logo

|

Home >

hindu-hub >

temples

திருவெண்காடு

இறைவர் திருப்பெயர்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.

இறைவியார் திருப்பெயர்: பிரமவித்யாநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில் அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்றமுறையில் நீராடுவர்.)

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளையானை, சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர் முதலியோர்.

Sthala Puranam

view the rAjagOpuramfront appearance of the templeholy pond of the temple; called chandra thIrththamview the templeview the vimAnA of natarAjarholy pond of the templeholy pond of the temple; called sUriya thIrththam

 

இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.

 

  • தேவேந்திரன், ஐராவதம்  என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன்  ஆகியோர் பூஜித்துள்ளனர். 
  • உத்தாலக முனிவரின்  எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின்  உயிரைப் பறிக்கவேண்டி யமன் பாசக் கயிற்றை வீசியபோது  சுவாமி வெளிப்பட்டுக்  கால- சம்ஹாரம் செய்ததாக  ஸ்தலபுராணம் சொல்கிறது.

 

சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம்  செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய வரதமாகக் அருட்காட்சி வழங்குகிறாள் அம்பிகை.

பிரம்மா சமாதி இங்குள்ளது. இவ்வூர் சங்கல்பத்தில் "ப்ரஹ்ம ஸ்மாஷனே" என்று சொல்லப்படுகிறது 

இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்தை இங்கு திருவெண்காடரை வழிபட்டு நீக்கிக்கொண்டான்  இங்கு நடைபெறும் மஹோத்சவம் இந்திர மஹோத்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திரனே வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம் .

ஐராவதம்
இந்திரன் ஐராவதம் என்னும் தன் வெள்ளை யானையின் மேல் பவனி வந்தபோது துருவாச முனிவர் தந்த மாலையை மதியாது வாங்கி, யானையின் மத்தகத்தின் மேல் வைக்க, யானையோ அம்மாலையைக் காலிலிட்டு மிதித்தது. துருவாசர் சினந்து யானையைக் காட்டானை ஆகுமாறு சபித்தார். பின்னர் யானை தவறுக்கு வருந்தி, முனிவரைப் பணிந்து சாபவிமோசனம் வேண்டியது. முனிவர், திருவெண்காட்டீசரைச் சென்று தொழச் சாபம் நீங்குமென்றார். அதன்படி ஐராவதம் திருவெண்காட்டில் சில காலம் காட்டானையாகத் திரிந்தது. பின்னர் திருவெண்காட்டில் ஈசான திசையில் தன் பெயரில் ஒரு தடாகம் அமைத்துச் சிவலிங்கம் ஸ்தாபித்து, வழிபாடியற்றி ஈசன் அருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் சேர்ந்தது. யானை அமைத்த தடாகம் இன்றும் யானை மடு என்று வழங்குகிறது. யானை வெண்காட்டில் தவமியற்றியதைத் திருஞானசம்பந்தர், "வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான்" என்றும், யானை வழிபட்டதை "பெரிய உருவத்தானை வணங்கும் வெண்காடே" என்றும், 'இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்' என்றும், யானை அருள் பெற்றதை, 'அடைந்த ஐராவதம்  பணியமிக்க தனக்கருள் சுரக்கும் வெண்காடு" என்றும் பாடுகிறார். திருநாவுக்கரசர் "வெள்ளானை வேண்டும் வரங்கொடுப்பர்” என்று பாடுகிறார்.
 

சிவப்பிரியர்
முற்கல முனிவரின் குமாரரான சிவப்பிரியர் திருவெண்காட்டிற்கு வந்து ஈசனை வழிபாடு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தாமரை மலர்களைக் கொய்து வரும்போது ஐராவதமெனும் யானையால் தாக்கப்பட்டார். அவர் நெஞ்சினுள் அஞ்செழுத்து அழுந்தியிருந்ததால் யானையின் கொம்புகள் அவரைக் குத்தாது யானையின் முகத்தில் அழுந்தி வயிற்றினுட் சென்றது. யானை நல்லுணர்வு பெற்றுச் சிவப்பிரியரிடம் மன்னிப்பு வேண்ட சிவப்பிரியர் அதனை மன்னித் தருளினார். பின்னர்  வைகாசி மாதத்து அமாவாசையில் சிவப்பிரியர் சிவஜோதியில் கலந்தார்.
கந்தப்புராணத் திருவிளையாட்டுப் படலம்
'காழற்று தந்தம் அறஏகி வெண்காட்டில் ஈசன்
கேழற்ற தாளர்ச்சனை செய்துகிடைத்து வைகும்வேழம்" என்றும்,
திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப் படலம்
"கோடு நான்குடைய வேழம் தானவன் குறைந்த கோட்டைப்
பாடற நோற்றுப் பெற்ற பதியிது” என்றும் இந்நிகழ்ச்சியைப் பாடுகிறது.
 

