தென்னா 
அல்லலுற் றறிவின் றன்னைத் தேடுவா னாயி னானே

349
அங்கவ னிருக்கை புக்கான் கண்டில னவித்த பாசப் 
புங்கவர் உலகு மேனோர் பதவியும் புவன மூன்றில் 
எங்கணுந் துருவிக் காணா னெங்குற்றான் குரவ னென்னுஞ் 
சங்கைகொண் மனத்த னாகிச் சதுர்முக னிருக்கை சார்ந்தான் 

350
துருவின னங்குங் காணான் றிசைமுகற் றெழுது தாழ்ந்து 
பரவிமுன் பட்ட வெல்லாம் பகர்ந்தனன் பகரக் கேட்டுக் 
குரவனை யிகழ்ந்த பாவங் கொழுந்துபட் டருந்துஞ் செவ்வி 
வருவது நோக்கிச் சூழ்ந்து மலர்மகன இதனைச் சொன்னான்

351
அனையதொல் குரவற் காணும் அளவுநீ துவட்டா வீன்ற 
தனையன்முச் சென்னி யுள்ளான் றானவர் குலத்தில் வந்தும் 
வினையினா லறிவான் மேலான் விச்சுவ வுருவ னென்னும் 
இனையனைக் குருவாக் கோடி யென்னலு மதற்கு நேர்ந்தான்

352
அழலவிர்ந் தனைய செங்கேழ் அடுக்கிதழ் முளரி வாழ்க்கைத் 
தொழுதகு செம்ம றன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா 
விழைதகு காதல் கூர விச்சுவ வுருவன் றன்னை 
வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான் 

353
கைதவக் குரவன் மாயங் கருதிலன் வேள்வி யொன்று 
செய்திட லடிக ளென்னத் தேவர்கட் காக்கங் கூறி 
வெய்தழல் வளர்பான் உள்ளம் வேறுபட் டவுணர்க் கெல்லாம்
உய்திற நினைந்து வேட்டான் றனக்குமே லுறுவ தோரான்

354
வாக்கினான் மனத்தால் வேறாய் மகஞ்செய்வான் செயலை யாக்கை
நோக்கினா னோதி தன்னா னோக்கினான் குலிச வேலாற் 
றாக்கினான் றலைகண் மூன்றுந் தனித்தனி பறவை யாகப் 
போக்கினான் அலகை வாயிற் புகட்டினான் புலவுச் சோரி

355
தெற்றெனப் பிரம பாவஞ் சீறிவந் தமரர் வேந்தைப் 
பற்றலு மதனைத் தீர்ப்பான் பண்ணவர் மரமேன் மண்மேற்
பொற்றொடி யார்மே னீர்மேல் வேண்டினர் புகுத்த லோடும்
மற்றவ ரி•தியாந் தீர்க்கும் வண்ணம்யா தென்ன விண்ணோர்

356
அப்பிடை நுரையாய் மண்ணில் அருவருப் புவரா யம்பொற்
செப்பிளங் கொங்கை யார்பாற் றீண்டுதற் கரிய பூப்பாய்க்
கப்பிணர் மரத்திற் காலும் பயினதாய்க் கழிக வென்றார்
இப்பழி சுமந்த வெங்கட் கென்னல மென்றார் பின்னும் 

357
கருவின் மாதர் கருவுயிர்க்கும் அளவு முறையாற் கணவர்தோள் 
மருவி வாழ்க மண்ணகழ்ந்த குழியு மதனால் வடுவொழிக 
பொருவி னீரு மிறைதோறு மூறிப் பொலிக மாங்குறைபட் 
டொருவி னாலுந் தழைகவென வொழியா நலனுமுதவினார்

358
மாசிற் கழிந்த மணியேபோல் வந்த பழிதீர்ந் திந்திரனுந் 
தேசிற் றிகழத் துவட்டாத்தன் செல்வன் றன்னைத் தேவர்பிரான்
வீசிக் குலிசத் துயிருண்ட விழுமங் கேட்டு வெகுண்டுயிர்த்துக் 
கூசிப் பழிகோள் கருதியொரு கொடிய வேள்வி கடிதமைத்தான்

359
அந்தக் குண்டத் தெரிசிகைபோல் அழலுங் குஞ்சி யண்டமுக
டுந்தக் கொடிய தூமம்போ லுயிர்த்துச் செங்கண் சினச்செந்தீச் 
சிந்தப் பிறைவா ளெயிறதுக்கித் திசைவான் செவிடு படநகைத்து
வந்தக் கொடிய விடம்போல வெழுந்தா னொருவாண் மறவீரன்

360
ஈங்குவன் விருத்திரன் என்ப வாரழற் 
றூங்குவன் கணைவிடு தூர நீண்டுநீண் 
டோங்குவ னோங்குதற் கொப்ப வைகலும் 
வீங்குவ னறனிலார் வினையி னென்பவே

361
வீங்குடல் விருத்திரன் றன்னை விண்ணவர் 
எங்குற வருதுவட் டாவெ னும்பெயர்த் 
தீங்குறு மனத்தினேன் றேவர் கோனுயிர்
வாங்குதி பொருதென வரவிட் டானரோ

362
மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினைஇக்
கொதித்தெதிர் குறுகினான் கொண்டல் ஊர்தியும்
எதிர்த்தனன் களிற்றின்மே லிமையத் துச்சிமேல் 
உதித்ததோர் கருங்கதிரொக்கு மென்னவே

363
அறத்தொடு பாவநேர்ந் தென்ன வார்த்திரு
திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை 
குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத் 
துறைத்திட வீசினான் உடன்று கள்வனும் 

364
இடித்தனன் கையிலோர் இருப்பு லக்கையைப் 
பிடித்தனன் வரையெனப் பெயர்ந்து தீயெனத் 
துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத் 
தடித்தன னிந்திர னவச மாயினான்

365
அண்டரே றனையவ னவச மாறிப்பின் 
கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர்
மண்டமர் ஆற்றுவான் வலியி லோமெனப் 
புண்டரீ கத்தவ னுலகிற் போயினான்

366
தாழ்ந்துதான் படுதுயர் விளம்பத் தாமரை
வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள் 
வீழ்ந்தமார் பின்னடி வீழ்ந்து செப்பமால் 
சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான்

367
மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினைஇக்
கொதித்தெதிர் குறுகினான் கொண்டல் ஊர்தியும் 
எதிர்த்தனன் களிற்றின்மே லிமையத் துச்சிமேல் 
உதித்ததோர் கருங்கதிரொக்கு மென்னவே

363
அறத்தொடு பாவநேர்ந் தென்ன வார்த்திரு
திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை 
குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத்
துறைத்திட வீசினான் உடன்று கள்வனும் 

364
இடித்தனன் கையிலோர் இருப்பு லக்கையைப் 
பிடித்தனன் வரையெனப் பெய்ர்ந்து தீயெனத் 
துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத் 
தடித்தன னிந்திர னவச மாயினான்

365
அண்டரே றனையவ னவச மாறிப்பின் 
கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர் 
மண்டமர் ஆற்றுவான் வலியி லோமெனப் 
புண்டரீ கத்தவ னுலகிற் போயினான்

366
தாழ்ந்துதான் படுதுயர் விளம்பத் தாமரை
வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள் 
வீழ்ந்தமார் பின்னடி வீழ்ந்து செப்பமால் 
சூழ்ந்துவா னாடனை நோக்கிச் சொல்லுவான்

367
ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம் 
மாற்றவர் உயிருண வலியின் றாதலால் 
வேற்றொரு புதியது வேண்டு மாலினிச் 
சாற்றது மதுபெறுந் தகைமை கேட்டியால் 

368
தொடையகன் மார்பநாந் தூய பாற்கடல் 
கடையுநாள் அசுரருஞ் சுரருங் கையில்வெம்
படையொடு மடையன்மின் பழுதென் றப்படை
அடையவுந் ததீசிபா லடைவித் தாமரோ

369
சேட்படு நாணனி செல்லத் தேவரா 
வாட்படை யவுணரா வந்து கேட்டிலர் 
ஞாட்படை படையெலா ஞான நோக்கினால் 
வேட்படை வென்றவன் விழுங்கி னானரோ

370
விழுங்கிய படையெலாம் வேற றத்திரண் 
டொழுங்கிய தான்முது கந்தண் டொன்றியே
எழுங்கதிர்க் குலிசமாம் அதனை யெய்துமுன் 
வழங்குவன் கருணையோர் வடிவு மாயினான்

371
என்று மாதவன் இயம்ப வும்பர்கோன்
ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச்
சென்று மாயையின் செயலை நோன்பினால்
வென்ற மாதவ னிருக்கை மேவினான்

372
அகமலர்ந் தருந்தவன் அமரர்க் கன்புகூர்
முகமலர்ந் தின்னுரை முகமன் கூறிநீர் 
மிகமெலிந் தெய்தினீர் விளைந்த தியாதது
தகமொழிந் திடலென வலாரி சாற்றுவான்

373
அடிகணீர் மறாததொன் றதனை வேண்டியிம் 
முடிகொள்வான் அவரொடு முந்தி னேனது
செடிகொள்கா ரிருளுட லவுணர்த் தேய்த்தெமர் 
குடியெலாம் புரப்பதோர் கொள்கைத் தாயது

374
யாதெனி னினையதுன் யாக்கை யுள்ளதென்
றோதலும் யாவையு முணர்ந்த மாதவன்
ஆதவற் கண்டதா மரையி னானனப் 
போதலர்ந் தின்னன புகல்வ தாயினான்

375
நாள்நம தெனநரி நமதெ னப்பிதாத்
தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோ
லாய்நம தெனப்படும் யாக்கை யாரதே

376
விடம்பயி லெயிற்றர வுரியும் வீ நுழை
குடம்பையுந் தானெனுங் கொள்கைத் தேகொலாம்
நடம்பயல் கூத்தரி னடிக்கு மைவர்வாழ்
உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ

377
நடுத்தயா விலார்தமை நலியத் துன்பநோய்
அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக் 
கொடுத்தயா வற்ம்புகழ் கொள்வ னேயெனின்
எடுத்தயாக் கையின்பயன் இதனின் யாவதே

378
என்றனன் கரண மொன்றி யெழுகருத் தறிவை யீர்ப்ப
நின்றனன் பிரம நாடி நெறிகொடு கபாலங் கீண்டு
சென்றனன் விமான மேறிச் சேர்ந்தனன் உலகை நோன்பால்
வென்றனன் துறக்கம் புக்கு வீற்றினி திருந்தா னம்மா

379
அம்முனி வள்ளல் ஈந்த வடுபடை முதுகந் தண்டைத் 
தெம்முனை யடுபோர் சாய்க்குந் திறல்கெழு குலிசஞ் செய்து
கம்மியப் புலவ னாக்கங் கரைந்துலைக் கொடுப்ப வாங்கி
மைம்முகி லூர்தி யேந்தி மின்விடு மழைபோ னின்றான்

380
மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழ்ல்
வெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம்
அறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான்

381
வானவர் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் சேந்தீ
யானது வரையி னோங்கி யழன்றுருத் தெழுந்தால் என்னத்
தானவர் கோனு மானந் தலைக்கொள வெழுந்து பொங்கிச்
சேனையுந் தானு மூண்டு சீறிநின் றடுபோர் செய்வான்

382
அடுத்தன ரிடியே றென்ன வார்த்தனர் ஆக்கங் கூறி
எடுத்தனர் கையிற் சாப மெறிந்தனர் சிறுநா ணோசை
தொடுத்தனர் மீளி வாளி தூர்த்தனர் குந்த நேமி
விடுத்தனர் வானோர் சேனை வீரர்மே லவுண வீரர்

383
கிட்டினர் கடகக் கையாற் கிளர்வரை யனைய திண்டோள்
கொட்டினர் சாரி மாறிக் குதித்தனர் பலகை நீட்டி
முட்டின ரண்டம் விள்ள முழங்கினர் வடிவாள் ஓச்சி
வெட்டின ரவுணச் சேனை வீரரை வான வீரர்

384
வீழ்ந்தனர் தோளுந் தாளும் விண்டனர் சோரி வெள்ளத்
தாழ்ந்தனர் போருந் தாரு மகன்றன ரகன்ற மார்பம்
போழ்ந்தனர் சிரங்க ளெங்கும் புரண்டனர் கூற்றூர் புக்கு
வாழ்ந்தன ரடுபோ ராற்றி வஞ்சகன் சேனை மள்ளர்

385
தாளடு கழலு மற்றார் தலையொடு முடியு மற்றார்
தோளடு வீர மற்றார் தும்பையொ டமரு மற்றார்
வாளடு கரமு மற்றார் மார்பொடு கவச மற்றார்
கோளடும் ஆண்மை யற்றார் குறைபடக் குறையா மெய்யர்

386
தொக்கன கழுகு சேனஞ் சொரிகுடர் பிடுங்கி யீர்ப்ப
உக்கன குருதி மாந்தி யொட்டல்வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாய்பினுட் கவந்த மாடப்
புக்கன பிணத்தின் குற்றம் புதைத்தபார் சிதைத்த தண்டம்

387
இவ்வகை மயங்கிப் போர்செய் திறந்தவ ரொழியப் பின்னுங்
கைவ்வகை யடுபோ ராற்றிக் கரையிற்ந் தார்கண் மாண்டார்
அவ்வகை யறிந்து வானத் தரசனு மவுணர் வேந்துந் 
தெய்வதப் படைகள் வீசிச் சீற்நின் றடுபோர் செய்வார்

388
அனற்படை விடுத்தான் விண்ணோர் ஆண்டகை யதனைக் கள்வன்
புனற்படை விடுத்துச் சீற்றந் தனித்தனன் புனிதன் காற்றின்
முனைப்படை விடுத்தான் வெய்யோன் முழங்குகால் விழுங்கு நாகச்
சினப்படை தொடுத்து வீசி விலக்கினான் றேவ ரஞ்ச

389
நாகமாப் படைவிட் டார்த்தா னாகர்கோ னுவணச் செல்வன்
வேகமாப் படையை வீசி விளக்கினான் றகுவர் வேந்தன்
மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவன் அன்ன
தேகமாப் படிறன் ஞானப் படைவிடுத் திருள்போ னின்றான்

390
மட்டிடுதாரான் விட்ட வானவப் படைக்கு மாறு
விட்டுடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன்
முட்டிடமான வெங்கான் மூட்டிட கோபச் செந்தீச் 
சுட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிபன் இதனைச் செய்தான்

391
வீங்கிருள் ஒதுங்க மேக மின்விதிர்த் தென்னக் கையில்
ஓங்கிருங் குலிச வேலை யொல்லென விதிர்த்த லோடுந்
தீங்குளம் போன்றிருண்ட திணியுடற் கள்வ னஞ்சி
வாங்கிருங் கடலில் வீழ்ந்தான் மறைத்தமை நாக மொத்தான்

392
ஓக்கவிந் திரனும் வீழ்ந்தான் உடல்சின வுருமே றன்றான்
புக்கிடந் தேடிக் காணான் புண்ணிய முளரி யண்ணல்
பக்கம்வந் தனைய செய்தி பகர்ந்தனன் பதகன் மாளத் 
தக்கதோர் சூழ்ச்சி முன்னிச் சராசர மீன்ற தாதை

393
விந்தவெற் படக்கி னாற்கீ துரையென விடுப்ப மீண்டு
சந்தவெற் படைந்தான் வானோர் தலைவனை முகமன் கூறிப் 
பந்தவெற் பறுத்தான் வந்த தெவனெனப் பறைகள் எல்லாஞ்
சிந்தவெற் பறுத்தான் வந்த செயலெலா முறையாற் செப்பி

394
யாலையு முணர்ந்த வெந்தைக் கியானெடுத் துணர்த்து கின்ற
தாவாதென் னமருக் காற்றா தாழிபுக் கொளித்தான் ஆவி
வீவது மவனால் வந்த விழுமநோ யெல்லா மின்று
போவதுங் கருதி நும்பாற் புகுந்தன மடிகளென்றான்

395
என்றவன் இடுக்கண் டீர்ப்பா னிகல்புரி புலன்க ளைந்தும்
வென்றவ னெடியோன் றன்னை விடையவன் வடிவ மாக்கி
நின்றவ னறிவா னந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி
மன்றவ னூழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான்

396
கைதவன் கரந்து வைகுங் கடலைவெற் படக்குங் கையிற்
பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசேர் சென்னி
ஐயன தருளைப் பெற்றார்க் கதிசய மிதென்கொன் முன்று
வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவர் அவரே யன்றோ

397
அறந்துறந் தீட்டு வார்த மரும்பெறற் செல்வம் போல
வறந்தன படுநீர்ப் பௌவம் வடவைகட் புலப்பட் டாங்கு
நிறைந்தசெம் மணியு மத்தீ நீண்டெரி சிகைபோ னீண்டு
சிறந்தெழு பவளக் காடுந் திணியிருள் விழுங்கிற் றம்மா

398
பணிகளின் மகுட கோடிப் பரப்பென விளங்கிப்பல்கா
சணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத் தாகி யொன்பான்
மணிகிடந் திமைக்கு நீரான் மகபதி வேள்விக் காவாய்த்
திணியுடல் அவுணன்பட்ட செங்கள மனைய தன்றே

399
வறந்தநீர் தன்னின் மின்னு வாள்விதிர்த் தென்னப் பன்மீன்
எறிந்தன நெளிந்த நாகம் இமைத்தன வளைய முத்துஞ்
செறிந்தன கரந்த யாமை சேர்ந்தபல் பண்டஞ் சிந்தி
முறிந்தன வங்கங் கங்க முக்கின சிறுமீ னெல்லாம்

400
செருவினில் உடைந்து போன செங்கண்வா ளவுண னங்கோர்
அருவரை முதுகிற் கார்போ லடைந்துவா னாடர் செய்த
உருகெழு பாவந் தானோ ருருவெடுத் திருந்து நோற்கும்
பரிசென நோற்றா னின்னும் பரிபவ விளைவு பாரான்

401
கைதவ நோன்பு நோற்குங் கள்வனைக் கண்டு வானோர்
செய்தவ மனையான் யாணர் வச்சிரஞ் சீரிப் பான்போற்
பொய்தவன் றலையைக் கொய்தான் புணரிவாய் நிறையச் சோரி
பெய்தது வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை

402
உம்மெனு மார்பைத் தட்டு முருத்தெழு மதிர்க்கும் போர்க்கு
வம்மெனும் வாய்மடிக்கும் வாளெயி றதுக்கும் வீழுங்
கொம்மென வோடுமீளுங் கொதித்தழுஞ் சிரிக்குஞ் சீறும்
இம்மெனும் அளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே

403
விரைந்தரன் றிசையோர் வாவி வீழ்ந்தொரு கமல நூலுட்
கரந்தனன் மகவா னிப்பாற் கற்பக நாடு புல்லென்
றிடுந்ததா லிருக்கு மெல்லை யிம்பரி னகுட னென்போன்
அருமபரி மேத வேள்வி யாற்றினான் ஆற்று மெல்லை

404
அரசிலா வறுமை நோக்கி யவனைவா னாடர் யாரும்
விரை செய்தார் மகுடஞ் சூட்டி வேந்தனாக் கொண்டார் வேந்தாய்
வருபவன் சசியை யீண்டுத் தருகென மருங்கு ளார்ப்போய்த்
திரைசெய்நீ ரமுத னாட்குச் செப்பவக் கற்பின் மிக்காள் 

