|
Home > Scriptures & Stotras > Tamil
Home > Virashaivam
பிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம் - - - - - -
முதல் பாகத்தின் "மாயை கோலாகல கதி" தொடர்கிறது...
அதைக்கண்டு மாதர்கள் வியப்படைதல்
இத்தனை ஆட்டம் எல்லாம் இவட்கித னாலென் றெண்ணி
மத்தளம் அதனை வீசிப் போகல்போல் வள்ளல் போகப்
பித்தடைந் தனன்கொல் என்று பித்துறீஇ மாத ரெல்லாம்
கைத்தளிர் விரன்மு டக்கிக் கடவுளடி வைத்து நின்றார். 40
தோழிகள் வருந்தல்
பறையடித் தின்று காறும் மறைத்தவிப் பாவை செய்கை
பறையுடைத் தொழிந்து காளை பாரெலாம் அறியச் செய்தான்
கறையடிக் களிநல் யானைக் கருங்கழற் சீற்றத் துப்பின்
இறைமகட் குயிர்நி லாதென் றிகுளையர் மனமு ளைந்தார். 41
மாயை வருந்துதல்
சிலைமதன் நின்று செய்யுஞ் செருவினுக் கன்றி வெள்ளி
மலைதனில் இயம்பு மாற்றம் வழுவிற்றென் றுளம ழிந்தாள்
கலவிசெய் தலைவன் நீங்கக் கைப்பொருட் கழுதி ரங்கும்
முலைவிலை மகளிர் போல முத்தவாள் நகைப்பொற் கொம்பு. 42
விமலை, அல்லம தேவரைத் தேடுவோம் என்றல்
மாலைவாய் மரையே போலும் மாயைவாள் முகத்தைக் கண்டு
வேலுலாங் கருங்கண் செவ்வாய் விமலைமா தவளு ளத்தில்
சாலுமார் அஞர றிந்து தடங்கணாய் தளரேல் நீநின்
சீலநா யகன்போந் தேத்தும் தேடிநாம் காண்போம் என்றாள். 43
மாயை, அல்லமரைத் தேடிச்செல்லல்
சிலைநுதல் விமலை சொல்லால் தெளிந்துளம் இறையை நோக்கிக்
கலைதொடர் உழைபோல் மாயை காட்டினில் தொடர்ந்து போனாள்
மலர்தொடர் அளிகள் போல மாயையைத் தொடர்ந்து சென்றார்
கொலைபடும் அயில மர்த்துக் குழைபொரு தடங்கண் நல்லார். 44
மாயையின் செயலைக்கண்டு மக்கள் இகழ்தல்
மெய்த்தவம் பயின்று பெற்று வேந்தர்க்குங் கொடாமல் முக்கண்
அத்தனுக் கென்று வாளா அரசன்வைத் திருந்த பாவை
மத்தளி கன்பின் போனாள் மகள்தனை அந்தோ ஆண்டு
பத்தின்மேல் வைத்தி ருத்தல் பாவமென் றிகழ்ந்தார் கண்டோர். 45
காமத்தின் சிறுமை
பாவமும் பழியும் நல்கும் பல்வகைப் புகழ றங்கள்
யாவையும் அழிக்கும் எய்தும் இன்பமும் அதனா லெய்தும்
நோவுநன் மரபுஞ் செய்யு நோன்புநல் லொழுக்கு மேன்மை
சாவுமெண் ணுறாமல் நிற்கும் தயங்குபுன் காமம் என்பார். 46
(வேறு)
மாயை, அல்லமரையே குறிக்கொண்டு செல்லல்
பஞ்சின் மேல்மிதிப் பினும்பதை பதைக்குமென் பதங்கள்
அஞ்சு றாள்பரல் மிதிப்பதை நீருண அவாவாள்
விஞ்சு ஞாயிறு முதிர்கதிர் வெதுப்பினை வெருவாள்
நெஞ்சி யோகிமேல் இருத்தியந் நிரைவளை சென்றாள். 47
மாயையைப் பாலைநிலஞ் சுடாமைக்குக் காரணம்
காம வெந்தழ லாலுடல் வெந்துளங் கரிந்த
கோம டந்தைய லாலலை மேல்வரு குளிர்தண்
பூம டந்தையப் பாலையிற் போமெனிற் புனலில்
தாமி ளங்கயல் சுடுமணல் வீழ்ந்தெனத் தளரும். 48
பாலைநிலத்தின் வெம்மை மிகுதி
பான லங்கருங் கண்ணிபோ கியகொடும் பாலை
யானை தன்புழைக் கைநிகர் துளியிடை விடாமல்
