சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.2 திருப்பரங்குன்றம்

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

011

கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
சில்பூத மும்நீ ருந்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.01
012

முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்
முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர்
கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோம்
பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
அண்டங் கடந்தப் புறத்தும் இருந்தீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.02
013

மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.03
014

மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
ளடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க் கமுதங் கொடுத்த
நலமொன் றறியோமுங் கைநாக மதற்
கஞ்சுண் டுபடம் அதுபோக விடீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.04
015

பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலுங்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதுங்
கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.05
016

தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச்
சிலபூ தமும்நீ ருந்திசை திசையன
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்
படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.06
017

சிங்கத் துரிமூடு திர்தே வர்கணந்
தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
பங்கம் பலபே சிடப்பாடுந் தொண்டர்
தமைப்பற்றிக் கொண்டாண் டுவிடவுங் கில்லீர்
கங்கைச் சடையீர் உங்கருத் தறியோங்
கண்ணுமூன் றுடையீர் கண்ணேயா யிருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.07
018

பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீருந்
துணிவண்ணத் தின்மேலு மோர்தோல் உடுத்துச்
சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலு மோர்வண்ணத் தராய்
மற்றுமற் றும்பல் பலவண்ணத் தராய்
அணிவண்ணத் தராய்நிற் றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.08
019

கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
மலையின் றலையல் லதுகோயில் கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழிய
விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையுந்
தோளாள் உமைநங்கை யோர்பங் குடையீர்
உடுகூறை யுஞ்சோறுந் தந்தாள கில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.09
020

பாரோடு விண்ணும் பகலு மாகிப்
பனிமால் வரையா கிப்பரவை யாகி
நீரோடு தீயும் நெடுங்காற் றுமாகி
நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோ டவரை எடுத்த அரக்கன்
சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.

7.2.10
021

அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.

7.2.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்
Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page