உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
5. தக்ஷ காண்டம்
14. கயமுகன் உற்பத்திப் படலம்
பாக சாதனன் தொல்லைநாள் வானவப் படையோ
டேகி யேயசு ரர்க்கிறை தன்னைவென் றிகலில்
வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப்
போக மார்தரும் உலகிடை மீண்டுபோய்ப் புகுந்தான். 1
பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
வன்னி யுற்றிடும் அலங்கல்போ லுளநனி வாடி
வென்ன ளித்திடும் அவுணர்தங் கோமகன் வினையேற்
கென்னி னிச்செயல் எனப்பெரி துன்னியே இனைந்தான். 2
வெருவ ரும்படி மலைந்திடும் அமரர்பான் மேவிப்
பொருது வென்றிகொண் டேனக்குமப் பெரும்புகழ் புனைய
ஒருவ ரெங்குலத் தில்லைகொ லோவென உரையாக்
குருவி ருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன். 3
பொற்றை யின்சிறை தடிந்தவன் கரரொடும் போர்மேல
உற்ற காலையில் படையுடன் யான்பொரு துடைந்து
மற்ற வற்குவென் னளித்தனன் நம்பெரு மரபிற்
கொற்ற வீரர்க ளியாவரு முடிந்தனர் கூற்றால். 4
கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரையாம்
பழிகொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு பகைவர்க்
கழிவும் உற்றனம் பெருந்திறல் அற்றம் அவுணர்
ஒழியும் எல்லைவந் தெய்திய தோவிவண உரைத்தி. 5
சிறுவ ராயினோர் பெருமையிற் பிழைப்பரேல் தெருட்டி
உறுதி பற்பல கொளுத்திமற் றவர்தமை உயர்ந்த
நெறியின் ஆக்குதல் குரவர்தங் கடனது நீயே
அறிதி யாதலின் உய்யுமா றுரைத்தியென் றறைந்தான். 6
உரைத்த வாசகங் கேட்டலும் மன்னநீ உளத்தில்
வருத்த முற்றிடல் என்னவே தேற்றிமேல் வருவ
கருத்தி லுன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத்
தரைத்த சாந்தினை அப்பினன் போலஒன் றறைந்தான். 7
(1. பாகசாதனன் - இந்திரன். விஞ்சையர் - வித்தியாதரர்.
2. வினையேற்கு - பாவியாகிய எனக்கு.
3. குரு - சுக்கிரன். கொடியோன் - அசுரர் அரசன்.
4. பொற்றை - மலை.
7. வெதும்பிய - வெப்பமுற்று. சாந்து - சந்தனம்.)
வேறு
ஆதியம் பரமன் தாளே அடைதரு புனிதன் தொல்லை
வேதியர் தலைவ னான வி£¤ஞ்சன்மெய் யுணர்விற் பூத்த
காதலன் புலன்க ளாய பகைஞரைக் கடந்த காட்சி
மாதவ முனிவர்க் கீசன் வசிட்டனென் றுரைக்கும் வள்ளல். 8
அன்னவன் மரபின் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன் மேலாய்
மன்னிய நெறிக்கண் நின்றோன் மாகதன் என்னும் பேரோன்
உன்னரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு
தன்னையிங் கடைவன் என்னாத் தவந்தனை இயற்ற லுற்றான். 9
ஆயவன் தன்பால் இன்றோர் அசுரகன் னிகையைத் தேற்றி
ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன்ற னோடு
மேயின காலை ஆங்கோர் வேழமா முகத்தன் உங்கள்
நாயகன் ஆகத் தோன்றி நற்றவம் புரிவன் அன்றே. 10
நற்றவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றுஞ்
செற்றவன் மேவி மேலாஞ் செல்வமுந் திறலும் நல்க
மற்றவன் வானோர் தொல்சீர் மாற்றியெவ் வுலகும் ஆளுங்
கொற்றவ னாவன் என்று கூறினான் குரவ னானோன். 11
அவ்வுரை கேட்ட லோடும் அடித்துணை இறைஞ்சி ஈது
செவ்விது செவ்வி தெந்தாய் செய்வல்நீ பணித்த தென்ன
எவ்வமில் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன
மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான். 12
மீண்டுதன் னிருக்கை எய்தி விபுதையென் றொருத்தி அன்னாள்
காண்டகும் எழிலின் மிக்க கன்னிதன் குலத்தில் வந்தாள்
பூண்டகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி
ஈண்டொரு மொழிகேட் டன்னாய் என்னிடர் சீர்த்தி யென்றான். 13
மன்னவர் மன்னன் கூறும் மாற்றமங் கதனைக் கேளாக்
கன்னிகை யாகி நிற் காமரு வல்லி அன்னாள்
நின்னடித் தொண்டு செய்யும் நிருதர்தங் குலத்து வந்தேன்
என்னுனக் கியற்றுஞ் செய்கை இசைந்தன இசைத்தி என்றாள். 14
உரையென லோடு மன்னன் உன்குலத் தோரை விண்ணோர்
பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே
மருவருங் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல
ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டுங் கண்டாய். 15
ஆங்கதற் கேதுக் கேட்டி அம்பொன்மால் வரைத்தெ னாது
பாங்கரில் அரிய நோன்பு பயிலுமா கதன்பாற் சென்று
நீங்கல்செல் லாது பன்னாள் நினைவறிந் தொழுகிக் காலந்
தீங்கற நாடி அன்னான் செய்தவஞ் சிதைத்துச் சேர்தி. 16
சேருதி யென்னின் அங்கோர் சிறுவன்நின் இடத்தில் தோன்றிப்
பாருல கனைத்தும் மேலாம் பதங்களும் வலிதிற் கொண்டு
வீரரில் வீர னாகி வெம்பகை வீட்டி எங்கள்
ஆரஞர் துடைக்கும் அன்னாய் அன்னவா றமைதி என்றான். 17
(8. விரிஞ்சன் : காதலன் - சனகாதியோர். 9. அன்னவன் - அவ்வசிட்டன்.
மாகதன் - ஒரு முனிவன்.
12. புகர் - சுக்கிரன். 13. விபுதை - இவள் ஒரு அசுர கன்னிகை.
15. வென் - முதுகு. 16. ஏது - காரணம்.)
வேந்தன் துரையைக் கேட்ட விபுதையம் முனிவன் தன்பால்
போந்துன தெண்ண முற்றப் புதல்வனை அளித்து மீள்வல்
ஏந்தல்நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன் வானோர்
மாய்ந்தனர் இனியென் றுன்னி மகிழ்ச்சியோ டிருந்தான் அங்கண். 18
ஏகிய அசுர கன்னி ஏமமால் வரையின் சார்போய்
மாகதன் பாற்சென் றன்னான் மாதவத் திறத்தை நோக்கி
ஆகொடி திவனே அல்லா தாரிது புரியும் நீரார்
மோகமிங் கிவனை யாக்கி முயங்குவ தெவ்வா றென்றாள். 19
நேமிகள் அனைத்தும் ஆர நிவந்தெழும் வடவை தன்னை
மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்ல தென்னில்
காமவேள் எடுத்த செய்ய கணையெலாம் ஒருங்கு சென்றித்
தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்றாள். 20
வானுயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே யல்ல
மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர் தங்கள்
கோனி• துணரான் போலுங் குறுகிநீ புணர்தி என்றால்
நானதற் சிசைந்த வாறும் நன்றென நகைத்து நின்றாள். 21
போந்தனென் மீண்டும் என்னிற் போற்றலர்க் குடைந்து சோரும்
வேந்தனென் னுற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா
ஏய்ந்தநே யத்தி லென்பால் எய்திமற் றிவனே எற்குக்
காந்தனே யாக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள். 22
என்றிவை உன்னி உற்றோர்க் கினிதருள் புரியும் வௌ¢ளிக்
குன்றுறை பெருமான் செய்ய குரைகழல் கருத்துட் கொண்டு
வன்றிறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா
நின்றருந் தவத்தை யாற்ற நெடும்பகல கழிந்த தன்றே. 23
மாதுசெய் தவத்தி னாலும் வரன்முறை வழாத ஊழின்
ஏதுவி னாலும் அங்கண் இருங்களிற் றொருத்தல் ஒன்று
காதலம் பிடியி னோடு கலந்துடன் புணரக் காணுஉ
ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அருந்த வத்தோன். 24
மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா
துறந்தனன் காமம் என்னுஞ் சூழவலைப் பட்டுச் சோர்வுற்
றிறந்தனன் போல மாழ்கி இன்னுயிர் சுமந்தான் இன்று
பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடு வேனேல் என்றான். 25
என்றிது புகன்று முன்செய் தவக்குறைக் கிரங்கி என்றும்
நின்றது பழியே யேனும் நீடுமேற் காமச் சூர்நோய்
தின்றுயிர் செகுக்கும் அந்தோ செய்வதிங் கெவனோ என்னா
வென்றிகொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல் உற்றான். 26
(18. மீள்வல் - திரும்புவேன். 20. நேமிகள் - கடல்கள்.
21. மேனகை - தேவ மாதரில் ஒருத்தி.
22. காந்தன் - காதலன். 24. களிறு ஒருத்தல் - ஆண் யானை.
பிடி - பெண் யானை.
25. மனுவின் செய்கை - மந்திரம் செபிக்கும் தொழில்.
26. சூர் - அச்சம்.)
தீவிடந் தலைக்கொண் டாங்கே தெறுதரு காமச் செந்தீ
ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை
யாவதென் றாக்கின் இன்னும் அருந்தவங் கூடும் ஆவி
போவதிற் பயனியா தென்னாப் புணர்ச்சிமேற் புந்தி கொண்டான். 27
பேவதற் கெண்ணுப் போதில் பொருவில்சீர் அசுரர்க் கெல்லாங்
காவலின் ஏவல் போற்றும் கன்னிகை முனிவன் காமத்
தோய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்குடன் நோக்கி எண்ணம்
யாவதும் முடிந்த தென்னா எல்லையில் மகிழ்ச்சி பெற்றாள். 28
ஈங்கிது கால மாகும் இடனுமாம் இதற்கு வேறு
தீங்கிலை இனைய கூட்டஞ் செய்தவஞ் செய்த தென்னா
வாங்கிய நுதலி னாளும் வல்விரைந் தெழுந்து தூயோன்
பாங்கரின் அணுகிப் பொற்றாள் பணிந்தனள் பரிவு கூர. 29
மின்னிடை பணிந்து நிற்ப மெய்யுறுப் பனைத்தும் நோக்கிப்
பின்னரும் மால்மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா நின்று
கன்னியும் என்னை வெ•குங் காந்தரு வத்தி னாளும்
இன்னவ ளாயின் அன்றோ என்னுயிர் உய்யும் என்னா. 30
கருத்திடை உன்னி யார்நீ கன்னியோ என்ன லோடும்
அருத்திகொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன நம்பால்
வரத்தகுங் கருமம் என்கொல் வல்லையில் இயம்பு கென்றான்
விரத்தரில் தலைவ னாகி வீடுபெற் றுய்ய நோற்றான். 31
முருந்தெனும் முறுவ லாளும் முனிவநீ கணவ னாக
இருந்தவம் புரிந்தேன் பன்னாள் இன்றது முடிவ தாகப்
பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன
வருந்துறா தமுதம் பெற்ற மாக்கள்போல் மகிழ்ச்சி உற்றான். 32
என்பெருந் தவமும் பன்னாள் என்பொருட் டாக நோற்ற
நின்பெருந் தவமும் அன்றோ நின்னுடன் என்னை ஈண்டே
அன்புறக் கூட்டிற் றம்மா அடுகளி றென்னப் புல்லி
இன்புற வேண்டும் நீயும் இரும்பிடி யாதி என்ன. 33
மெல்லியல் தானும் அங்கோர் வெம்பிடி யாகித் தோன்றி
எல்லையில் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும்
மல்லலங் களிற தாகி வானுயர் புழைக்கை நீட்டிப்
புல்லினன் ஊற்றந் தானே புணர்ச்சியிற் சிறந்த தன்றே. 34
நையுறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி
ஐயுறு புலனோர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன்னாள்
மெய்யுறு புணர்ச்சித் தாய வேட்கையின் மேவ லுற்லுச்
செய்யுறு காம முற்றித் தீர்ந்திடு காலை தன்னில். 35
(29. கூட்டம் - சேர்க்கை. பரிவு கூர - அன்புமிக.
32. முருந்து - மயிலிறகின் அடி.
35. உள்ளம் ஆதீ நான்மை - மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்.)
அயன்முதல் தலைவர் வானத் தமர்தரு புலவர் ஆற்றுஞ்
செயன்முறைக் கடன்கள் யாவுஞ் சிந்தினன் சிதைக்கும் வண்ணம்
வயமுகத் தடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின் நால்வாய்க்
கயமுகத் தவுணன் ஆங்கே கதுமென உதயஞ் செய்தான். 36
பற்றிய பலகை ஔ¢வாள் விதிர்த்தனன் பரவை ஞாலஞ்
சுற்றினன் வரைகள் யாவுந் துகள்பத் துணைத்தாள் உந்தி
எற்றினன் உருமே றஞ்ச இரட்டினன் உலக மெல்லாஞ்
செற்றிடுங் கடுவ தென்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான். 37
அன்னதோர் பிடியு ரோமம் அளப்பில அவற்றில் ஆங்கே
மின்னிலங் கெயிற்றுப் பேழ்வாய் விளங்கெழில் செக்கர் வாய்ந்த
சென்னியங் குடுமி வீரர் தெழித்தெழீஇச் செங்கை தன்னில்
துன்னிரும் படைக ளோடுந் தோன்றினர் தொகையில் ஆன்றோர். 38
இன்னவ ரோடு கூடி இபமுகத் தவுணன் ஆர்ப்பத்
தன்னையும் பயந்தோன் தானுந் தளர்ந்தனர் இரியல் போகி
முன்னுறும் உருவங் கொள்ள முனிவரன் உணர்வு தோன்ற
உன்னிநின் றிரங்கி யேங்கி ஊழ்முறை நினைந்து நைந்தான். 39
மாயமாங் காமம் என்னும் வலையிடைப் பட்டு நீங்குந்
தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி
நீயெவர் குலத்தில் வந்தாய் நினைந்ததென் கழறு கென்னச்
சேயிழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள். 40
வரன்முறை ணர்த லோடும் மாகத முனிவன் யானே
தரணியில் உயிர்க ளான சராசரந் தனக்கு மேலாஞ்
சுரகுலந் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா
எரியுறு தளிர்போல் வாடி இன்னலங் கடலுட் பட்டான். 41
சிலபொழு திரங்கித் தேறிச் செயிழை மடந்தை நுங்கோன்
மெலிவுநின் னெண்ணந் தோனும் வீடுபெற் றுய்ய யான்முன்
பலபகல் புரிந்த நோன்பும் பாருல கனைத்தும் வானோர்
உலகமு முடிந்த வேநீ ஒல்லையிற் போதி என்றான். 42
போதிநீ என்ன லோடும் பொன்னடி வணங்கிச் சென்று
தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க் கிறைபால் எய்தி
ஈதெலாம் உரைத்த லோடும் எல்லையின் மகிழ்ச்சி யாகிக்
காதல்கூர் தபனற் காணுங் காலையங் கமலம் போன்றான். 43
(36. வய - பெருமை. தடவு - வளைவு. வயிர்த்திடும் - வைரம்
பொருந்திய. நால்வாய் - தொங்குகின்ற வாய்.