405
பொன்னுயிர்த் தனைய காட்சிப் புண்ணிய குரவன் முன்போய்
மின்னுயிர்த் தனையா ணின்று விளம்புவாள் இதென்கொல் கெட்டேன்
என்னுயிர்த் துணைவ னாங்கே யிருக்கமற் றொருவ னென்னைத்
தன்னுயிர்த் துணையாகக் கொள்கை தருமமோ வடிக ளென்றாள்

406
மாதவர் எழுவர் தாங்க மாமணிச் சிவிகை மீது
போதரி னவனே வானோர் புரந்தர னவனே யுன்றன்
காதல னாகு மென்றான் கைதொழுதற்கு நேர்ந்தம்
மேதகு சிறப்பாலிங்கு வருகென விடுத்தா டூது

407
மனிதரின் மகவா னாகி வருபவன் சிவிகை தாங்கும்
புனித மாதவரை யெண்ணான் புண்கணோய் விளைவும் பாரான்
கனிதரு காமந் துய்க்குங் காதலால் விரையச் செல்வான்
இனிதயி ராணி பாற்கொண் டேகுமின் சர்ப்ப வென்றான்

408
சர்ப்பமா கெனமுற் கொம்பு தாங்குமுன் னடக்குந் தென்றல்
வெற்பனா முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும்
பொற்பமா சுணமே யாகிப் போயினா னறிவி லாத
அற்பரா னவர்க்குச் செல்வம் அல்லது பகைவே றுண்டோ

409
பின்னர்த்தங் குரவ னான பிரானடி பணிந்து வானோர்
பொன்னகர் வேந்தன் இன்றிப் புலம்படை கின்ற தைய
என்னுலங் குரவன் போயவ் விலஞ்சியு ளளித்தாற் கூவித்
தன்னுரை யறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டாள்

410
கொடும்பழி கோட்பட் டான்றன் குரவனை வணங்கி யென்னைச்
சுடும்பழி கழிய தெங்ஙன் சொல்லெனத் தொலைவ தோர்ந்தான்
அடும்பழி மண்மேல் அன்றி யறாதுநீ வேட்டைக் கென்னப்
படும்பழி யிதனைத் தீர்ப்பான் பார்மிசை வருதி யென்றான்

411
ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்ப தன்றிப்
பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்தகா ரணத்தால் வந்த
வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற

412
வாம்பரி யுகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர்
தாம்பரி வோடுஞ் சூழத் தாராதலத் திழிந்து செம்பொற்
காம்பர் தோளி பங்கன் கயிலைமால் வரையைத் தாழ்ந்து
தேம்பரி யலங்கன் மார்பன் றென்றிசை நோக்கிச் செல்வான்

413
கங்கைமுத லளவிறந்த தீர்த்தமெலாம் போய்ப்படிந்து காசி காஞ்சி
அங்கனக கேதார முதற்பதிகள் பலபணிந்து மவுணற் கொன்ற
பொங்குபழி விடாதழுங்கி யராவுண்ண மாசுண்டு பொலிவு மாழ்குந்
திங்களனை யான்கடம்ப வனத்தெல்லை யணித்தாகச் செல்லு மேல்வை

414
தொடுத்தபழி வேறாகி விடுத்தகன்ற திந்திரன்றான் சுமந்த பாரம்
விடுத்தவனொத் தளவிறந்த மகிழ்வெய்தித் தேசிகன் பால் விளம்பப் பாசங்
கெடுத்தவன்மா தலம்புனித தீர்த்தமுள விவணமக்குக் கிடைத்தல் வேண்டும்
அடுத்தறிக வெனச்சிலரை விடுத்தவ்வே றாநிலை நின்று அப்பாற் செல்வான்

415
அருவிபடிந் தருவியெறி மணியெடுத்துப் பாறை யிலிட் டருவி நீர்தூய்க்
கருவிரல்கொய் தலர்சூட்டிக் கனியூட்டு வழிபடுவ கல்லா மந்தி
ஒருதுறையில் யாளிகரி புழைக்கைமுகந் தொன்றற் கொன் றூட்டி யூட்டிப்
பருகுவன புலிமுலைப்பால் புல்வாய்க்கன் றருந்தியிடும் பசிநோய் தீர

416
நெளியராக் குருளைவெயில் வெள்ளிடையிற் கிடந்துயங்கி நெளியப் புள்ளே
றொலியறாச் சிறைவிரித்து நிழல்பரப்பப் பறவைநோய் உற்ற தேகொல்
அளியவா யச்சோவென் றோதியயன் மடமந்தி யருவி யூற்றுந்
துளியநீர் வளைத்தசும்பின் முகந்தெடுத்துக் கருங்கையினாற் சொரிவ மாதோ

417
படவரவ மணியீன்று நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை
பெடைதழுவி மணஞ்செய்ய மணவறையில் விளக்கிடுவ பெருந்தண் கானத்
தடர்சிறைமென் குயிலோமென் றார்ப்பமடக் கிள்ளையெழுத் தைந்தும் ஓசை
தொடர்புபெற வுச்சரிப்பக் குருமொழிகேட்டாங் குவப்ப தொடிக்கட் பூவை

418
இன்னவிலங் கொடுபுள்ளின் செயற்கரிய செயனோக்கி யிறும்பூ தெய்திப்
பொன்னகரான் புளகமுடல் புதைப்பநிறை மகிழ்ச்சியுளம் புதைப்பப் போவான்
அன்னபொழு தொற்றுவர்மீண் டடிவணங்கி யின்சுவைப்பால் அருந்து வான்முன்
பின்னரிய தேன்சொரிந்தாங் குவகைமேற் பேருவகை பெருகச் சொல்வார்

419
எப்புவனத் திலுமென்றுங் கண்டறியா வதிசயமு மெண்ணுக் கெய்தாத்
திப்பியமு மிக்கடம்ப வனத்தின்று கண்டுவகை திளைத்தே பங்கண்
வைப்பனைய வொருபுனித வாவிமருங் கொருகடம்ப வனத்தினீழல்
ஒப்பிலொளி யாய்முளைத்த சிவலிங்க மொன்றுள தென் றுரைப்பக் கேட்டான்

420
செவித்துளையி லமுதொழுக்கு முழையரொடும் வழிக்கொண்டு சென்னிமேற்கை
குவித்துளமெய் மொழிகரணங் குணமூன்று மொன்றித்தன் கொடிய பாவம்
அவித்துளயர் வொழிக்கமுளைத் தருள்குறிமேல் அன்பீர்ப்ப வடைவான் கானங்
கவித்துளபூந் தடம்படிந்து கடம்பவனத் துழைநுழைந்தான் கவலை தீர்வான்

421
அருவாகி யுருவாகி யருவுவங் கடந்துண்மை யறிவா னந்த
உருவாகி யளவிறந்த வுயிராகி யவ்வுயிர்க்கோர் உணர்வாய்ப் பூவின்
மருவாகிச் சராசரங்க ளகிலமுந்தன் னிடையுதித்து மடங்க நின்ற
கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையா யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான்

422
கண்டுவிழுந் தெழுந்துவிழி துளிப்பவெழு களிப்பென்னுங் கடலில் ஆழ்ந்து
விண்டுமொழி தழுதழுப்ப வுடல்பனிப்ப வன்புருவாய் விண்ணோர் வேந்தன்
அண்டர்பிரா னருச்சனைக்கு வேண்டுமுப கரணமெலா மகல்வா னெய்திக்
கொண்டுவரச் சிலரைவிடுத் தவரேகப் பின்னுமொரு குறைவு தீர்ப்பான்

423
தங்குடிமைத் தச்சனையோர் விமானமமைத் திடவிடுத்தத் தடத்தின் பாற்போய்
அங்கணனைக் கடிதருச்சித் திடநறிய மலர்கிடையா தயர்வா னந்தச்
சங்கெறிதண் டிரைத்தடத்தில் அரனருளாற் பலபரிதி சலதி யொன்றிற்
பொங்குகதிர் பரப்பிமுளைத் தாலென்னப் பொற்கமலம் பூப்பக் கண்டான்

424
அன்புதலை சிறப்புமகிழ்ந் தாடினான் காரணத்தால் அதற்குநாமம்
என்பதுபொற் றாமரையென் றேழுலகும் பொலிகவென விசைத்துப் பின்னும்
மின்பதுமத் தடங்குடைந்து பொற்கமலங் கொய்தெடுத்து மீண்டு நீங்காத்
தன்பிணிநோய் தணியமுளைத் தெழுந்தமுழு முதன்மருந்தின் றன்பால் வந்து

425
மொய்த்தபுனக் காடெறிந்து நிலந்திருத்தி வருமளவின் முளைத்த ஞான
வித்தனைய சிவக்கொழுந்தின் றிருமுடிமேற் பரிதிகா மெல்லத் தீண்டச்
சிந்தநெகிழ்ந் திந்திரன்றன் வெண்கவிகைத் திங்கணிழல் செய்வான் உள்ளம்
வைத்தனனப் போதிரவி மண்டலம்போ லிழிந்த தொரு மணிவி மானம்

426
கிரியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும் புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்
கரியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந்தாங்க
விரியெட்டுத் திசைபரப்ப மயனிருமித் துதவியவவ் விமானஞ் சாத்தி
அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை யருச்சிப்பான் ஆயி னானே

427
முந்தவம ருலகடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதந் தேர்வார்
வந்துதரு வைந்தீன்ற பொன்னாடை மின்னுமிழு மணிப்பூண் வாசச்
சந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந் திருப்பள்ளித் தாமந் தீபம்
அந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன் றிருவமுத மனைத்துந் தந்தார்

428
தெய்வத்தா மரைமுளைத்த தடம்படிந்து பவந்தொலைக்குந் திருநீ றாடித்
சைவத்தாழ் வடந்தாங்கி யன்புருவாய் அருளுவந் தானாய்த் தோன்றும்
பைவைத்தா டரவார்த்த பசுபதியை யவனுரைத்த பனுவ லாற்றின்
மெய்வைத்தா தரம்பெருக வருச்சனைசெய் தானந்த வெள்ளத் தாழ்ந்தான்

429
பாரார வட்டாங்க பஞ்சாங்க விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய்
நேராகச் சூழ்ந்துடலங் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தஞ் செய்து
தாராருந் தொடைமிதப்ப வானந்தக் கண்ணருவி ததும்ப நின்றன்
பாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத் துதிக்கின்றான் அமரர் கோமான்

430
அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக 
கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்
செங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி
எங்கணா யகனே போற்றி யீறிலா முதலா போற்றி

431
யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி
யாவையு மானாய் போற்றி யாவையும் அல்லாய் போற்றி
யாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி
யாவையு புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி

432
இடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீர்த்துன்
அடியிணைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண்
மடவரன் மணாள் போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
சுடர்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி

433
பூசையும் பூசைக்கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியின் பேறு நல்கும்
ஈசனுமாகிப் பூசை யான்செய்தேன் என்னுமென் போத
வாசனை யதுவுமான மறைமுத லடிகள் போற்றி

434
என்னநின் றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற
முன்னவ னடியார் எண்ண முடிப்பவ னருட்க ணோக்கால்
உன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து
சென்னிமேற் செங்கை கூப்பித் தேவர்கோ னிதனை வேண்டும்

435
ஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனாம் அளவி னீங்கா
வெய்யவென் பழியி னோடு மேலை நாளடியேன் செய்த
மையல்வல் விளையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவு முரிய னானேன் சிறந்தபே றிதன்மேல் யாதோ

436
இன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித்
துன்னடி யாருள் யானு மோரடித் தொண்டன் ஆவேன்
அன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த
மன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து

437
இருதுவிற் சிறந்த வேனிலு மதியா றிரண்டிச் சிறந்தவான் றகரும்
பொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந் திதியினிற் சிறந்தபூ ரணையும்
மருவுசித் திரையிற் சித்திரை தோறும் வந்துவந் தருச்சியோர் வருடந்
தெரியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ் செய்தவர்ச் சனைப்பயன் எய்தும்

438
துறக்கநா டணைந்து சுத்தபல் போகந் துய்த்துமேன் மலபரி பாகம்
பிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவர் பெரும் பதத் தாசையும் பிறவும்
மறக்கநாம் வீடு வழங்குதும் என்ன வாய்மலர்ந் தருளிவான் கருணை
சிறக்கநால் வேதச் சிகையெழு மநாதி சிவபரஞ் சுடர்விடை கொடுத்தான்

439
மூடினான் புளகப் போர்வையால் யாக்கை முடிமிசை யஞ்சலிக் கமலஞ்
சூடினான் வீழ்ந்தான் எழுந்துகண் ணருவி பன்முறை துதிசெய்
தாடினா னைய னடிபிரி வாற்றா தஞ்சினா னவனரு ளாணை
நாடினான் பிரியாவிடைகொடு துறக்க நண்ணினான் விண்ணவர் நாதன்

440
வந்தரமங் கையர் கவரி மருங்கு 
வீச மந்தார கற்பகப்பூ மாரி தூற்ற
அந்தரநாட் டவர்முடிகள் அடிகள்சூட வயிராணி 
முலைத்த டந்தோய்ந் தகலந்  திண்டோள்
விந்தமெனச் செம்மாந்து விம்மு காம 
	வெள்ளத்து ளுடலழுந்தவுள்ளஞ் சென்று
சுந்தரநா யகன் கருணை வெள்ளற் தாழ்ந்து தொன் 
	முறையின் முறைசெய்தான் துறக்க நாடன்

இந்திரன் பழிதீர்த்தப் படலம் சுபம்

2. வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம்

2.
வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம்

441
மட்டவிழுங் கொன்றைச் சடையான் மகவானைத்
தொட்ட பழியின் றொடக்கறுத்த வாறீது
பட்டமத வேழம் பரனைப் பராய் முனிவன்
அட்டகொடுஞ் சாபநீத் தேகியவாறு ஓதுவாம்

442
கருவா சனைகழிக்குங் காசிநகர் தன்னிற்
றுருவாச வேதமுனி தொல்லா கமத்தின்
பெருவாய்மை யாற்றன் பெயர் விளங்க வீசன்
ஒருவா விலிங்க வொளியுருவங் கண்டான்

443
இன்புற் றருச்சனைசெய் தேத்துவான் அவ்வேலை
அன்புக் கெளிய னருளாற் றிருமுடிமேன்
மின்பொற் கடிக்கமலப் போதொன்று வீழ்த்திடலுந்
தன்பொற் கரகமலப் போதலர்த்தித் தாங்கினான்

444
தாங்கிக்கண் சென்னி தடமார் பணைத்துடலம் 
வீங்கித் தலைசிறந்த மெய்யுவகை மேற்கொள்ள 
நீங்கிக் கழிந்த கருணை நிதியனையான்
யங்கற் பகநாட்டிற் போகின்றான் அவ்வேலை

445
சங்கலறச் செங்களத்துத் தானவரைத் தேய்த்துவிறற்
கொங்கலர்ந்தார் வேய்ந்தமரர் கோமான்றன் கோநகரிற்
செங்கண் அமரர்பெருஞ் சேனைக் கடல் கலிப்ப
மங்கலப்பல் லாண்டு மறைமுழங்க வந்தணைவான்

446
எத்திக்குங் கல்லென் றியங்கலிப்ப வேந்திழையார் 
தித்தித்து அமுதொழுக்குங் கீதஞ் செவிமடுப்பப் 
பத்திக் கவரிநிரை தானைபடுகடலிற் 
றத்திப் புரளுந் திரைபோற் றலைபனிப்ப

447
அங்கட் கடலி னெடுங்கூடம் பகநிமிர்ந்த
வங்கத் தலையுய்க்கு மீகான் றனைமானத்
திங்கட் குடைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும்
வெங்கற் களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான்

448
அத்தலைவிண் ணாடர் அருகணைந்து வெவ்வேறு
தத்த மனக்கிசைந்த கையுறைக டாங்கொடுத்துக்
கைத்தலங்கள் கூப்பினார் கண்டார் கடவுளரில்
உத்தமனை யர்ச்சித்துப் போந்தமுனி யுத்தமனும்

449
தீங்கரிய வாசிமொழி செப்பித்தன் செங்கரத்தின்
நீங்கரிய தாமரையை நீட்டினான் மற்றதனைத்
தாங்கரிய செல்வத் தருக்காலோர் கையோச்சி
வாங்கிமத யானையின்மேல் வைத்தான் மதியில்லான்

450
கீறிக் கிடந்த மதியனைய கிம்புரிகோட்
டூறிக் கடங்கவிழ்க்கு மால்யானை யுச்சியின்மேல்
நாறிக்கிடந்த நறுமலரை வீழ்த்தியுரற்
சீறிக்கிடந்த நெடுந் தாளாற் சிதைத்தன்றே

451
கண்டான் முனிகாமற் காய்ந்தா னுதற்கண்போல்
விண்டார் அழல்சிதற நோக்கினான் வெங்கோபங்
கொண்டா னமர ரொதுங்கக் கொதித்தாலம்
உண்டா னெனநின் றுருத்தா னுரைக்கிறான்

452
புள்ளியதோ லாடை புனைந்தரவம் பூணணிந்த
வெள்ளிய செங்கண் விடையான் அடிக்கமலம்
உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத்
தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய்

453
கதிர்த்தார் முடியமரர் கையுறையே நன்கு
மதித்தா யெம்மீசன் மதிமுடிமேற் சாத்தும்
பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கி
மிதித்தானை சிந்தவதன் மேல்வைத்தாய் பேதாய்

454
வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமார்ப்பும்
புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும்
அண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்

455
சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
கோட்டான நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரமும்
காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம்

456
சவித்தமுனி பாதந் தலைக்கொண்டு செங்கை
குவித்தமரர் தங்கோன் குறையிரப்பா ரைய
அவித்தபொறி யாயெம் மரசுங்கா றள்ளுஞ்
செவித்தறுகண் வேழமுந் தீங்குடையர் அன்றோ

457
அத்தகைய நீராற் சபித்தீ ரடிகேன்மற்
றித்தகைய சாப மினிவிடுமின் என்றிரந்து
கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க் கிரங்கியருள் 
வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான்

458
சிந்தனை வாக்கிற் கெட்டாச் சிவனருள் அளித்த சேட
நிந்தனை பரிகா ரத்தா னீங்காது தலைமட் டாக
வந்தது முடிமட் டாக மத்தமா வனமா வாகி
ஐந்திரு ப•தாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக

459
என்றனன் பிறிது சாபம் இந்திரன் மகுட பங்கம்
ஒன்றிய செய்கை பின்ன ருரைத்துமற் ற•து நிற்க
நின்றவெள் ளானை வான நீத்தறி விழுந்து நீலக்
குன்றென வனத்து வேழக் குழாத்தொடு குழீ இய தன்றே

460
மாவொடு மயங்கிச் செங்கன் மறம்பயில் காடு முல்லைப்
பூவொடு வழங்கு நீத்தப் புறவமுங் குறவர் தங்கள்
தேவொடு பயிலுங் கல்லுந் திரிந்துநூ றியாண்டுஞ் செல்லக்
காவொடு பயிலுந் தெய்வக் கடம்பமா வனம்புக் கன்றே

