|
Home > Scriptures & Stotras > Tamil
சிவமயம்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
நெடுங்கழிநெடில்
* * *
பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
பெருகுறு மன்பாற் பூசனை புரிந்த
பிணங்குநூற் சிலம்பிவெவ் வரவம்
பிறைமருப் புரற்கால் யானையென் றிவற்றின்
பிறவியோ விதழ்முறுக் கவிழ்ந்து
முருகுமிழ் நறுமென் மலர்புனைந் துன்னை
முற்றும்வந் தனைபுரி யாமன்
முகிழ்முலை மகளிர் மயலிடை யழுந்து
மூடர்தம் பிறவியோ நல்ல
திரைபொருங் கங்கை யுவட்டெடுத் தொழுகுஞ்
செஞ்சடை மிசையொரு துளிநீர்
தெறித்தவர் தமையு நறவுகொப் பளிக்குஞ்
செழுமலர்க் கற்பக வேந்து
மெரிபுரை யிதழ்ச்செங் கமலநான் முகனு
மெய்தரும் பதத்தில்வைத் தருள்வோ
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 1
கட்டழ மைந்து காளையம் பருவங்
கடந்திடா துள்வலி யுடைத்துக்
கலங்கல்செய் பிணியின் றியன்றயாக் கையராய்க்
கல்வியங் கடல்கடந் தவராய்
நட்டவர் விரும்பு மாறுநீ செய்ய
நடக்குநா ளுடல்வெறுத் துனையே
நம்பியா ரூரன் முதலியோர் நண்ண
நானுடல் விடுமென வழிவேன்
பட்டிருள் விழுங்க வலர்கதி ரவனும்
பனிமதி யோடுயிர்த் தொகையும்
பார்புனல் சுடுதீ வளிவிசும் பென்னப்
பட்டவைம் பூதமு மாகு
மெட்டுரு வடைந்து முருவமொன் றின்றி
யிற்றென வுணர்வரும் பொருளே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 2
மனமெனும் வயமா வென்வயப் படாமன்
மயங்குறு மைம்புல வீதி
மறிபடா தோடு கின்றது முறையோ
மறித்ததை நிறுத்தியென் றனக்கு
நினையல துதவு வாரிலை யதனா
னினைப்பர வுற்றன னதனை
நிறுத்திநீ யிவர்ந்து பின்னர்நீ வேண்டு
நெறிகளிற் சென்றிட விடுவாய்
கனலுறு மெழுகி னெஞ்சநெக் குடைந்து
கரையில்பே ரன்பெனும் வெள்ளங்
கண்வழி புறப்பட் டென்னநீர் வாரக்
காலங்க டொறும்வழு வாம
லினமலர் தூவு மடியவ ருள்ளத்
திருள்கெட வெழுந்தபே ரொளியே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 3
நிலங்கடந் தவன்முன் னறுமலர் சாத்த
நிகலரிலம் மூர்த்திமுன் சந்து
நினக்கணி வுறவாட் டாயர்முன் னிருந்து
நிவேதனம் புரிந்திட வன்று
நலங்கிளர் கலையர் கலியர்முன் றூப
நல்விளக் களிப்பநின் றன்னை
ஞானசம் பந்தப் பிள்ளைமுன் பாட
நாணிலேன் பூசனை புரிவேன்
விலங்கினுங் கடையர் வளர்த்தசெந் தீயின்
விரைந்தெழும் வாள்வரி வேங்கை
விடுப்பவங் கதுவந் தெதிர்ந்திட விகழ்ந்து
விடாததன் றோலுரித் திருள்கொண்
டிலங்கொளி யிரவி யனையமெய்ப் படுத்த
விறைவனே யநிட்டநின் றகற்றி
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 4
மூக்கிடை யிரண்டு விழிகளே றுதன்முன்
முடங்குகைக் கோலொரு காலா
முன்னநின் றிருவாய் மலர்ந்தருள் செய்த
முதிர்கலைப் பொருள்படித் தவராய்க்
கார்க்கடன் முகட்டி னிரவிவந் தெழுமுன்
கடிதுசென் றணிமலர் கொய்துன்
கழற்கிடார் பிறப்பி னாய்ப்பிறப் பினிது
கற்றவ ரிகழந்திடா மையினா
னோக்கற நோக்கு முருவமே நாவா
னுகர்ந்திடா வினியபே ரமுதே
நுதல்விழிக் கனியே கறைமிடற் றரசே
நுவலரு மாயையிற் பிறவா