37. பலகை - கேடகம்.
39. இபமுகம் - யானைமுகம்.
40. தூயவன் - இங்கு மாகத முனிவன். சுளித்து - கோபித்து.
சேயிழை - இங்கு விபுதை.
41. சராசரம் - சரம் + அசரம். சரம் - அசையும் பொருள்; இது இயங்கியற்
பொருள் (இயங்குதிணை) அல்லது சங்கமம் எனவும் பெயர்பெறும்.
அசரம் - அசையாப்பொருள் இது நிலையியற் பொருள் (நிலைத்திணை)
அல்லது தாவரம் எனவும் பெயர்பெறும்.
43. தாது - மகரந்தம். தயிர்த்தியர் - அசுரர். தபனன் - சூரியன்.
காணும் காலை - உதயகாலம்; கண்டபொழுதுமாம்.)
தாங்கரும் உவகை யோடுந் தானவர்க் கரசன் நண்ண
ஈங்குறு முனிவன் முன்போல் இனிதுநோன் பியற்றப் போனான்
ஆங்கவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன் தன்னோ
டோங்கலின் குலங்கள் மேரு வுடன்நடந் தென்னச் சென்றார். 44
சீற்றங்கெகள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்ட தென்னக்
கூற்றம்பல் லுருவு கொண்டு குலாயகொட் பென்ன ஊழிக்
காற்றெங்கும் பரவிற் றென்னக் கடலிடைப் பிறந்த நஞ்சம்
ஊற்றங்கொண் டுலாய தென்ன உலகெலாந் திரிதந் துற்றார். 45
மலையிஆ¨பி பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர் வாரி
அலையினைக் குடிப்பர் கையால் ஆருயிர்த் தொகையை அள்ளி
உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவா¢ பரிதி யோடு
நிலையினைத் தடுப்பர் சேடன் நெறிதரப் பெயர்வர் மாதோ. 46
தக்கதோர் அவுண ரோடுந் தந்திமா முகத்து வீரன்
திக்கெலாம் உலவி யெல்லாத் தேயமும் ஒருங்கே சென்று
மக்களே யாதி யான மன்னுயிர் வாரி நுங்கித்
தொக்கதோர் செந்நீர் மாந்தித் துண்ணெனத் திரியும் அன்றே. 47
அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக்
கைத்துறும் உயிர்கள் யாவுங் கவர்ந்தனர் மிரைந்தா ராகப்
பொய்த்தவர் வெறுக்கை என்னப் பொயின உயிர்கள் சால
எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி. 48
முகரிமை அடைந்த வன்தோன் முகத்தவன் அவுண ரோடும்
அகலிட மிசையே இவ்வா றமர்தலும் அனைய தன்மை
தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமதுதொல் குரவ னான
புகரினை விடுப்ப அன்னான் போந்திவை புகலல் உற்றான். 49
வேறு
ஔ¢ளி தாகிய உங்குலத் துற்றுள
மள்ளர் யார்க்குமொர் வான்குரு வாயினேன்
தௌ¢ளு பன்மறைத் திட்பமுந் தேர்ந்துளேன்
வௌ¢ளி என்பதொர் மேதகு பேரினேன். 50
உங்கு லத்துக் கொருமுத லாகிய
சிங்க மன்ன திறலினன் உய்த்திட
இங்கு நின்புடை எய்தினன் மேல்நெறி
தங்கு நன்னயஞ் சாற்றுதற் கேயென்றான். 51
குரவ னாகிக் குறுகிய சல்லியன்
பரிவொ டீது பகர்தலும் ஆங்கவன்
திருவ டித்துணை சென்று வணங்கியே
கரிமு கத்தன் கழறுதல் மேயினான். 52
(45. தறுகண் - அஞ்சாமை. கொட்புஎன்ன - உலவினாற்போல்.
46. சேடன் - ஆதி சேடன்.
47. நுங்கி - விழுங்கி. செந்நீர் - இரத்தம்.
48. பொய்த்தவர் - பொய்யுரைப்போர்.
49. முகரிமை - முதன்மை. தோல்முகத்தவன் - கயமுகாசுரன்.
50. மள்ளர் - வீரர். 52. சல்லியன் - சுக்கிரன்.)
இறுவ தின்றிய எங்குலத் தோர்க்கெலாம்
அறிவ நீஅரு ளால்அடி யேற்கிவண்
உறுதி கூறுகின் றாய்இதன் ஊங்கினிப்
பெறுவ தொன்றுள தேயெனப் பேசினான். 53
அந்த வேலை அவுணர்கள் யாவருஞ்
சிந்தைமேல் கொண்ட தீதினை நீத்திடா
எந்தை யார்தங் குரவர் இவரெனா
வந்து பார்க்கவன் தாளில்வ ணங்கினார். 54
சீத வான்முகிற் கோள்எனுஞ் செவ்வியோன்
ஆதி தன்னரு ளால்அவு ணர்க்கிறை
போத கன்முகம் நோக்கிப் பொருவிலா
ஓதி மாண்பின் இவையுரைக் கின்றனன். 55
வேறு
மீயுயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார்
மாயமுந் திறலுஞ் சீரும் வன்மையுஞ் சிறிதுந் தேராய்
ஏயவிவ் வுடலம் நில்லா தென்பதுங் கருதாய் வாளா
போயின பன்னாள் என்நீ புரிந்தனை புந்தி இல்லாய். 56
முப்பகை கடந்து மற்றை முரட்பகை முடித்திட் டைம்பான்
மெய்ப்பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல் பெற்றுத்
துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும் வானாட்
டப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும் அன்றே. 57
இம்மையில் இன்பந் தன்னைப் புகழொடும் இழத்தி மேலை
அம்மையில் இன்பந் தானும் அகன்றஆ போலும் அன்றே
உம்மையும் இன்பம் என்ப துற்றிலை என்னிறி¢பின்னை
எம்மையில் இன்பந் துய்க்க இசைந்துநீ இருக்கின் றாயால். 58
ஆக்கமுந் திறலுஞ சீரும் ஆயுவும் நலனும் மேலாம்
ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தின தூற்றம அன்றோ
நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினை வெல்லாம்
போக்குவ தென்னை கொல்லோ புகலுதி இகலும் வேலோய். 59
ஆற்றிடு தருமம் விஞ்சை அரும்பெறல் மகவும் சீர்த்தி
ஏற்றிடு கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம்
நோற்றிடு விரதஞ் சீலம் நூவலரும் போதம் யாவுங்
கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடிற் கூடு மோதான். 60
(53. இறுவது - அழிவது. அறிவ - ஞானாசிரியனே.
54. பார்க்கவன் - சுக்கிரன்.
55. முகிற்கோள் எனும் செவ்வியோன் - சுக்கிரன்.
57. முப்பகை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகை.
முரட்பகை - வலியபகை. ஐம்பால் மெய்ப்பகை - ஐம்புலனாகிய உட்கபகை.
58. அம்மை - அவ்வுலகம். உம்மை - நடுவணதான இக்காலம்.
எம்மை - எந்தச்சென்மம்.
60. விஞ்சை - வித்தை. மகவு - புத்திரப்பேறு. சீலம் - ஒழுக்கம்.
போதம் - நல்லுணர்வு. குறித்திடில் - கருதினால்.)
காலனா கியதோர் சேர்ப்பன் காலமாம் வலையை வீசி
ஞாலமாந் தடத்தில் வைகும் நல்லுயிர் மீன்கள் வாரி
ஏலவே ஈர்த்து நின்றான் இறுதியாங் கரைசேர் காலை
மேலவன் கையுட் பட்டு மெலிவொடு வீடும் அன்றே. 61
சீரிர துடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல் செல்லா
தாருயிர் வகையும் என்ப தறிந்திலை ஆயுட் பன்னாட்
சாருதல் வேண்டு மென்னுந் தகைமையும் நினைத்தி அல்லை
பாருயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ. 62
மந்திரம் இல்லை மாயம் இல்லையோர் வரமும் இல்லை
தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படையொன் றில்லை
அந்தர வமர ரெல்லாம் அனிகமாய்ச் சூழ நின்மேல்
இந்திரன் போருவான் செல்லின் யாதுநீ செய்தி மாதோ. 63
சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி
அறிகில வாகி வீழவுற் றகப்படு மாவும் மீனும்
பறவையும் என்ன எல்லார் புணர்ப்பினிற் படுதி இன்னே
விறலொடு வலியுஞ் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய். 64
ஆதலின் எவர்க்கும் மேலாம் அரன்றனை உன்னி ஆற்ற
மாதவம் புரிதி அன்னான் வரம்பல கேட்ட வெல்லாந்
தீதற உதவும் பின்னர்த் தேவர்உன் ஏவல் செய்வார்
மேதகும் உலகுக் கெல்லாம் வேந்தனாய் இருத்தி என்றான். 65
சொன்னவை கேட்ட லோடுந் தொழுதகை அவுணர் தோன்றல்
முன்னிவை யாவ ரேனும் மொழிந்தனர் இல்லை யானும்
இன்னவை புரிதல் தேற்றேன் இனித்தவம் இயற்று கின்றேன்
அன்னவை புரியுந் தன்மை அருள்செயல் வேண்டும் என்றான். 66
(61. காலன் - எமன். சேர்ப்பன் - நெய்தனிலத்தவனான செம்படவன்.
மேல் - பின்னர். அவன் - அந்த எமன். வீடும் - அழியும்.
63. அனிகம் - சேனை.
64. வீழவுற்று அகப்படும் - வலையிலும், தூண்டிலிலும், கண்ணியிலும்
முறையே அகப்பட்டுக் கொள்ளுகின்ற. விறல் - வெற்றி. )
வேறு
ஐயவினைசெய் பொறிகளெலாம் அரங்கமெனக்
கறங்கும்அறி வடங்கு கின்ற
மெய்வினைய மந்திரமுந் தந்திரமும்
அங்கமுறு விதியி னோடு
கைவினையும் உட்கோளும் புறங்காப்பும்
விரதஞ்செய் கடனும் ஏனைச்
செய்வினையும் உணர்வித்து மேருவின்பால்
தவம்புரியச் செல்லு கென்றான். 67
ஏவுதலுங் கயமுகத்தோன் அவுணரொடும்
புகரடியின் இறைங்சி அங்கண்
மேவுவன்யான் எனவுரையா விடைகொண்டு
நோற்றிடுவான் விரைவின் ஏகக்
காவதமங் கோரிரண்டு கடப்பளவுந்
தானின்று கண்ணின் நோக்கிப்
போவனினி எனமகிழ்ந்து மீண்டுபோய்
அவுணர்பதி புகுந்தான் அன்றே. 68
அக்காலத் தெதிர்வந்த இறைவனுடன்
புகுந்தவெலாம் அறைய அன்னான்
இக்காலந் தானன்றோ அருள்செய்தீர்
எனவியம்ம்பி ஏத்தி அன்பால்
முக்கால்வந் தனைசெய்து விடுத்திடப்போய்த்
தன்பதத்தின் முன்ன மேபோல்
மிக்கானும் வீற்றிருந்தான் கடவுளரும்
புரந்தரனும் விழுமங் கொள்ள. 69
மாண்டகுமவ் வலியகலன் மருப்பதனை
எதிர்ந்துதொல்லை வைப்பின் ஈங்கு
மீண்டியதிண் காழிரும்பின் எ•கமுதல்
வியன்படைகள் இயற்சை என்னக்
காண்டகைய தங்குரவ னானபுகர்
உரையதனைக் கருத்துட் சேர்த்தி
ஆண்டகைசேர் இபமுகத்தோன் அவுணருடன்
தவம்புரிவான் அகலல் உற்றான். 70
அங்கண்முகில் படிந்தறியா மேருவினுக்
கொருசார்போய் அவுணர் வேந்தன்
துங்கமிகு கருவிகளாய் வேண்டுவன
கொணர்வித்துத் தூநீர் ஆடிச்
செங்கதிரோன் தனைநோக்கி ஆற்றுகடன்
முடித்துமுன்னைத் தீர்வு நேர்ந்து
தங்கள்குர வன்பணித்த பெற்றியினால்
மிக்கதவந் தன்னைச் செய்வான். 71
பொறியிலுறு புலனவித்து நவைநீக்கிக்
கரணவியல் போக்கி ஆசான்
குறிவழியே தலைநின்று மூலவெழுத்
துடனைந்துங் கொளுவி எண்ணி
அறிவுதனில் அறிவாகி உயிர்க்குயிராய்ப்
பரம்பொருளாய் அமல மாகிச்
செறிதருகண் ணுதற்கடவுள் அடிபோற்றி
அவனுருவைச் சிந்தை செய்தான். 72
(68. காவதம் - காதம்; ஓர் அளவு. 69. விழுமம் - துன்ப
70. அகலம் - மார்பு. கயமுகன் தவத்திற்குச் செல்கை, அவன் தந்தங்களில்
பட்டுத் திரும்பும் எ•கம் முதலிய ஆயுதத்தின் மீட்சியை ஒத்து என்க.
