logo

|

Home >

saiva-siddhanta >

pandara-sathiram-arultiru-ampalavaana-desigar-arulisseyta-sidhantha-sigamani

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த சித்தாந்த சிகாமணி

சித்தாந்த சிகாமணி


சாதித்த தெல்லாம் தவமேனும் சற்குருவைப் பேத்தால் எல்லாம் பிழையாகும் - வேதத்(து) அறம்புரிந்த தக்கனுக்கன்(று) ஆக்கினைவந்துற்ற திறம்புரிந்த வாறாம் தெளி. (௧) வஞ்சமே செய்வாய் மருவுங் குருவோடு நெஞ்சமே நீகதியில் நிற்பதெந்நாள் - கொஞ்சி உருகித் தமரோ(டு) உறைவாய்நன் முத்திக்(கு) அருகமென்பது எவ்வா(று) அறை. (௨) நாமெங்கே முத்தி நடையெங்கே நன்னெஞ்சே தீமங்கை இன்பே திளைகுமால் - காமன்கை அம்புற்ற புண்மெய்யில் ஆறியபோ(து) அன்றோதன் செம்பொற்றாள் ஈவான் சிவன். (௩) சலக்குழியின் மிக்க சகதியில்லை அங்கச் சலக்குயை இன்பே திளைகுமால் - காமன்கை அம்புற்ற புண்மெய்யில் ஆறியபோ(து) அன்றோதன் செம்பொற்றாள் ஈவான் சிவன். (௪) ஒளியானும் உற்ற இருள் மாதருமே ஒத்துத் தெளியநடஞ் செய்வதனைத் தேரின் - ஒளிநடத்தைக் கண்டபே காணார் கருதி இருள்நடத்தைக் கண்டபேர் காணார் கதி. (௫) தாணுவினோ(டு) ஒத்துச் சரியாய் நடம்புரியும் வாணுதலார் கூத்து மறைப்பல்ல - ஆணவத்தை ஒட்டியபேர்க் கெல்லாம் ஒளிப்பான அரன் அதனைத் தெட்டியபேர்க் காமாந் தெரிவு. (௬) கூட்டித் தனுவைக் குறித்துயிர்மேல் நின்றீசன் ஈட்டுவிக்கச் செய்யும் இயல்பாமால் - நாட்டுமலம் இல்லையென்ப தாகும் இசைந்த கருனைநலம் அல்லவென்ப தாமாம் அரற்கு. (௭) தோற்றம் இறப்பும் சொலுமீசன் தன்செயலென் மாற்றுதற்கு வேறொருத்தர் மன்னுவதாம் - சாற்றும் அரவு கடித்தவிடம் ஆங்கதனை மீட்க வருமவர்போ லாமாம் மதி. (௮) மலமே பிறப்பிறப்பை மன்னுவிக்கும் ஈசன் நலமே அவையகற்றி நண்ணும் - மலமருக்கன் சன்னிதியில் நில்லாத் தகுமிருல்போல் தக்க அரன் சன்னிதியில் நில்லாது தான். (௯) பேதித்து நெஞ்சம் பிரியாமால் நின்றீசன் சாதித்து திடக்கருவி தந்ததால் - ஆதித்தன் காட்டுவதே போலெவர்க்கும் காட்டுவதே அல்லால்பொய் ஈட்டுவிக்கச் செய்யான் என் றெண். (௧0) வாதித்த தேது மலமாமால் ஆங்கதனைச் சேதித்தல் ஈசன் திறமாகும் - ஆதித்தன் போலெவர்க்கும் காட்டிப் பொருந்துவதே அல்லால்பொய் மாலெவர்க்கும் வையான் மறந்து. (௧௧) அன்னியத்தில் தன்னினைவை ஆக்குவார் தங்களுக்கும் மன்னி அரன் பால்நினைவை வைப்பார்க்கும் - தின்னும் தனுவினையை ஈயத் தகுவதல்லால் மோக நினைவினைஉற் றீயான் நினைந்து. (௧௨) காட்டும் கதிரவன் அக்கண் அதனுக் கில்லைமுன் ஈட்டும் பொருள்மே