யாக்கைய துடைய வருட்பெருங் கடலே
யெழுந்தொடுங் காதவான் சுடரே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 5
திருக்குறு மழுக்கா றவாவொடு வெகுளி
செற்றமா கியமன வழுக்கைத்
தியானமென் புனலாற் பொய்வுறங் கூற
றீச்சொலென் கின்றவா யழுக்கை
ருட்கிளர் நினது துதியெனும் புனலா
லவத்தொழி லென்னுமெய் யழுக்கை
யருச்சனை யென்னும் புனலினாற் கழுவா
வசுத்தனே னுய்யுநா ளுளதோ
விருப்பொடு வெறுப்பிங் கிலாதவ லென்ன
வெண்மதி யோடுவெண் டலையும்
விரைவழி புகுந்து வண்டினம் பசுந்தேன்
விருந்துணுங் கொன்றைமென் மலரோ
டெருக்கையு மணிந்து மின்னொளி கடந்த
வீர்ஞ்சடைப் பாந்தணா ணுடையா
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 6
சிவமுட னமூர்த்தி மூர்த்திகர்த் திருவஞ்
செயன்மலி கருமமென் றருநூல்
செப்புதத் துவமுஞ் சதாசிவ னீசன்
றிகழ்தரு பிரமனீ சுரனோ
டுவமையி லீசா னப்பெய ரவனென்
றுரைத்திடு மூர்த்திக டாமு
முற்றவீ சான முதற்பிர பாவ
முடையநின் றன்னையென் றுணர்வேன்
புவிமுத லனைத்து மாக்குத ளித்தல்
போக்குத லுயிர்வினை யருத்தல்
புதிதுறச் செம்பிற் களிம்பென வறிவைப்
புணர்மல மகற்றுத லென்னு
மிவைபல வியைந்தும் விகாரமொன் றின்றி
யிரவிபோ னின்றகா ரணனே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 7
தான்பெறு மழலை மொழிமகன் றன்னைத்
தன்கையா லுளங்களித் தரிந்து
சமைத்துல கறிய விடுபெருந் தொண்டன்
றனைச்சிறுத் தொண்டனென் றவன்சே
யூன்பெறு நீயே யுரைத்தனை யென்றா
லுரிமையோர் சற்றுமி லாதே
னுன்றிருத் தொண்ட னென்றிருப் பதனுக்
குன்னுதல் பெரும்பிழை யன்றோ
தேன்பெறு நளின மலர்களா யிரத்தோர்
செழுமலர் குறைபட விரைந்து
செங்கணொன் றிடந்து குறையற நிரப்பித்
திருமறைச் சிலம்படிக் கணியா
யான்பெறு நிதியே யென்றுல களந்தோ
னேத்திநின் றிறைஞ்சுறு மமுதே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 8
நின்புகழ் பாடும் பாணனார் தமக்கு
நிதிதரச் சேரலன் றனக்கு
நீமுன முடங்க லொன்றளித் ததுபோ
னிகரிலா வசவநா யகன்ற
னன்பினி லொருநூ றாயிரங் கூறிட்
டடுத்தகூற் றினிலொரு கூறிங்
களிப்பதற் குனது திருமுக மருளா
லடியனேற் களிக்குநா ளுளதோ
பொன்புரை கடுக்கை மலர்ந்தசெம் பவளப்
புரிசடைப் பேரருட் குன்றே
புணர்முலைக் கயற்கட் பிறைநுதற் கனிவாய்ப்
பொற்றொடி யிடத்துவா ழமுதே
யென்பும்வெண் டலையு மணிந்துநான் புனித
னென்றுமென் றிருந்திடு பவனே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 9
வங்கையர் முத்த சங்கையர் சென்ன
வசவண ரசகணர் வீர
மாச்சையர் பிப்ப பாச்சையர் வள்ள
மல்லையர் கல்லைய ரெங்கள்
சங்கண வசவ ராசையர் சேட
தாசையர் சங்கர தாசர்
சவுண்டைய ரென்றிங் கிவரடிக் கேவ
றலையினாற் செய்யுநா ளுளதோ
பங்கய மலரோ டரிவிழி பரித்த
பதமலர் சிவப்பவே னெடுங்கட்
பரவைதன் மனைக்கட் சுந்தர னேவும்
பணியெலா முனிவற வியற்றி
யெங்கணும் விளங்க நம்பியா ரூர
னேவல னெனப்படு மிறையே
யிட்டநன் குதவி யென்கரத் திருக்கு
மீசனே மாசிலா மணியே. 10
- நெடுங்கழிநெடில் முற்றிற்று -
|