71. செங்கதிரோன்தனை நோக்கி ஆற்றுகடன் - சூரிய நமஸ்காரம்.
72. முதல் இரண்டடிகள் இறைவனைத் தியானிக்க வேண்டும் முறையினை
விளக்குகின்றன. கரணம் - அந்தக் கரணம். மூவவெழுத்து - பிரணவம்.
ஐந்து - பட்சாட்சரம். கொளுவி - கலந்து.)
வேறு
ஆயிரம் ஆண்டுபுல் லடகு மேயினான்
ஆயிர மாண்டுசில் புனல்அ ருந்தினான்
ஆயிர மாண்டள வனிலம் நுங்கினான்
மாயிரும் புவியுயிர் மடுக்கும் வாயினான். 73
காலமூ வாயிரங் கழிந்த பின்முறை
மாலுறு மருத்தெனும் மாவைத் தூண்டியே
மூலவெங் கனலினை முடுக்கி மூட்டுறா
மேலுறும் அமிர்தினை மிசைதல் மேயினான். 74
கண்டனர் அதுசுரர் கவலுஞ் சிந்தையர்
திண்டிறல் அவுணன்இச் செய்கை முற்றுமேல்
அண்டமும் புவனமும் அலைக்கு மேயெனாக்
கொண்டனர் தம்பதி அறியக் கூறினார். 75
கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன்
ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர்வுறா
வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும்
மாறிய வோவெனா மறுக்கம் எய்தினான். 76
புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான்
அலந்தனன் உயிர்த்தனன் அச்சங் கொண்டனன்
உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன்னுளங்
குலைந்தனன் அவன்செயல் கூறற் பாலதோ. 77
ஈசனை யன்றுகா றெதிரக் கண்டிலன்
காய்சினம் அகன்றிடு கயமு கத்தினான்
தேசிகன் அருளினால் தீயின் கண்ணுறீஇ
மாசறு தவஞ்செய மனத்து முன்னினான். 78
சுற்றுற நாற்கனல் சூழ நள்ளிடை
மற்றொரு பேரழ வதிய அன்னதில்
கொற்றவெங் கயமுகக் குரிசில் தாள்நிறீஇ
நற்றவம் இயற்றினான் நாதற் போற்றியே. 79
(73. அடகு - இலைகள். அனிலம் - காற்று.
74. மருத்தெனும் மாவை - பிராண வாயு என்னும் குதிரையை.
மூல வெங்கனல் - மூலாக்கினி. மூட்டுறா - (பிரம நாடியில்) மூட்டச்செய்து.
75. தம்பதி - தமது அரசன்; இந்திரன்.
76. வெகுட்சி - கோபம். 77. புலந்தனன் - வருந்தி. பொருமல் - அழுதல்.
அலந்தனன் - துன்பமுற்று. உலந்தனன் - வாடி.
78. தேசிகன் அருளால் - (தவத்திற்கு இரங்கி இறைவன் வராவிடில்
தீயினின்று தவம்செய் என்று) சுக்கிரன் அருளியபடி.
79. நள்ளிடை - நடுவிடம்.)
மேயின கொழும்புகை மிசைக்கொண் டாலெனத்
தீயழல் நடுவுறச் செந்நின் றையிரண்
டாயிரம் ஆண்டையின் அவதி ஆருயிர்
நோயுற இபமுகன் நோற்றல் ஓம்பினான். 80
புழைக்கையின் முகத்தினன் புனித மார்தரு
தழற்சிகை மீக்கொளத் தனது தாள்நிறீஇ
விழுத்தக நோற்றலை வியந்து நோக்குறீஇ
அழற்பெருங் கடவுளும் அருள்செய் தானரோ. 81
அன்னதோர் அமையில் அவுணன் மாசுடல்
வன்னியில் உறுத்துகார் இரும்பின் மாண்டது
பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது
மின்னிவர் வச்சிர மிடலுஞ் சான்றதால். 82
ஏற்றநந் தொன்மர பியல்வ ழாமலே
போற்றிய வருமிவன் பொறையும் மேன்மையும்
நோற்றிடு திட்பமும் நுவலற் பாலவோ
நூற்றுதும் அலரெனா அவுணர் தோன்றினார். 83
வீசினர் நறுமலர் வியப்பின் நன்மொழி
பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால்
ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை
ஏசினர் அவர்தம தின்னல் நோக்குவார். 84
தளப்பெரும் பங்கயத் தவிசின் மீமிசை
அளப்பருங் குணத்துடன் அமா¢ந்த நாயகன்
உளப்பட நோக்கினன் உவந்து பூமுடி
துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார். 85
இன்னணம் அருந்தவம் இயற்றும் எல்லையில்
பொன்னவிர் சடைமுடிப் புனித நாயகன்
அன்னது நாடியே அவுண ருக்கிறை
முன்னுற வந்தனன் மூரி யேற்றின்மேல். 86
(80. அவதி - காலம். 81. புழைக்கை - துதிக்கை.
82. கார் இரும்பின் - காய இரும்பைப்போல.
மாண்டது - மாட்சிமையுற்றது. மிடல் - வலிமை.
83. பொறை - சாந்த குணம். திட்பம் - திண்மை.
85. நாயகன் - சிவன்; கயமுகனுமாம்.
86. மூரி - வலிமை; திமிலுமாம்.)
வேறு
வந்து தோன்றலும் மற்றது நோக்கியத்
தந்தி மாமுகத் தானவன் நோன்பொரீஇச்
சிந்தை அன்பொடு சென்னியிற் கைதொழு
தெந்தை தன்னை இறைஞ்சிநின் றேத்தினான். 87
போற்று கின்றுழிப் புங்கவன் இன்றுகா
றாற்று நோன்பில் அயர்ந்தனை நீயினிப்
பேற்றை வேண்டுவ பேசினை கொள்கெனத்
தேற்ற மிக்கவன் செப்புதல் மேயினான். 88
வேறு
மாலயன் இந்திரன் முதல்வ ரம்பிலோர்
மேலுறு தகையினர் வெய்ய போரிடை
ஏலுவர் என்னினும் எனக்கு வென்னிட
ஆலமர் கடவுள்நீ அருளல் வேண்டுமால் 89
எற்றுவ வெறிகுவ ஈர்வ எய்குவ
குற்றுவ முதலிய குழுக்கொள் வான்படை
முற்றுற வரினும்யான் முடிவு றாவகை
அற்றமில் பெருமிடல் அளித்தல் வேண்டுமால். 90
மிக்கதோர் அமரரால் வியப்பின் மானுட
மக்களால் அவுணரால் மற்றை யோர்களால்
தொக்குறு விலங்கினால் துஞ்சி டாவகை
இக்கணந் தமியனேற் கீதல் வேண்டுமால். 91
என்னிக ராகிவந் தொருவன் என்னொடு
முன்னுற வெஞ்சமர் முயலும் என்னினும்
அன்னவன் படையினும் அழிவு றாவகை
பொன்னவிர் வேணியாய் புரிதல் வேண்டுமால். 92
வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர்
இருந்திடும் உலகெலாம் என்ன தாணையில்
திரிந்திடும் ஆழியுங் கோலுஞ் சென்றிடப்
புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால். 93
அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால்
பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால்
என்றலு நோற்றவர்க் கேதும் ஈபவன்
நன்றவை பெறுகென நல்கி யேகினான். 94
பெற்றனன் படைகளும் பிறவுந் தன்புறஞ்
சுற்றிடு கிளையெலாந் தொடர்ந்து சூழ்தர
உற்றனன் காண்டகும் உம்பர் உங்குவன்
மற்றொரு கயமுகன் என்று மாழ்கினார். 95
காழுறு பெருந்தரு நாறு காசினி
வீழுறு தூரொடு மெலிந்து நின்றன
ஊழுறு பருவம்வந் துற்ற காலையில்
சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான். 96
(89. ஆலமர் கடவுள் - கல்லால் நிழலில் அமரும் கடவுள்; தக்ஷ¢ணாமூர்த்தி.
93. ஆழி - ஆக்கினா சக்கரம். கோல் - செங்கோல். 94. சூழ்ச்சி - பகைவர் வஞ்சனை.
95. தவம் செய்யு முன் இரும்பென விளங்கிய உடலம் தவம்செய்த பின் பொன்னென விளங்கியதால் கயமுகனை,
“மற்றொரு கயமுகன்” என்றார். 96. பெருந்தரு - ஆலமரம். நாறு - நாறுகள்.
தூர் - சிறு வேர்களான விழுதுகள். ஊழுறு பருவம் - நற்பருவம்.
கயமுகன் பிற்காலத்தில் தவப் பெருமையால் சேனை வன்மை, ஆயுத வன்மை முதலியவற்றுடன் விளங்கினான்
என்பது இச்செய்யுளின் உட்கருத்து.)
அற்புதம் எய்தினன் அலைகொள் வாரியில்
புற்புத மாமெனப் புளகம் பூத்துளான்
சொற்பகர் வரியதோர் மதர்ப்பின் சும்மையான்
சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான். 97
அன்னது தேர்வுறீஇ அவுணர் தொல்குல
மன்னனும் வௌ¢ளியும் மதங்க மாமுகன்
தன்னைவந் தெய்தியே சயமுண் டாகெனப்
பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார். 98
தண்ணளி யில்லதோர் தந்தி மாமுகன்
அண்ணலங் கடகளிற் றமரர் கோனையும்
விண்ணவர் பிறரையும் வென்று மீண்டுபின்
மண்ணுல கதனிடை வல்லை எய்தினான். 99
வேறு
புவனி தன்னிடைப் போந்துபின், அவுணர் கம்மிய அறிஞனை,
நுவலும் அன்பொடு நோக்குறா, உவகை யால்இவை யுரைசெய்வான்.100
நாவ லந்தரு நண்ணுமத், தீவின் மேதகு தென்றிசைப்,
பூவி லோர்நகர் புரிதியால், மேவ வென்று விளம்பவே. 101
பூவின் மேல்வரு புங்கவத், தேவு நாணுறு செய்கையில்,
காவன் மாநகர் கண்டதிற், கோவி லொன்று குயிற்றினான். 102
வேறு
வெங்கண் மேதகு வேழமு கத்தனைத்
தங்கள் தொல்பகை தாங்குவ தாமெனச்
சிங்க மாற்றுந் திருமணிப் பீடமொன்
றங்கவன் வைக ஆற்றினன் அவ்விடை. 103
இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன்
நினைப்பி னில்செய் நிலைமையை நோக்கியே
சினத்தின் நீங்கிய செய்தவத் தேசிகன்
மனத்தி னூடு மகிழ்ச்சியின் மேயினான். 104
காமர் தங்கிய காப்பியன் அந்நகர்
தூம தங்கெழு தோல்முகற் காதலான்
மாம தங்க புரம்என மற்றொரு
நாமம் அங்கதற் கெய்திட நாட்டினான். 105
(98. அவுணர் தொல்குல மன்னன் - அசுரேந்திரன்.
104. தேசிகன் - சுக்கிரன்.
105. காப்பியன் - சுக்கிரன். தூ - சிந்துகின்ற. மதங்கபுரம் -
இது கயமுகன் நகரம்.)
அந்த மாநகர் ஐதெனக் கம்மியன்
சிந்தை நாடினன் செய்திடு காலையில்
தந்தி மாமுகத் தானவன் கண்ணுறீஇ
அந்தம் இல்லதொ ரார்வமொ டேகினான். 106
காத மங்கொரு பத்தெனக் கற்றவர்
ஓதுகின்ற ஒழுக்கமும் ஒன்றெனும்
பாதி யெல்லைப் பரப்பும் பெறுநகர்
வீதி நோக்னின் விம்மிதம் எய்தினான். 107
அரக்கர் தொல்லை அவுணர்க் கரசொடு
தருக்கு தானவர் தம்முடன் எய்தியே
பெருக்க முற்றதன் பின்னவர் இன்னவர்
இருக்க நல்கினன் இந்நகர் யாவையும். 108
அங்கண் மேவும் அணிமணிக் கோயிலின்
மங்க லத்தொடு வல்லையின் ஏகியே
சிங்க ஏற்றின் சிரங்கெழு பீடமேல்
வெங்கை மாமுகன் வீற்றிருந் தானரோ. 109
போந்து பின்னர்ப் பொருவருந் தானவர்
வேந்தன் மாமக ளான விசித்திர
காந்தி தன்னைக் கருதுநன் னாளினில்
ஏந்தல் முன்வரைந் தின்புற மேவினான். 110
விண்ணின் மாந்தர்கள் மேதகு தன்குலம்
நண்ணு மாதர்கள் நாகர்தம் மாதர்கள்
வண்ண விஞ்சையர் மாதர்க ளாதியாம்
எண்ணில் மாதரைப் பின்வரைந் தெய்தினான். 111
பொன்ன கர்க்கும் பொலங்கெழு புட்பக
மன்ந கர்க்குமவ் வானவர் ஈண்டிய
எந்ந கர்க்கும் இலாவளம் எய்திய
அந்ந கர்க்கண் அமர்ந்திடல் மேயினான். 112
சூழும் வானவர் தானவர் துன்னியே
தாழ ஏழுல குந்தன தாணையால்
வாழி சேர்கொடுங் கோலொடு மன்னுபேர்
ஆழி செல்ல அரசுசெய் தானவன். 113
ஆவுஞ் சங்கமும் அம்புய மும்மலர்க்
காவும் மாமணி யுங்கம லாலயத்
தேவும் பின்வருந் தேவரும் மாதரும்
ஏவல் செய்ய இனிதிருந தானரோ. 114
(106. ஐது என - அழகென. 109. வெங்கைமாமுகன் - கயமுகன்.
