|
Home > Scriptures & Stotras > Tamil
சிவமயம்
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய
சீகாளத்திப் புராணம்
நக்கீரச் சருக்கம்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அமுதுறழ் தமிழொண் முத்த மையசந் தனமெல் வாசங்
கமழ்குளிர் தென்ற லென்று கரையரும் பொருள்ப டாம
லிமிழ்கடல் வரைப்பெ லாந்தோன் றெண்பொருள் படுநா டெள்ளித்
தமிழ்முதல் பிறக்கு நாடாய்த் தயங்குமாற் பாண்டி நாடு. 1
மேற்படி வேறு
தன்கால் சுமக்கு முறுப்பிலான்றன் னேவல ரானி லைகலங்கிப்
பொன்கா றிதலை முலைமடவார்ப் பொருத்து துணையா மாநிலத்து
வன்கா றரியா துழல்வாரைத் தலையாற் சுமக்கு மலையைநகு
மின்கார் மழைதோய் முடிமலய விலங்க லுடைத்தத் திருநாடு. 2
வானோ ரமுதஞ் சாபத்தான் மண்ணிற் புனலாயொழுகியது
தானோ நிலத்தி னியல்பாற்றன் றன்மை திரியா வரம்பெற்ற
மானீ ரோமற் றிதுவென்ன மதுரங் குடிகொண் டெஞ்ஞான்று
மானா தொழுகும் பொருனையாற் றரசு முடைத்தத் திருநாடு. 3
மேற்படி வேறு
தாமரை குவளை யாம்பல் சங்குளை வலமீ னன்ன
மாமைவண் டரம்பை கன்னல் கமுகமென் றவைநி றைந்து
காமரு மருத மாதர் கவினுறுப் பமைப்போ னவ்வத்
தோமின்மா திரிகை யெல்லாந் தொகுத்ததோ ரிடத்தை யொக்கும். 4
கலித்துறை
அன்ன மந்நலா ரணிநடை கற்கவேட் டனையர்
பின்னு ழன்றுழன் றடிசிவந் தும்பெறா மையினான்
மன்னு மெய்விளர்த் ததுபெற வனத்தினுட் பதும
மென்னு மாதனத் திடையிருந் திருந்தவ மியற்றும். 5
கழனி யுட்புகுந் துறுவலிப் பகட்டினேர் கடாவி
யுழுந ரோதையால் வெரீஇயெழுந் தும்பரிற் பறக்கு
மழகு மென்சிறை யோதிமத் தணிசிறை யடித்த
லொழுகு வான்கங்கை வெண்டிரை யெறிந்திட லொக்கும். 6
சேல்க ளுண்டக டாத்திய மென்சிறைச் செய்ய
கால வோதிமஞ் சிறுதிரை யசைக்குமென் கமலக்
கோல நாண்மலர்ச் சேக்கையிற் பெடைதழீஇக் கொண்டு
சாலும் வண்டிசை கேட்டுறங் குவமலத் தடங்கள். 7
மாம லர்க்கணை யோன்சிலை யாயுயிர் வருத்து
தீமை யின்பய னுறலென மள்ளராற் செய்ய
காமர் தீங்கரும் பாலையா டப்படு கவ்வை
தாம யற்கணெற் போர்கடா விடுமொலி தாழ்க்கும். 8
யாமு ழத்தியர் காற்கிணை யாமிழி பெய்தத்
தாமு லைத்தட மிடற்றொடு நிகர்த்துயர் தருக்குச்
சாமு ருக்குது மெனத்தெங்கின் காய்விழத் தாக்கிக்
காமர் நாகிளங் கமுகொடிப் பனவராற் கணங்கள். 9
வரைக ளொப்பன போரொழுக் கியபுரி வரையி
னருவி யொப்பன சுற்றுபா கடுபுகை யவைசூழ்
கருமு கிற்குல மொப்பன தீங்கழைக் கரும்பின்
றிரள வற்றினைச் சூழ்ந்தகா டொப்பன செறிந்து. 10
நிரந்த மஞ்சள்கள் வாழையின் குலைதொடு நெடிய
வரம்பை பாளைவாய் கமுகெழிற் குலையினை யடுக்கு
முரிஞ்சு மற்றவை தெங்கினொண் குலையையவ் வுயர்ந்த
குரும்பை நெட்டிலைத் தாழைதை வருமுகிற் குலத்தை. 11
கருந்திண் கோட்டன குவிமுலைச் செய்யகட் காரா
னிருந்தண் பன்மல ரிலஞ்சியுண் மேய்த்திடு மிளைஞர்
பெருந்தண் மாம்பழ மெறிகரும் பின்குணில் பிறங்கு
சுரும்புண் டாமரைத் தடத்து வீழ்ந் தனக்குழாந் துரக்கும். 12
ஒழுகு தீம்புனற் கொழுங்கய லொடுவரால் கொடுத்துக்
கழியு நுண்ணிடைக் கொடிச்சியர் கொடிச்சியர் கையிற்
பழுதி லின்சுவைக் குறிஞ்சித்தேன் சுடர்கெழு பசும்பொற்
குழைக டந்தகட் கடைச்சியர் கடைச்சியர் கொள்வார். 13
முருந்தெ யிற்றிய ரெயிற்றியர் கருங்குழன் முல்லை
யரும்ப விழ்ந்தபூ முடிப்பர்க ளணிமுலை யாகும்
பெருங்கு டத்தியர் குடத்தியர் பிறங்குகோங் கரும்பு
விரிந்த பூவினுட் பொற்றுகள் பூசுவர் மெய்யில். 14
கொம்ப ரொத்தசிற் றிடையுழத் தியர்கள்கட் கொண்டு
பம்ப ரத்திய லாடவர் மனம்படப் பரந்த
சம்ப ரத்திய முலைப்பரத் தியர்தளர் மருங்கு
லம்ப ரத்தியர் பரத்தியர் விலைமுத்த மளப்பார். 15
கொன்றை பூத்துழை தன்னிடங் கொண்டுகூர்ங் கோட்டு
வென்றி யேறுபெற் றண்டரைத் தாங்குபு வீயா
தென்று மியாறுதன் றலைக்கொடு முக்கணெம் மிறைபோற்