461
புக்குரல் வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீர்ந்த
மைக்கருங் களிறு முக்கண் மாதவன் அருள்வந் தெய்தத்
தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு
நக்கபொன் முளரி பூத்த நளிர்கயந் தலைக் கண் டன்றே

462
கண்டபோ தறிவு தோன்றக் கயந்தலைக் குடைந்த போது
பண்டைய வடிவந் தோன்றப் பரஞ்சுடர் அருட்கண் டோன்றக்
கொண்டதோர் பரமா னந்தக் குறியெதிர் தோன்றக் கும்பிட்
டண்டர்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற

463
தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தாநீ ராட்டித்
தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தெரிந்து சாத்திப்
பாம்புடைத் தாயவேணிப் பரனையர்ச் சிக்கவுள்ளத்
தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும்

464
வந்ததை யெவனீ வேண்டும் வரமெவன் உரைத்தி யென்னச்
சிந்தையி லன்பு கூர்ந்த தெய்வத வேழந் தாழ்ந்து 
முந்தையில் விளைவும் வந்த முறைமையு முறையாற் கூறி
எந்தையை யடையப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ

465
என்பதா மாரம் பூண்ட வெந்தையிக் கரிக ளெட்டோ
டொன்பதா யடிய னேனு முன்னடி பிரியா துன்றன்
முன்பதா யிவ்வி மான முதுகுறச் சுமப்ப லென்றோர்
அன்பதா யொன்றென் னுள்ளத் தடுத்ததா ல•தே வேண்டும்

466
இடையறா வன்பின் வேழ மிங்ஙனங் கூற விண்ணா
டுடையவ னம்பான் மெய்யன் புடையவன் அவனைத் தாங்கி
அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும்
விடையவள் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே

467
விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை 
 	மேற்றிசை யடைந்துதன் பெயராற்
றடமுமற் றதன்பால் ஆனையுங் கணேசன் 
	றன்னையுங் கண்டருச் சனைசெய்
திடையறா வன்புந் தானுமங் கிருக்கு மெல்லையிச் 
	செய்திகேட் டருள்கூர்
கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
	களிற்றினைக் கொணர்கென விடுத்தான்

468
வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
	வருவ லென் றெழுந்துகீழ்த் திசையோர்
எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண் டிந்திரேச் 
	சிரனென விறைவன்
றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத் 
	தூயபூ சனைசெய்தல் கிருப்பக்
கல்லைவன் சிறகு தடிந்தவன் இன்னுங் களிறுவந்	
	திலதெனப் பின்னும்

469
மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப வானடைந்
	திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட் புன்கணோ 
	யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு சுளைந்ததுங்
	கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழம் இனிதுவீற 
	றிருந்தது மாதோ

470
குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங் குடைந்தயி ராவத கணேசக்
கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத் 
தொடர்பினும் பாவத் தொடர்பினுங் கழிவர் சுராதிபன் களிறுசென்னெறிபோய்
இடர்கெட வைகை படிந்துதென் கரையில் இந்திரேச் சுரனடி பணிவோர்

471
இம்மையி லறமுன் மூன்றால் எம்திய பயனை யெய்தி
அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்

வெள்ளை யானையின் சாபம் தீர்த்த படலம் சுபம்

3. திருநகரம் கண்ட படலம்

472
தான வாறிழி புகர்முகத் தடுகரி சாபம்
போன வாறுரை செய்துமேற் புதுமதி முடிமேல்
வான வாறினன் கடம்பா வனமுது நகரம்
ஆன வாறது தனைச்சிறது அறிந்தவா றறைவாம்

473
இன்ன ரம்புளர் ஏழிசை யெழிஅன்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கட்ம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மண்வூர்

474
குலவு மப்பெரும் பதியிளங் கோக்களில் ஒருவன்
நிலவு மாநிதி போலருச் சனைமுத னியதி
பலவு மாஞ்சிவ தருமமுந் தேடுவான் பரன்பாற்
றலைமை சான்றமெய் யன்பினான் தனஞ்சயன் என்பான்

475
செல்வ மாநக ரிருந்துமேற் றிசைப்புலஞ் சென்று
மல்லல் வாணிகஞ் செய்துதன் வளம்பதி மீள்வான்
தொல்லை யேழ்பவக் கடற்கரை தோற்றுவித் தடியார்
அல்ல றீர்ப்பவன் கடம்பமா வனம்புகும் அளவில்

476

இரவி கண்மறைந் தேழ்பரி யிரத முந் தானும்
உரவு நீர்க்கருங் கடலில் வீழ்ந் தொளித்தன னாக
இரவு நீண்மயங் கிருள்வயிற் றமியனாய் மெலியும்
அரவு நீர்ச்சடை யண்ணலுக் கன்பினோ னாங்கண்

477
வாங்கு நான்மருப் பேந்திய மதமலை யெருத்தந்
தாங்கி யாயிரங் கரங்களாற் றடவியெண்டி சையுந்
தூங்கு காரிரு டுரத்துசெஞ் சுடரெனச் சூழ்போய்
வீங்கு காரிரு ளதுக்கிய விமானனேர் கண்டான்

478
அடுத்த ணைந்தனன் அவிர்சுடர் விமானமீ தமர்ந்த
கடுத்த தும்பிய கண்டனைக் கண்டுதாழ்ந் துவகை
மடுத்த நெஞ்சினா னங்ஙனம் வைகிருள் கழிப்பான்
எடுத்த சிந்தையி னிடுந்தன னிருக்குமவ் விருள்வாய்

479
சோம வாரமன் றாதலாற் சுரர்களங் கெய்தி
வாம மேகலை மலைமக டலைமகன் மலர்ந்த
காமர் சேவடி பணிந்தவன் கங்குல்போற் கருதி
யாம நான்கினு மருச்சனை யின்புறப் புரிவார்

480
அண்டர் வந்தது மருச்சனை புரிவது மனைத்துந்
தொண்டர் அன்பினுக் கெளியவன் சுரர்தொழக் கறுத்த
கண்ட னின்னருட் கண்ணினாற் கண்டன னுதலிற்
புண்ட ரம்பயி லன்புடைப் புண்ணிய வணிகன்

481
நான மென்பனி நறும்புன னாயகன் பூசைக்
கான நல்விரை வருக்கமும் அமரர்கைக் கொடுத்து
ஞான வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த் 
தான மர்ந்தருச் சனைசெய்வான் றங்கணா யகனை

482
வள்ள றன்னைமெய் யன்பினால் அருச்சனைசெய் வானோர்
உள்ள வல்வினை யீட்டமுங் கங்குலு மொதுங்கக்
கள்ள மில்லவன் யாரையுங் கண்டிலன் கண்டான்
தள்ள ருஞ்சுடர் விமானமேற் றனித்துறை தனியை

483
ஆழ்ந்த சிந்தையன் அதிசய மடைந்துசே வடிக்கீழ்த்
தாழ்ந்தெ ழுந்திரு கைகளுந் தலைமிசைக் கூப்பிச்
சூழ்ந்து தன்பதிக் கேகுவா னொருதலை துணிந்து
வாழ்ந்த வன்பினான் விடைகொடு வழிக்கொடு வந்தான்

484
முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில்
புக்க டங்கலர் சிங்கமன் னானெதிர் புகல்வான்
திக்க டங்கலுங் கடந்தவெந் திகிரியாய் நெருநல்
அக்க டம்பமா வனத்திலோர் அதிசயங் கண்டேன்

485
வல்லை வாணிகஞ் செய்துநான் வருவழி மேலைக்
கல்ல டைந்தது வெங்கதிர் கங்குலும் பிறப்பும்
எல்லை காணிய கணடனன் இரவிமண் டலம்போல் 
அல்ல டுஞ்சுடர் விமானமு மதிற்சிவக் குறியும்

486
மாவ லம்புதார் மணிமுடிக் கடவுளர் வந்தத்
தேவ தேவனை யிரவெலாம் அருச்சனை செய்து
போவ தாயினார் யானுமப் பொன்னெடுங் கோயின்
மேவு மீசனை விடைகொடு மீண்டன னென்றான்

487
மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான்
றாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம்
நீளு மன்புறமற் புதமுமே நிரம்பநீர் ஞாலம்
ஆளு மன்னவன் இருந்தனன் போயினா னருக்கன்

488
ஈட்டு வார்வினை யொத்தபோ திருண்மலங் கருக
வாட்டு வார்அவர் சென்னிமேன் மலரடிக் கமலஞ்
சூட்டு வார்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக்
காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினார் கனவில்

489
வடிகொள் வேலினாய் கடம்பா வனத்தினைத் திருந்தக்
கடிகொள் காடகழ்ந் தணிநகர் காண்கென வுணர்த்தி
அடிகள் ஏகினார் கவுரிய ராண்டகை கங்குல்
விடியும் வேலைகண் விழித்தனன் பரிதியும் விழித்தான்

490
கனவிற் றீர்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சர்
சினவிற் றீர்ந்தமா தவர்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி
நனவிற் கேட்டதுங் கனவிற் கண்டது நயப்ப
வினவித் தேர்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான்

491
அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன்
சமைச்ச விழ்ந்தபொற் றாமரைத் தடம்படிந் தொளிவிட்
டிமைச்ச லர்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோர்
தமைச்ச ரண்பணிந்து அஞ்சலி தலையின்மேன் முகிழ்த்தான்

492
அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீர்த் தேக
என்பு நெக்கிட வேகிவீழ்ந் திணையடிக் கமலம்
பொன்பு னைந்ததார் மௌலியிற் புனைந்தெழுந்து இறைவன்
முன்பு நின்றுசொற் பதங்களாற் றோத்திர மொழிவான்

493
சரண மங்கையோர் மங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
சரண மும்பர்க ணாயக பசுபதி சரணம்

494
ஆழி ஞாலமே லாசையும் அமரர்வான் பதமேல்
வீழு மாசையும் வெறுத்தவர்க் கன்றிமண் ணாண்டு
பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும்
ஏழை யேங்களுக் காவதோ வெந்தைநின் கருணை

495
சூள தாமறைச் சென்னியும் தொடத்தொட நீண்ட
நீள னீயுனக் கன்பில மாயினு நீயே
மூள வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண்
டாள வேகொலிக் கானகத் தமர்ந்தனை யென்னா

496
சுரந்த வன்பிரு கண்வழிச் சொரிவபோற் சொரிந்து
பரந்த வாறொடு சிவானந்தப் பரவையுட் படிந்து
வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறம்போந்
தரந்தை தீர்ந்தவன் ஒருசிறை யமைச்சரோ டிருந்தான்

497
ஆய வேலையின் மன்னவ னாணையால் அமைச்சர்
மேய வேவலர் துறைதுறை மேவினர் விடுப்பப்
பாய வேலையி னார்த்தனர் வழிக்கொடு படர்ந்தார்
சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள்

498
வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்கூரிய நவியம்
டூட்ட தோளினர் யாப்புடைக் கச்சினர் இரும்பின்
விட்ட காரொளி மெய்யினர் விசிகொள்வார் வன்றோல்
தொட்ட காலினர் வனமெறி தொழிலின ரானார்

499
மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப
எறிய மோதையு மெறிபவ ரோதையும் இரங்கி
முறிய மோதையு முரிந்துவீ ழோதையு முகில்வாய்ச்
செறியு மோதையிங் கீழ்ப்பட மேற்படச் செறியும்

500
ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொலித்து
வெளிறில் வன்மரஞ் சினையிற் வீழ்வசெங் களத்துப்
பிளிறு வாயவாய் நிணத்தொரு குருதிநீர் பெருகக்
களிறு கோடிற மாய்ந்துவீழ் காட்சிய வனைய

501
பூவ டைந்தவண் டினமயற் புறவொடும் பழனக்
காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த
கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற் செறிந்து
மாவ டைந்தன மாடுள வரைகளுங் காடும்

502
இருணி ரம்பியவனவெலா மெறிந்துமெய் யுணர்ந்தோர்
தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிர்க்கும்
அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த
கருணை யன்பர்தம பிறப்பென வேரொடுங் களைந்தார்

503
களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறிபடக் கண்டு
வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல்
விளைந்து தாதுகு தார்முடி வேந்தன்மந் திரரோ
டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண்

504
மெய்ய ரன்புதோய் சேவடி வியனிலந் தீண்டப்
பொய்ய கன்றவெண் ணீறணி மேனியர் பூதிப்
பையர் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே
ஐயர் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப

505
கனவி லும்பெருங் கடவுளர் காண்பதற் கரியார்
நனவி லும்வெளி வந்தவர் தமையெதிர் நண்ணி
நினைவி னின்றதா ளிறைஞ்சிநேர் நின்றுநல் வரவு
வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணர் வேந்தன்

506
தென்ன ரன்பினில் அகப்படு சித்தர்தா முன்னர்ச்
சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால்
நன்ன ராலய மண்டபங் கோபுர நகரம்
இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தார்

507
மறைந்தெ வற்றினு நிறைந்தவர் மலரடிக் கன்பு
நிறைந்த நெஞ்சுடைப் பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடர்வந்
தறைந்து வைத்தவா றாலய மணிநகர் காண்பான்

508
மறைபயில் மதும மண்டப மருத்த மண்டப மழை நுழை வளைவாய்ப்
பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும்
பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித்
துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவர்தங் கோயில்

509
வலவயி னிமய வல்லி பொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான்
நிலவிய கொடிய நெடிய சூளிகைவா னிலாவிரி தவளமா ளிகைமீன்
குலவிய குடுமிக் குன்றிவர் செம்பொற் போபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
சுலவெயில் அகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்

510
சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
நிலத்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்கப்
பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில்
பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டரங்கு

511
அருந்தவர் இருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப்
பெருந்தெரு நல்வே ளாளர்பே ரறஞ்சால் பெருங்குடி யேனைய கரிதேர்
திருந்திய பரிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி
இரந்தவர்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான்

512
துணிகயங் கீழ்நீர்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொய்கைநந் தவனந்
திணிமலர்ச் சோலை துடவையூ யானந் திருநகர்க் கணிபெறச் செய்து
மணிமலர்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகர் வடகுண பாற்கண்
டணிநகர் சாந்தி செய்வது குறித்தா னண்ணலார் அறிந்திது செய்வார்

513
பொன்மய மான சடைமதிக் கலையின் புத்தமு துகுத்தனர் அதுபோய்ச்
சின்மய மான தம்மடி யடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போற்
றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர
நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனர் நாமம்

514
கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார் கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்
கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை யுடைக்குந்
தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித் தோன்றலும் வடவயிற் றோடு
நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி

515
கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிர் கோயின்
மைவரை மிடற்று மதுரைநா யகரை மரபுளி யருச்சனை புரிவான்
பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி
சைவரைக் காசிப் பதியினிற் கொணர்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான்

516
உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயர்ந்தவும் இழிந்தவுமயங்க
வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமநு வகுத்த
தத்தம நெறிநின் றொழுகவை திகழுஞ் சைவமுந் தருமமும் தழைப்பப்
பைத்தெழு திரைநீர் ஞாலமேற் றிலகம் பதித்தென நகர்வளம் படுத்தான்

517
அன்றுதொட் டசர னந்நகர் எய்தி யணிகெழு மங்கல மியம்ப
என்று தொட் டிமைக்கு மனையின்மங் கலநா ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
குன்று தொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங் குறைவில்பூ சனைவழா தோங்கக்
கன்றுதொட் டெறிந்து கனியுருத் தான்போற் கலிதுரந் தரசுசெய் நாளில்

518
பவநெறி கடக்கும் பார்த்திவன் கிரணம் பரப்பிளம் பரிதிபோன் மலயத்
துவசனைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ் சுமத்திநாள் பலகழித் தொருநாள்
நவவடி விறந்தோன் ஆலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ வலஞ்செய்
துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான்

திருநகரம் கண்ட படலம் சுபம்

4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்

519
கன்னியொரு பங்கினர் கடம்பவன மெல்லாம்
நன்னகர மானது நவின்றுமுல கீன்ற
அன்னைமக ளாகிமல யத்துவச னாகுந் 
தென்னனிடை வந்துமுறை செய்ததுரை செய்வாம்

520
மனுவறம் உவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு ணைக்குறையுங் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்

521
வேனில் விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமாட வார்கள்பதி னாயிரவர் உள்ளான்
வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்

522
கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில்பல நாண்மகவி லாவறுமை யெய்துப்
பண்ணரிய தானதரு மம்பலவும் ஆற்றிப் 
புண்ணிய நிரம்புபரி வேள்விபுரி குற்றான்

523
ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
நாறுமக மும்புரியி னென்பதநொ டிப்பின்
மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்

524
நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
அன்புறு மகப்பெறுதி யென்றமரர் நாடன்
தன்புலம் அடைந்திடலு நிம்பநகு தாரான்

525
மிக்கமக வேள்விசெய் விரும்புடைய னாகி
அக்கண மதற்குரிய யாவையும் அமைத்துத்
தக்கநிய மத்துரிய தேவியோடு சாலை
புக்கன னிருந்துமக வேள்விபுரி கிற்பான்

526
ஆசறம றைப்புலவர் ஆசிரியர் காட்டும்
மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
ஓசையநு தாத்தசொரி தந்தழுவ வோதி
வாசவ னிருக்கையி லிருந் தெரி வளர்ப்பான்

527
விசும்புநில னுந்திசையும் வேள்வியடுசாலைப்
பசும்புகை படர்ந்தொரு படாமென மறைப்பத் 
தசும்புபடு நெய்பொரி சமித்தனோடு வானோர்க்
கசும்புபடு மின்னமுதின் ஆகுதி மடுத்தான்

528
ஐம்முக னநாதிபர மாத்தனுரை யாற்றால்
நெய்முக நிறைத்தழ னிமிர்ந்து வரு மெல்லை
பைம்முக வராவணி பரஞ்சுடர் தனிப்ப
மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண

529
வள்ளன்மல யத்துவச மீனவன் வலத்தோள்
துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிர் தீம்பால்
வெள்ளமொழி கக்கரிய வேற்கணிட னாட

530
இவ்வுலக மன்றியுல கேழுமகிழ் வெய்தச்
சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
ஔவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப்புலன் இசைப்ப

531
மைம்மலர் நெடுங்கணர மங்கையர் நடிப்ப
மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபடல் இன்றி
அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப

532
மார்ந்தர்பயின் மூவறுசொன் மாநில வரைப்பிற்
றீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப
ஆய்ந்ததமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை யெய்த

533
நொய்தழ லெரிக்கடவு ணோற்றபயன் எய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவ ழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்
மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன

534
விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப

535
தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குடல் இளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால

536
சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ் 
பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட

537
தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள்

538
குறுந்தளிர்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க
நறுந்தளிர்போல் அசைந்துதளர் நடையொதுங்கி மழலையிள நகையுந் தோன்றப்
பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
அறந்தழுவு நெறிநின்றோர்க் கிகம்போகம் வீடளிக்கு மம்மை யம்மா

539
செய்யவாய் வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போல் நீண்ட
மையவாய் மதர்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா
தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாள் மோந்தாள்
துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாள் முன்பெற்ற தோகை யன்னாள்

