குமாரபாரதியார் இயற்றிய
"திருத்தொண்டர்மாலை"

tirutoNTar mAlai of
kumArapAratiyAr
In tamil script, Unicode/UTF-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing a scanned image version of this work.
This etext has been prepared via Distributed Proof-reading implementation
of Project Madurai and we thank the following volunteers for their help in the
preparation of this etext: S Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan
and Sakthikumaran.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

குமாரபாரதியார் இயற்றிய
"திருத்தொண்டர்மாலை"


    சிவமயம்.
    இவை நேமத்தான்பட்டி
    உமாபதி சிவாசாரிய சுவாமிகள் வித்தியாசாலைக்கதிபர்
    ஸ்ரீமான் மெ.மு.பழ. பழநியப்பசெட்டியார் அவர்கள் விருப்பத்தின்படி
    மதுரை விவேகபாநு அச்சியந்திர சாலையில்
    பதிப்பிக்கப்பெற்றன.
    பரிதாபி வருஷம் தை மாதம்.
    இதன் விலை அணா 3.

    முகவுரை

    கருணாசாகரராகிய பரமேசுரன் சகல ஜீவர்களையு முய்வித்தற்பொருட்டு வேதங்களை வெளிப்படுத்தினர், அவ்வேத வாக்கியத்தினை யநுசரித்து நடகும் ஜீவர்கள் மாத்திரமே தர்மார்த்த காம மோக்ஷ மென்னும் நாற்பயனையு மடைதற்குரியராவர். ஆனால், அவ்வேதங்கள் சமஸ்கிருத பாஷையிலிருத்தலாலும், ஆறங்க முதலிய கருவி நூல்களிற்றேர்ந்தொரல்லாத ஏனையோராலுணர்தற் கரியனவாயிருத்தலாலும், அவற்றை யாவரும் எளிதிலுணர்ந்தொழுகுமாறு திருவள்ளுவ நாயனார் அவைகளின் சாரங்களனைத்தையுந் திரட்டிக் குறட்பாவடிவா அத்தமிழ் வேதத்தினை யியற்றியருளினார். அவ்வேதத்தினுண்மை யொழுக்கங்களைக் கல்வியறிவில்லாதவர்களும் எளிதினுணர்ந்துய்யுமாறு அறுபத்துமூன்று நாயன்மாரள் மெய்ஞ்ஞானத்தினாற் சிவானுபூதிச் செல்வம் பெற்ற ஜீவன் முத்தர்களாயிருந்தும் உலகத்தினருக்காக நடாத்திக்காட்டி அவ்வேதத்திற் கூறப்பட்ட இலக்கண ங்களியாவு மமையப்பெற்ற இலக்கிய வடிவமாயிருந்தனர்.

    பக்தி சிரத்தையோடு வேதப்பொருளை யறிந்து அதனைத் தழுவியொழுகுபவர் பெரியோராவரென்னு முறைப்படி பெரிய புராணத்துட் கூறிய திருத்தொண்டர்களுள் இன்ன நாயனார் இன்னவொழுக்கத்தினைக் கைப்பற்றி ஜீவன்முக்தராய்ப் பெரியோராயினர்; யாமும் அவ்வாறொழுகின் ஆவேமென்று எல்லோருக்கும் ஊக்கமுண்டாகுமாறு ஸ்ரீ குமாரபாரதி யென்பவர் தமிழ் வேதத்துட் கூறப்பட்ட ஒழுக்கங்கள் திருத்தொண்டர் சரித்திரத் தமைந் துள்ளனவென்று காட்டும்பொருட்டு ஒரு நூலியற்றி அதற்குத் திருத்தொண்டர் மாலையெனப் பெயரிட்டு வெளியிட்டனர்.

    அங்ஙனமாயின், திருத்தொண்டர் சரித்திரங்களில் வேதத்தில் விலக்கப்பட்ட செயல்களுஞ்சிற்சில காணப்படுகின்றனவே, அவையுளவாக, அவரைப்பெரியோரெனல் எங்ஙனமெனின், கூறுதும்:-ஜடபரதர் முதலியோரைப்போல ஜன்மாந்தரங்களிற் செய்த ஞானாப்பியாச முதிர்ச்சியாற் பிறக்கும்பொழுதே ஞானத்தோடவதரிக்குஞ் சாம் சித்தர்களாகிய பெரியோர்களுக்குத் தற்போதமின்மையால்,அவர்கள் கரணமெல்லலாஞ் சிவகரணமாதலின், அன்பின் பெருக்கால் ஒரோவழி எல்லை கடந்து அவர்கள் செய்வன யாவும் சிவச்செயலேயாம். அவையும் அவர்களுடைய பக்தியின் மேம்பாட்டினைச் சூசிப்பனவாகுமேயன்றி இழிவைத் தருவனவாகா. ஆனால், நீர் பெருக்கால் கரையினை யுடைத்து வேறு வழியிற் செல்லுமாயின்,
    உலகினர் அதனை மடையாகக்கொள்ளாது அடைத்துவிடுவர்.

