logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Om symbolசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்Om symbol

Singer

Play Song

Source language

Translation language

Click on the songs to view the meaning


உ சிவமயம் சித்தாந்த சிகாமணி முதல் பாகம் பாயிரம் விநாயக வணக்கம் கலிவிருத்தம் மனவ னத்தின் மதமெனும் யானையைச் சினவி நிற்குந் திகழிள வெண்மதி புனைநு தற்கட் புராரிய ளித்தரு ணனைக வுட்களி நாகிள வேழமே. பரசிவ வணக்கம் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உலகமெனு மோவியங்க டிகழ்ந்துமொரு படமாகி யொளிக ளெல்லா மிலகுபர வொளியாகிச் சச்சிதா நந்தமா யேக மாகிப் பலகலைகள் பரப்பிரமம் பரசிவமா லிங்கமெனப் பகரா நின்ற திலகநுத லுமைகணவன் றிருவடித்தா மரைவணக்கஞ் செய்து வாழ்வாம். 1 பராசக்தி வணக்கம் மாயையெனு மணல்கொடுல கெனுஞ்சிற்றி லிழைத்தாடும் வளமை யாளை மூயமல விருளிரிக்குஞ் செழுஞ்சுடரை யுயிர்களெல்லா முன்னமீன்ற தாயையொரு பரசிவனைப் பெயராக்குஞ் சமவாய சத்தி தன்னைத் தூயவறி வானந்த வடிவாளை மலைமகளைத் தொழுதல் செய்வாம். 2 வசவதேவ வணக்கம் எண்ணிகழ்ந்த வண்டமெல்லாம் வலம்புரிந்த தெனவுமைமா னீன்ற வேழந், தண்ணிகழ்ந்த நறுங்கொன்றைச் சடையொருவன் றனைச்சூழ்ந்த தகைமை போல, மண்ணிகழ்ந்த சிவசரணர் தமையெல்லாந் தொழுந்தகைமை வாய்ப்ப வெங்க, ளுண்ணிகழ்ந்த வசவனெனும் பெயருடையோன் றனைவணங்கி யுவகை கூறுவாம். 3 நூல் வரலாறு ஓங்குபுகழ்ச் சித்தரா மேசனென வொருகுரவ னுளன வன்சேய் தாங்குவிறற் சைவசிகா மணிமுத்தி தேவனவன் றநயன் மாயை நீங்குகுணக் குன்றனைய சித்தநா தப்பெயரோ னிகழ்த்த வன்பால் வாங்குதிரைக் கடற்கண்மதி போற்சிவயோ கிப்பெயரோன் வந்து தித்தான். 4 சிவபத்தி யெனுமமுத மொடுவிளங்குஞ் சிவஞானத் திங்க ளீனு முவமிக்க வரியதிருப் பாற்கடலாஞ் சிவயோகி யுலக முய்ய அவவுற்ற வுளத்தினொடு காமிகமே முதலாய வாக மங்க ணவையற்ற சிவபுரா ணங்களெனப் பட்டவெல்லா நயந்து பார்த்து. 5 மறைநெறிகள் வழுவாம லயனெறிக டடுமாற மதிஞ ரெல்லா மறிவமைதி பெறவீர சைவநெறி யனைத்துமொருங் கமைந்து காண நிறைவுதரு மாகமவே தங்கள்புரா ணங்கடொறு நெற்றி நாட்டத் திறைவனுமை யொடுமுருகற் கருளியதா யறிஞருள மிசைவ தாகி. 6 சங்கரசம் பிரதாய னாயவிரே ணுகன்முனிவர் தங்கட் கெல்லாம் புங்கவனா கியகலய முனிக்குரைத்த தாகியிவண் பொருந்தி யொன்று தங்கடலை யிட்டவொரு நூறு *தலம் புணர்வீர சைவ நூலை யிங்குரைசெய் தனனதனைத் தமிழ்ப்படுத்தி முறைபிறழா தியம்ப லுற்றேன். 7 ( * சச்சிதாநந்த லக்ஷண லக்ஷிதமான பரப்ரஹ்மம் மகத்தத்துவ முதலிய சமஸ்த தத்துவங்களுக்கு ஆச்ரயமா யிருத்தலானும், அத்தத்துவங்களைத் தன்னிடத்தி லடக்கிக்கொண் டிருத்தலானும், ஸ்தலம் என்று சொல்லப்படும். “ஸ்த” என்னும் சப்தத்திற்கு ஸ்தானம் என்றும், “ல” என்னும் சப்தத்திற்கு இலயம் என்றும் பொருளாம். ஸ்தலசப்த வாச்சியமான அப்பரப்ரஹ்மமே தன்னிடத்தில் இடையறாது லீநமாயிருக்கும் சிற்சத்தியின் ஸ்புராணத்தினால் நிஸ்தரங்க சமுத்திரத்தில் வாயுசலனத்தினால் நுரைகள் பிறப்பனபோல், அங்க லிங்கமென்று இரண்டுவிதமாய் பின்னமாயிற்று. அங்கஸ்தலம் உபாசகமாகவும், லிங்கஸ்தலம் உபாசியமாகவும் ஏற்பட்டது. அந்த அங்கஸ்தலம் பக்தனாதியாக ஆறுவிதமாகவும், லிங்கஸ்தலம் ஆசாரலிங்கமாதியாக ஆறுவிதமாகவும் விபக்தமாயிற்று. ஒன்று இரண்டாகவும், இரண்டு பன்னிரண்டாகவும் விபக்த மானதுபோல், இத்தலம் நூற்றொன்றாய் விபாகிக்கப்பட்டிருக்கும்.) நூற் பெயர் முந்துறுமெச் சைவதந்தி ரங்களுக்கும் விளங்குதனி முடியாய் வீர தந்திரமுத் தரமாகித் தனக்குமே லிலாமையினாற் சாற்று நாம நந்துறுசித் தாந்தசிகா மணியாகுஞ் சிவாத்துவித ஞான வாழ்வைப் பந்தமறத் தருமிதன்கட் டிகழ்வீர சைவர்மனம் பட்டு நிற்கும். 8 அவையடக்கம் உலகின்மலி புகழ்படைத்த சிவயோகி தனதுபே ருணர்வி னாலே மலைவதற வருளியவிச் சித்தாந்த சிகாமணியின் மதிசெ லுத்திக் கலைமுழுது முணர்ந்தவர்மு னியான்மொழியக் கருதலொரு கடுகு நாட்டி யலைகடலைக் கடைந்துசுவை யமுதெடுப்பக் கருதலொடொப் பாகு மன்றே. 9 ஆக்கியோன் பெயர் தலங்குலவு மலயமமர் கலயமுனிக் கிரேணுகன்றண் ணளியா லீந்த நலங்குலவு சித்தாந்த சிகாமணியைத் தமிழ்க்கவியா னன்கு செய்தா னிலங்குதமிழ்க் கடலையொரு நாவாயாற் கடந்துலக மிறைஞ்சா நின்ற பொலங்கழலெம் பெருந்தகையாஞ் சிவப்பிரகா சையனெனும் பொருவி லானே. 10 - பாயிரம் முற்றிற்று - * * * இரேணுகர் காதை பிரபஞ்சோற்பத்தி அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆதியி லநாதி கன்மத் தாருயிர்க் குலக மாகச் சேதந மயமா யொன்றாஞ் சித்தாந்த சிவன் றனாது பேதமில் சத்தி யாலே பெற்றதோர் மூர்த்தி யெய்தி மாதொரு பாக னாகு மகேசனாய் வயங்கா நின்றான். 1 சந்திர மவுலி யெம்மான் சகமெலாம் படைக்கு முன்னம் வந்துற விறைவ னாகு மலரயன் றன்னை நல்கி யந்தமில் விச்சை யெல்லா மருளின னருளி னாலே முந்துறு மயன் படைப்புத் தொழிலிடை முயற்சி பெற்றான். 2 சங்கர னாணை கொண்டு சகம்புரி தொழிலிற் புக்க பங்கயன் மாயை மாலிற் பட்டளிக் குறுமு பாய மங்குணர் கிலனாய் மீண்டு மரவணிப் பெருமான் பாதச் செங்கம லங்கள் போற்றி நின்றிது செப்ப லுற்றான். 3 தேவர்க டலைவ முக்கட் செல்வயான் முதலா யுள்ள யாவையு மாக்க வல்ல விறைவமுற் றுணர்ந்த மேலோ யோவரு மயலான் மாழ்கி யுணர்ந்திலேன் றமிய னேற்கு மூவுல கினையு மாக்கு முபாயநீ மொழிதி யென்றான். 4 நான்முக னிதனைக் கூற நனையவிழ் கொன்றை வேணிக் கூன்முக மதிய ணிந்த கொழும்பவ ளக்குன் றன்னான் றான்முக மலர்ந்து ரைத்தான் சகம்புரி வகையு ரைத்துந் தேன்முக மலரின் மேலோன் றெரிந்திலன் றியங்கிச் சொல்வான். 5 உலககா ரணப்ப டைப்பி னுபாயநீ யருளி னாலே பலமுறை யுரைத்து நெஞ்சிற் பட்டதின் றமல நீமுன் மலர்தலை யுலக மாக்கின் மற்றது கண்டுதேறி யிலகுற வடிய னேன்பி னியற்றுவ லென்று சொன்னான். 6 ஈசுவர சிருஷ்டி விதியிது புகன்று நிற்ப மின்னவிர் சடையிற் கீற்று மதிபுனை கடவு டன்போல் வளரொளி வடிவ ராகி முதிரறி வுடைய ராகி முழுதையு மளித்த ழிக்கு மதிசய நிலைய டைந்த கணங்களை யளித்தான் முன்னர். 7 சாற்றுறுங் கணங்க டம்மு ளிரேணுக தாரு கப்பே ரேற்றுள ரிருவ ரெங்க ளீசனுக் கினிய ரன்னோ ராற்றலை யாவ ரானு மறைந்திடற் கரியர் மாயை மாற்றிடும் வலியர் விச்சை யாவையும் வல்ல ரம்மா. 8 தௌ¤தரு முளத்தர் மாறாச் சிவாநந்த வமுத முண்டு களிதரு நலத்தர் கல்விக் கடல்கரை கண்டோர் ஞான வொளியினர் வேத சார முணர்ந்தவ ரகந்தை யில்லோர் விளிவுற விடய மைந்து மௌ¤தென வென்ற வீரர். 9 அனையவர் தம்மை நோக்கி யாலயத் துள்ளி லங்கும் புனைமணி வாயில் காப்புப் புரிசடைக் கடவு ணல்க வினிதென வவரு மேற்றவ் வேவலிற் சிறந்தோ ராகித் தனிவிழி நுதலி மைக்குஞ் சங்கரன் பாலி ருந்தார். 10 கயிலைச் சிறப்பு கலிநிலைத்துறை வேத னிந்திரன் செங்கண்மால் புன்புகழ் மேவி யோதி மங்கிளி றுவணனா யவர்தமை யுயர்த்த வாதி யம்பிகை நாயகன் பெரும்புக ழவனைக் காதல் கொண்டுதாங் குற்றது போன்றது கயிலை. 11 தெள்ளு சோதியங் கயிலைமால் வரையினிற் சிறிது வெள்ளி தான்கொடு திசைமுகக் கம்மியன் விரகா லள்ளி வானிருள் விழுங்குவா னமைத்ததொன் றன்றோ வெள்ளு றாமதி யென்பதிவ் வுலகங்க ளெல்லாம். 12 சபா மண்டபச் சிறப்பு அன்ன மாகயி லாயமோ ரருமறை யாகச் சென்னி மாமொழி யாகுமோர் செம்பொனா லியன்ற தன்னை நேர்மணி மண்டபத் தரியணை தன்னின் முன்ன மோர்பக லுமையொடு முதல்வன்வீற் றிருந்தான். 13 மகாசபை கூடுதல் இந்தி ரன்சுர ரரியய னியக்கர்கந் தருவர் சந்தி ரன்கதி ருரகர்சித் தர்கள்விறற் றகுவர் முந்து றுங்கண நாயகர் முனிவரர் வசுக்கள் வந்து கண்டன ருமையொடு பரமனை மகிழ்ந்து. 14 கலிவிருத்தம் பாடுவர் சிலர்சிலர் பணிவர் முன்னர்நின் றாடுவர் சிலர்சில ரார்ப்பர் மென்மலர் சூடுவர் சிலர்சிலர் துதிப்ப ரன்பினால் வாடுவர் சிலர்சிலர் மகிழ்ந்து வாழ்த்துவார். 15 இன்னண மிவர்பல வியற்றல் கண்டுமை தன்னொடு மரியணை தன்னின் மேவிய மின்னவிர் சடையினன் விளங்கு பேரவை முன்னுற நிகழ்ந்ததோர் முறைமை கூறுவாம். 16 அண்டர்க டமக்கெலா மரிய தன்கவுட் கொண்டருண் மெல்லிலை கொடுப்ப நூற்கடல் கண்டிடு மிரேணுக கணேச னென்பவற் பண்டுறு முவகையாற் பரன ழைத்தனன். 17 அழைத்தரு ளுவகையா லவ்வி ரேணுகன் றழைத்துயர் கல்வியந் தாரு கன்றனைப் பிழைத்தனன் கடந்துநம் வினைபி ழைப்பவே மழைத்திரு மிடற்றினோன் மருங்கு வந்தனன். 18 மிடைந்திடு தனதுபே ரவையின் மெய்யுணர் வடைந்திடு தாருக நாமத் தன்பனைக் கடந்துறு மிரேணுக கணேசற் பார்த்திது மடங்கலந் தவிசுறை வள்ளல் கூறுவான். 19 மதியுறு மிரேணுக மன்னு பேரவை யிதிலெம தடிமையா யிலங்கு தாருகற் கதிதரு காலினாற் கடக்கப் பட்டதென் விதிதவ றினையெனா விளம்பன் மேவினான். 20 சிவபக்தர்கள் மகிமை கருதுநம் பத்தரைக் கடத்தல் கேட்டினுக் கொருதனி மூலமா யுடம்பி னாயுளு மரிதுறு செல்வமுங் குலமு மன்றுதாம் பெரிதுறு கீர்த்தியும் பெயர்த்த ழிக்குமால். 21 கழிந்துள மயலின்மார்க் கண்ட னாகுமென் றொழும்புடை யவனைமுன் றொடர்ந்தி கழ்ந்தென தெழுங்கழ லுதையினா லின்று முள்ளுறு தழும்புறு முடலினன் றண்ட னாயினான். 22 தறிபவ மரமுடைச் சங்கு கண்ணனு மறிவுணர் பிருகுவு மாமென் றொண்டராற் பறிபடு தலையனாய்ப் பவங்கள் பத்தினு மறிபடு மாலென மதித்தி டாய்கொலோ. 23 திருமறு மார்பன்முன் செய்ய வென்றொழும் புரமுறு ததீசியா லொடிந்த நேமியான் பொருமற மிழந்தனன் புகழ்க்க ணேசரால் வருமறி முகமொடு தக்கன் மாழ்கினான். 24 தகுஞ்செய லுடையநஞ் சுவேதன் றன்னைமுன் னிகழ்ந்தனன் மறலியெம் மாலெ ரிந்தனன் புகன்றிடி னின்னுநம் பொருவி றொண்டரா லுகுந்திற லுடையவ ருளர நேகரே. 25 இரேணுகர் அவதரிக்கும் காரணம் சாதமி றாருகன் றனைக்க டந்தனை யாதலி னிரேணுக வரவு தாங்குறு மேதினி தனிலொரு பிறப்பு மேவென வோதின னடியவர்க் குதவி செய்பவன். 26 அறத்தனி முதல்வநீ யழைக்கு மோகைதான் பெறப்பெறு மடியனேன் பேதைத் தன்மையாற் சிறப்புறு தாருகற் கடந்த தீமையைப் பொறுத்தரு ளெனவடி பணிந்து போற்றினான். 27 அருந்துயர் வடிவமா யகன்ற மண்ணிடை வருந்துறு பிறவியை மன்னி நின்னையான் பிரிந்தன னலமரும் பெற்றி யென்கொலோ திருந்தடி யவரிடர் தீர்க்கு மெந்தையே. 28 மானிடப் பிறவியை மயக்கு மண்ணிடை யானெடுத் திடாவகை யருள்செ யென்றலுந் தேனெடுத் திதழவிழ் செய்ய கொன்றையோன் றானுளத் தருளினாற் சாற்றன் மேவினான். 29 என்னிக ரிரேணுக வின்று மண்ணிடைத் துன்னுறு பிறவியாற் றுயர மெய்தலை யென்னடி யவர்தமக் கெவ்வி டத்தினு மின்னல்வந் தடைகுவ தில்லை யில்லையே. 30 கண்டவர் தமக்கெலாங் கயிலை காட்டுறும் வண்டவர் பருப்பத மலையைத் தென்றிசை கொண்டுள தெலுங்கினிற் கொல்லி பாகமென் றொண்டல மொன்றுள துரைப்பி னாயிடை. 31 என்னுரு வாயசோ மேச னென்னவோர் தன்னிகர் பரசிவ லிங்கந் தங்குமா லன்னதின் மானிடப் பிறவி யன்றியே மன்னுதி யுலகெலாம் வியக்கும் வண்ணமே. 32 மறையொடு மறைமுடி மதம தாகுமென் னிறையுமத் துவிதநூ னிடயத்தி லியாவரு மறிவுற மொழிதியென் னடியர் மேன்மையுங் குறைவிலென் மேன்மையுங் கொடுத்தி யெங்கணும். 33 இரேணுகர் உலகில் வருதல் அங்கண னிவ்வகை யருள மெல்லடிப் பங்கய முடிமிசை படவி றைஞ்சியே யெங்கண நாயகன் விடைகொண் டெய்தினான் பொங்கொலி யுததிசூழ் புவியை நோக்கியே. 34 இரேணுகர் அவதரித்த ஸ்தலம் எய்திய விரேணுக னிறைவன் கூறிய மெய்திக ழிலிங்கமெய் மேவித் தோன்றினான் கொய்துணர் மலிபொழிற் கொல்லி பாகம்வாழ் செய்தவ முடையர்தாஞ் சென்று கண்டனர். 35 இரேணுகர் அவதாரம் அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் நீற்றொளி விளங்கக் கண்டி நிறையணி யணிந்து வேணி தோற்றழ கிலங்க ஞானச் சோதியின் வயிற்றிற் றோன்றிப் போற்றிளங் கதிர்போ னின்ற புண்ணியன் றன்னைக் கண்டோ ராற்றவும் வியப்புற் றோரா யடியிணை பணிந்து சொல்வார். 36 சோதிமா லிங்கந் தன்னிற் றோன்றுநீ யாரை யென்ன வாதியா மிறைவன் பாங்க ரமர்தரு மிரேணு கனியான் வேதநா யகன்வி டுப்ப விடைகொண்டிங் கெய்தி னேனென் றோதினான் வீர சைவத் தூதிய மாகி நின்றான். 37 இரேணுகர் பொதிகை யடைதல் விளங்குறு சிவசித் தாந்த மென்பயிர் தன்னை வேறா யுளங்கவல் சயின புத்த ராதிய ருணர்வி னூலாம் வளர்ந்தெழு களைக ளைந்து வளர்ப்பதற் குற்றே னானென் றிளங்கதி ரனையான் வானத் தெழுந்துபோய் மலயத் துற்றான். 38 பொதிகைமலைச் சிறப்பு ஓங்கிய விந்த வெற்பங் கொருகரஞ் சுமக்க லாற்றா தேங்குபு பிலத்தில் வீழக் கண்டவல் விருடி தன்னைத் தீங்கறு முனிவ ரெண்ணி லோரொடு சிகரந் தன்னிற் றாங்கிய மலய வெற்பின் றன்மையார் சாற்ற வல்லார். 39 மலயச மென்று மிக்க மலயமா ருதமா மென்று முலகொரு மூன்றி னுந்த னோங்குறு புகழ்சென் றெய்த நலமலி சந்துங் காலு நல்கிய வதுபோற் றன்பே ரிலகுற மலைக ளுள்ளொன் றேனுமீந் ததுதா னுண்டோ. 40 இரேணுகர் அகத்தியரைக் காணுதல் அப்பெரு மலயந் தன்னை யடைந்தகத் தியனி ருக்குஞ் செப்பரும் வளம லிந்த விடத்தினைச் சென்று கண்ணுற் றொப்பரு முவகை கூர்ந்த வுளத்தொடு கணங்கள் கோமா னெய்ப்பறு முனிவ ரோடங் கிருந்துள முனியைக் கண்டார். 41 வந்தெதிர் நின்ற ஞான வாரியைக் கண்ணிற் கண்டு சந்திர மவுலி தன்பாற் சார்ந்துள விரேணு கப்பேர் முந்துறு பவனா மென்று முனிவனு முணர்வாற் கண்டு சிந்தனை மகிழ்ந்தெ ழுந்து திரவடித் தலத்தில் வீழ்ந்தான். 42 பின்னரங் கவனைத் தானோர் பெருந்தவி சுறவி ருத்தித் தன்னிக ரமல லோபா முத்திரை தந்த நீராற் பொன்னடி விளக்கி நூலிற் புகன்முறை யருச்சித் தேத்தி யன்னவ னருகு வேறோ ராதனத் தமர்ந் திருந்தான். 