வான நின்றுபெய் யினுந்தழற் பட்டவல் இரும்பின்
மேன கந்தெறி திவலைபோற் சுவறுறும் விரைந்து. 49
திருமால் உலகை விழுங்கியபோது பாலையைக்
கக்கினான் எனல்
மால ருந்திய போதுதன் வயிற்றிடை யிராதிப்
பாலை அன்றுடன் உமிழ்த்தில னாகின்மெய் பதைத்து
வேலை யின்றலை வீழ்ந்தத னாலுமுண் வெண்ணெ
யாலும் வெந்தழல் தணிந்துயிர் உய்குவ னலனே. 50
மாயையைத் தொடர்ந்து சென்ற மாதர்களின் வருத்தம்
நாயின் நாவினீர் சிறுமுயற் குருளைகள் நக்கும்
தீய பாலையில் தனைமறந் தவசத்திற் சென்ற
மாயை மாதுபின் தொடர்ந்துசெல் மலர்முக மாதர்
வாயின் நீரறீஇக் கண்கணீர் சுரந்தன வந்து. 51
கானலை நீரென்று போய்க் களைத்து வருந்துதல்
கானல் நீரெனச் சிறிதிடங் கடிதுசென் றிளைப்பார்
மான னார்சிலர் வாய்க்கடை நாவினால் வருடித்
தானை ஓர்கர முகத்தெதிர் அசைத்துமெய் தளர்வார்
வேனில் ஆகொடி தென்றுதம் விதியினை வெறுப்பார். 52
மாயைக்கு முன்னால் மான்கள் ஓடுதல்
மாதர் இவ்வணந் தொடர்ந்துபின் வரவெழில் மாயை
பாத தாமரை வருந்தின பாலையுள் நடந்தவ்
ஆதி நாயகன் தனைமறித் துதவிசெய் தறல்மேல்
ஓதி யோடுற வாவமென் றுழைகள்முன் னோடும். 53
மாயை வருதல்
கூந்தல் மேல்விரி முகில்தரக் கோபம்வாய் காட்ட
ஏந்து கொங்கையின் வடம்மலை அருவியை யேய்ப்பக்
காந்தள் அங்கைகள் தரவருங் காரெனக் கலாபம்
வாய்ந்த மஞ்ஞைகள் மகிழவந் தனள்பெரு வனத்தில். 54
மாயைக்கு அஞ்சிய மாதவர் ஓட்டம்
சிங்க முங்கரி யும்பணி செயத்தவஞ் செய்யூ
அங்கு றுந்தவர் மாயைதன் முலையிடை ஆமா
தங்க முஞ்சிறு சிங்கமுங் கண்டுளந் தளர்ந்து
பொங்கு றுந்துய ரோடெழுந் திரிந்துபோ யினரால். 55
அல்லம தேவர் அருள்செய்ய எண்ணுதல்
கொடிய வாள்வரி வேங்கையைக் கண்டமான் குழாம்போல்
நெடிய வார்சடை முனிவரர் கலங்குறு நிலையும்
தொடியு லாவுமென் தோள்மட வார்வரு துயரும்
முடியு மாறருள் செயநினைந் தனனருள் மூர்த்தி. 56
அல்லமர், முனிவர்கட்கருளி மாயை முன் வரல்
மாயை போகவோர் கணத்தினில் துரப்பனீர் மனத்தில்
நோயு றீரென ஒருமுனி போல்நின்று நுவன்று
தூய மாதவர்க் கருள்செய்து தொல்லைநல் உருவாய்த்
தேயும் நுண்மருங் கணங்கெதிர் தோன்றினன் சிரித்து. 57
அல்லமரைக் கண்ட மாதர்கள் வருத்தம் நீங்கி மகிழ்தல்
பொங்கும் ஆரழல் வெஞ்சுரம் புக்கபூ வையர்க்குக்
கங்கை யாறெதிர்ந் தாலெனக் கண்ணெதிர் தோன்றும்
எங்கள் நாயகன் திருவடித் தாமரை இணையைத்
தங்கள் ஆகுலம் தீர்ந்துமெய் குளிர்தரச் சார்ந்தார். 58
‘மாயையை ஏன், துறந்தாய்’ என அல்லமரைத்
தோழியர் கேட்டல்
பெருக ளற்றினில் அழுந்தியங் கெழுபவன் பிடித்த
கரநெ கிழ்த்துவிட் டகல்பவன் போலிளங் காளாய்
விரைம லர்க்கணை பட்டுள நையுமெல் லியலை
அருள றத்துறந் தனையென்கொல் என்றனர் அவர்தாம். 59
அல்லமர், ‘நீவிரே எம்மைத் துறந்தீர்’ எனல்
பற்றி ஆயிடை விடுத்தது நீயிரே பற்றி
