11th tirumuRai collections

(825 pAcurams of several authors)
(in tamil script, unicode format)


பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
பாசுரங்கள் 773 - 802

9. இளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் (773 - 802)

9.1 இளம்பெருமான் அடிகள் அருளிச் செய்த
சிவபெருமான் திருமும்மணிக்கோவை

773.

(அகவல்)

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

1
774

(வெண்பா)

மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.

2
775

(கட்டளைக் கலித்துறை)

இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.

3
776

(அகவல்)

சடையே, நீரகந் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
மிடறே, நஞ்சகந் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளிஎரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே, மடங்கல்மதஞ் சீறி மலர்பழிக் கும்மே
அ·தான்று, இனையஎன் றறிகிலம் யாமே முனைதவத்
தலைமுன்று வகுத்த தனித்தாட்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.

4
777

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் -மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.

5
778

இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத ளேஉடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் றோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.

6
779

வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமி விலகிப் பகல்செகுக் கும்மே
என்னைப், பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அ·தான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.

7
780

உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட திவள்.

8
781

இவளப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
அவளப்புத் தேளிர் உலகிற் கரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தியாரைமுன் எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.

9
782

கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எ·கமும் முரணும்
ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.

10
783

உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந் துள்வளைந்த தொக்கும் - கிளரொளிய
பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.

11
784

கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந் தாலொக்குந் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரட் சோதிப் பிழம்புமென் உள்ளத் திடங்கொண்டவே.

12
785

கொண்டற் கார்எயிற்றுச் செம்மருப் பிறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொழங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.

13
786

நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடர்.

14
787

இடர்தரு தீவினைக் கெள்கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்
கடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.

15
788

அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெளிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.

16
789

ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

17
790

வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்தகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழன்இன் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.

18
791

கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற
துணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.

19
792

இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்
றுலகலொஞ் சென்றுழல்வ ரேனும் -மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறுந்தெரியின் ஈண்டு.

20
793

ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப் பிறைக் கீளும்எப் போதும்என் நெஞ்சத்தவே.

21
794

நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்
றுடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.

22
795

பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.

23
796

தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிய மென்முலைப் பொன்மலை யாட்டிக் கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.

24
797

உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்
கிடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.

25
798

எளியமென் றெள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கையிலை எம்மாற் குறை.

26
799

குறையாப் பலிஇவை கொள்கஎன் கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம் மேனிஎம் வேதியனே.

27
800

வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத் தண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.

28
801

எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.

29
802

பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீர்இனிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவனே.

20

திருச்சிற்றம்பலம்

This web page last revised on 14 March 2002

Back to 11th thirumuRai Page
Back to thirumuRai Main Page
Back to Shaiva Sidhdhantha Home Page