logo

|

Home >

panniru-thirumurai >

thirumuraikalil-vilakkidu

திருமுறைகளில் விளக்கீடு / தீப வழிபாடு

சிவலிங்கமே ஜோதி உருவம், ஆகையால் தீப வழிபாடு - விளக்கு ஏற்றி வணங்குதல் திருமுறைகளில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. தீபம் ஏற்றாது சிவா வழிபாடு செய்வதில்லை. ஜோதியே சிவம், சிவமே ஜோதி. திருக்கார்த்திகை தீபமாகத் திருவண்ணாமலையில் உயரும் ஜோதியே இங்கு நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் ஒளிர்கிறது. 

திருமுறைகளில் விளக்கேற்றுதல் பற்றிய தொகுப்பு இது. 
 

வளைக்கை மடநல்லார்
 மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்
 சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
 தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
 போதியோ பூம்பாவாய்.  02.047.03 

விண் களார்தொழும் விளக்கினைத் துளக்கிலா            
 விகிர்தனை விழவாரும்            
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும்            
 வள்ளலை மருவித்தம்            
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்            
 துறைதரு கற்பகத்தைப்            
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்            
 பழியிலர் புகழாமே.  02.104.02

மந்திரநன் மாமறையி னோடுவளர்
 வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தர விசும்பணவி அற்புத
 மெனப்படரும் ஆழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
 நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர்
 திருந்துபதி வீழிநகரே.  03.080.07 

கதியொன்றும் அறியாதே கண்ணழலத் 
 தலைபறித்துக் கையில் உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண 
 நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை 
 வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க 
 மின்மினித்தீக் காய்ந்த வாறே.  04.005.07 

இல்லக விளக்கது
 இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
 சோதி யுள்ளது
பல்லக விளக்கது
 பலருங் காண்பது
நல்லக விளக்கது
 நமச்சி வாயவே.  04.011.08 

மதியங் கண்ணி ஞாயிற்றை 
 மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை 
 ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் 
 வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை 
 நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.  04.015.03 

புறம்ப யத்தெம் முத்தினைப் 
 புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி 
 உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் 
 காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத் 
 தரிமான் ஏற்றை அடைந்தேனே. 04.015.04

நொய்யவர் விழுமி யாரும் 
 நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் 
 உடலெனும் இடிஞ்சில் தன்னில்
நெய்யமர் திரியு மாகி 
 நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் 
 திருச்செம்பொன் பள்ளி யாரே.  04.029.02 

பொள்ளத்த காய மாயப்
 பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
 விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி
 உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங்
 கடவூர்வீ ரட்ட னாரே.  04.031.01 

பெரும்புலர் காலை மூழ்கிப் 
 பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் 
 கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் 
 விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் 
 கடவூர்வீ ரட்ட னாரே.  04.031.04 

தானத்தைச் செய்து வாழ்வான் 
 சலத்துளே அழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில் 
 வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை ஏற்றி 
 நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும் 
 ஒற்றியூ ருடைய கோவே.  04.045.03

மெய்யுளே விளக்கை ஏற்றி 
 வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி 
 உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் 
 அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் 
 திருப்புக லூர னீரே.  04.054.09 

நீதியால் நினைப்பு ளானை 
 நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற் 
 றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா 
 விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம் 
 அழகிதா நினைந்த வாறே.  04.074.07  

விளக்கினாற் பெற்ற இன்பம் 
 மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால் 
 தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் 
 மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் 
 கடிகள்தாம் அருளு மாறே.  04.077.03

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற 
 தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் 
 கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த 
 நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் 
 கண்கொண்டு காண்பதென்னே.  04.080.05 

கொடிகொள் விதானங் கவரி 
 பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் 
 எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின 
 ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு 
 நந்தி புறப்படிலே.  04.102.06 

தீண்டற் கரிய
 திருவடி ஒன்றினால்
மீண்டற் கும்மிதித்
 தார்அரக் கன்தனை
வேண்டிக் கொண் டேன்திரு
 வாய்மூர் விளக்கினைத்
தூண்டிக் கொள்வன்நான்
 என்றலும் தோன்றுமே. 05.050.10

விண்ணு ளார்தொழு
 தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை
 தீர்க்கு மருந்தினைப்
பண்ணு ளார்பயி
 லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி
 யேதொழு துய்ம்மினே.  05.057.02