இசையுமால் - கூட்டும் அரனெவர்க்கும் இல்லைம்ற் றாற்சகமே நோக்கி வருமதனால் நெஞ்சே மதி. (௧௩) சுத்தம் அசுத்தமெனச் சொல்லியவோ ராங்கவைக்கும் அத்தன் பிரேரகமே ஆகுமால் - பித்தருக்கங்(கு) அன்னியத்தை நோக்கி அறிவிப்பான் மற்றவர்க்குத் தன்னையே நோக்குவிப்பான் தான். (௧௪) பேதித்தார் தங்களுக்கும் பின்னமறத் தம்மடியில் சாதித்தார் ஆர்க்கும் சரியேனும் - வதித்த தீய மலமறுப்பான் சேர்ந்தார் தமக்கடியை ஐயமறச் சேர்ப்ப்பான் அரன். (௧௫) எல்லார் நினைவுக்கும் ஏற்றபடி யேகருணை நல்லான் பிரேரிக்கும் நன்மைகேள் - பொல்லா வினையிருத்து வார்க்கும் விரும்பியதோர் முத்தி தனையிருத்து வார்க்குஞ் சரி. (௧௬) எல்லார் நினைவுகும் ஏற்றபடி யேகருணை வல்லான் தனுவினையை வைத்தநெறி - பொல்லா மலமறுப்ப தாமால் வருநரக சொர்க்க நிலையிருத்து வானேல் நினைந்து. (௧௭) ஆவியின்மேல் இச்சை அடைவதல்லால் ஆங்கதன்மேல் கோபமே இல்லை குறிக்குங்கால் - மேவியதோர் ச்ன்னியத்தில் இச்சை அகற்றி அறி வானந்தத் தன்னியல்பே ஆக்குதற்குத் தான். (௧௮) மலமெ அறியாமை மற்றுயிரைத் தீண்டும் நிலையே அதற்கிலவாய் நிற்கும் - மலையா அறிவே உயிர்க்காமால் ஆங்கதன்மேல் ஏறும் பிறிவதற்காய் உற்றதெண்டப் பேறு. (௧௯) நின்மலமாய் ஆவி நிகழ்மலத்தைப் பற்றுதற்கு முன்மலமொன்(று) உண்டாய் மொழிவதாம் - பன்முதலும் உள்ளபோ(து) ஆவி ஒருப்பட்டுப் பின்மலத்தைத் தள்ளுங்கால் நின்மலமாம் தான். (௨0) தண்டி மலமுயிரைத் தாவுமேல் ஆவிக்குத் தெண்டிப்பே இல்லையெனச் செப்புவதாம் - அண்டி உயிருக்கு புத்தி உரைப்பதல்லால் தீய செயிருக்(கு) உரைப்பதில்லைத் தேர். (௨௧) வசிப்புண்டார் தம்மை வசிக்குமலம் தேவால் தெசிப்புண்டால் ஆங்கவனைத் தீண்டா - நசிப்பில்லாக் கண்ணை மறைக்குங் கடிய இருட்கதிரை நண்ணியகட் கின்றாம் நவை. (௨௨) மலமே தெனவேண்டா மற்றுயிர்மேல் நின்ற புலமேல் எழுந்தநெடும் பொய்யாம் - இலமேல் இருந்(து) அவத்தைச் செய்யாதே ஏதேனும் ஈசன் தரும் தவத்தை நெஞ்சே தரி. (௨௩) அறியாமை என்றும் அகண்டிதமால் ஆவி பிறியாமல் நிற்குமந்தப்  பேறால் - குறியாம் தனுவோ(டு) இசையினும்பின் தக்கவினை தானாம் நினைவோ(டு) இசையின்மால் நேர். (௨௪) ஆசைப் படுவாரை ஆசைப் படுத்துவித்தல் பேசும் உலகியல்பின் பெற்றியால் - மாசுமலம் உற்றாரைப் பற்றி உறுவதல்லால் ஒவ்வாமல் அற்றார்மேற் செல்லா(து) அறி. (௨௫) பித்தமுற்றார் தங்களுக்குப் பித்தகல நன்மருந்தை மத்தகத்தில் தேய்த்து மறிப்பதல்லால் - புத்திசொல்லி