43 இருந்துள முனியை நோக்கி யிரேணுக னன்றாய் நின்பா லருந்தவ நடந்த தேயென் றருளினால் வினாய்நி னக்குப் பொருந்துறு மிடையூ றெண்ணிப் புரிபவ ரியாவ ரென்று திருந்திய வுளத்த னாகிச் செப்புவ னுவகை மாற்றம். 44 விந்தமு நின்னாற் கீழ்போய் வீழ்ந்தது நகுட னின்னான் முந்தர வுருவ மானான் முழங்குவெண் டிரைசு ருட்டுஞ் சிந்துவு மருந்தப் படட்டுச் சேறலா தொழிந்த தன்று வந்தொரு தகுவ னுன்றன் வயிற்றிடை யற்றா னன்றே. 45 செங்கண்மால் விடையா னல்குஞ் சிவதரு மோத்த ரத்தை யெங்கண்மா முருக னாமத் திலங்கிலை வேலோ னல்க வங்கண்மா ஞால முய்யப் பெற்றனை யருந்த வத்தோர் தங்கண்மா நிதிய னாயுன் றனைநிகர் பவர்யார் சொல்லாய். 46 என்றுரை செய்ய வெங்க ளிரேணுகன் முனிவன் கேளா நின்றனி வரவெ னக்கே நேர்தலாற் றவத்தோன் யானே நன்றிக ளனைத்து முள்ளேன் ஞானநல் விழியும் பெற்றேன் வென்றனன் பவமு மேலாம் வீடடைந் துய்ந்தே னியானே. 47 புண்ணிய மூர்த்தி நீயென் பொருட்டிவ ணடைந்தாய் நின்னைக் கண்ணுறில் வினைக ளெல்லாங் கதிரெதிர்ப் பனியை யொக்கும் பண்ணிய தவநி றைந்து பயன்றரு காலத் தல்லா லண்ணலுன் வரவெ வர்க்கு மரிதரி தென்று சொல்வான். 48 பற்பல கலையு ணர்ந்தும் பற்றிலன் றுணிவு மாறா வுற்பவ மொழியும் வண்ண முயிர்சிவத் தேக மாகும் பொற்பரு ளுவதாய் வேதப் பொருள்படு சிவசித் தாந்தஞ் சிற்பர யோகி நின்னாற் றெளிந்திட விழைவ லென்றான். 49 - இரேணுகர் காதை முற்றிற்று - * * * உபதேசம் இரேணுகர் அகத்தியருக்கு உபதேசம் செய்தல் கலிவிருத்தம் முனிவ னின்ன மொழிய வுளங்கொளா வினிய னென்னுமி ரேணுகன் முக்கணான் றனைநி னைந்து சமாதி யடைந்துபின் னினைவ டைந்து நிகழ்த்துதன் மேயினான். 1 அருந்த வத்த ரரச வுனக்கிவண் டிருந்து மெய்ச்சிவ ஞானத் தௌ¤வினைப் பொருந்து மிக்கசித் தாந்தம் புகலுது மொருங்கு சித்தத் துவந்து செவிக்கொளே. 2 பேத விச்சையிற் பின்னப் பொருள்தளு மோது பற்பல வாய வொழுக்கமு மாதல் பெற்றிடு மாசில்சித் தாந்தநூன் மாத வத்தர் வழுத்து முனிவனே. 3 ஆய்ஞ்ச சாங்கிய மாசறு யோகநற் பாஞ்ச ராத்திரம் பாசு பதத்தொடு வாய்ஞ்ச வேத மிவைபிர மாணமாய்த் தாஞ்செய் வாதத்திற் றள்ளுவ வல்லவாம். 4 சாங்கி யாதிகட் கென்றுந் தலைமையா மோங்கு மாமறை யும்மறை யைத்தொடர்ந் தீங்கு நின்றத னாலவை யாவையுந் தாங்கு மானத் தகைமைய வென்பவே. 5 யோக சாங்கிய மோரைந்தி ராத்திர மாகும் வேதத் தொருபுடை யன்னபோ லேக தேச முறாமறை யெங்குமா மாகம் வீழ்மலை மாதவ சைவமே. 6 ஓங்கும் வேதத் தொருபுடை யாகிய சாங்கி யாதியிற் சைவஞ் சிறந்ததாய்த் தீங்கில் வேதமெ லாந்தொடர் செய்கையா னீங்கு பாச முனிவ நிலைக்குமால். 7 பிரம மோதுசித் தாந்தப் பெயர்பெறு தரும சைவமென் றந்திர நான்மறைப் பொருள தாகலி னம்மறை போலவே வரம தாம்பிர மாண மெனப்படும். 8 கண்ணு தற்பெருங் காரண னாற்பல வெண்ணு மாகமஞ் சைவமி லாகுளம் பண்ணு பாசு பதமொடு சோமமென் றண்ணன் மாமுனி யன்றறை யப்படும். 9 ஓது வாம மொழிவறுந் தக்கண மேதை யாகு மிசிர முனிவர தீதி லாதசித் தாந்த மெனவரு பேத நான்கு பெறும்புகல் சைவமே. 10 வாமஞ் சத்தி பரஞ்சொல் வயிரவர்க் காமந் தக்கண மம்மி சிரத்தெழு நாமங் கொண்டுறு மாதர் நணுகுவா ரேமஞ் செய்மறை யின்மத மற்றதே. 11 மறையு ரைக்குந் தருமம் வகுத்தலாற் புறம தத்தொடு நின்று பொருதலாற் றிறம டுத்தசித் தாந்த சிவாகம மறமு ரைக்கு மறைமத மாகுமால். 12 செப்பும் வேதசித் தாந்த மபேதமா மொப்பின் மெயப்பொரு ளொன்றே யுரைத்தலா லிப்பெ ருஞ்சொற் கலைக ளிரண்டையும் வைப்ப ரொப்பென மானத் தறிஞரே. 13 வீர சைவ விளக்கம் ஏக னுற்றருள் காமிக மேமுத லாக மத்தி னிறைந்திடு முத்தர பாக முற்றும் பகர்வீர சைவமாஞ் சோக மற்றுயர் தொன்மதந் தோன்றுமால். 14 சித்த மாகுஞ் சிவமய மாகிய வித்தை யூடு விசேடம தாகியே யெத்தி னாலிங் கிரமிப்ப னன்னவன் பொய்த்தி டாத புகழ்வீர சைவனே. 15 தீத கன்ற சிவசீவ யிக்கியமாம் வீத ரும்பெரு வித்தையி னன்குறச் சாத மின்றி ரமிக்குமச் சைவன்மற் றோதி லன்னோ னுயர்வீர சைவனே. 16 வித்தை யூடு விரவிய மாயையைக் கைத்து நாயெனக் கண்டு விடுதலை வைத்த வாதி வருண முணர்த்துறு முத்தி யாலுயர் வீர மாகேசனாம். 17 வேறு அரியவே தாந்தத்தி னாகு ஞானமே மருவரும் வித்தையென் றுரைப்பர் மற்றதில் விரவினோன் யாவன்மற்ற னையன்வீ ரனென் றுரைதரு கிற்பர்மெய் யுணர்ந்து ளோர்களே. 18 உட்புறம் பூசனை யுடையர் சைவருந் திட்பமா யேசரு மாவர் தேர்ந்திடிற் கொட்பறு சிவனரன் போலக் கூறிய பெட்புறு மவர்களும் பின்ன மாயிடார். 19 மிறையறுஞ் சைவர்மெய்ஞ் ஞான வேள்வியுங் கறையின்மா யேசரொண் கரும வேள்வியும் பெறுநரென் றுரைத்திடும் பெற்றி யாலகம் புறமுறு நெறியினர் புகன்று னோர்களே. 20 விலகுறு பலநெறி வீர சைவர்தா மலைவறு பத்தன்முன் வழக்க பேதமுந் தலநெறி விபேதமுந் தரிக்குந் தன்மையா லிலகுவ ரறுவகை யினரென் றெண்ணவே. 21 தலத்தொடு பலவகைத் தருமமாதலா லிலக்கதி காரிகள் பேத மெய்தலால் விலக்கரு மறிஞராம் வீர சைவர்தங் கலைத்திற மதுவுமோ ராறு காண்டமாம். 22 - உபதேசம் முற்றிற்று - * * * அங்கலிங்கோத்பவம் 1. நிரஞ்சந லிங்கஸ்தலம், 2. சூந்ய லிங்கஸ்தலம், 3. நிஷ்கள லிங்கஸ்தலமாய் விளங்குவது மஹாஸ்தலம். நிரஞ்சந லிங்கஸ்தலமாவது, வீரதந்திர விதிப்படி பிரபஞ்சோற்பத்திக்கு ஆதி (முதற்) காரணமாயுள்ளது. எவ்வாறெனின்:- முதல் நடு வீறும், நாத பிந்து கலைகளும், அவயவத்தோடு கூடியுங் கூடாமலும், தத்துவ ரூபமான பிரமாண்டாதி யுலகங்களும், அஷ்டமூர்த்திகளும், நாமரூப க்ரியைகளும், உற்பத்தி ஸ்திதி லயங்களும், சாத்விகாதி முக்குணங்களும், அகங்கார மமகாரங்களும், ஞானாஞ் ஞானங்களின் உற்பத்தியும், சுட்டிக் காட்டுபவரும், தன்னையும் பிறரையும் மற்றெவரையு மறிதலும், பாக்யாந்தரங்களும், குறிப்பிடும் அரி பிரம்மாதி சமஸ்த தேவர்களும், சிற்சத்தியென்னும் பெயரும், சூந்யா சூந்யங்களும், தத்பத த்வம்பத அசிபதங்களும், மற்றியாதும் இல்லாத காலத்தும் நித்யமாயுள்ளதெதுவோ அது. சூந்ய லிங்கஸ்தலமாவது, மேற்கண்ட நிரஞ்சந லிங்கமே அநிர்வாச்சிய சூந்யலிங்கமாய் தநு முதலியவைகளும், மனாதிகளும், காலகர்மங்களும், இந்திரிய வியாபாரங்களும், சுகதுக்கங்களும், ஆதியநாதித்துவங்களும், நாத பிந்து கலைகளின் தோற்றங்களும், ஆத்மாநாத்மாக்களும், அரி பிரம்மாதி தேவர்களும், சராசரப் பிரபஞ்சங்களும், சிற்சத்தியுற்பவமும், சச்சிதாநந்தாதி தத்துவ லட்சணங்களும், அண்டஜ முதலிய நால்வகைத் தோற்றங்களும், எல்லையுற்றதும் எல்லையற்றதும், கமனாகமனங்களும், புண்ய பாபங்களும், தர்ம கர்மங்களும், சுவர்க்க நரகங்களும், இம்மை மறுமைகளும், பஞ்சபூத பௌதிகங்களும், அநந்தகோடி பிரமாண்டங்களும், தன்மை முன்னிலை படர்க்கைகளும் இல்லாத காலத்தும் மகா சூந்யமாயுள்ள தெதுவோ அது. நிஷ்கள லிங்கஸ்தலமாவது, மேற்கண்ட சூந்யலிங்கமே நிஷ்கள ஸ்வயம்பு லிங்கமாய் தந்தை தாய், நாமம் குறி, பிறப்பிறப்பு, பிரகாசம் அப்பிரகாசம், ரூபா ரூபம், தான் எதற்கும் எதிர்நிற்றல் தனக்கு எதிரில் ஒன்றியிருத்தல், காரண காரியங்கள், முன் பின், மேல் கீழ், இடம் வலம், பற்றுதல் பற்றாமை, பார்த்தல் பாராமை, சொல்லல் சொல்லாமை, அறிதல் மறத்தல், சாத்யாசாத்யங்கள், பூஜிப்பவன் பூஜிக்கப்படுபவன், அங்கஸ்தல லிங்கஸ்தலப் பகுப்புக்கள், வேதாகம புராணேதிகாசங்கள், த்வைதாத்வைதங்கள், வெண்மை முதலிய பல நிறங்கள் ஆகிய இவைகள் இல்லாத காலத்தும், தான்ஒன்றைப் பற்றாமலும் எல்லாவற்றிற்கும் தான் பற்றுக்கோடாகவும், தனக்கோராதாரமின்றி எவற்றிற்கும் தானாதாரமாகவும், நிராதார சர்வாதார சர்வஜ்ஞ சர்வேச்வரனாய் அங்கஸ்தலமாறும், லிங்கஸ்தலமாறும், அறுவகைப் பக்தியும், அறுவகைச் சக்தியும், கர்ப்பீ கரித்துக்கொண்டு சச்சிதாநந்த நித்ய பரிபூர்ண சாக்ஷாத்காரமாய் நின்றதெதுவோ அது. இவ்வித நிஷ்கள மகாலிங்க ஸ்தலத்தில் அக்நியின் உஷ்ணம் போதுள்ள சிற்சத்தியின் ஸ்புரணத்தினால் கயிற்றின்கண் அரவு போலவும், நிஸ்தரங்க சமுத்திரத்தில் புற்புதாதிகள் (குமிழி - அலை - நுரை) உண்டாவது போலவும், ஆதியில் ஆத்மாங்கமும் (ஆன்மா), அவ்வாத்மாங்கத்தில் ஆகாயமும், அவ்வாகாயத்தில் வாயுவும், அவ்வாயுவில் தேயுவும், அத்தேயுவில் அப்புவும், அவ்வப்புவில் பிருதிவியும், அப்பிருதிவியில் முப்பத்தாறு தத்துவங்களும், அநந்தகோ சூரிய சந்திரங்களும், பதினான்கு புவனங்களும், சப்த சாகரங்களும், நவ கண்டங்களும், அஷ்ட திக்குகளும், நக்ஷத்திர ராசிகளும், விஷ்ணு பிரம்மாதி தேவர்களும், யக்ஷர், ராக்ஷதர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், கருடர், பூதப்ரேத பைசாசர், அண்டஜ ஸ்வேதஜ ஜராயுஜ உத்பிஜ்ஜங்கள், கேசர பூசர வநசர ஜலசரங்கள் விருக்ஷம், கொடி, செடி, மலை, நதி, வனாந்தராதி சமஸ்த வஸ்துக்களு முண்டாயின. இவ்வாறு பிரபஞ்சோற் பத்தியாகவும் அக்காலையில் ஒன்றேயாய் நின்ற சிவ சைதந்யமே பின்னர் தன்னில் மாயாப் பிரசஞ்சத்தை யடக்கிக் கொண்டு தானொன்று - மாயாப் பிரபஞ்சத்திலிருக்கும் வியவகாரிக ஜீவர்களே உபாசகராய் அங்க ஸ்தலத்தினராயினர். ஆதார பூதமாயிருக்கத் தக்க பாரமார்த்திக சைதந்யமே உபாசியமாய் லிங்க ஸ்தலமாயிற்று. பாவனா ரீதியாய், போஷ்ய போஷக விபேதத்தினாலும், ஆதேய ஆதார விபேதத்தினாலும், சதி பதி, சீடன் குரு, அர்ச்சகன் தேவன், பிரஜை ராஜன், சேவகன் யஜமான், குழந்தை தாய், விருக்ஷம் பூமி, பூமி சூரியன், இத்யாதியாய் முந்தினவர் அங்க ஸ்தலத்தைப் பொருந்தினவராய், பிந்தினவர் லிங்க ஸ்தலத்தைப் பொருந்தினவராயிருக்கிறார்கள். கிரம ரீதியாய், தாரகனான பக்தனது சரீரமே அங்கஸ்தலம், தாரியனான லிங்கமே லிங்க ஸ்தலமாயிருக்கிறது. இங்கு, கிரம ரீதியே யங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அங்க ஸ்தலமே பூஜகன், லிங்கஸ்தலமே பூஜ்யன்; அங்கமே ஜீவாத்மா, லிங்கமே பரமாத்மா; சங்கமே ஐக்கியம்; அங்கலிங்க சங்கமென்றால் ஜீவ பரமைக்கியம்; ஆனதினால் அங்கமே த்வம்பதம்இ லிங்கமே தத்பதம், சங்கமே அசிபதம்; லிங்காங்க சங்கமென்றால் தத்வமசி மகா வாக்யார்த்த போதகமாயுள்ளது. நிஷ்கள லிங்கத்தில் சிற்சத்தி லீனமாயிருந்த தென்று மேலே சொல்லப்பட்டிருப்ப தன்றோ? லிங்கம் இரண்டானவுடனே தத்கதமாயிருந்த (மகா) சத்தியும் ஸ்வஸ்வாதந்த்ரி யத்தினாலும், (பர)சிவசமான தர்மத்தினாலும் பெரு நெருப்பானது வேறு வேறு சிறிய தீபங்களானது போல, பக்தியொன், (கலை அல்லது பரை அல்லது) சக்தியொன்று என இரண்டாயிற்று. பக்தி அங்க ஸ்தலத்தையும், சக்தி லிங்க ஸ்தலத்தையும் சம்பந்தித்தன. இவைகளில் பக்தி பிரபஞ்சத்தின் லயத்தையும், சக்தி பிரபஞ்சத்தின் விருத்தியையும் விரும்புவது. பக்தி மாயா ரஹிதமாயுள்ளது, சக்தி மாயாசஹிதமாயுள்ளது. பக்தி ஊர்த்தவமுகம், சக்தி அதோமுகம், பக்தி நிவிர்த்தி மார்க்கம், சக்தி பிரவிர்த்தி மார்க்கம். புகையில்லாதிருக்கும் சோதி போல பக்தி வாசனா ரஹிதமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும், நெருப்பின்சுவாலையானது புகையினால் மூடப்பட்டிருக்குங் காலையில் வெளிச்சத்தைப் பரவச்செய்யாமல் மழுங்கியிருப்பதுபோல (கலை) சக்தி வாசனா சஹிதமாயிருக்கும். பக்தியினால் ரூபம் விரூபமாகிறது, சக்தியினால் விரூபம் ரூபமாகிறது. பக்திக்கு உபாசகத்துவம் உண்டானதினால் அது அங்க ஸ்தலத்தை யாச்ரயித்தது, சக்திக்கு உபாசியஸ்தலம் உண்டானதினால் அது லிங்கஸ்தலத்தை யாச்ரயித்தது. எக்காலத்தில் பிரபஞ் சோற்பத்தியானதோ அக்காலத்தே சகல ஜீவர்களும் மகா லிங்கத்தில் ஒடுங்கி நிற்பதாயினும் வியவகார தசையில் லிங்கத்தினின்றும் பின்னமாய்த் தோன்றி சுகதுக்காதிகளை யநுபவித்து, மீளவும் தாங்கள் எவ்விலிங்கத்தினின்று உற்பவித்தனரோ அவ்விலிங்கத்திலேயே லயப்பட விரும்புவர். இவ்வாறு விருப்ப முள்ளவர்களில் பிண்ட ஸ்தல - பிண்டஞான ஸ்தல - சமுசார நீக்க ஸ்தலங்களைத் தாண்டி லிங்க தாரணத்திற்கு வரும் வீரமாஹேச்வரரே சிரேஷ்டர்; சிவஜீவைக்கியம் இவர்களுக்கு முதலில் சித்திக்கிறது; ஏனையோர் இவர்கட்குப் பிற்பட்டவரே. இங்கு, மகாஸ்தலத்திற்கு வாச்சியமானது பரப்ரஹ்மம், அதே பரசிவம், அதே மகாலிங்கம் எனினுமாம். முற்காலத்தில் வடதேசத்தின்கண் புண்யஸ்தலமாகிய கல்ணாயபுரியிலே சிவபக்தியை உத்தாரணம் செய்தற்காக அவதரித்தவர் ஸ்ரீவசவேசர். சிவபெருமானே ஜங்கம வடிவுதாங்கி குருமூர்த்தமாயெழுந்தருளி லிங்கதாரணம் செய்யப்பெற்றவரும் இவரே. தர்மஸ்வரூபியும் கருணாநிதியும், சதாகாலம் அநேகமாயிரம் சிவகணங்களுக்குத் திருவமுது படைத்த வள்ளலும் இவரே. விஜ்ஜல மகாராஜனுக்கு மந்திரியாயிருந்து மகிமையுடன் வேதபாஹ்யரா பாஷண்ட மதத்தினரையும், ஏனைய புறமதத்தினரையும் வென்ற வீரரும் இவரே. இவரது தமக்கை மாது சிரோமணியாகிய நாகாம்பையின் திருவயிற்றில் அவதரித்தவர் ஸ்ரீசென்னவசவேசர், சிவலோபதிஷ்மான அசாதாரண வீரசைவமத ஷட்ஸ்தல ஞானசாரத்தை உலகில் பரவச்செய்த மகா புருஷரும் இவரே. இவருக்கு ஜனன காலத்திலேயே விதிப்படி லிங்கதாரணமாயினும், அந்த லிங்கம் அத்வாசோதன கலா வாஹனங்களையடைந்து கொடுக்கப்பட்டு, அதை யார்ச்சிப்பதே வீரசைவ தர்மமாயிருப்பதினால் ஸ்ரீ சென்னவசவேசர் தனக்கு மாமனாரான ஸ்ரீவசவேசரையே குருபாவத்தினால் கண்டு, அவராலே மேற்கூறிய ஸம்ஸ்காரத்தை யடையப்பெற்றார். தனக்கு மூத்தவரும் ஸம்ஸ்காராதிகாரியுமாயிருந்த ஸ்ரீவசவேசரை சென்னவசவேசர் குருபாவத்தினால் கண்டிருந்ததைப் போலவே,ஸ்ரீ சென்னவசவேசரிடத்தில் சிவஞானாதிக்யத்தைக் கண்டும், அவரால் ஷட்ஸ்தல சித்தாந்தபோதத்தை தான் அடைந்தும் ஸ்ரீவசவேசர் அந்த