logo

|

Home >

hindu-hub >

temples

திருப்புன்கூர்

இறைவர் திருப்பெயர்: சிவலோகநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சொக்கநாயகி, சௌந்தர நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : கணபதி தீர்த்தம், தேவேந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இடப தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஏயர்கோன் கலிக்காமர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், இராசேந்திர சோழன் முதலியோர்.

Sthala Puranam

View the temple with thIrththam

புங்கு + ஊர் = புங்கூர் - புன்கூர் என்றாயிற்று.

 

  • இங்குள்ள தீர்த்தம் விநாயகருடைய துணையால் நந்தனார் வெட்டியதாகும்.

 

இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு : தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழையுண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை செய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழைசெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலமளிக்குமாறு மன்னனுக்கு கட்டளையிட்டுவிட்டுப் பாடினார், மழைசெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைமிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்ட, அவரும் மேலும் பன்னிருவேலி, நிலம் கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது.

 

திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க முயன்ற திருநாளைப்போவார் (நந்தனார்), தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார். இறைவன் இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார். இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். நந்தி விலகத் தரிசித்த நாளைப்போவார் கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார். அவர் துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.

 

தேவாரப் பாடல்கள்   : பதிகங்கள்    :   சம்பந்தர்    -    1. முந்தி நின்ற வினைக (1.27);                    அப்பர்      -    1. பிறவாதே தோன்றிய (6.11);                    சுந்தரர்     -    1. அந்த ணாளன் உன் (7.55); பாடல்கள்     :   அப்பர்      -       காவார் சடைமுடியர் (6.17.8),                                        புலங்கள் (6.22.6),                                        புன்கூரார் (6.51.11),                                        கையுலாம் (6.59.3),                                        பொழிலானைப் (6.60.10),                                         புலிவலம் (6.70.11);                    சுந்தரர்     -       மைகொள் கண்டன் (7.12.10);         கபிலதேவ நாயனார்   -       புலர்ந்தால்யான் (11.23.74) சிவபெருமான் திருவந்தாதி;       பட்டினத்துப் பிள்ளையார்  -       நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;           நம்பியாண்டார் நம்பி  -       பொன்னம் பலத்துறை (11.33.54) கோயில் திருப்பண்ணியர் விருத்தம்;                   சேக்கிழார்   -       தேன் ஆர்க்கும் (12.05.115) தடுத்தாட்கொண்ட புராணம்,                                         திருப் புன்கூர்ச் (12.18.16 & 17) திருநாளைப்போவார் நாயனார் புராணம்,                                         நீடு திரு நின்றியூரின் (12.28.287) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                        ஆண்ட அரசு எழுந்து அருளக் (12.21.189)  திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                        இருவரும் எழுந்து (12.29.7,153 & 406) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

தல மரம் : புங்க மரம்

Specialities

 

 

திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம்.

 

ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்.

 

சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம்.

 

திருநாளைப்போவாரின் (நந்தனார்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ. -ல் உள்ளது.

 

உள்சுற்றில் இடப்பால் நந்தனார் திருவுருவம் உள்ளது.

 

இங்குள்ள நந்தி (திருநாளைப்போவாருக்காக வழிவிட்டு) சற்று விலகியுள்ளது.

 

இங்குள்ள சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு - தரிசிக்கத்தக்கது.

 

சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

 

தலப்பதிகங்கள் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

 

நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது; இப்பெருமான் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றதைத் தரிசித்து இன்புறலாம்.

 

சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு கட்டளையிடுவதுபோலக் காட்சித்தருவது கண்டு மகிழத்தக்கது.

 

மூலவர் சுயம்பு மூர்த்தி-மண்புற்று; இதன் மீது சார்த்தப்பட்டிருக்கும் குவளைக்குத்தான் நாடொறும் அபிஷேகம் நடைபெறுகின்றது.

 

மூவர் திருப்பதிகங்கள் பளிங்குக் கற்களில் பதிக்கப்பட்டுள்ளன.

 

தேரடியில் நின்று தரிசித்த நந்தனாருக்கு, அத்தேரடியைப் புதுபித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளன.

 

கல்வெட்டில் இவ்விறைவன், 'சிவலோகமுடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.

 

இத்தலத்துக் கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும், திருப்பள்ளியெழுச்சிக்கும், பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம்விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.

 

இத்தலத்திற்கு பக்கத்தில் ஏயர்கோனின் அவதாரத் தலமாகிய 'பெருமங்கலம் ' உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவு உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும். தொடர்புக்கு :-94867 17634.

Related Content