540
பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துக் காத்து
வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் வடிவு வேறாய்
உரையாதி மறைகடந்த வொருமுதல்வி திருமகளா யுதித்தற் கிந்தத் 
தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ அதற்குரிய தவந்தான் மன்னோ

541
கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து கரண மெலாங் கடந்தா னந்த
வெள்ளமாம் பரஞான வடிவுடையாள் தன்னன்பின் வெளிவந் தின்றோர்
பிள்ளையாய் அவதரித்த கருணையுந்தன் மணாட்டிதவப் பேறுந் தேறான்
பள்ளமா கடற்றானைப் பஞ்சவர்கோ னெஞ்சகத்துவப் பரிவு கூர்ந்தான்

542
மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு 
தகவிந்த மகஞ்செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை

543
மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே

544
அவ்வாக்குச் செவிநிரம்ப வன்புவகை யகநிரம்ப வகல மெல்லாம்
மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும் புனனிரம்ப விமலற் போற்றி
நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை யொடுஞ்சாலை நீத்தி ரண்டு
கைவாக்கு மியங்கலிப்பக கடிமாட மனைபுகுந்தான் சுழற்கால் வேந்தன்

545
முரசதிர்ப்ப மங்கலங்கொண் டெதிர்வருவார் முகத்துவகை முறுவல் பூப்ப
அரசிருக்கு மண்டபம்புக் கினிதமர்ந்து கனகமழை யான்ற கேள்வி
விரசிருக்கு மறையவர்கைப் பெய்தெவர்க்கு மம்முறையால் வெறுப்ப நல்கிப் 
பரசிருக்குங் கரதலத்தெம் பரன்கோயி னனிசிறப்புப் பல்க நல்கா

546
சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமின் ஏழாண்டு தேயத் தீட்டும்
இறைவிடுமி னயல்வேந்தர் திறைவிடுமி னிறைநிதிய மீட்டு மாயத் 
துறைவிடுமி னறப்புறமு மாலயமும் பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக் கூய்முரசங் கறங்கச் சாற்றி

547
கல்யாண மணிமௌலி வேந்தரையுங் கால்யாப்புக் கழல நீத்துக் 
கொல்யானை பரிநெடுந்தேர் அரசுரிமை தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப்
பல்லாருங் கொளகவெனப் பண்டாரந் தலைசிறந்து பசும்பொன் னாடை 
வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத லெனைப்பலவும் வெறுக்க வீசி

548
தூமரபின் வருபெருமங் கலகவிகட் கிருநிதியந் துகில்பூண் பாய்மா
காமர்கரி பரித்தடந்தேர் முதலாய பலபொருளுங் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி
மாமதுரா நகரன்றி மற்றுமுள நகரெங்கு மகிழ்ச்சி தூங்க

549
இவ்வண்ண நகர்களிப்ப விறைமகனுங் விறைமகனுங் 
களிப்பெய்தி இறைவர் சொன்ன
அவ்வண்ணஞ் சாதமுதல் வினை நிரப்பித் தடாதகையென்று 
	அழைத்துத் தேவி
மெய்வண்ண மறையுணரா விறைவிதனை மேனைபோல் மேனா ணோற்ற
கைவண்ணத் தளிர்தீண்டி வளர்ப்பவிம வான்போலக் களிக்கு நாளில்

550
திருந்தாத விளங்குதலை யாயமோடு புறம்போந்து சிறார்க்குச் சிற்றில் 
விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை யுரங்கிழித்த வேளும் வாய்வைத்
தருந்தாத விளமுலைவாய் வைத்தருத்தப் பாலைவதனக் களித்தும் போதில்
வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி செய்தான்

551
தீட்டுவாள் இரணடனைய கண்களிப்பத் தோழியர்க்குத் தெரிய வாடிக் 
காட்டுவா ளெனக்கழங்கு பந்துபயின் றம்மனையுங் கற்றுப் பாசம்
வீட்டுவாண் மேலொடுகீழ் தள்ளவெமை வினைக்கயிறு வீக்கி யூசல்
ஆட்டுவாள் காட்டுதல்போல் லாடினா ணித்திலத்தாம் பசைத்த வூசல் 

552
இம்முறையாற் றாயர்க்குந் தோழியர்க்கு மகத்துவகை யீந்தாள் ஆகி
அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை யீவாளா யாத்த வாய்மைச் 
செம்முறையா ரண்முதனா லீரெட்டுக் கலைமுழுதுந் தெளிந்தா ளந்த
மெய்ம்மறையார் கலையனைத்தும் மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா

553
சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப் பிளந்திருபாற் சொருகி யன்ன
பல்வாய்மைக் கடகரிதேர் பரியுகைக்குந் திறனுமழற் பகழி தூர்க்கும்
வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங் கண்டிளமை விழுங்கு மூப்பிற்
செல்வாய்மைத் திறலரசன் றிருமகட்கு முடிசூட்டுஞ் செய்கை பூண்டான்

554
முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறு முடங்கல் போக்கி
கடிகெழுதார் மணிமௌலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த
கொடியணிமா நகரெங்கும் விழாவெடுப்ப வழகமைத்துக் குன்ற மன்ன
தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான்

555
மங்கலதூ ரியமுழங்க மால்யானை யுச்சிமிசை வந்த பூத
கங்கைமுதல் ஓன்பதுதீர்த் தமுநிரப்பிக் கதிர் விடுபொற் கடம்பூ சித்துப் 
புங்கவரை மந்திரத்தீ வளர்த்தமுத மருத்தியெரி பொன்னாற் செய்த
சிங்கமணி யாதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வ மேற்றி

556
திருமுடியை மதயானை மிசைவைத்து நகரைவலஞ் செய்து பூசித் 
தருமணியாற் சுடிகையிழைத் தாடகத்தாற் குயிற்றியதோர் ஐவாய் நாகம்
பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப வச்சிங்க பீடத் தேற்றிக் 
குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப் புண்ணியநீர் குளிர வாட்டி

557
புங்கவர்மந் தாரமழை பொழியவருந் தவராக்கம் புகலத் தெய்வப் 
பங்கயமென் கொம்பனையா ராடமுனி பன்னியர்பல் லாண்டு பாட
மங்கலதூ ரியமுழங்க மறை தழங்க மாணிக்க மகுடஞ் சூட்டி
எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சர் பணியுந்தன் னிறைமை நல்கா

558
பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற மதிகிரணம் பரப்பி யன்ன
கோலமணிக் கவரிபுடை யிரட்டமலர் மழைதேவர் குழாங்க டூற்றக் 
காலையிளங் கதிர்கயிலை யுதித்தெனவெண் கடாயானைக் கழுத்தில் வேப்ப
மாலைமுடிப் பெண்ணரசை மங்கலதூ ரியமுழங்க வலஞ்செய் வித்தான்

559
விண்ணாடு மொழிகேட்ட மகிழ்ச்சியுனுந் திருமகடன் விளக்க நோக்கி
உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்புச் சிலபகல்சென்றொழிய மேனாட்
புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து நடிப்பத்தன் புயமேல் வைத்த
மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றானம் மகவு பெற்றான்

560
விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியால் ஆற்றி 
அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா மொருகுடைக்கீ ழாள்வா ளானாள்
சரதமறை யாய்மறையின் பொருளாயப் பொருண் முடிவு தானாய்த் தேனின்
இரதமெனப் பூவின்மண மெனப்பரம னிடம்பிரியா வெம்பிராட்டி

561
மண்ணர சிறைஞ்ச ஞால மநுவழி புரந்து மாறன்
விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோன் உள்ளத் 
தெண்ணர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப் 
பெண்ணர சிருந்து நேமி யுருட்டிய பெருமை சொல்வாம்

562
இன்னிய மியம்பு மாக்க ளெழுப்பவான் இரவி தோன்றக் 
கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீஇக் கடிநீராடித் 
தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு
துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா

563
திடம்படு மறிஞ்ர் சூழச் சிவபரன் கோயில் முன்னிக் 
கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண் டார்க்கும்
விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு
குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிக் கோயில் நண்ணி

564
அரசிறை கொள்ளுஞ் செம்பொன் அத்தாணி யிருக்கை யெய்தி
நிறைசெற்¢ மடங்க லாறு முடங்கின நிமிர்ந்து தாங்க
விரைசெறி மலர்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித்
திரைசெறி யமுதிற் செய்த பாவை போற் சிறந்து மாதோ

565
அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்குங் காதல்
கனிந்தபார் மகளி ராய்வந் தடைப்பைப்பொற் களாஞ்சி யேந்த
இனந்திரி பதுமக் கோயில் இருவரு மனைய ராகிப் 
புனைந்தவெண் கவரிக் கற்றை யிருபுடை புரட்டி வீச

566
செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங் 
கடியவிழ் மலரிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை
முடிகெழு வேந்தர் உள்ளார் முடிமிசை மிலைந்த தாமம்
அடிமிசைச் சாத்திநங்கை யாணையா றேவல்செய்ய

567
வையுடை வாள ராகி மார்புறப் பின்னி யார்த்த
கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்குஞ் 
செய்யுமென் றிமையார் நோக்கி நோக்குமேற் செங்கை கூப்பி
உய்குந மெனவாய் பொத்தி யுழையர்தம் பணிகேட்டுய்ய

568
ஆங்கவன் மராடர் வேந்தன் அவன்கரு நாடர் வேந்தன்
ஈங்கிவன் விராடா வேந்த னிவன்குரு நாடர் வேந்தன்
ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப்
பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள்

569
செந்தமிழ் வடநூலெல்லை தெரிந்தவர் மறைநூ லாதி
அந்தமில் எண்ணெண் கேள்வியளந்தவர் சமயமாறும்
வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போத மாண்ட
சிந்தனை யுணர்வான் மாயை வலிகெடச் செற்ற வீரர்

570
முன்னிருந் தினிய தேற்று மூத்தவர் எண்ணி யெண்ணிப் 
பன்னுமைந் துறுப்பிற் கால மளந்தறி பனுவன் மாந்தர் 
பின்னுமுன் னோக்குஞ் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதி யோடும்
இன்னமு தனைய கேள்வி மந்திரர் யாருஞ் சூழ

571
கற்றறி யந்தணாளர் விருத்திகள் கடவுட் டானத்
தற்றமில் பூசைச் செல்வ மறப்புற நடக்கை யேனைச்
செற்றமில் குடிகண் மற்று மமைச்சராற் றெளிந்தும் வெவ்வே
றொற்றுவிட் டுணர்த்தும் வேறு குறையுண்டே லொறுத்துத் தீர்த்தும்

572
ஆதியுத் தேசத் தானும் இலக்கண வமைதி யானுஞ் 
சோதனை வகைமை யானுஞ் சொன்னநூ லனுவா தித்து
நீதியி நவற்றாற் கண்டித் தவ்வழி நிறுத்தித் தம்மில் 
வாதிகள் வாதஞ் செய்யுங் கோட்டின்மேன் மகிழ்ச்சி கூர்ந்தும்

573
பையுள பகுவாய் நாகப் பள்ளியோன் ஆதி வானோர்
கையுள வலியா லட்ட கடலமு தனைத்தும் வாரிப் 
பொய்யுள மகலக் கற்ற புனிதநூற் புலவர் நாவிற்
செய்யுள விளைவித் தூட்டத் திருச்செவி தெவிட்ட வுண்டும்

574
தொல்லைநான் மறையோர் சைவர் துறந்தவர் யார்க்கும் இன்பம்
புல்லவா னமுதுங் கைப்பப் பாகநூற் புலவ ரட்ட
முல்லைவான் முகையினன்ன வறுசுவை முரியாமூரல் 
நல்லவூ ணருத்தி யன்னார் நாவிருந் தமுதுசெய்யும்

575
எல்லவன் உச்சி நீந்து மெல்லையி னான்கு மாறும்
வல்லவர் சூதனோதி வகுத்தமூ வாறு கேள்வி
சொல்லவுண் மலர்ந்துமேனை மநுமுதற் றுறைமாண் கேள்வி
நல்லவ நயந்து கேட்டு நன்பகற் போது நீத்தும்

576
கலைக்குரை விரிப்பார் என்ன வறுமையிற் கல்வி போலப் 
புலப்படா மருங்கு னல்லா ரெந்திப் புலவன் பூட்டி
அலைத்திடு பாவை போனின் றாடல்செய் யாடற் கண்ணும் 
நலத்தகு பாடற் கண்ணு நல்லரு ணாட்டஞ் செய்தும்

577
இன்னிலை யொழுகுத் தொல்லோர் இயற்றிய தருமம் வேறும்
அந்நிலை நிறுத்தும் வேள்வியறம்பல வாக்கஞ் செய்ய
நன்னிதி யளித்தும் வேள்வி நடாத்தியுஞ் செல்வங் கல்வி
தன்னிரு கண்க ளாகத் தழைந்திட வளர்க்கு நாளும்

578
ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்திபெற்ற
முப்பெருந் தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று
செப்பலும் புகழன் றென்னிற்றென்னவன் கன்னியாகி
இப்புவி மநுவிற் காக்கும் என்பதென் பேதை மைத்தே

579
வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி
விரைசெய் தார்முடி வேய்ந்துதண் குடைமநு வேந்தன்
கரைசெய் நூல்வழி கோல்செலக் கன்னியாம் பருவத் 
தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு

580
இன்ன வாறுமை யவதரித் திருந்தனள் என்னாப்
பொன்ன வாவினர் பெறவெறி பொருநைகால் பொருப்பான்
சொன்னவாய்மை கேட் டகங்களி தூங்கினர் தொழுது
மின்னுவார்சடை முனிவரோர் வினாவுரை செய்வார்

581
திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் கரிதாய் 
இருந்த நாயகி யாவையும் ஈன்றவெம் பிராட்டி
விரிந்த வன்புகூர் தக்கனும் வெற்பனும் பன்னாள்
வருந்தி நோற்றலா லவர்க்கொரு மதலையாய் வந்தாள்

582
மனித்த னாகிய பூழியன் மகளென வீங்குத் 
தனித்த காரணம் யாதெனத் தபனியப் பொதுவிற் 
குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருள்கூர்ந் 
தினித்த தோர்கதை கேண்மினென்று எடுத்துரை செய்வாள்

583
விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த 
நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம்
அச்சு வாகத மொழியினாள் அம்பிகைக் கன்பு
வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா

584
ஐய வம்பிகை தன்னையாண் அன்பினால் வழிபட் 
டுய்ய வேண்டுமென் றாளவ னுலகெலாம் பயந்த
தையன் மந்திரந் தனைமக டனக்குப தேசஞ் 
செய்ய வந்நெறி யொழுகுவாள் செப்புவாள் பின்னும்

585
இறைவி தன்னையா தரிப்பவற் கிம்பரிற் சிறந்த 
குறைவி னன்னகர் யாதெனக் கூறுவான் கேள்வித் 
துறைவி ளங்கினோர் பயில்வது துவாதச முடிவென்
றறைவ ளம்பதி யவனிமேற் சிவபுர மாமால்

586
சேடு தாங்குமூ வுலகினுட் சிறந்தன சக்தி
பீட மூவிரு பத்துநான் கவற்றின்முற் பீடம்
மாடம் ஓங்கிய மதுரையா மற்றது போகம்
வீடும் வேண்டிய சித்தியும் விளைப்பதென் றெண்ணா

587
அல்லு மெல்லுவா னகர்க்கத வடைப்பின்றிச் சுவர்க்கச்
செல்வ ரங்கடைந் துமையருள் சித்தியால் வினையை 
வெல்லு வாரதான் றெந்தையோ டைவர்கள் வேண்டி
நல்வ ரம்பல வடைந்தனர் நமர்களந் நகரில் 

588
எம்மை யாரையும் யாவையும் ஈன்றவங் கயற்கண் 
அம்மை யாவரே யாயினு மன்பினா தரிப்போர்
இம்மை யாகிய போகம்வீ டெண்ணியாங் கெய்தச்
செம்மை யாகிய வின்னருள் செய்துவீற் றிருக்கும் 

589
என்ற தாதையை யிறைஞ்சினாள் அநுச்சைகொண்டெழுந்தாள்
மன்றன் மாமலர் வல்லிபோல் வழிக்கொடு கானங்
குன்ற மாறுபின் கிடப்பமுன் குறுகினா ளன்பின் 
நின்ற வாதியெம் பரையரு ணிறைந்தவந் நகரில் 

590
அடைந்தி ளம்பிடி யாடல்போல் ஆடக கமலங் 
குடைந்து நான்மறைக் கொழுந்திடங் கொண்டுறை குறிப்பாற்
படர்ந்த பொன்மலை வல்லியைப் பணிந்துவெங் கதிரோன்
றொடர்ந்த வான்சுறா மதியமே யாதியாத் தொடங்கா

591
பெரும்பக னல்லூண் கங்குலூ ணுதவப் பெற்றவூ ணிலைமுதற் பல்லூண்
அரும்பொடி யெள்ளுண் சாந்திரா யணமா னைந்துபா னறியநீர் தருப்பை 
இரும்புத னுனிநீர் காலிவை நுகர்ந்து மியற்றரும் பட்டினி யுற்றும் 
வரம்புறு விராறு திங்களு நோற்று வாடிமேல் வருஞ்சுறா மதியில் 

59
சந்நிதி யடைந்து தாழ்ந்துநின் றிளமாந் தளிரடிக் காஞ்சிசூழ் கிடந்த 
மின்னிகர் மருங்குல் இழையிடை நுழையா வெம்முலைச் செம்மலர்க் காந்தட் 
பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்திற் பூரண மதிக்கலை முகத்தின் 
இன்னிசை யளிசூ ழிருட்குழற் கற்றை யிறைவியை யிம்முறை நினையா 

593
கோலயாழ்த் தெய்வம் பராய்க்கரங் குவித்துக் கொழுஞ்சுடர்ப் பசுங்கதிர் விளக்கம்
போல நூற் பொல்லம் பொத்து பொன் னிறத்த போர்வைநீத் தவிழ்கடி முல்லை
மாலைமேல் வீக்கிப் பத்தர்பின் கிடப்ப மலர்க்குழ றோய்சுவற் கிடத்திச் 
சேலைநேர் விழியாண் மாடகந் திரித்துத் தெறித்தனன் பண்ணிறிந் திசைப்பாள்

594
ஒளியா லுலகீன் றுயிரனைத்து மீன்போற் செவ்வி யுறநோக்கி
அளியால் வளர்க்கு மங்கயற்க ணன்னே கன்னி யன்னமே
அளியால் இமவான் றிருமகளா யாவி யன்ன மயில்பூவை 
தெளியா மழலைக் கிளிவளர்த்து விளையாட் டயருஞ் செயலென்னே

595
அண்டக் குவைவெண் மணற்சிறுசோ றாக்கித் தனியே விளையாடுங் 
கொண்டற் கோதாய் படி யெழுத லாகா வுருவக் கோகிலமே
கொண்டற் குடுமி யிமயவரை யருவி கொழிக்குங் குளிர்முத்தால்
வண்டற் குதலை மகளிரொடும் விளையாட்டயரும் வனப்பென்னே

596
வேத முடிமேல் ஆனந்த வுருவாய் நிறைந்து விளையாடு
மாத ரரசே முத்தநகை மானே யிமய மடமயிலே 
மாத ரிமவான் றேவிமணி வடந்தோய் மார்புந் தடந்தோளும்
பாத மலர்சேப் புறமிதித்து விளையாட் டயரும் பரிசென்னே

597
யாழியன் மொழியா லிவ்வழி பாடி யேத்தினா ளாகமெய் யுள்ளத் 
தாழிய வன்பின் வலைப்படு கருணை யங்கயற் கண்மட மானோர்
சூழிய நுழைமெல் லிளங்குழற் குதலைத் தொண்டைவாய் அகவைமூன் றெய்தி
வாழிளங் குழவி யாகியா லயத்து வந்துநின் றாள்வரங் கொடுப்பாள்

598
இறைஞ்சியஞ் சலித்தா டன்னையெம் மன்னை யாதுவேண் டினையென வென்றும்
நிறைந்தபே ரன்பு நின்னடிப் போதி னீங்கலா நிலைமைதந் தருளென்
றறைந்தன ளின்னும் வேண்டுவ தேதென் றருளவிம் மகவுரு வாகிச்
சிறந்துவந் தென்பால் அருள்சுரந் திருக்கத் திருவுளஞ் செய்யெனப் பணிந்தாள்

599
சிவபரம் பரையு மதற்குநேர்ந் தருள்வா டென்னவர் மன்னனாய் மலயத் 
துவசனென் றொருவன் வருமவன் கற்பின் றுணைவியாய் வருதியப் போதுன்
தவமக வாக வருவலென் றன்பு தந்தனள் வந்தவா றிதுவென்
றுவமையில் பொதியத் தமிழ்முனி முனிவர்க் கோதினான் உள்ளவா றுணர்ந்தார்

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்படலம் சுபம் 

05. திருமணப் படலம்

600
தரை புகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி தானே 
திரைசெய் நீர் ஞாலம் காத்த செயல் சிறிது உரைத்தேன் தெய்வ 
விரைசெய் பூம் கோதை மாதை விடையவன் மணந்து பாராண்டு 
அரசு செய்து இருந்த தோற்றம் அறிந்தவாறு இயம்பல் உற்றேன்.

