|
Home > Shaiva Siddhanta > Thirumurai > திருதொண்டர் புராணம் (மூலம்)
thiruththoNDar
purANam (periya purANam) panniraNDAm tirumuRai
(in tamil script, unicode format)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.
திருச்சிற்றம்பலம்
6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்
32 மூர்க்க நாயனார் புராணம்
1. மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும் 3618-1
நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி 3618-2
அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை 3618-3
மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு 3618-4
2. செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை 3619-1
நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு 3619-2
இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் 3619-3
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் 3619-4
3. கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி 3620-1
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் 3620-2
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும் 3620-3
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் 3620-4
4. தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து 3621-1
மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே 3621-2
ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக 3621-3
ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் 3621-4
5. இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள 3622-1
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் 3622-2
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே 3622-3
அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் 3622-4
6. அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க 3623-1
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார் 3623-2
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால் 3623-3
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார் 3623-4
7. பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் 3624-1
உற்ற அன்பால் ¦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து 3624-2
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர் 3624-3
செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் 3624-4
8. இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப் 3625-1
பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே 3625-2
உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர் 3625-3
அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் 3625-4
9. முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப் 3626-1
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச் 3626-2
சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி 3626-3
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில் 3626-4
10. சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் 3627-1
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார் 3627-2
காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி 3627-3
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் 3627-4
11. நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும் 3628-1
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே 3628-2
ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின் 3628-3
பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார் 3628-4
12. வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள் 3629-1
அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் 3629-2
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச் 3629-3
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம் 3629-4
This webpage was last updated on 13 July 2004
|
|