    அதுபோல அன்பின் பெருக்காற்றொண்டர்களிடத்து நிகழ்ந்த விதிகடந்த செயல்களை அறிஞர்கள் ஒழுக்கமெனக்கண்டு பயிலாது விடுவர். ஒருகால் ஒருவர் அன்பின் மிகுதியால் அவ்விதச்செய லெம்மிடத்து நிகழுமென்பாராயின்,அச்செயலுக்கீசனுகந்து திருத்தொண்டர்கட்கு வெளிப்பட்டதுபோல இவர்கட்கும் வெளிப்படல் வேண்டும். அன்றியும், ஞானத்தால் அபிமானமொழிந்தவர் செய்த காரியங்களை அபிமான நீங்காதார் செய்தல் அரிதினுமரிதாம்.

    ஆதலால்,முக்தி விருப்பமுடைய ஒவ்வொருவரும் இத்திருத்தொண்டர்மாலை யென்னும் நூலைச்செவ்வையாகப்படித்து, அதனுட் கூறப்பட்டுள்ள உண்மை நாயன்மாருடைய ஒழுக்கங்களைக் கைக்கொண்டொழுகுதல் இன்றியமையாமையேயாம். ஒழுக்கம் பயிலாதார்க்கு இறைவனிடத்து அன்பு செல்லாதாம். அது செல்லாத போது அவனருளெய்துதலின்றாம், அஃதின்றேல் முக்தியுமின்றாம்; "ஈஸ்வராநுக்கிரகத்தினாலேயே புருடர்களுக்கு அத்வைத வாசனையுண்டாம்" என்னும் அவதூத கீதாவசனமுண்மையான் இத்திருத்தொண்டர்மாலையுட் கூறப்பட்டுள்ள உண்மை நாயன்மார்களுடைய ஒழுக்கங்களும், இந்நூலும் இவ்வுலகிற் பரவி என்று நிலையுறுமாறு எல்லாம் வல்ல விறைவன் அருள்புரிவாராக.

          அ.முத்துசாமி பிள்ளை.

    பாயிரம்.

    நூலாசிரியர் செய்தவை.
    தூண்டா விளக்கருள்செய் தொண்டத் தொகையினம்பி
    யாண்டாரந் தாதிமுறை யன்பானோர்க் - கீண்டியன்ற
    வள்ளுவர் நூல் வெண்பா வகுத்துரைப்ப னாரையூர்ப்
    பிள்ளையா ரைத்தொழுது பின்.
    1
    தூயதிருத் தொண்டத் தொகைதந்து சுந்தரர்தா
    மாயிருஞா லத்தோரை வாழ்வித்தா - ராயதெவன்
    கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
    டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
    2
    மைவைத்த கண்டர் மறைவாக்கி னாற்புகழ்ந்த
    சைவத் தலைவரன்பு சாற்றுவல்யான் - கைவைத்
    தரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்.
    3
    உரையாசிரியர் செய்தவை.
    முத்திபெற்றோர் மேன்மை முழுதுரைக்கு மிந்நூற்குச்
    சத்தியள வாயருத்தஞ் சாற்றவே - அத்திமுகன்
    றன்னருளும் ஆறுமுகன் றன்னருளு முன்னிற்கும்
    என்னறிவோ யாது மிலை.
    4
    தெண்டர்கள் பெருமை முற்றுஞ் சொற்றிடச் சுருதி யோர்ந்த
    பண்டிதர் தமக்கு மேலாப் பண்புடைத் தெனினுஞ் சேய்போல்
    விண்டன னாசை மீறில் வெட்கமுந் தோன்றா தென்றே
    மண்டலந் தனில்வ ழங்கும் வார்த்தையும் பொய்க்கா தம்மா.
    5
    பாயிரம் முற்றிற்று.
    ----------------

    ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த
    திருத்தொண்டத்தொகை.