சென்னவசவேசரையும் பாத்தினால் கண்டிருந்தார். ஸ்ரீசென்னவசவேசர் சிவஞானமூர்த்தியே தானா யிருந்ததினால் பூதலத்தில் ஸ்ரீவசவாதி ப்ரமதர் எல்லோரும் காலோசிதமாய் ஞானோதயம் வரும்படியும் எச்சரித்து, எல்லோரையும் ஷட்ஸ்தல மார்க்க நிஷ்டராகும்படி செய்துகொண்டிருந்தார். ஸ்ரீவசவேசர் பக்தி பரவசத்தினால் ஜங்கமர்களிடத்தில் யோக்யதா விசேஷமொன்றையும் லக்ஷ்யம் செய்யாது தன் பிராணனைப் போலவே அவர்களைக் கண்டுகொண்டிருந்தார். ஸ்ரீ சென்னவசவேசர் அவ்வாறன்று. ஜங்கமர்கள் ஸ்வஸ்வரூப ஞானிகளாயிருக்கத்தக்கதே ஜங்கமலட்சணமென்று விதித்து, எல்லோரை யும் அவ்விதமான ஞானிகளாகச் செய்தற்கு அவசியமான நிர்ப்பந்தத்தையும் கற்பித்திருந்தார். ஷட்ஸ்தல ஞானிகளல்லாதவர்கள் தன்னரண்மனைக்கு பிரவேசிக்கக் கூடாதென்று கடினமான உத்திரவு செய்து, தன் அரண்மனையின் ஆறு வாயில்களிலும் ஆறு ஆட்களை (ஷட்ஸ்தல ப்ரஹ்மிகளை) காவல் வைத்து, வெளியிலிருந்து வருபவர்களையெல்லாம் ஷட்ஸ்தல விசாரமாய் வினாவி, அதற்குத்தக்க விடையளித்தவர்களையே உள்ளே விடும்படி ஏற்படுத்தியிருந்தார். இக்காரணத்தினாலேயே ஸ்ரீ சென்னவசவேசரை ஷட்ஸ்தல ஸ்தாபனாசாரியரென்று வீரசைவர்கள் நம்பியிருக்கிறார்கள். இவர் பாலபிரமசாரியாயிருந்து க்ருஹஸ்தாச்ரமத்தை ஸ்வீகரிக்காமல் நிராபாரி (யதி) யாதியேமுக்தரானார். இதன் விரிவை மகா காவ்யங்களில் காணலாம். இது பற்றியன்றோ ஸ்ரீமத் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிரபுலிங்கலீலை துதி கதியில் அடியில் வருமாறு சூசனை செய்யப்பட்டுள்ளது:- “வெள்ள வேணிப் பெருந்தகைக்கி யாஞ்செய் யடிமை மெய்யாகக் கள்ள வேடம் புனைந்திருந்த கள்வ ரெல்லாங் களங்கமறு முள்ள மோடு மெய்யடியா ராக வுள்ளத் துள்ளுமருள் வள்ள லாகும் வசவேசன் மலர்த்தா டலையால் வணங்குவாம்.” “பங்க வளற்று வழிமாற்றி யொரு நல்வழியைப் பகர்வார்போற் றங்கண் மதியிற் பலபிதற்றுஞ் சமயருரைக டமை நீக்கி யங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென் றருளும் வீரசைவ சிங்க நிலைத்த வருட்சென்ன வசவன் றிருத்தாள் சிரத்தணிவாம்.” “பரசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி யுரைமன மிறந்து நின்ற வொருசிவ லிங்கந் தன்னின் வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் றனைப் பொருந்து மருமைகொண் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.” - அங்கலிங்கோத்பவம் முற்றிற்று - * * * *அங்கஸ்தலம் (இதன் பிரிவு) - - - அறுசீர் கழிநெடிலடியாசிரிய விருத்தம் ஆதிதனி லரும்பத்தத் தலமாகே சத்தலம்பி னடுக்கும் பின்னர் சாதமுறும் பிரசாதித் தலமதன்பின் பிராணலிங்கத் தலமா கும்பின் போதுசர ணத்தலமா றாவதயிக் கியத்தலமாம் புகன்ற வற்றுண் மாதவமுன் புறுபத்தத் தலமொடதன் றிறமுரைத்து மகிழ்ந்து கேண்மோ. 1 (* மற்றொரு பிரிவு :- அங்கஸ்தலம் ஸ்தூல, சூக்ஷ்ம, காரணம் என மூன்று விதமாம்; அவை த்யாகாங்கம் - போகாங்கம் - யோகாங்கம் என்பன; அவற்றுள் சமுசாரபிராந்தி பரித்யாகமே லட்சணமாயுள்ளது த்யாகாங்கம்; சிவப்பிரசாத சேவையினா னுண்டான சுக பரிணாமமே லட்சணமாயுள்ளது போகாங்கம்; சிவத்தின் ஐக்யாநுசந்தானமே லட்சணமாயுள்ளது யோகாங்கம். ஸ்தூலதேகயுக்தமானது த்யாகாங்கம்; சூக்ஷ்ம தேகயுக்தமானது போகாங்கம்; காரண தேகயுக்தமானது யோகாங்கம். ஜீவாத்ம ஸம்ஞையுள்ளது த்யாகாங்கம்; அந்தராத்ம ஸம்ஞையுள்ளது கோகாங்கம்; பரமாத்ம ஸம்ஞையுள்ளது யோகாங்கலிங்கம். த்யாகாங்கலிங்க சம்பந்தம் தாரணையோக மென்று சொல்லப்படும்; போகாங்கலிங்க சம்பந்தம் தியாந யோகமென்று சொல்லப்படும்; யோகாங்க லிங்கசம்பந்தம் சமாதி யோகமென்று சொல்லப்படும். திரிவித லிங்கஸ்தலம் ஆசார பேதத்தினால் ஆறுபேதங்களாயின. எவ்வாறெனின், த்யாகாங்கம் - பக்தன் மஹேச்வரன் என இரண்ட பேதமாயிற்று; போகாங்கம் - பிரசாதி பிராண லிங்கியென இரண்டு பேதமாயிற்று; யோகாங்கம் - சரணன் ஐக்யன் என இரண்டு பேதமாயிற்று. 1இந்து ஆறு அங்கஸ்தலத்திற்கும் முறையே பிருதிவி - அப்பு - தேயு - வாயு - ஆகாயம் - ஆத்மா என்பவைகள் அங்கங்களாயிருக்கின்றன; சித்தம் - புத்தி - அகங்காரம் - மனம் - ஞானம் - பாவம் என்பவைகள் ஹஸ்தங்களாயிருக்கின்றன; க்ராணம் - ஜிஹ்வா - சக்ஷு - த்வக்கு - ச்ரோத்ரம் - ஹ்ருதயம் - என்பவைகள் முகங்களா யிருக்கின்றன. சிரததாபக்தி - நிஷ்டா பக்தி - அவதாந பக்தி - அநுபவ பக்தி - ஆநந்த பக்தி - சமரச பக்தி என்பவைகள் பக்திகளா யிருக்கின்றன. சந்தனாதி திரவியம் - மதுரமாதி திரவியம் - ச்வேதாதி திரவியம் - ம்ருத்வாதி திரவியம் - நாதாதி திரவியம் - பரிணாம திரவியம் என்பவைகள் சமர்ப்பிக்கத்தக்க பதார்த்தங்களா யிருக்கின்றன.) முதலாவது பத்தத்தலம் [அதாவது - சரீர பிராண தர்மாதிகளெல்லாமும் ஸ்த்திரமென்று தோன்றிக் கொண்டிருப்ப தாயினும் தன் க்ரியா விசேஷத்தினால் அந்த பிராந்தியை விட்டு சித்தத்தை என்றும் சிவபக்தி சதாசாரங்களில் செலுத்தி யிருத்தல் என்பது.] (இதன் உட்பிரிவு) பரமசிவ பத்தியுள னெவனவனே பத்தனெனப் படுவ னன்னோன் றருமமுரை செய்திடுத றலமாகு மதன் றிறத்த தலமூ வைந்தா நிரையினவை பிண்டமதன் ஞானமொடு சமுசார நீக்க மாசா னருளிலிங்க நீறுமணி முறைதரித்த லஞ்செழுத்து மறிந்து கூறல். 1 பத்திநெறி குருலிங்க வந்தனைசங் கமபூசை பகர்ந்த வன்னோர் வைத்தபிர சாதவுண வவரிடத்திற் செயுந்தான வகையு பாதி மெய்த்தநி ருபாதியொடு சகசமென மூதறிஞர் விளம்பா நின்ற வித்தலத்தில் வருநெறிக ளனைத்து மியற் றுதல் *பத்தர்க் கியல்பு மாதோ. 2 (* மற்றொரு பிரிவு :- அதாவது பக்தனானவன் குரு பக்தன் லிங்க பக்தன் ஜங்கம பக்தன் என மூன்று வகைப்படுவான். குரு பக்தன், லிங்க பக்தன், ஜங்கம பக்தன் முறையே காயிக க்ரியையினானும், மானஸிக க்ரியையினானும் உடல் பொருள் ஆவி ஆகிய இவைகளை சமர்ப்பணம் செய்தல். பக்தனை மூர்த்திப்ரஹ்மம் என வழங்குதலுமுண்டு.) முதலாவது (1) பிண்டத்தலம் [அதாவது - கிஞ்சிஜ்ஞனாய், மலத்ரயத்தினால் கூடிச் சரீராபி மானத்தைத் துறக்காமல் அவித்யா மோஹிதனாய், ப்ரஹ்மைக்ய ஞான தூரனாய், தன் கர்மா நுசாரமான தேவ திர்யங் மநுஷ்யாதி ஜந்மங்களை யடைந்து ஜனன மரணாத்மகமான சமுசார சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவன் தன் கர்ம பரிபாகத்தினால் மலத்ரயங்களைப் போக்கிக்கொண்டு எக்காலத்தில் சுத்தாந்தக் கரணனுமாவானோ அக்காலத்தில் பிண்டம் என்னும் ஸம்ஞை யுள்ளவனாகிறான் என்பது.] கலிநிலைத்துறை பண்டொ ராயிரம் பிறவியிற் பயின்றபுண் ணியத்தான் மண்டு தீவினைப் பரப்பறப் புனிதமா மனத்தைக் கொண்ட தேகியே கடல்குடித் துயர்குறு முனிவ பிண்ட நாமமுற் றிடுமென வறைகுவர் பெரியோர். 1 உலகி றந்துசிந் மயவ விகாரியா யொளியா யிலகு றும்பர சிவன்றன தஞ்சமா யிருந்த வலகி றந்துள சீவர்க ளநாதியா மவித்தை மலமு றும்பரி சாற்பல பிறவியின் வருவார். 2 அனையர் நெஞ்சிடை யியக்கும யேசனுற் றருள்வன் பனிய விந்துகாந் தத்தினிற் புனல்கதிர்ப் பளிங்கிற் கனலும் வெவ்வழல் வித்தினின் முளையெனக் கலந்து முனைவர் சிங்கமென றுரைத்திட மலையொடு முனிவோய். 3 வெற்பெ ழுங்கதி ரிடத்தில்விம் பயப்பதி விம்ப முற்ப வம்பெறு மாறென வொருபிர மத்தின் முற்ப கர்ந்திடு சீவனோ டீசனா முறைமை கற்பி தம்பெறு மென்பர்பல் கலைநெறி கற்றோர். 4 அறிவ தேவடி வாம்பர தத்துவ மதனி னிறைவ தாகிய பிரேரகத் துவமொடு நிலைத்த மறிவில் போத்துருத் துவமிகு போக்கியம் வருமாற் குறைவி லாதெழு முக்குண பேதமே கொண்டு. 5 மடிவி லாதமுக் குணவடி வாகிய மாயை முடிவி லாதமெய்ச் சிவத்துறு மக்குண மூன்றும் விடம மேவுற விளம்புமுப் பொருட்பெயர் விரியுங் கடிவி லாநிலைப் பிரமமா மொருபொருட் கண்ணே. 6 தக்க சத்துவ வுபாதிகொள் பிரமசை தந்ய மொக்க வீசனாஞ் சத்துவ ரசோமய முயிரா மிக்க தாமத முடையதே போக்கிய விளைவா மிக் கணக்கின்முப் பொருளும்வந் துறுஞ்சிவந் திசைந்து. 7 சுத்த மென்றுள வுபாதியிற் றோய்ந்திடு மீசன் மெய்த்தி டும்பதி யாகிய பிரேரகன் மிசிர முய்த்த போத்துருப் பசுவென வறைவர்பே ருணர்வோ னத்த னவ்வுயிர் சிற்றுணர் வுடையதென் றறியே. 8 மிகுதி கொண்மறை யுணர்வதவ் வியத்தமாம் பெயர்கொள் பகுதி நண்ணினர்க் கமோககா ரணியெனும் பரையே தகுதி கொண்டிடு சுத்தமா மசுததமுஞ் சாற்றிற் றொகுதி கொண்டிடு மோககா ரணியெனத் துணியே. 9 மாயை கொண்டிறை பற்பல மூர்த்திகண் மருவுந் தூய தன்றெனு மவித்தையாற் றோன்றுவர் பலரா யேய சீவர்க ளநாதியே முத்தனவ் வீசன் றீய பந்தனை யநாதியே யுற்றுளர் சீவர். 10 பரம ஞானமற் றநாதியாம் பாசமுற் றநாதி கரும வேதுவா லடுத்துள காயங்கண் மருவி மிருக மாதியாம் பற்பல பிறவியின் விரவித் தெரும ருஞ்சுழன் றிடும்பெருந் திகிரிபோற் சீவன். 11 சாதி யாயுவோ டுணவது தரும்பிட மத்திற் கேது வாயுறுங் கருமமெந் திரமெனச் சுழல்வோர்க் காதி யாமிறை யியக்குவோ னாய்க்கரி யாகிப் போத கம்புரிந் தருளுநன் னெறியினைப் பொருந்தி. 12 கூறு சீவனும் வினைபரி பாகமே கொண்டு மாறு மாமல வாதனை மருவினோ னாகி யாறு மாமுடி புனைந்தருள் பரசிவ னருளின் பேறு கூடுறச் சுத்தமா மனமொடு பிறக்கும். 13 பாக மாகிய நல்வினைப் பயன்கொடு சுத்த மாகு மாமன முன்னிடத் தங்கண னருளா லேக மாஞ்சிவ பத்திதோன் றுறுமவ னீற்றுத் தேக மோடுநற் பிண்டமென் பெயர்கொடு செறியும். 14 - பிண்டத்தலம் முற்றிற்று - * * * இரண்டாவது (2) பிண்டஞானத்தலம் [அதாவது - சரீரங்கள் நச்வரமானவைகள், ஆத்மாக்களைப் பார்க்கிலும் ஈச்வரன் பின்னனும் அவகைளுக்குப் பிரேரகனுமா யிருப்பவன் என்னும் ஞானம் பிண்டனானவனுக்கு எக்காலத்திலுண் டாகுமோ அக்காலத்தில் பிண்ட ஞானி என்பது.] கலிவிருத்தம் உற்றிடு முடலுயி ருணர்வி வேகமே பெற்றவ னெவனவன் பிண்ட ஞானியென் றற்றம தறுமலை யமர்ந்த மாதவ கற்றறி புலவர்மெய் கழறு வாரரோ. 1 உடலுயி ரெனுமுல காய தன்பொறி யடலுயி ரென்னுமற் றொருவ னன்றியே புடைவரு புத்தியே யென்னும் புத்தனிவ் விடலுறு மிவைகளான் மாவின் வேறவாம். 2 உயிரின்வே றாகிநின் றுணரப் பட்டிடுஞ செயிருறு முடலொ டிந்திரிய புத்தியி னயலழி வரியவான் மாவுண் டாமென நயமுட னுணர்பவன் பிண்ட ஞானியே. 3 வினைவழி திரிதரு மெய்யும் வேறதாய் நினைவரு நித்தவான் மாவு நித்தமா யனையவான் மாவின்வே றாய வீசனும் பினமுற வறிபவன் பிண்ட ஞானியே. 4 - பிண்டஞானத் தலம் முற்றிற்று - * * * மூன்றாவது (3) சமுசார நீக்கத் தலம் [அதாவது - இங்ஙனம் பிண்ட ஞானோதயமான மகாத்மாவுக்கு ஸம்ஸ்கார வல்லமையினால் மனைவி, புதல்வன், உடல், பொருள் முதலிய சமுசாரங்களைத் துச்சமாய்க்காணும் புத்தியுண்டாய் வைராக்கிய முள்ளவனாதல் என்பது.] கலிவிருத்தம் சுத்தம துறுமனந் தோன்று நித்தியா நித்திய விவேகிபா னின்ற வரதனா சத்தியின் மிகுசமு சாரம் விட்டொழி புத்திவந் துறுமெனப் புகல்வர் குற்றுளார். 1 பெண்டெழு வாய்தரு பேறி மைப்பினில் விண்டிடு மிம்மையு மேய புண்ணிய முண்டொழி துயர்முத லுறுது றக்கமுங் கண்டெவர் விரும்புவார் கற்று ளோரினே. 2 பிறந்தவர்க் குண்மையே பெறுமி றப்புமற் றறிந்தவர்க் கன்னதே பிறப்பு மிவ்வகை செறிந்துள பிறப்புட னிறப்பிற் சீவனு மறிந்திடு சகடமே போல வந்துறும். 3 மீனொடு கமடமே வெண்பற் பன்றிமா மானிட வரிமுத லாக வந்துள வேனைய பிறப்பினு மெய்து மாயவன் றானுமம் மரணநோய் தள்ள வல்லனோ. 4 ஆவிமுன் வினைவசத் தந்த ணாதியாய் மேவுறு சாதியின் விரவித் தோன்றியே தாவுற வடருமுத் தாப வங்கியால் வேவுறு நிலைமையாம் விளம்ப வேண்டுமோ. 5 பொய்த்திடா தடையுறும் வினையிற் போதரு மத்தியான் மிகமுத லாய வெந்துயர்க் கொத்தினான் மிகுமிடர் கொண்டு ளோர்தமக் கெய்த்திடா தமைதலெவ் விடத்துண் டாகுமோ. 6 ஆதியத் தியான்மிகம் பவுதி கம்பினா மோதுதெய் வீகமூன் றாவ தாகுமாற் போதுமத் தியான்மிகம் புறமுட் கொண்டிரு பேதமுற் றிடுமெனப் பேசு வாரரோ. 7 வளிமுத லனதர வரல்பு றத்ததா முளினது மடிவில்கா மாதி யுய்க்குதல் களியர சாதிநோய் பவுதி கங்கழு தளியிடர் முதலதெய் வீக மாகுமால். 8 இனைய வெந்துயர் பலவிசைந் துகட்டுறும் வினையொடு திரிதரு முயிர்க்கு விண்ணிடை யெனினுமிம் மண்ணிடை யெனினு மோர்கணந் துனியறும் படிசிறு சுகமு மின்றரோ. 9 மின்னினு மலையினும் விளக்கெ ழுஞ்சிகை தன்னினு நிலையறத் தபுசெல் வத்தினை மன்னுறு பொருளென மதிப்ப ரோகண மென்னினு மறிஞரோ டிருந்து ளோருமே. 10 மலசல நிறைதரு கடத்தை வன்றுய ரலைபடு துரும்பினை யழியு மின்னினு நிலையறு மிவ்வுட றன்னை நிந்தைசெய் புலைமனை தன்னையார் பொருந்து வார்களே. 11 நித்தியா நந்தசிற் சொரூப நின்றிட மித்தையா மியல்புடைத் துயர வீடென வைத்தவா கத்தினை மகிழ்ந்தி ருந்திடும் புத்தியார் செய்குவர் புலவர் தம்மினே. 12 ஓதியா னிடர்தரு முடம்பின் மக்களின் மாதரி னுறவினின் மற்று ளோர்தமிற் கோதுறு தனத்தினிற் குலத்திற் போக்குறு காதலி னநித்தியங் காண்ப னென்றுமே. 13 பொறிகளின் விரத்தியாய்ப் பொருவி றம்மையே யறிவுற விழைவுடை யறிஞர்க் காழ்துயர் மறிவுறு குடும்பநோய் மாற்று மேதுவிற் செறிவுறு முளமெனச் செப்பு வாரரோ. 14 ஆசறு மனமுட னநித்த நித்தமுந் தேசுற வுணர்ந்துநற் றெய்வ வாழவினு நேசம தகன்றுள நெறியி னோனிடைப் பாசம தறுசிவ பத்தி தோன்றுமால். 15 - சமுசார நீக்கத் தலம் முற்றிற்று - * * * நான்காவது (4) குரு காருணியத் தலம் [அதாவது - முற்கூறிய பிண்டஞானி சமுசார நீக்கத்தல சம்பந்னனாகவும் ப்ரஹ்ம ஜ்ஞான சம்பாதநார்த்தமாய் ஸ்ரீ ஸத்குரு சந்நிதியை யடைந்து த்ரிவித தீக்ஷையையடைதல் என்பது.] அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மலர்தலை யுலக மெல்லா மலிபெரும் புகழோ டொன்றி யிலனென விவறன் மோக மிரித்துத்தத் துவமு ணர்ந்து புலநெறி கடந்து சாந்தம் பொருந்திச்சித் தாந்த மோடு பலகலை தெரிவுற் றையம் பாற்றிட வல்ல னாகி. 