சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.5 திருஓணகாந்தன்றளி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

042

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.01
043

திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரள வீசுங்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கொற் றட்டி யாளால்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.02
044

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி யுங்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.03
045

வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்
பல்லை யுக்கப் படுத லையிற்
பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.04
046

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.05
047

வாரி ருங்குழல் வாணெ டுங்கண்
மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
தைய லாளுல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.06
048

பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாளன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை என்றே எம்பெ ருமான்
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.07
049

வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைய மைத்த சிந்தை யாலே
திருவ டிதொழு துய்யி னல்லாற்
கலைய மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதம வருடை
உலைய மைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.08
050

வார மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊருங் காடு உடையுந் தோலே
ஓண காந்தன் றளியு ளீரே.

7.5.09
051

ஓவ ணமேல் எருதொன் றேறும்
ஓண காந்தன் றளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
வரைது கிலொடு பட்டு வீக்கிக்
கோவ ணமேற் கொண்ட வேடங்
கோவை யாகவா ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.

7.5.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஓணகாந்தீசுவரர்,
தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page