11th tirumuRai collections (pirabandam)

( pAcurams 1036-1419 - nampi ANTAr nampi)
(in tamil script, unicode format)


பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
பாசுரங்கள் 1036-1419
( நம்பியாண்டார் நம்பி அருளியது )

12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்

12.1 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (1036 - 1055)

1036

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.

1
1037

முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே.

2
1038

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.

3
1039

பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என்
றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்
கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே.

4
1040

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.

5
1041

மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.

6
1042

மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.

7
1043

மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே.

8
1044

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.

9
1045

நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்
தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.

10
1046

அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.

11
1047

கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்
காவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே.

12
1048

யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.

13
1049

ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே.

14
1050

கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.

15
1051

வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே.

16
1052

வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான்.

17
1053

அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரர்க்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர்
தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின்
றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே.

18
1054

அவமதியா துள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.

19
1055

நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே.

20

திருச்சிற்றம்பலம்

12.2 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (1056 - 1125)

1056

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே.

1
1057

என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.

2
1058

அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே.

3
1059

பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே.

4
1060

அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே.

5
1061

சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே.

6
1062

வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.

7
1063

வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே.

8
1064

மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே.

9
1065

நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.

10
1066

கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.

11
1067

தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே.

12
1068

பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே.

13
1069

உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே.

14
1070

மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத்
தணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே.

15
1071

அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.

16
1072

படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே.

17
1073

புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்
தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.

18
1074

சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.

19
1075

ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.

20
1076

வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே.

21
1077

சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே.

22
1078

அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப்
பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.

23
1079

சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே.

24
1080

அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே.

25
1081

பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

26
1082

ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே.

27
1083

மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.

28
1084

வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே.

29
1085

தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே.

30
1086

இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.

31
1087

நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே.

32
1088

கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே.

33
1089

பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே.

34
1090

பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.

35
1091

அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.

36
1092

ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.

37
1093

புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே
நண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட்
டண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.

38
1094

கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே.

39
1095

பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே.

40
1096

வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே.

41
1097

தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே.

42
1098

களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.

43
1099

வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்
நெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.

44
1100

நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே.

45
1101

கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே.

46
1102

புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்பு
தெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே.

47
1103

சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே.

48
1104

விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும்
அளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே.

49
1105

கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே.

50
1106

அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே.

51
1107

கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.

52
1108

வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே.

53
1109

பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே.

54
1110

நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே.

55
1111

தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.

56
1112

அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே.

57
1113

வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்
தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.

58
1114

சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.

59
1115

நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே.

60
1116

விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.

61
1117

பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே.

62
1118

கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட்
டழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே.

63
1119

தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே.

64
1120

மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து
மின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே.

65
1121

தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே.

66
1122

பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.

67
1123

புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.

68
1124

நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.

69
1125

கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே.

70

திருச்சிற்றம்பலம்

12.3 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
திருத்தொண்டர் திருவந்தாதி (1126 - 1215)

1126

பொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.

1
1127

தில்லைவாழ் அந்தணர்
செப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே.

2
1128

திருநீலகண்ட நாயனார்
சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே.

3
1129

இயற்பகை நாயனார்
செய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.

4
1130

இளையான்குடிமாற நாயனார்
இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே.

5
1131

மெய்ப்பொருள் நாயனார்
கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்
மற்றவன் ‘தத்தா நமரே’ எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே.

6
1132

விறன்மிண்ட நாயனார்
பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே.

7
1133

அமர்நீதி நாயனார்
மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே.

8
1134

சுந்தரமூர்த்தி நாயனார்
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே.

9
1135

எறிபத்த நாயனார்
ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே.

10
1136

ஏனாதிநாத நாயனார்
பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே.

11
1137

கண்ணப்ப நாயனார்
நிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே.

12
1138

குங்குலியக்கலய நாயனார்
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே.

13
1139

மானக் கஞ்சாற நாயனார்
கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே.

14
1140

அரிவாட்டாய நாயனார்
வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்
அள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே.

15
1141

ஆனாய நாயனார்
தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே.

16
1142

சுந்தர மூர்த்தி நாயனார்
‘அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்’என்னும்
பொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே.

17
1143

மூர்த்தி நாயனார்
அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.

18
1144

முருக நாயனார்
பதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே.

19
1145

உருத்திர பசுபதி நாயனார்
அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே.

20
1146

திருநாளைப்போவார் நாயனார்
நாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே.

21
1147

திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே.

22
1148

சண்டேசுர நாயனார்
குலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே.

23
1149

சுந்தரமூர்த்தி நாயனார்
‘நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி’டென்று
துதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே.

24
1150

திருநாவுக்கரசு நாயனார்
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்
துற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே.

25
1151

மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்
பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே.

26
1152

குலச்சிறை நாயனார்
அருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே.

27
1153

பெருமிழலைக் குறும்ப நாயனார்
சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்
நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே.

28
1154

காரைக்கால் அம்மையார்
‘நம்பன் திருமலை நான்மிதி யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’ எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே.

29
1155

அப்பூதியடிகள் நாயனார்
தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே.

30
1156

திருநீலநக்க நாயனார்
பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே.

31
1157

நமிநந்தியடிகள் நாயனார்
வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.

32
1158

சுந்தரமூர்த்தி நாயனார்
நந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே.

33
1159

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே.

34
1160

பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே.