110. விசித்திர காந்தி - இவள் கயமுகன் மனைவி; அசுரேந்திரன் மகள்.
111. வரைந்து - மணந்து.
112. புஷ்பக மன் - குபேரன். 114. ஆ - காமதேனு. சங்கம் - சங்கநிதி.
அம்புயம் - பதுமநிதி. கா - கற்பகத்தரு.)
புந்தி மிக்க புகரும் புகருடன்
அந்த மற்ற அவுணர்கள் மன்னனும்
தந்தி யின்முகத் தானவ னுக்குநன்
மந்தி ரத்துணை யாய்அவண் வைகினார். 115
அன்ன காலை அடுகரி மாமுக
மன்னன் முன்வரும் வாசவ னாதியாந்
துன்னு வானவர் சூழலை நோக்கியே
இன்ன தொன்றை இயம்புதல் மேயினான். 116
வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம்
மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே
கைகள் காதுறக் கால்கொடு தாழ்ந்தெழீஇச்
செய்க நம்பணி தேவர்கள் நீர்என்றான். 117
அன்ன தோதலும் அண்டர்கள் யாவரும்
மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே
முன்னரே நின்று மொய்ம்புடைத் தோல்முகன்
சொன்ன தோர்புன் தொழின்முறை ஆற்றினார். 118
எழிலி யூர்தியும் ஏனைய வானவர்
குழுவி னோர்களுங் குஞ்சர மாமுகத்
தழித கன்பணி அல்கலும் ஆற்றியே
பழியெ னும்பர வைப்படிந் தாரரோ. 119
கரிமு கத்துக் கயவன தேவலால்
பருவ ரற்பழி மூழ்குறு பான்மையைச்
சுரர்க ளுக்கிறை தொல்லைவி ரிஞ்சன்மால்
இருவ ருக்கும் இயம்பி இரங்கினான். 120
இரங்கும் எல்லையில் இந்திர முற்றுளந்
தரங்க மெய்தித் தளர்ந்திடல் நீயெனா
உரங்கொள் பான்மை உணர்த்தி அவனொடும்
புரங்கள் அட்டவன் பொற்றையிற் போயினார். 121
மாகர் யாவரும் வாசவ னும்புடை
யாக வந்திட அம்புயன் மாலுமை
பாகன் மேய பனிவரைக் கோயிலுள்
ஏகி னார்நந்தி எந்தை விடுப்பவே. 122
கண்டு நாதன் கழலிணை தாழ்ந்துநல்
தொண்டு காணத் துதித்தலும் ஆங்கவன்
அண்ட ரோடும் அலமரல் எய்தியே
வண்டு ழாய்முடி வந்ததென் னென்னவே. 123
(119. எழிலி ஊர்தி - இந்திரன். அல்கலும் - நாடோறும்.
பழியெனும் பரவை - துன்பக்கடல்.
122. மாகர் - தேவர். 123. அலமரல் - துன்பம்.)
வேறு
ஆனதோர் பொழுதின்மால் அரனை நோக்கியோர்
தானவன் கயமுகன் என்னுந் தன்மையான்
வானவர் தமையெலாம் வருத்தி னானவன்
ஊனமில் தவம்புரிந் துடைய வன்மையால். 124
வெங்கய முகத்தினன் விறலை நீக்குதல்
எங்களுக் கரியதால் எவர்க்கும் ஆதியாம்
புங்கவ நினக்கது பொருளன் றாகையால்
அங்கவன் உயிர்தொலைத் தருள வேண்டுநீ. 125
என்றுரை செய்தலும் ஈசன் யாமிவண்
ஒன்றொரு புதல்வனை யுதவித் தோல்முக
வன்றிறல் அவுணனை மாய்த்து மற்றவன்
வென்றிகொண் டேகுவான் விடுத்துமேல் என்றான். 126
வீடிய பற்றுடை விரதர்க் கென்னினும்
நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச்
சூடினர் சென்னிமேல் தொழுத கையராய்
ஆடினர் பாடினர் அமரர் யாருமே. 127
பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே
ஈங்கினி நும்பதிக் கேகு வீரென
ஆங்கவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர்
வீங்குறு காதலால் விடைகொண் டேகினார். 128
ஏகிய எல்லையில் எண்ணி லாவிதி
சேகரம் மிலைச்சிய சென்னி வானவன்
பாகமுற் றுலகெலாம் பயந்த சுந்தரத்
தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான். 129
யாம்பெரு விருபபுடன் இயற்று வித்திடுந்
தேம்படு தருவனந் தெரித்துஞ் செல்கென
வாம்பரி சருளினை வருவன் ஆங்கெனாக்
காம்படு தோளுடைக் கவுரி கூறினாள். 130
ஆயது கேட்டனன் அகிலம் யாவையுந்
தாயென அருளுமத் தையல் தன்னொடுஞ்
சேயுயர் விசும்பினைச் செறிதண் சோலையில்
போயினன் மறைக்கெலாம் பொருள தாயினான். 131
நீணுதற் கனல்விழி நிமலத் தேவெனுந்
தாணுவைப் போலவே தனது பாதமுஞ்
சேணுடைச் சென்னியுந் தேவர் யாரினுங்
காணுதற் கரியதக் கடிகொள் சோலையே. 132
(125. விறலை - வெற்றியை. 129. விதி சேகரம் - பிரமகபாலம்.
உலகெலாம் பயந்த சுந்தரத் தோகை - உமாதேவியார்.
130. காம்படு தோள் - மூங்கிலைப்பழிக்கும் தோள்.
131. தையல் - உமாதேவியார். 132. கடி - வாசனை;
இது முதல் சோலை வருணனை ஆகும்.)
தேசுடைத் தருநிரை திருமென் போதொடு
பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன
ஈசனுக் கருச்சனை இயல்பின் ஆற்றிட
நேசமுற் றுடையவர் நிலைய தொக்குமால். 133
பாலுற வருவதோர் பரைதன் மெய்யொளி
மேலுறு பைங்கொடி வேத நாயகன்
ஏலுறு தாருக வனத்தில் எய்தமுன்
மாலுறு மங்கையர் வடிவம் போலுமால். 134
கொடிகளுந் தருக்களின் குழுவு மாதுடன்
அடிகளங் கேகலும் அனையர் செம்மையுஞ்
சுடர்கெழு பசுமையந் துவன்றி அன்னதோர்
வடிவுகொண் டிருந்திடும் வண்ணம் போலுமால். 135
பூந்தரு நிரைகளில் பொருவில் கோட்டிடைச்
சேந்திடு நனைபல திகழ்வ பார்ப்பதி
காந்தனை அன்பொடு கண்டு பாங்குளார்
ஏந்திய தீபிகை என்ன லானவே. 136
வான்தரு ஓர்சில மலரின் கண்டொறுந்
தேன்றுளி விடுவன சிவனைக் கண்டுழி
ஆன்றதோர் அன்பினார் அகம்நெ கிழ்ந்துகட்
கான்றதோர் புனலெனக் கவின்று காட்டிய. 137
வண்தரு ஓர்சில மருப்பில் வானிறங்
கொண்டிடு மதுமலர் குழுமி யுற்றன
எண்டிரு மலையிடை வீழுங் கங்கையில்
தண்டுளி சிதறிய தன்மை போன்றவே. 138
கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய
பிற்றையென் னாதருள் பெரியர் வண்மைபோல்
மற்றவ ணுள்ளபவன் மரமுந் தம்பயன்
எற்றையும் உலப்புறா தீகை சான்றவே. 139
காவதன் இயல்பினைக் கண்டு தன்னொரு
தேவியொ டேயருள் செய்து சிற்பரன்
ஆவியுள் ளுணர்வென அதனுள் வைகுமோர்
ஓவிய மன்றிடை ஒல்லை ஏகினான். 140
எண்டகு பெருநசை எய்தி ஐம்புலன்
விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
கண்டனள் கவுரிஅக் கடிகொள் மண்டபங்
கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே. 141
(133. பாசடை - பசியஇலை.
135. கொடிகளின் பசுமையும் தருக்களின் செம்மையும் அம்மை
அப்பரை ஒத்து விளங்குகின்றன.
136. தீபிகை - தீபத்தட்டு. 138. வான்நிறம் - வெண்ணிறம்.
மதுமலர் - தேன்மலர்.
140. கா - சோலை. ஓவிய மன்று - சித்திர மண்டபம்.
141. பெருநசை - பெருவிருப்பம். விண்டிடம் - விலகாமல்.
ஓவியக்கோலம் - சித்திர வடிவம்.)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதி யாகியே
ஓங்கிய தனியெழுத் தொன்றி ரண்டதாய்த்
தூங்குகைம் மலைகளில் தோன்றிற் றென்பவே. 142
அன்னவை உமையவள் காண ஆங்கவை
முன்னுறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும்
என்னைகொல் இதுவென எண்ணித் தன்னொடு
மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள். 143
மூலமாம் எழுத்திவை முயங்கி மால்கரிக்
கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலும்
ஏலவார் கருங்குழல் இறைவி கேளென
ஆலமார் களத்தினன் அருள்செய் கின்றனன். 144
வேறு
முன்புநீ காண்டலின் மூலமாய் உடையதோர்
மன்பெருந் தொல்பொறி மருவியீர் உருவுறீஇ
அன்பினால் ஆனைபோற் புணருமால் ஆகையால்
நின்பெருந் தகவினை நினைகிலாய் நீயுமே. 145
காட்சியால் இதுசெயுங் காரணம் பெற்றநின்
மாட்சிதான் யாமலான் மற்றியார் உணர்குவார்
ஆட்சியாய் உற்றதொல் அருமறைக் காயினுஞ்
சேட்செலா நிற்குநின் திருவருட் செய்கையே. 146
என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை
தன்னொடே மொழியஅத் தந்தியும் பிடியுமாய்த்
துன்னியே புணர்வுறுந் தூயசெய் தொழில்விடா
முன்னமே போன்றதால் முடிவிலாக் குடிலையே. 147
அக்கணத் தாயிடை ஐங்கரத் தவன்அருள்
முக்கண்நால் வாயினான் மும்மதத் தாறுபாய்
மைக்கருங் களிறெனும் மாமுகத் தவன்மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன்வந் தருளினான். 148
ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணா¢வதாம்
பெருமைதயான் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
அருமையான் ஏவரும் அடிதொழுந் தன்மையான்
இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான். 149
(142. தனி எழுத்து - ஏகாட்சரம்; பிரணவம்.
தூங்கும் - தொங்குகின்ற. கைம்மலைகள் - யானைகள்.
144. மூலமாம் எழுத்து பிரணவாட்சரங்கள். 147. குடிலை - ஓங்காரம்.
148. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீசமதம்; சிலர் பீசமதத்தை
நீக்கிக் கைம்மதம் என்றும் கூறுவர்.)
மருளறப் புகலுநான் மறைகளில் திகழுமெய்ப்
பொருளெனப் படுமவன் புவனமுற் றவர்கள்தம்
இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர்
அருளுருத் தனைஎடுத் தவதரித் துளனவன். 150
வந்துமுன் னிருவர்தம் மலரடித் தலமிசைச்
சிந்தையார் வத்தொடுஞ சென்னிதாழ்த் திடுதலுந்
தந்தையுந் தாயுமுன் தழுவிமார் புறவணைத்
தந்தமில் கருணைசெய் தருளினார் அவ்வழி. 151
என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல்
அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனை
உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ. 152
சேயநன் மலர்மிசைத் திசைமுகன் மால்முதல்
ஆயபண் ணவர்தமக் காருயிர்த் தொகையினுக்
கேயபல் கணவருக் கெத்திறத் தோர்க்குநீ
நாயகம் புரிதியால் நல்லருட் டன்மையால். 153
கானுறுங் கரடவெங் கயமுகத் தவனெனுந்
தானவன் வன்மையைச் சாடியே தண்டுழாய்
வானவன் சிறுமையும் மாற்றியே வருகெனா
ஆனையின் முகவனுக் கைம்முகன் அருள்செய்தான். 154
மோனமே குறியதா முதலெழுத் தருளிய
ஞானமா மதலைபால் நண்ணவே பூதவெஞ்
சேனையா யினஅருள் செய்துசிற் பரையொடும்
ஆனைமா முகனொடும் அமலன்மீண் டருளினான். 155
புங்கவர்க் கிறைவனாம் புதல்வனை நோக்கிடா
நங்கடைத் தலையினில் நாயகம் புரிகெனா
அங்கருத் தியொடிருத் தினன்அணிக் கோயிலுட்
சங்கரக் கடவுள்சுந் தரியொடு மருவினான். 156
தந்திமா முகமுடைத் தனயன்அங் கணுகியே
முந்துபா ரிடமெலாம் மொய்த்துமுன் சூழ்தர
நந்திவந் தனைசெய நான்முகன் முதலினோர்
வந்துவந் தடிதொழ மகிழ்வொடே வைகினான். 157
(152. என்னரே ஆயினும் - எத்தகையோராயினும்.
அன்னவர்தம் சிந்தை போல் - அவர் எண்ணம்போல.
உன்னலார் - நினைந்துவழிபடாதவர். ஊறு - இடையூறு.
153. நாயகம் - தலைமைத்தன்மை.
154. கான் - நாற்றம். கரடம் - மதம். சாடி - அழித்து.
ஆனையின்முகவன் - விநாயகன். ஐம்முகன் - சிவபெருமான்.
155. மோனம் - மௌனம். முதலெழுத்து - பிரணவம்.
ஞானமாமதலை - விநாயகன்.
156. அருந்தி - விருப்பம். மருவினான் - சென்றான்.)