601
காய் இரும் பரிதிப் புத்தேள் கலி இருள் உமிப்பச் சோதி 
பாய் இரும் குடை வெண் திங்கள் படர் ஒளி நீழல் செய்ய 
மாயிரும் புவனம் எல்லாம் மனுமுறை உலகம் ஈன்ற
தாய் இளம் குழவி ஆகித் தனி அரசு அளிக்கும் நாளில்.

602
மருங்கு தேய்ந்து ஒளிப்ப செம்பொன் வன முலை இறுமாப்பு எய்தக் 
கரும் குழல் கற்றை பானாள் கங்குலை வெளிறு செய்ய 
இரங்கு நல் யாழ் மென் தீம் சொல் இன்னகை எம் பிராட்டிக் 
கரும்கடி மன்றல் செய்யும் செவ்வி வந்து அடுத்தது ஆக.

603
பனிதரு மதிக் கொம்பு அன்ன பாவையைப் பயந்தாள் நோக்கிக் 
குனிதர நிறையப் பூத்த கொம்பனாய்க்கு இன்னும் கன்னி 
கனிதரு செவ்வித்து ஆயும் கடி மணப் பேறு இன்று என்னாத் 
துனி தரு நீராள் ஆகிச் சொல்லினாள் சொல்லக் கேட்டாள்.

604
அன்னை நீ நினைந்த எண்ணம் ஆம் பொழுது ஆகும் வேறு 
பின்னை நீ இரங்கல் யான் போய்த் திசைகளும் பெருநீர் வைப்பும் 
என்னது கொற்ற நாட்டி மீள் வள் இங்கு இருத்தி என்னாப் 
பொன் அவிர் மலர்க் கொம்பு அன்னாள் பொருக்கு என எழுந்து போனாள்.

605
தேம் பரி கோதை மாதின் திரு உளச் செய்தி நோக்கி 
ஆம் பரிசு உணர்ந்த வேந்தர் அமைச்சரும் பிறரும் போந்தார் 
வாம் பரி கடாவித் திண் தேர் வலவனும் கொணர்ந்தான் வையம் 
தாம் பரி அகல வந்தாள் ஏறினாள் சங்கம் ஆர்ப்ப.

606
ஆர்த்தன தடாரி பேரி ஆர்த்தன முருடு மொந்தை 
ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை 
ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை 
ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்.

607
வீங்கிய கொங்கை யார்த்த கச்சினர் விழி போல் தைப்ப 
வாங்கிய சிலை ஏறிட்ட கணையினர் வட்டத் தோல் வாள் 
தாங்கிய கையர் வை வேல் தளிர்க்கையர் பிணாத் தெய்வம் போல் 
ஒங்கிய வாயத் தாரும் ஏறினர் உடன் அத் திண்தேர்.

608
கிடைப்பன உருளால் பாரைக் ஈண்டு பாதலத்தின் எல்லை 
அடைப்பன பரந்த தட்டால் அடையவான் திசைகள் எட்டும் 
உடைப்பன அண்டம் உட்டி ஒற்றிவான் கங்கை நீரைத் 
துடைப்பன கொடியால் சாரி சுற்றுவ பொன் திண்தேர்கள்.

609
செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன 
அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால் 
கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து 
பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும் தடக்கையானை.

610
ஒலிய வார் திரையின் அன்ன ஒழுங்கின யோக மாக்கள் 
வலியகால் அடக்கிச் செல்லும் மனம் எனக் கதியில் செல்வ 
கலிய நீர் ஞாலம் காப்பான் கடை உக முடிவில் தோற்றம் 
பொலியும் வாம் புரவி ஒன்றே போல்வன புரவி வெள்ளம்.

611
காலினும் கடிது செல்லும் செலவினர் கடும் கண் கூற்றம் 
மேலினும் இகை உண்டாயின் வெகுண்டு வெம் கண்டு மீளும் 
பாலினர் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு ஆல 
வேலினர் வீயா வென்றி வீக்கிய கழல்கால் வீரர்.

612
எண் புதைத்து எழுந்த வீரர் இவுளி தேர் யானை வெள்ளம் 
மண் புதைத்தன பதாகை மாலை வெண் கவிகை பீலி 
விண் புதைத்தன நுண் தூளி வெயில் விடு பரிதி புத்தேள் 
கண் புதைத்தன பேர் ஓதை கடல் ஒலி புதைத்தது அன்றே.

613
தேர் ஒலி கலினப் பாய்மான் செல ஒலி கொலை வெண் கோட்டுக் 
கார் ஒலி வீரர் ஆர்க்கும் கனை ஒலி புனைதார்க் குஞ்சி 
வார் ஒலி கழல் கால் செம் கண் மள்ளர் வன் திண் தோள் கொட்டும் 
பேர் ஒலி அண்டம் எல்லாம் பிளந்திடப் பெருத்த அன்றே.

614
பரந்து எழு பூழி போர்ப்பப் பகலவன் மறைந்து முந்நீர் 
கரந்தவன் போன்றான் ஆகக் கங்குல் வந்து இறுத்தது ஏய்ப்பச் 
ரந்திரு நிறைய முத்தின் சோதி வெண் குடையும் வேந்தர் 
நிரந்த பூண் வயிர வாளும் நிறைநிலா எறிக்கும் மன்னோ.

615
தேர் நிரை கனலாய்ச் செல்லப் பரிநிரை திரையாய்த் துள்ள 
வார் முரசு ஒலியாய்க் கல்ல வாள் கலன் மீனாய் கொட்பத் 
தார் நிரை கவரிக் காடு நுரைகளாய் ததும்ப வேழம் 
கார் நிரை ஆகத் தானை கடல் வழிக் கொண்டது அன்றே.

616
கள் அவிழ் கோதை மாதர் எடுத்து எறி கவரிக் காடு 
துள்ள அந்தணர் வாயாசி ஒரு புறந்துவன்றி ஆர்ப்ப 
தௌ¢ விளி அமுத கீத ஒரு புறந்து இரண்டு விம்ம 
வள்ளை வார் குழை எம் அன்னை மணித் திண் தேர் நடந்தது அன்றே.

617
மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் 
மான வில் கொடியும் வண்ண மயில் தழைக் காடும் தோட்டுப் 
பால் நலம் கரும் கண் செவ்வாய் வெண்ணகை பசும் தோள் நிம்பத் 
தேன் அலம் பலங்கல் வேய்ந்த செல்வி தேர் மருங்கில் செல்ல.

618
மறை பல முகம் கொண்டு ஏத்தி வாய் தடுமாறி எய்ப்ப 
நிறை பரம்பரை நீ எங்கள் நிருபர் கோன் மகளாய் வையம் 
முறை செய்து மாசு தீர்ப்பாய் அடியனேன் முகத்து மாசும் 
குறை என நிழற்றும் திங்கள் கொள்கை போல் கவிகை காப்ப.

619
அம் கயல் நோக்கி மான்தேர் அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து 
வெம்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என்போன் 
நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையும் செல்லச் 
செம் கையில் பிரம்பு நீட்டிச் சேவகம் செலுத்திச் செல்ல.

620
அலகினால் கருவிச் சேனை ஆழ்கடல் அனைத்தும் தன்போல் 
மலர்தலை உலகம் அன்றி மகபதி உலகம் ஆதி 
உலகமும் பிறவும் செல்ல உலப்பிலா வலியது ஆக்கித் 
திலக வாண் நுதலாள் மன்னர் திருஎலாம் கவரச் செல்வாள்.

621
கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர் 
புயவலி அடங்க வென்று புழைக்கைமான் புரவ மான்தேர் 
பயன் மதி நுதல் வேல் உண்கண் பாவையர் ஆயம்ஓடு 
நயமலி திறையும் கொண்டு திசையின் மேல் நாட்டாம் வைத்தாள்.

622
வார் கழல் வலவன் தேரை வலிய கால் உதைப்ப முந்நீர் 
ஊர் கலன் ஒப்பத் தூண்ட உம்பர் கோன் அனிகத்து எய்திப் 
போர் விளையாடு முன்னர் புரந்தரன் இலைந்த தும்பைத் 
தார் விழ ஆற்றல் சிந்தத் தருக்கு அழிந்து அகன்று போனான்.

623
இழை இடை நுழையா வண்ணம் இடை இற ஈங்கு கொங்கைக் 
குழை இடை நடந்து மீளும் கொலைக்கணார் குழுவும் தான 
மழை கவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவும் கோவும் 
தழை கதிர் மணியும் தெய்வத் தருக்களும் கவர்ந்து மீண்டாள்.

624
இவ்வாறு மற்றைத் திசைக் காவலர் யாரையும் போய்த் 
தெவ் ஆண்மை சிந்தச் செருச் செய்து திறையும் கைக்கொண்டு 
அவ்வாறு வெல்வாள் என மூன்று அரண் அட்ட மேருக் 
கைவார் சிலையான் கயிலைக் கிரி நோக்கிச் செல்வாள்.

625
சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி 
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர் 
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே 
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.

626
வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப் 
போனாள் வந்தாள் என்று அருவிக் கண் புனலுக்கு அந்நீர் 
ஆனா ஒலியால் அனை வா என்று அழைத் தன் தேசு 
தான நகையால் தழீஇ எதிர் ஏற்பச் சென்றாள்.

627
கிட்டிப் பொருப்பைக் கிரியோடு கிரிகள் தாக்கி 
முட்டிப் பொருதால் என வேழ முழங்கிப் பாயப் 
புட்டில் புறத்தார் மறத்தார் கணை பூட்டு இல்லார் 
வட்டித்து உரு மேறு என ஆர்த்து வளைந்து கொண்டார்.

628
ஓடித் திருமா மலைக் காவலர் உம்பர் ஆர்க்கும் 
நாதிப் பணிதற்கு அரிது ஆகிய நந்தி பாதம் 
கூடிப் பணிந்து இத்திறம் கூறலும் கொற்ற ஏனம் 
தேடிக் கிடையான் உளம் தேர்ந்தன நந்தி எந்தை.

629
வென்றிக் கணத்தை விடுத்தான் கனன் மீது பெய்த 
குன்றிக் கணம் போல் சுழல் கண்ணழல் கொப்பளிப்பச் 
சென்றிக் கனைய மொழியாள் பெரும் சேனை ஓடும் 
ஒன்றிக் கடலும் கடலும் பொருது ஒத்தது அன்றெ.

630
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி 
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில் 
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக் 
காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.

631
எறிகின்றன ஓச்சுவ எய்வன ஆதி ஆகச் 
செறிகின்றன பல் படை செந் நிறப் புண்ணீர் மூழ்கிப் 
பறிகின்றனவும் பிழைக் கின்றனவும் பட்டுத் தாக்கி 
முறி கின்றனவும் முயன்றார் வினைப் போகம் ஒத்த.

632
தெரிசிக்க வந்த சில தேவர் சிறைப் புள் ஊர்தி 
வெருவிப் பறந்த ஒழிந்தோர் விலங்கு ஊர்தி மானம் 
கருவிப் படையால் சிதைப் பட்டன கலன் ஊர்தி 
குருதிப் புனலுக்கு அது கொற்றவை உண்டது என்ன.

633
பொரு கின்றது கண்டு இச் சாதரர் போகம் வீடு 
தருகின்றவனைத் தொழ வான் நெறி சார்ந்து நேரே 
வருகின்றவர் வேறு வழிக் கொடு போவர் அன்புக்கு 
உருகின்ற தளிர் மெல் அடியா ரொடு மூற்ற அஞ்சா.

634
திங்கள் படை செம் கதிரோன் படை சீற்றம் ஏற்ற 
அங்கிப் படை தீம் புனல் ஆன் படை நார சிங்க 
துங்கப் படை சிம்புண் நெடும் படை சூறைச் செல்வன் 
வெம் கண் படை பன்னக வெம்படை மாறி விட்டார்.

635
கொட்புற்று அமரா துமிக் கொள்கையர் தம்மின் நந்தி 
நட்பு உற்றவர் கைப் படை தூள் பட ஞான மூர்த்தி 
பெட்புற்று அருள வரும் எங்கள் பிராட்டி வெய்ய 
கட்புற்று அரவில் கணை மாரிகள் ஊற்றி நின்றாள்.

636
கையில் படை அற்றனர் கல் படை தொட்டு வீரர் 
மெய்யில் படுக என்று விடுக்கு முன் வீரக் கன்னி 
பொய்யில் படு நெஞ்சுடையார் தவம் போல மாய 
நெற்றியில் படு வச்சிர வேலை நிமிர்த்து வீசி.

637
துண்டம் படவே துணித்து அக்கண வீரர் தம்மைத் 
தண்டம் கொடு தாக்கினள் சாய்ந்தவர் சாம்பிப்போனார் 
அண்டங்கள் சரா சரம் யாவையும் தானே ஆக்கிக் 
கொண்டு எங்கு நின்றாள் வலி கூற வரம்பிற்று ஆமோ.

638
படை அற்று விமானமும் பற்று அற அற்றுச் சுற்றும் 
தொடை அற்று இகன் மூண்டு எழு தோள் வலிஅற்றுச் செற்றம் 
இடை அற்று வீர நகை அற்ற அடல் ஏறு போலும் 
நடை அற்று அடைவார் நிலை கண்டனன் நந்தி அண்ணல்.

639
உடையான் அடி தாழ்ந்து இவை ஓதலும் ஓத நீத்தச் 
சடையான் இள வாண் நகை செய்து தருமச் செம்கண் 
விடையான் சிலையான் இகல் வென்றி விளைக்கும் தெய்வப் 
படையான் எழுந்தான் அமர் ஆடிய பாரில் சென்றான்.

640
மேவி ஆக அப் பார் இடைப் பாரிட வீரரை அமர் ஆடி 
ஓவிலா வலி கவர்ந்தது மன்றினி உருத்து எவர் எதிர்ந்தாலும் 
தாவிலா வலி கவரவும் மடங்கலின் தளிப் பிணா என நிற்கும் 
தேவியார் திரு உருவமும் சேவகச் செய்கையும் எதிர் கண்டான்.

641
ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்தவெம் புலித் தோலும் 
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும் 
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும் 
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள்.

642
கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம் 
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப் 
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக் 
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்.

643
நின்ற மென் கொடிக்கு அகல் விசும்பு இடை அரன் நிகழ்த்திய திருமாற்றம் 
அன்று அறிந்த மூதறிவான் ஆம் சுமதி சீறடி பணிந்து அன்னாய் இக் 
கொன்றை அம் சடைய குழகனே நின்மணக் குழகன் என்றலும் அன்பு 
துன்ற நின்றவள் பார்த்து அருள் சிவ பரம் சோதி மற்று இது கூறும்.

644
என்று தொட்டு நீ திசையின் மேல் சயம் குறித்து  எழுந்து போந்தனை யாமும் 
அன்று தொட்டும் மதுரை விட்டு உனை விடாது அடுத்து வந்தனம் உன்னைத் 
தொன்று தொட்ட நான் மறை உரை வழிவரும் சோம வாரத் ஓரை 
நன்று தொட்ட நாண் மணம் செய வருதும் நின் நகர்க்கு நீ ஏகு என்றன்.

645
என்ற நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயம் சூழக் 
குன்றம் அன்னது ஓர் மேல் கொடு தூரியும் குரைகடல் என ஆர்ப்ப 
நின்ற தெய்வ மால் வரைகளும் புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி 
மன்றல் மா மதுரா புரி அடைந்தனள் மதிக் குல விளக்கு அன்னாள்.

646
மங்கை நாயகி மங்கலம் எதிர் கொள வந்து வான் இழிச் செல்வம் 
பொங்கு மாளிகை புகுந்தனள் ஆக மேல் புது மணத்திறம் தீட்டி 
எங்கும் ஓலை உய்த்து அமைச்சர் மங்க வினை  இயைவன அமைக்கின்றார் 
அங்கண் மா நகர் எங்கணும் கடி முரசு ஆனைமேல் அறைவித்தார்.

647
கன்னி தன் மண முரசு அறைதலும் கடிநகர் உறைபவர் கரை கெடத் 
துன்னிய உவகையர் கடவுளைத் தொழுகையர் உடலம் முகிழ்பு எழப் 
பன்னிய துதியினர் இயல் எழிலின் மகளிரை அழகு செய் பரிசு என 
இன்னிய எழில் வள நகர் எலாம் செயல்வினை அணிபெற எழில் செய்வார்.

648
கோதை ஒடும் பரி சந்தனக் குப்பை களைந்தனர் வீசுவார் 
சீதள மென்பனி நீர்கள் தூய்ச் சிந்தின பூழி  அடக்குவார் 
மாதரும்மைந்தரும் இறைமகள் மன்றல் மகிழ்ச்சி மயக்கினால் 
காதணி குழை தொடி கண்டிகை கழல்வன தெரிகிலர் தொழில் செய்வார்.

649
மங்கலம் என்று என வினவுவார் வருமதி நாள் என உரை செய்வார் 
தங்களை ஒல்லை தழீ இக் கொல்வார் தாங்கரு மோகை தலைக் கொள்வார் 
திங்களின் எல்லையும் ஆறு நாள் ஆறு உகம் என்று செலுத்துவார் 
நங்கை அரும் கடி காண வோ துடித்தன தோள்கள் நமக்கு என்பார்.

650
பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும் பெட்பு உறச் 
சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார் 
வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை பொன் குடம் 
பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில் பரப்புவார்.

