|
1056 |
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே. | 1 |
|
1057 |
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. | 2 |
|
1058 |
அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே. | 3 |
|
1059 |
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே. | 4 |
|
1060 |
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே. | 5 |
|
1061 |
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே. | 6 |
|
1062 |
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே. | 7 |
|
1063 |
வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே. | 8 |
|
1064 |
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே. | 9 |
|
1065 |
நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே. | 10 |
|
1066 |
கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே. | 11 |
|
1067 |
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே. | 12 |
|
1068 |
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே. | 13 |
|
1069 |
உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே. | 14 |
|
1070 |
மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத்
தணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே. | 15 |
|
1071 |
அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே. | 16 |
|
1072 |
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே. | 17 |
|
1073 |
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்
தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே. | 18 |
|
1074 |
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே. | 19 |
|
1075 |
ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே. | 20 |
|
1076 |
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே. | 21 |
|
1077 |
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே. | 22 |
|
1078 |
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப்
பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே. | 23 |
|
1079 |
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே. | 24 |
|
1080 |
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே. | 25 |
|
1081 |
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே. | 26 |
|
1082 |
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே. | 27 |
|
1083 |
மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே. | 28 |
|
1084 |
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே. | 29 |
|
1085 |
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே. | 30 |
|
1086 |
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே. | 31 |
|
1087 |
நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே. | 32 |
|
1088 |
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே. | 33 |
|
1089 |
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே. | 34 |
|
1090 |
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே. | 35 |
|
1091 |
அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே. | 36 |
|
1092 |
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே. | 37 |
|
1093 |
புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே
நண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட்
டண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே. | 38 |
|
1094 |
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே. | 39 |
|
1095 |
பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே. | 40 |
|
1096 |
வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே. | 41 |
|
1097 |
தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே. | 42 |
|
1098 |
களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே. | 43 |
|
1099 |
வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்
நெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே. | 44 |
|
1100 |
நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே. | 45 |
|
1101 |
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே. | 46 |
|
1102 |
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்பு
தெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே. | 47 |
|
1103 |
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே. | 48 |
|
1104 |
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும்
அளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே. | 49 |
|
1105 |
கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே. | 50 |
|
1106 |
அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே. | 51 |
|
1107 |
கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே. | 52 |
|
1108 |
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே. | 53 |
|
1109 |
பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே. | 54 |
|
1110 |
நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே. | 55 |
|
1111 |
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே. | 56 |
|
1112 |
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே. | 57 |
|
1113 |
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்
தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே. | 58 |
|
1114 |
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே. | 59 |
|
1115 |
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே. | 60 |
|
1116 |
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே. | 61 |
|
1117 |
பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே. | 62 |
|
1118 |
கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட்
டழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே. | 63 |
|
1119 |
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே. | 64 |
|
1120 |
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து
மின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே. | 65 |
|
1121 |
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே. | 66 |
|
1122 |
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே. | 67 |
|
1123 |
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே. | 68 |
|
1124 |
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே. | 69 |
|
1125 |
கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே. | 70 |
|
1126 |
பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே. | 1 |
|
1127 | தில்லைவாழ் அந்தணர்
செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே. | 2 |
|
1128 | திருநீலகண்ட நாயனார்
சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே. | 3 |
|
1129 | இயற்பகை நாயனார்
செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே. | 4 |
|
1130 | இளையான்குடிமாற நாயனார்
இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே. | 5 |
|
1131 | மெய்ப்பொருள் நாயனார்
கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்
மற்றவன் ‘தத்தா நமரே’ எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே. | 6 |
|
1132 | விறன்மிண்ட நாயனார்
பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே. | 7 |
|
1133 | அமர்நீதி நாயனார்
மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. | 8 |
|
1134 | சுந்தரமூர்த்தி நாயனார்
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே. | 9 |
|
1135 | எறிபத்த நாயனார்
ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே. | 10 |
|
1136 | ஏனாதிநாத நாயனார்
பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே. | 11 |
|
1137 | கண்ணப்ப நாயனார்
நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. | 12 |
|
1138 | குங்குலியக்கலய நாயனார்
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே. | 13 |
|
1139 | மானக் கஞ்சாற நாயனார்
கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே. | 14 |
|
1140 | அரிவாட்டாய நாயனார்
வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்
அள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே. | 15 |
|
1141 | ஆனாய நாயனார்
தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே. | 16 |
|
1142 | சுந்தர மூர்த்தி நாயனார்
‘அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்’என்னும்
பொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. | 17 |
|
1143 | மூர்த்தி நாயனார்
அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே. | 18 |
|
1144 | முருக நாயனார்
பதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே. | 19 |
|
1145 | உருத்திர பசுபதி நாயனார்
அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே. | 20 |
|
1146 | திருநாளைப்போவார் நாயனார்
நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே. | 21 |
|
1147 | திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே. | 22 |
|
1148 | சண்டேசுர நாயனார்
குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே. | 23 |
|
1149 | சுந்தரமூர்த்தி நாயனார்
‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்று
துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே. | 24 |
|
1150 | திருநாவுக்கரசு நாயனார்
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்
துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே. | 25 |
|
1151 |
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்
பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. | 26 |
|
1152 | குலச்சிறை நாயனார்
அருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே. | 27 |
|
1153 | பெருமிழலைக் குறும்ப நாயனார்
சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்
நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே. | 28 |
|
1154 | காரைக்கால் அம்மையார்
‘நம்பன் திருமலை நான்மிதி யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’ எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே. | 29 |
|
1155 | அப்பூதியடிகள் நாயனார்
தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே. | 30 |
|
1156 | திருநீலநக்க நாயனார்
பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே. | 31 |
|
1157 | நமிநந்தியடிகள் நாயனார்
வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே. | 32 |
|
1158 | சுந்தரமூர்த்தி நாயனார்
நந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே. | 33 |
|
1159 | திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே. | 34 |
|
1160 |
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. | 35 |
|
1161 | ஏயர்கோன் கலிக்காம நாயனார்
கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே. | 36 |
|
1162 | திருமூல நாயனார்
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே. | 37 |
|
1163 | தண்டியடிகள் நாயனார்
கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே. | 38 |
|
1164 | மூர்க்க நாயனார்
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே. | 39 |
|
1165 | சோமாசிமாற நாயனார்
சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே. | 40 |
|
1166 | சுந்தரமூர்த்தி நாயனார்
துணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே. | 41 |
|
1167 | சாக்கிய நாயனார்
தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்
மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே. | 42 |
|
1168 | சிறப்புலி நாயனார்
புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்
சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே | 43 |
|
1169 | சிறுத்தொண்ட நாயனார்
புலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே. | 44 |
|
1170 | சேரமான்பெருமாள் நாயனார்
மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்
தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே. | 45 |
|
1171 |
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த
வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே. | 46 |
|
1172 | கணநாத நாயனார்
தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே. | 47 |
|
1173 | கூற்றுவ நாயனார்
நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப
ஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே. | 48 |
|
1174 | சுந்தரமூர்த்தி நாயனார்
கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்
கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே. | 49 |
|
1175 | பொய்யடிமை இல்லாத புலவர்
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அ திற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே. | 50 |
|
1176 | புகழ்ச்சோழ நாயனார்
புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. | 51 |
|
1177 | நரசிங்க முனையரைய நாயனார்
புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்
நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே. | 52 |
|
1178 | அதிபத்த நாயனார்
திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக
நிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்
புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே. | 53 |
|
1179 | கலிக்கம்ப நாயனார்
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்
சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே. | 54 |
|
1180 | கலிய நாயனார்
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே. | 55 |
|
1181 | சத்தி நாயனார்
கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே. | 56 |
|
1182 | ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே. | 57 |
|
1183 | சுந்தரமூர்த்தி நாயனார்
பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே. | 58 |
|
1184 | கணம்புல்ல நாயனார்
நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்
பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே. | 59 |
|
1185 | காரி நாயனார்
புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்
கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே. | 60 |
|
1186 | நெடுமாற நாயனார்
கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே. | 61 |
|
1187 | வாயிலார் நாயனார்
மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி
ஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே. | 62 |
|
1188 | முனையடுவார் நாயனார்
என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்
என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்
குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே. | 63 |
|
1189 | சுந்தரமூர்த்தி நாயனார்
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே. | 64 |
|
1190 | கழற்சிங்க நாயனார்
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை
காதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே. | 65 |
|
1191 | இடங்கழி நாயனார்
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்
கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே. | 66 |
|
1192 | செருத்துணை நாயனார்
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. | 67 |
|
1193 | புகழ்த்துணை நாயனார்
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா
உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா
தருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே. | 68 |
|
1194 | கோட்புலி நாயனார்
பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது
சுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்
குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்
பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே. | 69 |
|
1195 | சுந்தரமூர்த்தி நாயனார்
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்
நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே. | 70 |
|
1196 | பத்தராய்ப் பணிவார்கள்
அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து
கரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி
சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே. | 71 |
|
1197 | பரமனையே பாடுவார்
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே. | 72 |
|
1198 | சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்
சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. | 73 |
|
1199 | திருவாரூர்ப் பிறந்தார்கள்
செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்
செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே. | 74 |
|
1200 | முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்
நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே. | 75 |
|
1201 | முழுநீறு பூசிய முனிவர்
உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளருகால்
விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே. | 76 |
|
1202 | அப்பாலும் அடிச்சார்ந்தார்
வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்
பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே
ஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே. | 77 |
|
1203 | சுந்தரமூர்த்தி நாயனார்
செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே. | 78 |
|
1204 | பூசலார் நாயனார்
பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்
கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா
ததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே. | 79 |
|
1205 | மங்கையர்க்கு அரசியார்
பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே. | 80 |
|
1206 | நேச நாயனார்
நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்
கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே. | 81 |
|
1207 | கோச் செங்கட் சோழ நாயனார்
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே. | 82 |
|
1208 |
செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி
நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே. | 83 |
|
1209 | திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை
புனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே. | 84 |
|
1210 | சடைய நாயனார்
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்
குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே. | 85 |
|
1211 | இசைஞானியார்
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே. | 86 |
|
