பிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்
- - - - - -

15. மருளசங்கர தேவர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவரை வசவண்ணர் அடியார் புடைசூழத் தம் இல்லத்துள் அழைத்துச் செல்லுகிறார். அல்லமதேவர் பல வாயில்களையுங் கடந்து இறுதியில் சேடகுண்டத்தை (எச்சில் இலை போடும் இடம்) அடைகிறார். ஆங்கு மருளசங்கர தேவர் என்பவர் எழுந்தருளியிருத்தலைக் காண்கிறார். அல்லம தேவரைக் கண்ட மருளசங்கர தேவர் அவருடைய அடிகளைப் பணிகிறார். தம்மை வணங்கிய மருளசங்கர தேவரை அல்லமதேவர் தூக்கியெடுத்து அருள் செய்கின்றார். மருள சங்கர தேவரின் பெருமையைச் சித்தராமையருக்குக் கூறுகிறார். மெய்யறிவு பெற்றுள்ளாரின் மேன்மையை எளிதில் உணர முடியாது என்கின்றார். அவர்கள் எத்தகைய நிலையினும் உலகில் இலங்கியிருப்பர் என்கிறார். மருளசங்கர தேவர் சேடத்தை யுண்டிருத்தற்குரிய காரணத்தையும் சேடத்தின் பெருமையையும் சித்தராமையருக்கு விளக்கிக் கூறுகிறார். வசவண்ணர், ‘நான் மருங்கிலிருந்தும் மருளசங்கரதேவர் பெருமையை உணராதிருந்தேன், நீ அதனை உணர்த்தினாய்’ என்று அல்லமதேவரைப் பணிகிறார். வசவண்ணர் பெருமையை அல்லமதேவர் வசவண்ணரிடமே விளக்கிக் கூறுகிறார். அல்லமதேவர் மொழியைக் கேட்டு அடியார்கள் மனம் மகிழ்கிறார்கள். அல்லமதேவர் மருளசங்கர தேவருக்குத் திருவருள் செய்கிறார் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]


			நூலாசிரியர் கூறல்

		தாணுவின் உயர்பிர சாத குண்டத்தில் 
		காணரு மருளசங் கரனைக் கண்டருள் 
		பூணணி அல்லமன் போத நல்கிய 
		மாணுறு நெறியினை வகுத்துக் கூறுவாம். 						1


		     அல்லமரை வசவண்ணர் தம் 
		   மனைக்குள் அழைத்துச் செல்லல்

		மாதவர் எண்ணிலர் மருங்கு சூழ்தர 
		ஆதுலர் எதிர்பொரு ளாக அல்லம 
		நாதனை அறிவறி நந்தி கொண்டுதன் 
		ஏதமில் மனையிடை எய்தல் மேயினான். 						2


		  அல்லமர் சேடகுண்டத்தை அடைதல்

		அவத்தைகள் பற்பல அகன்று மெய்ப்பர 
		சிவத்தினை அடைபவர் செய்கை போற்கடை 
		தவப்பல கடந்துபோய்ச் சாதகுண் டத்தை 
		உவப்புடன் அடைந்தனன் ஒப்பில் அல்லமன். 					3


		     ஆங்கு மருளசங்கர தேவர் 
		 எழுந்தருளி யிருத்தலைக் காணல்

		உயர்பிர சாதகுண் டத்தின் ஒண்கரை 
		மயல்மலி பித்தரின் மருள சங்கரன் 
		பயிலுதல் கண்ணுறீஇப் பரம யோகிதன் 
		இயலினை உணர்ந்தனன் எம்பி ரானரோ. 						4


		 மருளசங்கர தேவர் அல்லமதேவரைப் 
				பணிதல்

		கண்டருள் அமலனைக் கண்டு தானெதிர் 
		வெண்திரை அமுதினை மிடியன் மேவியே 
		உண்டனன் எனமகிழ்ந் தோடி வீழ்ந்தனன் 
		வண்திரு வடிமிசை மருள சங்கரன். 							5


		      தம்மை வணங்கிய மருளசங்கரரின் 
		    தன்மையைச் சித்தராமருக்குக் கூறல்

		வணங்கிய அறவனை வந்தெ டுத்துமெய் 
		அணைந்தெழும் உவகையோ டருள்செய் தல்லமன் 
		இணங்குற அருணிலை இராமற் பார்த்தவன் 
		குணங்களை வியந்திது கூறல் மேயினான். 						6


		  மருளசங்கரர் தன்மையை வசவண்ணர் 
		   போன்றாரும் உணரவில்லை எனல்

		குண்டமே வுறுபிர சாதம் கொள்ளைகொண் 
		டுண்டுவாழ் மாதவன் உண்மைத் தன்மையைத் 
		யூண்டநா யகன்முதற் சரணர் யாவரும் 
		கண்டிலர் யாரினிக் காண வல்லவர். 						7


		     மெய்யுணர்வுடையாரை யாரும் 
			  அறியமுடியாது எனல்

		சரிதையொண் கிரியைகால் தடுக்கும் யோகிவை 
		புரிபவர் தம்மையப் புரியும் செய்கையால் 
		தெரிதரல் ஆகுமோர் செயலும் இன்றிவாழ் 
		அரியநன் ஞானியை அறிய லாகுமோ. 						8


			மெய்யறிவு பெற்றோனே 
		எவ்வறத்தினும் நிலைநிற்போன் எனல்

		நலமுறும் ஓர்சிவ ஞானி இல்லில்வாழ் 
		நிலையறம் ஆகினும் நீத்து நிற்குமோர் 
		தலையறம் ஆகினும் தரித்து ஞாலமேல் 
		இலைமறை காயென இருக்கும் என்பவே. 						9


		ஞானியானவன், எல்லா நிலையினும் இருப்பன் 
				   எனல்

		வல்லனென் றிருப்பினும் இருக்கும் வன்மையொன் 
		றில்லனென் றிருப்பினும் இருக்கும் எள்ளுறப் 
		புல்லனென் றிருப்பினும் இருக்கும் புண்ணிய 
		நல்லனென் றிருப்பினும் இருக்கும் ஞானியே. 					10


		ஞானியால் அல்லது பிறப்பு நீங்காது 
				எனல்

		அறிவறி ஞானியால் அன்றி வன்பவம் 
		மறிவுறு கருமியான் மாய்வு றாதுகாண் 
		எறிகதிர் இரவிவந் தெழுந்தி டாவிடில் 
		செறியிருள் அகலுமோ சித்த ராமனே. 						11


		   சித்தராமர், மருளசங்கரர் இருக்கும் 
			நிலையைப்பற்றி வினவல்

		சங்கர முனிநிலை தனைக்கண் டாய்கொலென் 
		றெங்குரு பரன்சொல இராமன் கைதொழு 
		திங்கிவன் மருளரில் இருந்த தன்மையென் 
		அங்கண அறைகென அறைதல் மேயினான். 						12


				(வேறு)
சேட உணவினை உண்டிருத்தற்குக் காரணம் கூறுதல்
தொழிலான் முயன்று நுகர்வமெனின் துயரொன் றுயிர்க்கு விளையுமென ஒழியா அமல சரமூர்த்தி உண்ட மிச்சில் நுகர்வமெனில் பழியா துமிலை அகன்றுபோம் பவமும் என்னப் பிரசாதக் குழியா னதனை அகலாமற் கொண்டிங் கிருந்தான் குணமிக்கான். 13 சிவனடியார் திருவடி கழுவிய நீரின் பெருமை பந்தம் அகன்ற சிவபத்தர் பாதம் விளக்கும் புனற்குழியில் வந்து பிறந்து மூழ்கியதில் வைகும் புழுவின் பெரும்பேறு முந்து சங்கை முதலவா முற்றும் படிந்து தீவினைகள் சிந்தும் அந்த ணாளருமே சேரார் என்று மறைசாற்றும். 14 சேடப்பொருளின் சிறப்பு தாய்க்கு வழுவின் மகளிர்க்குத் தந்தை தனக்குப் பசுவிற்குச் சேய்க்கு மறையோர் தமக்கிடர்செய் தீர்வில் கொடிய பாதகமும் போக்கும் இமைப்பிற் கரணத்தைப் புனிதம் ஆக்கிச் சிவமாக ஆக்கும் அரன்தன் பிரசாதம் ஆயின் அதற்கு நிகருண்டோ. 15 மருளசங்கர தேவரின் மாண்பு பசிக்கு மருந்து மாய்வீடு பயக்கும் வண்மை சேர்ந்துபவம் ஒசிக்கும் அரன்தன் பிரசாத ஊதி யந்தான் உணர்ந்திங்கு வசிக்கும் தகைமை சங்கரற்கே வருவ தன்றிப் பசிக்குணவு புசிக்கு மனிதர் தமக்கென்றும் பொருந்தா தென்றான் எம்பிரான். 16 நீங்களிருவரும் ஒருவரை ஒருவர் உணர்வீர்கள் எனல் நின்னை அறிவன் சங்கரனே நீயே அவனை அறிகுவாய் பின்னை உலகில் யாரறிவார் பேசிற் பாம்பே பாம்பின்கால் தன்னை அறியும் எனஅலமன் தாள்தா மரையின் கீழ்ப்பணிந்தான் என்னை அடிமை யாவுடைய இராமன் என்னும் இணையில்லான். 17 மருளசங்கரர் பெருமை உணராமைக்கு வசவண்ணர் வருந்தல் அம்பொன் வைப்பின் மீதிருந்தும் அறியா தல்லற் படுவான்போல் நம்பன் மருள சங்கனை நானோ அறியா திருந்தழிந்தேன் இம்பர் மருவி நிரஞ்சனநீ எனக்குக் காட்டித் தந்தனையென் றும்பர் பரவும் அல்லமனை உவந்து பணிந்தான் அருணந்தி. 18 உன்னைச் சினந்தது உனக்கு இன்பம் உண்டாதற்கே எனல் இணங்கும் மிக்க காமிதனக் கின்பம் ஊடல் சரலிங்கம் பிணங்கல் முத்தி காமிக்குப் பேரின் பென்ப துணர்த்தற்குக் குணங்கள் மிக்காய் நினைச்சினந்தாம் குறையொன் றுளதோ நினக்கரவின் பணங்கொள் நிலத்தில் பரமசிவ பத்திக் குவால்நீ என்றக்கால். 19 நினது இல்லம் சிறந்தது எனல் இங்கு மருள ளங்கரன்போல் எண்ணி லார்நின் மனைவாய்தல் கங்குல் பகலும் அகலாமற் காப்பர் என்னின் நின்முன்றில் பங்க வினையின் வலிகடந்த பலரும் தாஞ்செய் தவப்பயனால் தங்கு கயிலை மலையன்றோ தண்ட நாதஎன் றமலன். 20 கடவுள் அன்பெல்லாம் நினதே எனல் வெம்மை எதன்கண் நிகழ்ந்திடினும் வெந்தீக் குணமென் பதுபோல மும்மை உலகின் யாண்டேனும் முனைக்கிற் பத்தி யதைநினதென் றிம்மை உலகம் இயம்புமெனில் எங்கள் வசவ நின்பெருமை கொம்மை இளமென் முலைமடந்தை கூறன் அன்றி யாரறிவார். 21 உன்மைப்போல்வார் உலகில் யாரும் இல்லை எனல் பத்திக் கடலே குணக்குன்றே பாசப் பகையே எம்உறவே முத்திக் கரசே சிவானந்த முதலே ஞான மணிவிளக்கே சித்திப் பொருளே அருணந்தித் தேவே நின்னைத் தொழும் அடியார் புத்திக் கமுதே யாவர்நினைப் போல்வார் அவரை அறியேமால். 22 அல்லமரைப் போற்றியதால் உண்டாயதே தம் பெருமை எனல் என்று கூறு எமையுடையான் எனக்குப் புகன்ற நலமெல்லாம் சென்ற நாளில் இலைநினது செந்தா மரைத்தாள் தொழப்பெற்ற இன்று தொடங்கி உளவாமென் றெந்தை நந்தி வணங்கியெழ நின்ற அமல சிவசரணர் நெஞ்சம் உவகை பூத்தனரால். 23 மருளசங்கரருக்கு அல்லமர் அருள்புரிதல் அருளான் மருள சங்கரனுக் கமரர் தாமும் அறிவரிய பொருளா கியபே ரின்பவனு பூதி விளக்கம் அருள்செய்தான் உரையால் நினைவால் அருணோக்கால் உலகர் உணர்வைப் பிணித்தமல இருளான் அதனை அறமாற்ற எழுந்த ஞான சூரியனே. 24
பதினைந்தாவது - மருளசங்கர தேவர் கதி முடிந்தது
கதி 15 - க்குச் செய்யுள் - 795