மாற்றியபேர் உண்டோ மலந்தவர்கள் ஆவியின்மேல் தோற்றுவதே இல்லைத் துணி. (௨௬) பிடித்தார் தமைப்பிடிக்கும் பேராச் சடமும் விடுத்தார் தமைவிடுக்கும் வேறாய் - அடுத்தமலம் தொட்டபேர் தம்மைத் தொடுவதல்லால் தொல்லுயிரைக் கட்டிப் பிடிப்பதில்லைக் காண். (௨௭) சத்திநி பாதம் சதுர்விதமால் தீயமலம் முத்தியிலும் நிற்கும் முறையென்னின் - சுத்தமரன் பாலே எழும் அவன்தன் பண்பால் அறியாமை மாலே அறுக்குமென மன். (௨௮) மாசற்றார் நெஞ்சின் மருவும் அரனின்றும் பாசத்தார்க் கின்றாம் பதியென்னில் - ஈசன் சரியாதி நான்கில் தகுமலமே கேடாய் வருமால் இலையாய் மதி. (௨௯) தீக்கைக்(கு) ஒதுங்கிச் சிதைந்தமலம் தன்வசமே ஆக்குதலைச் செய்ய அறியாவாம் - நோக்கி மலமே உளதென்று மன்னுவதே அல்லால் பெலமேதும் இல்லையெனப் பேசு. (௩0) இருவினையும் ஒத்தால் இசைந்த அரற் கன்பு மருவுதலால் உண்டோம் மலமால் - உருவினுக்கங்(கு) ஒத்த பிரார்த்தமரற் கூட்டுதலால் தீயவினை தொத்துதலே இல்லையெனச் சொல். (௩௧) சேதித்த சேடம் செயற்படுதல் அங்கத்தை வாதித்த நோய்மாறி வந்ததுவாம் - ஆதித்தன் முன்னிருல்போல் தீயமலம் முற்றும் சரியாதி தன்னிலையில் நிற்பார்க்குத் தான். (௩௨) ஒத்த மலத்தோ(டு) உறுவாரைத் தீயநெறிப் பெத்தரென்ப தாகப் பெறுவதாம் - சித்த மலத்தை வெறுத்து வரும் அரனை நோக்கும் நலத்தாரை முத்தரென நாடு. (௩௩) மலமுற்றா ரேனும் மன்னுமரன் பாத நிலையுற்றால் அம்மலமும் நீங்கும் - புலமுற்றும் பேதித்த மும்மலத்தின் பெற்றியறப் பெற்றியறச் சாதித்தார்க்(கு) இல்லைமலம் தான். (௩௪) சரியைக்(கு) அனுக்கிரக சத்திகா லாக வரிசைத் தவத்தோடும் வைத்துத் - தெரிசிக்க ஈசனே யாகும் எனுமுறைமை எவ்வுயிர்க்கும் நேசமே யாகும் நிறைந்து. (௩௫) மலம்நாலத் தொன்றாக் மாறும்பின் ஈசன் குலம்நாலத் தொன்றேற்கக் கூறும் - பெலமாம் இருவினையும் ஒப்பாம் இசைந்ததனுப் போகம் தரும் அரற்கே யாகத் தரும். (௩௬) நின்ற மலமதனை நீண்ட அரன் பாலன்பால் கொன்றிடுவ(து) என்றும் குணமாகும் ஆல் - துன்றும் சரியாதி நான்கில் தகுமரனே தானாய் வரலால் இலையாம் மலம். (௩௭) சரியாதி நான்கும் தகுமலத்தை வென்று வரவரவே சித்தமெனும் மாண்பாம் - புரையறவே ஒன்றாகி நிர்பார் உறுசிவமே ஒத்தவர்பால் சென்றார்க்குத் தீர்க்குமலத் தீ. (௩௮) தீக்கைகு காலாகச் சிந்துமால் தீயமலம் போக்குக்(கு) ஒதுங்கிப் பொருந்தியதால் - ஊக்குமரன் சேட்டையே மேலாகச் செல்லுங்கால் ஆங்கதுவும் ஒட்டமே யாமா றுணர். (௩௯) சுத்தமென நான்கினையும் சொல்லியது நற்கருணை