651
நீள் இடை மணி மறுகு எங்கணும் நெடு நடைக்காவணம் நாட்டுவார் 
பாளை கொள் கமுகு சுவைக் கழை பழுக் குலைவாழை ஒழுக்குவார் 
கோள் நிறை கொண்டு என வாடிகள் கோத்து அணிவார் இசைக் கொடி நிரை 
வாள் அரி எழுபரி அடிபட மத்திகை நிரை என வைப்பர் ஆல்.

652
பூவொடு தண்பனி சிந்துவார் பொரி ஒடு பொன்சுணம் வீசுவார் 
பாவை விளக்கு நிறுத்துவார் பைந்தொடை பந்தரின் ஆற்றுவார் 
ஆவணம் என்ன வயிர்ப்புற அணி மறுகு எங்கணும்அரதனக் 
கோவையும் மரகத மாலையும் கோப்பு அமை ஆரமும் தூக்குவார்.

653
அடுகரி சிந்துரம் அப்புவார் அழல் மணி ஓடை மிலைச் சுவார் 
கடு நடை இவுளி கழுத்து அணி கால் அணி கலனை திருத்துவார் 
சுடர் விடு தேர் பரி பூட்டுவார் தொடை ஒடு கவரிகள் தூக்குவார் 
வடுவறு பொன்கல நவமணி மங்கல தீபம் இயற்றுவார்.

654
பழையன கலனை வெறுப்பர் ஆல் புதியன பணிகள் பரிப்பர் ஆல் 
குழை பனி நீர் அளை குங்குமம் குவிமுலை புதைபட மெழுகுவார் 
மெழுகிய வீரம் புலர்த்துவார் விரைபடு கலைவைகள் அப்புவார் 
அழகிய கண்ணடி நோக்குவார் மைந்தரை ஆகுலம் ஆக்குவார்.

655
அஞ்சனம் வேல் விழி தீட்டுவார் ஆடவர் மார்பு இடை நாட்டுவார் 
பஞ்சுகள் பாதம் இருத்துவார் பரிபுர மீது இருத்துவார் 
வஞ்சியர் தேறல் அருந்துவார் மருங்கு குறளாட வருந்துவார் 
கொஞ்சிய கனிமொழி கழறுவார் குழுவொடு குரவைகள் குழறுவார்.

656
கின்னர மிதுனம் எனச் செல்வார் கிளை கெழு பாண் ஒடு விறலியர 
கன்னியர் அரசை வணங்குவார் கடிமணம் எய்தும் களிப்பினால் 
இன்னிசை யாழொடு பாடுவார் ஈந்தன துகில் விரித்து ஏந்துவார் 
சென்னியின் மீது கொண்டாடுவார் தேறலை உண்டு செருக்குவார்.

657
மன்னவர் மகளிரும் மறையவர் மகளிரும் வந்து பொன் மாலையைத் 
துன்னினர் சோபனம் வினவுவார் தோகை தன் மணி அணி நோக்குவார் 
கன்னிதன் ஏவலர் வீசிய காசறை கர்ப்புர வாசமென் 
பொன்னறும் கலவையின் மெய் எல்லாம் புதைபட வளன் ஒடும் போவர் ஆல்.

658
அம் கனகம் செய் தசும்பின வாடை பொதிந்தன தோடு அவிழ் 
தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியின் உள்ளன 
கங்கையும் வாணியும் யமுனையும் காவிரியும் பல துறை தொறும் 
மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன.

659
அங்கு அவர் மனை தொறும் மணவினை அணுகிய துழனியர் என மறைப் 
புங்கவரின் இதுண அறுசுவை போனக மடுவினை புரிகுவார் 
இங்கு அடுவனபலி அடிகளுக்கு என அதிகளை எதிர் பணிகுவார் 
சங்கரன் அடியரை எதிர் கொள்வார் சபரியை விதி முறை புரிகுவார்.

660
இன்னண நகர் செயல் அணி செய இணை இலி மணமகன் மணவினைக் 
கன்னியும் அனையவள் என் இனிக் கடிநகர் செயும் எழில் வளனையாம் 
என்ன அரிய நகர் செயல் எழில் இணை என உரை செய்வது எவன் இதன் 
முன் இறை மகள் தமர் மண அணி மண்டப வினை செயும் முறை சொல்வாம்.

661
கருவி வான் முகில் ஊர்தியைப் பொருத நாள் கலை மதி மருமாட்டி 
செருவில் வாங்கிய விமான மாலைகள் எனத் தெய்வத வரை எல்லாம் 
மருவி அந்நகர் வைகிய தம் இறை மடமகள் தமை காண்பான் 
துருவி நின்று என நட்டனர் எட்டி வான் தொடு நிலை நெடும் தேர்கள்.

662
பளிக்கின் ஏழு உயர் களிறு செய்து அமைத்த பொன் படியது பசும் சோதி 
தௌ¤க்கும் நீலத்தின் ஆளிகள் நிரை மணித் தெற்றியது உற்றோர் சாய் 
வெளிக்குள் ஆடிய ஓவியப் பாவை போல் மிளிர் பளிங்கால் சோதி 
தளிர்க்கும் பித்தியத் இடை இடை மரகதச் சாளரத் அது மாதோ.

663
பல் உருச் செய்த பவளக் கால் ஆயிரம் படைத்து இந்திர நீலக் 
கல் உருத்தலைப் போதிய தடாகக் கவின் கொளுத்தரமேல 
தல் உருக்கிய செம் மணித் துலாத் அதால முதுடற் பசும் திங்கள் 
வில் உருக்கு அகன் மாடம் ஆகிய வேள்வி மண்டபம் செய்தார்.

664
முத்தில் பாளை செய்து அவிர் மரகதத்தின் ஆன் மொய்த்த பாசிலை துப்பின் 
கொத்தில் தீம் பழம் வெண் பொனால் கோழரை குயின்ற பூகம் உந்துப் பின் 
தொத்தில் தூங்கு பூச் செம் பொன்னால் பழுக்குலை தூக்கிப் பொன்னால் தண்டு 
வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாழையும் நிரை வித்தார்.

665
பித்தி மாதவி சண்பகம் பாதிரி பிறவும் மண்டபம் சூழப் 
பத்தியா வளர்த் தளிகள் வாய் திறந்து பண் பாட இன் மதுக் காலத்து 
தத்தியாய் மணம் கவர்ந்து சாளரம் தொறும் தவழ்ந்து ஒழுகு இளம் தென்றல் 
தித்தியா நிற்கும் மதுத்துளி தௌ¤த்திட செய்தனர் உய்யானம்.

666
வேள்விச் சாலையும் வேதியும் குண்டமும் மேகலை ஒடு தொல் நூல் 
கேள்விச் சார் பினால் கண்டு கண்ணாடி விடை கிளர் சுடர் சீவற்சம் 
நீள் வில் சாமரம் வலம்புரி சுவத்திக நிரைகுடம் என எட்டு 
வாள் விட்டு ஓங்கும் மங்கலம் தொழில் செய் பொறி வகையினால் நிருமித்தார்.

667
மணம் கொள் சாந்தொடு குங்குமப் போது அளாய் மான் மதம் பனி நீர் தோய்த்து 
இணங்கு சேறு செய் திருநிலம் தடவி வான் இரவி மண்டலம் நாணப் 
பணம் கொள் நாகமா மணிவிளக்கு இருகையும் பாவைகள் எடுத்து ஏந்தக் 
கணம் கொள் தாரகை என நவ மணி குயில் கம்பலம் விதானித்தார்.

668
செம் பொன் கோயில் முன் சேண் தொடு காவணம் திசை எலாம் விழுங்கச் செய் 
தம் பொன் பலிகை பாண்டில் வாய் முளைத்துத் தௌ¤த்து அம்புயத் அவன் ஆதி 
உம்பர் ஏற்ற பொன் கம்பல மேல் விரித்து உள்ளுறத் தவிசில் இட்டுத் 
தும்பை தாழ் சடை ஆன்று அமர்க்கு ஆடனம் சூழ விட்டு அதன் நாப்பண்.

669
கற்பகத் தரு வயிரவாள் அரிப் பிடர் கதுவப் பொன்குறடு ஏற்றி 
எற்படும் துகிரால் குடம் சதுரமா இயற்றிய எருத்தத் தூண் 
வில் படும் பளிக்குத் தரம் துப்பினால் விடங்க மேல் நிலை மூன்றாப் 
பொற்ப நூல் வழி விமானம் பல் மணிகளால் பொலியச் செய்து உள் ஆக.

670
அங்கம் ஆறுமே கால் களாய் முதல் எழுத்து அம்பொன் பீடிகை ஆகித் 
துங்க நான் மறை நூல்களே நித்திலம் தொடுத்து அசைத் தாம்பு ஆகி 
எங்கண் நாயகன் எம் பெருமாட்டி ஓடு இருப்பதற்கு உருக் கொண்டு 
தங்கினால் என நவமணி குயின்ற பொன் தவிசது சமைத்திட்டார்.

671
புரந்தரன் தரு கற்பகம் பொலந்துகில் பூண் முதலிய நல்கச் 
சுரந்தரும் பெறல் அமுத மை வகை அறு சுவை உணா முதலாகப் 
பரந்த தெய்வவான் பயப்பச் சிந்தாமணி பற்பலவும் சிந்தித்து 
இரந்து வேண்டுவ தரத்தர இட்டினார் இந்திர நகர் நாண.

672
தென்னர் சேகரன் திருமகள் திருமணத் திருமுகம் வரவேற்று 
மன்னர் வந்து எதிர் தொழுது கைக் கொண்டு தம் மணி முடி இசை ஏற்றி 
அன்ன வாசகம் கேட்டனர் கொணர்ந்து அவர்க்கு அரும் கலம் துகில் நல்கி 
முன்னர் ஈர்த்து எழு களிப்பு உற மனத்தினும் முந்தினர் வழிக் கொள்வார்.

673
கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர் பாஞ்சாலர் 
வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர் 
அங்கர் மாகதர் ஆரியர் நேரியர் அவந்தியர் வைதர்ப்பர் 
கங்கர் கொங்கணர் விராடர் கண் மராடர்கள் கருநடர் குருநாடர்.

674
கலிங்கர் சாவகர் கூவிளர் ஒட்டியர் கடாரர்கள் காந்தாரர் 
குலிங்கர் கேகயர் விதேகர்கள் பௌரவர் கொல்லர்கள் கல்யாணர் 
தெலுங்கர் கூர்ச்சரர் மச்சர்கள் மிலேச்சர்கள் செஞ்சையர் முதல் ஏனை 
புலம் கொள் மன்னரும் துறை தொறும் இடைந்து பார் புதை பட வருகின்றார்.

675
இத்தகைப் பல தேய மன்னவர்களும் எள் இடம் பெறாது ஈண்டிப் 
பைத்த ஆழிபோல் நிலமகள் முதுகு இறப் பரந்த தானையர் ஆகித் 
தத்த நாட்டு உள பலவகை வளன் ஒடும் தழீஇப் பல நெறி தோறும் 
மொய்த்து வந்தனர் செழியர் கோன் திருமகள் முரசு அதிர் மணமூதூர்.

676
வந்த காவலர் உழையர் சென்று உணர்த்தினர் வருக என வருகு உய்ப்பச் 
சந்த வாளரிப் பிடர் அணை மீது அறம் தழைத்து அருள் பழுத்து ஓங்கும் 
கந்த நாள் மலர்க் கொம்பினைக் கண்டு கண் களிப்பு உற முடித்தாமம் 
சிந்த வீழ்ந்து அருள் சுரந்திடத் தொழுது போய்த்திருந்து தம் இடம் புக்கார்.

677
வரை வளங்களும் புறவினில் வளங்களும் மருதத் தண் பணை வேலித் 
தரை வளங்களும் சலதி வாய் நடைக்கலம் தரு வளங்களும் ஈண்டி 
உரை வரம்பு அற மங்கலம் பொலிந்தது இவ்வூரினில் நால் வேதக் 
கரை கடந்தவன் திருமணம் செயவரு காட்சியைப் பகர்கின்றேன்.

678
ஏக நாயகி மீண்டபின் ஞாட்பிகந்து இரசத கிரி எய்தி 
நாக நாயக மணி அணி சுந்தர நாயகன் உயிர்க்கு எல்லாம் 
போக நாயகன் ஆகிப் போகம் புரி புணர்ப்பு அறிந்து அருணந்தி 
மாக நாயகன் மால் அயன் உருத்திரர் வரவின் மேல் மனம் வைத்தான்.

679
சங்கு கன்னனை ஆதிய கணாதிபர் தமை விடுத்து தனன் அன்னார் 
செம் கண் ஏற்றவர் மால் அயன் முதல் பெரும் தேவர் வான் பதம் எய்தி 
எங்கள் நாயகன் திருமணச் சோபனம் இயம்பினார் அது கேட்டுப் 
பொங்கு கின்ற பேர் அன்பு பின் தள்ளுறப் பொள் என வருகின்றார்.

680
அஞ்சு கோடி யோசனை புகைந்து திரு மடம் கழன்றவர் தமைப் போலீர் 
அஞ்சு தீ உருத்திரர் புடை அடுத்தவர் அழல் கணால் பூதங்கள் 
அஞ்சு நூறுருத்திரர் அண்டத்து உச்சியர் அரி அயன் முதல் தேவர் 
அஞ்சும் ஆணையும் ஆற்றலும் படைத்தவர் அடு குறள் படைவீரர்.

681
புத்தி அட்டகர் நாலிரு கோடி மேல் புகப் பெய்த நரகங்கள் 
பத்து இரட்டியும் காப்பவர் பார் இடப் படை உடைக்கூர் மாண்டர் 
சத்தி அச்சிவ பரஞ்சுடர் உதவிய சத உருத்திரர் அன்னார் 
உய்த்து அளித்த ஈர் ஐம்பது கோடியர் உருத்திரர் கணநாதர்.

682
பட்ட காரிவாய் அரவு அணிபவர் பசுபதி உருத்திரர் ஆதி 
அட்ட மூர்த்தி கண் மேருவின் அவிர்சுடர் ஆடகர் தோள் ஏந்தும் 
மட்ட அறா மலர் மகன் செருக்கு அடங்கிட  மயங்கியவிதி தேற்ற 
நிட்டையால் அவன் நெற்றியில் தோன்றிய நீலலோகித நாதர்.

683
பாலம் ஏற்ற செந்தழல் விழி உருத்திரர் பதினொரு பெயர் வாகைச் 
சூலம் ஏற்ற கங்காள கபாலியர் துரகத நெடும் காரி 
நீலம் ஏற்ற பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர் நிருவாணக் 
கோலம் ஏற்றவர் எண்மர் ஞாளிப் புறம் கொண்ட கேத்திர பாலர்.

684
செய்ய தாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத்து 
ஐயன் வாசவன் ஆதி எண் திசைப்புலத்து அமரர் எண் வசு தேவர் 
மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண் மருத்துவர் இருவோர்வான் 
வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு அருக்கர் ஓர் வெண் சுடர் மதிச் செல்வன்.

685
கையும் கால்களும் கண்பெற்றுக் கதி பெற்ற கடும்புலி முனிச் செல்வன் 
பை அராமுடிப் பதஞ்சலி பால் கடல் பருகி மாதவன் சென்னி 
செய்ய தாள் வைத்த சிறு முனி குறு முனி சிவம் உணர் சனகாதி 
மெய் உணர்ச்சி ஓர் வாமதேவன் சுகன் வியாதனார் அதன் மன்னோ.

686
எழுவர் அன்னையர் சித்தர் விச்சாதர் இயக்கர் கின்னரர் வேத 
முழுவரம் புணர் முனிவர் யோகியர் மணி முடித்தலைப் பல நாகர் 
வழு இல் வான் தவ வலி உடை நிருதர் வாள் வலி உடை அசுரேசர் 
குழுவொடும் பயில் பூத வேதாளர் வெம் கூளிகள் அரமாதர்.

687
ஆண்டினோடு அயனம் பருவம் திங்கள் ஆறு இரண்டு  இரு பக்கம் 
ஈண்டு ஐம் பொழுது யோகங்கள் கரணங்கள் இராப்பகல் இவற்றோடும் 
பூண்ட நாழிகை கணம் முதல் காலங்கள் பொருகடல் அதிதிக்கு 
நீண்ட மால் வரைதிக்கு மேகம் மின் நிமிர்ந்த ஐயம் பெரும் பூதம்.

688
மந்திரம் புவனங்கள் தத்துவம் கலை வன்னங்கள் பதம் வேதம் 
தந்திரம் பல சமயநூல் புறம் தழீஇச் சார்ந்த நூல்தரும் ஆதி 
முந்திரங்கிய சதுர்விதம் சரியையே முதலிய சதுட் பாதம் 
இந்திரங்கு நீர் முடியவர் அடியவர் இச்சியா எண் சித்தி.

689
ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம் அனிகத்துள் 
ஆயிரம் கதிர் அனையராய் உருத்திரர் அந்தரத்தவர்  அண்டம் 
ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து ஆர்ப்ப 
ஆயிரம் சதகோடி யோசனை வழி அரைக் கணத்து இடைச் செல்வார்.

690
சித்தம் தேர் முனி வேந்தரும் தேவரும் சிவன் உருத் தரித்தோரும் 
தத்தம் தேர் முதல் ஊர்தியர் வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக் 
கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று 
அத்தம் தேரிடை ஆள் பங்கன் அணிவரைக் அணியராய் வருகின்றார்.

691
இழிந்த ஊர்தியர் பணிந்து எழும் யாக்கையர் இறைபுகழ் திருநாமம் 
மொழிந்த நாவினர் பொடிப்பு எழும் மெய்யினர் முகிழ்த்த கை முடியேறக் 
கழிந்த அன்பினர் கண் முதல் புலம் கட்கும் கருணை வான் சுவை ஊறப் 
பொழிந்த ஆனந்தத் தேன் உறை திருமலைப் புறத்து வண்டு என மொய்த்தார்.

692
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி 
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப் 
பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும் 
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.

693
வந்த வானவர் புறநிற்ப நந்தி எம் வள்ளல் அங்கு உள் எய்தி 
எந்தை தாள் பணிந்து ஐய விண்ணவர் எலாம் ஈண்டினர் என ஈண்டுத் 
தந்தி என்ன வந்து அழைத்து வேத்திரத்தினால் தராதரம் தெரிந்து உய்ப்ப 
முந்தி முந்தி வந்து இறைஞ்சினர் சேவடி முண்டக முடி சூட.

694
தீர்த்தன் முன் பணிந்து ஏத்து கின்றார்களில் சிலர்க்குத் தன் திருவாயின் 
வார்த்தை நல்கியும் சிலர்க்கு அருள் முகிழ் நகை வழங்கியும் சிலர்க்குக் கண் 
பார்த்து நீள் முடி துளக்கியும் சிலர்க் அருள் பரி சிறந்து எழுந்து அண்டம் 
காத்த கண்டன் ஓர் மண்டபத்து இடைப்புக்குக் கடி மணக் கவின் கொள்வான்.

695
ஆண்ட நாயகன் திரு உளக் குறிப்பு உணர்ந்து அளகை நாயகன் உள்ளம் 
பூண்ட காதல் மேல் கொண்டு எழு அன்பும் தன் புனித மெய்த் தவப் பேறும் 
ஈண்ட ஆங்கு அணைந்து எண் இலா மறைகளும் இருவரும் முனி வோரும் 
தீண்டரும் திரு மேனியைத் தன்கையால் தீண்டி மங்கலம் செய்வான்.