றுன்று பல்பசுச் சேரிட மாய்முல்லை தோன்றும். 16
குழலி னோசையுந் தயிர்கடை யொலியுங்கொல் லேறு
தழுவு மார்ப்புமா னிரைமணி யரவமுந் தண்ணென்
செழும லர்க்கொன்றை படுசுரும் பிசையும்வெஞ் சினத்த
மழவி டைக்குலம் வாய்விடு மழக்கமு மாறா. 17
போர்வி டைக்குல முயர்ந்தெழு புற்றுமண் சிதறக்
கூர்ம ருப்பினாற் குத்துபு துகளெழக் குளம்பா
லார ழற்சினத் தொடுநிலந் தொட்டிமி லசைய
மூரி வாய்விடு முழக்கம்விண் ணேற்றொடு முரணும். 18
கறங்கு பன்மணி யருவியைத் துளியொடு கலந்து
நிறங்கொண் மாமணி சேணிடைச் சிதறிட நெடுங்கைப்
பிறங்கு வெண்பிறைக் கோட்டுயா னைகண்மதப் பெருநீ
ரிறங்கு மாமுகத் தேற்பன குறிஞ்சியி னிடங்கள். 19
குளிர்கொண் முத்தொடு முகையிற்செய் சிற்றிலிற் குழிசி
வளையு மிப்பியுங் கொண்டனத் தூவிமேல் வயங்கு
மொளிகொள் செந்துகிர்ப் பாவையை யிருத்திமற் றுள்ளங்
களிகொள் பேதைய ராடுவ புன்னையங் கானல். 20
இன்ன தன்மைய வளங்கெழு பாண்டிநா டென்னு
மன்ன மன்னவ டிருமுக மண்டல மாகி
மன்னும் விண்ணவர் பொன்னக ரத்தினை மறுக்கும்
பொன்னி னன்மணி மாமதின் மதுரையம் புரமே. 21
தேடி நான்முகன் செங்கண்மால் காண்கிலான் றிங்கள்
சூடி னானடி யார்மனத் தான்மறைத் தொகுதி
பாடி னானரு ளாலறு பத்துநா லாட
லாடி னானதி லெனினதன் பெருமையா ரறைவார். 22
மொய்வம் பார்மலர் மிகநனி போர்த்திசை முழுதுஞ்
செய்வண் டார்த்திட வொழுகுறும் வையைவிண் செல்லு
மைவந் தாடொளிர் மணிசெய்பொன் மடமா மதுரைத்
தெய்வஞ் சாத்திய பன்மலர் மாலையிற் றிகழும். 23
நிலைபெ யர்ந்தயல் செல்கலாத் தாரகை நிரையி
னிலகி வம்பல ரிவையியங் காவகை யென்னென்
றலகில் விம்மித முறச்செயு மந்தரத் தகடு
தலையு ரிஞ்சுயர் கோபுரத் துறுசுடர்ச் சாலம். 24
அங்கண் மாடத்தின் மேற்பயின் மடந்தைய ரனம்வான்
கங்கை யங்கம லத்திரள் வளையவூண் கருதிப்
பொங்கு மாசையிற் புகவதி லன்னமிப் புட்க
டங்க டொல்குல மன்மையிற் றனித்தனி யிரியும். 25
மெலிநு சுப்பினார் களிமயின் மாடத்தின் மேற்றந்
நலிப கைப்பெரும் பாம்புகள் வைகலு நடுங்க
அலவ லாலிரு சுடர்களு நனியுள முவந்து
மலிபொன் மாடத்திற் றமகதிர் வேறுறா வழங்கும். 26
விண்டொ டர்ந்தவே ரங்கடம் மேற்புறத் தாடும்
பண்ட ருங்குத லைப்பசுங் கிளிகடம் பணைத்தோட்
டொண்டை வாயினர் விழைதலிற் பிடித்திடத் தொடரும்
வண்டில் பூங்கண்ணி விஞ்சையர் சூழதர வயங்கும். 27
விண்ண கட்டினைத் தொடுமுடி யேறுதல் வேட்ட
வெண்ணி றப்புறாப் பறந்தரு கேசெல விளங்கு
மண்ணு றுத்திய செம்மணி வேரமா மலரி
னொண்ணி றந்தனந் தேடழற் றாணுவை யொக்கும். 28
நெடிய வெண்சுதை மாடத்தின் விரிந்தவெண் ணிலவுங்
கடவுள் வான்கங்கை வெள்ளமும் வேற்றுமை காணப்
படுக லாமையிற் கங்கைவேட் டெய்திய பருதி
வடிவ மென்சிறதைப் புட்களோ டன்னங்கண் மருளும். 29
இருவி சும்புதோய் மாடமேற் சுருங்கையி லிருந்து
திருவி ளங்குமா நகரணி பார்த்திடுஞ் செய்ய
வரிநெ டுங்கணார் தோட்கிளி கொத்தலின் வளர்த்த
வுருவி ளங்கமு கின்குலை செழும்பழ முதிர்க்கும். 30
இனைய வாம்பெரு வளம்பல சிறந்தவவ் விணையி
டனக மாநகர் வெண்குடைச் செய்யகோ லரசன்
புனித வானவன் றலைக்கொளத் திங்களம் புத்தே
டனது தொல்குல விளக்கமோர் வழுதிபைந் தாரான். 31
கலிவிருத்தம்
நடுக்குஞ்சர தநமாமுடி நாகத்திறை வாழ
வெடுக்குஞ்சர வணமைந்தனோ டிணைவான்முகப் புகரா
முடுக்குஞ்சர மலையான்மலை யுறழ்தேர்பல வுடையான்
றொடுக்குஞ்சர மழையாற்பகை சுடுதீப்பல வவித்தான். 32
மேற்படி வேறு
வரையா கத்தான் வளர்தோ ளான்செவ்
வரையா கத்தான் மதிபோல் குடையா
னரிமா னனையா ரணியேந் தல்பெறா
வரிமா னையா ரலர்மா லையினான். 33
தரவு கொச்சகக் கலிப்பா
மாமாலை வண்டுபண்ணின் வகைபாடுந் துழாய்மாலை
மாமாலை வண்டுபண்ணி மதில்களொரு மூன்றுமெய்த
காமாரி யீகைப்பூங் கழன்மறவாக் கருத்தினனீங்