    சிவமயம்.
    திருச்சிற்றம்பலம்.
    பண் கொல்லிக்கவ்வாணம்.
    தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்
          றிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியே
    னில்லையே யென்னாத வியற்பகைக்கு மடியே
          னிளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
          விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியே
    னல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    1
    இலைமலிந்த வேனம்பி யெறிபத்தற்கடியே
          னேனாதி நாதன்ற னடியார்க்கு மடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
          கடவூரிற் கலயன்ற னடியார்க்கு மடியேன்
    மலைமலிந்த தோள்வண்ணன் மானக்கஞ் சாற
          னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியே
    னலைமலிந்த புனன்மங்கை யானாயற்கடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    2
    மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
          முருகனுக்கு முருத்திர பசுபதிக்கு மடியேன்
    செம்மையே திருநாளைப் போவாற்கு மடியேன்
          றிருக்குறிப்புத் தொண்டர்தம் மடியாற்கு மடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
          வெகுண்டெழுந்த தாதையை மழுவினா லெறிந்த
    வம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    3
    திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
          திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்
    பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்
          பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கு மடியே
    னொருநம்பி யப்பூதி யடியார்க்கும் மடியே
          னொலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியே
    னருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியே
          னாரரூ னாரூரி லம்மானுக் காளே.
    4
    வம்பறா வரிவண்டு மணநாற மலரு
          மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
    வெம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியே
          னேயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியே
    னம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியே
          னாட்டமிகு தண்டிக்கு மூர்க்கற்கு மடியே
    னம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    5
    வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே
          மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
          செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்
    கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கு மடியேன்
          கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியே
    னார்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    6
    பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
          பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்
    மெய்யடியா னரசிங்க முனையரையற் கடியேன்
          விரிதிரைசூழ் கடனாகை யதிபத்தற் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
          கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியே
    னையடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    7
    கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
          கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியே
    னிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
          நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்
    றுறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
          தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியே
    னறைக்கொண்ட வேனம்பி முனையடுவாற் கடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    8
    கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
          காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
          மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன்
    புடைசூழ்ந்த புலிய தண்மே லரவாட வாடி
          பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியே
    னடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    9
    பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
          பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
          றிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
          முழுநீறு பூசிய முன்வர்க்கு மடியே
    னப்பாலு மடிச்சார்ந்த வடியார்க்கு மடியே
          னாரூர னாரூரி லம்மானுக் காளே.
    10
    மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
          வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன்
    றென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்
          றிருநீல கண்டத்துப் பாணனார்க் கடியே
    னென்னவனா மரனடியே யடைந்திட்ட சடைய
          னிசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோ
    னன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பா
          ராரூரி லம்மானுக் கன்பரா வாரே.
    11
    திருச்சிற்றம்பலம்.
    ---------

    நூல்.