16. இட்டலிங்க கதி

[இக் கதிக்கண், வசவண்ணர் மனைக்குள் இருக்கையொன்றில் அல்லமதேவர் எழுந்தருளுகின்றார். அங்கு அல்லமதேவர் போந்து அவ்வாறெழுந்தருளியது பெருந்தவத்தின் பேறென்று வசவண்ணர் போற்றுகின்றார். நான் இறைவனிடத்துக் கொள்ளும் அன்பு நெறியை உணர்ந்தது ஊமை கண்ட கனவைப் போலிருக்கின்றது; ஆதலின் எனக்கு அன்புநெறியை உரைத்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார். மக்கட்பேற்றின் மாண்பையும், அறவழிப்படுதலின் அருமையையும், சிவநெறிப்படுதன் செம்மையையும், இட்டலிங்க வழிபாட்டின் ஏற்றத்தையும், பிற நல்லுரைகளையும் அல்லமதேவர் வசவண்ணர்க்கு உரைக்கின்றார் என்னும் செய்திகள் கூறப்படுகின்றன.]


		       நூலாசிரியர் கூறல்

		சிட்டன் அல்லம தேவன் அருளுறீஇ 
		நட்ட நண்பொடு நந்தி உணர்வுற 
		இட்ட லிங்கத் தியல்பு புகன்றமை 
		கட்டு வல்வினைக் கட்டற ஓதுவாம். 						1


		   அல்லமதேவர் வசவண்ணர் 
		  இல்லத்துக்கு எழுந்தருளுதல்

		சங்க ரற்குத் தனைநிகர் இன்பவீ 
		டங்க ளித்தருள் அல்லமன் நந்திதன் 
		மங்க லத்திரு மாளிகை கட்செவிக் 
		கங்க ணற்கினி யாரொடு கண்டனன். 						2


		அல்லமதேவர் இருக்கையொன்றில் 
		      எழுந்தருளியிருத்தல்

		மண்டு பேரொளி மாடத்து நாப்பணம் 
		தண்ட நாதன் தவிசொன் றமைத்திட 
		அண்ட நாயகன் அல்லமன் ஆயிடைக் 
		கண்ட நோக்கம் களிப்ப இருந்தனன். 						3


		 அல்லமதேவரை மலர்கள் தூவி 
			   வணங்குதல்

		ஆத னத்தில் அமர்ந்தருள் அல்லமன் 
		பாதம் அன்பொடு பன்மலர் தூயிது 
		மாத வத்தின் வலியெனத் தாழ்ந்தெழு 
		காதல் மிக்குக் கசிந்துள நந்திதான். 							4


		  வசவண்ணர் தமக்குக் கடவுளன்பு 
		 உண்டாகுமாறு உரைக்க வேண்டல்

		அடிய னேன்சிவ பத்தி அறிந்தமை 
		படியில் ஊமன் கனவெனப் பட்டது 
		முடியு மாறு மொழிந்தருள் என்றுபொன் 
		தொடியு லாங்கை தொழுது விளம்பினான். 						5


		      அல்லமர் உனக்கு யாரும் 
		     உணர்த்தவேண்டாம் எனல்

		கேட்ட வாரியன் கேடில் சிவநெறிக் 
		கூட்ட மேவுறு கொள்கையி னாய்நினைக் 
		காட்டு வாருள ரோசெங் கதிர்க்கிருள் 
		ஓட்டு சோதியும் உண்டுகொ லோஎன்றான். 						6


		வசவண்ணர், அல்லமர் தம்மைப் புகவது 
			      கூடாதெனல்

		வள்ளல் இன்றெனை வந்து புகழ்ந்தனன் 
		தெள்ளு தண்புனல் தேக்கு முளைத்தலைக் 
		கிள்ளி நின்றெறி கின்றவர் போலெனா 
		உள்ளு டைந்திட் டுரைக்கும் வசவனே.						7