அன்னதற் பின்னரே ஆயிரம் பெயருடைப்
பொன்னுலாம் நேமியான் புனிதனைக் காணிய
மின்னுதண் சுடர்விடும் வௌ¢ளிமால் வரைமிசைக்
துன்னினான் ஆலயச் சூழல்முன் அணுகினான். 158
அந்தியார் சடைமுடி அண்ணல்தன் அருளினால்
நந்திதே வுய்த்திட நங்கையோர் பங்கனாம்
எந்தைபா லெய்தியே இணைமலர்த் தாள்தொழாப்
புந்தியார் வத்தொடும் போற்றிசெய் தருளவே. 159
வேறு
நிருத்தனவ் விடைதனில் நேமி யான்தனை
இருத்தியென் றருள்புரிந் திடத்தின் மேவிய
ஒருத்தியை நோக்கிஒன் றுரைப்பங் கேளெனா
அருத்திசெய் ஆடல்ஒன் றருளிற் கூறுவான். 160
சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
பாதியாஞ் சசிமுதற் கலவுங் கோடியால். 161
என்னலும் உமையவள் இசைவு கோடலும்
அன்னதொ ரெல்லையின் அரியை நோக்கியே
தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
மன்னினை இருத்தியான் மாயநீ என்றான். 162
பற்றிகல் இன்றியே பழவி னைப்பயன்
முற்றுணர்ந் துயிர்களை முறையின் வைப்பவன்
மற்றிது புகறலும் வனசக் கண்ணினான்
நற்றிறம் இ•தென நவின்று வைகினான். 163
இந்தவா றாயிடை நிகழும் எல்லையில்
சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
அந்தமில் பெருங்குணத் தாதி ஏவலில்
தந்தனர் காசொடு பலகை தன்னையே. 164
அதுபொழு தண்ணலும் அரியை நோக்கியிம்
முதிர்தரு கருவியை முறையின் வைக்கெனக்
கதுமென வைத்தலுங் கவுரி நீநமக்
கெதிருறு கென்றுமுன் னிருத்தி னானரோ. 165
(158. நேமியான் - திருமால். 160. ஒருத்தி - ஒப்பற்ற உமாதேவியார்.
161. சூது - சூதாட்டம். சசி - சந்திரன். கோடி - கொள்வாய்.
162. சான்று - சாட்சி. மன்னினை - பொருந்தி.
163. இகல் - வெறுப்பு. வனசக்கண்ணினான் - திருமால்.
164. உழையர் - ஊழியர்கள். காசு, பலகை - இவை சூதாடு கருவிகள்.)
கவற்றினை முன்னரே உய்ப்பக் கண்ணுதல்
அவற்றினைப் பின்னுற அவளும் உய்த்தனள்
தவற்றியல் பல்லதோர் வல்ல சாரியால்
எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார். 166
பஞ்சென வுரைசெய்வர் பாலை என்பர்ஈர்
அஞ்சென மொழிவர் அஞ்சென்பர் அன்றியுந்
துஞ்சலின் நடம்என்பர் துருத்தியீ தென்பர்
விஞ்சிய மகிழ்வொடு வெடியென் றோதுவார். 167
அடியிது பொட்டைஈ தென்பர் அ•தென
முடிவில குழூஉக்குறி முறையின் முந்துறக்
கடிதினில் கழறினர் கவறு சிந்தினார்
நொடிதரு கருவிகள் எதிரிகள் நூக்கினார். 168
வேறு
ஏற்றா னவன்எய்திய இன்னருள் யாவ தேயோ
தேற்றாம் அ•தியார்க்கு மளப்பருஞ செய்கை யாலே
மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல்லி யற்குத்
தோற்றான் நெடுமாலயன் நாடவுந் தோற்றி லாதான். 169
ஒன்றாய பரஞ்சுட ரோன்உமை தன்னை நோக்கி
நன்றா யதுநின் வலியென்று நகைத்து நம்மை
வென்றா யலைதோற் றனைமுன்னர் விளம்பு மாற்றால்
நின்றா ரொடுபூணும் எமக்கினி நேர்தி என்றான். 170
மூன்றாம் உலகங்களும் ஆருயிர் முற்று முன்னம்
ஈன்றாள் அதுகேட்டலுந் தான்இகல் ஆடல் அஞ்சி
வான்றா வியபே ரடிமாயனை வல்லை நோக்கிச்
சான்றா மெனவை கினைநீயிது சாற்று கென்றாள். 171
சொல்லும் அளவிற் சுடர்நேமியன் சூது டைப்போர்
வெல்லுந் தகையோன் பரனென்று விளம்ப லோடும்
நல்லுண்மை சொற்றாய் திறநன்றிது நன்றி தென்னாச்
செல்லுண்ட ஐம்பால் உமைஆற்றச் சினம்பு ரிந்தாள். 172
பாராயலை கண்ணனு மாயினை பாலி னுற்றாய்
தேராதது ஒன்றிலை யாவருந் தேர ஒண்ணாப்
பேராதி யோன்நவை கூறினும்நீயிது பேச லாமோ
காராமெய் என்பர் மனமுங்கரி யாய்கொல் மன்னோ. 173
(166. கவறு - சூதாடுகருவி.
167. பஞ்சு, பாலை, ஈரைஞ்சு, அஞ்சு, நடம், துருத்தி,
வெடி - இவை சூதாட்டத்தின் குழூஉக் குறிகள்.
168. அடி, பெட்டை - இவை சூதாட்டத்தின் குழூஉக்குறிகள்.
கவறுசிந்துதல் - காய்களைவெட்டுதல். நூக்கினார் - தள்ளினார்.
169. ஏற்றான் - இடபத்தையுடையவன்.
170. வென்றாய் அலை - வெற்றி பெறவில்லை. தார் - மாலை. நேர்தி - அளித்தி.
171. இகல்ஆட - பகைத்து நானே வென்றேன் என்று கூற.
172. செல் - மேகம். ஐம்பால் - கூந்தல். ஆற்ற - மிகவும்.
173. கண்ணனுமாயினை - இங்கு, நீ கண்ணுடையவனான் இருந்தும்
அதற்குரிய செயலினை இழந்தாய் என்பது குறிப்பு.பாலினுற்றாய் - பக்கத்திலிருந்தாய்;
பாற்கடலிலிருந்தாய்; பாலை வைத்துக்கொண்டு பொய் சொல்லலாகாது என்பது கருத்து.)
ஏம்பா லிதுசொற் றனைஆதலின் என்று மாயை
ஓம்பா வருவா யுறுகைதவத் தூற்ற மிக்காய்
பாம்பாதி யென்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை
ஆம்பால் உருவம் அ•தங்கண் அடைந்த தன்றே. 174
அவ்வா றவன்பால் அணைகின்றதொர் போழ்தில் ஆழிக்
கைவா னவனும் அதுகண்டு கவற்சி எய்திச்
செவ்வான் உறழும் முடியோன்அடி சென்று தாழா
எவ்வா றெனக்கிவ் வுருநீங்கும் இசைத்தி என்றான். 175
காலாய் வௌ¤யாய்ப் புனலாய்க் கனலோடு பாராய்
மேலாகி யுள்ள பொருளாய்எவற் றிற்கும் வித்தாய்
நாலாய வேதப் பொருளாகி நண்ணுற்ற நாதன்
மாலா யவனுக் கி•தொன்று வகுத்து ரைப்பான். 176
என்பால் வருமன்பின் இசைத்தனை ஈது பெற்றாய்
நின்பால் வருமின் னலைநீக்குவன் நீங்கு கின்றாய்
தென்பா லுலகந்தனில் அன்னதொர் தேய மீதில்
முன்பால வனம்மென ஒன்றுள மொய்ம்பின் மிக்காய். 177
ஆங்கே யினிநீ கடிதேகினை அன்ன கானில்
பாங்கே ஒருதொன்மரம் நின்றது பார்த்த துண்டே
ஊங்கே பராரையின் மேயபொந் தொன்றி னூடு
தீங்கே குறப்போய்ப் பெருமாதவஞ செய்து சேர்தி. 178
அஞ்சேல் அவண்நீ உறைகின்றதொர் காலை யானே
எஞ்சே யவனாங் கயமாமுகன் எய்து வானச்
செஞ்சே வகனுக் கெதிர்கொண்டனை சென்று காண்டி
மஞ்சே யனையாய் உனக்கிவ்வுரு மாறும் அன்றே. 179
வேறு
என்னுமள வில்தொழுதி றைஞ்சிஇனி தேத்தி
அன்னதொர் வனத்திடை அமர்ந்ததொன் மரத்தில்
துன்னுவன் எனக்கடிது சொல்லுதலும் யார்க்கும்
முன்னவ னுமேகென முராரியை விடுத்தான். 180
விட்டிடுத லுங்கயிலை நீங்கினன் விரைந்தே
கட்டழகின் மேதகைய காமனது தாதை
சிட்டர்கள் பயின்றுறை தெனாதுபுலம நண்ணி
மட்டொழுகு தொன்மர வனத்தினிடை உற்றான். 181
(174. ஏம்பால் - மகிழ்ச்சியால். கைதவம் - வஞ்சனை.
பாம்பு ஆதி - பாம்பாகக்கடவாய்.
175. கவற்சி - கலக்கம். செவ்வான் - செவ்வானம்.
176. கால் . காற்று. வௌ¤ - ஆகாயம். நாதன் - சிவன்.
177. இசைத்தனை - தவறுகூறினை. ஈது - பாம்பு வடிவாகும் இச்சாபத்தினை.
ஆலவனம் - திருவாலங்காடு. 178. தொன்மரம் - ஆலமரம்.
பராரை - பெரிய அடிப்பாகம்.
179. கயமுகன் - விநாயகன். சேவகன் - வீரன். மஞ்சே அனையாய் - மேக வண்ணனே!
இவ்வுரு - இப்பாம்பு வடிவம். 180. முரா£¤ - திருமால்.
181. காமனது தாதை - திருமால். சிட்டர்கள் - மேலானவர்கள்.
தெனாது புலம் - தென்னாடு. மட்டு - தேன்.)
நன்மதி யுடைப்புலவர் நால்வர்களும் உய்யச்
சின்மயம் உணர்த்தியருள் தேவன்அமர் தாருத்
தன்மையது பெற்றுநனி தண்ணிழல் பரப்புந்
தொன்மர வியற்கைஅத னிற்சிறிது சொல்வாம். 182
பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி
விசும்பளவு நீடியுயர் வீழினிரை தூங்கத்
தசும்பனைய தீங்கனிகள் தாங்கியது தாளால்
வசுந்தரை அளந்தநெடு மாயவனை மானும். 183
அண்டநடு வாயவுல கேழினையும் அந்நாள்
உண்டருளி ஒல்லைதனில் ஓர்சிறுவ னாகிப்
பண்டுகரி யோன்தயில்கொள் பாசடைகள் தன்பாற்
கொண்டவட மன்னதொரு கொள்கைய துடைத்தால். 184
மழைத்தபசு மேனியது மாதிர வரைப்பில்
விழுத்தகைய வீழினிரை வீசுவட தாருத்
தழைக்குல மருப்புமிசை தாங்கியிடை தூங்கும்
புழைக்கைகொடு மால்களிறு நாடுகரி போலும். 185
பாசடை தொடுக்கப்பட லைப்பழு மரத்தின்
வீசிநிமிர் கின்றபல வீழின்விரி கற்றை
பூசலிடு கூளியொடு பூதநிரை பற்றி
ஊசல்பல ஆடியென ஊக்கியன அன்றே. 186
ஆல்வரையின் வீழ்நிரைகள் ஆசுகம் உடற்றப்
பால்வரையின் எற்றிவரு மாறிரவி பாகன்
கால்வரையின் ஏகவெழு கந்துகம தென்னும்
மால்வரையின் வீசுபல மத்திகைய தொத்த. 187
ஆசறுதெ னாதுதிசை ஆளுமிறை எண்ணில்
பாசமொடு நின்றதொரு பான்மைய• தன்றேல்
வாசவனும் ஆகமிசை மாலிகையு மாமால்
வீசுபழு மாமர விலங்கலும்அவ் வீழும். 188
மாநிலமெ லாந்தனை வழுத்தவரு மன்னற்
கூனமுறு காலைதனில் ஒண்குருதி வாரி
வானமுகில் கான்றனைய மாண்டதொன் மரத்தின்
மேனிதரு செய்யபல வீழின்விரி மாலை. 189
(182. புலவர் - அறிஞர். தாரு - கல்லால விருட்சம்.
183. இது முதல் ஆல மரத்தின் வருணனை ஆகும். உலவ¨திதிரன் - கிளைகள்.
வீழின் நிரை - விழுதின் வரிசை. தசும்பு - குடம். வசுந்தரை - பூமி.
184. வடம் அன்ன - அந்த ஆலேபோல. 185. கரி - இங்குப் பெண் யானை.
186. படலை - மாலை. பழுமரம் - ஆலமரம். பூசல் - சிறுசண்டை.
187. ஆல்வரை - ஆலமரமாகிய மலை. ஆசுகம் - காற்று. இரவிபாகன் - அருணன்.
கந்துகம் - சத்தமா என்னும் குதிரைகள். மத்திகை - குதிரைச் சம்மட்டி; சவுக்கு.
188. தெனாதுதிசை யாளும் இறை - எமன். மாலிகை - பூமாலை.
பழுமாமர விலங்கல் - ஆலமரமாகிய மலை. 189. ஊனம் - அழிவு. கான்றல் - பெய்தல்.
மாண்ட - மாட்சிமை வாய்ந்த.)