696
பூந்துகில் படாம் கொய் சகத் தானைபின் போக்கு கோவணம் சாத்தி 
ஏந்தி இரட்டை ஞாண் பட்டிகை இறுக்கி வண்டு இரைக்கும் நாள் மலர்க் குஞ்சி 
வேய்ந்து கற்பகப் புது மலர்ச் சிகழிகை இலைந்து நீறு அணி மெய்யில் 
சாந்த மான் மதம் தண் பனி நீரளாய்த் தடக்கையான் அட்டித்தான்.

697
இரண்டு செம் சுடர் நுழைந்து இருந்தால் என இணை மணிக் குழைக் காதில் 
சுருண்ட தோடு பொன் குண்டலம் திணி இருள் துரந்து தோள் புறம் துள்ள 
மருண்ட தேவரைப் பரம் என மதிப்பவர் மையல் வல் இருண் மான 
இருண்ட கண்ட மேல் முழுமதி கோத்து என இணைத்த கண்டிகை சாத்தி.

698
வலம் கிடந்த முந்நூல் வரை அருவியின் வயங்கு மார்பிடைச் சென்னித் 
தலம் கிடந்த வெண் திங்கள் ஊற்று அமுது எனத் தரளம் ஆல் இலை சாத்தி 
இலங் கிடந்த மாலிகைப் பரப்பிடை இமைத்து இருண் முகம் பிளந்து ஆரம் 
கலம் கிடந்த பால் கடல் முளைத்து எழும் இளம் கதிர் எனக் கவின் செய்து.

699
திசை கடந்த நாற் புயங்களில் பட்டிகை சேர்த்து வாள் எறிக்கும் தோள் 
நசை கடந்த நல்லார் மனம் கவர்ந்து உயிர் நக்க அங்கதம் சாத்தி 
அசை கடங் கலுழ் வாரண உரிவை நீத்து அணிகொள்  உத்தரியம் பெய் 
திசை கடந்த மந்திர பவித்திர எடுத்து எழில் விரல் நுழைவித்து.

700
உடுத்த கோவண மிசை பொலம் துகில் அசைத்து உரகம் ஐந்தலை நால 
இடுத்த போல் வெயின் மணித்தலைக் கொடுக்கு மின் விட இரும்புறம் தூக்கித் 
தொடுத்த தார் புயம் தூக்கி நூபுரம் கழல் சொல் பதம் கடந்து அன்பர்க்கு 
அடுத்த தாள் இட்டு இருநிதிக் கோமகன் அரும் தவப் பயன் பெற்றான்.

701
செம் கண் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர்க்கும் யாவர்க்கும் 
மங்கலம் தரு கடைக் கணா அகன் ஒரு மங்கலம் புனைந்தான் போல் 
சங்கை கொண்டு உகும் போதரன் முதுகின் மேல் சரணம் வைத்து எதிர் போந்த 
துங்க மால் விடை மேல் கொடு நடந்தனன் சுரர்கள் பூ மழை தூர்த்தார்.

702
அந்தரத் தவர் அந்தர துந்துபி ஐந்தும் ஆர்த்தனர் சூழ 
வந்த அரக்கரும் இயக்கரும் பூதரும் மங்கல இயம் கல்லக் 
கொந்தலர்க் கரும் குழல் அர மடந்தையர் கொளைவல் விஞ்சையர் தாளம் 
தந்து அசைத்திட மலர்ந்த பூம் கொம்பர் போல் சாய்ந்து அசைந்தனர் ஆட.

703
துங்கம் ஆயிரம் கருவி ஆயிரம் மலைத் தூங்கி இருண் முழை தோறும் 
சிங்கம் ஆயிரம் வாய் திறந்து ஆர்த்து எனச்சிரங்கள் ஆயிரம் திண் தோள் 
அங்கம் ஆயிரம் ஆயிரம் உடையவன் ஆயிரம் முகம் தோறும் 
சங்கம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் தடக்கையும் பிடித்து ஊத.

704
போக்கு மாயவன் புணர்ப்பையும் இருள் மலப்புணர்ப்பையும் கடந்து எம்மைக் 
காக்கும் நாயகன் அருச்சனை விடாது அருள் கதி அடைந்துளவாணன் 
தூக்கு நேர் பட ஆயிரம் கரங்களால் தொம் என முகம் தொறும் 
தாக்க வேறு வேறு எழுகுட முழா ஒலி தடம் கடல் ஒலி சாய்ப்ப.

705
முனிவர் அஞ்சலி முகிழ்த்த செம் கையினர் மொழியும் ஆசியர் உள்ளம் 
கனி அரும்பிய அன்பினர் பரவ உட் கருத்து ஒரு வழிக் கொண்டோர் 
துனிவரும் கண நாதர் கொட்டதிர் கரத் துணையினர் மழைபோலப் 
பனி வரும் கணர் ஆடிய தாளினர் பாடுநாவினர் ஏத்த.

706
இந்திரன் மணிக் களாஞ்சி கொண்டு ஒரு மருங்கு எய்த மெல் இலை வாசம் 
தந்தில் அங்கு பொன் அடைப்பை கொண்டு ஈசன் ஒர் சார் வர மருத்துக் கோ 
வந்திரம் ஒலி ஆலவட்டம் பணி மாறாவா அழல் தூபம் 
தந்து நேர நீர்க் கடவுள் பொன் கோடிகம் தாமரைக் கரம் தூக்க.

707
நிருதி ஆடி கொண்டு எதிர்வர அடிக்கடி நிதி முகத்து அளகைகோன் 
கருதி ஆயிரம் சிதறிடத் தண்டி நன்கு ஆம் சுகர் வினை செய்யப் 
பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் பல்மணி விளக்கு ஏந்தச் 
சுருதி நாயகன் திருவடி முடியின் மேல் சுமந்து பின்புறம் செல்ல.

708
கங்கை காவிரி ஆதிய நவநிதிக் கன்னியர் குளிர் தூங்கப் 
பொங்குவார் திரைக் கொழுந்து எனக் கவரிகள் புரட்ட வெண் பிறைக் கீற்றுத் 
துங்க வாள் எயிற்று இருள் உடல் குழி விழிச்சுடர் அழல் செம்பங்கிச் 
சங்கவார் குழைக் குறிய குண்டோதரன் தண் மதி குடை தாங்க.

709
இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின வெண் கொடி ஞாலம் 
முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம் 
துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து சேவகம் செய்யும் 
கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக்  கொடி புடை பெயர்ந்து ஆட.

710
கண் நுதல் பிரான் மருங்கு இரு கடவுளர் கப்பு விட்டு என தோன்றும் 
வண்ண முத்தலைப் படை எடுத்து ஒரு குட வயிறு உடைப் பெரும் பூதம் 
பண்ண அப்பதி நெண் படைக் கலமும் தன் பக்கமாச் சேவிப்ப 
அண்ணன் முச்சுடர் முளைத்து ஒரு வரை நடந்து அனையது ஓர் மருங்கு எய்த.

711
பந்த நான் மறைப் பொருள் திரட்டு என வட பாடல் செய்து எதிர் புட்ப 
தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல் விடத்து எதிர் நோக்கும் 
அந்தம் ஆதி இலான் நிழல் வடிவமா ஆடியின் நிழல் போல 
வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து ஏந்த.

712
அன்னத் தேரினன் அயன் வலப்பாங்கர் அராவலி கவர் சேன 
அன்னத் தேரினன் மால் இடப் பாங்கரு மலர்க் கரம் குவித்து ஏத்தப் 
பொன்னத் தேமலர் கொன்றையான் வெள்ளி அம் பொருப்பொடு எழீஇப் போந்தால் 
என்ன தேர் அணி மதுரை மா நகர்ப் புறத்து எய்துவன் அவ்வேலை.

713
தேவர்கள் தேவன் வந்தான் செம் கண் மால் விடையான் வந்தான் 
மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான் வந்தான் 
பூவலர் அயன் மால் காணாப் பூரண புராணன் வந்தான் 
யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம் ஆர்ப்ப.

714
பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர் ஏனை 
மண்ணினுக்கு அரசர் சேனை மன்னவர் பிறரும் ஈண்டிக் 
கண்ணினுக்கு இனியான் தன்னைக் கண்டு எதிர் கொண்டு தாழ 
விண்ணினுக்கு அரசன் ஊரின் வியத்தகு நகரில் புக்கான்.

715
முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி 
அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக 
நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன் 
துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.

716
தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின் 
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம் 
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம் 
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார்.

717
எம்மை நீர் விடுதிர்ஏ யோ என்ப போல் கலையும் சங்கும் 
விம்ம நாண் மடனும் உங்கள் நெஞ்சுடை வெளியாறாக 
உம்மை நீத்து ஓடும் அந்தோ உரைத்தன முரைத் தோம் என்று 
தம்மை நூபுரம் கால் பற்றித் தடுப்ப போல் ஆர்ப்பச் சென்றார்.

718
கடி அவிழ் கமலக் காடு பூத்தது ஓர் கருணைவாரி 
அடிமுதல் முடி ஈறு ஆக அலர் விழிக் குவளை சாத்திக் 
கொடிய செம் பதுமப் போது குழல் இசை சூடுவார் போல் 
தொடி அணி கரங்கள் கூப்பித் துதி என இனைய சொல்வார்.

719
நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு என்பர் 
மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான் என்பர் 
அங் கடி மதுரை என்னோ ஆற்றிய தவந்தான் என்பார் 
இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம் நோற்றோம் என்பார்.

720
தென்னவன் வருந்தி மேல் நாள் செய்தவப் பேறாப் பெற்ற 
தன் மகள் வதுவை காணத்தவம் செய்தான் இலனே என்பார் 
கன்னிதன் அழகுக் ஏற்ற அழகன் இக் காளை என்பார் 
மன்னவன் இவனே அன்றி வேறு இலை மதுரைக்கு என்பார்.

721
நங்கை தன் நலனுக்கு ஏற்ப நம்பியைத் தந்தது இந்தத் 
துங்கமா மதி நூல் வல்ல சுமதி தன் சூழ்ச்சி என்பார் 
அங்கவள் தவப் பேறு என்பார் அன்னை தன் கன்னிக்கு அன்றி 
இங்கு இவண் மருகன் ஆக எத்தவம் உடையாள் என்பார்.

722
பூந்துகில் நெகிழ்ப்பர் சூழ்வர் புணர் முலை அலைப்பர் பூசு 
சாந்தினை உகுப்பர் நாணம் தலைக் கொண்டார் போலச் சாய்வார் 
கூந்தலை அவிழ்ப்பர் வாரிக் கூட்டுவர் முடிப்பர் மேனி 
மாந்தளிர் எங்கு மாரன் வாளிகள் புதையச் சோர் வார்.

723
தண்ணளி ஒழுக்கம் சார்ந்த குணத்தினைச் சார்ந்தும் இந்த 
வண்ண மென் மலர்கள் என்னே வாளியாய்த் தைத்த என்பார் 
கண் நறும் கூந்தல் வேய்ந்த கடி அவிழ் நீலத்தாரும் 
வெண்நகை அரும்பு முல்லை தாமமும் வெறுத்து வீழ்ப்பார்.

724
விம்மிச் செம் மாந்த கொங்கை மின் அனார் சிலர் வில் காமன் 
கை மிக்க கணைஏறுண்டு கலங்கிய மயக்கால் தங்கள் 
மைம் மிக்க நெடும் கண் மூரல் வதனமும் அவன் அம்பு என்றே 
தம்மில்தம் முகத்தை நோக்கார் தலை இறக்கிட்டுச் செல்வார்.

725
பற்றிய பைம் பொன் மேனிப் பசப்பது தேறார் அண்ணல் 
ஒற்றை மால் விடையின் மேல் கொண்டு இருந்து நம் உளத்து மேவப் 
பெற்றனம் இது என் கொல் மாயம் பேதை ஈர் பெருமான் நீண்ட 
கற்றைவார் சடைப் பூம் கொன்றை இது அன்றோ காண்மின் என்பார்.

726
திங்கள் என்று எழுந்து நம்மைச் சுடுவது என் செம் தீ என்பார் 
புங்கவன் சென்னி மீதும் கிடப்பதே போலும் என்பார் 
அங்கு அவற்கு இந்த வெப்பம் இலை கொல் என்று அயிற்பார் ஆற்றக் 
கங்கை நீர் சுமந்தான் என்பார் அதனையும் காண்மின் என்பார்.

727
கலையொடு நாணம் போக்கிக் கருத்தொடு வண்ணம் வேறாய் 
உலை யொடு மெழுக்கிட்டு என்ன உருகு கண்ணீரர் ஆகிக் 
கொலையொடு பயில் வேல் கண்ணார் குரிசிறன் பவனி நோக்கி 
அலை யொடு மதியம் சூடும் ஐயன் மெய் அன்பர் ஒத்தார்.

728
நட்டவர்க்கு இடுக்கண் எய்த நன்றி கொன்றவர் போல் கையில் 
வட்டவாய் தொடியும் சங்கும் மருங்கு சூழ் கலையும் நீங்க 
இட்ட பொன் சிலம்பிட்டு ஆங்கே நன்றியின் இகவார் போல்கால் 
ஒட்டியே கிடப்ப நின்றார் உகுத்த பூம் கொம்பர் அன்னார்.

729
மின்னகு வேல் கணாள் ஓர் விளங்கு இழை விடை மேல் ஐயன் 
புன்னகை போது நோக்கப் போது முப் புரமும் வேனின் 
மன்னவன் புரமும் சுட்ட அல்லவோ கெட்டேன் வாளா 
இன்னவை சுடாது போமோ ஏழையேம் புரமும் என்றாள்.

730
உழை விழி ஒருத்தி தன் கண் உரு வெளி ஆகித் தோன்றும் 
குழகனை இரண்டு செம் பொன் கொங்கையும் ஒன்றாய் வீங்கத் 
தழுவுவாள் ஊற்றம் காணா தடமுலை இரண்டே ஆகி 
இழை உடை கிடக்க நீங்கி இருக்கை கண்டு இடைபோல் எய்த்தாள்.

731
வார் இரும் கொங்கையாள் ஒர் மாதரால் வானோர் உய்யக் 
கார் இருள் விடம் உண்ட அன்று கறுத்ததே அன்று கொன்றைத் 
தார் இரும் சடையார் கண்டம் ஐயன் மீர் தமது நெஞ்சம் 
கார் இரும்பு என்றெ காட்டக் குறி இட்டக் கறுப்பே என்றாள்.

732
பொன்னவிர் சடையான் முன்னே போனது என் நெஞ்சு தூது ஆய் 
அன்னது தாழ்த்தது என் என்று அழுங்குவாள் ஒருத்தி கெட்டேன் 
என்னது நெஞ்சும் போனது என் என்றனள் ஒருத்தி கேட்ட 
மின் அனாள் வேல் கண் சேந்தாள் விளைத்தனள் அவளும் பூசல்.

733
செப்பு இளம் கொங்கையாள் ஓர் தெரிவை நீர் திருநோக்கு எம்பால் 
வைப்பது என் மதன் போல் எம்மைச் சுடுவதே அதனுக்கு ஆவி 
அப்பொழுது அளித்தால் போல் எம் ஆவியும் அளித்தாள் இன்று 
மெய்ப் புகழ் உமக்கு உண்டு இன்றெல் பெண் பழி விளையும் என்றாள்.

734
கவன மால் விடையான் தன்னைக் கடைக் கணித்திலன் என்று ஆங்குஓர் 
சுவணவான் கொடியோர் ஓவத் தொழில் வல்லான் குறுக நோக்கி 
இவனை நீ எழுதித் தந்தால் வேண்டுவ ஈவன் என்றாள் 
அவனை யார் எழுத வல்லார் என்றனன் ஆவி சோர்ந்தாள்.

735
வலத்து அயன் வரவு காணான் மாலிடம் காணாள் விண்ணோர் 
குலத்தையும் காணாள் மண்ணோர் குழாத்தையும் காணாள் ஞானப் 
புலத்தவர் போலக் கண்ட பொருள் எலாம் மழுமான் செம்கைத் 
தலத்தவன் வடிவாக் கண்டாள் ஒருதனித்து ஐயன் மாது.

736
முன் பெற்றம் காலில் செல்ல வண்ணலை முன்போய் காண்பான் 
பின் பற்றி ஆசைப் பாசம் பிணித்து எழ ஓடு வாள் ஓர் 
பொன் பெற்ற முலையாள் கொம்பர் அகுமலர் போலத் தாளின் 
மின் பெற்ற காஞ்சி தட்ப விலங்கொடு நடப்பாள் ஒத்தாள்.

737
விதுக்கலை இலைந்து செம் கண் விடையின் மெல் வரும் ஆனந்த 
மதுக் கடல்தனைக் கண் வாயான் முகந்து உண்டு மகளிர் எல்லாம் 
புதுக்கலை சரிவது ஓரார் புரிவளை கழல்வது ஓரார் 
முதுக் குறை அகல்வது ஓரார் மூழ்கினார் காம வெள்ளம்.

738
பைத்தழகு எறிக்கு மாடப் பந்தி மேல் நின்று காண்பார் 
கைத்தலம் கூப்பி ஆங்கே கண்களும் நோக்கி ஆங்கே 
சித்தமும் குடிபோய்ச் சொல்லும் செயலும் மாண்டு அம்கண் மாண 
வைத்த மண் பாவை ஓடு வடிவுவேறு அற்று நின்றார்.

739
அன்பட்ட புரமும் காமன் ஆகமும் சுட்டதீ இம் 
மின் பட்ட சடிலத்து அண்ணல் மெய் என்பது அறியார் நோக்கிப் 
பொன் பட்ட கலனும் மெய்யும் பொரிகின்றார் அவனைப் புல்லின் 
என் பட்டு விடுமோ ஐய ஏழையர் ஆவி அம்மா.

740
கொடிகள் பூத்து உதிர்ந்த போதில் கொம்பனார் கலையும் சங்கும் 
தொடிகளும் சுண்ணத்தூளும் சுரர் பொழி மலரும் நந்தி 
அடிகள் கைப் பிரம்பு தாக்கச் சிந்திய வண்ட வாணர் 
முடிகளின் மணியும் தாரும் குப்பையாய் மொய்த்தவீதி.

741
துன்னிய தருப்பை கூட அரசிலை துழாவித் தோய்த்துப் 
பொன் இயல் கலச நன்னீர் பூசுரர் வீசும் அன்னார் 
பன்னியர் வட்டமாக வானவில் பதித்தால் என்ன 
மின்னிய மணி செய் நீரா சனக்கலம் விதியால் சுற்ற.

742
கொடி முரசு சாடி செம் பொன் குட மணி நெய்யில் பூத்த 
கடி மலர் அனைய தீபம் அங்குசம் கவரி என்னும் 
படிவ மங் கலங்கள் எட்டும் பரித்து நேர் பதுமக் கொம்பர் 
வடிவினார் வந்து காட்ட மாளிகை மருங்கில் செல்வான்.

743
செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம் காட்டும் 
துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும் 
முப்புரம் கடந்தான் தன்னை மும் முறை இயங்கள் ஏங்க 
கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை பூத்தான்.