				(வேறு)
இதுவும் அது
இகழ்ந்தென துளச்செருக் கினைய கற்றிலாய் புகழ்ந்தனை விழைபுளிங் கறியிட் டாறுநோய் மிகுந்தெழ வளர்த்தல்போல் எனவி ளம்புபு தகுங்கழல் இறைஞ்சினன் தண்ட நாயகன். 8 வசவண்ணர் அல்லமரை வேண்டுதல் அருளினால் நினதடி அருச்சிக் கும்படி தெருளிலா எனக்குரை செய்தி என்றலும் மருளனாம் எனுமொரு மதிஞற் கீந்தருள் பொருளினான் இனையன புகறல் மேயினான். 9 நல்வினை செய்யும் உயிர்க்கே மக்கட்பிறவி கிட்டும் எனல் புன்மரம் நெளிபுழுப் புள்ளி லங்கெனும் பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே வன்மைகொள் நிலமிசை மக்கள் ஆகுதல் நன்மைகொள் உயிர்க்கலால் அரிது நந்தியே. 10 அறம் செய்யும் வழியில் நிற்றல் யார்க்கும் அரியதெனல் நரர்வடி வாயினும் நன்மை ஆற்றுறா மரபினில் உலகினில் வருதல் தப்புதல் அரிதுநல் அறம்புரி வழிய டுப்பினும் மருவுதல் அரிதறம் வளர்க்கும் அங்கமே. 11 அறவழி நிற்பினும் ஆகமவழி நிற்றல் அரிதெனல் அறத்துறுப் பெய்தினும் அன்பி னாலறம் சிறப்புறச் செய்தலிங் கரிது செய்யினும் புறச்சம யங்களைப் போக்கி ஆகம நெறிச்சம யங்களை அரிது நேர்தலே. 12 ஆகம வழிநிற்பினும் சைவசமய நெறிநிற்றல் அரிதெனல் ஆகமம் புகல்நெறி அடைவன் ஆயினும் சோகமில் சைவநல் துறையை நன்றெனச் சேர்குதல் அரிதது சேர்வன் ஆயினும் ஏகலிங் கயிக்யனா குதலன் றெண்மையே. 13 இட்டலிங்க வழிபாடு செய்பவன் ஏற்றமுளான் எனல் புண்ணிய முதிர்வினாற் பொருந்தி அங்கையில் கண்ணுற நிகழவுறு சிவலிங் கத்தினை எண்ணிய மனமுடன் என்றும் வந்தனை பண்ணிய முயல்பவன் பத்தன் என்பவே. 14 இட்டலிங்க வழிபாடு ஆணவத்தை அகற்றுமென்றல் ஆவுறு பிணிகெட ஆவின் பால்கறந் தாவினை ஊட்டல்போல் ஆண வங்கெட ஆவியுள் அமலனை அங்கை தந்துபின் ஆவியுள் அமைவுற ஆக்கும் ஆரியன். 15 இட்டலிங்கம் அகமும் புறமும் இலங்குதல் கருங்கொடி இருவிழிக் கண்ணும் ஓர்மணி திரிந்திடு செயலெனத் திரிதல் இன்றியே பொருந்துறும் அகமொடு புறமும் தீர்வற இருந்தில குறுமருள் இட்ட லிங்கமே. 16 இட்டலிங்க இயல்பு குறிபல பலமுறை கொண்டு பல்வகைப் பொறிதொறு மருவியொண் புலன்நு கர்ந்துமாய்ந் தறிவரு நிலையவா தார மேவியும் நிறைவுறும் அங்கையின் நிகழும் இட்டமே. 17 இட்டலிங்கம் வினைவலி தொலைத்தல் அடைந்துள உருச்சுவை அமைதி என்பன உடம்பொரு மூன்றினும் உற்ற டைந்திடும் தொடர்ந்துள வினைவலி தொலைத்தி யானெனும் இடும்பையில் இன்பருள் இட்ட லிங்கமே. 18 மாயையை வென்றவன் என்றறி வறவறிந் திட்ட லிங்கமாம் ஒன்றொரு பொருளிலே உறவி ழித்தவன் பொன்றுறு சகமெனப் புணர்ந்த மாயையை வென் றவன் அவனெனா விளம்பும் வேதமே. 19 பரமனையிருத்தும் பத்தன் பொருவில்சற் பத்தியாம் தாரம் பூண்டொரு வரவயி ராகமாம் வத்தி ரம்புனைந் தொருவலில் உணர்வெனும் செச்சை ஒன்றுறப் பரமனை இருத்துவோன் பத்தன் ஆகுவான். 20 இட்டலிங்கப் பற்றால் சிவமயமாவன் எனல் ஒன்றினொன் றுள்ளுற உடம்பு மூன்றையும் மன்றநல் வத்திர மடிய தாக்கியே என்றுமங் கமைவுற இட்டம் வைப்பனேல் அன்றவன் சிவமயம் ஆகும் என்பவே. 21 சிவத்தொண்டன் இத்தன்மையன் எனல் அருளெனும் புனலினை ஆட்டிச் சாந்தமாம் வரைநறும் சந்தொடு மருவ இந்திய விரைமலர் புனைந்தறி வினைய ருத்துறில் பரமனை அவன்சிவ பத்தன் ஆகுவான். 22 இறைவன் ஒருவன் அன்பையே விரும்புவன் எனல் பூசறு மனத்தெழும் அன்பை அன்றியே பூசனை உவக்கிலன் புராரி சென்னிமேல் வீசுறு திரையினும் மிக்க தோசொலாய் ஊசல்செய் மனமுடை ஒருவன் ஆட்டுநீர். 23 இறைவனை வழிபடுவோர் இறைவனே எனல் பூப்புனை கையுமெம் புனிதன் தன்புகழ்ப் பாப்புனை நாவுமே படைத்து ளான்தனைச் சேப்புனை கொடியுடைத் தேவ னேயென நாப்புனை புகழொடு நாகர் ஏத்துவார். 24 இறை வழிபாடு செய்யாதவரினும் குரங்கு சிறந்ததெனல் பூசனை செயாதகை புராந்த கன்புகழ் பேசுதல் இலாதவாய் பெற்று ழன்றிடும் நீசரா னவர்தமில் நெடுவ னத்திடைக் கூசுதல் இலாதபுன் குரங்கு நன்றரோ. 25 தான் உண்பவற்றை இறைவனுக்கே படைப்போனை வினை அணுகா குடிப்பன விழுங்குவ கூரெ யிற்றினால் கடிப்பன நக்குவ அனைத்தும் கைம்மலர் அடுத்துள சிவன்தனக் கர்ப்பித் துண்பவன் விடுத்தவன் மேல்வரும் வினைகள் யாவுமே. 26 யான், எனது எனும் பற்றற்றோன் இறைவனே எனல் தானுறும் உடல்மனம் தனமென் றுள்ளவை ஈனமில் குருசிவ சரங்கட் கீந்துதான் யானென தென்குதல் இன்றி வைகுவோன் மேனிகழ் சிவமொடு வேற லானரோ. 27 ஆசிரியர் முதலியோர்க்கு ஈந்த பொருளை மீண்டும் பெற எண்ணுவோன் கொடியன் எனல் குருசிவ சரங்கொளக் கொடுத்த மெய்மனம் பொருளிவை நமவெனப் புந்தி செய்துகொள் ஒருவனில் வழிமறித் தொறுத்துக் கொள்வன சரனனி நல்லன்மெய் தவறி லாமையால். 28 சிவனடியார்க்கு வேண்டுவன வேண்டாதன இவை எனல் விடுவன காமம்வெவ் வெகுளி மாலிவை தொடுவன குருசிவ சரங்கள் தொல்பவம் கடுவென வெருவிய கருத்து ளளர்க்கிவண் அடுவன எனப்புலன் அட்ட ஆற்றலாய். 29 இட்டலிங்கத்தைப் போற்றாதவர் சிறப்பற்றவர் எனல் அங்கையின் அமர்தரும் அரனை விட்டொரு வெங்கட வுளர்தமை விழைந்து போற்றுவார் கங்கையை அகன்றுவர்க் கழியின் மூழ்குநர் தங்களின் வேறலர் தரும மூர்த்தியே. 30 தூய்மையுடையவனே இறைவனுக்கு அன்பன் எனல் மோகமில் குருசர முனியின் முன்னுள தாகிய செயிர்முழு தகன்று வண்துறை போதிய மடியெனப் புனிதன் ஆகுமேல் பாகியல் மொழியுமை பாகற் கன்பனாம். 31 அடியார்களை இகழாதவனே இறைவன் அன்பன் எனல் விள்ளரு நற்சிவ வேடத் தோர்பொருள் கொள்ளைகொள் கிற்பினும் குறைகள் கூறினும் பிள்ளையை அறுப்பினும் பிழைகள் செய்யினும் எள்ளுதல் இலனெனில் ஈசற் கண்பனாம். 32 சிவனடியார்களிடத்தில் குலம் முதலிய வேறுபாட்டைக் கருதியவன் அளற்றில் அழுந்துவான் சங்கமம் தனக்கொரு சாதி உன்னினான் அங்கையின் அமர்தரும் அரற்கு முன்னினான் சங்கர னொடுசரந் தம்மில் வேறெனும் அங்கவன் அறிவரும் அளற்ற ழுங்குவான். 33 அடியவர்கட்கு ஆக்கும் உணவே அமிழ்தம் எனல் தலைமைகொள் குருசிவ சரங்கட் காகவே உலையிடும் அரிசியன் றோங்கல் மத்தெறி அலையமு தாந்தமக் காக ஆக்குறில் கொலைசெயும் நஞ்சினும் கொடிய தாகுமால். 34 நற்செயல் உள்ளான் பிறர் பிறவியை நீக்குவோன் எனல் தனுவுள அளவுமோர் தகுநற் செய்கையும் மனமுள அளவும்பா வனையும் ஞானமுண் டெனவுள அளவுஞே யமுமி யைந்தவன் பினையுள அளவுநோய் பிறர்க்க கற்றுமே. 35 உள்ளத்தில் இறைவனையே அமர்த்த வேண்டும் எனல் ஈசனை இருத்துறும் இதயத் தோர்பொருள் ஆசையை இருத்துதல் அந்த ணாளர்தாம் வாசமுற் றிடுமொரு மனையிற் புன்செயல் நீசரை இருத்துதல் நிகர்க்கும் என்பரால். 36 அழுக்குள்ள மனத்தில் இறைவன் தங்கான் எனல் சினமுத லியமயல் தீர மாற்றுபு வினைதபு வாய்மையாம் மெழுக்கை அன்பெனும் புனலொடு விரவியே பூசின் அல்லது மனமெனும் மனையிடை வராதி லிங்கமே. 37 அடியார்கள் மங்கையர் அழகையும் பொருளையும் விரும்பலாகாதெனல் காலமும் கருமமும் கடந்த காரணன் பாலுறும் பரிசறப் பார்ம டந்தையர் கோலமும் பொருளையும் குறித்து நச்சுதர் சீலமும் விரதமும் தீய என்பரால். 38 தீச்செயலினர் கையில் இறைவன் இருப்பினும் கிட்டான் எனல் வெங்கொலை களவுபொய் வெகுளி ஆசையென் றிங்கிவை யொடுமரீஇ இருக்கின் றார்தமக் கங்கையின் நெல்லிபோல் அவிர்ச டைப்பிரான் செங்கையில் இருப்பினும் சேயன் சேயனே. 39 அடியார்கள் அன்பர்கள் எதையும் விரும்புவார் எனல் பத்தரைப் புகழ்வுறப் பணிய உண்டவர் வைத்தன கொளவுடன் மருவப் பெற்றவர் சித்தியும் கடவுளர் சிறப்பும் வேறொரு முத்தியும் பொருளென முன்னு றார்களால். 40 அல்லமர், அங்குள்ள அடியார் அறியவே வசவண்ணர்பால் கூறினார் எனல் இன்னன நன்னெறி யாவும் ஆயிடைத் துன்னிய சிவகணம் துணிந்து கொள்ளவே மன்னவன் எனுமருள் வசவ நாயகன் தன்னொடு புகன்றனன் தலைவன் அல்லமன். 41 வசவண்ணர், அல்லமரைப் போற்றிப் பணிந்து மகிழ்ச்சி மிகுதல் பாடினன் பரவினன் பணிந்த சொல்லுரை ஆடினன் பன்முறை அல்ல மன்திருத் தாடலை புனைந்தனன் தண்ட நாயகன் மூடிய உவகையின் மூழ்கி னானரோ. 42 அல்லமர், கலியாணபுரத்தில் எழுந்தருலியிருத்தல் திருந்தவிவ் வகையுப தேசித் தெண்ணிலா அருந்தவர் குழாத்தொடும் அருணந் திப்பெயர்ப் பெருந்தகை மகிழ்வுறப் பிரிவில் ஆரியன் இருந்தனன் மலிகலி யாணத் தென்பவே. 43
பதினாறாவது - இட்டலிங்க கதி முடிந்தது
கதி 16 - க்குச் செய்யுள் - 838

17. கதலிவன கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் கலியாணபுரத்தில் எழுந்தருளியிருத்தலை அக்கமாதேவி அறிந்துகொண்டு அங்கடைந்து அல்லமதேவரைப் போற்றுகிறாள். அக்கமாதேவியைக் கண்ட பலரும் பலவகையாக எண்ணுகிறார்கள்; அல்லமதேவர் அக்கமாதேவிக்கு மெய்ம்மைப் பொருளை யுரைத்தருளி வாழைக்காடு என்னுமிடத்திற் சென்று அருளுரையின் மெய்ம்மைப் பொருளை நடைமுறையில் காண்பாயாக வென்று உரைத்தருளுகின்றார்; அக்கமாதேவியும் அவ்வாறே திருச்சைலத்திலுள்ள வாழைத் தோட்டைத்தை (கதலிவனத்தை) யடைகிறாள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]


			நூலாசிரியர் கூறல்

	வரையிற் புண்ணிய வனத்தினில் வளங்கெழு நதியின் 
	கரையிற் பன்னெடு நாளருட் குரவனைக் காண்பான் 
	திரிதற் குற்றுலாய் வந்துமா தேவிகல் யாண 
	புரியிற் கண்டுவந் தேகிய முறையினிப் புகல்வாம். 						1


	     அக்கமாதேவி கலியாணபுரம் சேர்தல்

	காட்டி னும்பெருங் குன்றினும் தேடினன் காணாள் 
	வாட்டு றும்பிறப் பெனும்பிணி மாய்வுற வீட்டில் 
	கூட்டு நன்மருந் திருப்பதை அறிஞராற் கூறக் 
	கேட்டு வந்துமா தேவியந் நகரினைக் கிடைத்தாள். 						2


	  அக்கமாதேவி கலியாணபுரத் தெருவில் புகுதல்

	தலையில் வெண்கலை ஒன்றுற வெற்றரை சமைத்துப் 
	பலிகொ ளும்படி மனைதொறும் உலகெலாம் பழிச்ச 
	அலம ரும்பரற் கினியவள் வெற்றரை யாய்க்கட் 
	புலன்வி ருந்துணுங் கடிநகர் வீதியுட் புகுந்தாள். 						3


	 கண்ட நகரமக்கள் பித்துடையாள் எனக்கருதுமாறு 
			சென்றாள் எனல்

	நாற்கு ணங்களுள் முதற்குணம் ஆகிய நாணைத் 
	தீர்க்கும் இம்மடம் உடையவள் யார்கொலோ தெரியேம் 
	பார்க்கில் இன்னவள் பித்துடை யாளெனப் பலரும் 
	நோக்கும் வண்ணம்வந் துற்றனள் உலகியல் நோக்காள். 					4


	      வசவண்ணர் திருமடத்தை அடைதல்

	உலகு ளார்தமைப் பேதையென் றுணர்ந்தன ளோதான் 
	உலகு ளார்தனைப் பேதையென் றுணர்குவர் என்றோ 
	உலகு ளார்தமை நாணிலள் நீங்கிய உடையாள் 
	உலகு ளார்தொழும் தண்டநா யகன்மடத் துற்றாள். 						5


	   அல்லமதேவரைக் கண்டு வணங்குதல்

	தண்ட நாயக னொடுபலர் நெருங்குறத் தவிசின் 
	அண்ட நாயகன் அல்லமன் வீற்றிருந் தருளக் 
	கண்டு போயரு கிறைஞ்சினள் ஆண்டமர் கணங்கள் 
	பண்டு தாமறி யாவியப் படைந்தனர் பார்த்து. 						6


	 பிறவிப் பிணிக்கு அஞ்சினேன் அருள்க எனல்

	நெஞ்சம் ஆரழல் அரக்கென நெக்குநெக் குருகச் 
	செஞ்சொல் வாய்தடு மறவாள் விழிபுனல் சிந்தக் 
	கஞ்ச நாள்மலர்க் கைதொழு தனங்கன்நோய் காணாள் 
	அஞ்சி னேன்பவப் பிணியினி அருள்செயென் றழுதாள். 					7


	  அக்கமாதேவி அருள்பெறத் தக்காள் என 
			அல்லமர் கருதல்

	வீடு வப்பவர் ஆணெனப் பெண்ணென வேறோ 
	ஏட லர்க்குழல் உமைகலை யேயிவள் இவள்போல் 
	நாடு றிற்பரு வம்பெறும் அவரிலை ஞானம் 
	கூடு தற்குரி யாளென அல்லமன் குறித்தான். 							8


	 அக்கமாதேவியின் மெய்யறிவை யாவரும் 
			வியத்தல்

	தான லாதொரு பொருளிலைக் சகமென என்னும் 
	ஞான மேவலாற் காமஇன் பந்தனை நண்ணாள் 
	தான லாதர வால்தனைத் தழுவியின் புறுநர் 
	ஏனை மாந்தருள் உளர்கொலோ என்றனர் இருந்தார். 						9