    தில்லைவாழந்தணர்.
    பூவா யிரம்பேர் புகழ்கூத் தரைத்தில்லை
    மூவா யிரம்பேர் முதலெனக்கொண்-டோவார்
    அகர முதல வெழுத்தெல்லா மாதி
    பகவன் முதற்றே யுலகு.
    1
    திருநீலகண்டநாயனார்.
    ஆலகண்ட ராணைகொண்டில் லாளெதிர்செல் லாதுதிரு
    நீலகண்ட ரைம்பொறிமா னீக்கினார்-மேலாம்
    உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
    வரனென்னும் வைப்புக்கோர் வித்து.
    2
    இயற்பகை நாயனார்.
    மயற்பகையுள் ளுள்ளுவப்ப மாதவர்க்கில் லாளை
    யியற்பகையி கழ்ந்தெள்ளா தீந்தான் -செயற்பா
    லிகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
    முள்ளு ளுவப்ப துடைத்து.
    3
    இளையான்குடி மாற நாயனார்.
    உய்வித் தவனடியார்க் கோரிருளிற் போய்மாறன்
    செய்வித்தும் வாரியனஞ் செய்தானே-மெய்வருந்தி
    வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சின் மிசைவான் புலம்.
    4
    மெய்ப்பொருள் நாயனார்.
    பொய்ப்பொருண்மாற் றான்புரிந்த பொய்த்தவவே டம்பொருளாய்
    மெய்ப்பொருளார் கண்ட விதந்தானே-மெய்ப்பொரு
    ளெப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    5
    விறன் மிண்ட நாயனார்.
    அறன்மண்டு சுந்தரனை யாரூ ரரனை
    விறன்மிண்டர் தாமே வெகுண்டார்-மறமன்
    றுறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல்
    ஒல்லை யுணரப் படும்.
    6
    அமர்நீதி நாயனார்.
    நிரம்புபொருள் சேயொடமர் நீதிமனை யாளொ
    டரன்கோ வணத்தட் டதனே-ரிருந்தார்
    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
    கோடாமை சான்றோர்க் கணி.
    7
    சுந்தர மூர்த்தி நாயனார்.
    அனந்தருள்செம் பொன்மணிமுத் தாற்றிலிட் டாரூர்க்
    குளந்தனிலே கண்டெடுத்து கொண்டா-ருளைந்து
    பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
    சொரியினும் போகா தம. (8)
    8
    எறிபத்த நாயனார்.
    பத்தர்பூ மூளி பறித்தகரி பாகரைக்கொன்
    றித்தலவேந் தஞ்ச வெறிபத்தர்-கைத்தார்
    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயுங் காத்த லரிது.
    9
    ஏனாதி நாத நாயனார்.
    தானாக வெல்லாதான் தன்னுதல்வி பூதியைக்கண்
    டேனாதி நாத ரிகலிழந்தார்- ஆனாத
    சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
    துலையல்லார் கண்ணுங் கொளல்.
    10
    கண்ணப்ப நாயனார்.
    புண்ணப்பர் கண்ணிலென்று புன்கணுறுப் பீர்ந்தப்பி
    கண்ணப்ப ரன்புறுப்பிற் கைசெய்தார் - வண்ணப்
    புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
    யகத்துறுப் பன்பி லவர்க்கு.
    11
    குங்கிலியக் கலைய நாயனார்.
    தலையன்பி னால்வளைந்தார் தம்மைநிமிர்த் திட்டான்
    கலையன்பின் காணிடுக்கண் காணான் -மலைவின்
    மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
    விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
    12
    மானக்கஞ்சாற நாயனார்.
    பஞ்சவடிக் கென்றுசிவ பக்தர்க் குவப்பமண
    வஞ்சுதைமென் கூந்தலரிந் தன்றீந்தார்-கஞ்சாற
    ரீத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
    13
    அரிவாட்டாய நாயனார்.
    போயகமர் மாவடுவும் புண்ணியர்வா யிற்கொளவே
    தாயர்களத் தூறுவடுத் தான்கொண்டார்-வீயாரோ
    சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
    மீத லியையாக்கடை.
    14
    ஆனாய நாயனார்.
    ஆனாயர் வேயிசையி லஞ்செழுத்தே யஞ்செவிச்செந்
    தேனா யரனுக்கந் திக்களித்தார்-கானிற்
    பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து
    மிருடீர வெண்ணிச் செயல்.
    15
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    ஆதியிலா ரூரர்க் கமுதாக்க வேபரவை
    வீதியெல்லாம் நெல்லாய் விளைந்ததே-நீதியால்
    இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதென்
    இல்லவண் மாணாக் கடை.
    16
    மூர்த்தி நாயனார்.
    சேர்த்திமுழங் கையெலும்புந் தேயச்செஞ் சந்தனமா
    மூர்த்தி மதுரேசர் முன்பரைத்தார்-பார்த்தீரோ
    அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
    ரென்பு முரியர் பிறர்க்கு. (17)
    17
    முருக நாயனார்.
    மட்டார்தார் கண்ணி வகைசிவபூ சைக்கொருநாண்
    முட்டாது செய்தார் முருகனார்-விட்டாரோ
    வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்குங் கல்.
    18
    உருத்திர பசுபதி நாயனார்.
    உருத்திரமே சொல்லி யுதகத்துள் ளேநின்
    றுருத்ர பசுபதியா ருற்றார்-திருத்தாள்
    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
    ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.
    19
    திருநாளைப் போவார் நாயனார்.
    மூவா யிரமறையோர் மொய்ப்பத் திருநாளைப்
    போவார் சிதம்பரத்துட் போயடைந்தார்-ஓவாப்
    பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
