logo

|

Home >

hindu-hub >

temples

திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: அரசிலிநாதர், ஆலாலசுந்தரர், அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி, அழகியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : அரசடித் தீர்த்தக்குளம்.

வழிபட்டோர்:வாமதேவர், சம்பந்தர் - பாடல் வண்டறை, சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

aracili temple

  • வாமதேவர் எனும் முனிவர் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவபெருமான் அவர் முன் காட்சி தந்தார்.  அரச மரத்தை இறைவன் வீடாக (இல்லாக) கொண்டமையால் இப்பெயர் (அரசிலி) பெற்றது.
  • வாமதேவ முனிவர் வழிபட்டுப் பிரதோஷ நாளில் பேறு பெற்றார்.
  • சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவபெருமான் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. எனவே, ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொரு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். இதற்காகப் பணியாள் ஒருவர் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியைச் செய்து வந்தார். ஒருசமயம் பணியாள், நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தைக் கூறினான். மன்னரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக்கண்ட மன்னன் கோபத்துடன், மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிடவே, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது, அங்கு மான் இல்லை. அதற்கு பதில் சிவலிங்கம் (பல்லாண்டுகளுக்கு முன் மறைந்தது) இருந்தது. அதன் தலையில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவபெருமானை வேண்டினான். சிவபெருமான் மன்னனுக்கு காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார்.
    அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். சாளுவ மன்னனும் பிரதோஷ விரதமிருந்து பேறு பெற்றுள்ளான். ஆதலின் இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். 
  • சிரவையாதீனம் கெளமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் இத்தலத்திற்குப் பாடல்களைப் பாடியுள்ளார்.

 

தேவாரப் பாடல்கள் பதிகங்கள்  : சம்பந்தர்    - 1. பாடல் வண்டறை (2.95)   பாடல்கள்   : சேக்கிழார்  - ஏறணிந்த வெல் கொடியார் (12.28.1134 & 1135) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

art in painting
  • சாளுவ வம்ச மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது.
  • மூலவர் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. சிவலிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
  • கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். பொதுவாக வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி, கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இது வித்தியாசமான அமைப்பாகும். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். ஒரே இடத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தை கீழேயும், மேலே தாண்டவ கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
  • இக்கோயிலில் - வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்கு பெருவிழா நடைபெறுகிறது.
  • இவ்வூரில் வாழ்ந்த அறச்செல்வியார் திருமதி. ஜயலட்சுமி அம்மையார் அவர்கள் கட்டிய திருஞானசம்பந்தர் திருமடம் கோயிலுக்கு அருகில் உள்ளது.
  • இத்திருக்கோயிலில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் விக்கிரம சோழதேவர், குலோத்துங்க சோழதேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப்பெற்றுள்ளனர். விக்கிரம சோழதேவரின் ஆறாவது ஆண்டுக் காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாடான விஜய இராஜேந்திர சோழவளநாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி என்றும், பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் ஓய்மாநாட்டுத் திருவரசிலி என்றும், பதினாறாவது ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாடான விஜய இராஜேந்திர சோழவளநாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் திருவரசிலி என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. ஒரே கல்வெட்டுடைய குலோத்துங்கனது ஐந்தாவது ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஓய்மா நாடான விஜய இராஜேந்திர சோழவளநாட்டுத் தனியூர் தேவதானம் திருவரசிலி எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.
  • திருவிரும்பை உடையார் திருமாகாளமுடைய நாயனார் கோயிலில் உள்ள கோமாறபன்மரான திரிபுவன சக்கிரவர்த்தி ஸ்ரீ விக்கிரமபாண்டிய தேவரின் இரண்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டில், இவ்வூர் (அரசிலி) ``ஜயங்கொண்ட சோழமண்டலத்து மாத்தூர்நாட்டு ஒழுகறையான குலோத்துங்க சோழ நல்லூர் திருஅரசிலி உடையார் ஆலால சுந்தரனார் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. ஒழுகறை என்னும் பெயரே பிற்காலத்தில் ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கலாயிற்று என்பர்.
  • பெருங்கொடை வள்ளலும், பத்துப் பாட்டினுள் மூன்றாவதாகிய சிறுபாணாற்றுப் படைத்தலைவனுமாகிய நல்லியக் கோடன்; ஓய்மாநாட்டினன் ஆவன். அரசிலி ஓய்மாநாட்டைச் சேர்ந்தது` அது தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் இருக்கின்ற தால் அப்பிரதேசம் ஓய்மாநாடாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வழி பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி - கிளியனூர்)சாலையில் ஒழுந்தியாப்பட்டு அருகில் 2-கி. மீ.ல் உள்ளது. தொடர்பு : 04147-235472

Related Content

திருநாவலூர் தலவரலாறு

திருநெல்வெண்ணெய் (நெய்வெணை) தலவரலாறு

திருஅறையணிநல்லூர் தலவரலாறு

இடையாறு தலவரலாறு

திருவெண்ணெய்நல்லூர் தலவரலாறு