	  அக்கமாதேவி காமனை வென்றவள் எனல்

	இன்று காமனை வென்றவள் இளையளா யிழையோ 
	டொன்று மேனியன் ஆகிய கண்ணுதல் ஒருவன் 
	வென்று ளானென உலகினில் எடுத்தசொல் மெய்ம்மை 
	அன்று போலுமென் றியம்பினர் சிலரவண் அமர்ந்தோர். 					10


	   இவள்போன்று பற்றற்றவர்க்கே தீவினை 
			  கெடுமெனல்

	உடல மானமற் றிவளென அனைத்தையும் ஒருங்கு 
	விடவ லார்க்கலால் இளமையும் செல்வமும் விரும்பி 
	நடலை வாழ்வினில் வெறுப்புறாப் புல்லிய நரர்க்குத் 
	தொடரு மாவினை தொலையுமோ எனச்சிலர் சொன்னார். 					11


	 அல்லமர் அக்கமாதேவிக்கு அருளுரை வழங்க 
			   நினைதல்

	சென்று தேடிநாம் தத்துவம் அருள்செயும் சீடர் 
	அன்றி ஞானதே சிகனுள னோஎன ஆய்ந்திட் 
	டின்று மேவுமா தேவிபோல் இலைஎன எம்மான் 
	நின்ற ஞானமூ லந்தனை உணர்த்துவான் நினைந்தான். 						12


	பூதம் பொறி முதலியன நீ அல்லவெனக் கூறல்

	பூதம் நீயலை பொறிகளும் அலையலை புந்தி 
	ஏதும் நீயலை இவற்றினை மயங்கியான் என்னும் 
	போதம் நீயலை என்றிவை அனைத்தையும் போக்கிச் 
	சோதி ஆகிய பிரமமே நீயெனச் சொல்லி. 							13


	    உண்மைப் பொருளினை யுரைத்தல்

	ஞேய ஞானஞா துருவெனும் இவைபல நிற்கும் 
	ஆயின் வேறறு முத்தியன் றதுசகம் ஆமென் 
	றேயும் ஆறிது அதுவெனும் சுட்டிலா இயல்பை 
	மாயை மாறிய தேவிபால் அருளினன் வள்ளல்.						14


	 அக்கமாதேவி அல்லமதேவரைப் போற்றுதல்

	தேறு நீரென எனதுளந் தெளித்ததே சிககைம் 
	மாறு காண்கிலேன் உடல்பொருள் ஆவிகள் மதிப்பில் 
	வேறு போய்நின ஆயின என்றவள் விழிகள் 
	ஊறு நீரொடும் அல்லமன் தாள்தொழு துளைந்தாள். 						15


	  நான் உரைத்த அருளுரையை நடைமுறையிற் 
			காண்பாய் எனல்

	அன்னை நீயினிக் கதலிமா வனத்தினை அடைந்திட் 
	டென்னை மேவினை கேட்டவிப் பொருளினை எல்லாம் 
	நின்னின் நீதேளிந் துறுதிகொள் நிதித்தியா சனத்தின் 
	மன்னு வாயென ஏவினன் தற்கொடை வள்ளல். 						16


	    அக்கமாதேவி திருமலையைச் சேர்தல்

	வள்ளல் நாள்மலர்த் திருவடி வணங்கியம் மருங்கில் 
	கொள்ளை மாதவர் தாள்தொழு தருள்விடை கொண்டு 
	வெள்ளம் ஆகிய அன்புநின் றுய்த்திட மேவித் 
	தெள்ளும் ஆரமு தனையவள் பருப்பதம் சேர்ந்தாள். 						17


	 கதலிவனம் திருச்சைலத்தில் உள்ளது எனல்

	வசவன் பாலருள் அல்லமன் உற்றென வானோர் 
	பசுவின் பானிறை சுனையிடை நழுவிவீழ் பழத்தை 
	மிசையும் பூங்கிளி மிழற்றொலி கடலென விரவ 
	இசையும் பாசிலைக் கதலியங் காடதில் இலங்கும். 						18


		   வாழைக்காட்டின் வளம்

	விரிந்த வாழையின் நெட்டிலை மிசைநிறை மதியம் 
	பொருந்து மாறுவிண் முழுதையும் அளித்தருள் புத்தேள் 
	அருந்த வாய்மடைத் தொழில்திறம் நிரம்பிய அடிசில் 
	சொரிந்த தாமென மனங்களி கூர்தரத் தோன்றும். 						19


	      அக்கமாதேவி வாழைக்காட்டில் 
		   எழுந்தருளியிருத்தல்

	இனைய வாழையங் காடுகண் டெங்கள்மா தேவி 
	முனிவர் வானவ ரியாவரும் முறைமுறை போற்றத் 
	தனிய ளாயொரு புறம்பசந் துளசுவை தருசெங் 
	கனிய வாவிய உளமொடு மிருந்தனள் களித்து. 						20


பதினேழாவது - கதலிவன கதி முடிந்தது
கதி 17 - க்குச் செய்யுள் - 858

18. சாதகாங்க கதி

[இக் கதிக்கண், வசவண்ணர் வீடுபேற்றிற்குரிய நல்ல வழியினை உரைத்தருளுமாறு அல்லமதேவரை வேண்டிக்கொள்ளுகிறார். அல்லமதேவர் வசவண்ணரைப் பார்த்து, ‘இறைவனை அகத்திற் காண்பவனே சிறந்தவன், புறத்திற் காண்பவன் இழிந்தவனாவான். எல்லாச் செயல்களுக்கும் மனவொடுக்கமே சிறந்த வழியாகும். நல்லவைகளைச் செய்து மக்களை உயர்த்தவும் நல்லவைகள் அல்லாதவைகளைச் செய்து மக்களைத் தாழ்த்தவும் இந்த மனமானது வல்லது. மனத்தை அடக்கி வசப்படுத்தினால் மற்றவைகள் தாமே வசமாகும். மனம் எளிதில் ஒருவனுக்கும் அடங்காது. யோக வழிகளால் உயிர்ப்புக் காற்று ஓடாது தடுத்து நிறுத்தினால் மனமும் நிற்கும். மனம் நிற்கவே வீடுபேறு தானாகவே கூடும்’ என்று அறிவுரைகள் அருளுகிறார். அடியார்கள் அல்லமதேவரைப் பணிகிறார்கள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]


			நூலாசிரியர் கூறல்

		வினைய டுத்த விழுமம் துடைத்தெமக் 
		கனைய டுத்த அருளுடை அல்லமன் 
		மனன டக்கம் வசவற் குணர்த்துதல் 
		தனையெ டுத்தினிச் சாற்றுதும் நாமரோ. 						1


		     அக்கமாதேவி சென்றபின் 
			வசவண்ணர் கூறல்

		காவின் நீடும் கதலி வனத்துமா 
		தேவி போதத் திருவருள் செய்தவண் 
		மேவி ஞான விளக்குற எம்முடை 
		ஆவி போலும் வசவன் அறைகுவான். 						2


		  வசவண்ணர் வீடுபேற்றுவழி 
		     கூறுமாறு வேண்டல்

		மத்தர் வாத மயக்கம் இலாதுயர் 
		முத்தி சாதனம் என்று மொழிந்தருள் 
		அத்த நீயென் றடிகள் தொழுதெழப் 
		பத்தி வேண்டும் பரமன் பகருமால். 						3


		     மனம் சொல் செயல்கள் 
		  தூய்மைபெறலே வீட்டுநெறிக் 
			காரணம் எனல்

		பரம முத்தி பதம்பெறும் ஏதுவுள் 
		கரண சுத்தி அதனது காரணம் 
		அரண் எரித்த அமலற் குறித்தநல் 
		கிரியை இத்திறம் வேதம் கிளக்குமால். 						4


		    மனம், இலிங்க வடிவாக 
		மாறாவிடின், இலிங்கம் அணிந்தும் 
		     பயன் இல்லை எனல்

		மனமி லிங்க மருவிலை யேலுடல் 
		தனிலி லிங்கம் தரித்தும் இலையிலை 
		எனவி யம்பும் இணையிலி ஆகமம் 
		நினைவ ரன்கழல் நிற்க நிறுத்தினாய். 						5


		     மனத்தொடு பொருந்தாத 
		வழிபாட்டினால் பயனில்லை எனல்

		தாவி லாத மனமொடு சார்தரா 
		தோவும் ஆயின் உலகிற் புனலுமொண் 
		பூவும் நாடொறும் போக்குறு பூசனை 
		ஆவி போகிய ஆகம் நிகர்க்குமால்.							6


		 இறைவனை அறிஞன் உள்ளத்துட் 
			  காண்பன் எனல்

		புறம்பு காண்குவன் புல்லியன் ஈசனை 
		அறிந்த ஞானி அகமுறக் காண்பனால் 
		எறும்பி காணுறில் இன்கரும் பேகொளும் 
		செறிந்த ஆடிலை தின்பன என்பவே. 						7


		 அமைதி பெறாத உள்ளமே பகை 
				எனல்

		கரங்கள் நல்ல கருமம் செயாநிற்பத் 
		திரிந்து செல்லும் செலாத இடத்துநெஞ் 
		சொருங்கு றாத ஒருமனம் தன்னினும் 
		பரந்த அல்லற் படுக்கும் பகையிலை. 						8


		   மனம் திரிந்தலைந்தால் சிறிதும் 
		     இன்பம் உண்டாகாதெனல்

		துயிலை இன்பெனச் சொல்லுதல் இந்தியத் 
		தியலு நெஞ்சம் இலாமையி னாலன்றோ 
		பயிலு நெஞ்சம் பரந்து திரிதரும் 
		செயலில் இல்லை சிறிதும் சுகமரோ. 						9


		   மனம் வசப்பட்டால் பிறவியை 
			 அடையான் எனல்

		மனமொ ருத்தன் வசப்படு மேலவன் 
		பினைவ ருத்தும் பிறப்பை அடைந்திடான் 
		மனமொ ருத்தன் வசப்படா தோடுமேல் 
		நனிபி றப்பிடை நாளும் சுழலுமே. 							10


		 எச்செயலுக்கும் மனமே துணை எனல்

		அறவி னைக்கும் அரும்பொருள் இன்பொடு 
		பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர் 
		விறலி னுக்குநல் வீரம் தனக்குமொண் 
		துறவி னுக்கும் துணைமனம் என்பவே.						11


		 எல்லாவற்றிற்கும் மனமே காரணம் 
				எனல்

		நல்ல செய்து நரரை உயர்த்தவும் 
		அல்ல செய்தங் களற்றிடை ஆழ்ப்பவும் 
		வல்ல திந்த மனமல தையனே 
		இல்லை என்ன இயம்பும் மறையெலாம். 						12


		   இறைவனை மனம் பற்றினால் 
		  தீவினையெல்லாம் கெடும் எனல்

		நெஞ்சம் மாதுமை நேசனை நண்ணுமேல் 
		விஞ்சு பாதகம் கோடி விளைப்பினும் 
		அஞ்சு றானவன் அவ்வினை யாவையும் 
		பஞ்சு தீயிடைப் பட்டென மாயுமே. 						13


		 மனத்தால் சிறப்புறாவிடின் மக்களும் 
			    மாக்களே எனல்

		மக்கள் மானிடர் என்று மனத்தினால் 
		மிக்க மேன்மை விளங்கினர் இல்லெனில் 
		பொக்க மேவும் பொறிகளோர் ஐந்தினால் 
		ஒக்கு மாவினை ஒத்துயர் வுற்றிடார். 						14