வேதராசி
வேதராசி என்ற அந்தணன் ஊருக்குச் செல்லும் போது தான் எடுத்துச் சென்ற கட்டமுதை ஓர் ஆலமர பொந்தில் வைத்தான். அச்சோற்றில் பாம்பொன்று நஞ்சை உகந்தது. அவன் அச்சோற்றினை ஒரு மறையவனுக்கு இட மறையவன் அதனை உண்டு மாண்டான். வேதராசியைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்தது. அவன் திருவெண்காட்டை அடைந்ததும் அது அவனை விட்டு நீங்கியது. வேதராசி வெண்காட்டீசனை வழிபட்டு எமதூதரிடமிருந்து தப்பி இறையடி நீழலை எய்தினான்.
 

சுவேதகேது
உத்தால முனிவரின் புத்திரராகிய சுவேதகேது எட்டு வயதுடன் தம் ஆயுள் முடியுமென்பதை உணர்ந்து திருவெண்காட்டிற்கு வந்து சிவபூசை செய்து கொண்டு இருந்தார், எட்டாம் வயது முடியும் நாளில் எமன் வந்து சுவேதகேதுவின் மேல் பாசத்தை வீச, சிவபூசை தடைப்படுகிறதே என அவர் வருந்த சிவபெருமான் வெளிப்போந்து எமன் வலியை அழித்தருளினார். பின்னர் சுவேத கேது திருவெண்காட்டில் சில காலமிருந்து இறைவனின் ஆடல் கண்டபின் அவன் திருவடியிற் சேர்ந்தார்.  சம்பந்தர் 'வெங்காலன் உயிர் விண்டபினை' என்று இவ்வூர்ப் பதிகத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.
 

சுவேதன்
சுவேதன் என்னும் மன்னர் வாதாபி எனும் தன் மகனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, தன் மனைவி சுலோசனையுடன் வானப்பிரஸ்தாச்சிரமத்தில் இருக்கையில், தன் மனைவியைப் பிரிந்த பின்னர் சாவில்லாத வரந்தரும் திருவெண்காட்டை அடைந்து தவமும் வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் எமன் சுவேதனை அணுகிப் பாசத்தைப் பூட்டினான். சுவேதன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அப்போது திருவெண்காடர் அங்கே தோன்றக் காலன் அஞ்சி ஓடி வீழ்ந்திறந்தான். சிவபெருமான் சுவேதனுக்குச் சிவசொரூபமளித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி எமனையும் எழுப்பியருளினார்.
 