1 அறநெறி வாய்மை மேவி யாரிய குலத்தாற் போந்த முறைநெறி யொழுக்க மெய்தி முத்திநே யத்த னாகிப் பொறையொடு பொருந்தி யக்க மணிதிகழ் பூதி யென்று நிறைவுற வணிந்தி லிங்க நிலைபெற வுடற ரித்து. 2 அகத்துறு தியாக மேவி யருச்சனை புரிவோ னாகி யுகப்புறு மங்க லிங்க யோகதத் துவமு ணர்ந்தே யிகப்பறு தலங்க ளோர்வுற் யெதியத் துவித ஞானந் தகச்சிவ முணர்த்த வல்ல தயங்குஞ்சீர்க் குரவன் றன்னை. 3 மாசறு மனத்த னாகி மதியுடை விராகி யானோன் பாசம தனைத்து நீக்கும் பரசிவ முணரத் தோன்று நேசமோ டடைவன் பாம்பி னௌ¤திரைக் கடல்வ றப்ப வாசம நஞ்செய் தோங்கு மகத்தியப் பெயரி னானே. 4 திங்களா றேனு மாண்டொன் றாயினுந் தேசி கன்றன் பொங்கருள் காணுங் காறும் புரிந்துநற் பணிகள் காணி னங்கருள் சீல சீட னஞ்சலி செய்து நின்றே பங்கமாம் பிறவி நோயெற் பரிந்தருள் புரிக வென்பான். 5 புனிதமா ணாக்க னின்ன புகன்றரு ளிரந்து நிற்ப வனையவன் றனது சத்தி பாதமுற் றறிந்து பின்னர் வனைதபு *தீக்கை யோடு மேவுவித் தருள்வ னென்ப தனிவரு பரமா நந்த தத்துவக் குரவ னன்றே. 6 ( * தீக்கை என்பது - “தீக்ஷா” என்னும் வடசொற்றிரிபு. தீ க்ஷ என்னும் இரண்டு அக்ஷரங்கள், குருவினது அநுக்கிரகத்தினால் சிவஞான சம்பந்தம் (க்ஷீயதே ) கொக்கப்படுவது, மலத்ரயம் (க்ஷீயதே) நாசப் படுத்துவது எனப் பொருள் கொள்க.) மூவகை யுறுமத் தீக்கை முறைதரு வேதா* வென்றும் தாவின்மந் திரம தென்றுந் தகுதிகொள் கிரியை யென்று மேவுறு மவற்றுள் வேதா மெய்க்குரு காட்சி யானே யாவிகொள் சிவம்வி ளங்க லத்தமத் தகயோ கத்தால். 7 (* பாவ லிங்கத்தை காரண சரீரத்தில் நிலைக்கச் செய்தல்.) மந்திர மதனை யேதன் மைந்தனுக் குபதே சித்தல் சிந்தைசெய் +மந்தி ரப்பேர்த் தீக்கையாங் குண்ட மாதி தந்திரங் கொண்டு செய்த றக்கநற் ++கிரியை யென்ப ரந்தம தடைந்த வந்தக் கிரியையை யறைது மாதோ. 8 (+ பிராண லிங்கத்தை சூக்ஷ்ம சரீரத்தில் ஸ்தாபித்தல். மநுதீக்ஷை என்றும் சொல்லப்படும். ++ இஷ்ட லிங்கத்தை ஸ்தூல சரீரத்தில் தாரணம் செய்தல்.) தீங்கறு திங்க ணல்ல திதிகால வார மொன்ற வோங்குறு பூதி தாம்பூ லத்தொடு முதவிப் பத்தர்க் கீங்கற லாட லாதி யியற்றிவெண் டுகில்பு னைந்து பாங்குறு சீடன் றன்னைப் பகர் முறை யருக ழைத்து. 9 உத்தர திசையை நோக்கி யுற்றதன் பாங்கர்ச் செய்த சித்திர மண்ட பத்திற் குணக்கெனுந் திசையை நோக்கி வைத்தருள் புரியு மாசான் மலிசிவத் துதிக டாஞ்செய் வித்தக விருளி ரிக்குந் தியானமும் விரவு விப்பன். 10 முன்னர்நன் னீற்றுப் பட்ட மொழியிடம் வழாத ணிந்து பின்னர்மெய்க் குரவ ராயைம் பிரமமே வடிவா யுற்ற தன்னிகர் கும்ப நீரச் சற்குரு வழியின் வந்த செந்நெறி யுடைய வாசான் சிதறுக சீடன் மீது. 11 ஆண்டரு கிருந்த சுத்த னாகிய மாணாக் கன்றன் மாண்டரு வலக்கா தின்கட் பலப்பிணி மருந்தாய் நல்லோர் வேண்டுமஞ் செழுத்த மெல்ல விளம்பு சொருபஞ் சந்தம் காண்டகு மிருடி மிக்க கடவுணன் னியாசஞ் சொல்க. 12 - குரு காருணியத் தலம் முற்றிற்று - * * * ஐந்தாவது (5) இலிங்கதாரணத் தலம் [அதாவது - எந்த வஸ்துவினிடத்தில் இந்தச் சராசராத்மகமான ஜகத்துலீனமாய் மீளவும் உற்பத்தியாவதெதுவோ, சர்வ சாக்ஷியாயும் சிதானந்தமாயுமுள்ளதெதுவோ, லிங்க மென்னும் அபிதானமுள்ளதெதுவோ, அந்தப் பரப்ரஹ்மமே பாஹ்யேந் த்ரியங்களுக்ககோ சரமாய்ப் பாவனைக் கதீதமாய்ச் சித்ரூபமாயிருக்கிற அந்த ஜ்யோதிர்லிங்கம் என்று அநுசந்தான பூர்வகமாய் சத்குரு தத்தமான இஷ்டலிங்கத்தைச் சீடன் அந்தர்லிங்கா நுசந்தானனா யிருப்பினும் அல்லது அஸத்மர்த்தனா யிருப்பினும் இதை அபேத புத்தியினால் ஸ்தூ சரீரத்தில் தரித்துக்கொண்டே யிருத்தல் வேண்டும்; ஏனெனின், - சத்குருவின் கருணையுடன் கூடி மோக்ஷார்த்தியான சீடனது இருதயத்திலிருக்கும் சிந்மூர்த்தி தாரணமாதலான் என்க.] அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சந்திர காந்தத் தேனுந் தபனகாந் தத்தி லேனுஞ் சுந்தர சயிலந் தன்னிற் றோன்றிய சிலையி லேனும் வந்துறு படிகத் தேனு மகிழ்வாண லிங்கத் தேனு முந்தழ குறுமி *லிங்க மொன்றுகொள் கிற்க மன்னோ. 1 ( * அத்யதிஷ்டத்தசாங்குல, நிருபம், நித்ய, நிராமய, நிர்க்குண, நிரஞ்ஜன, நிர்த்வந்த்வ, அவ்யக்த, அவ்யவ, பராத்பர, அத்விதீய ப்ரஹ்மம் என்னும் பதத்திற்கு வாச்யமான பரவஸ்துவே இந்த லிங்கம்.) இலக்கண முழுது மொன்றி யிலங்குமா னைந்து மாடிக் குலக்கடி மலர்சந் தாதி கொண்டருச் சிக்கப் பட்டு விலக்கரு மநுவாற் சுத்த மேவுமவ் விலிங்கந் தன்னிற் கலைக்கதி வழாது சைவ கலையையுய்த் திடுவ னாசான். 2 சீடன துயிரை யந்தச் சிவலிங்கந் தன்னி லுய்த்துப் பீடுறு மிலிங்க மன்னோன் பிராணனி லுறவி ருத்தி யேடென விரும்பு மாசா னிவ்வகை யேக பாவங் கூடுற வியலி லிங்கங் கொடுக்கவச் சீடன் கையில். 3 இலங்குழிப் பிராண லிங்க மினியநின் பிராண னேபோற் சலந்தவி ருனக்கு மைந்த தரிப்பதெவ் விடத்து மென்றும் விலங்குவ தன்றெங் கேனும் வீழ்ந்திடின் மெய்யி னின்று நலங்கிளர் முத்தி சேர்வா னல்லுயிர் விடுக வல்லே. 4 நூனெறி முழுது மாய்ந்த நுண்ணுணர் வுடையோன் றன்னாற் றானினி திவ்வா றோதிச் சாற்றிடப் பட்ட சீடன் மேனியி னுயிர்வாழ் காறும் விடாதுநன் குறத்த ரிக்க கூனிள மதிய ணிந்த குழகன்மெய்ச் சிவலிங் கத்தை. 5 புண்ணிய மனைத்தி னுக்கும் புகலிட மாகி நின்றங் கெண்ணரும் பவம கற்று மிலிங்கதா ரணம தென்று கண்ணுத லருளிச் செய்த காமிகா திகளை யோர்ந்த நுண்ணுணர் வுடைய வெல்லா முனிகளு நுவல்வ ரன்றே. 6 தகைபெறு பரம லிங்க தாரண முட்பு றம்பாம் வகைபெற விரண்டா மென்பர் மாதவ ரவற்று ளாதி பகவனென் பெயர்பு னைந்த பரமசிந் மயலிங் கத்தை யகமதி லுறத்த ரித்த லாந்தர மாகு மன்றே. 7 மூலகா ரணமாய் ஞான மூர்த்தியா யின்ப மாகி மேலதா யுண்மை யாகி விகற்பமோ டழிவு மின்றி மாலிலா துலகி றந்த பிரமமா மாலிங் கந்தான் சாலவீ டுறுதல் வேண்டுந் தக்கவ ரடைத லாமே. 8 வேதமா முடிய னைத்தும் விளங்குறப் பிரம மென்னுஞ் சோதிமா லிங்க மெல்லா வாவிக டோறு நிற்கு மாதி *யா தாரமாசி லகமெனு +மிதய நன்றிக் கேதுவாம் ++புருவ நாப்ப ணெனவரு மூன்றிடத்தும். 9 ( * பாயுவுக்கும் இலிங்கத்திற்கும் நடுவில் (நான்கிதழுடைய) முக்கோண வடிவாகிய இடமானது மூலாதாரமென்று சொல்லப்படும். + அநாஹதம் எனப்படும் பன்னிரண்டிதழுடைய இடமானது இருதயம் என்று சொல்லப்படும். ++ புருவத்திற்கு நடுவிலுள்ள ஆக்ஞை எனப்படும் இரண்டு இதழுடைய இடமானது புருவ நாப்பண் என்று சொல்லப்படும். இவ்வாறு யோகஸிகோபநிஷத்தில் கூறப்பட்டிருத்தல் காண்க.) அழிவற வரிதா யென்று மகண்டமாய்ப் பிரம மென்னு மொழிபெறு பரம லிங்க முத்திநே யத்த ராகி வழிபடு பவர்க்கா கத்தன் மாயையாற் கண்டி தரப்பட் டொழிவற விருக்கு மென்றே யுரைப்பர்நுண் ணுணர்வி னோரே. 10 சரமுட னசரமென்னச் சாற்றிய வுலகு திக்குங் கருமமோ டிலய மெய்துங் காரண மதனா லென்று முரைமன மிறந்து ஞான வொளியுரு வாகி நின்ற பிரமம திலிங்க நாமம் பெறுமென விசைப்பர் தக்கோர். 11 சாற்றரும் பரம தாய சச்சிதா நந்த லிங்க மாற்றவும் பெரிதாந் தன்மை யடைதலி னானு மன்றித் தோற்றுறு முலகி னுக்குக் கருப்பமாந் தொடர்பி னானும் போற்றுறும் பிரம நாமம் பொருந்துமென் றறிந்து கொண்மோ. 12 மருவுமா தாரத் தேனு மிதயநன் மலரி னேனும் புருவமா நடுவி லேனும் பொருந்திய வொன்றி லென்றும் விரவுமா சோதி லிங்கம் விடாதநு சந்தா னந்தா னிரவிலாந் தரவி லிங்க தாரண மென்பர் மேலோர். 13 ஆடக வுருவ மாக வணிகொண்மூ லாதா ரத்திற் பாடல வொளியி மைக்கும் பவளம்போ லிதயந் தன்னி னீடொளி யுபலம் போல நிகழ்தரு புருவ நாப்ப ணாடரு முணர்வி லிங்க ஞானயோ கிகள்சிந் திப்பார். 14 புறத்துறு தார ணத்திற் புகல்கோடி மடங்கு மிக்க சிறப்புறு மகவி லிங்க தாரணந் தீர்ந்து பாதி பிறப்பிடை மறிதல் செய்யார் பிறங்கொளி யிலிங்கந் தன்னைத் துறப்பற விதய மொன்றத் துணிவொடு தரித்து ளோரே. 15 உள்ளத்தி லிலிங்கந் தன்னை யொழிவற விடாது பற்ற றெள்ளுற்ற வான்ம வித்தை சேர்ந்தமை வுறுத லம்ம வள்ளற்றண் ணளிநல் லாசான் மகிழ்செய்குற் றேவ லென்னத் தள்ளற்ற விவைக டாமே காரணந் தனிமுத் திக்கே. 16 ஊனமாம் விடய நீத்தே யுளந்தடு மாற வில்லா மானமா யோகி கட்கு மனத்தெழுந் திலங்கா நின்ற ஞானமா லிங்கத் தன்றி நவின்றுள புறத்தி லென்றுந் தானுறா துளவி ருப்பென் றுணருதி தவத்தின் மேலோய். 17 வேதனோ டரிய ரன்சீர் விண்முழு தாளி யாதி மாதிர மன்ன ரீண்டு மனிதர்கந் தருவர் சித்தர் தீதறு முனிவ ரெல்லாஞ் சிந்மய மாய கத்துட் சோதிகொள் பரமா நந்த லிங்கமே துணிந்து காண்பார். 18 சச்சிதர நந்த மாகுந் தற்பர லிங்கந் தன்னை யிச்சையா லறிஞ னானோ னெத்திறத் தானு மென்று மச்சமார் துயர மெல்லா மருக்கன்முன் னிருளே போல வெச்சமாய் நிலாது பொன்ற விதயத்திற் றியானஞ் செய்க. 19 அத்தனை யகந் தரிக்க வசத்தனா யினும தாஅன்று சத்தனே யெனினு ஞான தற்பர லிங்க மேயென் புத்தியின் றிட்ப மெய்திப் புறத்திலிங் கந்த ரிக்க வித்தக னெறி யுணர்ந்த வீரசை வர்கடா மன்றே. 20 திரம்பெறு மிலிங்க மூன்று திறத்ததாந் தூல லிங்கம் பரம்பெறு சூக்கு மம்பின் பராற்பர மென்னத் தூலங் கரம்பெறு மிட்ட லிங்கங் கருத்தது சூக்கு மந்தா னிரம்புறு மிலிங்கந் தானே நிகழ்பராற் பரமென் றோர்வாய். 21 மாட்சியாய்ப் பிரம* மிக்க சிவமென மருவி யன்றே யாட்சியா மநிட்ட மெல்லா மகற்றியே யிட்ட மாகிக் காட்சியா னிகழ்வ தாஞ்சிற் கனபரி ணாமலிங்கம் பூட்சியூ டகலா தென்றும் புலமையோர் தரிக்க மாதோ. 22 ( * இச்செய்யுளில் பிரமம் என்றதினால் இவ்விஷ்டலிங்கத்தை யாதோ ஒரு லிங்கமென்று நினையாது பரப்ரஹ்ம ஸ்வரூபமென்று பாவிக்கவேண்டும் என்பதாம்.) சிரமொடு களநன் மார்பு சிவந்துள வுதரங் கக்கங் கரமெனு மிவற்றி லொன்றின் கட்சிவ லிங்கந் தாங்கல் வரமிழி நாபி யின்கீழ் வார்சடை நுதியிற் பின்பாற் புரைதரு மிடத்தி லென்றும் பொருந்துறத் தரிக்கொ ணாதால். 23 தம்பொரு ளாமி லிங்கந் தன்னைவள் ளிதழ விழ்ந்த வம்பலர் கந்த மாதி மருவுற முறையிற் கொண்டு கம்பமின் மனத்தி னோடு கரபீடத் தினிலர்ச் சிப்ப ரிம்பரி னென்றுஞ் சுத்த ரெனப்படும் வீர சைவர். 24 உரம்பெறு முத்தி நேய மூற்றமாம் வீர சைவர் நிரந்தரம் விடாது பற்று நிகழ்கர பீட பூசை பரம்புற மியற்றும் பீட பூசையிற் பராரை வெற்பி லிருந்துமை பாக னோடொப் பென்பதை யுணர்த்த வல்லோய். 25 பனிமல ரயன்மா லாதிப் பண்ணவர் கோத மாதி முனிவர ரனைவ ருந்தம் முடிமிசை யென்றுங் கொள்வர் தனிவரு மிலிங்கம் வாட்கட் பொறிமுதற் சத்தி யெல்லாம் புனைமல ரளக மீது பொருந்துறத் தரிப்பர் மன்னோ. 26 சதுமறை யுள்ளு மிக்க சாத்திரங் களினு மீரொன் பதுவித புராணத் துள்ளும் பகர்தரு காமி கந்தான் முதல்வரு மாக மத்து மொழிந்திடப் பட்டி டுஞ்சந் ததமுமெய் விடாவி லிங்க தாரணம் *விறற்சை வர்க்கே. 27 ( * சங்கர சம்ஹிதை கோஷிப்பதாவது :- ஓ! புத்திரனான ஷண்முக, யாதொருவன் குருவினால் பூஜிக்கப்பட்டுக் கொடுத்த தனது இஷ்ட லிங்கத்தைக் கரம் என்னும் பீடத்தில் வைத்து அந்த மஹா லிங்கத்தில் லயித்த மனமுடையவனாய் பாஹ்யக்ரியையில் பற்றில்லாதவனாய்ப் பூஜிக்கின்றானோ அவன் வீரசைவன் என்பது.) பங்கயற் கிறைவ னின்மெய் பவித்திர மெனவி ருக்கொன் றிங்குரைப் பதனாற் றூய்தா விலங்குறுஞ் சிவலிங்கந் தான் றங்குறத் தரிக்கத் தக்க தாகுமச் சைவ லிங்க மங்கலம் புனித தீக்கை மருவுறா னடைந்தி டானால். 28 உன்றது வகோர மாகி யுருத்ர பாவத்தி னீங்கு மென் *றெசு ருரைத்த லாலே லிங்கதா ரகனாஞ் சைவன் றுன்றுபா வங்களெல்லாந் தொலைப்பவ னென்பர் மேலோர் தென்றலங் குன்றி னுற்ற செஞ்சடை முனிவ ரேறே. 29 ( * யஜுர்வேதம் கோஷிப்பதாவது :- ஓ! ருத்ரா, உமது யாதொரு [லிங்கரூபமாகிய] தேகமானது மங்கல ஸ்வரூபமாயும், சாந்தமாயும், புண்ணியவான்களிடம் விளங்குவதாய முளதென்பது, இக்காரணத்தினால் சிவ [லிங்க] சம்பந்த முடையவன் பாவமற்றவன்.) நித்தலு நியமஞ் செய்து நிமலபூ சையின்கட் பட்ட சித்தம துடைய னான சிவலிங்க தாரகன்றா னெத்திற மலமு நீங்கா விருடெறு கதிரின் மாய்க்குஞ் சுத்தம துறும்வி பூதி தோன்றுறப் புனைவ னன்றே. 