		மனத்தை அடக்குபவனே பிறவியைக் 
			  கடக்கலாம் எனல்

		கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை 
		எடுக்க வல்லதும் இம்மனம் என்றதை 
		அடக்க வல்லவன் ஐய பவக்கடல் 
		கடக்க வல்லவன் ஆவன் கடிதரோ. 							15


		 மூச்சுக்காற்று ஒடுங்கினால் மனம் 
			  ஒடுங்கும் எனல்

		ஆயின் மிக்கோர் அரிய செயலெலாம் 
		நேய மிக்க மனத்தை நிறுத்தல்காண் 
		வாயு நிற்க மனமும் உடனிற்கும் 
		தோய நிற்குறின் நிற்கும் துரும்புமே. 						16


		 மனத்தை அடக்க விரும்புவோர் மூச்சை 
			  உள்ளடக்குவார் எனல்

		ஓடு மாவை நிறுத்துறின் உள்ளுறக் 
		கோடும் வாய்க்கலி னத்தினைக் கொள்ளுவார் 
		நீடு மாமன நிற்க நிறுத்துறில் 
		ஓடும் வாயுவை உள்ளுற ஈர்ப்பரால். 						17


		  வாயுவை வசப்படுத்தினால் மனமும் 
				வசப்படும்

		அடுத்த நாடிகள் ஆங்கொரு மூன்றினும் 
		விடுத்து வாங்கியும் மேவ நிறுத்தியும் 
		தடுத்தும் வாயுவைத் தன்வசம் ஆக்கில்வாய் 
		மடுத்தி டாது மனமும் வசப்படும். 							18


		     நல்ல மனத்தின் இயல்புகள்

		ஓடும் பொன்னும் உறவும் பகையுமோர் 
		கேடும் செல்வமும் கீர்த்தியும் நிந்தையும் 
		வீடும் கானமும் வேறற நோக்குதல் 
		கூடுந் தன்மை கொளுமனம் நன்மனம். 						19


		தீய மனத்தின் இயல்புகள் இவை 
			     எனல்

		மன்னு காம வெகுளி மயக்கமென் 
		றின்ன கூடி எறிவளி முற்சுடர் 
		என்ன ஆடு இயல்மனம் தீமணம் 
		தன்னை யாரும் தடுக்கத் தகாதரோ. 						20


		     இலிங்க வடிவமாவோன் 
		     இத்தகையோன் எனல்

		மறிந்தி டாது மனபவ னங்கள்தாம் 
		செறிந்த வாயிற் சிவமயம் ஆகுமால் 
		அறிந்து வாயுவை அங்ஙனம் எய்தினோன் 
		இறந்தி டாத இலிங்கப் பிராணியாம். 						21


		 அல்லமர், வசவண்ணரிடம் இவ்வாறு 
			   கூறினார் எனல்

		இன்ன வாறு பலவும் இயம்பினான் 
		அன்னை போலுநம் அல்லம தேசிகன் 
		தன்னை நேர்தரு சைவம் வளர்க்குமோர் 
		மன்னன் ஆகும் வசவனை நோக்கியே.  						22


		     வசவர், அல்லமரைப் புகழ்தல்

		நின்னை நோக்கவும் நின்னை இறைஞ்சவும் 
		நின்னை வாழ்த்தவும் நின்மொழி கேட்கவும் 
		என்ன மாதவம் எய்தின வோஎனப் 
		பன்னி நாதற் பணிந்தனன் நந்தியே. 						23


		     சித்தராமர் முதலியோர் 
		     அல்லமரைப் போற்றல்

		சித்த ராமனுஞ் சென்ன வசவனும் 
		முத்தன் ஆமருள் மாச்சன் முதலிய 
		பத்த ராகும் பலருமென் புன்தலை 
		வைத்த நாதன் மலரடி வாழ்த்தினார். 						24


		 அல்லமர், பலருக்கும் அருள்புரிய 
			    எண்ணுதல்

		ஆன காலையில் அல்லமன் ஆகிய 
		ஞான வாரி நடந்துல கெங்கணும் 
		ஏனை மாதவர்க் கின்பம் அளிக்குவல் 
		யானெ னாவுளத் தெண்ணினன் என்பவே. 						25


பதினெட்டாவது - சாதகாங்க கதி முடிந்தது
கதி 18 - க்குச் செய்யுள் - 883

19. கோரக்கர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் கலியாணபுரத்தைவிட்டு மறைகிறார். வசவண்ணர் முதலியோர் அல்லமரைக் காணாது வருந்துகிறார்கள். அல்லமதேவர் பல வளங்கள் பொருந்திய பெருஞ் சிறப்புமிக்க திருப்பருப்பதம் என்னும் ஓங்கலை யடைகிறார். ஆண்டு உடலழியாப் பேறுபெற்று அதனையே பெரிதாக மதித்து நிற்கிற கோரக்கர் என்னுஞ் சித்தரைக் காண்கிறார். அக் கோரக்கர் அல்லமதேவரையும் தம்மைப்போன்ற ஒரு சித்தராக எண்ணிப் போற்றுகிறார். உடலழியாப் பேறுபெற்றுள்ள தம் பெருமைகளை அல்லமதேவர்க்கு உரைக்கிறார். அல்லமதேவர் கோரக்கரின் கொள்கையை மறுத்துக் கண்டித்து உரைக்கிறார். கோரக்கர் வலிய வாள் ஒன்றினை அல்லமதேவர் கையிற் கொடுத்துத் தம் உடலை வெட்டி ஊறுபடுத்திப் பார்க்குமாறு கூறுகிறார். அல்லமதேவர் கோரக்கர் மீது வாட் படையை வீசுகிறார். பேரொலி ஒன்று உண்டாகிறது. அவ்வொலியைக் கேட்டுப் பலரும் அஞ்சுகின்றனர். பின்னர்க் கோரக்கர் அல்லமதேவர் அருள் உரைப்படி அல்லமதேவரைத் தாக்கிப் பார்க்கிறார். படைக்கலம் அல்லமதேவர் மீது படாமற் போகிறது. கோரக்கர் அல்லமதேவரின் பெருமையை உணருகிறார். தம்முடைய பிழைகளைப் பொறுத்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறார். அல்லமதேவர் நீர் உண்மையை உணர வேண்டும் என்று உரைத்துக், குகேசன் என்னும் மொழிப்பொருளையும் விளக்கியருளுகிறார். பரம் பொருளாகிய அல்லமதேவர் தம்முடைய கையில் இலிங்கந் தாங்கியுள்ளமைக்குக் காரணம் யாதென்று வினவுகிறார். தாம் கையில் இலிங்கங் கொண்டதற்குக் காரணம் கூறிக் கோரக்கருக்கு அருள்புரிகிறார். கோரக்கர் உண்மையை உள்ளவாறுணர்ந்து சிறப்படைகிறார் என்னுஞ் செய்திகள் விரிவாகக் கூறபபெறுகின்றன.]


			நூலாசிரியர் கூறல்

	வசவனை முதலாய் உள்ள மாதவர் தமைய கன்று 
	பசுமதி தவழ்கு வட்டுப் பருப்பத மலையை நண்ணிக் 
	குசைசுடு மறையோர் போற்றும் கோரக்கன் எனும்பேர்ச் சித்தன் 
	இசைவுற உண்மை எந்தை இயம்பிய வாறு சொல்வாம். 					1


	     அல்லமர் கலியாணபுரத்தைவிட்டு நீங்குதல்

	பொறிவழி செயலாது நெஞ்சம் புனிதமாம் வகைபு கன்ற 
	நெறிமுறை வழாதி யற்றி நீவிர்நின் மின்கள் மிக்க 
	அறவரை உலகிற் கண்டிங் கடைதுமென் றாண்டை யோர்கட் 
	கிறையவன் இனிதி யம்பி எழுந்துமின் எனம றைந்தான்.					2


	வசவண்ணர் முதலியோர் அல்லமரைக் காணாது வருந்துதல்

	கன்றின்வாய் முலைநெ கிழ்த்துக் கறவைவிட் டகன்ற தென்னச் 
	சென்றனன் ஐயன் என்று திசைதொறும் நோக்கி மாழ்கி 
	வன்றழல் இழுதுபோல மனமுகக் கண்ணீர் மல்கி 
	நின்றனர் வசவன் ஆதி நிகரில்சற் பத்தர் எல்லாம். 						3


			இதுவும் அது

	காணுதல் ஒழிக நல்லார்க் காணினங் கவர்பால் நட்புப் 
	பேணுதல் ஒழிக பேணிற் பிரிவுறல் ஒழிக உற்றால் 
	மாணுயிர் உடம்பில் வாழும் வாழ்க்கை போய் ஒழிக என்னா 
	ஊணிடும் ஒருதாய் நீத்த பார்ப்பென உளங்கு லைந்தார். 					4


	சித்தராமையர் சொன்னலாபுரத்தை அடைந்திருத்தல்

	தண்டநா யகன்க ரத்தில் தம்பிரான் தன்னைக் கண்டு 
	பண்டுபோல் உவகை பூத்துப் பத்திசெய் தாங்கி ருந்தான் 
	தொண்டனா கியவி ராமன் சொன்னலா புரத்தில் நெஞ்சில் 
	கொண்டவா ரியனோ டேகிக் கொடுவழி தப்பி நின்றான். 					5


	     மற்றையோரும் தத்தம் இடங்கட்குச் செல்லல்

	அல்லமன் அறைந்த மாற்றம் அகங்கொடு பிறரும் தாம்செய் 
	நல்லன புரிந்து தத்தம் இடந்தொறும் நணுகி வாழ்ந்தார் 
	தொல்லைநல் வினையால் தன்னைத் தொழப்பெறும் அடியர் தம்பால் 
	செல்லுவன் என்று சென்றோன் செயலினித் தெரிக்க லுற்றாம். 					6


	   அல்லமதேவர் திருப்பருப்பதத்தை அடைதல்

	எரிபுரை தளிர்த ளிர்ப்ப இளமரக் காவில் தென்றல் 
	மருவுதல் போல அன்பர் மனமொடு கண்க ளிப்பத் 
	திருவுரு ஒன்ற டைந்து சென்றவக கருணை வள்ளல் 
	கருமுகில் தவழ்ப ராரைப் பருப்பதம் கண்டு சென்றான். 					7


	  திருப்பருப்பதத்தின் பெருமை செப்புதற்கு அரியது 
				எனல்

	அல்லமன் கண்டு செல்லும் அப்பருப் பதத்தின் மேன்மை 
	சொல்லுதல் அறியார் ஆகிச் சுரர்முனி வரர்கள் தம்முள் 
	வல்லவர் எனவி ருக்கும் அறிஞரும் மயங்கி நிற்பப் 
	புல்லறி வாண்மை கொண்டு புகலுவன் சிறிதஞ் சாமல்.						8


	திருச்சைலமலை இறைவனைத் தாங்கி நிற்பதெனல்

	நாடொறும் உதித்தொ டுங்கும் ஞாயிறு தனைச்சு மக்கும் 
	கோடுறு வரைகு ணக்கும் குடக்குமாய்த் திகைத்து நிற்பக் 
	கூடுதல் பிரிதல் இன்றிக் குறைமதி தலைச்சேர்ந் தின்பம் 
	தாடரு கதிரைச் சென்னி தரிப்பதக் குன்றம் மாதோ. 						9