காமாரி யீகைப்பூங் கரதலத்தான் கடற்படையான். 34
கலித்துறை
ஆட லந்திரு வொடுநில மகள்விளை யாடு
நீடு செய்குன்ற மாந்தடந் தோளினா னிலவும்
பாட னங்கையா டரங்கமா நாவினன் பதும
வாடு நுண்ணிடை மடந்தையத் தாணியா மார்பன். 35
கலச யோனியா முனிவரன் குடித்தவக் கார்கோ
ளலைபெ ரும்புனன் மறித்தும்விட் டானென்ப ரதுபொய்
புலமை யந்தணர் பெறத்தரு பொருளொடப் பொன்மா
மலைய னான்பொழி தானநீர் நிறைந்தன்று மன்னோ. 36
திரைநெ டுங்கடற் றானையவ் வரசர்கோன் செந்நா
வரிநெ டுங்கணார் புலவியாற் பொய்ம்மையு மறியும்
பெரிய வந்தணர் மந்திர சேடையாற் பிறங்கு
மெரிம ணிப்பொலந் தொடிக்கைக ளேற்றலு மறியும். 37
உலவி லண்டமாம் புதுநறா வுற்றிருந் தொழுகு
மலரி னோன்வனை பொற்குட நிறைந்துமேல் வழியப்
புலவ ராமெகி னக்குழா நனிதவப் புரியு
நிலவு தன்பெரும் புகழெனும் பாலினா னிறைத்தான். 38
திரைய கன்கட லிடத்துறந் துகிர்க்கொடி செண்டோய்
வரைக ளுக்கொளிர் செந்நிறத் தாதுமா திரத்தெண்
கரிக ளுக்கெழிற் சிந்துர மாகுமக் கழற்கா
லரசர் தம்பிரான் றனதடற் றோன்றொளி யன்றே. 39
வெற்றி வேற்படை யவன்பிர தாபமாம் வெய்யோ
னுற்ற வார்திரைப் பெரும்புனற் குவலய முவப்ப
மற்ற வன்றரி யார்வசை யிருளொடு வயங்கும்
பற்று தீக்கதிர்ச் சுடரொடு மறுதலைப் பட்டு. 40
இத்த கைப்பெரும் பெயர்முடி வேந்தர்கோ னிலங்கு
நித்தி லத்தனிக் கவிகையா னிலமெலா நிழற்றி
மெய்த்த செய்கோ றடையற நடாய்த்திசை மேவு
மத்த வாரண முகங்களிற் கயற்பொறி வரைந்து. 41
குரும ணிக்குவால் பொற்குவை விலையில்பூண் குலவு
முரண்ம ணிப்பொலந் தேர்த்திரண் மனத்தினு முந்தும்
பரிய ணிக்குழாம் பிறைமருப் பீர்ங்கவுட் பரூஉத்தா
ளருவ ரைக்களிற் றினத்திறை யரசர்க ளளக்க. 42
வெளிறி னுண்புல மந்திரக் கிளையொடு மேவி
யளவில் போகந்துய்த் தினிதுவீற் றிருந்தன னன்னா
னௌ¤தி ரைக்கட லுலகெலாந் தம்புகழ் நிறீயை
தளர்வில் கேள்விநக் கீரனார் முதலிய சான்றோர். 43
அன்ப ரெண்ணிய வெண்ணியாங் கந்நிலை யளிக்கும்
பின்பு தாழ்சடைப் பெருந்தகை யருளினாற் பெற்ற
பொன்பி றங்கிய தெய்வதப் பலகைதம் புலமை
வன்ப றிந்திடந் தரவதி லிருந்துள மகிழ்ந்து. 44
யாக்கை பெற்றவர்க் குறுதியா மறம்பொரு ளின்பம்
போக்கி னுண்பொரு ளறவரிற் புதுமொழி புணர்த்துத்
தூக்கி னம்பல பலவுனைந் தெறிதிரை சுருட்டு
மாக்க ருங்கட லுலகிடைத் தமிழினை வளர்த்தே. 45
வெள்ளைத் தாமரைச் செல்விதன் பெண்மையை விடுத்திட்
டௌ¢ளற் பாடிலா ணுருவெடுத் தெனமுடி யேந்தும்
விள்ளைப் பான்மதி யான்றமி ழொருவனாப் பெருஞ்சீர்
வள்ளற் பாண்டியற் காருயிர்த் துணைவராய் வாழ்ந்தார். 46
இன்ன வாறவர் வாழுநா ளோர்பக லெரிகான்
மின்னு வாட்படைச் சேல்வல னுயர்த்ததார் வேந்தர்
பொன்னின் மாடத்தின் மேனிலைக் குழையடர் பூங்க
ணன்ன மன்னவ ளோடினி தேறின னமர்ந்தான். 47
ஆய காலையின் மந்தமா ருதத்தொடு மரிக்கண்
வேயை வென்றதோ ளணங்கின்வார் குழன்மணம் வீசச்
சேய னான்குவி முகிழ்முலைச் செய்யவாய்த் தேவி
மாயி ருங்குழ லின்மண மாமென மதித்தான். 48
மதித்த காவல னதுமனங் கொண்டுதன் மத்திற்
றதைத்த நுண்பொரு டரவொரு செய்யுள்செய் புலவ
ரிதைக்கொள் கென்றுபொன் னாயிர மொருகிழி யியற்றி
யதைப்பொற் சங்கமண் டபத்தின்முற் றூக்கின னன்றே. 49
புலவர் யாவருந் தாங்கண்ட வாறுபாப் புனைந்து
தலைவன் முன்புபோய்ச் சாற்றிய வனைத்தையுந் தண்டார்
மலைகொ டோளினன் மறுத்தலின் வறிதகன் றனரவ்
விலகு பொற்கிழி யிருந்ததங் கறுப்பவ ரின்றி. 50
கால மங்கதி லுரோணியிற் கரியவன் புகுத
வால வெவ்வர வடுத்தவீ ருவாவினு மழன்று
கோல வெஞ்சுடர் தண்சுட ரிரண்டும்வாய்க் கொள்ள
ஞால மைந்தனும் வெள்ளியு மிகல்பட நடந்தார். 51
காலை தண்பனி சொரிதலு நண்பகற் கால
நீல வான்புதை முகிலினம் பெய்வபோ னின்று
மாலை தோன்றுமுன் மலர்தலை வான்கழு வியது
போல நீங்கலு நிகழ்ந்தன மழைவளம் பொன்ற. 52
