சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.73 திருவாரூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

740

கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.1
741

தனியனென் றெள்கி அறியேன்
தம்மைப் பெரிது முகப்பன்
முனிபவர் தம்மை முனிவன்
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனிய னிருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.2
742

சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.3
743

நெறியும் அறிவுஞ் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.4
744

நீதியில் ஒன்றும் வழுவேன்
நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்
சோதியிற் சோதிஎம் மானைச்
சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.5
745

அருத்தம் பெரிதும் உகப்பேன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை அல்லேன்
பொருத்தமே லொன்று மிலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.6
746

சந்தம் பலஅறுக் கில்லேன்
சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி
மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக்
கண்ணியன் விண்ணவ ரேத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.7
747

நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன்
நிச்சய மேயிது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி உணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.8
748

நமர்பிறர் என்ப தறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன்
தக்கவா றொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.9
749

ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர்.

7.73.10
750

எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவார் தாமே.

7.73.11

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page