சத்தியநல்விரதன்
சத்திய நல்விரதன் என்பவர் நாகையை ஆண்ட மன்னர். இவன் ஆட்சிக்காலத்தில் சாக்தமத பிராமணர் ஒருவர் பசியோடு வந்த பிராமணருக்குக் கள்ளைக் கொடுத்து விட்டார். கள்ளுண்ட பிராமணரைத் திருவெண்காட்டிற்கு அழைத்து வந்து அவர் செய்த பாவத்தைக் கழுவத் துணை செய்தான் சத்தியநல்விரதன். பின்னர் தன்னரசை மகனிடம் விடுத்து, திருவெண்காட்டி லேயே தங்கி வழிபாடியற்றி இறையருள் பெற்றான்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்    -   1. கண்காட்டு நுதலானுங் (2.48),                                     2. உண்டாய் நஞ்சை (2.61),                                     3. மந்திர மறையவை (3.15);                          அப்பர்       -  1. பண்காட் டிப்படி (5.49),                                     2. தூண்டு சுடர்மேனித் (6.35);                    சுந்தரர்      -  1. படங்கொள் நாகஞ் (7.6); பாடல்கள்    :     அப்பர்      -     சீரார் புனற்கெடில (6.7.9),                                       விட்டிலங்கு (6.17),                                       அம்மை பயக்கும் (6.23.8),                                       வகையெலா முடையாயும் (6.41.1),                                       வெறியார் (6.43.4),                                         வெண்காட்டார் (6.51.4),                                      நெருப்பனைய (6.54.7),                                       புகழொளியைப் (6.68.6),                                       பூதியனைப் (6.69.3),                                       வீழி மிழலை (6.70.7),                                       மலையார் (6.71.6),                                      ஐந்தலைய (6.86.8),                                       தண்காட்டாச் (6.93.9),                                       விரிசடையாய் (6.99.6);              மாணிக்கவாசகர்   -    விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் (8.2.60 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்,                                       வேலன் புகுந்து (8.18.21) வரைபொருட்பிரிதல், திருக்கோவையார்;            கபிலதேவ நாயனார்  -    மிடற்றாழ் (11.22.2 & 24) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை,                                        இன்றியாம் (11.23.36) சிவபெருமான் திருவந்தாதி;            பரணதேவ நாயனார்  -    புகலூர் உடையாய் (11.24.46) சிவபெருமான் திருவந்தாதி;        பட்டினத்துப் பிள்ளையார் -     கரத்தினில் மாலவன் (11.29.30) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,                                        நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;                  சேக்கிழார்     -     சீரினில் திகழ்ந்த (12.28.123,124 & 126) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                       தேவர் பெருமான் (12.29.148) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                        வேத காரணர் (12.36.12,17,38,53 & 78) சிறுத்தொண்ட நாயனார் புராணம். 

      தல மரம் :  வடஆலமரம்

Specialities

 

 "ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீ மாயூரம் மார்ஜுனம்
   சாயாவனம்ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமாநிஷட் "
என்ற வாக்கியத்தால்  காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். இவை, திருவெண்காடு, திருவையாறுமயிலாடுதுறை, திருவிடைமருதூர் , சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு ,திருவாஞ்சியம்  என்பன ஆகும்

வால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவேதாரண்ய க்ஷேத்திரத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷணாதிகளை இராமன் சம்ஹாரம் செய்தான் என்று வான்மிகி குறிப்பிட்டுள்ளார் இத்தலத்தின் தொன்மைக்கு இது சான்றாக உள்ளது. சபபாத கரோ பூமன் தஹ்மயமான சராக்னி நருத்ரேநேவ வினிர்தக்த சுவேதாரண்யே யதாந்தகஹா (ஆரண்ய காண்டம்) 

அச்சுத களப்பாளர் மூலமாக மெய்கண்டார் அவதாரத்தை நாட்டுக்களித்து நலம் செய்த முக்குளநீர் உள்ள பதி.

 

திருவெண்காடு மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள் (முறையே சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வடஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

 

இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு.

 

"சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.

 

திருவெண்காடு புதன் கிரகம் உரியவர்கள் வழிபடவேண்டிய சிறப்புத் தலமாகும். புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது.

 

இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

 

அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடகளமைந்துள்ளன; காணத்தெவிட்டாத கலையழகு.

 

நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சிதம்பர இரகசியமும் உள்ளது. ஆதி சிதம்பரம் என்று இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்) நடராஜ மூர்த்தி இங்கு  ஆடினாராம். சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும்  பலன்களை அளிக்கிறார்.இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகிறது. பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது. இடுப்பில் அணிந்துள்ள  81 வளையங்கள்   உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான  81 பத மந்திரங்களை உணர்த்தும். 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள்  முடிந்திருப்பதைக்  காட்டுகிறது.கூர்ம- வராக அவதாரங்களை அடக்கி அவற்றின் அடையாளமாக ஆமையின் ஓட்டையும், பன்றிக் கொம்பையும் மார்பில் அணிந்திருக்கிறார். ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன.  ஒன்றுமட்டும் கட்டப்பட்டுள்ளது.   திரு முடியில் மயில் பீலியும், கங்கையும்,இளம் பிறைச் சந்திரனும்,  ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும்  இருக்கின்றன.  நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது. சிதம்பரத்தைப் போலவே, ரஹஸ்யமும், ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறுகின்றன.

