சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.60 திருவிடைமருதூர்

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

614

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நான்உழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.1
615

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.2
616

புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.3
617

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீயெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.4
618

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.5
619

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.6
620

கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றஞ் செற்றம் இவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.7
621

ஐவ கையர் ஐயரவ ராகி
ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
அவ்வ கையவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி ஒழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேயெரி யாடீ
எவ்வ கையெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.8
622

ஏழை மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வயப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் கும்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே.

7.60.9
623

அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே.

7.60.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசுவரர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page