திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முதல் திருமுறை)

1.13 திருவியலூர்


பண் - நட்டபாடை

130

குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.

1.13.1
131

ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.

1.13.2
132

செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.

1.13.3
133

அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.

1.13.4
134

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.

1.13.5
135

வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.

1.13.6
136

மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

1.13.7
137

பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.

1.13.8
138

வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.

1.13.9
139

தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.

1.13.10
140

விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.

1.13.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Page