    கருமமே கட்டளைக கல்.
    20
    திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
    தொண்டர் குறிப்பறிந்த தொண்டர் திருக்குறிப்புத்
    தொண்டரைத்தங் கந்தைதந்து சோதியராட்-கொண்டார்
    குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
    யாது கொடுத்துக் கொளல். )
    21
    சண்டேசுர நயனார்.
    அறஞ்செய்த தாதைதா ளற்றிடத்தண் டீசர்
    மறஞ்செய்கொலை புண்ணியமா வாழ்ந்தார்-திறந்தெரியி
    னல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
    நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
    22
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    ஓராப் பரவைக் குமாபதியைத் தூதாக்கித்
    தீராப் புலவியையுந் தீர்த்தாரே-யாரூரர்
    உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
    மிக்கற்றா னீள விடல்.
    23
    திருநாவுக்கரசு நாயனார்.
    தரைசேர் சமணீங்கிச் சைவஞ்சேர் நாவுக்
    கரசர் வயிற்றுவலி யற்றார்-உரைசேர்ந்த
    சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்.
    24
    நீற்றறைநஞ் சானைகட னேருற்றா ரப்பருக்கு
    மாற்றமணர் பின்னிருந்து வாழ்ந்தாரோ-வாற்றரிய
    நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர். )
    25
    மருணீக்கி யார்தரும சேனருமாய் நாவுக்
    கரசரப்ப ராகியின்ப மானார்-அருளால்
    இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு.
    26
    விண்களிப்பக் காணாவியன்கயிலை வாழ்வையப்பர்
    கண்களிப்ப வையாற்றிற் கண்டுவந்தார்- எண்களிப்பக்
    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
    27
    மாமணிபொன் மாதரெதிர் வந்துறினும் பற்றற்றார்
    தாமரன்பால் வந்தரசர் தாழ்த்தாரோ-வாமெனவே
    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
    நிலையாமை காணப்படும்.
    28
    குலச்சிறை நாயனார்.
    நலச்சிறைநீர் வேணியார் நல்லடியார் யார்க்குங்
    குலச்சிறையார் தாம்பணிதல் குன்றா-ரிலர்க்கிகழா
    ரெல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
    செல்வர்க்கே செல்வந் தகைத்து.
    29
    பெருமிழலைக் குறும்ப நாயனார்.
    நாவலர்கோ மான்கயிலை நாளைப்போ மென்றுமுன்போய்
    மேவிமிழ லைக்குறும்பர் வீற்றிருந்தார்-யாவருக்கு
    மின்னா தினனில்லூர் வாழ்த லதனினு
    மின்னா தினியார்ப் பிரிவு.
    30
    காரைக்காலம்மையார்.
    என்புருவா லம்மையெள்ள வீசர்நமக் கம்மையென்னு
    மன்புருவாள் காரைக்கா லம்மைகாண்-முன்பே
    யுருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
    கச்சாணி யன்னா ருடைத்து.
    31
    அப்பூதியடிக ணாயனார்.
    அரசினையப் பூதி யடிகளறி வாரோ
    வுரைசெயுணர் வாலுறுநட் புற்றார்-மருவிப்
    புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
    னட்பாங் கிழமை தரும்.
    32
    திருநீலநக்க நாயனார்.
    நலங்கொடிரு நீலநக்கர் நாதர்மே லில்லாள்
    சிலம்பிவிழ வாய்மருந்து செய்தாள்-சலங்கொளுமு
    னோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
    33
    நமிநந்தியடிக ணாயனார்.
    நக்கமணர் வெள்கநமி நந்தியா ரூரர்க்கு
    மிக்கபுன லாலேவிளக் கெரித்தார்-தக்கமனத்
    தெண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்.
    34
    சுந்தர மூர்த்தி நாயனார்.
    ஆறாறு கட்டாரை யாறணையா வாறுபெரு
    காறாறு காட்டநடந் தாரூரர்-பேறானார்
    வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
    னுள்ளத்தி னுள்ளக் கெடும்.
    35
    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்.
    வால வயதில் வளர்புகலிப் பிள்ளையார்
    போல விசையம் புரிந்தவரார்-ஞாலமிசைத்
    தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
    தோன்றலிற் றோன்றாமை நன்று.
    36
    பண்ணார் பசுந்தமிழ்ச்சம் பந்தரெதிர் வந்தமண
    ரெண்ணா யிரங்கழுவி லேறினார்-ஒண்ணாது
    வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
    சொல்லே ருழவர் பகை.
    37
    முத்தமிழ்ஞா னத்தலைவர் முன்னம் பகைசாரப்
    புத்தனெதிர் நின்றிடியிற் பொன்றினா-னித்திறமென்
    கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
    காற்றாதா ரின்னா செயல்.
    38
    ஏறியவோ டக்கோ லிசைஞானச் செந்தமிழா
    லாறுகடந் தார்தோணி யார்மகனார்-வீறடங்கா
    வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
    முள்ளத் தனைய துயர்வு.
    39
    கணவனெனக் காதலியைக் காழியர்கைப் பற்றி
    மணவறையீ சன்கழலாய் வாழ்ந்தார்-குணமே
    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
    40
    ஏயர்கோன் கலிக்காம நாயனார்.
    ஈகனையாள் வாராம்வந் தென்னையாள் வாரென்று
    காசினியில் மாண்டார் கலிக்காமர்-பேகின்
    மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த விடத்து.