இற்றை நாளுமை விடுத்திலேன் இதனையிவ் வுலகம்
முற்று மோதுறுந் தம்பிழை மொழிகுநர் உளரோ
குற்ற நாடியே திலரிடை கூறுநர் அல்லால். 60
இன்றுதான் நீ சினமடைந்தாய் எனல்
என்ன ஓதலும் அல்லமன் ஏந்திழை மடவார்
மன்னன் மாமகள் மனத்தெழு காமநோய் வளரும்
முன்னம் நீமுனி யாதிருந் தின்றுதான் முனிந்தாய்
என்னை ஏறவிட் டேணியை வாங்கினை என்றார். 61
மாயை, அல்லமரைக் கபடிக் கூத்தாடி எனல்
தொல்லை நின்திரு மேனிபோல் உள்ளமும் தூய்தாய்
நல்லை என்றுனை நம்பினேன் வஞ்சக நடிப்பு
வல்லை என்பதை அறிந்திலேன் நானென வன்சொல்
சொல்லி நின்றனள் மாயையெம் பிரானிது சொல்லும். 62
அக் கூத்தினைத் தேவர், முனிவர்களைக்
கேட்டறிக எனல்
வஞ்ச நாடகம் நடிப்பது மாயைதன் செயலோ
தஞ்ச அல்லமன் தன்செய லோவெனத் தடங்கண்
பஞ்சின் மெல்லடி யாய்கட வுளரையும் படிறில்
நெஞ்ச மாதவர் தமையுங்கேட் டறிதிநீ என்றான். 63
மாயை பதிலுரைத்தல்
கள்ளன் மங்கையைக் களவுசெய் பொருளினைக் கண்டு
கொள்ளு நன்குறி புகல்விப்ப தொக்குமென் கூத்தைத்
தள்ள ருஞ்சுரர் முனிவராற் சொல்விக்குந் தகைமை
வள்ள லென்றுபுன் னகைகொளீஇ உரைக்குமம் மாயை. 64
மாயை, தன் பெருமையை உரைத்தல்
நெஞ்சம் யாதினால் எனையகன் றிடவரி நினைக்கும்
கஞ்சன் மாயையை இலனெனக் கழறவா யுண்டோ
விஞ்சும் வானிறை என்னையெம் மெய்யினால் விடுவான்
தஞ்ச மாயையென் றிகழ்தரத் தக்கசொற் கற்றோய். 65
மாயை, என்னை யாரும் வெல்வது அரிதெனல்
என்னை அஞ்சிமா வழங்குகாட் டிருக்குமா தவரென்
தன்னை வென்றிட வல்லரோ வல்லரென் தன்னைப்
பின்னை வென்றிட வல்லரியார் பேசுதி யென்று
மின்னை வென்றநுண் இடைசொல அல்லமன் விளம்பும். 66
அல்லம தேவர் பதிலுரைத்தல்
என்றன் ஆணையைக் கடப்பவர் இலையிலை யென்று
வென்றி கூறினை யேலவர் நிற்கவேல் விழயாய்
நின்ற ஆருயிர் முயற்சியால் நிகழ்த்திய மாற்றம்
அன்றி வாழ்மறை ஆகமத் தறிதியென் றறைந்தான். 67
மாயை மீண்டும் செருக்கொடு புகலுதல்
நாலு வாக்குநீ பார்ப்பினும் நானவற் றினுக்கு
மூல காரணம் ஆகுவன் மொழிந்தஇம் மாற்றம்
நூலெ லாமுரைத் திடுமெனச் செருக்கொடு நுவன்றாள்
மாலெ லாம்பிறப் பதற்கிட மாகிய மாயை. 68
அதற்கு அல்லம தேவர் கூறுதல்
ஆட்டு கிற்பனிவ் வகிலமும் என்றனை நின்னை
ஆட்டு கிற்பவர் ஆரென அறிந்திலை பேதாய்
கேட்டு நின்னையோர் பொருளென மூடரே கிளப்பார்
நாட்டும் என்னைநன் கறிந்துயர் ஞானிகள் நவில்வார். 69
மாயை அல்லமரை வேண்டுதல்
ஆரை யாரிருந் தாட்டுவ ரோவதை அறியேம்
மார வேள்யும் நோய்மறித் ததன்பினென் வாதம்
பாரெ னாவியம் பினள்பசிக் கனமிடிற் பசிநோய்
தீரும் மாமருந் துதவுவன் என்பவர் சீர்போல். 70
அல்லம தேவர் பதில்
காமி யாகிநீ அருச்சனை கடைப்பிடித் தமையால்
நாம வேல்நெடுங் கண்ணினாய் காமிபோல் நடித்தேன்
தீமை நெஞ்சினாற் சூள்நினைந் தனை நினைத் தீண்டேன்
போமி னாருடன் என்றனன் வன்சொல்லாற் புனிதன். 71