இரும்பறை ஆலமிசை எம்முருவு கொள்ளா
வம்புலவு தண்டுவள மாயன்வரும் என்னா
வெம்பணிகள் தம்பதியின் மேவுவன போலாம்
தம்பமென வேதரை புகுந்ததனி வீழ்கள். 190
கடித்தன எயிற்றின்அழல் காலவர வின்மேல்
நடிக்குமொரு கட்செவி நமைக்குறுகும் என்னாத்
துடித்தன எனத்தலை துளக்கின உரோமம்
பொடித்தன நிகர்த்துள புனிற்றினுறு புன்காய். 191
கிளர்ப்புறு கவட்டிலை கிடைத்த கிளையாவும்
அளப்பில்புகை சுற்றிட அனற்கெழுவு கற்றை
துளக்குறு தரக்குழுவு தோன்றியது போன்ற
விளக்கழல் நிகர்த்துள விரிந்தமுகை யெல்லாம். 192
செருப்புகு சினத்தெதிர் செறுத்தமத வெற்பின்
மருப்பின் ஒசிப்பவன் வரத்தினியல் காணா
விருப்பமலி வுற்றதன் விழித்தொகைகள் எங்கும்
பரப்பிய நிகர்த்துள பயங்ககெழுவு பைங்காய். 193
வௌ¢ளிபடு கின்றமதி விண்படர் விமானங்
கள்ளிபடு பால்கெழு கவட்டினிடை தேய்ப்பத்
துள்ளிபடு கின்றளவி லோர்திவலை தொத்தப்
புள்ளிபடு மாறுமுயல் என்பர் புவிமேலோர். 194
காவதமொ ரேழுள பராரை கணிப்பின்றால்
தாவறும் உயர்ச்சியத னுக்குமதி சான்றே
பூவுலகம் எங்குநிழல் போக்கிநெடி தோம்புங்
கோவதென நின்றதுயர் கோளியெனுங் குன்றம். 195
அவ்வகைய தாருவினை நோக்கினன் அணைந்தான்
பவ்வநிற வண்ணல் துயில் பாசடை கள்தம்மோ
டெவ்வகை கமத்திரென வேவினவ என்றே
வெவ்வரவி னுக்கிறைவன் மேவியது மான. 196
அந்தமில் பெருங்கடல் வளாகம்அனைத் துந்தன்
உந்தியில் அடைந்ததென ஓங்கல்கெழும் ஔ¢வாள்
வந்துறை யினிற்புகுவ தென்ன வடதாருப்
பொந்தினிடை யேயணுகி னான்உலகு பூத்தோன். 197
(190. வெம்பணிகள் - கொடிய பாம்புகள். தம்பதி - பாதாளம்.
191. கட்செவி - கண்ணே காதாக உடையது; பாம்பு. புனிறு - இளமை.
192. கவடு - பெருங்கிளை. முகை - மொட்டு.
193. பயம் - பால். கெழுவு - பொருந்திய.
194. கள்ளிபடு - கள்ளியிலும் அதிகமாக உண்டாகின்ற.
தொத்த - பட. முயல் - முயல் என்னும் களங்கம்.
195. மதிசான்று என்றது ஆல மரக்கிளைகள் சந்திர மண்டலத்தை முட்டியதை.
கோ - இறைவன். அது : பகுதிப்பொருள் விகுதி. கோளி - ஆலமரம்.
196. நோக்கினன் - நோக்கி. வினவஎன்றே - வினவி அறிதற்கு என்றே.
அரவினுக்கு இறைவன் - ஆதிசேடன்.
197. உந்தியில் - வயிற்றில். ஓங்கல் - உயர்ந்த. வாள் - வாட்படை.
ஓங்கல் கெழும் ஔ¢வாள் வந்துறையினில் புகுவதென்ன - உதயி கிரியில் உதித்து
விளங்கிய சூரியன் சென்று கடலுள் புகுந்தாற்போல எனவும் பொருள்கொள்ளலாம்.)
சத்தியுரை யால்அரி தனிப்பணிய தான
இத்திறமி சைத்தனம் இனிச்சுரரை வாட்டும்
அத்திமுக வெய்யவனை ஆதியருள் செய்யும்
வித்தக முதற்புதல்வன் வென்றமை உரைப்பாம். 198
வேறு
முந்து வேழ முகத்தவன் ஏவலால்
நொந்து சிந்தை நுணங்கிய தேவரும்
இந்தி ராதிபர் யாவரும் ஐங்கரன்
வந்த தோர்ந்து மகிழச்சியின் மேயினார். 199
ஏத மில்மகிழ் வெய்திய இந்திரன்
ஆதி யோர்கயி லாயத் தணுகியே
போத கத்துப் புகர்முகப் புங்கவன்
பாத முற்றுப் பணிந்து பரவினார். 200
பரவல் செய்திடுக பான்மையை நோக்கியே
கருணை செய்த கயமுகத் தெம்பிரான்
உரையும் நுங்கட் குறுகுறை என்றலும்
வரன்மு றைப்பட வாசவன் கூறுவான். 201
தொல்லை நாண்மதி சூடிய சோதிபால்
எல்லை நீங்கும் வரந்தனை எய்தினான்
கல்லென் வெஞ்சொற் கயாசுரன் என்பவன்
அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை. 202
பின்னும் நங்களைப் பீடற வைகலுந்
தன்னை வந்தனை செய்யவுஞ் சாற்றினான்
அன்ன செய்தனம் அன்றியும் எங்கள் பால்
மன்ன வேபுதி தொன்று வகுத்தனன். 203
கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியிற்
குட்டிக் கொண்டு குழையிணை யிற்கரந்
தொட்டுத் தாழ்ந்தெழச் சொற்றனன் ஆங்கதும்
பட்டுப் பட்டுப் பழியிடை மூழ்கினேம். 204
கறுத்து மற்றவன் கட்டுரைக் கின்றசொல்
மறுத்த லஞ்சி வரும்பழி தன்னையும்
பொறுத்து நாணமும் போகஇன் றந்தமுஞ்
சிறப்பி லாவச் சிறுதொழில் செய்தனம். 205
(198. சத்தி உரை - தேவியின் சாபமொழி. ஆதி - சிவன்.
விததக முதற்புதல்வன் - ஞானவடிவினனாகிய விநாயகன்.
199. ஐங்கரன் - விநாயகன். 200. போதகம் - இளமை. புகர் - புள்ளி.
204. கிடைத்துழி - அடைந்தபோது. குழைஇணை - இரு காது.)
ஆங்க வன்தன் தாவியொ டெங்குறை
நீங்கு வித்திட நீவரு வாயென
ஓங்கல் நல்கும் உமையவள் தன்னொரு
பாங்கர் வைகும் பராபரன் கூறினான். 206
ஆத லால்நின் னடைந்தனம் எம்முடை
ஏத மாற்றுதி என்று வழிபடீஇ
மோத காதிகள் முன்னுற வார்த்திடப்
பூத நாதன் அருளில் புகலுவான். 207
அஞ்சல் அஞ்சல் அவுணர்க் கரசனாம்
விஞ்சு வேழ முகமுடை வீரனைத்
துஞ்சு வித்துந் துயர்தவிர்ப் போமெனாக்
குஞ்ச ரத்திரு மாமுகன் கூறவே. 208
இறைவ னோடும் இமையவர் எம்முடைச்
சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின
மறுமை இன்பமும் வந்தன வால்இனிப்
பெறுவ தொன்றுள தோவெனப் பேசினார். 209
வேறு
துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை
இன்புறு காலையில் ஈசன் தந்திடும்
அன்புடை முன்னவன் ஆனை மாமுக
முன்பனை யடுவது முன்னி னானரோ. 210
பொருக்கெனத் தவிசினின் றெழுந்து பூதர்கள்
நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர்
அருக்கனின் இலகிய அசலன் என்பவன்
தருக்கிய புயத்தின்மேற் சரண்வைத் தேறினான். 211
ஏறியங் கசலன்மே லிருந்து செல்லுழிக்
காறொடர் முகிலினங் கவைஇய காட்சிபோல்
மாறில்வெம் பூதர்கள் வந்து சுற்றியே
கூறினர் அவன்புகழ் குலாய கொள்கையார். 212
சாமரை வீசினர் தணப்பில் பன்மணிக்
காமரு தண்ணிழல் கவிகை ஏந்தினர்
பூமரு மதுமலர் பொழிதல் மேயினர்
ஏமரு பூதரில் எண்ணி லோர்களே. 213
துடியொடு சல்லரி தோமில் தண்ணுமை
கடிபடு கரடிகை கணையம் சல்லிகை
இடியுறழ் பேரிகை இரலை காகளங்
குடமுழ வியம்பினர் கோடி சாரதர். 214
(206. ஓங்கல் - இமயமலை.
207. ஏதம் - துன்பம். மோதகாதிகள் - மோதகம் முதலியபொருள்கள்.
208. துஞ்சுவித்து - இறக்கச்செய்து. 210. முன்னவன் - விநாயகப்பெருமான்.
211. அசலன் - பூதகணங்களில் ஒருவன். 213. ஏமரு - மகிழ்வுற்ற.
214. துடி - உடுக்கை. தோம்இல் - குற்றமில்லாத. தண்ணுமை - மத்தளம்.
இரலை, ஊதுகொம்பு, சல்லரி, கரடிகை, கணையம், சல்லிகை காகளம் குட முழவு
- இவைகள் வாத்திய வகைகள்.)
சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன்
வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும்
அந்தர அமரரும் அடைந்து போற்றியே
புந்திகொள் உவகையால் போதல் மேயினார். 215
தாருவின் நறுமலர் தத்தங் கைகொடு
பேரருள் நுதல்விழிப் பிள்ளை மீமிசை
சேருற வீசியே புடையிற் சென்றனர்
காரினை யடைதரு கடவுள் வில்லென. 216
விரைந்தெழு சாரத வௌ¢ளம் எண்ணில
நிரந்தன சூழ்தர நிமலன் மாமகன்
பெருந்தரை ஏகியே பிறங்கு தோல்முகன்
புரந்திடு மதங்கமா புரமுன் போயினான். 217
ஆயது கயமுகத் தவுணர் கோடியே
வேயினர் புகறலும் வெகுட்சி கொண்டெழீஇ
ஏயதன் படையெலாம் எடுத்து மற்றவன்
சேயுயர் தனதுபொற் றேரில் ஏறினான். 218
பல்லியம் இயம்பின பரிகள் சுற்றின
சில்லிகொள் ஆழியந் தேர்கள் சூழ்ந்தன
எல்லையில் இபநிரை யாவும் மொய்த்தன
வல்லியல் அவுணர்கள் வரம்பின் றீண்டினார். 219
ஆயிர வௌ¢ளமாம் அனிகஞ் சுற்றிடக்
காய்கனல் விழியுடைக் கயமு காசுரன்
ஏயெனும் அளவையில் ஏகிக் கண்ணுதல்
நாயகன் மதலைதன் படைமுன் நண்ணினான். 220
நண்ணிய காலையின் நவையில் பூதரும்
அண்ணலங் கழலடி அவுண ருங்கெழீஇப்
பண்ணினர் பெருஞசமர் படையின் வன்மையால்
விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே. 221
புதிதெழு வெயிலுடன் பொங்கு பேரிருள்
எதிர்பொரு மாறுபோல் இனங்கொள் தானவர்
அதிர்கழற் பூதரோ டமர்செய் தாற்றலர்
கதுமென அழிந்தனர் கலங்கி ஓடினார். 222
ஓடினர் அளப்பிலர் உயிரைச் சிந்தியே
வீடினர் அளப்பிலர் மெய்கு றைந்துபின்
ஆடினர் அளப்பிலர் அகலு தற்கிடந்
தேடினர் அளப்பிலர் தியக்கம் எய்தினார். 223
(216. கடவுள்வில் - இந்திரவில்.
218. வேயினர் - ஒற்றர். சேய் - செவ்விய.
219. சில்லிகொள் - தகடுகள் பதித்த. 223. தியக்கம் - கலக்கம்.)
ஒழிந்தன கரிபரி உலப்பில் தேர்நிரை
அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை
குழிந்திடு கண்ணுடைக் குறள்வெம் பூதர்கள்
மொழிந்திட அரியதோர் விசய முற்றினா£¢. 224
உயர்தரு தானவர் உடைந்த தன்மையும்
புயவலி கொண்டுள பூதர் யாவருஞ்
சயமுடன் மேல்வரு தகவு நோக்கியே
கயமுக அவுணர்கோன் கனலிற் சீறினான். 225
உளத்தினில் வெகுண்டுசென் றொருதன் கைக்சிலை
வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேரமர்
விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய்யெலாந்
துளைத்தனன் கணைமழை சொரிந்து துண்ணென. 226
அரந்தெறு பகழிகள் ஆகம் போழ்தலும்
வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர்
இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார்
புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே. 227
கணநிரை சாய்தலுங் கண்டு மற்றது
மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன்
இணையறும் அசலன்மேல் ஏகி வல்லையில்
அணுகினன் இபமுகத் தவுணர் கோனையே. 228
காருடை இபமுகக் கடவுள் மேலையோன்
ஏருற வருதலும் நின்ற தூதரைச்
சீருறு கயமுகத் தீயன் நோக்கியே
யாரிவண் பொருவதற் கணுகுற் றானென. 229
பரவிய ஒற்றர்கள் பணைம ருப்புடைக்
காரிமுக முடையன்முக் கண்ணன் ஐங்கரன்
உருகெழு பூதன்மேல் உறுகின் றான்சிவன்
பெருமக னாகும்இப் பிள்ளைதான் என்றார். 230
அன்னது கேட்டலும் அவணன் சீறியே
பன்னருங் கலைதெரி பாகை நோக்கிநம்
பொன்னி ரதத்தினை புழைக்கை மாமுகன்
முன்னுறக் கடவுதி மொய்ம்ப என்னவே. 231
கேட்டிடு கலவையோன் கிஞ்சு கக்குரத்
தாட்டிறற் பரியினந் தன்னின் மத்திகை
காட்டினன் தவறிலாக் கனகத் தேரினை
ஓட்டினன் ஐங்கரத் தொருவன் முன்னுற. 232
(224. குறள் - குறுகிய. விசயம் - வெற்றி.
227. அரம்தெறு - அரத்தால் கூராக்கிய.
ஆகம் - உடல். 228. கிம்புரி - பூண். 230. பணை - பருமை.
231. கடவுதி - செலுத்து வாயாக.)