வாம தேவன்
 வளநகர் வைகலுங்
காம மொன்றில
 ராய்க்கை விளக்கொடு
தாமந் தூபமுந்
 தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை
 வாரெதிர் செல்லலே.  05.092.06 

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் 
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை 
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் 
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  06.001.06 

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
  சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
  படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்
  மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
  புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.  06.002.09 

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.  06.023.01 

கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
  காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
  மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
  பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்
   மறைக்காட் டுறையும் மணாளன் றானே.  06.023.02 

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய்
என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கு மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.  06.023.08 

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  06.026.02

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும்
எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே.  06.031.09

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னை
வேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம் 
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.  06.033.03

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்துங் 
காணார் பொறியழலாய் நின்றான் றன்னை
உள்ளானை யொன்றல்லா உருவி னானை
உலகுக் கொருவிளக்காய் நின்றான் றன்னைக்
கள்ளேந்து கொன்றைதூய்க் காலை மூன்றும் 
ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்த னாரே.  06.035.09   

ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.  06.038.01

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.02  

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே 
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038..03  

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.04  

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.05  

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.06  

எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.07  

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.08  

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.09  

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.   06.038.10  

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன் 
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.    06.038.11

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  06.056.05

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநூறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.  06.057.09

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.  06.073.04

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் 
மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.  06.081.01

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.  06.084.01

பொய்யா நாவதனாற்
 புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும்
 விளக்கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய
 நிறத்தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடு
 மகிழ்வான்கழிப் பாலையதே.  07.023.09

தூண்டா விளக்கின் நற்சோதீ
 தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும்
 பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
 பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
 அடியார்க் கடியேன் ஆவேனே.  07.052.03

நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
 ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
 பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத்
 தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
 கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.  07.084.09

சோதியே சுடரே சூழொளி விளக்கே
 சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்
 பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
 நிறைமலர்க் குருந்தமே வியசீர் 
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
 அதெந்துவே என்றரு ளாயே.  08.029.01

வேண்டும் வேண்டும் மெய்யடியா 
 ருள்ளே விரும்பி எனை அருளால் 
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே 
அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் 
 தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க 
 அன்பே மேவுதலே.  08.032.04

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் 
 பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து 
 பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ  
 செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
 எங்கெழுந் தருளுவ தினியே.  08.037.07

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே.   08.கோவை.244      

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
 உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
 சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
 அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
 தொண்டனேன் விளம்புமா விளம்பே.  09.01.01 

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
 இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
 தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
 அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
 தொண்டனேன் பணியுமா பணியே.  09.01.02 

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
 கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
 மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
 திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்
 குளிரஎன் கண்குளிர்ந் தனவே.  09.05.02

மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான
 விளக்கரே எழுதுகோல் வளையாள் 
மையரே வையம் பலிதிரிந்(து) உறையும்
 மயானரே உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்
 பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடங் களந்தை
 அணிதிகழ் ஆதித்தேச் சரமே.  09.09.08

தொழுதுபின் செல்வ(து) அயன்முதற் கூட்டம்
 தொடர்வன மறைகள்நான் கெனினும்
கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை
 கவந்திகை கரியுரி திரிந்தூண்
தழலுமிழ் அரவம் கோவணம் பளிங்கு
 செபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம்(பு) அழலொளி விளக்கேழ்
 இருக்கையில் இருந்த ஈசனுக்கே.  09.15.03

ஒருங்கிருங் கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
 உறங்கிருள் நடுநல்யா மத்தோர்
கருங்கண்நின்(று) இமைக்கும் செழுஞ்சுடர் விளக்கம்
 கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங்கரும் பனைய தீந்தமிழ் மாலை
 தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங்கருங் கண்டத்து அண்டவா னவர்கோன்
 மருவிடம் திருவிடைமருதே.  09.17.10

முத்து வயிரமணி 
 மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல் 
 தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் 
 ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே 
 ஆடரங்கம் ஆயிற்றே.  09.19.01   

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.  10.00.01.48 

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே.  10.00.05.19 

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.  10.01.04.2  

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.  10.01.10.04

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே  10.03.08.05

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே  10.03.11.44

பாலிக்கும் நெஞ்சம் 1பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே  10.03.21.17

அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.  10.04.03.03 

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடுஞ் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.  10.04.13.40

விளக்கொளி சௌமுத லெளவது ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே.  10.04.13.41

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.  10.05.04.5

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.  10.05.17.4

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.  10.06.07.6

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.  10.06.13.8

காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே.  10.07.09.2      

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  10.07.10.05

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.  10.07.11.1

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.  10.07.21.1

ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்து
ஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு
ஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.  10.08.06.36 

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.  10.08.14.13

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.  10.08.16.3

மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.  10.08.20.02

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.  10.09.10.04  

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே.  10.09.20.07 

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.  10.09.20.22

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.  10.09.21.36  

சொல்லும் பொருளுமே 
 தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய 
 நாவாகச் -சொல்லரிய
வெண்பா விளக்கா 
 வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.  11.10.1

….நல்லன விரைமலர் 
 நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசிற் 
 சுருங்கலன் பூவும்
பட்ட மாலையும் … 11.19

நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே 
 நான்மறையாய் - நானுடைய
காடுடையாய் காலங்கள் 
 ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.  11.24.47 

…அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்… 11.28.4

கண்ணின் றொளிருங் 
 கருமணியின் உள்ளொளிபோல்
உண்ணின் றொளிரும் 
 ஒளிவிளக்கென் - றெண்ணிப்
புகலிப் பெருமானைப் 
 புண்ணியனைப் போற்றில்
அகலுமே பாசவிருள் அன்று.  11.28.23 

….விளக்கும் 
ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர … 11.031.04

வேத மறிக்கரத் தாரூர் 
 அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட் 
 டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென் 
 றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர் 
 அதிபன் நமிநந்தியே.  11.034.32

கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் 
 நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக் 
 கேற்றற் குடல்இலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக் 
 குழன்றும்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலிஒற்றி 
 மாநகர்ச் சக்கிரியே.  11.034.55 

நன்னக ராய இருக்குவே 
 ளூர்தனில் நல்குவராய்ப்
பொன்னக ராயநற் றில்லை 
 புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய அரற்குநற் 
 புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோள்எந்தை தந்தை 
 பிரான்எம் கணம்புல்லனே.  11.034.59 

பந்தார் அணிவிரல் பங்கயக் 
 கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள 
 வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது 
 நானெப் பொழுதும்முன்னும்
சந்தா ரகலத் தருகா 
 சனிதன் தடவரையே.  11.35.19

…..ஞானச் சுடர்விளக்கை 
 நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின் 
 வான்பொருளை…. 11.38 

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு 
 பெருங் கொடி நெருங்கத் 
தாளின் நெடுந் தோரணமும் தழைக்
 கமுகும் குழைத் தொடையும் 
நீள் இலைய கதலிகளும் நிறைந்த 
 பசும் பொற்ற சும்பும் 
ஒளி நெடு மணிவிளக்கும் உயர் 
 வாயில் தொறும் நிரைத்தார்.  12.006.120 

ஓவிய நான் முகன்
 எழுத ஒண்ணாமை உள்ளத்தால் 
மேவிய தன் வருத்தமுற 
 விதித்ததொரு மணி விளக்கோ 
மூவுலகின் பயனாகி முன் 
 நின்றது என நினைந்து 
நாவலர் காவலர் நின்றார் 
 நடு நின்றார் படைமதனார்.  12.006.141 

செந்தழல் ஒளியில் பொங்கும் 
 தீப மா மரங்களாலும் 
மந்திகள் முழையில் வைத்த 
 மணி விளக்கு ஒளிகளாலும் 
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் 
 அரும் பெரும் சோதியாலும் 
எந்தையார் திருக்காளத்தி மலையினில் 
 இரவு ஒன்று இல்லை.  12.016.131 

தூண்டு தவ விளக்கு அனையார் 
 சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில் 
 அடியேன் பின் வந்தவனை 
ஈண்டு வினைப் பர சமயக் 
 குழி நின்றும் எடுத்து ஆள 
வேண்டும் எனப் பல 
 முறையும் விண்ணப்பம் செய்தனரால்.  12.027.46 

காண்டலே கருத்தாய் நினைந்து 
 என்னும் கலைப் பதிகம் 
தூண்டா விளக்கு அன்ன சோதி 
 முன் நின்று துதித்து உருகி 
ஈண்டு மணிக் கோயில் சூழ 
 வலம் செய்து இறைஞ்சி அன்பு 
பூண்ட மனத்தொடு நீள் 
 திருவாயில் புறத்து அணைந்தார்.  12.027.223 