	   வெள்ளிமலையின் வெண்மைக்கு ஒரு காரணங் 
			      கற்பித்தல்

	பொன்னிற்குன் றெழுவா யாகப் பொருப்பள விறந்த நிற்பச் 
	சென்னிக்கண் தவழ்வெண் திங்கட் சிலாதரன் குழவி வெற்புத் 
	தன்னைக்கண் டவரை என்னோர் தலைமிசை ஏற்றும் என்னென் 
	றின்னற்கட் படிந்தன் றோவவ் விறைமலை விளர்த்த தம்மா. 					10


	 மேருமலையை இறைவன் வளைத்ததற்குக் காரணங் 
				கூறல்

	பரசிவ லிங்கம் ஒன்று பருப்பதம் போல்த ரிப்பத் 
	துரிசற அடைந்தேன் இல்லை என்னுமச் சோகத் தீயால் 
	உருகுறும் அமையத் தோடி ஒருமலை குழைத்தான் அன்றிக் 
	குருகமர் தளிரி யற்குக் குழைந்தவன் குழைக்கு மோதான். 					11


	  மைந்நாகமலை கடலிற் சென்று வீழ்ந்தது நாணத்தால் 
				எனல்

	பொருப்பிறை மகனான் எற்கும் பொருந்துறா தீசன் நாமம் 
	நெருப்பனை யான்சார்ந் தாங்கு நிகழ்தொடர் மொழியின் அன்றிப் 
	பருப்பதம் எனவே கூறப் படுமிது என்னும் நாணால் 
	திரைப்பொலி கடலிற் சென்று வீழ்ந்தது சிலம்பொன் றம்மா. 					12


	 மற்ற மலைகளும் பருப்பதமலைக்கு நிகராகா தெனல்

	தன்னையோர் கையால் வீழப் பிலத்திடைத் தள்ளி வந்தோன் 
	சென்னியால் வணங்கி ஏத்தும் சிலம்பினை விந்தம் ஒக்கும் 
	என்னலாம் என்ன லாமோ இணையறு பருப்ப தத்தைப் 
	பின்னுவார் திரையில் இட்டுப் பெயர்த்தபுன் மத்தோ ஒக்கும். 					13


		     மலைச் சுனையின் மாண்பு

	நகைமதிப் பிள்ளை போல நரைத்தகூன் கிழவன் சென்றோர் 
	முகைமலர்ச் சுனையின் மூழ்கி முருகுகொப் புளிக்கும் தோட்டுப் 
	பகைமலர்க் குழல்ம டந்தை பகர்ந்தவோர் ஆணை காத்து 
	மகிழ்மனத் தன்ப னேபோல் வந்துமேல் எழுவன் அன்றே. 					14


	     அம்மலை பலவகை மலர்களையுடைமையால் 
			மங்கையரை ஒக்கும் எனல்

	சினைமலர் புதல்மென் போது செழும்புனற் பசுந்தாட் செந்தேன் 
	நனைமலர் தமது தண்பூ நண்ணியீர்ங் கொடிகள் குண்டுச் 
	சுனைமலர் விழிகள் போலத் தோன்றுமப் பராரைக் குன்றில் 
	புனைமலர் பலவும் காட்டும் புரிகுழல் மகளிர் போலும். 					15


	  அருவிநீர் ஞாயிற்றையும் குளிரச் செய்யும் எனல்

	தூங்கிசை அருவி பாயத் தொளைக்கைவெண் கோட்டு ரற்கால் 
	ஈர்ங்கவுள் நெடுநல் யானை யேற்பவெந் தழல லாமல் 
	தேங்குதண் புனல்மேல் நோக்கா தென்பது தீரச் சென்று 
	பூங்கதிர் பனிவெண் திங்கள் போன்மெனத் திவலை செய்யும். 					16


		அம்மலையில் யாழோசைச் சிறப்பு

	விங்சையர் உளர்ந ரம்பின் வீணையாழ் எழுமின் னோசை 
	குஞ்சரம் அனைய வென்றிக் குன்றவர் புறத்தில் என்றும் 
	தஞ்செவி மடுத்துக் கேட்பார் தனிநிலை யோக முற்றார் 
	அஞ்செவி நிறைய உள்ளே அரியயாழ் ஓசை கேட்பார். 					17


	     அம்மலை பொன்முடிபோல் விளங்குதல்

	பீடுறு கருவி னோடு பெயரிய வில்லின் உம்பர் 
	ஓறும் பசும்பொ னாற்செய் தோங்குறு சிகரம் ஒன்று 
	நீடுறு சிலாத ரன்றன் நெடுந்தவப் பிள்ளைக் குன்றில் 
	மோடுறு முடியின் மீது கவிழ்த்தபொன் முடியை ஒக்கும். 					18


	ஒளிமரத்தின் (சோதி விருட்சம்) ஒளியைப் பறவைகள் 
			  மாறாகக் கருதுதல்

	செங்கதி ரவனெ ழுந்த திவாவிடைக் குடம்பை தெற்றிப் 
	பொங்கொளி மரத்திற் சீர்சால் புள்ளினம் பொறையு யிர்த்துக் 
	கங்குலின் அடைகி டப்பக் கருதிவந் ததனைக் கண்டு 
	வெங்கனல் கொளுந்திற் றென்று மீமிசைச் சுழின்றி ரங்கும். 					19


			மூங்கில்களின் சிறப்பு

	நறுமலர்க் குழல்வெண் முத்த நகைமலை மடந்தை மிக்க 
	அறம்வளர்ப் பதற்கு நெற்சிற் றளவிரு நாழி என்று 
	கறைமிடற்  றிறைய ளப்ப ஒருபெருங் கருவி தானிவ் 
	வெறிமலர்க் குடுமிக் குன்றின் வேய்களுள் ஒன்றிற் பெற்றாள். 					20


		     மரங்களின் வியத்தகு மாண்பு

	நெடியவன் குறுகி அப்பால் நின்றுகை தொழுமவ் வெற்பின் 
	மிடியுடை ஒருவன் விற்கும் விறகினைக் குறித்துச் சென்று 
	வடியுடை நவியங் கொண்டோர் மரத்தினைத் துணித்த லோடும் 
	படியுறும் பசும்பொன் ஆகும் பரிசுகொண் டுவந்து செல்வான். 					21


		     நண்டு இராசிவரை மண்டிய மரங்கள்

	கொண்டல்கள் முழவின் ஆர்க்குங் கோதைவெள் ளருவி வெற்பில் 
	வண்டுபாண் முரன்று மூசி மலர்திளைத் தூறு செந்தேன் 
	உண்டுகண் துயில்பூங் கொம்பர் உயர்மரத் திவர்ந்தி ராசி 
	ஞெண்டுகண் டஞ்சி மந்தி ஞெரேலென இழியும் அன்றே. 					22


			பிடியின் பேதைமை ஊடல்

	தளிர்க்குள கிளைத்தேன் தோய்த்துத் தனதுவாய் கொடுக்கும் செய்கை 
	பளிக்கறை அதனுட கண்டு பரிந்துவே றொன்றி னுக்கிங் 
	களித்ததென் றுளம யங்கி அரும்பிடி ஒருகூர்ங் கோட்டுக் 
	களிற்றினை முனிந்து செல்லும் கம்பலை உடைத்தக் குன்றம். 					23


	 குறத்தி, திங்களின் மானைப் பிடித்துத் தரக் குறவனை 
				வேண்டல்

	நண்ணுறு மதியின் மானைப் பிடித்துநீ நல்கு கென்னா 
	ஒண்ணுதல் மடந்தை வேண்ட ஒருகுற மகன்கேட் டன்று 
	பெண்ணுரை கொண்டி ராமன் பிடிப்பதற் கெண்ணு மாபோல் 
	எண்ணிலன் இதற்கென் செய்வேன் என்றுளம் நைந்து நிற்பான். 					24


	   அருவிகள், மலை அழுங் கண்ணீரைப்போல் 
			   தோன்றுதல்

	மேருமந் தரமே ஆதி வெற்பெலாம் எனைவெ றுப்பச் 
	சாருமென் மாட்டே முக்கண் தம்பிரான் எனநி னைந்து 
	சேருமொன் னலரை அஞ்சிச் சிலம்பழு மாறு போல 
	ஆரவெள் ளருவி பாயும் அழகினை உடைத்து மாதோ. 					25


	  அல்லமதேவர் கோரக்கர் இருக்குமிடத்தை அடைதல்

	இனையன வளமி குத்த எம்திருச் சயிலம் தன்னை 
	அனையினும் இனியன் எங்கோன் அல்லமன் சென்று நண்ணித் 
	தனியுடல் சித்தி பெற்றுத் தருக்குமக் கோரக் கன்தான் 
	நளியுள மகிழ்ந்தி ருக்கு நல்லிடந் தனைய டைந்தான். 						26


	 கோரக்கர், அல்லமரை ஓர் இருக்கையில் இருத்திக் 
				கூறல்

	அத்தனேர் வருதல் கண்ணுற் றப்பெருஞ் சித்தன் தன்னோ 
	டொத்தவோர் சித்த னாக உன்னுபு தனைவி யந்து 
	நித்தனாண் மலர்த்தாள் தாழா நின்றுகை குவித்து ஞான 
	சித்தநீ வருக என்றோர் தவிசிடைச் சேர்த்திச் சொல்வான். 					27