1212 | சுந்தரமூர்த்தி நாயனார்
ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்
மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே. | 87 |
|
1213 | திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்
கூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை
வாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே. | 88 |
|
1214 | திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு
பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே. | 89 |
|
1215 | நூற் பயன்
ஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்
சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள
சேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே. | 90 |
|
1216 |
பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. | 1 |
|
1217 |
பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய
கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே. | 2 |
|
1218 |
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே
பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த
ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே. | 3 |
|
1219 |
இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்
பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்
தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. | 4 |
|
1220. |
மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்
துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே. | 5 |
|
1221 |
தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர
வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த
கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்
விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே. | 6 |
|
1222 |
வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய
உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு
புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே. | 7 |
|
1223 |
புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே. | 8 |
|
1224 |
குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்
அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே. | 9 |
|
1225 |
முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்
பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. | 10 |
|
1226 |
மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. | 11 |
|
1227 |
வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த
ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. | 12 |
|
1228 |
வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்
தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே. | 13 |
|
1229 |
அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே. | 14 |
|
1230 |
நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே. | 15 |
|
1231 |
நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த
குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்
சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று
நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே. | 16 |
|
1232 |
நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிய·தே
போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி
ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது
காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே. | 17 |
|
1233 |
கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்
வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ
டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே. | 18 |
|
1234 |
பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்
சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே. | 19 |
|
1235 |
வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்
திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே. | 20 |
|
1236 |
கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்
வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே. | 21 |
|
1237 |
வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே. | 22 |
|
1238 |
மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்
பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே. | 23 |
|
1239 |
அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த
இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே. | 24 |
|
1240 |
அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்
வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே. | 25 |
|
1241 |
சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்
சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே. | 26 |
|
1242 |
திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்
கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே. | 27 |
|
1243 |
எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்
குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே. | 28 |
|
1244 |
கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா
நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்
டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே. | 29 |
|
1245 |
எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்
வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்
றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே. | 30 |
|
1246 |
ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்
அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்
களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. | 31 |
|
1247 |
கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்
செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. | 32 |
|
1248 |
கழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்பரப்பிட்
டழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே. | 33 |
|
1249 |
உறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப்
பெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே. | 34 |
|
1250 |
இடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின்
புடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள்
நடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே. | 35 |
|
1251 |
மேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள்
தானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள்
கோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்
பூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே. | 36 |
|
1252 |
புலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன்
தலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா
முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே. | 37 |
|
1253 |
குழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே
தழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே. | 38 |
|
1254 |
அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ
டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே. | 39 |
|
1255 |
இருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்
பொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை
அருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த
பெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே. | 40 |
|
1256 |
பேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. | 41 |
|
1257 |
பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்
வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த
பொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே. | 42 |
|
1258 |
பொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள்
தென்னாட் டரண்அட்ட சிங்கத் தினைஎஞ் சிவன்இவனென்
றந்நாள் சூதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே. | 43 |
|
1259 |
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி
வேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த
கோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே. | 44 |
|
1260 |
சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின்
றாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம்
வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே. | 45 |
|
1261 |
மதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே. | 46 |
|
1262 |
குறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென்
றுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே. | 47 |
|
1263 |
இழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. | 48 |
|
1264 |
வயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண்
டயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே. | 49 |
|
1265 |
புண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி
எண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே. | 50 |
|
1266 |
கருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே. | 51 |
|
1267 |
மறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்
துறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே. | 52 |
|
1268 |
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம்
கிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே. | 53 |
|
1269 |
கீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித்
தாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே. | 54 |
|
1270 |
குண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்
புண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே. | 55 |
|
1271 |
புனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்
வனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே. | 56 |
|
1272 |
கட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை
இட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய்
விட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே. | 57 |
|
1273 |
உறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற
துறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்
புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்
நறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே. | 58 |
|
1274 |
நாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக்
காமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே. | 59 |
|
1275 |
காரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்
சீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்து
வாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்
ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே. | 60 |
|
1276 |
அரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய
பெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம்
வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே. | 61 |
|
1277 |
தாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும்
வாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே. | 62 |
|
1278 |
நகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர்
புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத்
தகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே. | 63 |
|
1279 |
மயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார்
குயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே. | 64 |
|
1280 |
அண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன
பெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ்
சுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே. | 65 |
|
1281 |
தாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்
போதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே. | 66 |
|
1282 |
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத்
தளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே. | 67 |
|
1283 |
தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்
ஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே. | 68 |
|
1284 |
நிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம்
துதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நைய
நதியுறு நீர்தெளித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனா
மதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே. | 69 |
|
1285 |
மன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே. | 70 |
|
1286 |
ஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே. | 71 |
|
1287 |
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்த
இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வெளிதே. | 72 |
|
1288 |
எளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம்
கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே. | 73 |
|
1289 |
அருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்
துருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே. | 74 |
|
1290 |
வருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே. | 75 |
|
1291 |
மின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையே
மன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்க
நன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே. | 76 |
|
1292 |
நல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்
டொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப்
பில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே. | 77 |
|
1293 |
தனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்த
அனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே. | 78 |
|
1294 |
உகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்
பகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே. | 79 |
|
1295 |
பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்
நேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே. | 80 |
|
1296 |
வலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து
நிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே. | 81 |
|
1297 |
கண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென்
றெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே. | 82 |
|
1298 |
வருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்ண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ்
சருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே. | 83 |
|
1299 |
பொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்
கருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்
திரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே. | 84 |
|
1300 |
சிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே. | 85 |
|
1301 |
நீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்
தோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்த
காட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே. | 86 |
|
1302 |
குழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்
திழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே. | 87 |
|
1303 |
கொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி
அடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார்
முடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே. | 88 |
|
1304 |
வளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே. | 98 |
|
1305 |
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா
தெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்த
பித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிதுகண்டீர்
அத்தனை ஞானசம பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே. | 90 |
|
1306 |
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன்
றுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம்
துடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே. | 91 |
|
1307 |
பணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று
தணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. | 92 |
|
1308 |
தோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே. | 93 |
|
1309 |
பொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்
றிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே. | 94 |
|
1310 |
இயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று
முயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச்
செயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக்
கயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே. | 95 |
|
1311 |
ஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார்
மாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்
ஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே
தீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே. | 96 |
|
1312 |
செப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே. | 97 |
|
1313 |
மண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே. | 98 |
|
1314 |
சேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த
பேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம்
காருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே. | 99 |
|
1315 |
பிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை
சிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே. | 100 |
|
1316 |
பாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும்
ஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின்
தூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள். | 101 |
|
1328 |
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன் ...(5)
முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை எண்டிசை அறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன் ...(10)
மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே. | 1 |
|
1329 |
அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம்
தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க என்று. | 2 |
|
1330 |
என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப்
பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே. | 3 |
|
1331 |
அடுசினக் கடகரி அதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது ...(5)
குழகனைப் பாடிக் கோலக் காப்புக்
கழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்தது
அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் ...(10)
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்று
அத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்று
அருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது ...(15)
பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டது
உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்தது
அவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் ...(20)
தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்தது
அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. ...(25) | 4 |
|
1332 |
நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித்
தலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்க
சுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி. | 5 |
|
1333 |
பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்
கதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்த
மதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே. | 6 |
|
1334 |
கவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்து
உம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் ....(5)
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து ...(10)
முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கலது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே. | 7 |
|
1335 |
பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே நினை. | 8 |
|
1336 |
நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்
தனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற்
கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்
நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே. | 9 |
|
1337 |
தனமலி கமலத் திருவெனும் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து
ஆடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக ...(5)
மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு
ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. ...(10) | 10 |
|
1338 |
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ். | 11 |
|
1339 |
ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே. | 12 |
|
1340 |
அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச்
சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் ...(5)
செறியிருள் உருவச் சேண்விசும் பதனிற்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையால் உந்திய கலுழிக்
கரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார்
பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு ....(10)
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையில் அமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் ...(15)
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே. | 13 |
|
1341 |
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து
முலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தம் தீராதார் தாம். | 14 |
|
1342 |
தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து
நாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே. | 15 |
|
1343 |
இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத்
தழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர்
சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்று
எனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும்
பாய்கிளி இரியப் பைவந் தேறி ...(5)
ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொல் அவைபல இயற்றி
அன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் ...(10)
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் ...(15)
பூம்புனம் அதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை இதுவே. | 16 |
|
1344 |
வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்
வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான். | 17 |
|
1345 |
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே. | 18 |
|
1346 |
வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதேன் உண்டு வேணுவின் துணியாற்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அ·திங்கு
என்னையர் இங்கு வருவர் பலரே ...(5)
அன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குரல் இயற்றி
அமுதுண் செவ்வாய் அருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் ....(10)
சிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. ..(15) | 19 |
|
1347 |
தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி
அழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால்
தொழதகன்றாள் என்றுநீ சொல்லு. | 20 |
|
1348 |
சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர்
பற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே. | 21 |
|
1349 |
புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடும் அரவின் அகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் ...(5)
கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்த தெய்வ நாயகன்
தன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் ....(10)
மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையேன் இருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை ..(15)
ஆதலின் புறவே உறவலை நீயே. | 22 |
|
1350 |
அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தான் ஊர். | 23 |
|
1351 |
ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில்
கூரும் இருளடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்
காரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின்
தாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே. | 24 |
|
1352 |
தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி இளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி எழுந்து செந்நெல் மோதும் ...(5)
காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே ....(10)
வாடை அடிப்ப வைகறைப் போதிற்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரணம் உரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும் ...(15)
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே. | 25 |
|
1353 |
குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம்
புன்கலங்கல் வைகைப் புனல். | 26 |
|
1354 |
புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா
இனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த்
தினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே. | 27 |
|
1355 |
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழு
தாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த ...(5)
காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை உருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ ....(10)
வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையும் காந்தளங் கையும்
ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் ...(15)
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே. | 28 |
|
1356 |
வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு. | 29 |
|
1357 |
குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே
திருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே. | 30 |
|
1358 |
திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர்
இருந்தண் இளமேதி பாயப் - பொருந்திய
புள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக்
குருகிரியக் கூன்இறவம் பாயக் களிறு
முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க -வெருவுற்ற
கோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த்
தோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்த
காவி முகமலரக் கார்நீலம் கண்படுப்ப
வாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய | (5) |
|
அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னிய
வள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத்
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ள
நிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவிய
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய
பாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர் | (10) |
|
நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்த
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப்
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர்
கண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்ட
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு | (15) |
|
சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற்
றினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பு
கனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்கு
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும்
மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாத
கூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும்
வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார் | (20) |
|
மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும்
கேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் - முந்திப் | (25) |
|
புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழ
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளர
இரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில்
மருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த்
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும்
வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன்
றங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர் | (30) |
|
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளளிய
நாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில்
உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் -மருவினிய
சித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும்
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் | (35) |
|
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாது
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால்
பொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மை
மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால்
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி | (40) |
|
நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்து
காமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார்
ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும்
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும்
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு | (45) |
|
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப்
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும்
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கிய
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார்
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள் | (50) |
|
பம்பைத் துடிஒலியும் பெளவப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய
கார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்த
சீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு
செல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினிய
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர்
வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து
மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும் | (55) |
|
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம்
பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலா
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம் | (60) |
|
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின் | (65) |
|
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்
அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப்
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே | (70) |
|
நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய
கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் - காதலால்
புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை
வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து | (75) |
|
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த
யாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர்
மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய | (80) |
|
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும்
நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய
யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை – விருப்போடு | (85) |
|
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்
ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்
புகலி வளநகருள் பூசுரர் புக்காங்
கிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர்
வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம்
ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில் | (90) |
|
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய
வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மெளவல் அலர்படைப்பத்
தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற் | (95) |
|
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்
இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த
கேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும்
தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும்
சிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்ற
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற் | (100) |
|
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற்
பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த
கொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகி
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத்
திடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால் | (105) |
|
கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய
கூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகரழித் - தோடிப்
பணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரிய
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி
நயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த | (110) |
|
உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி யணுகி - அடுத்த
பயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதரு
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும்
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல்
பரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த | (115) |
|
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு
வீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர்
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய
பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில் | (120) |
|
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்து
வென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்ன
அன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக்
காழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் | (125) |
|
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல்
தாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் - நேராக
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால்
ஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின்
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக் | (130) |
|
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் - வாசச்
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள்
அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மை யோவென்று செப்புவார்-நங்கைமீர்
இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் | (135) |
|
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனே
பெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற
ஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால்
ஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன்
பேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால்
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார்
மெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார் | (140) |
|
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்த
கிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலையென் றுடுப்பார் -அளிமேவு
பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான்
ஓங்கொலிசேர் வீதி யுலா. |
|
1360 | வெண்பா
எனவே இடர்அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன்அருளை நாடும் - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ. | 2 |
|
1361 | கட்டளைக் கலித்துறை
கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார்
ஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. | 3 |
|
1362 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனங் காவல் புரிந்தென்
சிந்தை கொள்வதும் செய்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால்
வாசி யோகுற மாதுந லீரே. | 4 |
|
1363 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே. | 5 |
|
1364 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய
திருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி
நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்
நசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே. | 6 |
|
1365 |
வாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே. | 7 |
|
1366 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்
நெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
வெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே. | 8 |
|
1367 | பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம்
