திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.24 சீகாழி


பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்
Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page

250

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

1.24.1
251

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

1.24.2
252

தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

1.24.3
253

மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

1.24.4
254

மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.

1.24.5
255

கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.

1.24.6
256

கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே.

1.24.7
257

எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.

1.24.8
258

ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே.

1.24.9
259

பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.

1.24.10
260

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா இருப்பரே.

1.24.11