			   (வேறு)
கோரக்கர், அல்லமதேவரைப் போற்றுதல்
இரவி வானவன் எழுந்ததும் இன்றெனக் கதாஅன்று தெரிவ ஆயின கண்களும் இன்றுநின் சிறந்த வரவு நானெதிர் இன்றுபெற் றமையினின் வரவு பொருளில் மாதவம் புரிந்திடார்க் கெளியதோ புகலின். 28 அடியார்களைப் போற்றாதவன் இறைவனையும் அடையான் எனல் மதலை ஆகிய நற்குணம் சார்ந்துநல் வாய்மை சிதைவி லாவடி யாரினம் சேர்ந்திடா தவன்கண் நுதலி னானையும் சேந்திடான் என்ப எந்நூலும் முதலி லான்பெறும் ஊதியம் யாதுகொல் மொழியில். 29 கோரக்கர், அல்லமரை நீ யார் என்று கேட்டல் ஒருவி ருந்தினர்க் குரைசெயும் முகமனோ டொப்பக் குருப ரன்தனக் கினையன இன்மொழி கூறி வருபெ ருந்தகை யார்கொல்நீ உரையென வாழ்த்தி அருளின் அங்கடல் தனைவினாய் நின்றனன் அன்றே. 30 அல்லமர், மெய்யறிவாளியே என்னை யுணர்வான் எனல் செறிந்த மூலவாங் காரத்தின் வேறெனத் தீர்ந்திட் டிறந்தி டாதுதற் கண்டவன் என்னையும் காண்பான் மறிந்து போமுடல் மானியை உரைப்பதென் மதித்தென் றறிந்த ஞானிகள் வேறற அறிபவன் அறைந்தான். 31 குளிகைகயால் உடலை உறுதிப்படுத்தினோன் என்றும் அழியான் எனல் ஆதி நாதன தருளினாற் குளிகையா திகளான் மேதை ஆமுடல் சித்திபெற் றவனென் றும்விளியான் ஆத லாலது பெறாதவன் அழியுமென் றறைந்தான் பூத மேனியே தானெனப் பொருந்துபுந் தியினான். 32 அல்லமர் கோரக்கரைப் பார்த்து மொழிதல் உடம்பு வாழ்தல்தான் வாழ்தலும் ஊன்பொதிந் தியற்றும் உடம்பு சாதல்தான் சாதலும் ஆகவே உரைத்தாய் உடம்பு தானுயிர் என்னநீ உன்னினை போலும் உடம்பு வேறறி யாவுல காயதன் ஒத்து. 33 உடம்பு நீ அல்லை என்று அருளுரை வழங்குதல் யாக்கை தானெனில் எனதுடம் பென்பதிங் கென்னை போக்கும் ஆடைபொன் முதலிய பொருளுளொன் றெனதென் றாக்கு வார்தமில் அதனையான் என்பவர் ஐய பார்க்கில் யாருளர் பகர்தியென் றல்லமன் பகர. 34 தான் எனப்படுவது எது? எனக் கோரக்கர் கேட்டல் யானி னைந்தனன் ஓடினன் என்றியம் புதலால் தானெ னப்படு கின்றதே தெனக்கது தன்னை நீதி கழ்த்துக என்றுகோ ரக்கனின் றியம்ப ஞான நற்குரு பரனிது நவின்றனன் நயந்து. 35 நீ கூறியது கற்பனை எனல் நானி னைந்தனன் எனல்கர ணத்தினை நண்ணும் ஆன தன்மையால் உடல்பொறி கரணங்கள் அனைத்தும் நானெ னும்படி வரும்வரத் தான்ப்ல அதனால் நீந வின்றதத் தியாசமென் றறிகென நிகழ்த்த. 36 உடலிலுள்ள உயிரன்றி வேறுண்டோ எனல் ஒழியும் என்னுயிர் எனுமிடத் தவ்வுயிர் ஒழிய மொழிய வேறுமோர் உயிருள தோஇதை மொழிநீ பழியில் நல்லருட் குன்றமே என்றவன் பகரச் செழிய மென்மலர்ப் பதத்தெமை ஆள்பவன் செப்பும். 37 உயிர் என்னும் பெயர் ஆன்ம வடிவிற்கு ஆகுபெயர் எனல் உயிரெ னும்பெயர் இயங்குகாற் கியற்பெயர் உரைப்பின் அயலு றுந்தனக் கப்பெயர் ஆகுபேர் ஆமென் றியலு ணர்ந்தவர் இயம்புவர் என்றெமக் கிறைவன் மயல றும்படி உணர்ந்திஃ துரைத்தனன் மன்னோ. 38 நீ உடலை நம்பிக் கெட்டாய் எனல் தன்னைச் சச்சிதா னந்தமென் றருமறை சாற்ற மின்னிற் கெட்டிடும் தசைநிணம் என்புதோல் மேய்ந்த இன்னற் பொய்க்குடில் ஆகிய உடம்பினை யானென் றுன்னிக் கெட்டனை என்கொனீ என்றினும் இயம்பும். 39 வீடுபேற்றை விரும்புவோன் உடலை வெறுக்கவேண்டும் எனல் வெருவு றப்படும் பிறவியை ஒழித்துமெய் வீடு மருவு தற்குளம் வைத்தவன் இம்மல வடிவைத் தெருவி னிற்புனி தம்படா ஒன்றனைத் தீண்டி அருவ ருப்பவன் போலரு வருத்ததை அகற்றும். 40 உடம்பொடு உறவு கூடாதெனல் மருந்து கொண்டுநோய் தீர்ப்பவர் போற்சிவ மருவி இருந்த இவ்வுடம் பினைப்பெரி யவர்விட எண்ண மருந்து கொண்டுநோ யோடுற மதிப்பவன் போல இருந்த இவ்வுடம் போடுற எண்ணினை என்னோ. 41 தோன்றிய உடல் அழிந்துபோம் எனல் பிறந்த ஆகமொன் றிறந்திடாப் பெருமையும் உடைத்தோ எறிந்த வான்சிலை வீழ்ந்திடா திருப்பதிங் கில செறிந்த காரியம் என்பதென் றாயினுஞ் சிதையும் இறந்தி டாதுகா ரணமெனப் படுமதே யென்றும். 42 உடல் அழிவது; ஆதலால் நீ வீடுவேறு விரும்புக எனல் மருந்தி னாலுடல் நித்தமாம்என்று நீ வகுத்த திருந்து வாழுநாட் பன்மைகொண் டன்றிவே றில்லை பொருந்தி நீயுடல் அழிந்திடா தென்பது பொருந்தா தருந்த வாவினி வீடுவேண் டென்றனன் ஐயன். 43 கோரக்கர் என் உடல் அழியாது எனல் ஏது சொல்லினும் என்னுடல் அழிவுறா தென்றும் வாது செய்வதென் காட்சியால் உணர்த்துவன் வலியின் றாதி நாதன தருளினால் என்றுகோ ரக்கன் தீதி லாவருள் வாரியோ டுரைத்திது செய்யும். 44 கோரக்கர், அல்லமரிடம் வாள் கொடுத்துத் தன் உடல் வன்மையை ஆராயக் கூறல் இன்னி யங்களின் முழங்குவெள் ளருவிவெற் பெறிந்த மன்ன வன்படை அன்னதோர் ஒளிரயில் வாய்வாள் தன்னை எம்பிரான் கைக்கொடுத் தனையனென் தன்னை நின்னி ரும்புய வலியினால் எறிகென நிகழ்த்தி. 45 ஈச்சிறகளவு தோல் அறுபடினும் நான் சித்தன் அல்லன் எனல் அத்த ஈச்சிற கன்னதோர் தோலறு மேனும் சித்தன் நானலேன் என்றுமுன் நின்றனன் செருக்கி நித்தன் யானிவன் கருதிய தேசெய்து நெஞ்சின் வைத்த மாதருக் கொழிப்பலென் றருளுளம் வலித்தான். 46 அல்லமர், கோரக்கர்மேல் வாளினை வீசல் வாங்கு வாளினை மின்னென விதிர்த்தருள் மாரி ஓங்கி வானுரு மேறென அதிர்த்தவன் உடம்பில் தாங்க மால்வரை மீதெறிந் தானெனத் தாக்க ஆங்கொர் ஓதைதிண் என்றுமேல் எழுந்ததை அன்றே. 47 அவ்வொலி கேட்டபோது உமையம்மையும் அஞ்சுதல் திருப்ப ருப்பதம் நடுங்கிய தவ்விறற் சீற்றத் தரக்கன் உற்றிது தனையுமின் றெடுத்தனன் ஆமென் றுரைப்ப தற்ரி தாகிய அச்சமுற் றோடிப் பொருப்பி றைக்கொரு மகளரன் புயங்கள்புல் லினளால். 48 உலகில் யாவரும் அவ்வொலியால் அஞ்சுதல் விஞ்சை மாதர்தம் யாழொலி கேட்டமா வேடர் அஞ்சில் ஓதியர் பதலைகேட் டயரசு ணம்போல் நெஞ்சு மாழ்கினர் புள்ளினம் எழுந்தகால் நிமிர்த்துத் துஞ்சு மாவெழுந் தோடின வான்துளி துளித்த. 49 கோரக்கர் செருக்கை அல்லமர் அறிதல் இன்ன வாறொலி எழவுடன் ஊறின்றி இருப்ப முன்ன மேவிய செருக்கினும் மும்மடங் கெய்தி என்னை நேர்பவர் இலையென அவனுளத் தெண்ணித் தன்னை யேநனி வியந்தமை அறிந்தனன் தலைவன். 50 அல்லமர் கோரக்கரிடம் வாளொன்று கொடுத்துச் சொல்லல் ஒலியெ ழுந்திட இன்னணம் நினதுபே ருடம்பு வலிய டைந்தநின் ஒப்பவர் இலைவளி வழங்கும் உலகில் என்றுகை குலைத்திள நகைபுரிந் தொருகைம் மலர்பொ ருந்துவாள் அவன்கையிற் கொடுத்திது வகுத்தான். 51 அல்லமரைக் கோரக்கர் வாளால் வெட்டுதல் வாங்கும் வாளினால் நின்வலி யொடுநுமர் வலியும் தாங்கி என்னைநீ எறிந்துகாண் என்றுநம் தலைவன் ஆங்கு நின்றனன் சித்தனும் அஞ்சிலன் ஆகி ஓங்கி வாளினால் எறிந்தனன் ஒப்பிலான் உருவை. 52 அல்லமதேவர்மீது வாள் படாது போதல் அணும யங்குமின் நுழைகதிர் எறிந்தவா ளாக இணைம யங்குமெய்ப் படாதுவாள் வறிதுபோ யிற்று பணைம யங்குதோள் மாயைதன் படாமுலை படாத மணம யங்குதண் சோதிமேல் வாள்பட வற்றோ. 53 (வேறு)
கோரக்கர் அல்லமதேவரைப் பணிந்து கூறுதல்
வானெறிந்து கையிளைத்த கோரக்க நாதன்மிக மனம்வி யந்து நானிறைஞ்சும் பரஞ்சுடரே இவனென்று மெய்விதிர்ப்ப நடுந டுங்கித் தானடைந்த செருக்கொழிந்து தலையன்பின் நெறிநடப்பத் தலைப்பட் டெங்கோன் தேனடைந்த செழுங்கமலத் திருவடியில் வீழ்ந்தெழுந்து செப்பு கின்றான். 54 தன் பிழையைப் பொறுத்தருளுமாறு மீண்டுந் தாழ்தல் நின்னையறி யாதுமது உண்டவன்போல் மனஞ்செருக்கி நினைந்த பாவம் பின்னரெதிர் நின்றுநின துரைமறுத்துப் பித்தனெனப் பிதற்றுந் தீமை இன்னுயிர்கொன் றுடல்கவரும் மறவன்போற் செய்தபிழை எல்லாம் எந்தாய் மன்னியநின் பேரருளால் தீர்த்தெனையாட் கோடியென மறித்தும் தாழ்ந்தான். 55 நீ உண்மை உணர வேண்டும் என்று அல்லமர் கூறுதல் செய்தபிழை போகவினிப் பிழைசெய்யா துடம்புநசை தீர்ந்து நின்றன் மெய்தெரியின் எனக்குநீ இனியனெனப் பெருங்கருணை வெள்ளங் கூற உய்தலிலென் பிழைபொறுத்திட் டடித்தரிய வானமுதம் ஊட்டு கின்றாய் கைதருசெம் மணியனையாய் யான்செய்வ தேதுளது கைம்மா றென்று. 56 கோரக்கர் அருள்புரிய வேண்டுதல் முற்றுமருள் செய்துநீ யானறிய வேண்டுபொருள் மொழிதி யென்று பற்றுடலம் நசைதீர்ந்து கோரக்கன் நிற்பஅவன் பருவங் கண்டு கற்றறியும் அறிவினால் அறிவரிய பரஞ்சோதி கருணை கொள்ளப் பெற்றதிரு வுளமகிழ்வுற் றன்பொடுகேண் மதியென்னாப் பேச லுற்றான். 57 கோரக்கர், குகேசன் என்னும் மொழிப் பொருளை வினவல் இருந்தபடி குகேசனை நீ அறிவையெனின் நின்பிறவி எனுநோய் தீர்ந்து பொருந்துறுவை பேரின்பம் என்றமலன் கூறஅவற் போற்றி எந்தாய் பரிந்தருள்செய் குகேசனெனும் மொழிப்பொருளே ததுகூறப் படுவான் யாவன் தெரிந்துணர அருள் செய்வாய் என்றுதொழ எம்பெருமான் செப்புகின்றான். 58 அல்லமர், குகேசன் என்னும் மொழிப்பொருளை விளக்குதல் குகையிதயம் அதன் கணமர் இறையீசன் என்றுபொருள் குறித்துக் கொண்மோ நிகழனைய குகேசமொழி உடையன் யான் தானெனவே நிமலன் கூற அகமகிழ முகமலர்ந்து சித்தனறை குவனீயே ஆகிலுன்றன் முகையவிழ்மென் மலர்க்கரத்திற் சிவலிங்கங் கொண்ட தென்கொல் மொழிதி என்றான். 59 கையில் சிவக்குறி கொண்டமைக்குக் காரணம் கூறுதல் பிறந்தபயன் பெறவுலகர் எனைக்கண்டு கொண்டுமனம் பிறழ்தல் இன்றிச் சிறந்தசிவ லிங்கமலர்க் கரங்ஙஙஙண்டு பூசனையாம் செய்ய வேண்டி நிறைந்தவென துருவாகும் இக்குறிகைக் கொண்டனன்யான் நீங்கா தென்றும் அறிந்துதெளி குதிமனமென் றருள்செய்தெங் குருதேவன் அறைய லுற்றான். 60 பிறர்க்கு நன்னெறி கூறுவோன் அவ்வழியில் நடக்கவேண்டும் போதகனா கியகுரவன் எஞ்ஞான்றும் நற்கருமம் புரிக என்று வேதமுத லாகியநூல் முழுதுமொருங் கொருவந்தம் விதித்த லாலே சாரகனா கியபருவ மாணாக்கன் பாசவலி தணிக்க வல்லான் மேதினிமேல் உடலொடுநற் செயல்விடுவ தன்றியிடை விடலா காதால். 61 அல்லமர் அருளுரை வழங்கல் என்றுதன தியலுணர்த்தி உடம்புநான் என்றிருந்த இயல்பு போல நின்றவெனை உணர்ந்துநீ சோகம்பா வனைகொண்டு நிற்பை யாயில் பொன்றலுறு விடங்கலுழன் தனைநினைப்பப் போதல்போற் போம விச்சை நன்றறிதி என அறிவித் தனனெங்கோன் கோரக்க நாதன் தன்னை. 62 கோரக்கர் உண்மையை உணர்ந்து சிறப்படைதல் ஞானகுரு பரனருளால் தனக்குரைத்த மொழிப்பொருளை நன்ற றிந்திட் டூனைவடி வென்பதுவிட் டுண்மையலா அனைத்தையுநீத் துண்மை கண்டு தானதனை அடைந்துதான் அதுவென்னும் மருளகன்று தானே ஆகி வானவரும் அறிவரிய பெரும்புகழ்கோ ரக்கனவண் மன்னி னானால். 63
பத்தொன்பதாவது - கோரக்கர் கதி முடிந்தது
கதி 19 - க்குச் செய்யுள் - 946

