திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(நான்காம் திருமுறை)

4.77 தனித் - திருநேரிசை



திருச்சிற்றம்பலம்

746

கடும்பகல் நட்ட மாடிக்
கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு
முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை
நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்
கோவண மரைய தேயோ.

4.77.1
747

கோவண முடுத்த வாறுங்
கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பர் பூசித்
திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப்
புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை
யாவரே எழுது வாரே.

4.77.2
748

விளக்கினாற் பெற்ற இன்பம்
மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்
மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க்
கடிகள்தாம் அருளு மாறே.

4.77.3
749

சந்திரற் சடையில் வைத்த
சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான்
ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய
ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்
வெவ்வழல் விறகிட் டன்றே.

4.77.4
750

புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்
தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்
குணர்வினா லெய்ய லாமே.

4.77.5
751

தொண்டனேன் பிறந்து வாளா
தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்
பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே
அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந்
திகழ்தரு சடையி னானே.

4.77.6
752

பாறினாய் பாவி நெஞ்சே
பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயின்
சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி
உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு
கோலமாக் கருதி னாயே.

4.77.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.

4.77.8-9
753

உய்த்தகால் உதயத் தும்பர்
உமையவள் நடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன்
வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று
வாடிநான் ஒடுங்கி னேனே.

4.77.10

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page