ஆயிடைக் கரிமுகத் தவுணன் ஐங்கரத்
தூயனை யழல்விழ சுழல நோக்கியே
காயெரி எயிறுகக் கறைகொள் பற்களால்
சேயிதழ் அதுக்கியே இனைய செப்புவான். 233
நுந்தையென் மாதவம் நோக்கி முன்னரே
தந்திடு பெருவரந் தன்னைத் தேர்கிலை
உய்ந்தனை போதிநின் னுயிர்கொண் டென்னெதிர்
வந்தனை இறையது மதியி லாய்கொலோ. 234
அன்றிநீ யமர்செய அமைதி யென்னினும்
வன்றிறல் உனக்கிலை மைந்த என்னெதிர்
பொன்றினர் அல்லது போர்செய் தென்னைமுன்
வென்றவர் இவரென விளம்ப வல்லையோ. 235
தேன்பெறு தருநிழல் திருவின் வைகிய
வான்பெறு தேவரால் மக்க ளாலவர்
ஊன்பெறு படைகளால் ஒழிந்தி டேன்இது
நான்பெறு வரத்தியல் நவிலக் கேட்டியேல். 236
பின்னரும் பலவுள பெற்ற தொல்வரம்
என்னைவெல் பவர்எவர் இந்தி ராதிபர்
தன்னிடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை
உன்னைவென் றன்னவர் உயிரும் உண்பனால். 237
பொருதெனை வென்றனை போக வல்லையேல்
வருதியென் றுரைத்தலும் வானு லாவிய
புரமெரி படுத்தவன் புதல்வன் அவ்விடை
அருளுட னொருமொழி அறைவ தாயினான். 238
வேறு
நிரந்தபல் படையும் நாளும் நிலைபெற நினக்குத் தொன்னாள்
வரந்தரு கின்ற எந்தை வல்லைநின் னுயிரை வவ்விப்
புரந்தரன் முதவி னோர்க்குப் பொன்னினா டுதவி அன்னார்
அரந்தையும் அகற்றிச் செல்கென் றருளினன் எனக்கும் அன்றே. 239
உன்னுயிர் காத்தி என்னின் உறுதியொன் றுரைப்பன் கேண்மோ
பொன்னக ரதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி
இந்நிலத் தரசு செய்தே இருத்திய• திசையா தென்னின்
நின்னுயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவென் னென்றான். 240
(232. வலவையோன் - சாரதி. கிஞ்சுகம் - செந்நிறம்.
234. நுந்தை - உனது தந்தை. இறையது - சிறிதும்.
236. ஊன் - மாமிசம். படை - ஆயுதம்.
239. நிரந்த - வரிசையான. எந்தை - சிவன். அரந்தை - துன்பம்.)
என்னலும் அவுணன் பொங்கி எரியுக விழிழிழிழித்துச் சென்றோர்
பொன்னெடுஞ் சிலையை வாங்கிப் பொருக்கெனப் புரிநாண் ஏற்றி
மின்னுடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும்
முன்னவன் எழுவொன் றேந்தி முரணொடு சிந்தி நின்றான். 241
பொற்றனு முரிந்து வீழப புழைக்கையிற் பிடித்த தண்டால்
எற்றினன் அனைய காலை இபமுகத் தசுரன் என்போன்
மற்றொரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கு முன்னர்ச்
செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர் ஆர்ப்ப. 242
திண்டிறல் பெற்ற வீரச் சிலைமுரிந் திட்ட பின்னர்த்
தண்டமொன் றேந்தி ஈசன் தனயனோ டெதிர்த லோடும்
விண்டது சோரும் வண்ணம் வெய்தெனப் புடைத்து மாயாக்
கண்டகன் உரத்தில் தாக்கக் கையற வெய்தி நின்றான். 243
நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத் தாலே
ஒடுங்கினன் கயவெஞ் சூரன் உலந்தனன் போல நின்றான்
அடும்பரி களிறு திண்டேர் அணிகெழு தானை பாரிற்
படும்படி நினைந்து முன்னோன் பாரம்ஒன் றுய்த்தான் அன்றே. 244
விட்டவெம் பாசம் அங்கண் வெய்யதோர் சேனை முற்றுங்
கட்டிய தாக மைந்தன் கணிச்சியும் அதற்பின் ஏவ
அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை
பட்டன உணர்ந்து தீயோன் பதைபதைத் துயிர்த்து நொந்தான். 245
முந்துதன் கரத்தி லுள்ள முரண்கெழு படைகள் யாவுஞ்
சிந்தினன் அவைகள் எல்லாஞ் சேர்ந்தன திங்கள் சூடும்
எந்தையை வலஞ்செய் தேத்தி ஏவலின் இயன்ற மாதோ
வெந்திறல் அவுணன் மேன்மேல் வெகுளித்தீக் கனல நின்றான். 246
நின்றவன் தன்னை நோக்கி நெடியபல் படைகள் ஏவில்
சென்றிவன் தன்னைக் கொல்லா சிவனருள் வரத்தின் சீரால்
இன்றினிச் செய்வ தென்னென் றிறைவரை உன்னி எந்தை
யூன்றிருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக் கொண்டான். 247
தடக்கையி லேந்து கோட்டைத் தந்தியாம் அவுணன் மீது
விடுத்தலும் அனையன் மார்வை வெய்தெனக் கீண்டு போகி
உடல்படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெண்ணீர்க்
கடல்படிந் தமலன் மைந்தன் கரத்தில்வந் திருந்த தன்றே. 248
புயலினத் தொகுதி ஒன்றிப் புவிமிசை வழுக்கிற் றென்னக்
கயமுகத் தவுணன் முந்நீர்க் கடலுடைந் தென்ன ஆர்த்திட்
டியலுடைத் தேர்மேல் வீழா எய்த்தனன் அவன்தன் மார்பில்
வியனதித் தாரை என்ன விரிந்தன குருதி வௌ¢ளம். 249
(241. பொன் - அழகு. எழு - ஓர் ஆயுதம். முரண் - வலிமை.
243. கண்டகன் - கொடியன்; கயமுகன். கையறவு - துன்பம்.
244. பாசம் - கயிறு. 245. அட்டது - அழித்தது.
247. எந்தை - எந்தையாகிய விநாயகர். தன் திருக்கோட்டில் ஒன்று -
தனது கொம்புகளில் ஒன்றான வலது கொம்பை.
248. கரத்தில் - வலது கரத்தில்.)
ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பின்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா. 250
ஆய்ந்தநல் லுணர்வின் மேலோர் அறிவினும் அணுகா அண்ணல்
ஈந்ததொல் வரத்தால் மாயா இபமுகத் தவுணன் வீழ்ந்து
வீந்தனன் போன்று தொல்லை மெய்யொரீஇ விண்ணும் மண்ணுந்
தீந்திட எரிகண் சிந்தைச் சீற்றத்தோ ராகு வானான். 251
தேக்கிய நதிசேர் கின்ற சென்னியன் செம்மல் தன்னைத்
தாக்கிய வருத லோடுஞ் சாரதன் தோளின் நீங்கி
நீக்கருந் துப்பின் தாக்கி நீநமைச் சுமத்தி என்று
மேக்குயர் பிடரில் தாவி வீற்றிருந் தூர்தல் உற்றான். 252
மற்றது கண்ட தேவர் வாசவன் முதலோர் யாரும்
இற்றனன் கயவெஞ் சூரன் எம்மிடர் போயிற் றன்றே
அற்றதெம் பகையும் என்னா ஆடினர் பாடா நின்றார்
சுற்றிய கலிங்கம் வீசித் துண்ணென விசும்பு தூர்த்தார். 253
காமரு புயலின் தோற்றங் காண்டலுங் களிப்பின் மூழ்கி
ஏமரு கலாப மஞ்ஞை இனமெனக் குலவு கின்றார்
தேமரும் இதழி அண்ணல் சிறுவனைத் தெரியா வண்ணம
பூமலர் பொழிந்து நின்று புகழினைப் போற்றல் உற்றார். 254
காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவுந்
தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
ஏப்படுஞ் செய்கை யென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
நீப்பது கருதி யன்றோ நீயருள் வடிவங் கொண்டாய். 255
உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
இன்னதென் றுணர்ந்த தில்லை யாமுனை அறிவ தெங்ஙன்
அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டி போலாம். 256
என்றிவர் எகினம் ஊரும் இறையொடும் இறைஞ்சி ஏத்தி
நன்றிகொள் சிந்தை யோடு நகையொளி முகத்த ராகி
மன்றவர் குமரன் தன்பால் வந்தனர் சூழ்த லோடும்
ஒன்றிய கருணை நோக்கால் உலப்பிலா அருள்பு ரிந்தான். 257
(250. செய்யகாடு - செங்காடு; இது தற்போது திருச்செங்காட்டாங்குடி
என வழங்குகிறது. 251. தொல்லைமெய் - யானைவடிவு. ஒரீஇ - நீங்கி.
ஆகு - பெருச்சாளி. 252. பிடரி - முதுகு. 253. இற்றனன் - இறந்தனன்.
கலிங்கம் - ஆடை. 254. கலாபம் - தோகை. மஞ்ஞை - மயில்.
257. எகினம் - அன்னம்.)
உய்ந்தனம் இனிநாம் என்னா ஓதிமம் உயர்த்தோன் வௌ¢ளைத்
தந்தியன் யாரும் பேற்றிச் சார்தலுஞ சமரின் முன்னம்
வெந்தொழில் அவுணன் காயம் வீந்திடு பூதர் தம்மை
எந்தையங் கினிது நோக்கி எழுதிரென் றருளிச் செய்தான். 258
அவ்வகை அருள லோடும் அரவென எழுந்து போற்றி
மைவரை மிடற்றுப் புத்தேள் மைந்தனை வணங்கி ஏத்தி
எவ்வமில் பூதர் யாரும் ஈண்டினர் இனைய எல்லாஞ்
செவ்விதில் உணர்ந்து கொண்டான் தேசிலா நிருதர்க் கீசன். 259
மந்திரி யோடுஞ் சூழ்ந்து வருந்தினன் புலம்பி மாழகி
உய்ந்தனன் போவல் யானென் றுன்னிஓர் பறவை யாகி
அந்தரத் திறந்த புள்ளோ டணுகியப் பதியை நீங்கிச்
சிந்தையிற் செல்லல் கூரச் செம்பொன்மால் வரையிற் சென்றான். 260
தாழுறு சார லூடு தபனனும் உணராத் தாருச்
சூழலொன் றுண்டால் அங்கட் சுருங்கையோ டிருந்த சேமப்
புழையுட் புலம்பி உற்றான் பொன்னகர் இறைக்கும் அங்கண்
ஊழிவெங் காலிற் சூழும் உலப்பில்பூ தர்க்கும் அஞ்சி. 261
வானவர் பகைஞன் அந்த மதங்கமா புரியை நீங்கிப்
போனதோர் காலை மற்றைப் புகருமோர் புள்ள தாகித்
தானுறை உலகு நண்ணித் தவமறைந் தல்ல தாற்றி
ஊனுட லோம்பு வார்போல் ஒருப்படா யோகில் உற்றான். 262
பூதரும் அன்ன வேலைப் புரிசைசூழ் நகரம் போகி
நீதியில் அவுண ராகி நிறங்கிளர் படைகொண் டோரைக்
காதிவெஞ் சினப்போர் முற்றிக் களத்திடை வருத லோடும்
ஆதிதந் தருளும் மைந்தன் அவ்விடை அகன்று மீண்டான். 263
மீண்டுசெங் காட்டி லோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானங் கணபதீச் சரம தென்பார். 264
புரமெரி படுத்தோன் தன்னைப் பூசனை புரிந்த பின்னர்
எரிவிழி சிதறும் ஆகு எருத்தமேல் இனிதின் ஏறிச்
சுரபதி அயன்விண் ணோர்கள் தொழுதுடன் சூழந்து போற்ற
அரவென மாலோன் வைகும் ஆலமா வனத்திற் புக்கான். 265
(258. ஒதிமம் - அன்னம். வௌ¢ளைத் தந்தியன் - இந்திரன்.
259. அரவென - ஹரஹர என்ற ஒலியுடன்.
260. மந்திரி - இங்குச் சுக்கிரன். பதியை - மங்கத புரத்தை. செல்லல் - வருத்தம்.
261. சாரல் - மலை அடிவாரம். தபனன் - சூரியன். சுருங்கை - சிறு துவாரம்.
சேமம் - காவல். புழையுள் - மரப்பொந்தில். 262. வானவர் பகைஞன் - அசுரேந்திரன்.
264. கணபதீச்சரம் - இது திருச்செங் காட்டாங்குடியில் உள்ள சிவாலயத்தின் பெயர்.)
ஆகத் திருவிருத்தம் - 1172
- - -
15. அனந்தன் சாப நீங்கு படலம்
புக்கதொரு பொழுதிலங்கண் முந்தோ ராலம்
பொந்தினிடை இருந்தமலன் பொற்றாள் உன்னி
மிக்கதவம் புரிமாலைங் கரத்து முன்னோன்
மேவியது மனங்கொண்டு விரைவின் ஆங்கே
அக்கணமே எதிர்சென்று வழுத்திக் காண
அம்மையளித் தருள்சாபம் அகற லோடுஞ்
சக்கரமே முதலியஐம் படைக ளேந்தித்
தனாதுதொல்லைப் பேருருவந் தன்னைப் பெற்றான். 1
மாலோன்தொல் லுருவுதன்பால் மேவக் கண்டு
மகிழ்சிறந்து சிவனருளை மனங்கொண் டேத்தி
மேலோன்தன் முன்னரெய்தி வணக்கஞ் செய்து
மீண்டுமவன் தனைத்துதித்து விமல நீயென்
பாலோங்கு பூசனைகொண் டருளல் வேண்டும்
பணித்தருள்க ஆதிபரா பரத்தின் பாலாய்
மூலோங்கா ரப்பொருளாய் இருந்தாள் ன்னம்
மொழிந்தருள்சா பந்தொலைத்த முதல்வ என்றான். 2
ஐங்கரன்றான் மாலுரைத்த மாற்றங் கேளா
அன்னதுசெய் கெனஅருளி அங்கண் மேவக்
கொங்குலவு மஞ்சனநீர் சாந்த மாலை
கொழும்புகையே முதலியன கொண்டு போந்து
சங்கரனார் மதலைதனை அருச்சித் தன்பால்
தாவறுபண் ணியம்பலவுஞ் சால்பில் தந்து
பொங்கியபால் அவியினொடு முன்ன மார்த்திப்
போற்றியே இ•தொன்று புகலல் உற்றான். 3
வின்னாமம் புகல்கின்ற திங்கள் தன்னில்
மிக்கமதி தனிலாறாம் பக்க மாகும்
இந்நாளில் யானுன்னை அருச்சித் திட்ட
இயறகைபோல் யாருமினி ஈறி லாவுன்
பொன்னாரும் மலரடியே புகலென் றுன்னிப்
பூசைபுரிந் திடவுமவர் புன்கண் எல்லாம்
அந்நாளே அகற்றிநீ யுலவாச் செல்வம்
அளித்திடவும் வேண்டுமி• தருள்க வென்றான். 4
(1. அமலன் - சிவன். ஐம்படை - சங்கு, சக்கரம், வாள், வில்,
கதை என்பன.