மாட வீதி அலங்கரித்து மறையோர் 
 வாயின் மணி விளக்கு 
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து 
 நிறை பொன் குடம் எடுத்துப் 
பீடு பெருகும் வாகீசர் 
 பிள்ளையாரும் தொண்டர்களும் 
கூட மகிழ்ந்து விண் இழிந்த 
 கோயில் வாயில் சென்று அணைந்தார்.  12.027.251 

முருகலர் சோலை மூதூர் 
 அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் என்ன
 எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் 
 புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போல் ஓர் 
 பெண்கொடி அரிதில் பெற்றான்.  12.030.37 

புகழ்ந்த கோமயத்து நீரால் 
 பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் 
 சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்த அக் கதலி நீண்ட 
 குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் 
 பெற மரபின் வைத்தார்  12.31.39

எழுந்த பொழுது பகல் பொழுது 
 அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியினிடை அப்பால் செல்லில் 
 செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு 
 நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை 
 ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்.  12.033.9 

கையில் விளங்கும் கனல் உடையார் 
 தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் 
 ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு 
 உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப் 
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் 
 பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.  12.033.10  

அருகர் மதியாது உரைத்த உரை 
 ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து 
 போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை 
 முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ 
 ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்.  12.033.11  

வந்த கவலை மாற்றும் இனி 
 மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் 
 முகந்து கொடுவந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் 
 அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி 
 அடிகள் செய்வது அறிந்திலரால்.  12.033.12  

சென்னி மிசை நீர் தரித்த பிரான் 
 அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு நாதர் 
 நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி 
 அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் 
 திரி மேல் நீர் வார்த்தார்.  12.033.13  

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் 
 சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரநெறியார் கோயில் 
 அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் 
 எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு 
 நீரால் எரித்தார் நாடு அறிய.  12.033.14  

நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் 
 அளவும் நின்று எரியக்
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள 
 வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் 
 மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே 
 அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார்.  12.033.15 

வந்து வணங்கி அரநெறியார் மகிழும் 
 கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழுந்து 
 புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் 
 முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு 
 எங்கும் ஏற்றி அடி பணிவார்.  12.033.17 

மா மறை விழுக்குல 
 மடந்தையர்கள் தம்மில்
தாம் உறு மகிழ்ச்சியொடு 
 சாயல் மயில் என்னத்
தூ மணி விளக்கொடு 
 சுடர்க் குழைகள் மின்னக்
காமர் திரு மாளிகை 
 கவின் பொலிவு செய்வார்.  12.034.36 

மங்கல தூர் இயந்து வைப்பார் மறைச் 
 சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண 
 கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த 
 அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்கு திரு மலி வீதிச் சண்பை 
 நகர் வலம் செய்து சாரும் காலை.  12.034.97

உடைய பிள்ளையார் வரும் 
 எல்லை உள்ள அப்பதியோர் 
புடை இரண்டினும் கொடியொடு 
 பூந்துகில் விதானம் 
நடை செய் காவணம் தோரணம் 
 பூகம் நல் கதலி 
மிடையும் மாலைகள் நிறை 
 குடம் விளக்கொடு நிரைத்தார்.  12.034.234  

மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் 
 மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில் 
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் 
 உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த 
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று 
 ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த 
முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்துப் புக்கார் 
 முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்.  12.034.262 

மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம் 
 நாட்டும் மணி நீர் வாசத் 
தூ நறும் பூரண கும்பம் சோதி 
 மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் 
ஏனை அணி பிறவும் எலாம் எழில் 
 பெருக இயற்றும் என ஏவித் தானும் 
வானவர் நாயகர் மகனார் வருமுன்பு 
 தொழுது அணைந்தான் மழவர் கோமான்.  12.034.314

மாலை சூழ் புறம் கடைகளின் 
 மணி நிரை விளக்கின் 
கோல நீள் சுடர் 
 ஒளியுடன் கோத்திடை தூக்கும் 
நீல மா மணி நிழல் 
 பொர நிறம்புகர் படுக்கும் 
பால வாயின பவள 
 வேதிகை மலர்ப் பந்தர்.  12.034.504   

