காரைக்கால் அம்மையாரின் கணவர் பரமத்தத்தன் அம்மையாரைப் பிரிந்து கடல் வாணிபம் சென்று பாண்டி நாட்டில் பட்டினத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்த பதியாகச் சேக்கிழார் குறிக்கப்படுகின்ற பதி இந்தக் குலசேகரன் பட்டினம்.
குலசைத் துறைமுகப்பட்டினத்தில் 14 ஆம் நூற்றாண்டில் சிவபெருமானிடத்தில் பேரன்பு கொண்ட செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒவ்வொரு திருவாதிரைத் திருவிழாவிற்கும் கடல் வழியாகச் சிதம்பரம் சென்று தில்லைக் கூத்தனை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒரு மார்கழித் திருவாதிரை நன்னாளுக்குச் சிதம்பரம் செல்ல எண்ணியிருந்த போது இயற்கை சீற்றத்தின் காரணமாக பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அதற்காக மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் இறைஞ்சி தரிசனம் கேட்டுப் பிரார்த்தித்தார். அந்த உண்மையான பக்தருக்கு இறங்கி இறைவன் அவர் கனவில் தோன்றி மறுநாள் காலையில் அவருடைய வணிக வளாகத்தில் இருந்து எறும்புகள் ஊர்ந்து செல்லும் வரிசை முடியும் இடத்தில் காட்சி தருவேன் என்று கூறினார். மறுநாள் கனவில் கூறியபடியே எறும்புகள் ஊர்ந்து வரிசையாகச் சென்றன. அதன் முடிவில் எறும்புகள் ஒரு பொந்துக்குள் சென்றன. அந்த இடத்தைச் செட்டியார் தோண்டிப் பார்த்தபோது அங்கே ஒரு சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. முன்பே பலகாலம் இருந்த அந்த இறைவனின் திருமேனி அன்புள்ளம் கொண்ட அந்த பக்தரின் மூலமாக வெளிப்பட்டது. அந்த சிவலிங்கத் திருமேனியை செட்டியார் அங்கேயே பிரதிஷ்டை செய்து தில்லைப் பெருமான் குலசையிலேயே காட்சி கொடுத்ததால் சிதம்பரேஸ்வரர் என்று பெயரிட்டு சிவகாமி அம்மையுடன் விமானத்துடன் கூடிய தனி சந்நிதி ஏற்படுத்திக் கோயிலை எழுப்பினார்.
Specialities
14 ஆம் நூற்றாண்டில் முதலாவது மாறவர்மன் குலசேகர பாண்டியன் இப்பட்டினத்தை விரிவு படுத்தியதால் இவ்வூர் குலசேகரன் பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.
அதற்கு முன்பு இவ்வூர் இருந்த பகுதி வீர வள நாடு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
மதுரையை 16 ஆம் நூற்றாண்டில் ஆண்ட வீரப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டில் குலசேகரப்பட்டினம் சிறப்பானதொரு துறைமுகப்பட்டினமாக இருந்தது உறுதி செய்யப்படுகிறது.
மேற்கு வாயில் வழியாக நுழையும் போது வலது பக்கத்தில் திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் உள்ளார். தெற்கே மணப்பாடு செல்லும் வழியில் அனுகூலபுரத்தில் கைலாசநாதர் கோயில் இருந்தது. அங்கு இருந்த கோயில் அழிவுற்றதால் மூர்த்தங்களை இங்கே வைத்து வணங்குகிறார்கள். அடியவர்கள் முயற்சியால் கூடிய விரைவில் கைலாசநாதருக்கு அனுகூலபுரத்திலேயே திருக்கோயில் அமையப் பெற வேண்டும்.
பங்குனி உத்திரத்தன்று சுவாமியின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது.
சித்திரை மாத பிறப்பன்று அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
Contact Address
Chidambareshwarar Temple, Kulasekarapattinam, Thuthukudi District, Tamil Nadu.