கண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்ச் சிகாமணி பிரானே. | 9 |
|
1368 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. | 10 |
|
1369 | பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
தானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ
சோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே. | 11 |
|
1370 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன
தேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை
கார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. | 12 |
|
1371 | கலிவிருத்தம்
கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்
திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. | 13 |
|
1372 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர்தீபன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின கலைமான் ஒன்றின
பழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே. | 14 |
|
1373 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. | 15 |
|
1374 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே. | 16 |
|
1375 | சம்பிரதம்
எழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை
முடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலகன் இணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே. | 17 |
|
1376 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்
கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. | 18 |
|
1377 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி
நாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே. | 19 |
|
1378 |
வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை உய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே. | 20 |
|
1379 | மறம்
கோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர
குளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின்
தொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே. | 21 |
|
1380 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இனியின் றொழிமினிவ் வெறியும் மறிபடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர்
நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறும் அரவிந்தம்
பனிமென் குழலியை அணிமின் துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே. | 22 |
|
1381 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சரத மணமலி பரிசம் வருவன
தளர்வில் புகலியர் அதிபன் நதிதரு
வரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையின் அமர்தரு
விரத முடையைநின் இடையின் அவள்மனம்
விரைசெய் குழலியை அணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனம்இனி
எளிய தொருவகை கருது மலையனே. | 23 |
|
1382 |
அயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி இடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே. | 24 |
|
1383 |
அரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே. | 25 |
|
1384 | ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை
ஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே
பாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்
மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. | 26 |
|
1385 | எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. | 27 |
|
1386 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சதுரன் புகலியர் அதிபன்கூர்
தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலியர் அதிபன்தாள்
முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்
எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே
ரலர்தம் பதிமதில் இடிமின்னே. | 28 |
|
1387 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள்
பொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள்
இன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. | 29 |
|
1388 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்
வம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்
ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே. | 30 |
|
1389 | அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கைதவத்தால் என்னிடைக்கு நீவந்த
தறியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ
சிகாமணியை வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்
அவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்கு
நீபலபொய் இசைக்கின் றாயே. | 31 |
|
1390 |
மதங்கியார்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசைதகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. | 32 |
|
1391 |
வருகின் றனன்என் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்
மதுநீ இறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே. | 33 |
|
1392 |
கொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர் அணையான கனைகடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்
முறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே. | 34 |
|
1393 |
பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை
பெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன
உறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலின் எதிர்ப·றி உய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே. | 35 |
|
1394 | பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர்
மிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமா
தகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே. | 36 |
|
1395 |
பாணாற்றுப்படை
நேரிசை ஆசிரியப்பா
கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)
தேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)
சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ (15)
ஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரட் கணையக் கபாட
விலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)
நெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஓளிச் சூளிகை வளாகத்
தணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)
நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி (30)
தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பரசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத்
தன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)
நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. | 37 |
|
1396 | வஞ்சித் துறை
நீதியின் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே. | 38 |
|
1397 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உறுதி முலைதாழ எனையி கழுநீதி
உனது மனமார முழுவ துமதாக
அறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்
அழகி தினியானுன் அருள்பு னைவதாகப்
பெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு
பெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட
நறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்
நனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே. | 39 |
|
1398 | ஆசிரியத் துறை
நீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் குங்கழல் போற்றே. | 40 |
|
1399 | கட்டளைக் கலிப்பா
போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
புந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே
ஆன தன்பதி யாவதந் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே. | 41 |
|
1400 | கைக்கிளை மருட்பா
அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. | 42 |
|
1401 | பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்
கனவண் கொடைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண
புனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப்
புலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்
சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே. | 43 |
|
1402 | இன்னிசை வெண்பா
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து. | 44 |
|
1403 | பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல்
அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த்
திருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய்
இனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால்
உறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல்
உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே. | 45 |
|
1404 | கலி விருத்தம்
குருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும்
அருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின்
தருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்
கருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. | 46 |
|
1405 |
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை
மாடே றுந்தையல் வாட மலர்ந்தனை
கேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே. | 47 |
|
1406 | எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை
முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்
தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. | 48 |
|
1407 | வஞ்சித் துறை
வழிதரு பிறவியின்உறு
தொழில்அமர் துயர்கெடுமிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணை அடிஇசைமினே. | 49 |