மலர் மாரி பொழிந்து இழிய 
 மங்கல வாழ்த்து இனிது இசைப்ப 
அலர் வாசப் புனல் குடங்கள் 
 அணி விளக்குத் தூபமுடன் 
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து 
 அடியார் எதிர் கொள்ளக் 
கலை மாலை மதிச் சடையார் 
 இடம் பலவும் கை தொழுவார்.  12.034.621 

பானல் வயல் தமிழ் நாடு 
 பழி நாடும்படி பரந்த 
மானம் இலா அமண் என்னும் 
 வல் இருள் போய் மாய்வதனுக்கு 
ஆன பெருகு ஒளிப்பரப்பால் அண்டம் 
 எலாம் கொண்டதொரு 
ஞான மணி விளக்கு எழுந்து 
 வருவது என நலம் படைப்ப.  12.034.652 

நறவம் ஆர் பொழில் புகலியில் 
 நண்ணிய திருஞான சம்பந்தர் 
விறலியாருடன் நீலகண்டப் பெரும் 
 பாணர்க்கு மிக நல்கி 
உறையுளாம் அவர் மாளிகை செல 
 விடுத்து உள் அணைதரும் போதில் 
அறலின் நேர் குழலார் மணி விளக்கு 
 எடுத்து எதிர்கொள அணைவுற்றார்.  12.034.957 

தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்த 
 திருவோத்தூரில் திருத் தொண்டர் 
தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம் 
 அங்கு அணையக் களி சிறந்து 
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு 
 நிரைத்து நிறை குடமும் 
பூவும் பொரியும் சுண்ணமும் முன் 
 கொண்டு போற்றி எதிர் கொண்டார்.  12.034.974 

கொடி நிரைத்த வீதியில் 
 கோலவே திகைப்புறம் 
கடி கொள் மாலை மொய்த்த 
 பந்தர் கந்த நீர்த் தசும்புடன் 
மடிவில் பொன் விளக்கு எடுத்து 
 மாதர் மைந்தர் மல்குவார் 
படி விளக்கும் அன்பரும் 
 பரந்த பண்பில் ஈண்டுவார்.  12.034.987 

ஒப்பரிய பேர் உவகை 
 ஓங்கி எழும் உள்ளத்தால் 
அப்பு நிறை குடம் விளக்கு 
 மறுகு எல்லாம் அணி பெருக்கிச் 
செப்பரிய ஆர்வம் மிகு 
 பெரும் சுற்றத்தொடும் சென்றே 
எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது 
 அங்கு எதிர் கொண்டார்.  12.034.1164

செல்வம் மலி திருப்புகலி செழும் 
 திரு வீதிகள் எல்லாம் 
மல்கு நிறை குடம் விளக்கு 
 மகர தோரணம் நிரைத்தே 
எல்லையிலா ஒளி முத்து 
 மாலைகள் எங்கணும் நாற்றி 
அல்கு பெரும் திரு ஓங்க 
 அணி சிறக்க அலங்கரித்தார்.  12.034.1170

மன்றல் வினைத் திரு முளை நாள் 
 தொடங்கி வரும் நாள் எல்லாம் 
முன்றில் தொறும் வீதி தொறும் 
 முக நெடுவாயிகள் தோறும் 
நின்று ஒளிரும் மணி 
 விளக்கு நிறைவாசப் பொற்குடங்கள் 
துன்று சுடர்த் தாமங்கள் 
 தூபங்கள் துதைவித்தார்.  12.034.1175

செம் பொனின் பரிகலத்தினில் 
 செந்நெல் வெண்பரப்பின் 
வம்பு அணிந்த நீள் மாலை 
 சூழ் மருங்குற அமைத்த 
அம் பொன் வாச நீர்ப் பொற் 
 குடம் அரசு இலை தருப்பை 
பம்பு நீள்சுடர் மணி விளக்கு 
 ஒளிர் தரும் பரப்பில்.  12.034.1185

மறைக்குல மனையின் வாழ்க்கை 
 மங்கல மகளிர் எல்லாம் 
நிரைத்த நீர்ப் பொற் குடங்கள் 
 நிரை மணி விளக்குத் தூபம் 
நறைக் குல மலர் சூழ் மாலை 
 நறுஞ் சுடர் முளைப் பொற் பாண்டில் 
உறைப் பொலி கலவை ஏந்தி 
 உடன் எதிர் ஏற்று நின்றார்.  12.034.1227 

ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு 
 அருளிக் கருணை யினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி 
 வானில் நிறை மதியம்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று 
 திகழ் சங்கிலி யாராம்
தூண்டு சோதி விளக்கு அனையார் 
 தம்பால் கனவில் தோன்றினார்.  12.035.237 

பின்னும் பின்னல் முடியார் முன் 
 பெருக நாணித் தொழுது உரைப்பார்
மன்னும் திருவா ரூரின் கண் 
 அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும் 
 எம் பிராட்டி திருமுலை தோய்
மின்னும் புரிநூல் அணி மார்பீர் 
 என்றார் குன்றா விளக்கு அனையார்.  12.035.242

இவ்வகை இவர் வந்து எய்த 
 எய்திய விருப் பினோடும்
மை வளர் நெடுங் கணாரும் 
 மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்காரத்துச் சிறப்பு 
 அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை 
 குடம் நிரைத்துப் பின்னும்.  12.035.378

தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் 
 தம் கழல் விளக்கி
ஆய புனிதப் புனல் தங்கள் 
 தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி 
 விரை மென்மலர்ச் சாந்தம்
ஏயும் தூப தீபங்கள் முதல் 
 பூசனை செய்து இறைஞ்சுவார்.  12.042.71   

அங்கண் அருள் பெற்று எழுவாரைக் 
 கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திருமாளிகையில் 
 நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கு நிறை குடமும் 
 பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த 
 அணைந்து தாமும் எதிர் கொண்டார்.  12.043.70

தாண்டு புரவிச் சேரர் குலப் 
 பெருமாள் தமக்குத் திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார் 
 அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு 
 விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு 
 எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்.  12.043.72 

பரவியே பரவையார் பரிவு 
 உடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகங்கறிகள் விதம் 
 பலவாகச் சமைத்துப்
பரிகலமும் பாவாடை பகல் 
 விளக்கும் உடன் அமைத்துத்
திரு அமுது செய்வித்தார் 
 திருந்திய தேன் மொழியினார்.  12.043.124

நல்ல நந்தவனப் பணி செய்பவர் 
 நறுந்துணர் மலர் கொய்வோர்
பல் மலர்த் தொடை புனைபவர் கொணர் 
 திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்
அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத் 
 திரு மெழுக்கு அமைப்போர்கள் 
எல்லையில் விளக்கு எரிப்பவர் 
 திரு முறை எழுதுவோர் வாசிப்போர்.  12.044.3 

அளவில் பெரும் புகழ் நகரம் 
 அதனில் அணிமணி விளக்கும்
இள வெயிலின் சுடர்படலை 
 இரவு ஒழிய எறிப்பனவாய்க்
கிளர் ஒளி சேர் நெடு வானப் 
 பேர்யாற்றுக் கொடு கெழுவும்
வளர் ஒளி மாளிகை நிரைகள் 
 மருங்கு உடைய மறுகு எல்லாம்.  12.047.2

எல்லையில் பல் கோடி 
 தனத்து இறைவராய் இப்படித்தாம்
செல்வ நெறிப் பயன் 
 அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த
கொல்லை மழவிடையார் தம் 
 கோயிலின் உள்ளும் புறம்பும்
அல்லும் நெடும் பகலும் இடும் 
 திருவிளக்கின் அணி விளைத்தார்.  12.051.7  

எண்ணில் திரு விளக்கு நெடு 
 நாள் எல்லாம் எரித்து வரப்
புண்ணிய மெய்த் தொண்டர் 
 செயல் புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் 
 வினைச் செயல் ஓவி
மண்ணில் அவர் இருவினை 
 போல் மாண்டது மாட்சிமைத்தாக.  12.051.8  

திருமலி செல்வத்துழனி தேய்ந்து 
 அழிந்த பின்னையுந்தம்
பெருமை நிலைத் திருப் 
 பணியில் பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர் பால் 
 எண்ணெய் மாறிக் கொணர்ந்து
தரும் இயல்பில் கூலியினால் 
 தமது திருப்பணி செய்வார்.  12.051.9  

வளம் உடையார் பால் எண்ணெய் 
 கொடுபோய் மாறிக் கூலி
கொள முயலும் செய்கையும் மற்று 
 அவர் கொடாமையின் மாறத்
தளருமனம் உடையவர் தாம் 
 சக்கர எந்திரம் புரியும்
களனில் வரும் பணி 
 செய்து பெறுங்கூலி காதலித்தார்.  12.051.10  