 

துர்க்கை இங்கு மேற்கு நோக்கியிருப்பது விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.

 

மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன.

 

நாடொறும் ஆறுகால வழிபாடுகள்; சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும், அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுன்றன.

பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது.

திருவெண்காடு திருவிழாக்கள்
சித்திரை     திருவோணத்தில் நடராசர் அபிடேகம்
வைகாசி    அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.
ஆனி        உத்திரத்தில் நடராசர் அபிடேகம்.
ஆடி        பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூசை செய்வித்தல் இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல், அம்பாளுக்கு ஆடிப்பூர-பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.
ஆவணி     வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிடேகம். கோகுலாட்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.
புரட்டாசி     வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிடேகம். நிறைபணி, தேவேந்திரபூசை, நவராத்திரி விழா, விசயதசமியன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.
ஐப்பசி    அசுபதியில் அன்னாபிடேகம். வளர்பிறை பிரதமை தொடங்கி கந்த சஷ்டி விழா.
கார்த்திகை    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிடேகமும் பூசையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிடேகமும் விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமாவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிடேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீபவிழாக்கள்.
மார்கழி    தனுர்மாத பூசை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.
தை        சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல். சுவாமி குதிரை வாகனத்தில் பாரி வேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பத்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.
மாசி        இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.
2 ஆம் திருவிழா,
3ஆம் திருவிழா, சுவேதகேதுவைப் பிடித்த எமனை எரித்தல். பூத வாகனம், மொட்டைச் சகோபுரம்.
4ஆம் திருவிழா. மகம், பௌர்ணமி திதியில் சுவாமி காவிரி சங்கமத்துறைக்கு எழுந்தருளல்,
5.ஆம் திருவிழா, பூர நட்சத்திரம். அகோர மூர்த்தி எழுந்தருளல். இரவு மருத்துவாசுர சங்காரம், இடப வாகனக்காட்சி, தெருவடைச்சான் சகோபுரம்.
6ஆம் திருவிழா. யானை வாகனம்.
7ஆம் திருவிழா. திருக்கல்யாணம், பூப்பல்லக்கு.
8ஆம் திருவிழா. பிட்சாடனர் விழா அறுபத்து மூவர் வீதி உலா.
9ஆம் திருவிழா-திருத்தேர்.
10ஆம் திருவிழா. காலை நடராசர் வீதி உலா. முக்குளத்தீர்த்தம் கொடுத்தல் மாலை பஞ்ச மூர்த்திகள் இடப வாகனத்தில் மணிகர்ணிகைக்கு எழுந்தருளித் தீர்த்தம் கொடுத்தல்.
11ஆம் திருவிழா. தெப்பத் திருவிழா.
பங்குனி    சுக்லபட்சப் பிரதமையில் அகோர மூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம். பங்குனி உத்திரத்தில் (பௌர்ணமியில் பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

நவக்ரகங்களுள் ஒருவரும், வித்யாகாரகன்,மாதூலகாரகன், என்றெல்லாம் வழங்கப்படும் புதனுக்குத்  தனி சன்னதி, 

ஆல வ்ருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ருக் கடன் செய்ய உத்தமமான இடம்.

வில்வ வ்ருக்ஷத்தின் அடியில் பிரம்ம சமாதி உள்ளது. 

சம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை.

அருகிலுள்ள கிராமங்களில் தொற்று நோய் பரவும் போது , யாராவது ஒருவர் மேல் அகோரமூர்த்தி  ஆவேசமாக வந்து, விபூதி கொடுத்தவுடன்  அந்நோய் மறைந்துவிடும்.

சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவரது தோழி சந்தன நங்கையும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். 

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது.   திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானமாக விளங்கிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது. 

இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.சோழ அரசர்களோடு,அரசியர்களும் இக்கோயிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.தெய்வத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டதோடு விளக்கெரிக்கவும், திருவிழாக்கள் நடைபெறவும், நந்தவனம் அமைக்கவும் ,இசைக்கருவிகள் வாசிப்போருக்கும், வேதம் ஒதுவோருக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டன. கோயில் நிலங்களை வைத்திருந்தோர் மூவர் , சிவத்ரோகிகளாக மாறியதால், அந்நிலங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

திருவெண்காடு கல்வெட்டுச் செய்திகள்
இத்திருக்கோயிலில் தமிழிலும் கிரந்தத்திலும் 95 கல்வெட்டுக்கள் உள்ளன .
இராசராசன் 1, இராசேந்திரன் 1, வீரராசேந்திரன் 2, குலோத்துங்கன், விக்கிரம சோழன் 1, குலசேகரபாண்டியன். கௌமாரபாண்டியன், விக்ரமபாண்டியன், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன், பராக்கிரம பாண்டியன், ஸ்ரீவல்லப் தேவன், விருப்பண்ண உடையார், கிருஷ்ணதேவராயர், துக்கோஜி முதலியவர்கள் காலத்திய கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு முடிய கல்வெட்டுக்கள் இங்கு
உள்ளன. கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயிலுக்கு பல்வேறு நிவந்தங்களைப் பற்றியே உள்ளன. 
இக்கல்வெட்டுக்களால் மேற்குறித்த பல அரசர்களின் பெயர்களோடு அரசியரின் பெயர்களும், தெரிய வருகின்றன. இராசராச நம்பிராட்டியார், கூத்தன்வீர நாராயணியார், பராந்தகன் மாதேவியார், செம்பியன் மாதேவியார், திரைலோக்கியம் உடையார், வானவன் மாதேவியார், நக்கன் உலோகமாதேவியார், பஞ்சவன் மாதேவியார், வில்லன் மாதேவியார் ஆகிய அரசியரும் நிவந்தங்கள் அளித்து உள்ளனர்.
இக்கல்வெட்டுக்களால் அறியும் செய்திகளாவன:
தேவர்கள் நாயகப் பெருமான் (உற்சவர்) இடபவாகன தேவர் நம்பிராட்டியார், பிச்சதேவர், ஆடவல்லார், அர்த்தநாரிதேவர் ஆகியோரின் திருவுருவங்கள் செய்து வைக்கப்பெற்றன.
கோசாலை (பசுமடம்) ஆதுலர்சாலை (ஏழைகள் உணவு விடுதி) மடம், நந்தவனம் ஆகியவை கோயிலைக் சார்ந்து இருந்தன.
வளத்து வாழவிட்டான் சந்தி, குலசேகரத் தொண்டமான் சந்தி, கலியுகராமன் சந்தி, அடைய வளைந்தான் சந்தி, நாகரசன் சந்தி, மானங்காத்தான் சந்தி ஆகியன நடைபெறக் கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டன.
மாத ஆயில்யவிழா, ஐப்பசி சதயவிழா, மார்கழி திருவிழா ஆகியன நடைபெற்றன. விழாக்களில் எழுந்தருளும் மூர்த்திகளுக்குத் திருமுழுக்கு, பெருந்திருவமுது முதலியன நடைபெற்றன.
விக்ரமசோழன், திருவீதியில் மடம் கட்டினான் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு “விக்ரமசோழன் மண்டபத்தில்" அமர்ந்திருந்தான். சுவேதாரண்யர் சந்நிதியில் உள்ளது விக்ரமசோழன் மண்டபம்.
இடபவாகனதேவர், நாயன்மார் முதலிய  மூர்த்திகளைச் சங்கமத்துறைக்கு எழுந்தருளச் செய்து திருமஞ்சனமாட்டினர்.விழாவிற்கு வரும் அபூர்விகட்கு உணவளிக்க பட்டது. வேதம் ஓதுபவர்களுக்கு நிலதானம் செய்யப்பட்டது. சிவத்துரோகம் செய்தவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Contact Address

அமைவிடம் : இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன. தொடர்புக்கு :- 04364 256 424.

Related Content

திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்) தலவரலாறு

திருவெண்ணெய்நல்லூர் தலவரலாறு