திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஐந்தாம் திருமுறை)

5.92 காலபாராயணம் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

904

கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே.

5.92.1
905

நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக்
கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே.

5.92.2
906

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
ஆர்க ளாகிலு மாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே.

5.92.3
907

சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப்
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.

5.92.4
908

இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வாரெதிர் செல்லலே.

5.92.5
909

வாம தேவன் வளநகர் வைகலுங்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமந் தூபமுந் தண்ணறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.

5.92.6
910

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னம தீசன் அடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

5.92.7
911

விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

5.92.8
912

இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
மன்னும் அஞ்செழுத் தாகிய மந்திரந்
தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே.

5.92.9
913

மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.

5.92.10

914

அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலுஞ்
சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர்
சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே.

5.92.11

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page