    41
    திருமூல நாயனார்.
    பரகாயஞ் சேர்ந்தார் பசுக்களா லாய்ச்சி
    மருவாமன் மாதவமே வாய்ந்தார்-திருமூல
    ரூழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
    தாழா துஞற்று பவர்.
    42
    தண்டியடிக ணாயனார்.
    அந்தகனென் றேசு மமணரந்த ராயொழியத்
    தந்தமொழி சாதித்தார் தண்டியார்-முந்தமொழி
    சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
    சொல்லிய வண்ணஞ் செயல்.
    43
    மூர்க்க நாயனார்.
    உருளாய மும்பொன் னுதவுதன்மூர்க் கர்க்கே
    பொருளாய மற்றவர்க்கே போக்கு-மருளா
    மறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
    மறத்தலி னூங்கில்லை கேடு.
    44
    சோமாசிமாற நாயனார்.
    சோமாசி மாறனார் சுந்தரரால் யாகமினி
    தாமா றரனை யழைப்பித்தார்-ஆமாம்
    போதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
    னதுநோக்கி வாழ்வார் பலர்.
    45
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    பொருட்டுறையுன் பாட்டேநற் பூசையென்றா ரூரர்க்
    கருட்டுறையா ரன்புசெய்வா ரானார்-மருட்டேர்
    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கு மீயப் படும்.
    46
    சாக்கிய நாயனார்.
    அங்கசன்பூ வெல்லா மடுகணையே சாக்கியர்கைச்
    செங்கலெல்லாஞ் சங்கரர்க்குத் தேமலரே-செங்கேழ்க்
    கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.
    47
    சிறப்புலி நாயனார்.
    எய்தமகிழ்ந் தின்சொலுரைத் தீசனடி யார்க்கிதமே
    செய்தனமே செய்தார் சிறப்புலியார்-வெய்துற்றார்
    மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.
    48
    சிறுத்தொண்ட நாயனார்.
    காய்க்கறிவே றொன்று தொடாக் கள்ள வயிரவர்க்கோர்
    சேய்க்கறிசெய் திட்டார் சிறுத்தொண்டர்-வாய்க்கினிதா
    யின்னா திரக்கப் படுத லிரந்தவ
    ரி்ன்முகங் காணு மளவு.
    49
    சேரமான்பெருமா ணாயனார்.
    நெறிவார் சடையரைப்போ னீணிலத்தார் செய்கை
    யறிவார் கழறிற் றறிவார்-அறிவாரார்
    எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் றொழில்.
    50
    சேரர்கோ னீதித் திரவியங்கள் சுந்தரர்பாற்
    சோரர் கவர்ந்தொளித்துஞ் சோர்வுண்டோ-பாரி
    லழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
    பிற்பயக்கு நற்பா லவை.
    51
    கணநாதய நாயனார்.
    நாட்டிலடி யாரையெல்லா நாதன் பணிவிடையே
    காட்டிவாழ் வித்தார் கணநாதர்-வேட்டிவர்தாஞ்
    செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
    வானகமும் மாற்ற லரிது.
    52
    கூற்றுவ நாயனார்.
    ஆற்றரிதா மீச னடிமுடியா கப்புனைந்து
    போற்றி மனக்கவலை போக்கினார்-கூற்றர்
    தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்
    மனக்கவலை மாற்றலரிது.
    53
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    ஆரூர ரீசனைத்தூ தாக்கியநாட் கூன்குருடு
    தாரோடு தாம்பூலந் தாங்கவினை-தீர்வார்
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.
    54
    பொய்யடிமையில்லாத புலவர்.
    மதுரையிலே ழேழ்புலவர் வல்லசிவன் பாத
    மதுபொருளா கக்கவிசெய் தாரே-புதுமையோ
    கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
    னற்றா டொழாஅ ரெனின்.
    55
    புகழ்ச்சோழ நாயனார்.
    தங்களத்தில் வீழ்ந்த சடைத்தலைகண் டஞ்சியஞ்சிப்
    பொங்கழற்குள் வீழ்ந்தார் புகழ்ச்சோழர்-எங்குமறாத்
    தீயவை தீய பயத்தலாற் றீயவை
    தீயினு மஞ்சப் படும்.
    56
    நரசிங்கமுனையரைய நாயனார்.
    மூரி நரசிங்க முனையரையர் மாதவருட்
    சீரியதூர்த் தர்க்கிரட்டி செய்தாராம்-பூரிதா
    னற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
    57
    அதிபத்த நாயனார்.
    மேனாட்செல் வங்கெடினு மீன்வலைவீ சிக்கோரொண்
    மீனாளும் விட்டா ரதிபத்த-ரானா
    திடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
    கடனறி காட்சி யவர்.
    58
    கலிக்கம்ப நாயனார்.
    மெய்யடியார் தாளில்லாள் வெள்கக் கழுவிவாள்
    கையடியங் கீர்ந்தார் கலிக்கம்பர்-பொய்யடிக்கொண்
    மல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
    நல்லார்க்கு நல்ல செயல்.
    59
    கலிய நாயனார்.
    எள்ளா விளக்கரன்பா லேற்றவே வாள்கலியர்
    கொள்ளாரே லேதுங் கொடாருலகி-லுள்ளார்கொ
    னல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
    கல்லார்கட் பட்ட திரு.
    60
    சத்திநாயனார்.
    அண்ணலடி யாரையிகழ்ந்து தார்நரகி லாழாதே
    தண்ணளியா னாத்தறித்தார் சத்தியா-ரெண்ணமுற
    யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
    61
    ஐயடிகள் காடவர்கோ னாயனார்.
    நாடலரு நற்பதிக ணண்ணிநல் வெண்பாவாய்ந்
    தாடலர னுக்களித்தா ரையடிகள்-காடவர்கோன்
    றாமின் புறுவ துலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந்தார்.