பெயல்வ றந்தபைங் கூழெலாம் பீளொடு கரிந்த
பயம்வ றந்தன மரங்களு மலைகளும் பனிநீர்க்
கயம்வ றந்தன கள்ளியும் பெண்ணையுங் கதிரின்
வெயிலின் வெந்துதம் பசுமையோ யுலர்ந்தன மிகவும். 53
உண்ப தின்பன நனிமிகக் குறைந்தன வொருங்கு
வெண்க லங்களும் வெள்ளியுஞ் செம்பொனும் விளங்கு
மண்கொ ளொன்பது வகையநன் மணிகளு மலிந்த
வெண்ப தம்பெற லரியதா யிற்றுமன் யார்க்கும். 54
நீடுந் தீப்பசி யாற்குடர் கொளுந்திய நிலத்தோ
ராடுந் தின்கலா வடகுதின் றனர்நில னகழ்ந்து
வாடும் பல்வகைக் கந்தமுந் தின்றனர் மக்கள்
காடுங் குன்றமு நிரம்பினர் தின்பன கருதி. 55
சிறுவர் கையன தாயர்தாம் பறித்தனர் தின்றார்
முறுகு தீப்பசி பொறுக்கலார் மக்களூன் முதலா
வுறுப சுந்தசை யாவையுந் தின்றன ருலகத்
தறைப ழஞ்சொலைப் புதுக்கினர் மானமாண் பற்றார். 56
வழியெங் கும்பிண மிடறுமிவ் வார்கடற் கப்பாற்
பொழிலின் கண்ணுமுற் றுலாயது நாற்றநீள் போழ்வாய்
முழைவெங் கூற்றுயி ருண்டற வெறுத்தது முள்வாய்க்
கழுகுங் காக்கையு ஞமலியு நரிகளுங் களித்த. 57
சிலர்பி ழைத்தவவ் வற்கடத் திறையையர்ச் சிக்குந்
தலைமை பெற்றவன் றருமியென் பவனுட றளர்ந்திங்
கிலையு யிர்க்கர ணினிநடந் தெத்திசை யேனு
மலைவி லைத்துநா டெய்துவ மெனமனம் வலித்தான். 58
கோயில் சென்றடைந் தருட்பெருங் கடலினைக் குறுகித்
தாயி லன்புடை யாயிவ ணுறிலினிச் சாவேன்
றேய முய்வதற் கேற்றது புகுந்துறீச் செழுமை
யாய பின்பிவ ணடைகுவ லெனத்தொழு தழுதான். 59
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
குழவியந் திங்கள் வேணிக் குரிசின்மற் றதனைக் கேளா
வழுதகங் குழையல் வாழி யன்பவொன் றறைவல் கேட்டி
வழுதிதூக் கினனோர் பாத்தன் மனங்கொள வுரைத்தோர்க் கென்று
கிழியதா யிரம்பொன் சங்கக் கிளர்மணி மண்டபத்தே. 60
அங்கதை யிப்பா வேந்தற் கறைந்தனை பெறுதி யென்று
கொங்குதேர் வாழ்க்கை யென்னும் கோதிறூக் கீந்து விட்டான்
பொங்கிய களிப்பி னானும் போய்த்தொடர் பமுதந் தன்னைத்
திங்கள்வெண் குடையி னான்றன் செவிப்புலத் தூற்றி னானால். 61
மற்றது கேட்டுத் திங்கண் மருகன்றா னினைந்த வண்ணஞ்
சொற்றலி னினிது வந்து தொகுசங்கத் தவர்பாற் போயிப்
பொற்றபாட் டிசைவி யென்றான் பொருக்கெனத் தருமி சென்று
கற்றவ ரவைமுன் சொன்னான் கவிகள்கேட் டலுமு வந்தார். 62
ஆங்கவர் தம்முட் கீர னரும்பெறற் கல்விச் செல்வத்
தோங்கிய தருக்கி னாலில் வுரைத்தபாக் குற்ற மென்றான்
றாங்கிய வுவகை சிந்தித் தருமிதான் றுனைவிற் போந்து
தேங்கமழ் கடுக்கை வேணிச் செல்வனோ டிதனைச் சொன்னான். 63
கேட்டலு மங்க யற்கட் கிளியுறழ் கிளவி பங்கன்
பாட்டியற் புலவ னாகிப் பாவலர் தம்பாற் போயெங்
கோட்டமில் கவிக்குக் குற்றங் கூறின ரியாவ ரென்றா
னாட்டிய புகழ்நக் கீர னானெனத் தருக்கிச் சொன்னான். 64
சொல்லலுங் குற்றம் யாது சொல்லென நெடுங்க ணல்லார்
சில்லிருங் குழற்கு நாற்றஞ் செயற்கையன் றியற்கை யுண்டோ
வில்லது கூற லான்மற் றிதுகுற்ற மென்றா னண்ணன்
மல்லல்விண் மகளிர் கூந்தன் மணமியல் பன்றோ வென்றான். 65
என்றலு மரம்பை யர்க்கு மிருங்குழ னறிய நாற்ற
மின்றென வுரைத்தா னைய னிறைவியென் றுலக மேத்துங்
குன்றிறை பயந்த செல்விக் கூந்தலெற் றென்றான் கீரன்
றன்றனித் தருக்கா லம்மை தனதுகூந் தலுமற் றென்றான். 66
ஏற்றினா னெற்றிக் கண்ணு மெரிமருள் சடையுங் காட்ட
மாற்றரு மருட்சி யான்கண் வடிவெலாங் காட்டினாலுஞ்
சாற்றிய செய்யுள் குற்றஞ் சடைகொண்டு வெருட்டல் வேண்டா
தோற்றில னிதனுக் கென்றான் றொலைவிலான் வெகுண்டு சொல்வான். 67
எம்மொடு முரணி வான்றோ யிமயமால் வரைப்பூங் கொம்பின்
மைம்மலி மறைசொ லானா மணங்கமழ் குழல்ப ழித்த
செம்மைகொ ளறிவி லாய்நீ தீர்ப்பருங் குட்ட நோய்கொண்
டிம்மையி லலைக வென்றா னிறப்பநக் கீர னஞ்சி. 68
முழுமெய் யும்பனித் திரங்கி முருகலர் கமலம் வென்ற