செக்கு நிறை எள் ஆட்டிப் 
 பதம் அறிந்து தில தயிலம்
பக்கம் எழ மிக உழந்தும் 
 பாண்டில் வரும் எருது உய்த்தும்
தக்க தொழில் பெறும் கூலி 
 தாம் கொண்டு தாழாமை
மிக்க திரு விளக்கு 
 இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்.  12.051.11 

மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் 
 கொண்டு வள நகரில்
தனம் அளிப்பார் தமை எங்கும் 
 கிடையாமல் தளர்வு எய்திச் 
சின விடையார் திருக் கோயில் 
 திரு விளக்குப் பணிமுட்டக்
கன வினும் முன்பு 
 அறியாதார் கையறவால் எய்தினார்.  12.051.13  

பணி கொள்ளும் படம் 
 பக்க நாயகர்தம் கோயிலினுள்
அணி கொள்ளும் திருவிளக்குப் 
 பணிமாறும் அமையத்தில்
மணி வண்ணச் சுடர் விளக்கு 
 மாளில் யான் மாள்வன் எனத்
துணிவுள்ளங் கொள நினைந்து அவ் 
 வினை முடிக்கத் தொடங்குவார்.  12.051.14  

திரு விளக்குத் திரி இட்டு அங்கு 
 அகல் பரப்பிச் செயல் நிரம்ப
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா 
 உடல் உதிரம் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறு அரிய 
 அக்கையைக் கண் நுதலார்
பெருகு திருக் கருணையுடன் 
 நேர்வந்து பிடித்தருளி.  12.051.15 

தேவர் பிரான் திருவிளக்குச் செயல் 
 முட்ட மிடறு அரிந்து
மேவரிய வினை முடித்தார் கழல் 
 வணங்கி வியன் உலகில்
யாவர் எனாது அரன் அடியார் 
 தமை இகழ்ந்து பேசினரை
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் 
 நலம் உரைப்பாம்.  12.051.17 

தாவாத பெருஞ் செல்வம் தலை 
 நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் 
 கோயிலுள் எரித்து
நாவாரப் பரவுவார் நல்குரவு 
 வந்து எய்தத்
தேவதி தேவர்பிரான் திருத்தில்லை 
 சென்று அடைந்தார்.  12.054.3  

தில்லை நகர் மணி 
 மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி 
 அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப் புலீச் சரத்தின் 
 கண் விளக்கு எரிக்க
இல்லிடை உள்ளன மாறி 
 எரித்துவரும் அந்நாளில்.  12.054.4  

ஆய செயல் மாண்டதற்பின் அயல் 
 அவர் பால் இரப்பஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம் 
 புல்லுக் கொடு வந்து
மேய விலைக்குக் கொடுத்து 
 விலைப் பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கு எரித்தார் 
 துளக்கறு மெய்த் தொண்டனார்.  12.054.5  

இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து 
 வர அங்கு ஒரு நாள்
மெய் வருந்தி அரிந்து 
 எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலை போகாது 
 ஒழியவும் இப்பணி ஒழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி அணி 
 விளக்காயிட எரிப்பார்.  12.054.6  

முன்பு திருவிளக்கு எரிக்கும் 
 முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு 
 எரிக்கப் போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த 
 விளக்குத் தம் திருமுடியை
என்புருக மடுத்து எரித்தார் 
 இருவினையின் தொடக்கு எரித்தார்.  12.054.7  

தங்கள் பிரான் திரு உள்ளம் 
 செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த 
 பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலமாம் பெரும் கருணை 
 வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர் 
 இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்.  12.054.8  

மூரியார் கலி உலகின் 
 முடி இட்ட திருவிளக்குப்
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் 
 தம் கழல் பேணி
வேரியார் மலர்ச் சோலை 
 விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த 
 திருத்தொண்டு கட்டுரைப்பாம்.  12.054.9 

மறவாமையான் அமைத்த 
 மனக்கோயிலுள் இருத்தி
உறவாதிதனை உணரும் ஒளி 
 விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் 
 திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பென்னும் அமுதமைத்து 
 அர்ச்சனை செய்வார்.  12.057.8

 
 

Related Content

Thiruk kArththikai

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கார்த்திகைப் பெருவிழா