    62
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    நீரூர் முதலையது முன்னுண்ட பிள்ளையைப்பின்
    னாரூரர் பாவா லழைப்பித்தார்-பாரூர்
    பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
    63
    கணம்புல்ல நாயனார்.
    கணம்புல்லர் நெய்வாங்கக் காணார் கணம்பு
    லிணங்குதலை நெய்விளக்கொன் றிட்டார்-வணங்கரன்பாற்
    றுன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
    யின்பம் பயக்கும் வினை.
    64
    காரி நாயனார்
    பாரின்மூ வேந்தர் பரிசிலுத வப்பாடிக்
    காரியா ராலயங்கள் கட்டினார்-ஓரிடமோ
    யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.
    65
    நெடுமாற நாயனார்.
    பழுதறுசம் பந்தரெதிர் பாழமணர் தாழ
    லழுவறநெல் வேலி வென்ற மாறன்-கழுவிட்டா
    னந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    66
    வாயிலார் நாயனார்.
    ஆயறிவு தீப மகமலரன் பேயமுதங்
    கோயிலிறைக் கோர்மனமாய்க் கொண்டுவந்தார்-வாயிலா
    ரோர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
    67
    முனையடுவார் நாயனார்.
    வினையடுவார் வந்தடுக்க வென்றுகொண்ட கூலி
    தனையடுவார் சைவர் தமக்கே-முனையடுவார்
    தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
    68
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    தென்புகலூ ரீசனையுஞ் சென்றுபணிந் தாரூரர்
    பொன்புகலாப் பெற்றார் புகழ்பெற்றா-ரின்புற்றார்
    ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
    ளேனை யிரண்டு மொருங்கு.
    69
    கழற்சிங்க நாயனார்
    தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை
    விழச்சென் றரிந்து விடுத்தார்-கழற்சிங்கர்
    ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
    தேர்ந்துசெய் வஃதே முறை.
    70
    இடங்கழி நாயனார்.
    நடங்கழியா ரன்பர்க்கே நற்பொருள்க ளெல்லா
    மிடங்கழியா ரன்பினெடுத் தீந்தார்-முடங்கா
    அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
    செல்வச் செவிலியா லுண்டு.
    71
    செருத்துணை நாயனார்.
    கருத்தனணி பூவைக் கழற்சிங்கன் றேவி
    யிருத்தியின் மோந் தாள் மூக் கரிந்தார்-செருத்துணையார்
    வாளாடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
    னுண்ணவை யஞ்சு பவர்க்கு.
    72
    புகழ்த்துணை நாயனார்.
    வற்கடம்வந் தூண்போய்மெய் வாடிப் புகழ்ந்துணைகை
    நற்கலசம் வீழவர னார்கொடுத்தார்-பொற்காசு
    தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
    மெய்வருந்தக் கூலிதரும்.
    73
    கோட்புலி நாயனார்.
    பொலிகிளைகொன் றார்கோட் புலியார் விரை
    கலிகடந்த குற்றங் கடிந்தா-ருலகிற்
    குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் றொழில்.
    74
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    மாவணங்கைக் கொண்டிடுமுன் வந்தரனார் சுந்தரர்க்கோ
    ராவணங்கைக் கொண்டுமறித் தாட்கொண்டார்-நோவ
    அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
    வல்லார்நட் பாய்ந்து கொளல்.
    75
    பத்தராய்ப் பணிவார்கள்.
    வாய்ப்பவர னைத்தொழுது வாய்குழறிக் கண்ணருவி
    தோய்ப்பநடுங் கிப்புளகித் தோர்பத்த-ராய்ப்பணிவார்
    அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
    கென்புதோல் போர்த்த வுடம்பு.
    76
    பரமனையே பாடுவார்.
    பரமனையே பாடுவார் பாடும் புகழா
    லிருவினையுஞ் சேரா ரிவரே-மருளாம்
    இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    77
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்.
    அத்தனடி யல்லா லறம்பொருளின் பங்களிலே
    சித்தமலை யார்சித்தத் தைச்சிவன்பால்-வைத்தார்தாம்
    பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.
    78
    திருவாரூர்ப் பிறந்தார்.
    மன்னுதிரு வாரூர் மதிள்வட்டத் துப்பிறந்தா
    ருன்னு சிவகணத்தி னுற்றுயர்ந்தா-ரின்னே
    நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
    79
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்.
    கருமேனி யன்பாற் கழீஇமும் போதுந்
    திருமேனி தீண்டுவார் சீர்வாழ்-வொருவா
    பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    80
    முழுநீறு பூசியமுனிவர்.
    அழுதீ சனைநினைந்தே யஞ்சுபதஞ் சொல்லி
    முழுநீ றணிவார்தா முட்டார்-பழுதுறினும்
    ஒல்லும் வகையா னறவினை யோவாதே
    செல்லும்வா யெல்லாஞ் செயல்.
    81
    அப்பாலுமடிச்சாந்தார்.
    பாடுமுனைப் பாடியர்கோன் பாடலின்மெய்ப் பாடகங்கொண்
    டாடுவரப் பாலு மடிச்சார்ந்தார்-நீடரன்பாற்
    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி.
    82
    சுந்தரமூர்த்தி நாயனார்.