கழலடி வீழ்ந்தி றைஞ்சிக் கருணையங் கடலே யெந்தா
யிழிபுடை நாயி னன்னே னிலங்கறி விலாது செய்த
பிழைபொறுத் தருளிச் சாபப் பிணிகெட வருள்வா யென்றான். 69
என்றலுங் கருணை வள்ள லெரிசினந் தணிந்து கீர
சென்றுநீ கயிலை காணிற் றீருமிக் கொடுநோ யென்று
குன்றுறழ் புரிசை விண்டோய் கோயிலிற் புகுந்தொ ளித்தான்
றென்றலம் பொதிய வெற்பிற் றென்னர்கோ னதிச யித்தான். 70
பொற்குவை தருமி யேற்றுப் பொலிந்தினி திருந்தான் வெய்ய
வற்கடந் தீர வெங்கு மழைவளஞ் சுரந்த திப்பாற்
சிற்குணன் றந்த சாபத் தீப்பிணி யுடலம் போர்ப்ப
நற்கவி னிகந்து கீர நாவலன் சிந்தை செய்வான். 71
விரனிரை யழுகி நைந்து வீழ்ந்துகால் குறையா முன்ன
மிருகையும் விரல்கு றைந்திட் டெரிபுகு துடுப்பொவ் வாமு
னுருவினுண் புழுக்கள் சோர வொழுகுசீ நாறச் சேணில்
வருதல்கண் டவரு மிழ்ந்து வழிவில கினர்செல் லாமுன். 72
பலப்பல நாடி றந்து படரொளிக் கயிலை யென்னு
முலப்பில்குன் றெய்தி யிந்நோ யொழிக்குவ மெனத்து ணிந்தான்
விலக்கரு நண்பி னோரை விட்டக றற்கு நெஞ்சங்
கலக்கமுற் றழுதி ரங்கிக் கரையில்பே ரஞரு ளாழ்ந்தான். 73
தடையில்பே ரறிஞர் தம்மைத் தனித்தனி விளித்து நும்மோ
டுடனுறை வாழ்வு நீங்கு மொருபெரும் பாவி யேனை
மடனறு நமரங் காணீர் மறவன்மி னென்று தன்மெய்ப்
படுபிணி நோக்கி மார்பம் படத்தழு வாது நின்றான். 74
நாவல ரதைய றிந்து நண்ணிமார் பிறுகப் புல்லி
யோவில்கண் ணருவி பாய வுளங்குழைந் தழுது நல்லோய்
மேவரு நின்னை நீத்து வெறுவிய மிருப்ப நின்ற
வாவவல் வினையு ளார்யா மல்லதிவ் வுலகத் தியாரே. 75
என்றன ரிரங்க மேலோ னெதிர்தழீஇத் தழுவி யாறிக்
குன்றனீர் சிறியற் காகக் குழைந்தழ றமியேன் செல்வல்
பொன்றலி னட்பினுக்குப் புணர்வொடு பழகல் வேண்டா
நின்றநல் லுணர்ச்சி தானே நிறைக்குமென் றுணர்ந்த நல்லீர். 76
நன்றுப றிறத்தாற் கூறி யிணையிலா னரிதி னீங்கிச்
சென்றனன் புலவர் கண்ணுஞ் சிந்தையுந் தொடர்ந்து செல்லத்
தன்றிரைக் கையான் மோதித் தான்றியங் குலையு திர்க்கு
மன்றலம் புதுநீர் வையை வடகரை கடந்து மன்னோ. 77
என்றினி மதுரை காண்பே மெப்பகல் சவுந்த ரேசன்
றன்றிரு வடிகள் காண்பேந் தாயையெஞ் ஞான்று காண்பேம்
வென்றிவேற் றரும வேந்தர் வேந்தனை யெந்நாட் காண்பே
மொன்றுயிர்த் துணையாஞ் சங்கத் துறவையெப் பொழுது காண்பேம். 78
நுணங்குமா ணறிவின் மிக்க நூல்வலார் மறப்பர் கொல்லோ
வணங்குதேர்த் தானை மன்னர் மணிமுடி யுழுக ழற்கா
லணங்குடை யரிமான் றுப்பி னரசர்கோ னினையான் கொல்லோ
விணங்குநூற் புலவர் நாற்பா னெழுவரென் றுரைக்குங் கொல்லோ. 79
இனித்தமி ழினிமை யாவர்க் கெடுத்திசைத் திடுவ மன்னோ
வெனப்பல பலவு மெண்ணி யினைந்துவெஞ் சுரமி றந்து
புனற்றிரு நாடு புக்குப் பொருந்திரைப் பெண்ணை நாடு
தனைக்கடந் தந்தண் பாலித் தண்ணடை கண்டு சென்றான். 80
அரவணைச் செல்வன் வாழு மந்தமிழ் நிலத்தி னெல்லைத்
திருமலை கண்டு கண்டோர் செறிவினைத் தொடர றுக்கும்
பெருவரை கண்டி றைஞ்சிப் பிறங்குவெள் ளருவி தாழும்
பொருவரு மேம கூடப் பொருப்பினை யினிது கண்டான். 81
அருணெடுங் கடலா நந்தி யடிகள்வந் தவத ரித்து
முரணுறு சமண்கு றும்பு முருக்குபு சைவ மென்னுந்
திருநில முழுது மாண்டு செல்வமோ டினிதி ருந்த
பொருவில்கல் யாண மென்னும் பொன்மதி னகரங் கண்டான். 82
உரைபெயர் பலதே யங்க ளொருபொழு திருந்தவ் வூர்பின்
னொருபொழு திராமற் சென்றே யொளிவளை மணிகொ ழிக்கு
மிரைதிரைக் கங்கையாடி யிறந்தவர் பிறவா வின்பந்
தருதிரு நகரி றைஞ்சித் தடவரை நாடு புக்கான். 83
கண்ணுதற் றிருக்கே தாரங் கண்டுதண் பனிபு தைத்த
விண்ணுக டணவு கோட்டு வியனெடுங் குன்றத் தாறவ்
வண்ணற னருளா னாப்பே ராற்றலாற் சென்றா னன்றேற்
பண்ணவர் தமக்குஞ் சேறற் பாலதோ பனிமாக் குன்றம். 84
மடங்கலெண் குழுவை பன்றி வாரண முளவுள் ளிட்ட