30 - இலிங்கதாரணத்தலம் முற்றிற்று - * * * வீரசைவ சமய விசாரம் இதுவரையில் பிண்டத் தலம், பிண்ட ஞானத் தலம், சமுசார நீக்கத் தலம், குருகாருணியத் தயம், இலிங்கதாரணத் தலம் என்பன சொல்லப்பட்டன; இவற்றால் முறையே, ஸத்வாசனா ரூபமான சக்தி பாதத்திற்குச் சமீபமான ஈற்றுத்தேக பாவமுள்ளவ னெவனோ அவன் பிண்டன் என்பதும், இந்தத் தேகத்தில் நித்யாநித்ய விசாரமுள்ள விவேகியானவனெவனோ அவன் பிண்டஞானி என்பதும், இந்தச் சம்சார பிண்டத்தில் வெறுப்புத் தோன்றி மோக்ஷதாக முள்ளவ னெவனோ அவன் சம்சாரத்தி னின்றும் விடுபட்டவன் என்பதும், இவ்வித வெறுப்புள்ள சீடனைச் சம்சாரத்தி னின்றும் தீக்ஷையினால் விடுவிக்கக் கருணையுள்ளவ னெவனோ அவன் தீக்ஷா குரு என்பதும், அந்தச் சற்குருவின் கருணையினால் ப்ராண லிங்க ஐக்ய சம்பந்தமுள்ள சீடனெவனோ அவன் லிங்கதாரகன் என்பதும் பெறப்பட்டன. இவ்விதமான சீடனே வீரசைவன் என்பதும், அவனுக்குத் தீக்ஷையும் லிங்க தாரணமும் அத்யாவசிகமாய் விதிக்கப்பட்டன என்பதும், அன்னோனது லக்ஷணம் இத்தன்மைத்து என்பதும் நன்கு அறியப்பட்டன. அந்த வீரசைவனது லக்ஷண மறியப்படினும் ஏனைய சமயிகளின் லக்ஷணங்களையுமறிதல் அவசியமாதலால் அவை ஆகம புராணங்களில் விரிவாய்ச் சொல்லப்பட் டிருப்பினும், வடமொழியில் முக்கியமாய் விளங்கும் பாகங்களை மட்டும் ஈண்டுத் தமிழில் எழுதலாயிற்று. அவை வருமாறு:- பாரமேச்வராகமம் சம்யக்கான ஜ்ஞானத்தைக் கொடுப்பது, பாசங்களின் சமூகத்தைக் கெடுப்பது, இந்தத் தாநக்ஷபனங்கள் என்னும் இரண்டின் சாசனத்தில் தீக்ஷாசப்தம் பிரசித்தம். அந்தத் தீக்ஷையானது நிராதார தீக்ஷை யென்றும், சாதார தீக்ஷை யென்றும் இரு வகைப்படும். அவற்றுள், சிவபிரான் நிராச்ரயனாய்த் தீவிர சக்தி நிபாதத்தினால் விஞ்ஞான கலர் பிரளயாகலர் இருவர்களுக்குச் செய்யும் தீக்ஷையே நிராதார தீக்ஷையென்று சொல்லப்படும். குரு மூர்த்தியை யாச்ரயித்து மந்த சக்தி நிபாதத்தினால் சகலர்களுக்குச் செய்தலே சாதார தீக்ஷை யென்று சொல்லப்படும். காரணாகமம் பின்னும், சாதார தீக்ஷையானது ஸபீஜ தீக்ஷை, நிர்பீஜ தீக்ஷை, சிந்மய தீக்ஷை என்று மூன்று வகைப்படும். அவை முறையே, கர்ம பக்தி ஞான காண்டங்களுக்குரிய தீக்ஷைகள் எனப்படும். பாரமேச்வராகமம் அவற்றுள், நிர்பீஜ தீக்ஷையானது சத்யோநிர்வாண தீக்ஷை, சிரந்நிர்வாண தீக்ஷையென்று இரண்டு பேதமுள்ளதா யிருக்கும். அவற்றுள், அத்யந்த விரக்தனான சீடனது அநேக பவங்களில் செய்யப்பட்ட சஞ்சித கர்மங்களையும், மற்றும் அந்தச் சஞ்சித கர்ம ராசியில் அக்காலத்தில் தரித்திருந்த சரீரத்தைக் கைப்பற்றி அநுபவித்துக் கொண்டிருந்த ப்ராரப்த கர்மங்களையும், பின்னர் பவாந்தரங்களில் அநுபவிக்க வேண்டி ஆகாமி கர்மங்களையும் சோதித்து, சத்யோந் முக்தியைக் கொடுக்கும் தீக்சையே சத்யோ நிர்வாண தீக்ஷை யென்று சொல்லப்படும். இன்னும், சீடனது சஞ்சித கர்மங்களையும் ஆகாமி கர்மங்களையும் கெடுத்து, தீக்ஷோத்தர க்ரியாவஸாந பர்யந்தம் அநுபவித்துக்கொண்டிருந்த ப்ராரப்த கர்மங்களின் போகாந்தத்தில் முக்தியை யடைவிக்கும் தீக்ஷையே சிரந் நிர்வாண தீக்ஷையென்று சொல்லப்படும். காமிகாகமம் பின்னும், அந்தச் சிரந்நிர்வாண தீக்ஷையானது ஆஜ்ஞாதீக்ஷை, உபமாதீக்ஷை, ஸ்வஸ்திகாரோஹணம், விபூதிபட்டம், கலசாபிஷேகம், லிங்காயதம், லிங்கஸ்வாயதம் என்று ஏழுவகைப்படும். அவற்றுள், குருவினது ஆஜ்ஞா பரிபாலனத்தில் சமர்த்தமானதே ஆஜ்ஞாதீக்ஷையாம். புராதனர்களின் சமயாசாரத்திற்கு ஸத்ருசமானதே உபமா தீக்ஷையாம். ஸ்வஸ்திகம் என்னும் மண்டலத்தின்மேல் சீடனை யுட்காருவித்து, மந்திர நியாசத்தைச் செய்து, மந்திர பிண்டமாகச் செய்தலே ஸ்வஸ்திகாரரோஹணமாம். ஆகமோக்த ஸ்தானங்களில் அவ்வம்மந்திரங்களினால் விபூதி தாரணத்தைச் செய்தலே விபூதிபட்டமாம். பஞ்ச கலசங்களில் தீர்த்தோதகத்தை நிறைத்து, சிவகலா ஸ்தாபனத்தைச் செய்து அந்தக் கலசோதகத்தினால் சீடனுக்கு ஸ்நபநம் செய்வித்தலே கலசாபிஷேகமாம். ஆசாரியன் சீடனுக்கு உபதேசித்து அளிக்கவேண்டிய லிங்கத்தை அர்ச்சனைசெய்து சீடன் காணும்படி செய்தலே லிங்காயதமாம். அந்த ஸ்ரீகுருநாதனால் உபதேசிக்கப்பட்ட ப்ராணலிங்கத்தைச் சீடன் பக்தியினால் ஸ்வீகரித்து, தனது உத்தமாங்காதி ஸ்தானங்களில் தரித்தலே லிங்கஸ்வாயதமாம். வாதுளாகமம் பின்னும், அந்த ஸ்வாயத தீக்ஷையானது வேதா தீக்ஷை, க்ரியா தீக்ஷை, மந்த்ர தீக்ஷை என்று மூன்று விதப்படும். அவை யெவ்வாறெனின் :- குருவானவர் சீடனது மஸ்தகத்தில் ஆகமோக்த விதானத்தினால் சிவசாஸன(மந்திர)த்தைத் தியானித்து அவ்வவ்விடங்களில் செய்யவேண்டிய சிவதத்வ தீக்ஷையே வேதாதீக்ஷையாம். தீக்ஷோத்தர க்ரியையோடு ப்ராண லிங்கோபதேசம் செய்தலே க்ரியா தீக்ஷையாம். தேவதா பீஜ கீலக முதலியவைகளுடன் மந்த்ரோபதேசமும் செய்தலே மந்த்ர தீக்ஷையாம். கிரணாகமம் பின்னும், சிவபிரான் சர்வானுக்ரஹ கர்த்ருவா யிருத்தலால், சிறுவர் மூடர் போகா சக்தர் முதலியவர்களுக்கும் அநுக்ரஹம் செய்வது யுக்தமெனின், அந்தந்த அநுக்ரஹம் அவரவர்களின் சம்ஸ்கார பூர்வகமாயிருக்கும். அந்த சம்ஸ்காரத்தினாலேயே முக்தியுண்டா மெனின், க்ரியை, ஞானம், விரதம் முதலான உபாயங்களுக்குக் காரண மில்லாமற் போகும். இவ்வாறன ஆக்ஷேபங்களை பரிஹரிக்கிறார். சிலர் எவ்வாறிருப்பினும் அவர்களுக்கு அவ்வாறே சிவபிரான் அநுக்கிரஹம் செய்வார். அது எவ்வாறெனின் :- சிலர் க்ரியா யோக்யர். அவர்களுக்கு அந்த க்ரியையினாலே மோக்ஷ முண்டாகும். சிலர் ஞான யோக்யர், சிலர் சர்யா யோக்யர், சிலர் யோக யோக்யர். இவ்விதமாய் எவர்களுக்கு எவ்விதத்தினால் மோக்ஷ ப்ராப்தி கூறப்பட்டதோ, அது சிவபிரான் க்ருபையினாலாகும். அக்காரணத்தினால், ஞானாத் யுபாயங்களுக்குத் தீக்ஷையே காரணமென்பது விரும்பத்தக்கது. ஆதலால், தீக்ஷையானது மோக்ஷ சாதனமா யிருக்கும். உபாயமே நியாமகமா யிருக்கும். இன்னும், சிவபிரான் சர்வாநுக்ரஹத்திற்குக் கர்த்ருவான காரணத்தினால் உபாயங்கள் சிவபிரானால் சொல்லப்பட்டுள்ளன. கருட வாசகம் பின்னும், பரம காரணனான சிவபிரான் சர்வாநுக்ரஹனாக இருப்பினும், ப்ராஹ்மணாதிகள் உயர்வு தாழ்வு பாவங்களினா லிருக்கும் காரணத்தினால், அவரவர்களின் ஸம்ஸ்காரம் அவ்வாறே யாகவேண்டும். ஆனால், பலன் அவ்வாறு வேண்டுவதில்லை என்னும் ஆசங்கையை ப்ரச்நோத்தர முறையால் பரிஹரிக்கிறார். ஸம்ஸ்காரம் ஆத்மாவுக்காகும். ஜாதிக்கு மில்லை சரீரத்திற்கு மில்லை. ஜாதிக்கு ஸம்ஸ்காரமாயின், ஒருவன் தீக்ஷிதனாகையில் யாவரும் தீக்ஷிதராதல் வேண்டும். ஆதலால், ஜாதிக்கு ஸம்ஸ்காரமில்லை. ஆதலால், ஸர்வாநுக்ரஹரான சிவபிரான் சித்ரூபரான ஆத்மாக்களை யநுக்ரஹிப்பன். பின்னும், சமஸ்த பாசங்களும் நீங்கும் பொருட்டுத் தீக்ஷை செய்யப்பட்டது. தீக்ஷை செய்தும் கர்மாதிகள் எக்காரணத்தினால் நீங்குவதில்லையென்னும் ஆசங்கையைக் கிரணாகமத்தில் ப்ரச்நோத்தர முறையில் த்ருஷ்டாந்த பூர்வகமாய்ப் பரிஹரிக்கிறார். எவ்வாறெனின்:- சித்த மந்திரங்களினால் அமூர்த்தமான (சரீரமில்லாத) விஷ சக்திக்கு க்ஷய முண்டாவது போலவும், அங்குரோத்பத்திக்குக் காரணமான விதையானது வறுக்கப்படுவதுபோலவும், தீக்ஷாகாலத்தில் பிரசித்தமான மந்திரங்களினால் அநேக பவங்களில் செய்யப்பட்ட பவபீஜங்களான கர்மங்கள் தடுக்கப்பட்டன. ப்ராரப்த கர்மம் போகாந்தத்தில் நசிக்கும். பின்னும், தீக்ஷையினால் சமஸ்த பாசங்கள் தொலைவதாயின், தீக்ஷையாகியும் சரீர ஸ்திதியானது எவ்வாறு சம்பவிக்கும் என்னும் ஆசங்கையை த்ருஷ்டாந்த பூர்வகமாய்ப் பரிஹரிக்கிறார். கடமானது நிர்மாணமாயினும் சுழன்றுகொண் டிருக்கும் குலால சக்கரம் போல, தீக்ஷையாகியும் தீக்ஷோக்த க்ரியா ஸ்தான பர்யந்தமாய்ப் ப்ராரப்த கர்மவாசனையினால் சரீர ஸ்திதியானது சம்பவிக்கும். இன்னும், கடத்தினுள் ளிருக்கும் தீபமானது கடம் உடைந்து போகையில் எல்லாப் பக்கத்திலும் எவ்வாறு பிரகாசிக்குமோ அவ்வாறு தீக்ஷிதன் தேஹாலஸாநத்தில் பரமுக்தனாவான். இவ்வாறு கிரணாகமம் கூறுகின்றது. இந்தப் பூர்வோக்தமான ஸபீஜாதி தீக்ஷைகளினால் அமலனானவனே முக்தன் எனப்படுவான். அந்தச் சிவதீக்ஷைக்கு யோக்கியமான சிவ சமயத்தைச் சொல்லுகிறார்:- வாதுளாகமம் ஓ! ஷண்முக, சிவசம்பந்தமான தரிசனம் என்றால் மதமானது நான்கு விதமா யிருப்பதென்று அறிய வேண்டும். அந்தச் சதுர்வித சைவத்தைச் சொல்லுகிறேன் கேட்கக் கடவை. அவை முறையே சாமானியசைவம், மிசிரசைவம், சுத்தசைவம், வீரசைவம் என்பனவாம். அந்த நான்கு விதமான சைவங்களில் முதலில் சாமானியசைவ லட்சணத்தைச் சொல்லுகிறேன். ஒரு சாமானிய சைவன் விபூதிபட்டம் மாத்திரத்தானே சுத்தனாய் ஸ்வயம்பு லிங்கத்தை யாயினும், தேவ தானவ மானவாதிகளினால் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை யாயினும் எவ்வெக் காலங்களில் காண்பானோ அவ்வக்காலங்களில் அர்ச்சனையை யாயினும், பிரதஷிண நமஸ்காரங்களை யாயினும் செய்தல் வேண்டும். சிவநாம சங்கீர்த்தனம், சிவவசனம், சிவபக்தரிடத்தில் பிரீதி இவைகளுள்ளவனா யிருத்தல் வேண்டும். இந்தச் சிவார்ச்சனாதிகளில் சம்பூர்ண நியமமில்லா திருந்தால் சாத்தியமாகும் வரையிலாயினும் செய்தல் வேண்டும். இம்மட்டும் சாமானிய லக்ஷணம் நிரூபிக்கப்பட்டது. இனி மிசிரசைவ லட்சணத்தை நிரூபிக்கிறேன். மிசிர சைவன் சிம்ஹாசனத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்க பூஜையையும், ஆவரண ஸ்தரான விஷ்ணு பார்வதி ஷண்முகன் விக்னேச்வரன சூரியன் இவர்களின் பூஜையையும் நன்றாய் ஆதரித்தல் வேண்டும். இவன் பூர்வோக்தர்களான பஞ்சாவரணர் முதலான சமஸ்த தேவர்க ளிடத்திலும், அந்தந்தத் தேவதா மந்திரங்க ளிடத்திலும் கலந்திருத்தலினால் சமான பக்தியுடன் சமஸ்த தேவர்களையும் சிவ பரிபூர்ண பாவத்தினால் சிவலிங்கத்தில் பரிணாமம் செய்தல் வேண்டும். இம்மட்டும் மிசிரசைவம் சொல்லப்பட்டது. இனிச் சுத்தசைவத்தைச் சொல்லுகிறேன். சிவத்தை யுத்தேசித்திருப்பதினால் சுத்தத்துவ சப்தமும், சிவத்தின் தசையினால் பிறந்த காரணத்தினால் சைவ சப்தமும் உண்டாயின. சுத்த - சைவ என்னும் சப்த சமூகம் சுத்த சைவ மென்று சொல்லப்படும். அந்தச் சுத்த சைவனது தசையினால் பிறந்தவர் சிவப் பிராஹ்மணரெனப்படுவர். சிவத்விஜர் என்று சொல்லப்படுகிற அந்தப் பிராஹ்மணர் ஆதிசைவர் எனப்படுவர். அவர் யாவரெனின்:- கௌசிகன், கச்யபன், பரத்வாஜன், அத்திரி, கௌதமன் இந்த ஐவரும் சிவபிரானது பஞ்ச முகங்களில் தீக்ஷிதரானவர்கள். இந்தக் கௌசிகாதி ரிஷிகளின் குலத்திற் பிறந்தவர்கள் சிவத்விஜரெனப்படுவார்கள். காமிகாகமம் முதலிய இருபத்தெட் டாகமங்களிலும், வேத சாஸ்திர முதலியவைகளிலும், கிரமத்துடன் செய்யப்பட்ட அப்பியாச முள்ளவனும் சிவ வ்ரதமுள்ளவனுமாயிருப்பன். கர்ஷணம் முதல் பிரதிஷ்டை யீறான கர்மங்களையும், சிவலிங்கப் பிரதிஷ்டை முதல் நித்யோத்ஸவ மீறான கர்மங்களையும், நித்யோத்ஸவ முதல் பிராயச்சித்த மீறான கர்மங்களையும் அறிந்து எல்லாவற்றையும் ஆசரித்தல் வேண்டும். சிம்ஹாஸனாதி மந்திரங்களினாலும், அந்தந்த மந்திரங்களின் யந்திர க்ரியைகளினாலும், மஹா முத்திரை முதலான முத்திரைகளினாலும், ஷடங்க முதலான நியாசங்களினாலும், ஆஹ்வானம் ஸ்தாபனம் சந்நிரோதனம் முதலானவைகளினாலும், ஷோடசோப சாரங்களினாலும், லிங்கத்தை சிம்ஹாசனத்தில் பூசித்தல் வேண்டும். இந்தக் கிரமத்தினால் செய்யப்பட்ட சிவலிங்க பூஜையானது ஆத்மார்த்த பூஜை யென்றும் பரார்த்த பூஜை யென்றும் இரண்டு வகைப்படும். தனது ஆசாரியனால் கொடுக்கப்பட்ட லிங்கத்தினிடத்திலும், ஸ்தண்டிலத்தினிடத்திலும், இருதயத்தினிடத்திலும் செய்யும் பூஜையானது ஆத்மார்த்த பூஜை யென்று சொல்லப்படும். பரார்த்த பூஜை பின்னர்க் கூறப்படும்; கேட்பாயாக. யாதொரு காரணத்தினால் தேவர்ஷி தானவ மானவாதிகளினால் நிர்மிக்கப்பட்டுக் கிராமம் கிரி கஹ்வர முதலானவைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் பூஜையே பரார்த்த பூஜை யென்று அறிதல் வேண்டும். அந்தப் பூஜையானது சகல பிராணிகளுக்கும் இதம் செய்யாநிற்கும். இவ்விதமாய்ச் சொல்லப்பட்ட இரண்டு விதமான பூஜையானது சிவ த்விஜனால் செய்யப் படத்தக்கது. சிவாவரணங்களலன்றி வேறேயிடங்களிலுள்ள விஷ்ணு முதலிய அந்யதேவர்களின் பூஜையைச் சுத்தசைவன் ஸ்வார்த்தமாகியும் பரார்த்தமாகியும் செய்யக்கூடாது. மறத்தலின் தசையினாலயினும், சம்சாரத்தின் லோபத்தின் தசையினாலாயினும் அவ்வாறு யாதாயினும் செய்வானாயின், அந்த ராஜ்யத்திற்கும் அந்த ராஜனுக்கும் கேடுண்டாகும். இவ்வர்த்தத்தை வ்யக்தம் செய்கிறோம். ஓ ஷண்முக! பரார்த்த பூஜையைச் செய்யும் சுத்தசைவன் சமஸ்த சிவாவரணஸ்தரான ப்ரஹ்ம விஷ்ண்வாத தேவர்களைச் சிவத்தின் பரிவாரபாவனையினால் நன்றாய்ப் பூஜித்தல் வேண்டும். சிவாவரணஸ்த ரல்லாதிருந்த பிரமன் விஷ்ணு சப்தமாதர்கள் முதலான தேவர்களைப் பூஜித்தலாகாது. சிவமந்திர பிண்டமான தனது இருதய கமலத்தில் ஆஹ்வானத்தின் தசையினால் சம்யுக்தமான சிவலிங்கத்தில் மந்திரபதியான வர்ணாவாசமுதல் சிவாவாச பர்யந்தமான ஆவாச மந்திர பாவத்தைப் பார்க்கிலும் லிங்கபூஜை அதிகமாம். அந்தரங்கார்ச்சனையைச் செய்யும் சுத்தசைவன் மந்திர ஸ்வரூபமான சரீரமுள்ளவனாவன். ஆதலால், அவன் பரசிவமாயிருப்பன். இவ்விதமாய்ச் சுத்தசைவமானது நிரூக்கப்பட்டது. இனி வீரசைவத்தைக் கேட்பாயாக. ஓ தேவீ! சமஸ்தசைவங்களில் வீரசைவமே அத்யுத்தமமானது. அந்த வீரசைவன் செய்யும் சிவபூஜை எளிதானது. பூஜாதிகளின் கிரியையும் எளிதானது. ஓ மகாதேவீ! வீரசைவமானது அற்ப க்ரியையினாலே வெகு பலன்தருவது. இவ்வீரசைவமல்லாமல் எஞ்சிய சமஸ்த சைவங்களும் வெகு கிரியைக ளுள்ளனவாயும் அற்ப பலன் தருவனவாயு மிருக்கும். ஆதலால், நானாவிதத்தாலும் வீரசைவமதமானது சுகமானதாகும். அறிவினா லடைவதற்கு யோக்யமானதும், கோப்யமானதும், மோக்ஷ பதத்திற்குக் காரணமானதும் எந்தச் சைவமோ, அதுவே வீரசைவம் என்று சொல்லப்படும். எந்தக் காரணத்தினால் ஒருவன் இந்த ஜகமுழுவதிலும் விசேஷப்பட்டவனென்று சொல்லப்படுவனோ, அவனே வீரன் என்று சொல்லப்படுவன். சிவபெருமானிமித்தம் கொடுக்கப்பட்ட ஜீவத்வ தசையினாலும், வீராகமத்தில் உதயமானதின் தசையினாலும், வீர-சைவ என்னும் சப்த த்வயத்தின் சம்யோகதசையினாலும் வீரசைவம் அறியப்பட்டது. ஓ புத்திரனே! வீரமாஹேச்வராகமத்தில் வீரசைவமானது சாமானிய வீரசைவம், விசேஷ வீரசைவம், நிராபார வீரசைவம் என மூன்று வகையாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த த்ரிவித வீரசைவத்தில் சாமானிய வீரசைவ லட்சணத்தைச் சொல்லுகிறோம். வீர சைவாசாரியனது ஹஸ்தத்தினதும் வீரமாஹேச்வரனது மஸ்தகத்தினதும் பரஸ்பர சம்பந்த தசையினாலும், வீபூதிபட்டத்தைத் தரிப்பதின் தசையினாலும், அந்தச் சீஷன் லிங்கதேஹி என்று அறியப்படத்தக்கவன். அப்படிப்பட்ட மாஹேச்வரன் எல்லாப் பாவங்களினின்றும் விடப்படுவன். ஸ்ரீகுருவினால் கொடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஸ்ரீபஞ்சாக்ஷரீ மந்திரத்தினால் சிரத்தி னிடமாயினும், கண்டத்தி