திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

1.18 திருநின்றியூர்


பண் - நட்டபாடை

185

*சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
(*) சூலப்படை என்றும் பாடம்.
(**) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம்.

1.18.1
186

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
(*) நயந்தானா என்றும் பாடம்.

1.18.2
187

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.

1.18.3
188

பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.

1.18.4
189

குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது *ஏந்தியன லாடுங்
கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
(*) எய்தி என்றும் பாடம்.

1.18.5
190

மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.

1.18.6
191

பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.

1.18.7
* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.1.18.8
192

நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.

1.18.9
193

நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.

1.18.10
194

குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.

1.18.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
தேவியார் - உலகநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page