அத்தம்மேல் பத்தி அடைதலால் - பெத்தம் மலத்தோ(டு) இசைந்துநின்று வாழ்வார்க்காம் தீக்கைக் குலத்தோரைச் சுத்தமெனக் கொள். (௪0) மலத்தார் தமக்கு ஆகும் மன்னுபிரா ரத்தம் இலத்தான் நரகசொர்க்க மேய்வாம் - நலத்தாகும் ஈசன்பால் நோக்கி இசைவார் சாகோக நேசமே ஆவார் நிறைந்து. (௪௧) மலமொன்(று) அகற்றப்பின் மற்றதெல்லாம் ஈசன் நிலையொன்ற தாகமிக நிற்கும் - மலைவின்றி ஈட்டியவா(று) ஆகும் இறையெவர்க்கும் தீயமலம் வாட்டுயவா(று) ஆகும் மதி. (௪௨) பெத்தமுத்தி என்னப் பிறங்கும் உருத்தன்மை ஒத்த படிகத்(து) ஒழுங்காகும் - சுத்தம் வரிற்போ(து) ஒளியாகும் வாராத போதிங்(கு) இருட்போதம் ஆகுமென எண். (௪௩) ஆவி இவைஇரண்டும் அல்லவாம் தீயமலம் மேவிப்  போய்ப் பித்தாய் விளங்குதலால் - தாவுமான் ஒத்துப் சுதந்திரமாய் ஒன்றுதலால் உண்மையுற்ற சித்தமவன் ஆகுமெனத் தேர். (௪௪) தத்துவமே விட்டார்க்குத் தத்துவமென தம்மறிவை அத்தனுக்கே ஈந்தார்க்(கு) அகம் ஏனாம் - சுத்தன் அரனே எனுமால் அகன்ற உடற் போகம் வருமே அவன்தாள் மதி. (௪௫) பெத்தருக்கெ ஆகும் பிராரத்தம் தீயமலப் பித்தே தனுவினையாம் பெற்றியால் - சுத்தம் சிவனே எனுமால் சிறந்தவுடற் போகம் அவனே எனும்வழுக்க தாம். (௪௬) பித்தமுற்றார் துய்த்தலந்தப் பித்தமால் பேராத சுத்தமுற்றார் துய்த்தலுமச் சுத்தமன்றோ - ஒத்த தொழிலனைத்தும் ஆங்கவையே சொல்லியதோர் ஈசன் எழிலனைத்தும் தானாம் என்(று) எண். (௪௭) பச்சிலையைத் தின்னும் பசும்புழுவைச் செங்குளவி நச்சியிட அப்புழுப்போய் நண்ணியதால் - இச்சித்துத் தோற்றுமிலை உண்ணத் துணியாது தொல்பிறவி மாற்றியபேர்க் கிவ்வாறாய் மன். (௪௮) வினையற்றால் அங்கம் விடுவாம் மனுவாம் தனுவுற்றால் அவ்வினையச் சார்வாம் - நினைவுற்று அரனாய்த் திரிவாக்கங்(கு) ஆங்கரனே போக தரமால் கருணையுருத் தான். (௪௯) ஊக்கிய காமம் உயர்சிவமாம் உற்றதனுத் தாக்கும் செயலே தரும்வாக்காம் - நீக்குமல வேதனையே மாற்றி விடுமால் மிகுங்கருணை நாதனவன் தானே நமக்கு. (௫0) ஊக்கிய காமம் உறும் இலமாம் உற்றதனுத் தாக்கிஞ் செயலே தகுமதற்கால் - ஆக்குமரன் பேதமென நோக்கிப் பிறியுமால் தீயமலப் போதமென நெஞ்சே புகல். (௫௧) இருளில் எழும் ஒளிமற்(று) ஆங்கே யிருளும் வருமொளிமேற் செல்லுதற்கு வாரா - அருளும் மலமேல் எழுமலமும் மாற்றியருள் மேலே செலநினைவ(து) இல்லையெனத் தேர். (௫௨) மலமக மாயா தனுவகலும் கன்ம நிலையகலப் புரணமாய் நிற்கும் - மலைவறவே போக்குதலைச் செய்வான்தன் பொன்னடிமேல் நின்றவர்மேல் ஆக்குதலைச் செய்யான் அரன். (௫௩) மலமுற்றார் துய்ப்பர் மலமே