சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.65 திருநின்றியூர்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

665

திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.

7.65.1
666

அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை
அமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.

7.65.2
667

மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி
மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி
ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்
பத்தி செய்தவப் பரசுரா மற்குப்
பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.

7.65.3
668

இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்
சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்
தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்
பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே.

7.65.4
669

வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்
சிந்து மாமணி அணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.

7.65.5
670

காது பொத்தரைக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழறம் பகர
ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்
யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே.

7.65.6
671

கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க
நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே.

7.65.7

இப்பதிகத்தில் 8-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

7.65.8-10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமிவரதர், தேவியார் - உலகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page