திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(நான்காம் திருமுறை)

4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை



திருச்சிற்றம்பலம்

716

முத்தினை மணியைப் பொன்னை
முழுமுதற் பவள மேய்க்குங்
கொத்தினை வயிர மாலைக்
கொழுந்தினை அமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.1
717

முன்பனை யுலகுக் கெல்லாம்
மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை இலங்கு சோதி
இறைவனை அரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
களிற்றினை யுரித்த எங்கள்
அன்பனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.2
718

கரும்பினு மினியான் றன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை
இறப்பொடு பிறப் பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.3
719

செருத்தனை யருத்தி செய்து
செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்
பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே.

4.74.4
720

கூற்றினை யுதைத்த பாதக்
குழகனை மழலை வெள்ளே
றேற்றனை இமையோ ரேத்த
இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை அடிய ரேத்தும்
அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே.

4.74.5
721

கருப்பனைத் தடக்கை வேழக்
களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
பங்கனை அங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்சம்
நேர்பட நினைந்த வாறே.

4.74.6
722

நீதியால் நினைப்பு ளானை
நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்க வெண்ணீற்
றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா
விளக்கினை அளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.7
723

பழகனை யுலகுக் கெல்லாம்
பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானை யின்றோல்
மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.8
724

விண்ணிடை மின்னொப் பானை
மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா
இருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.9
725

உரவனைத் திரண்ட திண்டோ ள்
அரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கள்
சடையிடைப் பொதியும் ஐவாய்
அரவனை நினைந்த நெஞ்சம்
அழகிதா நினைந்த வாறே.

4.74.10

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fourth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page