கொடுஞ்சின மாவழங்கு குன்றமுஞ் செறிமுட் காடு
முடம்புறு பிணிவ ருத்த வுள்ளங்கால் வெள்ளென் பாகக்
கடந்துசெல் வழிக்கண் டானாற் கடல்புரை தடமொன் றம்மா. 85
சிறந்தவாங் கலைவி ளங்கித் தௌ¤நறா வொழுகச் செவ்வாய்ச்
சிறந்தசெந் தாம ரைத்தண் டேமலர் மாலை தாங்கிப்
பிறந்தநாட் டொடங்கிய யானாப் பிறங்குநன் னீர்புணர்ந்திட்
டறந்தவா மறைவ லாள ரனையதத் தடந்தான் மன்னோ. 86
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மாண்டவா ரணத்தோ டரசிய லோதி மந்திரி வளம்பெரி தமைந்தே
யீண்டிமே லெழுந்து வந்தமே வலர்தம் மினநிலை தளர்ந்திட வலைத்துக்
காண்டக விளங்கி யுயிர்த்தொகை புரந்து களியளி யுளர்நறுந் தண்டார்த்
தூண்டரு தடந்தோட் புலவுவேற் றடக்கைச் சுடர்முடி வேந்தர்போற் றோன்றும். 87
வளரிள வளைய வெள்ளியும் பொகுட்டு மாசறு செம்பொனுந் தும்பி
யுளர்கமழ் பதுமப் பதுமரா கமுந்தே னுறுநறு நீலநீ லமும்பச்
சிளவடை யொளிசெய் மரகத மணியு மெகினிழற் காற்கொழுந் துகிரு
மொளிகிளர் வளைவெண் டாமரை மணியு முடைமையின் வணிகரே யொக்கும். 88
கலிவிருத்தம்
பூமி மங்கையைப் பொற்புறுத் திப்பல
வேம வன்னந் தருமேர் வளம்பெறாக்
காமர் பூவிளை வித்தலி னக்கயந்
தோமில் பின்னவர் போன்மெனத் தோன்றுமே. 89
வெளிய செய்ய கரியவொள் வீபொகுட்
டிளைய பாசடை யென்றிவை துன்னிய
தௌ¤பு னற்றடஞ் செய்யவ டானம
ரொளிகொள் சித்திரக் கம்பல மொக்குமே. 90
சால வூடிய தன்பெடை மீன்கொளற்
காலு மொண்சிரல் வீழொலி யச்சுற
மாலு மன்னமவ் வச்சமே வாயிலாக்
கோல மென்சிற காற்றழீஇக் கொள்ளுமே. 91
மைத்த வண்டிசை வண்சிறைப் புள்ளிசை
தத்து பல்தவ ளைக்குரல் சங்கொலி
முத்த வெண்மருப் பியானைநீர் மொள்கலி
யித்தி றத்தினார்ப் பென்றுமு டைத்தரோ. 92
பொருவி லாவகன் பூந்தடத் தின்கரை
மரக தக்குவ டொப்பது வான்றிசை
விரிவ ளக்கும் வியன்சினைத் தூன்றும்வீழ்த்
திரள தோராற் றிருமானி கர்க்குமால். 93
காற்ற ழங்கு கழற்கம லத்தினாற்
சாற்று மோரேழ் தலமு மளந்தவவ்
வாற்றன் மாய னறிதுயில் கொள்ளுதற்
கேற்ற பைந்தளி ரீட்டமு டைத்தரோ. 94
திசையி னின்ற தெறுசின வாரண
மசைத டக்கையி னான்முரித் தாரழற்
பசிகெ டத்தினும் பாசிலை மென்சினை
யொசிவி னீள்பணைக் கோடி யுடையதால். 95
தூங்கு வீழ்நுனித் தொத்தி வருமுலை
வாங்கு நுண்ணிடைச் சூரா மாதர்தாந்
தாங்கு பூசலி னாழித் தடமுடி
யோங்கு வெற்பி லுதைந்துதைந் தாடுவார். 96
வேட்டு மெய்குளிர் மென்னிழ னின்றமாத்
தாட்ட டக்கைத் தழைசெவி யானைமேற்
கோட்டி னம்பொற் குடம்புரை செங்கனி
கூட்டு ணும்புட் குலங்க ளுதிர்க்குமே. 97
நீரில் வீழ்ந்தன நீர்பயின் மீன்களாய்
பாரில் வீழ்ந்த பறவைக ளாங்கதிர்த்
தேரின் மேற்செல் சினைப்பல் தலையரா
வூரில் வேரூன் றுயராலி லையெலாம். 98
அனைய வாற்கீ ழருந்தமிழ் நாவலன்
மனன மர்ந்து வதிந்தன னாங்கொரு
சினையி னீங்கிலை பாதி திரைப்புன
னனைய வீழ்ந்தது நன்புனற் றீரமே. 99
மேற்படி வேறு
வீழ்ந்தது பறவையு மீனு மாகியங்
காழ்ந்திடு புனலினு மகன்க ரைக்கணுஞ்
சூழ்ந்திடு முலகினுந் துறவின் பாலினுந்
தாழ்ந்திடு மனமெனத் தம்மி லீர்த்தவே. 100
அனையதோர் புதுமைகண் டதிச யத்தனாயத்
தனியொரு தானவண் டரித்து வைகினா
னினைவறு குறுமுனி யிலக்க ணம்பெறப்
புனைதரு மிலக்கியப் புலவர் சிங்கமே. 101
பருதியந் தகன்றனைப் பயந்த பின்னர்வல்
லிருணுகர்ந் தனையவ னிளவ லாமெனக்
கருவிருந் தீன்றன காட்சித் தாகிய
வொருபெரும் பூதமங் குடன்று வந்ததே. 102
வாரியை வயிற்றுறும் வடவை யோடொரு
பாரிய வுருவுசெய் தென்னப் பார்மிசைக்
காரினை யிடியொடு கவர்ந்து பங்கய
னோருரு வமைத்தென வுருவ மிக்கதே. 103
இருளறி யாதவல் லிரவி யும்பெறு
தெருளறி யாதவா ணவமுந் தீர்தலின்
மருளறி யாததோர் சிவமு மானவே
யருளறி யாதத னகமெஞ் ஞான்றுமே. 104
அடுதிற லுடையவப் பூத மாயிடை