744
கோயில் முன் குறுகலோடும் ஐம்புலக் குறும்பு தேய்த்த 
தூய நால் வேதச் செல்வர் சுவத்திகள் ஓத நந்தி 
சேஇரும் தடக்கைப் பற்றிச் செம்கண் ஏறு இழிந்து நேர்ந்து 
மாயனும் அயனும் நீட்டும் மலர்க்கரம் இருபால் பற்றி.

745
எதிர்ந்தரு மறைகள் காணாது இளைத்து அடி சுமந்து காணும் 
முதிர்ந்த அன்பு உருவம் ஆன பாதுகை முடிமேல் சாத்தி 
பதிந்தவர் தலை மேல் கொண்டு பாசவல் வினை தீர்த்து உள்ளம் 
பொதிர்ந்து பேர் இன்பம் நல்கும் பொன்னடிப் போது சாத்தி.

746
பையா உரியின் அன்ன நடைப் படாம் பரப்பிப் பெய்த 
கொய் அவிழ் போது நீத்தம் குரைகழல் அடி நனைப்பத் 
தெய்வ மந்தார மாரி திரு முடி நனைப்பத் தென்னர் 
உய்ய வந்து அருளும் ஐயன் உள் எழுந்து அருளும் எல்லை.

747
மங்கல மகளி ரோடும் காஞ்சன மாலை வந்து 
கங்கையின் முகந்த செம்பொன் கரக நீர் அனையார் ஆக்கத் 
திங்கள் அம் கண்ணி வேய்ந்த சிவபரம் சோதி பாத 
பங்கயம் விளக்கி அந்நீர் தலைப் பெய்து பருகி நின்றாள்.

748
பாத நாள் மலர் மேல் ஈரம் புலர வெண் பட்டான் நீவிச் 
சீத மென் பனி நீராட்டி மான் மத சேறு பூசித் 
தாது அவிழ் புது மந்தாரப் பொன் மலர் சாத்திச் சென்னி 
மீது இரு கரங்கள் கூப்பி வேறு நின்று இதனைச் சொன்னாள்.

749
அருமையால் அடியேன் பெற்ற அணங்கினை வதுவை செய்தித் 
திருநகர் திருவும் கன்னித் தேயமும் கைக் கொண்டாள் என்று 
உரை செய்தாள் அதற்கு நேர்வார் உள் நகை உடையர் ஆகி 
மருகன் ஆரியங்கள் ஆர்ப்ப வதுவை மண்டபத்தைச் சேர்ந்தார்.

750
அருத்த நான் மறைகள் ஆர்ப்ப அரி மணித் தவிசில் ஏறி 
நிருத்தன் ஆங்கு இருந்து சூழ நின்ற மால் அயனை ஏனை 
உருத்திராதி யரை பின்னும் ஒழிந்த வானவரைத் தத்தம் 
திருத்தகு தவிசின் மேவத் திருக் கடை நாட்டம் வைத்தான்.

751
விண்டல வானோர் ஏனோர் இடைதலான் ஞாலச் செல்வி 
பண்டையள் அன்றி இன்று பரித்தனள் பௌவம் ஏழும் 
உண்டவன் தன்னைத் தான் இன்று உத்தரத்து இருத்தினானோ 
அண்டர் நாயகன் தன் ஆனை வலியினோ அறியேம் அம்மா.

752
மாமணித் தவிசில் வைகி மணவினைக்கு அடுத்த ஓரை 
தாம் வரும் அளவும் வானத் தபனிய மலர்க் கொம்பு அன்னார் 
காமரு நடன நோக்கிக் கருணை செய்து இருந்தான் இப்பால் 
கோமகள் வதுவைக் கோலம் புனைதிறம் கூறல் உற்றேன்.

753
மாசு அறுத்து எமை ஆனந்த வாரி நீராட்டிப் பண்டைத் 
தேசு உரு விளக்கவல்ல சிவபரம் பரையைச் செம்பொன் 
ஆசனத்து இருத்தி நானம் அணிந்து குங்குமச் சேறு அப்பி 
வாச நீராட்டினார் கண் மதிமுகக் கொம்பர் அன்னார்.

754
முரசொடு சங்கம் ஏங்க மூழ்கிநுண் தூசு சாத்தி 
அரசியல் அறத்திற்கு ஏற்ப அந்தணர்க்கு உரிய தானம் 
விரை செறி தளிர்க்கை ஆர வேண்டுவ வெறுப்பத் தந்து 
திரை செய் நீர் அமுதம் அன்னாடு திருமணக் கோலம் கொள்வாள்.

755
செம் மலர்த் திருவும் வெள்ளைச் செழுமலர்த் திருவும் தங்கள் 
கைமலர்த் தவப் பேறு இன்று காட்டுவார் போல நங்கை 
அம்மலர் அனிச்ச மஞ்சு மடியில் செம் பஞ்சு தீட்டி 
மைம் மலர்க் குழல் மேல் வாசக் காசறை வழியப் பெய்து.

756
கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர் தோய்த்து அட்டிப் 
பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத் 
தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ் 
அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.

757
எண் இரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத்து ஒன்றில் 
பண்ணிய கலாபம் ஈர் ஏழ் பருமநால் இரண்டில் செய்த 
வண்ணமே கலை இரண்டில் காஞ்சி இவ் வகை ஓர் ஐந்தும் 
புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்ப பூத்த போல் புலம்பப் பூட்டி.

758
பொன் மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல 
மின் மணி ஆழி கோத்து மெல் விரல் செங்கைக் ஏற்ப 
வன் மணி வைர யாப்புக் கடகமும் தொடியும் வானத் 
தென் மணிக் கரங்கள் கூப்ப இருதடம் தோளில் ஏற்றி.

759
மரகத மாலை அம் பொன் மாலை வித்துரும மாலை 
நிரைபடுவான வில்லின் இழல் பட வாரத் தாமம் 
விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை 
வரைபடு அருவி அன்றி வனப்பு நீர் நுரையும் மான்.

760
உருவ முத்து உருவாய் அம் முத்து உடுத்த பல் காசு கோளாய் 
மருவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல் 
வெருவ விட்டு இமைக்கும் ஆர மேருவின் புறம் சூழ்ந்து ஆடும் 
துருவச் சக்கரம் போல் கொங்கை துயல் வர விளங்கச் சூட்டி.

761
கொடிக் கயல் இனமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு 
தொடிக் கலை மதியும் தம் கோன் தொல் குல விளக்காய்த் தோன்றும் 
பிடிக் இரு காதின் ஊடு மந்தணம் பேசு மாப் போல் 
வடிக்குழை மகரத் தோடு பரிதி வாண் மழுங்கச் சேர்த்து.

762
மழைக்கும் மதிக்கும் நாப்பண் வானவில் கிடந்தால் ஒப்ப 
இழைக்கும் மா மணி சூழ் பட்டம் இலம்பக இலங்கப் பெய்து 
தழைக்குமா முகிலை மைந்தன் தளை இடல் காட்டு மா போல் 
குழைக்கு நீர்த் தகர ஞாழல் கோதை மேல் கோதை ஆர்த்து.

763
கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம் 
பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு இலாத 
அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம் தோன்றச் 
சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது நோக்கி.

764
சுந்தர வல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி 
வந்து இருகையும் தங்கள் மாந்தளிர் கைகள் நீட்டக் 
கொந்தவிழ் கோதை மாது மறம் எலாம் குடிகொண்டு ஏறும் 
அந்தளிர் செங்கை பற்றா எழுந்தனண் மறைகள் ஆர்ப்ப.

765
அறைந்தன தூரியம் ஆர்த்தன சங்கம் 
நிறைந்தன வானவர் நீள் மலர் மாரி 
எறிந்தன சாமரை ஏந்திழையார் வாய்ச் 
சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்.

766
அடுத்தனல் சுந்தரி அம் பொன் அடைப்பை 
எடுத்தனள் ஆதி திலோத்தமை ஏந்திப் 
பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொன்கோல் 
உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள்.

767
கட்டவிழ் கோதை அரம்பை களாஞ்சி 
தொட்டனள் ஊர்பசி தூமணி ஆல 
வட்டம் அசைத்தனள் வன்ன மணிக்கா 
சிட்டிழை கோடிக மேனகை கொண்டாள்.

768
கொடிகள் எனக் குளிர் போதொடு சிந்தும் 
வடி பனி நீரினர் விசு பொன் வண்ணப் 
பொடியினர் ஏந்திய பூம்புகை தீபத் 
தொடி அணி கையினர் தோகையர் சூழ்ந்தார்.

769
தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம் 
பாட விரைப் பனி நீரொடு சாந்தம் 
ஏடு அவிழ் மென் மலர் இட்டப் படத்தில் 
பாடக மெல்லடி பைப்பய வையா.

770
செம் மலராளடு நாமகள் தேவி 
கைம்மலர் பற்றின கல்வி ஒடு ஆக்கம் 
இம்மையிலே பெறுவார்க்கு இது போது என்று 
அம்மணி நூபும் ஆர்ப்ப நடந்தாள்.

771
ஒல்கினண் மெல்ல ஒதுங்கினள் அன்பு 
பில்கி இருந்த பிரான் அருகு எய்தி 
மெல்கி எருத்தம் இசைத்த தலை தூக்கிப் 
புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள்.

772
அற்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து உம்பர்ப் 
பொற்பு அகலாத காட்சிப் புனிதன் ஓடு இருந்த நங்கை 
எற்பகல் வலம் கொண்டு ஏகு எரிகதிர் வரையின் உச்சிக் 
கற்பக மருங்கில் பூத்த காமரு வல்லி ஒத்தாள்.

773
பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில் 
நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அம் கேழ் 
வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்த 
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது அம்மா.

774
விண் உளார் திசையின் உள்ளார் வேறு உளார் பிலத்தின் உள்ளார் 
மண் உளார் பிறரும் வேள்வி மண்டபத்து அடங்கி என்றும் 
பண் உளார் ஓசை போலப் பரந்து எங்கும் நிறைந்த மூன்று 
கண் உளார் அடியின் நீழல் கலந்து உளார் தம்மை ஒத்தார்.

775
ஆய போது ஆழி அங்கை அண்ணல் பொன் கரக நீரால் 
சேயவான் சோதி ஆடல் சேவடி விளக்கிச் சாந்தம் 
தூய போது அவிழ்ச் சாத்தித் தூபமும் சுடரும் கோட்டி 
நேயமோடு அருச்சித்து ஐய நிறை அருள் பெற்று நின்றான்.

776
விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம் 
முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி 
அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத் 
தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார்.

777
அத்தலை நின்ற மாயோன் ஆதி செம்கரத்து நங்கை 
கைத்தலம் கமலப் போது பூத்தது ஓர் காந்தள் ஒப்ப 
வைத்தரு மனுவாய் ஓதக் கரகநீர் மாரி பெய்தான் 
தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுது பூ மாரி பெய்தார்.

778
ஆடினார் அரம்பை மாதர் விஞ்சையர் அமுத கீதம் 
பாடினார் அர என்று ஆர்த்துப் பரவினார் முனிவர் வானோர் 
மூடினார் புளகப் போர்வை கணத்தவர் முடிமேல் செம்கை 
சூடினார் பலரும் மன்றல் தொடு கடல் இன்பத்து ஆழ்ந்தார்.

779
புத்தனார் எறிந்த கல்லும் போது என இலைந்த வேத 
வித்தனார் அடிக் கீழ் வீழ விண்ணவர் முனிவர் ஆனோர் 
சுத்த நா ஆசி கூறக் குங்குமத் தோயம் தோய்ந்த 
முத்த வால் அரிசிவீசி மூழ்கினார் போக வெள்ளம்.

780
அம்மையோடு அப்பன் என்ன அலர் மணம் போல நீங்கார் 
தம் அருள் விளை யாட்டாலே ஆற்ற நாள் தமியர் போல 
நம்மனோர் காணத் தோன்றி நன் மணம் புணர ஞாலம் 
மும்மையும் உய்ந்த என்னாத் தத்தமின் மொழியல் உற்றார்.

781
காமரு சுரபித் தீம்பால் கற்பகக் கனி நெய் கன்னல் 
நமரு சுவைய இன்ன நறு மது வருக்கம் செம் பொன் 
ஆம் அணி வட்டத் திண்கால் பாசனத்து அமையப் பெய்து 
தேமரு கொன்றை யானைத் திருக்கை தொட்டு அருள்க என்றார்.

782
அம்கை வைத்து அமுது செய்தாங்கு அக மகிழ்ந்து அட்ட மூர்த்தி 
கொங்கு அவிழ் குமுதச் செவ்வாய் கோட்டிவாண் முறுவல் பூத்தான் 
புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் போதின் மேய 
மங்கையர் இருவரோடும் மங்கலம் பாடல் உற்றார்.

783
மாக்கடி முளரி வாணன் மைந்தரோடு ஒருங்கு வைகி 
நாக்களின் நடுவாரத் உடுவையான் அறுக நெய் ஆர்த்தி 
ஆக்கிட ஆர மாந்தி வலம் சுழித்து அகடு வீங்கித் 
தேக்கிடும் ஒலியின் ஆர்த்து நிமிர்ந்தது தெய்வச் செம்தீ.

784
சுற்று நான் மறைகள் ஆர்ப்ப தூரியம் சங்கம் ஏங்கக் 
கற்ற நான் முகத்தோன் வேள்விச் சடங்கு நூல் கரைந்த ஆற்றால் 
உற்ற மங்கல நாண் சாத்தி முழுது உலகு ஈன்றான் செம்கை 
பற்றினன் பற்று இலார்க்கே வீடு அருள் பரம யோகி.

785
இணர் எரித் தேவும் தானே எரிவளர்ப்ப அவனும் தானே 
உணவு கொள்பவனும் தானே ஆகிய ஒருவன் வையம் 
புணர் உறு போகம் மூழ்கப் புருடனும் பெண்ணும் ஆகி 
மணவினை முடித்தான் அன்னான் புணர்ப்பை யார் மதிக்க வல்லார்.

786
பின்பு தன் பன்னி ஓடு பிறைமுடிப் பெருமான் கையில் 
நன் பொரி வாங்கி செந்தீ நாம் அடுத்து எனைத்தும் ஆன 
தன் படி உணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தானம் 
இன்பகம் ததும்ப நல்கி எரிவல முறையால் வந்து.

787
மங்கலம் புனைந்த செம்பொன் அம்மிமேல் மாணாட்டி பாத 
பங்கய மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப் 
புங்கவன் மனுவல் ஏற்றிப் புண்ணிய வசிட்டன் தேவி 
எங்கு எனச் செம்கை கூப்பி எதிர்வர அருள் கண் சாத்தி.

788
விதிவழி வழாது வேள்வி வினை எலாம் நிரம்ப இங்ஙன் 
அதிர் கடல் உலகம் தேற ஆற்றி நான் மறைகள் ஆர்ப்பக் 
கதிர் மணி நகையார் வாழ்த்தக் காமனைக் காய்ந்த நம்பி 
மதி நுதன் மங்கை ஓடு மணவறை தன்னில் புக்கான்.

789
மனிதரும் இமையாது ஐயன் மங்கல வனப்பு நோக்கிப் 
புனித வானவரை ஒத்தர் அவர்க்கு அது புகழோ எந்தை 
கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் கடவுள் ஓரால் 
பனி தரு மலர் இட்டு ஏத்தி வழிபடல் பாலர் அன்றோ.

790
மானிடர் இமையோர் என்னும் வரம்பு இலர் ஆகி வேள்வி 
தான் இடர் அகல நோக்கித் தலைத் தலை மயங்கி நின்றார் 
கான் இடம் நடனம் செய்யும் கண்நுதல் அருள் கண் நோக்கால் 
ஊன் இடர் அகலும் நாளில் உயர்ந்தவர் இழிந்தோர் உண்டோ.

791
மணவறைத் தவிசின் நீங்கி மன்றல் மண்டபத்தில் போந்து 
கண மணிச் சேக்கை மேவிக் கரு நெடும் கண்ணன் வாணி 
துணை வனே முதல் வானோர்க்கும் சூழ் கணத் தொகைக்கும் என்றும் 
தணவறு செல்வம் தந்தோன் சாறு சால் சிறப்பு நல்கி.

792
ஏட்டுவாய் முளரியான் மால் ஏனை வானவரும் தத்தம் 
நாட்டு வாழ் பதியில் செல்ல நல்விடை கொடுத்து வேந்தர்க் 
காட்டுவான் ஆடிக் காட்டும் தன்மை போல் அரசு செய்து 
காட்டுவான் ஆகி ஐயன் திருவுளக் கருணை பூத்தான்.

793
அதிர் விடைக் கொடி அம் கயல் கொடியாக வராக் கலன் பொன் கலனாகப் 
பொதி அவிழ் கடுக்கை வேம்பு அலர் ஆக புலி அதள் பொலம் துகிலாக 
மதிமுடி வைர மணிமுடியாக மறை கிடந்து அலந்து மா மதுரைப் 
பதி உறை சோம சுந்தரக் கடவுள் பாண்டியன் ஆகி வீற்றிருந்தான்.

794
விண் தவழ் மதியம் சூடும் சுந்தர விடங்கப் புத்தேள் 
கொண்டதோர் வடிவுக்கு ஏற்பக் குருதி கொப்புளிக்கும் சூலத் 
திண் திறல் சங்கு கன்னன் முதல் கணத் தேவர் தாமும் 
பண்டைய வடிவ மாறி பார்த்திபன் பணியின் நின்றார்.

795
தென்னவன் வடிவம் கொண்ட சிவபரன் உலகம் காக்கும் 
மன்னவர் சிவனைப் பூசை செய்வது மறை ஆறு என்று 
சொன்னது மன்னர் எல்லாம் துணிவது பொருட்டுத்தானும் 
அந்நகர் நடுவூர் என்று ஒர் அணிநகர் சிறப்பக் கண்டான்.

796
மெய்ம்மை நூல் வழியே கோயில் விதித்து அருள் குறி நிறீ இப்பேர் 
இம்மையே நன்மை நல்கும் இறை என நிறுவிப் பூசை 
செம்மையால் செய்து நீப வனத்து உறை சிவனைக் கால 
மும்மையும் தொழுது வையம் முழுவதும் கோல் நடாத்தும்.

797
பூவரு மயன் மால் ஆதிப் புனிதரும் முனிவர் ஏனோர் 
யாவரும் தனையே பூசித்து இக பரம் அடைய நின்ற 
மூவருள் மேலா முக்கண் மூர்த்தியே பூசை செய்த 
தாவர இலிங்க மேன்மைத்தகுதி யார் அளக்க வல்லார்.

798
மனித்தருக்கு அரசாகித் எவ் வேந்தர்க்கு மடங்கலாய் மட நல்லார்க் 
இனித்த ஐங்கணைக்கு ஆளைஆய் நிலமகள் இணர்த்துழாய் அணிமாலாய் 
அனித்த நித்தம் ஓர்ந்து இக பரத்து ஆசை நீத்து அகம் தௌ¤ந்து அவர்க்கு ஒன்றாய்த் 
தனித்த மெய்யறிவு ஆனந்தம் ஆம் பரதத்துவமாய் நின்றான்.

திருமணப் படலம் சுபம் 

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Discovery of the god to mortals

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Thiruvilaiyatar puranam

தல புராணங்கள்

திருவிளையாடற் புராணம்