|
872 |
விடையின்மேல் வருவானை
வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை
யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்
சாராதார் சார்பென்னே. | 7.86.1 |
873 | அறையும்பைங் கழலார்ப்ப
அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப்
பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலிஓவாப்
படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங்கள் பிரானாரை
உணராதார் உணர்வென்னே. | 7.86.2
|
874 | தண்ணார்மா மதிசூடித்
தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங்
கிசைந்தேத்தும் அடியார்கள்
பண்ணார்பா டல்அறாத
படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெண்ணாணா யபிரானைப்
பேசாதார் பேச்சென்னே. | 7.86.3
|
875 | நெற்றிக்கண் ணுடையானை
நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக்
கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப்
பேசாதார் பேச்சென்னே. | 7.86.4
|
876 | உரமென்னும் பொருளானை
உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச்
செங்கண்மால் விடையானை
வரம்முன்ன மருள்செய்வான்
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப்
பரவாதார் பரவென்னே. | 7.86.5
|
877 | எயிலார்பொக் கம்எரித்த
எண்டோள்முக் கண்இறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி
மின்னாய்த்தீ எனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த
வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட்
பயிலாதார் பயில்வென்னே. | 7.86.6
|
878 | மெய்யன்வெண் பொடிபூசும்
விகிர்தன்வே தமுதல்வன்
கையில்மான் மழுவேந்திக்
காலன்கா லம்அறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த
படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை
அறியாதார் அறிவென்னே. | 7.86.7
|
879 | வஞ்சமற்ற மனத்தாரை
மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப்
பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட
வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை
நினையாதார் நினைவென்னே. | 7.86.8
|
880 | மழையானுந் திகழ்கின்ற
மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க
உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர்
பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட்
குழையாதார் குழைவென்னே. | 7.86.9
|
881 | பாரூரும் பனங்காட்டூர்ப்
பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச்
சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார்
உயர்வானத் துயர்வாரே. | 7.86.10
|