வடநிழ லமர்தரும் வள்ளற் கீரனை
நடைதடு ருழையிளங் கன்று நச்சியோர்
கொடுவரி கவர்ந்தெனக் கொண்டு சென்றதே. 105
ஆங்கொரு மலைமுழை யவிர்ச டைப்பிரான்
பூழ்கழ லடிநிழல் பொருந்தி னோர்தமை
நீங்கிய வாணவ சத்தி நித்தமா
வீங்குறு மெனநனி யிருளொ டொன்றுமால். 106
பகலிடை மெரிதலும் பரந்த வல்லிடை
மிகுதலு மிலையிருள் வெற்பி னம்முழை
மகிழ்வுசெய் வாழ்வினும் வறுமை யின்கணுந்
தகுதியா மனமொரு தன்மைத் தாதல்போல். 107
உண்ணிறை யிருண்முழை யொன்றில் பத்துநூ
றெண்ணுறு தொகையரா யிருந்து ளோருட
னண்ணலை யுள்புக வடைத்துப் பூதநீர்க்
கண்ணிய வுளமொடு கயத்திற் போயிற்றே. 108
போயின காலையிற் புலவ னோடவண்
மேயின ரினைவுறீஇ விளம்பன் மேயினார்
நீயிவண் வருதலாற் குறைநி ரம்பியே
யாயிர மெனுங்கணி தத்த ராயினோம். 109
இனியுயிர் செகுத்துநம் யாக்கை யால்வயிற்
றனலினை யவிக்குமாங் கதுவென் றுள்ளுடை
நினைவொடு முரைத்தனர் நிரம்பு தங்கணல்
வினைவழி புலவன்வந் தமைவி ளங்கிலார். 110
கீரனங் கவர்மொழி கேட்டு மாழ்கில
னாரஞ ரெய்தலு மார்வ மெய்தலு
மோருட லியற்கையென் றுள்ளி யாங்குளார்
பேரிட ரகற்றுமோர் பெற்றி யெண்ணினான். 111
அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வரைபுணர் குறிஞ்சி மன்னன் வரைபக வெறிந்த செவ்வேன்
முருகல ரலங்கற் றிண்டோண் முருகனென் றவன்பொற் றண்டைத்
திருவடி மலரி றைஞ்சிற் றீவினைச் செல்லன் முற்றும்
பருதியங் கடவுட் கண்ட பனியென வகன்று போமால். 112
ஆறிரு தடந்தோ ளண்ண லாறெழுத் தினையு மோதில்
வேறொரு பிணிபோ மென்கை வியப்பதோ பிறவி யென்னு
மாறரு மனாதி நோயு மாறிவே தாக மங்கள்
கூறரு மின்ப வீட்டிற் குடிபுகுந் திருப்ப ரன்றே. 113
ஐம்பெரும் பூத வாயி னகப்படு முயிரை மீட்டுச்
செம்பொனஞ் சிறுச தங்கைத் திருவடி நிழலில் வைக்கு
நம்பிநங் குமர வேட்கிந் நாளொரு சிறுபூ தத்தா
லிம்பரிங் குறுநோய் தீர்த்த லௌ¤தலா லரிய தன்றே. 114
இன்னன நினைந்து கீர னிலங்கிலை நெடுவேற் செம்மல்
பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதி
லுன்னிய வுன்னி யாங்கிங் குதவுவ தாகிப் பாவுண்
முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொழிந்தான். 115
பொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலைக் கருங்கண் வள்ளி
கன்னலு மமுதுந் தேனுங் கைக்குமின் றீஞ்சொன் மாற்றித்
தன்னிகர் புலவன் கூறுந் தமிழ்செவி தாழ்த்துக் கேளா
வந்நிலை மனங்க ளிப்புற் றறுமுகம் படைத்த கோமான். 116
துயின்மலி திருமால் வீழ்ந்து துணுக்கென வெழுந்து நிற்ப
வெயின்மணி யணைமு டக்கு மெய்நிமிர்ந் தோட வாடு
மயின்மிசை மலையிற் றோன்றும் வளரிளம் பருதிப் புத்தே
ளியன்மலி யுருவந் தோன்ற விவர்ந்தறு முகமி லங்க. 117
பன்னிரு கதிருந் தோன்றும் பன்னிரு மலைகள் போலு
மின்னவிர் குழைக டாழ்ந்து விளங்குறு குவவுத் திண்டோள்
பொன்னரி மாலை தாழப் பொலங்கழல் புனைந்து வந்தென்
சென்னியின் மலர்ந்த கஞ்சந் திகழ்தர வந்து தோன்றி. 118
பூதநா தனுக்கங் காமப் புலவனைப் பூத முண்ணுங்
காதலா னணுகும் போதோர் கதையினா லலகி லண்டா
மோதினா னெனவே மோதி முடிதகர்த் ததனை வீட்டி
மேதையாம் புலவ னோடும் விடுத்தனன் முழையு ளோரை. 119
பாரிடம் விழுங்கப் பட்ட பலரையும் வாய்தி றந்திங்
கோரிடம் விடுப்ப வந்த தொத்தவ ணிருந்தோ ரெல்லாம்
போரிட மலைவேல் போற்றும் புலவனை யடுத்த வாற்றாற்
காரிட மெனும்ப ராரைக் கன்முழை நின்றும் போந்தார். 120
பெரியவர் சங்க மெய்தப் பெற்றிடி னன்மை யென்ன
வுரைசெயப் பட்ட வற்று ளொன்றுமெய் தாத தில்லை
புரைதரும் வினைக டம்முட் போயுகா வினையு மின்றே
வரையுறழ் குவவுத் திண்டோண் மழைமத யானை வேந்தே. 121
மணிமுடி யரசர் வாழ்வு மக்கட்பே றாதி நல்கிப்
பிணிமிடி பகையி டுக்கண் பேயினாக் கனவு கள்வர்
பணிவிட மொழிக்கு மாற்றுப் படைமொழி புலவர் சிங்க