மனுவாம் நிலையுற்றார் உண்பர்மனு நீதி - அலைவற்ற ஞானத்தார் துய்ப்பர் நயந்த அருள் நற்றனுவாம் ஆனத்தால் ஒட்டியதோர் ஆறு. (௫௪) பெத்தருக்கே ஆகும் பிராரத்தம் பேராத முத்தருக்கே இன்றாய் மொழியும்நூல் - சித்தம் அறியாமை மாற்றி அடங்குமால் முத்தி பிறியாத நான்குமருட் பேறு. (௫௫) முத்தருக்கே ஆகும் மொழியுமருள் மந்திரமே சித்தமரன் பாலே செலும் அதுவே - ஒத்த தனுவுமது வாகத் தகுமேமெய்ப் போக மனுவே அதுவாமவ் வாறு. (௫௬) மந்திரத்தை உற்று வருந்தனுவை நீத்தோர்கள் புந்தியர னாகப் புகுமாமால் - வந்ததனு ஆங்கவனே ஆமால் அதற்கிசைந்த போகமெலாம் நீங்கா மலமறுக்கும் நேர். (௫௭) இருவினை ஒப்பில் இசைந்தவுயிர் மாறி வருமால் தனுவினையவ் வாறாம் - இருவனையும் சித்தமுற்ற வாறே திரும்புமால் ஒர்படித்தாய்ப் பெத்தமென்ப தல்லவெனப் பேசு. (௫௮) ஒத்த பதத்தை உறுவிக்கும் தாபரமால் சித்தமலஞ் சங்கமமே தீர்க்குமால் - அத்தனென்றும் ஆவியே நோக்கி அணையுமால் அற்றாரை மேவியே நிற்பன் விரைந்து. (௫௯) ஈசனாய் எல்லா உயிர்க்குயிராய் நிற்பானும் ஈசனாய் பூசைக்(கு) இசைவானும் - ஈசனாய்ச் சாலோக மாதிப் பயனளித்து நிற்பானும் ஆலோக லிங்கமென மன். (௬0) மனவாக்குக் காயம் மருவா அரனே மனவாக்குக் காயம் மருவி - நினைவார்க்கு மூவுருவே யாகி முதன்மைசிவ லிங்கமாய் ஏவுருவங் காண்கைக்(கு) இசைந்து. (௬௧) மந்திரமே உற்று வருங்கருணை நன்மவுனத் தந்திரமே உற்றிருக்கும் தன்மையால் - சிந்தித்து வந்தார் தமக்கே வரங்கொடுத்து நிற்குமே நந்தாக் கரிணை நலம். (௬௨) தெரிசித்(து) அருச்சனையைச் செய்விப்பார் தங்களுக்கும் பரிசித்(து) அருச்சனையைப் பண்ணி - உரிசித்தி யோகமே நோக்கி உழல்வார்க்கும் நன்முத்திப் பாகமேயார்க்  கும்லிங்கம் பார். (௬௩) தானே சிவலிங்கம் தானாகும் சற்குருவும் தானேநற் சற்கமமுந் தானாகும் - ஆனமையால் தங்கும் உயிரில் தரித்த மலமாற்ற எங்குஞ் சிவமேயென்(று) எண். (௬௪) குருவே சிவலிங்கக் கொல்கையெல்லாஞ் சொல்லி வருமால் இறையவன்பால் மாலாய் - வருமுயிர்கள் திய்ய மலமறுத்துச் செய்தியவன் பாலாகப் பைய நடக்குமெனப் பார். (௬௫) அங்க மலத்தை அகற்றிஅறி வோடறிவாய்த் தங்கியதே சங்கமத்தின் தன்மையாம் - லிங்கம் தனையே வழிபட்டுச் சாருமால் ஆர்க்கும் நினைவே அதுவாமாம் நேர். (௬௬) சங்கமமும் மிக்க தகுங்குருவும் லிங்கத்தின் சங்கமமே உற்ற சதுரினால் - லிங்கத்தை வந்திப்பா ரானார் வருமுலகர் எல்லாம்பின் சிந்திப்பா