னிடமாயினும், கக்ஷத்தினிடமாயினும், வயிற்றினிடமாயினும், மார்பினிடமாயினும் தரித்தல் வேண்டும். ஒரு காலத்தி லாயினும், இரண்டு காலங்களி லாயினும், மூன்று காலங்களி லாயினும் சிவபூஜை செய்தல் வேண்டும். சாமானிய வீரசைவனானவன் ஸ்ரீகுருவினிடத்திலும், சிவலிங்கத்தினிடத்திலும், ஸ்ரீ விபூதியினிடத்திலும், எக்காலத்தும் பக்தி செய்தல் வேண்டும். இவ்விதமாய்ச் சாமானிய வீரசைவம் சொல்லப்பட்டது. இனி விசேஷ வீரசைவத்தைக் கேட்பாயாக. வீரசைவ தீக்ஷாகர்த்ருவான தேசிகோத்தமன் சுத்தசைவ தீக்ஷாவிதானத்திற்கு எவ்வாறோ, அவ்வாறே மண்டப நடுவிலிருக்கும் வேதிகையின் மேலதான வர்ணமண்டல முள்ள ஸ்தண்டிலத்தின்மேல் சிவகும்பத்தை ஸ்தாபித்து, அந்தக் கும்பத்தில் சிவபிரானைப் பூஜித்து, தீக்ஷோத்ஸவத்திற்கு வந்த பெரியோர்களையும் பக்தர்களையும் விபூதி தாம்பூலம் முதலானவைகளினால் சந்தோஷப்படுத்தல் வேண்டும். சிவாசாரியன் எஞ்சிய தீக்ஷாக்ரமம் எல்லாவற்றையும், மலத்ரய நிரஸனத்தையும், வீரமாஹேச்வர தீக்ஷாபடலத்தில் கூறியவாறு செய்து, சீஷனை க்ருபாத்ருஷ்டியால் பார்த்து, தத்வ தேஹமாகும் வண்ணம் சிந்தித்தல் வேண்டும். சிவகும்பத்திலிருந்து தீர்த்தோதகத்தினால் ஸ்ரீபஞ்சாக்ஷரீ மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்தல் வேண்டும். நாதம் என்னும் சக்தியையும், பிந்து என்னும் சிவத்தையும் கலைகள் என்னும் சிவாவயவங்களையும் பாவித்து, அந்தந்த ஸ்தலங்களில் நியாசம் செய்தல் வேண்டும். ஓ ஷண்முக! ஷட்கர்மத்தையும், ஷடங்கத்தையும், ஷடத்வாவையும், பூர்வோக்தமான சிவாங்காவயவங்களில் நியாசம் செய்தல் வேண்டும். அதன்பிறகு, பஞ்சப்ரஹ்ம நியாசம் செய்தல் வேண்டும். பின்னும், மந்திரங்களுக்கு மூலமான ஸ்ரீபஞ்சாக்ஷரீ மந்திரத்தை யுபதேசித்தல் வேண்டும். அம் மந்திரோபதேசமான பின்பு ப்ராணலிங்கோபதேசம் செய்தல் வேண்டும். எஞ்சிய சமஸ்த க்ரியைகளையும் வீரசைவ தீக்ஷா மார்க்கத்தில் சொல்லப்பட்ட முறையுடன் ஆசரித்தல் வேண்டும். இவ்விதமாய் வீரசைவ தீக்ஷிதனான வீரமாஹேச்வரன், தேஹ ப்ராணங்களின் வர்த்தனை வேறாகாதபடி ஏகமாய்க்கூடித் தன் ப்ராணத்தை லிங்கத்தில் கல்பித்தல் வேண்டும். அந்த நீக்க மில்லாத பாவத்தின் சமூக தசையினால் ப்ராணம் லிங்கம் என்னும் இரண்டும் ஏகத்வத்தை யடையச் செய்தல் வேண்டும். ஒரு பவி த்ருஷ்டி விழுந்த வஸ்துவுண்டோ அதை விடல் வேண்டும். சுத்த திரவியத்தைச் சம்பாதித்து லிங்காங்க ஸ்தலங்களின் அர்ப்பணாவதானங்களை நடத்தல் வேண்டும். இத்யாதி வ்ரதங்களுள்ளவனே விசேஷ வீரசைவன் என்று சொல்லப்படுவன். இவ்விதமாய் விசேஷ வீரசைவம் என்னும் பக்த ஸ்தலம் சொல்லப்பட்டது. இனி நிராபாரம் என்னும் ஜங்கமஸ்தலத்தைக் கேட்பாயாக. நிராபார வீரசைவன் சமஸ்த சம்சார சுகங்களைவிட்டு, தண்டம் கௌபீனம் காணாயாம்பரம் ஜடாபந்தம் வல்கலம் முதலியவைகளைத் தரித்து, சம்சார வியாபாரங்களினால் விடப்பட்ட சித்தத்தைச் சிவலிங்கத்திலே யிக்கச் செய்தல் வேண்டும். முண்டித சிரமுள்ளவனா யிருப்பினும், வ்யாக்ராஜினம் க்ருஷ்ணாஜினம் முதலிய சிவ லீலாகதனங்களைச் சூசிப்பிக்கும் சின்னங்களைத் தரித்தல் வேண்டும். பிக்ஷாடன போஜியாய், நியதாஹார முள்ளவனாய், அற்ப சுகமுள்ள சம்சாரத்தினால் விடப்பட்டவனா யிருத்தல் வேண்டும். இவை முதலிய ஜங்கமஸ்தலத்தின் ப்ரவர்த்தனை யுள்ளவன் நிராபார வீரசைவன் என்று அறியப்படத்தக்கவன். இவனே உத்க்ருஷ்டனான சிவன். இவ்விதமாய் நிரூபிக்கப்பட்ட வீரசைவ க்ரமம் ப்ராயச்சித்த மில்லாதிருத்தலாம். இந்த வீரசைவனுக்கு ப்ராணலிங்க தாரணமானது விசேஷ வ்ரதம் என்று சொல்லப்படும். ப்ராணலிங்க வ்ரதத்திற்கு லோபமாயின், ப்ராண த்யாகத்தைக் காட்டிலும் வேறு ப்ராயச் சித்தமில்லை. ஆதலால், சாவதானனாய்ச் சிவலிங்கத்தைத் தரித்தல் வேண்டும். ஹஸ்தபீடத்தில் லிங்கத்தை ப்ரமாதமில்லாமல் தரித்தல் வேண்டும். ப்ரமாதத்தினால் லிங்கம் நழுவுமாயின், அந்த லிங்கத்தின் கூடவே ப்ராணனை விடல் வேண்டும். ப்ராணலிங்கம் பதிதமாகக் கண்டும் எந்த மனிதனானவன் ப்ராணதாரணை செய்து கொண்டிருக்கிறானோ அவனைச் சண்டாளன் என்று அறிதல் வேண்டும். பின்னும், அவன் சிவத்ரோஹியா யிருப்பதினால் அவனை ஸ்பரிசிக்கலாகாது. சுத்தசைவன் லிங்கபதன முதலான சைவ வ்ரத லோபத்தில், ப்ராயச்சித்த விதானத் தினாலும், அகோராதி மந்திர யந்திரங்களின் ஆசரணையின் தசையினாலும் சுத்தனாவன். சுத்தசைவன் தனது இஷ்டலிங்கம் பதனமாயினும், கெடினும், சுடப்படினும், சோரனால் களவாடப்படினும், எலி காகம் சுனகன் வானரம் என்பவைகளால் கொண்டுபோகப்படினும், அகோர மந்திரத்தை ஒரு லக்ஷ உரு ஜபித்து, சாஸ்த்ரோக்த ப்ரகாரமாய் ஆசாரியனால் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கொண்டு, சுத்தி யடையச் செய்து பூஜித்தல் வேண்டும். பீட விஷயத்திலும் இவ்வாறே செய்தல் வேண்டும். சைவ வ்ரதங்களின் க்ரியாலோபத்தில், நூற்றொரு தரம் காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதாயின் வ்ரதாதிகள் சுத்தத்தை யடையும். ஓ ஷண்முக! இந்த சாமானியசைவம், மிசிரசைவம், சுத்தசைவம், வீரசைவம் என்னும் சதுர்வித சைவ சர்வஸ்வயத்தை சம்க்ஷேபித்து உனக்குச் சொன்னோம். இவ்விதமாய் சிவ தீக்ஷைகளினால் மோக்ஷமடையும் சிவ சமயம் சொல்லப்பட்டது. * * * முக்தனானவனோ வென்றால், ஜீவன்முக்தன், அபரமுக்தன், பரமுக்தன் என மூன்று விதமா யறியப்படுவான். எவ்வாறெனின்:- ஸ்கந்தபுராணம் பூர்வோக்தமான சிரந்நிர்வாண தீக்ஷையினால் தீக்ஷிதனான வீரசைவன் ஜீவன்முக்தன் என்று சொல்லப்படுவான். சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், சாயுஜ்யம் என்னும் சதுர்வித மோக்ஷங்களில், சாலோகயாதி த்ரிபதஸ்தரான மந்த்ரேச்வரர், மந்த்ரமஹேச்வரர், புவனேச்வரர் முதலானவர்கள் அபரமுக்த ரெனப்படுவார்கள். சாயுஜ்யமுக்தரே பரமுக்தரென்று சொல்லப்படுவார்கள். அவர்களில் ஜீவன் முக்தரைப் பற்றிச் சொல்லுகிறார். அந்தச் சிரந்நிர்வாண தீக்ஷை யானவனிடமிருப்பதோ, அவனது ஜீவனம் வறுக்கப்பட்ட விதைபோல் மீளவும் பவத்திற்கு வராததாம். அவனது சம்சார தரிசனம் ப்ராரப்த கர்ம போகமே அந்தமாயுள்ளதாம். அப்படிப்பட்ட வீரமாஹேச்வரன் தனது தேஹாவசானத்திலேயே ஜீவனோபாதியில் பரமுக்தியை யடைந்தவனான காரணத்தினால் ஜீவன்முக்தன் என்று சொல்லப்படுகிறார். ஜீவன்முக்தரின் அங்கஸ்தலம் லிங்கஸ்தலம் என்னும் நூற்றொரு ஸ்தலங்களும் சொல்லப்பட்டன. ஈண்டு, அடியில் வரும் செய்யுட்களைக் கவனிக்க:- சிவஞான சித்தியார் புறச்சமய நெறிநின்று மகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம வறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்துஞ் சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேதச் சிரப்பொருளை மிகத்தெரிந்துஞ் சென்றாற் சைவத் திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார். பிரபு லிங்க லீலை எவ்வகைச் சமயத்திற்கு மிறைவனே யெனினு நேயஞ் சைவநற் சமயத் துற்றான் சைவத்தும் வீர சைவத் தவ்வவர் பிறவிநீக்கு மல்லமன் விருப்ப முள்ளான் மைவரிக் கயனெ டுங்கண் மடவரா லென்றான் வள்ளல். உரைக்குமெச் சமயத் திற்கு முத்தர பாகஞ் சைவந் தரிக்குமச் சைவத் திற்குத் தரமென வீர சைவந் தெரிக்குநற் காமி காதி சிரத்தினிற் றிகழுங் கண்டா யரிக்குரற் சிலம்ப ரற்று மடிமலர்த் தடங்க ணல்லாய். புறந்தரு சமயம் புக்குப் புறமலாச சமயத் தெய்தி யறந்திகழ் சைவ முற்றாங் கதிற்சரி தாதி யாற்றிச் சிறந்துள வீர சைவஞ் சேர்ந்தபின் வீடு நண்ணு நறுந்தளிர் கவற்று மேனி னனைமலர் வல்லி யன்னாய். அருமறை முடியுஞ் சீர்சா லாகம முடியு மொத்துப் பொருமற மிலாமன் முற்றும் பொரளினை விளங்கக் காட்டித் தருமுறை யதனால் வீர சைவமே தலைமைத் தாமில் விருமறு வறுநன் னூறு மிதிற்பிர மாண மாகும். ஆவுறு பிணிகெட வாவின் பால்கறந் தாவினை யூட்டல்போ லாண வங்கெட ஆவியு ளமலனை யங்கை தந்துபின் ஆவியு ளமைவுற வாக்கு மாரியன். ஆகமம் புகனெறி யடைவ னாயினுஞ் சோகமில் சைவநற் றுறையை நன்றெனச் சேர்குத லரிதது சேர்வ னாயினும் ஏகலிங் கயிக்யனா குதலன் றெண்மையே. சுத்தசாதகம் இருக்குமுன் னான்கின் முடிவிலெண் ணான்கா யிலங்கிடு முபநிட மவையே வருக்கமு மிரண்டாம் பூருவ மென்றும் வயங்கிடு முத்தர மென்றும் சுருக்கம தின்றி யத்தியான் மீகம் சொற்றிடும் பூருவ பாகத் திருக்குக ளின்றி யங்கலிங் கைக்யஞ் செப்பிடு முத்தர பாகம். விட்டலக் கணையும் விடாதலக் கணையும் விட்டுவிடாத லக்கணையும் திட்டம துறவே தேர்ந்திடிற் பந்தந் தீர்ந்திடல் விட்டலக் கணையாம் இட்டநல் லதிட்டா னம்மது தான யிருத்தலே விடாதலக் கணையாம் எட்டரு சிவத்துக் கங்கமா யிருத்தல் விட்டுவி டாதலக் கணையே. மேலொரு வடிவை யெடுத்ததே யாகின் மேவுமிவ் வுடலிங்கே வீழும் மேலொரு வடிவை யெடுத்த தின்றாகின் மேவுமிவ் வுடலிங்கே வீழா மேலொரு சிவத்தைச் சீவன்சென் றடையு மேவுமிவ் வுடலிங்குத் தானே மேலொரு சிவத்தின் வடிவதா மருளாய் வெளியதா யுலகுகண் டிடவே. சகச நிட்டை பொதுவுறத் தருமம் பண்ணிப் புகல்வினைச் சமம தாகி அதுவிது வென்னுங் சித்த மமலமா யநித்த நித்தம் இதுவென வுணர்ந்த நித்தத் திகபரத் திச்சை யற்ற சதுரர்க ளிடத்திற் பாசந் தகர்ந்திடும் பத்தி தோன்றும். பத்திதான் பதிந்த காலைப் பகரங்கத் தலம டைந்து சுத்தியா யங்க மந்தத் தொல்லருட் சத்தி யாகி நித்தியா நந்த லிங்க நேரதாய்த் தரிக்கப் பட்டுத் தித்தியா நின்ற வின்பந் திருத்தியிற் களிக்கு மென்றும். கணபாஷித ரத்தினமாலை அட்ட விதங்களி னாலிட்ட லிங்கத்தை யர்ச்சித்ததை விட்டக லாதுன்னல் பிராணலிங் கார்ச்சனை மெய்த்திலிங்கத் துட்டன் மனம்லயித் தாற்பாவ லிங்கமி தொள்ளியமா நிட்டைமெய்ப் பூசை யிதுவாகு மூன்றி னியமங்களே. சிவஞான தீபம் திருந்திய கற்பக லாத மட நல்லார்க்குஞ் சிவலிங்க தாரணையாஞ் செம்மை யோர்க்கு மருந்தவ மாகிய ரிமசாரி யோர்க்கு மருமறை யினந்த முணர்ந்தங்கி மூன்றும் பொருந்துமுப சாதகர்க்கு முலக வாழ்வு பொய்யெனவே மெய்யுணர்ந்த பொலிவி னோர்க்கு மிருந்தலமே லாசூச மில்லை யாகு மிரவியெதி ரிருளணுகா வியல்பி னாமே. - வீரசைவ சமய விசாரம் முற்றிற்று - * * * ஆறாவது (6) விபூதிதாரணத்தலம் [அதாவது - சதாசாரததிலும் சத் க்ரியையிலும் சிரேஷ்டனான பக்தனுக்கு மனோபாவ கரணங்களில் ஜ்ஞானரூபமான லிங்கதாரணம் அவசியமா யிருத்தல்போல, சிவபெருமானுடைய மஹதைச்வரிய மளிக்கும் விபூதிதாரணம் வேதவிதிப்படியே ஆசரணீயமானது. ஏனெனின், அவ்விதமான தாரணம் கர்மகுணம் சேராது பவத்தையொழித்துச் சுத்தம் செய்யானிற்கு மாதலான் என்க.] அறுசீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம் பூதிதனை யணிந்ததனிற் பட்டகலாக் கருத்தொடுநற் புனித னாகிச் சோதிமய மாயசிவ மெனும்பொருளை விளக்குதலாற் றூய்தாம் வெண்ணீ றோதலுறு பசிதமொடு பசுமமெனப் பட்டிடுமென் றுளத்திற் கொண்டு போதுமவ னியாவனவ னுயர்ந்தவனிங் குபாதியறும் பூதி யுள்ளோன். 1 மந்திரமே முதலாய நெறிவழா தழலினிடை வந்து தோன்றுஞ் சுந்தரமா கியநீற்றை யுபாதிகமென் றறைகுவர்நூ றுணிந்த நல்லோர் பந்தமறு மதனாமம் விபூதியொடு பசிதமணி பசுமஞ் சார நிந்தையறு மிரக்கையெனக் காரணமைந் துற்றலகி னிகழு மன்றே. 2 பூதியெனப் படுஞ்செல்வ வேதுவினாற் சிவமாகும் பொரு டிகழ்த்து மேதுவினிற் பசிதமிகு பாவங்க டமையச்சத் திசைத்த லாலே யோதலுறும் பசுமமா மிடரிடைநின் றகற்றுதலா லொன்றுஞ் சாரந் தீதகல வனைவரையு மளித்தலினா லிரக்கையெனச் செப்பு நூலே. 3 தோன்றியிடு நந்தைபத் திரைசுரபி சுசீலையொடு சுமனை யென்ன வான்றிறமோ ரைந்துமெழிற் சத்தியோ சாதமுத லரன்மு கத்தி லேன்றமுறை கபிலைநிறங் கருமைமிகும் வெண்மையெழுந் திலங்கு செந்தீக் கான்றபுகை நிறஞ்செம்மை யெனுமைந்து மவற்றினிறங் கண்டு கொண்மோ. 4 முன்னிகழும் விபூதிசத்தி யோசாதந் தனில்வாம முகத்தின் கண்ணே தன்னிகர்நற் பசிதமகோ ரத்தினிரும் பசுமமெழிற் சாரமென்ப துன்னலரும் புருடத்தி னீசானத் திரக்கையடைந் துதிக்கு மென்பர் பன்னுமுறை நந்தைமுத லாயபெரும் பெயர்படைத்த பசுக்க டாமே. 5 நித்தியகா ரியமதனில் விபூதிகை மித்திகத்தி னிகழா நின்ற சுத்தமா கியபசிதம் பசுமமே பரிகாரத் தொழிற்க ணன்றி முத்தியாம் வினையதனி லிரக்கையெலாக் கருமத்து மொழியின் சாரம் புத்தியா னுயர்வீர சைவரணி குவரெனவே புகல்வ ரன்றே. 6 நந்தைமுத லாயவற்றி னிறமாகுங் கபிலாதி நவின்ற வன்ன மைந்துமுறை விபூதிமுத லைந்தினுக்கு மாகுநீ றாத னான்கா மந்தமலி கற்பமநு கற்பமுப கற்பமுட னகற்ப மென்றே முந்தையுள கற்பமே சிறந்ததுமற் றேனையவு முறையி னாமால். 7 சாற்றுமுறை வழாதுநவ கோமயத்தைச் சத்தியோ சாதந் தன்னா லேற்றுருள்செய் பிண்டமது வாமதே வத்தினுற விழைத்து லர்த்திப் போற்றலுறு புருடத்தாற் சுட்டதனை யகோரமதுப் புகன்றீ சாநத தூற்றமுற வெடுத்திருத்தல் கற்பமநு கற்பாதி யுரைத்து மன்றே. 8 காட்டுலர்கோ மயம்பொடித்தம் முறைசுடுத லநுகற்பங் கடையர் தீக்க ணீட்டுபொடி துகில்கொடுசோ தித்துருட்டி யானீர்விட் டிசைத்த வாறே மூட்டுமழற் சுடுவதுப கற்பமென லாகுமிவண் மொழிந்த வன்றிக் கூட்டுதிரு நீறகற்ப மெனச்சிவர கமமனைத்துங் கூறு மன்றே. 9 கலயமுத லாயபாத் திரத்துளமர் நீறொன்று கவர்ந்து மூன்றா நலமருவ சந்திகளி லெனினுமெப்போ தெனினுமதை நானஞ் செய்த நிலையதனிற் புதுப்புனலாற் கரம்விளக்கி மவுனியாய் நீற்றை யெண்காற் பலமுதவு மூலமநுக் கொண்டபிமந் திரித்துப்பின் பகர்ந்த வாறே. 10 சிரமதிலீ சாநத்தாற் புருடத்தான் முகமதனிற் றீர்கோ ரத்தா லுரமதனில் வாமதே வத்தினாற் குய்யத்தி னொண்ப தத்தில் வரமருவு சத்தியோ சாதத்தாற் பிரணவமா மந்தி ரத்தாற் புரமுழுதும் புனைந்திடுக வனாதிமல விருடுமிக்கும் பூதி தன்னை. 