மணிகிள ரலங்கற் றிண்டோ ளறுமுகற் றொழுது சொல்வான். 122
அடியனேன் செருக்கா லைய வாலவா யமல னென்றன்
வடிவெலாங் கவரு மிந்நோய் வரப்புகன் றனன்யா னஞ்சிக்
கொடியனேன் பிழைபொ றுத்தாட் கோடியென் றனனீண் டின்றாங்
கடிவிலாக் கயிலை காணி யென்றனன் கருணை வள்ளல். 123
ஆதலாற் கயிலை காண்பா னடைந்திவ ணிருந்த காலைப்
பூதமா ரஞரி ழைப்பப் போற்றினர்க் குதவி செய்யும்
வேதநா யகநீ யென்பால் விழுமமிங் கனைத்துந் தீர்த்தாய்
சோதிமா கயிலை காட்டித் தொலைத்தருள் பிணியு மென்றான். 124
செந்தமி ழாளி யின்ன செப்பலுங் கருணை கூர்ந்து
கந்தவே டிசைபு ணர்த்துக் கயிலையென் றால வாயி
லெந்தைகூ றாமை யானின் றிலங்குதென் கயிலை யானு
முந்துநோய் தீரு மென்னா முன்னின னிதனைச் செய்தான். 125
கரைபொரு திரைநீர்ப் பொய்கை காட்டியொன் றிதன்கண் மூழ்கில்
விரைபடு கொன்றை வேணி வெற்பினைக் காண்பை யென்றான்
வரைபக வெறிந்த வைவேன் மணிமருள் கலாப மஞ்ஞைக்
குரைகழ லறுமுகத்தெங் குடிமுழு தாளுங் கோமான். 126
தன்றலை யான டந்த தாய்க்கலாற் கயிலைக் குன்ற
மின்றிரு தாளா லெய்த றனக்கௌ¤ தோநல் யானைக்
கன்றொடு பிறந்த சிங்கங் கருணையாற் பணித்த வாறு
நன்றென வுளங்கொண் டங்க ணல்லிசைப் புலவ னென்பான். 127
முருகனைத் தொழுது சென்று மூழ்கினா னத்த டத்தி
லிருவினைக் குறும்பு கொல்லு மிலங்குதென் கயிலை தோன்றப்
பொருதிரைக் கங்கை நாணும் பொன்முக ரியினெ ழுந்தான்
சுரர்கள்மொய்த் தலர்பூ மாரி சொரிந்தனர் விசும்பு போர்ப்ப. 128
அருந்தமிழ்ப் புலவன் பொன்னை யாற்றிலிட் டொருகு ளத்திற்
பொருந்துவித் தவன்ப யந்த புதல்வனோர் புலவன் றன்னைத்
திருந்துறக் குளத்தின் மூழ்கச் செய்தொரு நதியின் வந்து
விரைந்தெழப் புரிந்த தன்மை வியந்திடப் பட்ட தன்றே. 129
தாழ்ந்தபொன் முகரி தன்னைச் சார்தலாற் றணந்த தென்ன
வாழ்ந்ததென் கயிலை தன்னைக் காண்கையான் மாய்ந்த தென்னச்
சூழ்ந்ததன் மேனி மாநோய் தொலைந்தெழுந் தனன்மேல் வேலை
வீழ்ந்தவெங் கதிர் குணாது வேலையூ டெழுந்த தென்ன. 130
மாசுறு மணியை மாசு தீர்தர மண்ணி யாங்குத்
தேசுறு முருக னாகித் திருந்துபொன் முகரி மூழ்கி
யாசறு கவிதொ டுத்த வரும்பொ ளெதிர்ந்தான் போற்கண்
கூசுறு மொளிகொண் மேனிக் குமரன்றா தையையெ திர்ந்தான். 131
மேற்படி வேறு
நெஞ்சுக் குளமன் பெனும்புனலா னிறைந்து கடைவிட் டெனவிழிநீர்
விஞ்சக் கரங்க டலைகூப்பி விளங்கு திருக்கா ளத்திமலை
நஞ்சக் கரிய மிடற்றமுதை ஞானக் கொழுந்தைத் தொழுதிறைஞ்சி
யஞ்சக் கரமு மனத்தெண்ணி யமையா வன்பு மயமாகி. 132
கயிலை வேறு காளத்தி வேறென் றெண்ணுங் கருத்திலனாய்க்
கயிலை பாதி காளத்தி பாதி யாகக் கலந்து றழ்ந்து
மயலில் கரும்பா மொழிபாகன் மகிழ வெண்பா வந்தாதி
மயிலில் வருவோன் பேரருளால் வந்த புலவன் பாடினான். 133
பாடும் புலவன் றனக்கொருதான் பரிசு கொடுப்பத் திருவுளங்கொண்
டாடும் பெருமா னெதிர்நின்றே யறைதி வேண்டிற் றெனவுடம்பு
கூடும் பணியிங் கொழித்தவருட் குன்றே யென்றும் பேரறிவை
மூடும் பிணியுங் களைந்துனது முளரித் தாட்கீ ழிருததென்றான். 134
அந்த மாதி யிலாக்கயிலை யமர்ந்த பெருமா னந்தாதிச்
சந்த மாலைப் புலவனது சத்தி பாதத் துயர்ச்சியாற்
பந்த பாசமற மாற்றிப் பன்றி யுருவாய்க் காண்பதற்கு
வந்த மாலு மறியாத மலர்த்தா ணிழலி லிருத்தினான். 135
என்று திருக்கா ளத்திமலை யெழுந்த ஞானச் செழுஞ்சுடரிற்
சென்று புகுந்த கீரனார் செய்தி யனைத்துங் கையிளமான்
கன்று கரந்த பரன்கூறக் கழற்கால் வேந்தன் கதையின்னு
மொன்று கருணைப் பெருங்கடலே யுரையா யடியேற்
கெனத்தாழ்ந்தான். 136
கலிவிருத்தம்
தீதறு கவிவரன் செய்லு ரைத்தனங்
கோதையர் கயிலைசேர் கொள்கை கூறுதும்
யாதவ மனனமர்ந் தினிது கேளென
மாதவ வடிவருள் வள்ளல் கூறுவான். 137
- திருச்சிற்றம்பலம் -
- நக்கீரர் சருக்கம் முற்றிற்று -
|