ரானார் தெரிந்து. (௬௭) நோக்கால் பரிசத்தால் நூலினால் பாவனையால் வாக்கால்மெய் யோகத்தால் மாற்றுவான் - தாக்குமலம் ஐந்தினையும் சற்குருவே ஆமால் அறிவென்கை சந்தயமே இன்றாகும் தான். (௬௮) எல்லா அறிவும் இசைந்தவுயி ரோடிசைந்து சொல்லாத போதெவர்க்குந் தோற்றாதாம் - நல்லசிவ லிங்கமே நூலுரைத்து நில்லாதாம் நீள்கருணைச் சங்கமத்துக் காகத் தகும். (௬௯) புத்திசொல்லிப் பொய்யதனைப் போக்கியதும் பூரணமாம் அத்தன்மேல் நேசமுற ஆக்கியதும் - சித்தம் ஒருமித்தார் தம்மோ(டு) உறைவதுவும் முத்திக் கருமத்தால் உற்ற கடன். (௭0) ஆவியே ஈசற் கருளுருவே ஆகுமெனக் கூவுமறை ஆகமத்துங் கொண்டதால் - மேவும் சிவனே இவனென்று சித்திப்பார் தாமே அவனாவார் நெஞ்சே அறி. (௭௧) உபதேசத் தாலும் உறுநூலி னாலும் பவதேசம் மாற்றுவிக்கும் பண்பால் - சிவனேசர் போலே இருந்து பொருந்தியதோர் தீமலத்தின் மாலே அறுப்பன் மகிழ்ந்து. (௭௨) ஆவி திரிந்தபடி ஆகமாம் ஆங்கதுபோல் மேவும் வினைதிரிந்து வெற்றியாம் - பாவம் உறுவார்க்கும் மந்திரத்தை ஒன்றினர்க்கும் ஞானம் பெறுவார்க்கும் இவ்வாறாம் பேறு. (௭௩) ஆதலினால் சங்கமத்தை ஆன்மாக்கள் போலேநீ பேதமென எண்ணிப் பிரியாதே - தீதகல நோக்குமே எவ்வுயிர்க்கும் நுண்ணியநற் போதமதாய் ஆக்குமே நெஞ்சே அறி. (௭௪) மலமகற்ற ஈந்ததனு மன்னியதை ஆங்கே நிலையகற்றி நின்மலமாய் நின்று - மலைவறுக்கும் ஈசனோ டொன்றாய் இசையும் இருவினையும் மாசறுக்கும் மற்றவர்நே ருற்று. (௭௫) இருந்த இடத்தங்(கு) இருவினையும் ஆங்கே வருந்தியதோர் அன்பாய் மருவித் - தருந்தவர்க்குத் திய்ய மலமறுக்கும் செய்தியால் நற்கருணைக்(கு) ஐயமிலை என்றே அறி. (௭௬) மூவுருவே எவ்வுயிர்க்கும் முத்தி அளிக்குமால் மூவுருவில் ஒன்றறவே முத்தியில்லை - மூவுருவும் ஈசனே தானாய் எழலால் இழிவுயர்வு பேசுதற்கே இல்லையெனப் பேசு. (௭௭) ஆசையற்றார்க்கு உண்டோ அகத்துன்பம் நல்லறமாம் நேசமற்றார்க்கு உண்டோ நிகழ்சொர்க்கம் - பேசுமலம் அற்றார்க்கும் உண்டோ அணுகுமுடல் தீயகுலம் உற்றார்க்கும் உண்டோ குரு. (௭௮) அறமுறைவார்க்(கு) இல்லைப்பொய் ஆயிழைமேல் மோகம் மறமுறைவார்க்(கு) இல்லை அற மாண்பு - துறவுறையும் முத்தர்க்கே இல்லை மொழியுமுடல் நற்சிவமாம் ஐத்தர்க்கே ஆவியில்லைத் தேர். (௭௯) ஊனுண்பார்க் கில்லை உயிரிரக்கம் ஒண்புசை தானில்லார்க் கில்லைத் தகுங்கதிநேர் - கோனடியை வந்திப்பார்க் கில்லை வருநிரயம் ஆங்கவனைச் சிந்திப்பார்க் கில்லை வருநிரயம் ஆங்கவனைச் சிந்திப்பார்க் கில்லைமலத் தீ. (௮0) சாதியுற்றார்க் கில்லைத் தகுஞ்சமயம் சங்கமமம் நீதியுற்றார்க் கில்லை