20. முனிவரர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் வடநாடு நோக்கிச் செல்லுகிறார். நல்லவர் பொல்லாதவர் அனைவருக்கும் அருள்புரிந்துகொண்டு செல்லுகிறார். ஒரு காட்டிற் செல்லும்போது வேடன் ஒருவன் எதிர்ப்படுகிறான். அவனுக்கு அருள்புரிந்து மேலே செல்லுகிறார். வழியில் ஒரு தவக்காடு காணப்பெறுகிறது. அக்காட்டில் முனிவரர் பலர், யோகம், வேள்வி, இறைவழிபாடு, மறையோதுதல் முதலியவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்லமதேவர் அம்முனிவரர்கட்கு அருள்புரிய எண்ணுகிறார். மெய்யறிவு பெற்றாலன்றி வீடுபேறு கைகூடாதென்றுரைத்து அருளுரை வழங்கி யருளுகின்றார். முனிவர்கள் அல்லமதேவர் அருளிய நெறியைப் பின்பற்றிச் சிறப்படைகிறார்கள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]


			நூலாசிரியர் கூறல்

		பனிவரை மகளொடு பவள வார்சடைத் 
		தனிவரை அமர்திருச் சயில நீங்கியே 
		துனிவரை அல்லமன் சுருதி மெய்ப்பொருள் 
		முனிவரை உணர்த்திய முறை¬ கூறுவாம். 						1


		   அல்லமர் வடநாட்டு முனிவர்களுக்கு 
			 அருள்புரியச் செல்லுதல்

		அருந்தவம் முயன்றகோ ரக்கற் கம்முறை 
		விரிந்தறி வுருவமாம் மெய்ம்மைத் தன்மையைப் 
		பரிந்தருள் அமலனப் பாலும் உத்தரம் 
		பொருந்துநர் தமக்கருள் புரியப் போயினான். 						2


		     அல்லமர், நல்லார் பொல்லார் 
		       யாவர்க்கும் அருள்புரிதல்

		நல்லன தீயன நாடு றாதுகொள் 
		வல்லழல் எனவருள் மயையெ னப்படும் 
		அல்லமன் எதிர்ந்தவர் அறமு ளாரறம் 
		இல்லவர் எனாதறி வியற்றி னானரோ. 						3


		அல்லமதேவர் ஒரு காட்டிற் செல்லுதல்

		யாவரும் தனதருட் கேற்று ளாரெனப் 
		பாவவன் தளையறப் பரிந்து நன்னெறி 
		மேவவந் தருள்புரி விமலன் ஆயிடை 
		மாவழங் குறுமொரு வனத்திற் போயினான். 						4


		 அக்காட்டில் ஒரு வேடன் எதிர்ப்படுதல்

		அக்கொடு வனத்தெதிர் அன்பென் கின்றதுள் 
		புக்கறி கிலாவொரு புளினன் கூன்புறக் 
		கொக்கென நாடொறும் கொலைகுறித்தவன் 
		கைக்கொடு மரமொடு கடிது தோன்றினான். 						5


		அல்லமதேவர் அவ்வேடனுக்கு அருள்செய்ய 
			    எண்ணுதல்

		அன்பனாய்க் கண்ணிடந் தப்பும் வேடனுக் 
		கின்பமீ குதல்புகழ்க் கேற்ற தன்றுநான் 
		வன்பனாய்த் திரியுமிம் மறவற் காப்பலென் 
		றென்பொலா நெறிமனம் இரங்கிற் றென்றனன். 					6


		  அவ்வேடன்மீது அல்லமதேவர் அருட்கண் 
				வைத்தல்

		நல்லறி வவனுள நடுதற் கொப்பிலா 
		அல்லமன் வினையற அருட்கண் வைத்தனன் 
		கொல்லையின் விதையிடக் கொழுப்புக் காமுளி 
		புல்லெரி வுறவழற் போகட் டென்னவே. 						7


		    வேடன், அல்லமரை அருள்புரிய 
			      வேண்டுதல்

		மேவுதீ வினையெலாம் விளிந்து தூயனாய்ப் 
		பாவியேன் உய்வகை பகர்தி என்றனன் 
		மாவலால் வழங்குறா வனத்தில் வேட்டுவன் 
		யாவர்தாம் இறையருள் எய்தின் உய்ந்திடார். 						8


		  ஐம்புலன்களையும் அடக்கவேண்டும் 
				எனல்

		அறிவெனும் வேலினால் ஐம்பு லன்களாம் 
		மறியினம் அருளெனும் வலையைத் தப்புறா 
		தெறிகுவை எனினுனக் கில்லை துன்பெனா 
		நெறியினை வழுவற நிமலன் கூறினான். 						9


		 என்னையடையின் திருமாலும் நின்னைப் 
			    பணிவன் எனல்

		அறிவொடு மனஞ்சிலை அம்ப தாகநான் 
		குறியென எய்வையேற் குமர நின்றனைப் 
		பொறிமதில் இலங்கைமுன் புரந்து ளான்தலை 
		பறிபட எய்தவன் பணியும் என்றுமே. 						10


		   தவக்காடு ஒன்று காணப்பெறுதல்

		இப்பரி செறுழ்வலி எயினன் உய்வகை 
		செப்பிநல் நிலையருள் செய்தி ருத்தியே 
		அப்புறம் அருளுடை அமலன் போம்பொழு 
		தொப்பறு தவவனம் ஒன்று தோன்றிற்றே. 						11

		கோடமை கரிகளும் கொடும டங்கலும் 
		பாடமை பகைதவிர் பரிசி னானதற் 
		காடர வொடுமதி அமர்பி ரான்சடைக் 
		காடல துவமையால் கண்ட தில்லையே. 						12


		அக்காட்டில் விலங்குகள் முனிவர்கட்குப் 
			   பணிவிடை புரிதல்

		பெயர்க்குறு கால்கள்கை யாகப் பெற்றவும் 
		உயிர்க்குறு நாசிகை யாக உள்ளவும் 
		மயக்கறு தீயினை வளர்த்து வான்புனல் 
		பயக்குறு முனிவரர் பணிகள் செய்யுமால். 						13


		    அக்காட்டகத் துறையும் முனிவரர் 
				தொழில்

		மறைபல ஓதுநர் மகம்வ ளர்க்குநர் 
		கறைமிட றுடையநங் கடவுட் பூசனை 
		முறைவழி புரிகுநர் மூச்ச வித்தொரு 
		தறியென வசைவற விருக்குந் தன்மையார். 						14


				(வேறு)
அல்லமதேவர் அம்முனிவர்கட்கு அருள்புரிய எண்ணுதல்
ஆயி ருக்கும் அருந்தவர் தங்கள்பால் போயி வர்க்குறு போதனை யாற்பவ நோய கற்றுவல் என்று நுவன்றனன் தாயெ னக்கொரு தானெனும் அல்லமன். 15 மெய்யறிவாலன்றி மேன்மை உண்டாகாது எனல் நோற்று நோன்புடன் நொந்து வருந்துவீர் ஆற்று நீர்மகம் ஆதி வினையினால் மாற்று மாயை மலஞ்செறு விற்படு சேற்றி னாற்கழுஞ் சேறு நிகர்க்குமால். 16 வேள்வியால் வீடுபேறு கிடைக்காதெனல் ஞானம் கொண்டு நணுகும் சிவபதம் ஊனம் கொண்ட கருமத் துறுவது வானம் கொண்டு வளர்த்தல் புகையநு மானம் கொண்டு வளர்த்தலை ஒக்குமால். 17 ஐம்புலன்களையும் அழித்தலாலே வீடுபேறு உண்டாமெனல் குடுமி யங்கிரி ஒப்பக் குவித்தபுல் சுடுதல் கொண்டு பிறவி சுடப்படா தடுபு லன்கள் அறிவெனும் அங்கியில் சுடுதல் கொண்டு பிறவி சுடப்படும். 18 மெய்யறிவாம் வேள்வி புரிபவனே வீடுபேறடைவான் எனல் போதம் ஆகும் புனிதத் தழலினுள் பேத பாவனைப் பேரவி பெய்வனேல் ஆதி சோவுடை மாசி அவனென வேதம் யாவும் விளங்க விளம்புமே. 19 பேரறிஞர்கள் மெய்யறிவு பெறுவர் எனல் மறையின் உள்ள கரும மனவினை வறியர் கொள்ளுதல் போல மதியறும் சிறியர் கொள்வர் தெளிதத் துவமசி அறிஞர் கொள்வர் அணிகொளும் செல்வர்போல். 20 முனிவர்கள் அல்லமதேவரை வணங்கி வாழ்த்துதல் என்று கூற இருந்தவர் அன்பொடு நின்று ஞான நெடுந்தகை தாள்மிசை இன்று நீவர எத்