11 விதிமுறையின் விபூதிதனின் மூழ்குறுதல் கங்கைமுதல் விரிநீ ராட்டி னதிகமென வறிகபுற மாசொழிப்ப தாகிச்சிற் றாவி மாயு நதியறலின் மூழ்குதலின் விருப்பென்கொ லுண்மலின நசித்து மிக்க முதிருமறி வுதவியிடர்ப் பகுதிநீக் குறுநீற்றின் மூழ்கு வோர்க்கே. 12 முண்டகனே முதலாய வானவர்நா ரதன்முதலா முனிவர் மிக்க வண்டர்புகழ் சனகன்முதல் யோகிகள் வாணாதியா மசுர ரெல்லாம் வெண்டிருநீ றணிபவராய் விமலசிவ பத்தியொடு விளங்கி நெஞ்சிற் கொண்டவரிப் புனிதநித்த சுத்தரா யினரெனவே கூறு நூலே. 13 எழுமுறையைந் தெழுத்தோதி யுடன்முழுதுத் தூளநஞ்செய் திட்டுப் பின்னர் வழுவகல வுயர்திரிபுண் டரமிடுக வன்றிமுனம் வருமுத் தூளம் விழுமியவொண் புண்டரத்தோ டொவ்வாமை யாலதனை விடுத்தே யேனுஞ் செழுமைதரு புண்டரமே யிடுகவென வறைந்திடுவர் தீத கன்றோர். 14 சென்னியொளிர் நுதல்செவிகள் களம்புயங்க ளகலிதயஞ் சிறந்த வுந்தி மன்னுபிட ரிருவாகு வொடுககுத்தே சங்கவின்கூர் மணிபந் தங்க ளென்னவரு மூவைந்து தானத்தும் புனல்கலந்த வினிய நீற்றா லுன்னலரும் புகழ்த்திரிபுண் டரமிடுவர் மூலமநு வுரைத்து நல்லோர். 15 நீற்றினையொள் வாமகரங் கொண்டுவலக் கரமதனா னெறியின் மூடித் தோற்றுறுமக் கினிரிதியென் பதுமுதலா கியமநுக்க டொட்டிங் கேழ்காற் போற்றிமுனம் புகன்றவிடங் களிற்புனலாற் குழைத்தவெழிற் புனித நீற்றா லேற்றதிரி புண்டரமிட் டிடுபவன்மெய்ப் பரசிவனை யெய்து வானால். 16 தன்னுடைய வலக்கரத்தி னடுவிரல்கண் மூன்றுகொடு தயங்கு நீற்றான் மன்னுதலி னீளமறு விரலளவா யினுங்கடைக்கண் மட்டா யேனு முன்னளக வளவேனும் வயங்குதிரி புண்டரஞ்சொன் முறையிற் சாத்திற் பன்னலுறு மழற்பொறிபோற் பவமனைத்துந் தொலைக்குமெனப் பகவர் நல்லோர். 17 மத்திமையோ டநாமிகையங் குட்டமெனு மிவ்விரலான் மறைகளெல்லாம் வைத்ததிரி புண்டரத்தை யநுலோம விலோமத்தால் வயங்க மல்கு பத்திகொடு திருநுதலி லிடுபவனே யுருத்திரனாம் பகரி னிந்த மெய்த்தவுரை தனினைய மிலைமலயத் திருந்துதவம் விளக்கு மேலோய். 18 செய்வியவா யொன்றொடொன்று புணராது நயந்துமிகச் சேர்ந்த வெண்மை யெவ்வமறு செவியளவா யினையவிலக் கணமுழுது மிசைந்து மிக்க வவ்வியமி லாததிரி புண்டரதா ரணஞ்சித்தி யனைத்து மாமென் றிவ்வுலகின் மறைமுதலாங் கலையுணர்ந்த மூதறிஞ ரெல்லாஞ் சொல்வர். 19 முப்பொழுதி னொருபொழுதா யினுந்திருவெண் ணீற்றினான் முறை வழாம லப்புனித வருந்திரிபுண் டரமிடுவோ னுருத்திரனே யைய மில்லை யிப்பரிசு நற்றரிவுண் டரமிடுவோ னிறைதருமத் திசைவுற் றன்னோ னொப்பரிய மும்மூர்த்தி மயனாவ னெனச்சுருதி யுரைக்கு மன்றே. 20 இந்திரனே முதலாய விமையவரு மலர்த்தவிசி லிருப்போன் றானு முந்திமலர் தனிலுலகம் பூத்தலையா ழியினரவி னுறங்கு வானு முந்துபுக ழுருத்திரனும் வதிட்டனே முதலாய முனிவர் தாமுஞ் சுந்தரமா கியதிரிபுண் டரமணிந்து விளக்கமொடு தோன்று வாரே. 21 அரியவே தாகமங்க ளனைத்தும்விரி புராணங்க ளனைத்து மெல்லா மிருதிகளு மிதிகாச கற்பங்க ளியாவுமெழில் விளங்கு நீற்றாற் புரியுமிணை தவிர்திரிபுண் டரம்விதிக்கப் படுமினைய புண்ட ரந்தா னுரியரெனுஞ் சைவர்களாற் சிறப்பினணி யப்படுமென் றுரைக்கு நூலே. 22 நீங்கியதோ ரொழுக்கமுடை யவனாகித் தீயொழுக்க நெறிநின் றோனாய்த் தீங்குபுரி நாத்திகனே யெனினுமிள நிலவெறிக்குந் திருவெண் ணீற்றி னோங்குதிரி புண்டரதா ரகன்மிகுபா வங்களெல்லா மொழிந்து நிற்பன் வாங்குதிரைக் கடலுலகிற் குறுமுனியென் றுயர்ந்தபெரு மாத வத்தோய். 23 - விபூதி தாரணத்தலம் முற்றிற்று - * * * ஏழாவது (7) உருத்திரராக்கதாரணத்தலம் [அதாவது - சிவத்தின் ஜ்ஞான நேத்திரத்தினின் றுதித்த மந்த்ரமூல கூட பத சிந்தா மணியென்பதெதுவோ, அங்கத்தில் ருத்திர முத்திரையுண்டாயிருப்ப தெதுவோ, ருத்திரனுட னைக்யப்படுத்துவ தெதுவோ அந்த ருத்திராக்ஷத்தை, மகா ஜ்ஞானமய பஸ்மத்தை க்ரியாமுகத்தில் தரித்த லிங்கதாரகனானவன் அதன் மகிமையை யாதியந்தமா யறிந்து விதிப்படி தரித்தல் வேண்டும் என்பது.] கலிவிருத்தம் நீற்றின் மூழ்கிநன் னெற்றியிற் புண்டரந் தோற்ற வீசனைத் தொண்டினர்ச் சிப்பவன் போற்றி யக்க மணியும் புனைகவென் றாற்றான் மிக்குய ராகம மோதுமால். 1 புரங்கள் மூன்றும் பொடித்துறுங் காலரன் றிரங்கொ ணாட்டந் திறப்பப் பஃறுளி பரந்த வன்னவற் றிற்படு பன்மணி வரங்கொ ளக்க மணியென வோதுவார். 2 உருத்தி ராக்கத் துதித்திடுந் தன்மையா லுருத்தி ராக்கப் பெயர்பெறு மொண்மணி யிருக்கு முப்பதொ டெண்வகை பேதமாய்த் தரித்து ளோர்வினை சாடுவ வாகியே. 3 கதிர்க்க ணாறிரண் டாகுங் கபிலமாய் மதிக்க ணீரெட்டு மன்னுறும் வெண்மையை யுதிக்குந் தீக்கணிற் பத்தொண் கருமையாய் விதித்த வீசன் வீழிமணி யென்பவே. 4 பழுதி லாது பசும்பொ னிறத்தவா யழகு கூர்ந்தய லாரணி யாமணி முழுது ணர்ந்த முதல்வனைப் பூசைசெய் விழுமி யோன்புனை கிற்பன் விழைவினால். 5 சிகையி னோர்முகத் தொன்று சிரத்தினின் முகமி ரண்டுமூன் றாறிரண் டுள்ளமூன் றிகலில் பன்னொன் றிசையுமா றாறுதாம் புகழு றுந்தலை தன்னிற் புனைகவே. 6 ஐந்தொ டேழுபத் துள்ளவவ் வாறுகா துந்து மாறொடெட் டுள்ளவெண் ணான்குநற் கந்த ரம்முக நான்குள வைம்பதாய் வந்த நன்மணி மார்பி னணிவரால். 7 வாகு விற்பதின் மூன்றுள வேறுவே றாக வீரெட்டங் காறிரண் டாறிரண் டோகை நன்முக மொன்ப துடையவா மோக வொண்மணி முன்கையிற் கொள்கவே. 8 ஏழி ரண்டுமு கத்துநூற் றெட்டுயர் வாழ்வி லங்குப வீதம் வனைகுவர் தாழி ருஞ்டைத் தாணுவைப் பூசனை யூழி லங்க வுஞற்றிடு முத்தமர். 9 இனைய வாறிங் கிறைமணி யென்றுமே புனைகு வார்நற் புலனறு மூடரே யெனினு மங்கவர்க் கென்று மருவுதீ வினையி னாமமு மின்றிது மெய்ம்மையே. 10 கலிநிலைத்துறை வேதி யர்க்கனை யத்தனுக கொண்மக வினுக்குத் தீதி ழைத்தவன் கள்ளுணி செய்ந்நன்றி செற்றோன் போத நற்குரு தற்பரன் பொன்கொளி யெனினும் பாத கத்தினி னீங்குவன் பரன்மணி தரிப்போன். 11 அந்த ணக்குலத் துதித்தவ னாயினு மன்றி நிந்த னைப்புலைப் பிறப்பின னாயினும் புலமை முந்து பெற்றவ னாயினு மூடனா யினுமே சிந்து முற்பவ மனைத்தையுஞ் சிவன்மணி தரிப்போன். 12 தீண்ட லான்மனத் துன்னலாற் பூசனை செயலாற் காண்ட லாலுடற் புனைதலான் மணிவினை களைவர் வேண்டு மானொரு கோடியீத் துறுபலன் விளைவு பூண்டு ளோன்றனக் கக்கமா மணியருள் புரியும். 13 மரித்தல் சேர்வுறு காலையி னக்கமா மணியை யுரைத்து நீரிடை யுடையொரு பாகனை யுவந்து கருத்தி னாடியே குடித்திடிற் றுயரெலாங் களைந்து திருத்த மாகிய வுருத்திர வுலகினைச் சேர்வார். 14 பூதி யாலுடன் முழுதுமுத் தூளனம் புரிந்து சாத மேவரு மக்கமா மணியினைத் தரிக்கு மேதை யானவ னுருத்திர னேயென விளம்பு மாதி மாமறை யனைத்துமிவ் வுரைக்கிலை யையம். 15 நித்தி யந்திகழ் காமிய நிமித்திய நிகழ்த்து மெத்தி றப்பெருங் கருமங்க ளியற்றுவோ னெனினும் பத்தி யிற்றிரு நீற்றொரு பரன்மணி புனையா னத்தி றக்கரு மங்களின் பலன்களை யடையான். 16 வன்ன மாச்சிர மத்தினின் மாசிலா சாரந் தன்னி னிற்பவர் தம்முண்மெய் தயங்குநீற் றோடு பொன்னெ னத்திக ழக்கமா மணிபுனை பவனே சொன்னி ரைத்துயர் சுருதியு மிருதியுந் துதிப்பான். 17 - உருத்திராக்கதாரணத்தலம் முற்றிற்று - * * * எட்டாவது (8) பஞ்சாக்கர செபத்தலம் [அதாவது - பஞ்ச பூதங்களும், இந்த்ரியங்களின் சமூகமும், சப்தாதி விஷயங்ளும், அகங்காரமும் நீங்கிச் சிவசம்பந்தியான மந்திரபாவனை யுள்ள தெதுவோ, சிவ தத்துவம் பிரகாசமாவ தெதுவோ, சிவ கருணாமிர்தம் சொரிந்து ரக்ஷிப்ப தெதுவோ, அந்த ஸ்ரீ பஞ்சாக்ஷரீ மந்திரத்தை மங்கலகரமாகிய விபூதி ருத்திராக்ஷங்க ளணிந்தவனும் சிவ லிங்க தாரணனுமான வீரசைவன் சத்குரூபதேசத்தினால் ஸ்ருஷ்ட்யாதி க்ரமத்தை யறிந்து எக்காலத்தும் ஜபித்தல் வேண்டும் என்பது.] கலிநிலைத்துறை அக்க மாமணி நீறணி யிலிங்கதா ரணன்றான் மிக்க தாஞ்சிவ தத்துவம் விளங்குற விளக்கு நக்க னமமா மைந்தெழுத் தாகவே நவிலுந் தக்க வித்தையை முறையினிற் செபித்திடத் தகுமால். 1 மெய்த்த வொண்சிவ தத்துவ மதனினு மேலாந் தத்து வாந்தர மின்மைபோன் மறைகளின் றலையாய் வைத்த வைந்தெழுத் தாகிய மந்திர மதனி லுத்த ரம்பெறு மந்திர மிலையென வுணர்வாய். 2 ஆய விவ்வுல கந்தரு மூலகா ரணமாந் தூய வொண்சிவ முணர்ந்திடின் மற்றுள சுரரான் மேயு றும்பல னென்கொலைந் தெழுத்தையு முணரிற் பாய மந்திரப் பரப்பினால் வருவதெப் பயனே. 3 வேத னாதியாம் விண்ணவர் குழாத்தினுள் விளங்கும் பாதி வாண்மதி முடியுடைப் பரமனே போலப் பேத மாமெழு கோடி மந்திரங்களிற் பெரிதாம் போத வைந்தெழுத் தாகிய புனிதமந் திரமே. 4 உலக னைத்தினுக் குந்தனிக் காரண முரைக்குங் கலைக ளுக் கரி தாகிய பரசிவங் கண்டாய் பலம நுக்களுக் கேதுவாம் பரமவா சகமா யிலகு மப்புக ழைந்தெழுத் தெனவுல கிசைக்கும். 5 அஞ்செ ழுத்தெனு மந்திர மப்பர மனுக்கு விஞ்சு மற்புத நாமமவ் விமலனே நாமி யெஞ்ச லற்றிடு நாமமு நாமியு மெனலா னெஞ்ச ழுத்துமம் மந்திரத் தாலிறை நிகழும். 6 முன்ன ரோதுக நமவென விளம்புறு மொழியைப் பின்ன ரோதுக சிவாயவென் றிங்ஙனம் பிறங்கு மன்ன வஞ்செழுத் தாகிய மந்திர வரசைப் பன்ன ருஞ்செழு மறைகளின் முடியெலாம் பரிக்கும். 7 முத்த னாகிநின் றநாதியே மும்மலங் களினுஞ் சுத்த னாதலின் மங்கல முழுவதுந் தோன்றற் குய்த்த தோரிட மாதலிற் சிவமென வுரைப்பர் சத்த னாகிய சச்சிதா நந்தசங் கரனை. 8 சிவமெ னுந்திக ழீரெழுத் தொருமொழி சிறப்பாய்ப் பவம கன்றுள பரப்பிர மந்தனைப் பயக்கு நவைய கன்றுயர் சிவமெனும் பெயரலா நாம மெவையு நீங்குறு கவுணமாய் விரியுமென் றிசைப்பர். 9 ஆத லாற்சிவ மெனுமிரண் டெழுத்துமே யளவில் சோதி யாயுறு சச்சிதா நந்தமாய்த் தோன்று மாதி நாயகன் றனக்கு முக்கியப் பெயராமென் றோது மாமறை முதலிய கலையெலா முவந்தே. 10 தனிப்பாடல் மும்மறையு ணடுமறையின் முனிவிலெழு காண்டத்திற் செம்மைதரு நடுக்காண்டஞ் சேர்ந்தவெழு சங்கிதையி லம்மநடுச் சங்கிதையி னாதியீ றொழித்துநடுப் பொம்மலுற வமர்மநுவின் பொருளாவா னெவன்மைந்த. இனைய நாமமுற் றஞ் செழுத் தென்னுமந் திரமா மனைய மந்திர முத்தியின் விருப்புள னாகிப் புனித நெஞ்சின னாயினோ னாதரம் பொங்கத் தனியி ருந்தநு தினமுமுச் சரித்திடத் தகுமால். 11 பாச மோசக னநாதியாம் பரசிவ மென்னு மீச னாகுத லுண்மையவ் வாறென வோங்கித் தேசு லாவிய வஞ்செழுத் துஞ்செறி பாச நாச காரண மென்பர்மெய் தெரிந்துள நல்லோர். 12 ஐந்து பூதமைம் பொறிகளோ டைம்புல னமர்ந்த வைந்தெ னுங்கரு மேந்திய மைவர்கா ரணரா மைந்தெ னுந்தொழி லைம்பெரும் பிரமங்க ளனைத்து மைந்தெ ழுத்தினா லுணர்த்துவ ரறிவறிந் தவரே. 13 ஓது மக்கர மைந்துரு வாமுயர் மநுத்தா னாதி யிற்பிர ணவந்தனைக் கொண்டிடு மதனால் வேத முற்றினு மாகம மனைத்தினும் விளங்க வேத மற்றுயர் சடக்கர மென்றிடப் படுமால். 14 இந்த வஞ்செழுத் தாகிய மந்திர விறைக்கு முந்து றும்பிர ணவம்பர சிவன்றனை மொழியு மந்த வக்கர மொன்றினா லகிலகா ரணமாய் வந்த வச்சிதா நந்தமெய்ப் பரம்பொருள் வயங்கும். 15 சோக மென்றுள சொரூபமே தூயமந் திரந்தா னாக நன்குற வறிகுவா ரஞ்சமென் பனதாம் போக வந்தமி லோமெனப் புகலுமோ ரெழுத்தா மேக மந்திர முதிக்குமென் றியம்புவர் பெரியோர். 16 பிரபுலிங்க லீலை தறிபோ லுடல நேரிருந்து தயங்கு மருங்கி னிருநாடி நெறிபோய் மீளும் வளியதனை நிறுவிநடுநா டியிற் செலுத்தி யறிவோர் சிறிதுஞ் சலியாம லன்னப் பெயர்மந் திரமாறிக் குறிபோ யிருந்த வொருகுறியைக் குறித்துக் கொண்டங் கிருந்தனரால். காட்டு மோமெனு மெழுத்துநிட் களசிவன் றன்னை யீட்டு மைம்பெரும் பிரமமாந் தநுவுடை யிறையைக் கூட்டு மஞ்செழுத் துபயமா மொருபொருள் கொடுக்கு மோட்டு றும்பவப் பிரணவ வஞ்செழுத் தொன்றி. 17 மூலம் வித்தைநற் சிவஞ்சைவ சூத்திர மொழியின் மேலு மஞ்செழுத் தெனும்பெயர் மேவுமா மநுவவ் வேலு மஞ்செழுத் தினைப்பிர ணவம்புர்த் திசைப்பர் மாலி லர்ச்சனை புரிபவர் மனமொரு மித்து. 18 உத்த ரங்குண திசையினு ளொன்றினை நோக்கி நித்தி யம்பிரா ணாயாம மும்முறை நிகழ்த்தி யத்த னம்பிகை பாகனை யணியுட னகத்தில் வைத்தொ ருங்கிய மனத்தொடம் மந்திரஞ் செபிக்க. 19 மந்தி ரஞ்செபித் திடும்விதி மூன்றுவா சிகமே நந்து பாஞ்சுமா நதமென வினையெலா நசிக்கு முந்து றுந்திரு வாசிக மொழிந்திடி னருகு வந்தி ருந்துளோர் கேட்டிட வழாதறைந் திடலே. 20 அருகி லுற்றுளோர் கேட்டிடா தணியிதழ் தீண்டி விரகின் வித்தையை மந்தமாய் விளம்புத லுபாஞ்சு திரித லற்றிடு நாநுனி மெல்லிதழ் தீண்டா தொருமை யுற்றுளத் துன்னுத லுயர்ந்தமா நதமே. 21 கரும வேள்விநல் விரதந்தா நங்கடுந் தவமாய் மருவும் யாவுமா மந்திர வேள்விமா கலையி னுருவ மோர்பதி னாறிலொன் றினையுமொவ் வாவிவ் விரவு மான்மியம் வாசிக செபத்தினை மேவும். 22 வாசி கந்தனிற் சதகுண மடங்குள துபாஞ்சு மாசி லன்னதி னாயிர மடங்குமா நதமாம் பேசு றுஞ்செப மிரண்டினும் பெரும்பவ மொழிக்குந் தேச டைந்துள தாகியே சிறக்குமா நதமே. 23 வாசி காதியின் விதிமுறை வழாதுநன் மனத்தி லீசன் மேவுற வஞ்செழுத் தெனும்பெரு வித்தை பாச நாசக னாம்படி செபிக்கமெய்ச் சிவமாந் தேசு ளான்சிவ பூசனை செய்கவிம் மநுவால். 24 பரம னர்ச்சனை யஞ்செழுத் தறைந்துபத் தியினா லொருப கற்புரி பவன்சிவ கதியினை யுறுவான் விரத நற்றவ மகமிவை வித்தைகொண் டியற்று மொருமை யர்ச்சனை தனிற்கோடி கூற்றிலொன் றொவ்வா. 25 விரத மேவிமெய் யிளைப்பவர் கால்புனன் மிசைவோர் பரம னொண்பத மடைவுறார் பதிதனே யெனினுந் திரிவி லஞ்செழுத் தறைந்தொரு காற்சிவ பூசை புரிப வன்பவ கோடிகள் போக்குமீ துண்மை. 