சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.36 திருப்பைஞ்ஞீலி

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

361

காருலாவிய நஞ்சையுண்டிருள்
கண்டவெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி
ஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபர
விப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.1
362

சிலைத்துநோக்கும்வெள் ளேறுசெந்தழல்
வாயபாம்பது மூசெனும்
பலிக்குநீர்வரும் போதுநுங்கையிற்
பாம்புவேண்டா பிரானிரே
மலைத்தசந்தொடு வேங்கைகோங்கமும்
மன்னுகாரகில் சண்பகம்
அலைக்கும்பைம்புனல் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே.

7.36.2
363

தூயவர்கண்ணும் வாயும்மேனியுந்
துன்னஆடை சுடலையிற்
பேயொடாடலைத் தவிரும்நீரொரு
பித்தரோவெம் பிரானிரே
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும்
பைந்தண்மாதவி புன்னையும்
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரே.

7.36.3
364

செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண்
அரவமுன்கையில் ஆடவே
வந்துநிற்குமி தென்கொலோபலி
மாற்றமாட்டோம் இடகிலோம்
பைந்தண்மாமலர் உந்துசோலைகள்
கந்தம்நாறும்பைஞ் ஞீலியீர்
அந்திவானமும் மேனியோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.4
365

நீறுநுந்திரு மேனிநித்திலம்
நீணெடுங்கண்ணி னாளடுங்
கூறராய்வந்து நிற்றிராற்கொணர்ந்
திடுகிலோம்பலி நடமினோ
பாறுவெண்டலை கையிலேந்திபைஞ்
ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஆறுதாங்கிய சடையரோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.5
366

குரவம்நாறிய குழலினார்வளை
கொள்வதேதொழி லாகிநீர்
இரவும்இம்மனை அறிதிரேயிங்கே
நடந்துபோகவும் வல்லிரே
பரவிநாடொறும் பாடுவார்வினை
பற்றறுக்கும்பைஞ் ஞீலியீர்
அரவம்ஆட்டவும் வல்லிரோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.6
367

ஏடுலாமலர்க் கொன்றைசூடுதிர்
என்பெலாமணிந் தென்செய்வீர்
காடுநும்பதி ஓடுகையது
காதல்செய்பவர் பெறுவதென்
பாடல்வண்டிசை யாலுஞ்சோலைப்பைஞ்
ஞீலியேனென்று நிற்றிரால்
ஆடல்பாடலும் வல்லிரோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.7
368

மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
கங்கையாளடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.8
369

தக்கைதண்ணுமை தாளம்வீணை
தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை
கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ்
ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.9
370

கையோர்பாம்பரை யார்த்தோர்பாம்பு
கழுத்தோர்பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம்பொடிக் கொண்டுபூசுதிர்
வேதமோதுதிர் கீதமும்
பையவேவிடங் காகநின்றுபைஞ்
ஞீலியேனென்றீர் அடிகள்நீர்
ஐயம்ஏற்குமி தென்கொலோசொல்லும்
ஆரணீய விடங்கரே.

7.36.10
371

அன்னஞ்சேர்வயல் சூழ்பைஞ்ஞீலியில்
ஆரணீய விடங்கரை
மின்னும்நுண்ணிடை மங்கைமார்பலர்
வேண்டிக்காதல் மொழிந்தசொல்
மன்னுதொல்புகழ் நாவலூரன்வன்
றொண்டன்வாய்மொழி பாடல்பத்
துன்னிஇன்னிசை பாடுவார்உமை
கேள்வன்சேவடி சேர்வரே.

7.36.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர்,
தேவியார் - விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index


Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page