2. மேலோன் - இங்கு விநாயகக் கடவுள். 3. பண்ணியம் - பலகாரங்கள்.
பாலவி - பாற்சோறு. ஆர்த்தி - நிவேதித்து.
4. வில் நாமம் புகல்கின்ற திங்கள் - மார்கழி மாதம். மிக்கமதி - சுக்கிலபட்சம்.
ஆறாம் பக்கம் - சஷ்டிதிதி.)
மாயனுரை கேட்டலுநீ மொழிந்தற் றாக
மகிழ்ந்தனநின் பூசையென மதித்துக் கூறி
ஆயவனும் அயன்முதலா வுள்ளோர் யாரும்
அன்பினொடு வாழ்த்திசைப்ப ஆகு என்னுந்
தூயதொரூர் தியிலெய்திக் கணங்க ளானோர்
சூழ்ந்துரக் கயிலையெனுந் துகடீர் வெற்பின்
நேயமுடன் போந்தரனை வணக்கஞ் செய்து
நீடருள்பெற் றேதொல்லை நிலையத் துற்றான். 5
வேறு
அற்றை நாளில் அரியயன் ஆதியோர்
நெற்றி யங்கண் நிமலன் பதங்களின்
முற்று மன்பொடு மும்முறை தாழ்ந்தருள்
பெற்று நீங்கினர் பேதுறல் நீங்கினார். 6
கரிமு கம்பெறு கண்ணுதற் பிள்ளைதாள்
பரவி முன்னம் பணிந்தனர் நிற்புழி
அருள்பு ரிந்திட அன்னதொர் வேலையில்
பரிவி னாலொர் பரிசினைக் கூறுவார். 7
எந்தை கேண்மதி எம்மை அலைத்திடுந்
தந்தி மாமுகத் தானவற் செற்றியால்
உய்ந்து நாங்கள் உனதடி யோமிவண்
வந்து நல்குகைம் மாறுமற் றில்லையே. 8
நென்னல் காறும் நிகரில் கயாசுரன்
முன்ன ராற்று முறைப்பணி எந்தைமுன்
இன்ன நாட்டொட் டியற்றுதும் யாமென
அன்ன செய்திரென் றான்அருள் நீர்மையான். 9
இத்தி றம்படும் எல்லையின் நின்றிடும்
அத்த லைச்சுரர் யாவரும் அன்புறீஇக்
கைத்த லத்தைக் கபித்தம தாக்கியே
தத்தம் மத்தகந் தாக்கினர் மும்முறை. 10
இணைகொள் கையை யெதிரெதிர் மாற்றியே
துணைகொள் வார்குழை தொட்டனர் மும்முறை
கணைகொள் காலுங் கவானுஞ் செறிந்திடத்
தணிவி லன்பொடு தாழந்தெழுந் தேத்தினார். 11
இணங்கும் அன்புடன் யாருமி தாற்றியே
வணங்கி நிற்ப மகிழ்சிறந் தான்வரை
அணங்கின் மாமகன் அவ்வியல் நோக்கியே
கணங்க ளார்த்தன கார்க்கட லாமென. 12
(6. செற்றி - கொன்றருளினீர். மதி - முன்னிலையசை.
10. கபித்த மது ஆக்கி - மூடிக்கொண்டு. மத்தகம் - நெற்றி.
11. துணை - இரண்டு. கணைகொள்கால் - கணைக்கால். கவான் - தொடை.)
நின்ற தேவர் நிமலனை நோக்கியே
உன்றன் முன்னம் உலகுளர் யாவரும்
இன்று தொட்டெமைப் போலிப் பணிமுறை
நன்று செய்திட நல்லருள் செய்கென. 13
கடனி றத்துக் கயமுகன் அத்திற
நடைபெ றும்படி நல்கிஅ மரர்கோன்
நெடிய மாலயன் நின்றுள ருக்கெலாம்
விடைபு ரிந்து விடுத்தனன் என்பவே. 14
அம்பு யக்கண் அரியயன் வாசவன்
உம்பர் அவ்வரை ஒல்லையின் நீக்குறாத்
தம்ப தந்தொறுஞ் சார்ந்தனர் வைகினார்
தும்பி யின்முகத் தோன்றல் அருளினால். 15
முந்தை வத முதலெழுத் தாகிய
எந்தை தோற்றம் இயம்பினம் இங்கினி
அந்த மில்குணத் தாண்டகைக் கோர்குணம்
வந்ததென் னென்றி மற்றது கேட்டிநீ. 16
வேறு
நற்குண முடைய நல்லோரும் நாடொணாச்
சிற்குணன் ஆகுமச் சிவன்ப ராபரன்
சொற்குண மூவகைத் தொடர்பும் இல்லதோர்
நிர்க்குணன் அவன்செயல் நிகழ்த்தற் பாலதோ. 17
பரவிய வுயிர்க்கெலாம் பாசம் நீக்குவான்
அருளினன் ஆகியே அமலன் மாலயற்
கிருதொழின் முறையினை ஈந்து மற்றவைக்
குரியன குணங்களும் உள்ள வாக்கினான். 18
முடித்திடல் இயற்றுஎம முதல்வன் அத்தொழில்
தடுப்பரும் வெஞ்சினந் தன்னில் முற்றுமால்
அடுத்தவப் பான்மையால் அதன்கண் தாமதம்
படுத்தினன் அத்திறம் பலருந் தேர்வரால். 19
மாமறை அளப்பில வரம்பில் ஆகமந்
தோமற உதவியோர் தொன்ம ரத்திடைக்
காமரு முனிவரர் கணங்கட் கன்னவை
தாமத குணத்தனேல் சாற்ற வல்லனோ. 20
(13. நிமலனை - விநாயகப் பெருமானை.
இப்பணிமுறை - குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபடுதலை.
15. தும்பியின் முகத்தோன்றல் - கணபதி.
16. அந்தமில் குணத்து ஆண்டகை - சிவபெருமான்.
17. மூவகைக் குணம் - சாத்து விதம், இராசதம், தாமதம் என்னும் மூவகைக் குணம்.
18. இருதொழில் - காத்தல், படைத்தல் என்பன.
19. சங்காரத் தொழில் தாமத குணம் அமைந்துள்ளது என்க.
20. அன்னவை - வேதசிவாகமங்கள். தாமத குணத்தனேல் - தாமதகுணத்தராயின்.)
வாலிய நிமலமாமம் வடிவங் கண்ணுதல்
மேலவன் எய்துமோ வேதம் விஞ்சையின்
மூலமென் றவனையே மொழியு மோவிது
சீலமில் லார்க்கெவன் தேற்றும் வண்ணமே. 21
இமையவர் யாவரும் இறைஞ்சுங் கண்ணுதல்
விமலன்அன் றிறுதியை விளைக்கும் பண்பினால்
தமகுணன் என்றியத் தன்மை செய்கையால்
அமைகுண மியற்குணம் அறியற் பாலதோ. 22
ஈத்தலும் அளித்தலும் இயற்று வோர்க்குவ
சாத்திக ராசதந் தத்தஞ் செய்கையின்
மாத்திரை யல்லது மற்ற வர்க்கவை
பார்த்திடின் இயற்கையாப் பகர லாகுமோ. 23
அக்குண மானவை அளிக்குஞ் செய்கையால்
தொக்குறும் இயற்கையத் தொல்லை யோர்கள்பால்
இக்குண மல்லதோர் இரண்டுஞ் சேருமால்
முக்குண நெறிசெலும் முனிவர் தேவர்போல். 24
நேமியாற் குருவெலாம் நீல மாயதுந்
தோமறு கடலிடைத் துயில்கொள் பான்மையும்
மேமுறும் அகந்தையும் பிறவு மெய்துமேல்
தாமத ராசதந் தானு முற்றவே. 25
அறிவொருங் குற்றுழி அனையன் கண்ணுதல்
இறைவனை வழிடீஇ ஏத்தி இன்னருள்
நெறிவரு தன்மையும் நீடு போதமும்
பெறுதலிற் சாத்திக முறையும் பெற்றுளான். 26
மேனிபொற் கென்றலின் விமல வான்பொருள்
நானெனும் மருட்கையின் நவையில் ஈசனைத்
தானுணர் தௌ¤வினில் தவத்திற் பூசையில்
ஆனது குணனெலாம் அயன்ற னக்குமே. 27
ஆதலின் விருப்புடன் அல்ல தெய்தினோர்
ஓதிய குணவிதத் துவர் கண்ணுதல்
நாதனுக் கனையது நணுகு றாமையால்
பேதைமை ஒருகுணம் அவன்கட் பேசுதல். 28
மூன்றென உளபொருள் யாமும் முன்னமே
ஈன்றவன் கண்ணுதல் என்னும் நான்மறை
சான்றது வாகுமால் தவத்தர்க் கென்னினும்
ஆன்றதோர் அவன்செயல் அறியற் பாலதோ. 29
(23. படைத்தல் தாழிலில் சாத்துவித குணமும், காத்தல் தொழிலில்
இராசத குணமும் உள்ளன என்க. 27. மருட்கை - மயக்கம்.
28. மூன்றென உள பொருள் யாவும் - மும்மாயா தத்துவப் பொருள்
அனைத்தையும்.)
செங்கண்மால் முதலிய தேவர் ஏனையோர்
அங்கவர் அல்லவை அகத்துள் வைகியே
னுங்குமா யாவையும் இயற்று கின்றதோர்
சங்கரன் ஒருகுணச் சார்பின் மேவுமோ. 30
ஈறுசெய் முறையினை எண்ணித் தாமதங்
கூறினர் அல்லது குறிக்கொள் மேலையோர்
வேறொரு செய்கையின் விளம்பி னாரலர்
ஆறணி செஞ்சடை அமல னுக்கரோ. 31
வேறு
என்றிவை பலவுந் தூயோன் இசைத்தலும் இனைய வெல்லம்
வன்றிறல் வெறுக்கை எய்தி மயங்கலால் தக்கன் என்னும்
புன்றொழில் புரியுந் தீயோன் பொறுத்திலன் புந்தி மீது
நன்றென அறிதல் அதற்றான் ஒருசில நவிலல் உற்றான். 32
முனிவகேள் பலவும் ஈண்டு மொழிவதிற் பயனென் வௌ¢ளிப்
பனிவரை உறையும் நுங்கோன் பகவனே எனினு மாக
அனையவன் தனக்கு வேள்வி அவிதனை உதவேன் நீயும்
இனியிவை மொழியல் போதி என்செயல் முடிப்பன் என்றான். 33
வேறு
வளங்குலவு தக்கனிது புகன்றிடலுந்
ததீசிமுனி மனத்திற் சீற்றம்
விளைந்ததுமற் றவ்வளவில் வெருவியது
வடவையழல் விண்ணோர் நெஞ்சந்
தளர்ந்ததுபொன் மால்வரையுஞ் சலித்தந்தக்
குலகிரியுந் தரிப்பின் றாகி
உளைந்தனவே லைகள்ஏழும் ஒடுங்கியன
நடுங்கியதிவ் வுலகம் எல்லாம். 34
அக்கணமே முனிவரன்தன் பெருஞ்சீற்றந்
தனைநோக்கி அந்தோ என்னால்
எக்குவடும் எக்கிரியும் எக்கடலும்
எவ்வுலகும் யாவும் யாருந்
தக்கன்ஒரு வன்பொருட்டால் தளர்ந்திடுமோ
எனமுனிவு தணிந்து தற்சூழ்
ஒக்கலாடும் அவணெழுந்து சிறுவிதியின்
முகநோக்கி ஒன்று சொல்வான். 35
சங்கரனை விலக்கியின்று புரிகின்ற
மகஞ்சிதைக தக்க நின்னோ
டிங்குறையும் அமரரெலாம் அறிவுறவின்
னேயென்னா இசைத்துப் பின்னர்
அங்கணுறு மறையோர்தம் முகநோக்கி
அந்தணரில் அழிதூ வானீர்
உங்கள்குலத் தலைமைதனை இழந்திட்டீர்
கேண்மினென உரைக்கல் உற்றான். 36
பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ
எனவணங்கிப் பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண்
டிகையினையும் இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும்
பிறந்திறந்து கதியு றாது
பாசமத னிடைப்பட்டு மறையுரையா
நெறியதனிற் படுதிர் என்றான். 37
இனையநெறி யாற்சாபம் பலவுரைத்துத்
ததீசிமுனி இரண்டு பாலும்
முனிவர்தொகை தற்சூழத் தானுறையும்
ஆச்சிரம முன்னிச் சென்றான்
அனையவன்தன் பின்னாகத் தக்கனென்போன்
பெருந்தகவும் ஆற்றும் நோன்பும்
புனைபுகழுஞ் செழுந்திருவும் ஆற்றலுமாம்
மனச்செருக்கும் போயிற் றன்றே. 38
(31. ஈறு செய்முறை - சங்காரத் தொழில்.
33. மொழியல் - உரையாதே.
போதி - போவாய். 35. முனிவு - கோபம். ஒக்கல் - சுற்றத்தினர்.
36. அழிதூவானீர் - பேடியாயுள்ளவர்களே.
37. மறையுரையாநெறி - அவைதிக மார்க்கம். படுதிர் - புகுதிர்.)
ஆகத் திருவிருத்தம் - 1210
- - -
· முந்தையது : தக்ஷ காண்டம் - பகுதி 2...
· அடுத்தது : தக்ஷ காண்டம் - பகுதி 4...