35
1161

ஏயர்கோன் கலிக்காம நாயனார்
கொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே.

36
1162

திருமூல நாயனார்
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.

37
1163

தண்டியடிகள் நாயனார்
கண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே.

38
1164

மூர்க்க நாயனார்
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.

39
1165

சோமாசிமாற நாயனார்
சூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே.

40
1166

சுந்தரமூர்த்தி நாயனார்
துணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே.

41
1167

சாக்கிய நாயனார்
தகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்
மகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே.

42
1168

சிறப்புலி நாயனார்
புவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்
சிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே

43
1169

சிறுத்தொண்ட நாயனார்
புலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே.

44
1170

சேரமான்பெருமாள் நாயனார்
மன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்
தென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே.

45
1171

சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த
வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே.

46
1172

கணநாத நாயனார்
தொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே.

47
1173

கூற்றுவ நாயனார்
நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப
ஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே.

48
1174

சுந்தரமூர்த்தி நாயனார்
கூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்
கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே.

49
1175

பொய்யடிமை இல்லாத புலவர்
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அ திற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.

50
1176

புகழ்ச்சோழ நாயனார்
புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே.

51
1177

நரசிங்க முனையரைய நாயனார்
புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்
நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.

52
1178

அதிபத்த நாயனார்
திறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
றுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக
நிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்
புறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே.

53
1179

கலிக்கம்ப நாயனார்
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்அடியான்
சைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.

54
1180

கலிய நாயனார்
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே.

55
1181

சத்தி நாயனார்
கிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.

56
1182

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
சத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே.

57
1183

சுந்தரமூர்த்தி நாயனார்
பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே.

58
1184

கணம்புல்ல நாயனார்
நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்
பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே.

59
1185

காரி நாயனார்
புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்
கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே.

60
1186

நெடுமாற நாயனார்
கார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.

61
1187

வாயிலார் நாயனார்
மாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி
ஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே.

62
1188

முனையடுவார் நாயனார்
என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்
என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்
குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.

63
1189

சுந்தரமூர்த்தி நாயனார்
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே.

64
1190

கழற்சிங்க நாயனார்
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை
காதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே.

65
1191

இடங்கழி நாயனார்
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்
கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே.

66
1192

செருத்துணை நாயனார்
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.

67
1193

புகழ்த்துணை நாயனார்
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா
உருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா
தருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே.

68
1194

கோட்புலி நாயனார்
பெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது
சுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்
குற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்
பெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே.

69
1195

சுந்தரமூர்த்தி நாயனார்
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்
நகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே.

70
1196

பத்தராய்ப் பணிவார்கள்
அரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து
கரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி
சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே.

71
1197

பரமனையே பாடுவார்
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே.

72
1198

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்
சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.

73
1199

திருவாரூர்ப் பிறந்தார்கள்
செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்
செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே.

74
1200

முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்
நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே.

75
1201

முழுநீறு பூசிய முனிவர்
உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளருகால்
விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே.

76
1202

அப்பாலும் அடிச்சார்ந்தார்
வருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்
பெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே
ஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே.

77
1203

சுந்தரமூர்த்தி நாயனார்
செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே.

78
1204

பூசலார் நாயனார்
பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்
கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா
ததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே.

79
1205

மங்கையர்க்கு அரசியார்
பூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே.

80
1206

நேச நாயனார்
நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்
கூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.

81
1207

கோச் செங்கட் சோழ நாயனார்
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே.

82
1208

செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி
நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே.

83
1209

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை
புனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே.

84
1210

சடைய நாயனார்
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்
குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே.

85
1211

இசைஞானியார்
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே.

86
1212

சுந்தரமூர்த்தி நாயனார்
ஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்
மானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே.

87
1213

திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்
கூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை
வாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே.

88
1214

திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு
பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே.

89
1215

நூற் பயன்
ஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்
சூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள
சேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே.

90

திருச்சிற்றம்பலம்

12.4 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (1216 - 1316)

1216

பார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.

1
1217

பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய
கதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே.

2
1218

காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே
பூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த
ஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே.

3
1219

இரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்
பரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்
தரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே.

4
1220.

மன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்
துன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே.

5
1221

தொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர
வண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த
கண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்
விண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே.

6
1222

வித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய
உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு
புத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே.

7
1223

புணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே.

8
1224

குருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்
அருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம் ............ .............. முரசே.

9
1225

முரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்
பரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.

10
1226

மொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
மொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.

11
1227

வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த
ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே.

12
1228

வாட்டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்
தோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
காட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே.

13
1229

அவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே.

14
1230

நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
பகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
மகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே.

15
1231

நிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த
குலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்
சலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று
நலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே.

16
1232

நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிய·தே
போதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி
ஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது
காதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே.

17
1233

கைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்
வன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ
டிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே.

18
1234

பந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்
சந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே.

19
1235

வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்
திரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே.

20
1236

கடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்
திடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்
வடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே.

21
1237

வாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே.

22
1238

மலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்
பலர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே.

23
1239

அரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த
இரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்
கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.

24
1240

அடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்
வெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே.

25
1241

சுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்
சிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே.

26
1242

திண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்
கண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே.

27
1243

எழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்
குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே.

28
1244

கற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா
நற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்
டிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே.

29
1245

எம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்
வெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்
றும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே.

30
1246

ஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்
அளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்
களிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே.

31
1247

கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்
செவிக்குத் தகுவன சிந்தை