சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.17 திருநாவலூர்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

167

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு
வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.1
168

தன்மையி னாலடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.2
169

வேகங்கொண் டோடிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்*கடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

*கடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது
அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை.

7.17.3
170

அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.4
171

உம்பரார் கோனைத்திண் டோள்முரித்
தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.5
172

கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.6
173

தாயவ ளாய்த்தந்தை யாகிச்
சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.7
174

வாயாடி மாமறை ஓதியோர்
வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.8
175

படமாடு பாம்பணை யானுக்கும்
பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.9
176

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி
னையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவது
நந்திரு நாவலூரே.

7.17.10
177

நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.

7.17.11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நாவலீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page