26 சிறந்த வஞ்செழுத் துயர்மநு வொருசிறி தேனு மறைந்து ளாரெனி னவர்செயும் பாதக மனைத்து மிறந்து போமிளங் கதிர்கடன் முகட்டினு ளெழலு முறிந்து பேரிருட் படலைக ளிரிதரு முறைபோல். 27 எண்ணி லாகமம் புகலயன் மந்திர மெல்லாம் பண்ணு றும்புரு டார்த்தமே நிரந்தரம் பயிலி னண்ண லஞ்செழுத் தொருமுறை சிறிதறைந் தவர்க்கு நண்ண நல்குறுஞ் சித்திக ளனைத்தையு நயந்தே. 28 போதி லொன்றினை யஞ்செழுத் தினைப்புகன் றமலன் மீத ணிந்திடின் வாசப வேள்வியா யிரத்தி னோது றும்பல மனைத்துமங் கவனடைந் துறுவான் மாத வம்புரிந் துயர்தரு மலயவெற் பமர்வோய். 29 மறையு ணர்ந்துடன் மகம்பல வியற்றன்மா தான மறையு மின்னவை யஞ்செழுத் தருஞ்செபந் தன்னின் றிறம ணைந்துள கோடிகூற் றொன்றையுஞ் சிவணாப் பொறையி லங்குறு மந்திரத் தியல்பையார் புகல்வார். 30 முன்னர் மெய்யறி வறிந்துள சானந்த முனிவன் பன்னி யஞ்செழுத் தாகிய பரமமந் திரத்தை யின்னல் வெந்நர கத்துளோர் தமையெலா மெடுத்து மன்னு றுந்துறக் கத்துற வைத்தனன் மன்னோ. 31 மாசி லாவசிட் டாதிமா முனிவரிம் மநுவாற் றேசு மேவினர் சித்திக ளனைத்தையுஞ் செறிந்தே யாசி லாவய னாதியர் படைப்புமுன் னாகப் பேசு மாதொழின் மந்திர வலியினாற் பெற்றார். 32 பரந்த சொற்களி னென்பயன் பத்தியாற் சிவனைத் திருந்த வர்ச்சனை யெப்வ னாகியே சிறந்த வரந்த ரும்பிர ணவமுத லாயவிம் மநுவை நிரந்த ரஞ்செபிப் பவன்பர முத்தியி னிலைப்பான். 33 - பஞ்சாக்கரசெபத்தலம் முற்றிற்று - * * * ஒன்பதாவது (9) பத்தித்தலம் [அதாவது - நவவித பக்தியினாலும் பஞ்ச யஜ்ஞங்களினாலும் சிவபெருமானைப் பூஜித்தல், சிவபெருமானல்லாத பவி தேவர்களைப் பூஜியாதிருத்தல், பஞ்ச சூதகங்களை விட்டிருத்தல், ஸ்ரீ குருவினிடத்தும் ஆகமவாக்கியங்களினிடத்தும் பூர்ண நம்பிக்கை வைத்தல், லிங்கத்தினிடத்தும் ஜங்கமத்தினிடத்தும் பக்தியைச் செலுத்துதல், பயனைக் கருதாமல் தானம் செய்தல் இவை முதலிய சத்கர்மங்களை எக்காலத்தும் செய்பவனும், ஸ்ரீ விபூதிருத்ராக்ஷங்களை யணிந்து பரிசுத்தனானவனும், ஜ்ஞான மயமாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷர ஜபமுள்ளவனும், லிங்க தாரணனுமான வீரசைவனே சிவபக்தனென்று சொல்லப்படுவன் என்பது.] கலிவிருத்தம் நலங்கொள் பூதி நயனத் திருமணி யலங்கன் மேனிய ணிந்துபு னிதனாய்ப் புலங்கொ ளஞ்செழுத் தொண்மநுப் போற்றுறு மிலிங்க தாரணன் பத்த னெனப்படும். 1 புகழ்தல் கேட்கை புனிதற் கருதுதன் மகிழ்குற் றேவ லருச்சனை வந்தனை தொகுநற் றொண்டொடு தோழமை நற்கொடை பகரு மற்றிவை நன்னவ பத்தியே. 2 கரிய கண்டக் கடவுள் புகன்றிடு முரிய நன்னவ பத்தி யுலகினி லரிய பாவத் தவர்கட் கறத்தினாற் பெரிய வர்க்குப் பெறுதற் கௌ¤யவே. 3 தலைவ னாயினுந் தாழ்ந்தவ னாயினு மலைவி லாத மலிசிவ பத்திதா னுலகில் யாரிடத் தொன்று மனையவ னிலகு பத்த னெனப்படு வானரோ. 4 வேதி யன்புலைக் கீழென வேறிலை யோத ருஞ்சிவ பத்தி யுடையனே யேது மீசற் கினியவ னின்மையோ னாதி வன்னத்த னாயினு மல்லனே. 5 வீர சைவர் விரும்புமப் பத்திதா னோரி ரண்டிய லாமுட் புறத்தினாற் சோர்வி லுள்ளத சூக்குமந் தூலமாந் தேரின் மற்றைப் புறத்தது செப்பினே. 6 தூய தாகுமி டத்திற் சுடர்மணிச் சீய மெல்லணை யாகிய செங்கையி லாய மெய்ச்சிவ லிங்க வருச்சனை மாயி ரும்புறப் பத்தி மதிப்பினே. 7 உயிரி லீச னுயிரரு ளீசனிற் பயில வொன்றுபட் டொன்றையும் பற்றுறா வியல்ப கத்ததி பத்தி யிசைந்துளோன் செயல்வெ துப்பு விதையெனச் செப்புவார். 8 பெருகு சொற்கொடென் பேறு பகர்ந்திடி னுருகு பத்தி யெவற்று முயர்ந்ததா மருவி மற்றதை மன்னின னேன்மல விருளி ரிக்கு மிதிலிலை யையமே. 9 முளையில் வித்துமவ் வித்தின் முளையும்போற் றளையில் பத்தி சிவப்பிர சாதமோ டளவி யொன்றினொன் றாகுமப் பத்திதான் வளமு றும்பிறப் பொன்றில் வருவதோ. 10 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எண்ணரும் பிறப்பிற் சுத்த மெய்திநூ னெறிவ ழாமற் பண்ணுறு மியல்பின் மேவிப் படர்புலன் றுறந்த ஞானிக் கண்ணறன் னருள்பி றக்கு மாங்குடன் முத்த னாகி நண்ணருஞ் சிவச மான நணுகுவ னென்பர் மேலோர். 11 நௌ¤திரைக் கடலு டுத்த நிலமிசை மக்க டம்மும் டௌ¤சிவ பத்தி தானோர் சிறிதுளோ னெனினு மன்னோ னௌ¤தினின் முப்பி றப்பின் மேற்பிறப் பெய்தா வண்ண மொளியொடு மருவி நிற்கு முண்மையிம் மாற்ற மாதோ. 12 சாங்கமோ டியற்றி யென்றுந் தாங்கடைப் பிடிக்குஞ் சேவை யாங்கது பத்தி மூன்றா மகமன மொழிமெய்க் கூற்றா லீங்கிறை வடிவ மாதி யெண்ணுதன் மனத்த தாகும் பாங்குறு செபாதி வாக்கின் பணிபூசை யாதி மெய்த்தாம். 13 முப்பொறி யியற்ற வந்த முப்பெருஞ் சேவை யென்றும் பொய்ப்பரும் புறம கம்பின் புறவக மென்ன மூன்றா மெய்ப்பொரு ணினைத்த னெஞ்சம் விமலன்மெய்ப் பெயர்த்து வாக்கா மொப்பின்முப் புண்ட ராத யுளதுமெய் யொழிந்த வல்ல. 14 புறமுற வியற்றும் பூசை புறமகந் தன்னிற் றானே யறிவுற வியற்றும் பூசை யகம்பர சிவனைப் போற்றும் புறமக மடைந்து நிற்கு மனமதே புறவ கந்தான் மறுவறு பணியோ ரைந்து வகைப்படு மதனை யுங்கேள். 15 வந்துறு தவமே கன்மம் வண்செபத் தியான ஞான மைந்திவை முறையி னாகு மருந்தவ மீசற் காக நொந்துட லிளைத்த லாகு மற்றுள நோன்பி னோதன் முந்துள தவம தென்று மொழிந்திடப் படாது கண்டாய். 16 கண்ணுதல் பூசை செய்கை கருமமற் றுள்ள வல்ல வண்ணறன் பிரண வத்தோ டஞ்செழுத் துருத்தி ராதி நண்ணுறப் பயிலுந் தன்மை நற்செபம் வேத மாதி பண்ணுறப் பயின்று நிற்கை பகர்தரு செபமா காவால். 17 சிவமுறு படிவ மாதி சிந்தனை தியானமாகு மவமுறு மான்ம சிந்தை யாதிய தியான மாகா நவிறரு சிவாக மத்தி னற்பொரு டெரிதன் ஞானம் பவமுறு மொழிந்த நூலின் பயனுணர் வன்று ஞானம். 18 செப்பிய முறையி னின்ன சிவமக மைந்தி னானும் பைப்பொறி யரவ ணிந்த பரமனை யருச்சிக் கின்ற மெய்ப்பணி புரியும் பத்தி மேவினோ னியாவ னன்னோ னொப்பது பத்த னென்றே யுரைத்திடப் படுவ னன்றே. 19 பந்தனை யகன்று நின்ற பரசிவ பத்தன் றன்னை வந்தனை புரியு நல்லோன் புண்ணிய வழியை நண்ணு நிந்தனை செய்யுந் தீயோ னினைப்பினு முளந டுங்கும் வெந்தழ னிரய மெய்தி மெலிகுவ னைய மின்றே. 20 ஈண்டொளி யமல பத்த னிருஞ்சிவ பத்தி நீத்துக் கோண்டரு மனத்து வெய்ய கொடியவன் றன்னை நோக்க றீண்டுதல் புரித லாகா சேர்ந்தவ னுடனி ருத்தல் வேண்டுவ தன்றெங் கேனும் விடுவதே யியல்பு மாதோ. 21 என்றுபெற் றண்ண றீக்கை யிலிங்கதா ரணமே யாதி யன்றுதொட் டமல பத்த னாயினோன் றன்னைப் போல நின்றநற் சிவாக மத்தி னெறிவழா தொழுகி நீங்கு புன்றொழிற் பத்தன் றன்னைப் பூசனை புரிக வன்றே. 22 தன்னெறி யொழுகி நிற்குஞ் சங்கர பத்தர் தம்பாற் றுன்னுத லவர்தம் மில்லிற் றுய்க்குதல் செய்க பத்த னன்னியர் மனையூ ணாகா வருவினைப் பவிக ணல்குங் கொன்னிதி தன்வ சத்த தென்னினுங் கொள்ளொ ணாதால். 23 அன்னிய தெய்வ முன்னல் புகழ்தலர்ச் சித்த லாகா வன்னிய தெய்வ சேட மருந்தொணா வமல பத்த னன்னிய தெய்வ மேவு மகமுறான் பூச னைக்க ணன்னிய தெய்வ பூசை யாளியை நோக்கு றானால். 24 என்றுமெய்ச் சிவலிங் கத்தோ டிசைந்துநல் வீரசைவ நன்றிகொ ணெறியி னின்ற நற்சிவ பத்த னானோன் வன்றரை யிடங்கொண் டுற்று வயங்குதா வரலிங் கத்தி னின்றநின் மாலி யந்தான் கொள்ளுத னெறியன் றாகும். 25 யாண்டொரு தாவரத்திற் கிடையூறு வரினும் பத்தர்க் கேண்டரு சிவவே டத்தோர்க் கடிர்கள்வந் துறினு நில்லா தாண்டுயிர் விடுத்தே யேனு மளிக்கமெய்ப் பரன்பொ ருட்டு மாண்டவன் சிவனோ டொன்றாம் பதத்தினை மருவு மன்றே. 26 கண்டன னாயின் முக்கட் கடவுளை நிந்திப் போனைத் தண்டனை புரிந்து கொல்க வரிதெனிற் சபிக்க நின்று மண்டனில் வலிய னன்றேல் வார்செவித் துணைகள் பொத்திக் கொண்டவ ணகன்று செல்க குலைகுலைந் தமல பத்தன். 27 ஏயுமா சார நிந்தை யாண்டுள தவ்வி டத்திற் போயுற லொழிக வென்றும் புகல்சிவ நிந்தை செய்வோன் றீயக முறாது நிற்க சிவநிந்தை யவர்க்கு நூறாண் டாயினும் பரிகா ரஞ்செய் தகற்றிடற் கரிது மாதோ. 28 சிற்கன சிவலிங் கத்தைச் சேர்ந்துபூ சனைசெய் கின்றோன் முற்கரு மங்கள் செய்யான் முயல்வனே லமல பூசை நற்பய னிலையு யர்ந்த நடையினோன் றாழ்ந்த செய்யிற் பற்பல கரும மெல்லாம் பயனறப் பதித னாவான். 29 அஞ்செழுத் துபதே சங்கொள் பவனரர் தம்மைச் சென்று நெஞ்சுறத் துதிப்பி னன்னோ னெறியலா நெறியி னின்றோ னஞ்சுறப் படுமி லிங்கி யறிவில்புன் புலவ னூல்க ளெஞ்சறக் கற்றோ னேனுங் கற்றில னென்பர் மேலோர். 30 கலிவிருத்தம் நீடுயர் பத்திநன் னெறியி னின்றுளோன் பாடுறு தயிலநீர் சரும பாத்திரங் கோடனன் றன்றுதான் கொள்வ னேலவன் வீடுவெந் நிரயமாய் மேவி நையுமே. 31 இறப்பினு மிருநிலத் தெய்த வந்திடும் பிறப்பினு மற்றினும் பிறந்த சூதக மறப்பில தாமிலிங் காங்க மன்னினோற் குறப்பெறு கிலசிறி தேனு முண்மையே. 32 பூப்புறு துடக்கிலை புனிதன் பூசனை வாய்ப்புறு மடவர றனக்கு மற்றவட் கேய்ப்புறு புதல்வனை யீன்று போந்துள நீப்பருஞ் சூதக நிடேத மின்றரோ. 33 பரமனை யருச்சனை பயிலு மங்கைய ரருமக வுயிர்த்திடு மகத்திற் சூதகம் பரவுத லிலசிவ பாத நீருற விரிதரு மருவிய பாவம் யாவுமே. 34 இறையவ னிடங்கொளு மிடங்க டீர்த்தங்கள் பொறைதரு திருவிழா வணைந்து போற்றுக வுறுசிவ பத்தரவ் வுழியி னேகுவோர்க் கறமுட னுதவுக வந்ந பாநமே. 35 அந்நதோ யத்தின்மே லான தாநமு மன்னுகொல் லாமைமேற் றவமு மற்றிலை யென்னலா லந்நதோ யத்தை யீத்துறு நன்னிலை யேசிவ பத்தர் நண்ணுவார். 37 தன்னெறி தன்குலஞ் சார்ந்த வர்க்குமா நன்னெறி பெறுசிவ பத்த னல்குக கன்னியை யனையவர் களிப்ப நல்குறு மின்னனை யார்தமை விரும்பிக் கொள்கவே. 38 விளம்புமிந் நிலைபெறு வீர சைவர்தா முளங்கொளு மன்புட னுவப்புற் றென்றுமே கொளுங்குரு வொடுசிவ லிங்கங் கோதிலா வளந்தரு பூசனை மதித்துச் செய்கவே. 39 - பத்தித்தலம் முற்றிற்று - * * * பத்தாவது (10) உபயத்தலம் [அதாவது - பராபர ஸ்வரூபமானது சிவலிங்கமென்றும், அந்த லிங்க ஸ்வரூபம் சத்குரு வென்றும் அறிந்து இவ்விருவரையும் பூஜிப்பதில் எக்காலத்தும் சமான புத்தியுள்ள சிவபக்தனே உபயஸ்தல முள்ளவனென்று சொல்லப்படுவன் என்பது.] கலிவிருத்தம் போற்றுறு குருபரன் பூசை யேயிள வேற்றுயர் கொடியினோன் பூசை யென்பரால் சாற்றுறு மிவரொரு தத்து வப்பொருள் வேற்றுமை யில்லையோ ரிடத்து மெய்ம்மையே. 1 மூலகா ரணனென முழுத ளித்திடும் பாலலோ சனன்றனைப் பூசை பண்ணல்போல் ஞாலமேல் வருகுரு பரனை நாடொறு மேலவே யருச்சனை யியற்ற வேண்டுமால். 2 தன்னொரு மாயையால் யார்க்குஞ் சங்கரன் பன்னருங் காட்சியிற் படாதொ ளிக்குமான் மன்னுறு குருபரன் வடிவந் தாங்கியே முன்னுறு காட்சியின் முளைக்கு மென்பவே. 3 பிறப்பெனுங் கடலினைக் கடக்கும் பெற்றிசேர் மறப்பரி தாயமெய்ஞ் ஞானமாக் கலஞ் சிறப்புற வருள்குரு தேவன் வந்தனை யுறப்பெறு கிலனெனின் வரானு வந்தரோ. 4 எக்குரு பரன்கடைக் கண்ணி லின்பமா மெய்க்குறி யுடையதோர் விமல மெய்ச்சிவம் புக்கது வாயுறுந் தன்மை போந்துறு மக்குரு பரனெ வரருச்சிக் கப்படான். 5 சார்ந்தநல் லுருவமாய்த் தயங்கு பாசநோய் மாய்ந்திட வருசிவ ஞான மாநிதி யாந்தகை பெறுகுரு பரனுக் காக்கையா லேய்ந்துள பொருளினா லிதஞ்செய் கிற்கவே. 6 ஏணுறக் கதிவிழை யியல்பி னோன்குரு வாணையைக் கடக்கொணா ததைக் கடந்திடிற் காணுறச் சகமெலாங் காட்டு மீசன தாணையை கடந்தவ னாவ னாணையே. 7 - உபயத்தலம் முற்றிற்று - * * * பதினொன்றாவது (11) திரிவிதசம்பத்தித்தலம் [அதாவது - ஸ்வதந்த்ரனான ஸ்ரீபரமேச்வரன் சகல பக்தர்களை அநுக்ரகிக்கும் பொருட்டுக் குருலிங்க ஜங்கமாத்மகனாகவும் போகமோக்ஷங்களைத் தருபவனாகவு மிருக்கிறானென் றறிந்து, குரு லிங்க ஜங்கமங்களில் எக்காலத்தும் பக்தி பாவனை அர்ச்சனைகளினால் சமான புத்தியுள்ள சிவபக்தனே த்ரிவித சம்பத்துள்ளவனென்று சொல்லப்படுவன் என்பது.] கலிவிருத்தம் செவ்விய குருவிடைச் சிவலிங் கத்திடை யெவ்வகை யன்புட னினிய செய்துறு மவ்வகை சங்கமந் தனினு மன்பினை வெவ்விய வினைதபு விவேகி செய்யுமால். 1 அருணிலை நின்றுயி ரளிக்கு மீசனா மொருவனே போகமும் வீடுமொன் றுறத் தருவது செயக்குரு லிங்க சங்கம வுருவுகொண் டுலகினி லுலவ மென்பவே. 2 சரத்தொடு திரமெனத் தரித்தி ரண்டுரு வருட்சிவ னுலகினி லருள்செய் துற்றிடுந் திரத்தினி லன்புசெய் செய்கை போலவே சரத்திலு மன்புசெய் தன்மை வேண்டுமால். 3 மண்ணொடு சிலையெழு வாய்கொண் டாற்றிய வண்ணுரு விலிங்கமா மதனின் மேற்பட நண்ணிய சங்கம நாம நண்ணுறு மெண்ணுத லருஞ்சிவ யோகி யென்பவே. 4 மந்திரங் கொண்டுற வந்தி ருந்திடு மெந்தையிங் கசரமா மிலிங்க மேனியி னிந்தையில் சங்கமந் தன்னி னீக்கற நந்திநஞ் சங்கர னண்ணு மென்றுமே. 5 ஒன்றொரு பொருள்சிவ யோகிக் கீந்திடிற் பொன்றுத றவிர்பல னாகப் போந்துறு மென்றலி னிவன்றனக் கெத்தி றத்தினு நன்றுற வளிப்பதே நன்று நன்றரோ. 6 ஒப்பறு மொருசிவ யோகி பூசையா வெப்பய னடைகுவ னியாவ னன்னது தப்பறு பலனெனச் சகல நூலினு மெய்ப்பொரு ளுரணர்ந்தவர் விளம்பு வாரரோ. 7 உகந்துள பரசிவ யோகி வந்துறி னிகழ்ந்தன னிருந்தவ னெய்துந் தீநெறி புகழ்ந்தவன் றனைச்சிவன் போலவே யுனி மகிழ்ந்துயர் பூசனை மதிஞர் செய்வரே. 8 - திரிவிதசம்பத்தித்தலம் முற்றிற்று - * * * இரண்டாம் பாகம்: சதுர்விதசாரத் தலம் மூன்றாம் பாகம் : குருலிங்கத் தலம் sivaprakasar scriptures (including other Tamil scriptures)

Related Content

Mudhal Thanthiram

சித்தாந்த சிகாமணி 2 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம் றிய சித்தாந

சித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்

அகத்தியர் தேவாரத் திரட்டு

வீரசைவ நூல்கள்