|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
45 கலிய நாயனார் புராணம்
1. பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு 4022-1
நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும் 4022-2
காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து 4022-3
தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர் 4022-4
2. பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் 4023-1
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும் 4023-2
ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின் 4023-3
காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் 4023-4
3. பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள் 4024-1
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு 4024-2
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி 4024-3
செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 4024-4
4. கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும் 4025-1
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை 4025-2
முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் 4025-3
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு 4025-4
5. எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும் 4026-1
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள் 4026-2
வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும் 4026-3
தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 4026-4
6. அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார் 4027-1
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் 4027-2
தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் 4027-3
முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார் 4027-4
7. எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம் 4028-1
செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த 4028-2
கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும் 4028-3
அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார் 4028-4
8. எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப் 4029-1
புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே 4029-2
உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி 4029-3
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக 4029-4
9. திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம் 4030-1
பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர் 4030-2
வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து 4030-3
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் 4030-4
10. வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி 4031-1
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத் 4031-2
தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் 4031-3
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் 4031-4
11. செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம் 4032-1
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் 4032-2
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை 4032-3
மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 4032-4
12. அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய் 4033-1
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே 4033-2
ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின் 4033-3
செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் 4033-4
13. மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில் 4034-1
தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி 4034-2
சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக் 4034-3
கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார் 4034-4
14. பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள் 4035-1
அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில் 4035-2
மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத் 4035-3
துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார் 4035-4
15. திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப 4036-1
ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக் 4036-2
கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார் 4036-3
பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி 4036-4
16. மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள 4037-1
உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் 4037-2
பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம் 4037-3
பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார் 4037-4
17. தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து 4038-1
மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் 4038-2
யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை 4038-3
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் 4038-4
This webpage was last updated on 13 July 2004
|
|