    பித்தரென வைதாற் பிழைபொறுத்தன் மாத்திரமோ
    வத்தரா ரூரர்க் கருள்புரிந்தார்-நித்தம்
    அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
    வழிவந்த கேண்மையவர்.
    83
    பூசலார் நாயனார்.
    வானமுதற் றூவி வரைமனத்தே கட்டியரன்
    றானமாப் பூசலார் தாபித்தார்-ஞான
    மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    84
    மங்கையர்க் கரசியார்.
    ஞானசம் பந்தரங்கே நண்ணியபி னெண்ணிலா
    தானிவிளைத் தாளே யமணர்க்கு-மானியார்
    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக சீர்த்த விடத்து.
    85
    நேசநாயனார்.
    ஈசருடை மெய்யடியார்க் கேதேனுஞ் செய்வனென்று
    நேசருடை கோவணங்கீ ணெய்தளித்தா-ராசைபுரிந்
    தன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்காற் பொன்றாத் துணை.
    86
    கோச்செங்கட் சோழ நாயனார்.
    முந்திகலாற் செங்கணான் மூண்டானைக் காவினும்பின்
    றந்திபுகா வாயில் சமைத்தானே-யெந்தைக்
    குடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
    பாம்போ டுடனுறைந் தற்று.
    87
    இதுவுமது.
    சிலம்பியாய் நூற்கோயில் செய்தசெங்க ணான்பின்
    றலங்கடொறுங் கோயில் சமைத்தார்-நலங்கூர்
    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
    ரவஞ்செய்வா ராசையுட் பட்டு.
    88
    திருநீலகன்ட யாழ்ப்பாண நாயனார்.
    கானத் திருநீல கண்டயாழ்ப் பாணரைப்போன்
    ஞானத் தலைவர்க்கு நட்பினரார்-மானத்து
    மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
    கற்றா ரனைத்திலர் பாடு.
    89
    சடைய நாயனார்.
    ஆம்பற்றினாற்சடைய ராலால சுந்தரரைத்
    தாம்பெற்ற பேறே தவப்பேரே-யோம்பிப்
    பேறுமவற்றுள் யாமவறிவ தில்லை யறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற.
    90
    இசைஞானியார்.
    உற்றவிசை ஞானிதா னோங்குபுகழ்ச்சுந்தரரைப்
    பெற்றதினு மன்புமிகப் பெற்றாளே-முற்றறிவா
    லீன்ற பொழுதிற் பெரிதுவக்கும்ந் தன்மகனைச்
    சான்றோ னெனக் கேட்ட தாய்.
    91
    சுந்தரமுர்த்தி நாயனார்.
    கனிந்திதையங் கண்டார் அமலினியுங் காவி
    லனிந்திதையுஞ் சுந்தரர்கண் டாங்கே-புனைந்துரைத்தென்
    கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
    ளென்ன பயனுமில.
    92
    இதுவுமது.
    சுந்தரரைக் கண்டலர்கொய் தோகையர்சென் றாரொருநா
    ளெந்தைகயி லைக்கிரையா லின்றளவும்-வந்ததே
    கண்டது மன்னு மொருநாளலர்மன்னுந்
    திங்களைப் பாம்புகொண் டற்று.
    93
    இதுவுமது.
    அங்கருளா லாரூர ராசையற வேபரவை
    சங்கிலியார் மானோய் தவிர்ப்பித்தா-னெங்கோன்
    பிணிக்கு மருந்து பிறம னணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து.
    94
    இதுவுமது.
    சீரூர் கயிலையினுஞ் செல்லுநாள் வில்லவனை
    யாரூரர் சிந்தித் தழைத்திட்டா-ரோரார்
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு.
    95
    தள்ளாது சேரரொடு தாங்கயிலைக் காரூரர்
    வெள்ளானை மேற்சென்றார் விண்ணாறா-யுள்ளமிசை
    வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
    மீண்டு முயலப்படும்.
    96
    இதுவுமது
    நாவலர்வெள் ளானை நாடாத்தவுப மன்னியர்போ
    லாவலுடன் சென்றுபணிந் தார்களோ-தேவர்
    பணியுமா மென்றும் பெருமை சிறுமை
    யணியுமாந் தன்னை வியந்து.
    97
    இதுவுமது.
    பாலாழி யுண்ட பழமுனிசொன் னான்முனிவ்ர்க்
    காலால சுந்தரன்சொ லங்கினிதாய் -மேலாம்
    பணிவுடைய னின்சொல னாத லொருவற்
    கணியல்ல மற்றுப் பிற.
    98
    இதுவுமது.
    தம்முடைய தோழர்வரத் தம்முடைய தோழரையும்
    வம்மினென வண்கயிலை வாழ்வித்தா-ரெம்மிறைவர்
    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
    யொல்லும்வா யூன்று நிலை.
    99
    இதுவுமது .
    சொல்வைத்த சேரனுலாச் சொல்லக் கயிலையரன்
    செல்வத் திருச்செவியிற் சேர்ந்ததே-மல்வைத்த
    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை.
    100

    திருத்தொண்டர் மாலை முற்றிற்று.
    ---------


    இந்நூலியற்றியோர் பெயரும் மகிமையும் பயனும்.

    பன்னு கலைக்குமர பாரதியா மாமுனிவன்
    சொன்னதமிழ் மாலை துதிப்பதற்கு-மின்னுதலை
    யாயிரநா வாயிரத்தோ னன்றி யெவர்கொலோ
    மாயிருஞா லத்தின் மகிழ்ந்து.

    அடியார் மகிமை யநுதினமு மெண்ணி
    யடியார் பணியிங்கே யாற்றி-யடியார்பாற்
    கேட்டுநூல் சிந்திக்கிற் கேடிலா மெய்யுணர்வால்
    வீட்டுநெறி கூடும் விரைந்து.

    இ.பொ. வெளிப்படை.
    ஆகப்பாயிரமுள்பட கவிகள் 107
    சிவகுருநாதன் றிருவடி வாழ்க.
    திருத்தொண்டர்பாதமேகதி.
    ----------------------

    This file was last updated on 28 Dec. 2008
    Feel free to send corrections to the webmaster.

    Back to thamizh shaivite literature Page
    Back to Shaiva Sidhdhantha Home Page