நிக்ழ்சாதி - பேதமற்ற அங்கத்தார் தங்களுக்கங் காவியில்லை ஆவியுறும் சங்கத்தார்க் கில்லைஉடல் தான். (௮௧) மனம்கவர்ந்தார்க் கில்லை வருந்துறவு மாயாச் சினம் கவர்ந்தார்க் கில்லைத் தெளிவே - அனங்கனம்பின் புண்ணுற்றார்க் கில்லைப் புனிதம் பொருந்துமரன் கண்ணுற்றார்க் கில்லைமதன் காண். (௮௨) பொய்யுற்றார்க் கில்லை புகழுடம்பு போகத்தின் கையுற்றார்க் கில்லை கருதுமறம் - மெய்யுற்றுக் காமித்தார்க் கில்லை உயிர் காட்டாமல் மேலன்பைச் சேமித்தார்க் கில்லைச் சிவன். (௮௩) ஆசையுற்றார்க் கில்லை அருட்செல்வம் ஆங்கரன்பால் நேசமுற்றார்க் கில்லை நெடியமறம் - மாசற்ற நெஞ்சினார்க் கில்லை நிகழ்குறைவு தீதைவிட அஞ்சினார்க் கில்லை அரன். (௮௪) திருவினை உற்றார்க்குத் தீதில்லைச் செங்கண் ஒருவனைற் றார்க்குயர் வில்லைக் - குருவவனை ஐயுற்றார்க் கில்லை அருளுடைமை ஆங்கவன்தன் மெய்யுற்றார்க் கில்லை வினை. (௮௫) கற்றவர்க்கே இல்லைக் கரிசறுத்தல் கற்றநெறி உற்றவர்க்கே இல்லை உறுங்கரிசு - மற்றுடலைச் சேதித்தார்க் கில்லைத் திரிமலமெய்த் தேவோடு சாதித்தார்க் கில்லையுயிர் தான். (௮௬) சீவனுற்றார்க் கில்லை சிவமச் சிவமச் சிவமென்னும் தேவனுற்றார்க் கில்லையந்தச் சீவனென்கை - ஆவதனால் அங்காங்கி யாக அடையும் உயர்பிழிவாம் மங்காதே வைக்கும் வரம். (௮௭) வாளுற்றார்க் கில்லை வருங்கருணை மன்னுதவக் கோளுற்றார்க் கில்லை கொடுங்கோபம் - வேளுற்ற நெஞ்சினார்க் கில்லை நிகழ்மரபு தீதைவிட அஞ்சினார்க் கில்லை அறம். (௮௮) மரத்தில் உருவமைக்க மாறும் மரத்தைக் கருத்தில் அமைக்கவுருக் காணாத் - திருத்துமரன் காணுங்கால் ஆவியினைக் காணாமெய் யாவியினைக் காணுங்கால் காணா தரன். (௮௯) சித்திரமும் நற்சுவருஞ் சேருங்கால் ஒன்றாம்நற் சித்திரமே காட்டாதிச் சேர்சுவரைப் - புத்திதனைத் தேற்றும் அரனே செலுமுயிரைக் காட்டாமல் தோற்றியவா றென்னத் துணி. (௯0) இரும்பினைப்பொ ன்னாக்கும் இயைந்த குளிகை திரும்பியிரும் பாக்குதலைச் செய்யா - விரும்புமலம் போக்குவதே அல்லாற்பின் போனதனை ஆருயிர்மேல் ஆக்குதலைச் செய்யான் அரன். (௯௧)

 


See Also:
1. சித்தாந்த சாத்திரம் - 14

 

Related Content

வீரசைவ நூல்கள்

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara sattiram arultiru ampalavaana tesikar arulis seyta -

பண்டார சாத்திரம் அருள்திரு அம்பலவாண தேசிகர் அருளிச் செய்த

Pandara-sattiram arultiru-ampalavaana-desigar-arulisseyta-na