(வேறு)
மாயை வருந்தல்
மண்ணுலகில் இழிகுலமத் தளத்தொழிலோன்
தனைவிரும்பி வறிதுமீண்டாள்
அண்ணல்மக ளெனும்பழியை மாளாமல்
நிறுவிப்போய் அங்கை கொட்டி
விண்ணுலக நகைசெய்யச் சூள்முடியா
தெவ்வாறு விமலன் பங்கில்
பெண்ணரசி தன்முகத்தில் விழிப்பலென
மாயையுளம் பீழை உற்றாள். 72
அல்லமர், நான் அன்புக்கு எளியன், வன்வுக்கு அரியன் எனல்
அன்பினால் அன்பர்பெறற் கெளியனாம்
எனைச்சூளொன் றறைந்து வந்து
வன்பினாற் பெறவேண்டி நின் றழிந்தாய்
இதுதகுமோ மாயை மாதே
முன்பினாக கடுவிதைத்துக் கரும்பாக
வேண்டிமிக முயன்று நெஞ்சில்
துன்பராய்த் திரியுமவர் போலென்றான்
மாயைதனைத் துரக்க வல்லான். 73
விமலை அல்லமரை வேண்டுதல்
கரைகுறுக வந்தகலங் கவிழ்ந்த நாய்
கன்போலக் கலங்கிநின்ற
வரைபுரைமென் முலைமாயை தனைக்கண்டு
விமலையுள மறுகி மாழ்கி
இரதமுறு களிம்புமலி செம்பினியல்
நோக்குறா இயல்புபோல
அருள்புரிதி ஐயஇவள் குணநோக்கா
தென்று தொழு தஞ்சிச் சொன்னாள். 74
அல்லமர் மறுமொழி கூறுதல்
இலங்கிலைவேல் மருட்டுமதர் விழிவிமலாய்
வறியாவோ டிரதந் தன்னால்
நலங்கிளர்பொன் உருவாயில் என்னாலிம்
மாயையின்பம் நாணுகும் என்று
புலங்களறி வரியபர மானந்த
சிவயோகி புகல மாயை
கலங்கியளி பசும்புண்ணிற் செவ்வேல்பட்
டெனவழுங்கிக் கழறு கின்றாள். 75
மாயையும் அல்லமரும் வாதமிட்டு உரைத்தல்
நனவொருபுன் கனவாக மயங்கவெனைப்
புணர் தலினால் நாளும் வென்றி
எனதெனநின் றுளஞ்செருக்கி மடமாயை
கூறுதலும் எங்கள் கோமான்
கனவினுகர் வுறுமுணவு குறையுமோ
பசியதனாற் களைவ துண்டோ
நினைவில்வரு கனவொன்று கண்டிறுமாந்
தனைபேதாய் நீதான் என்றான். 76
மாயை வஞ்சினங் கூறல்
எவ்வண்ணம் உரைவன்மை கொண்டுநீ
தள்ளினுநான் இன்று போகேன்
கைவண்ண மலர்ப்பகழி மதனனையாய்
நினைத்தழுவிக் கட்டிக் கொண்டு
செவ்வண்ணன் அமர்கைலைக் கேகியென்சூள்
முடிப்பலெனச் செருக்கிச் சொன்னாள்
மைவண்ண மலர்க்குழலாள் வான்திரட்டி
விழுங்குவலென் மாற்றம் போல. 77
அல்லமர் மறைதல்
முடிக்குமலர்க் குழல்மடவாள் சூள் முடிப்பல்
எனுமொழிக்கு முறுவல்செய்து
பிடிக்கவலை யாயிலெனைப் பிடிநடையாய்
பிடியென்று பிரான்ம மறந்தான்
மடக்கொடிதன் விழியினாற் காண்பதும்போய்
மதிமயங்கி வறிது நின்றாள்
சுடர்த்தொடிமென் தோள்மடவார் இன்றிழந்தோம்
இவளையெனத் துயரு ழந்தார். 78
அல்லமர் அன்பருக்கன்றிப் பிறர்க்கு அரியர் எனல்
வெண்டிங்கள் நிலவுவா யிடைப் புகினும்
சகோரமெனும் மென்புள் அன்றி
உண்டிங்கு வாழுமுயிர் உளதோ நம்
அல்லமனாம் ஒருவன் தானும்
பண்டங்கு மொழிமாயை கைப்படினும்
அவள்பிடிக்கப் படுவ னோதான்
தொண்டன்பின் வழிநின்று மனமாசு
தீர்ந்தபெருந் தூயோர்க் கல்லால். 79
முனிவர்கள் அல்லமரைப் போற்றித் தவஞ்செய்தல்
மாயைதனை வாதித்துத் தள்ளுபுதன்
நிலைநின்று மாயா வாதி
ஆயினனல் வீரசைவ சித்தாந்த
குலதீபம் ஆயி னோனென்
றேயுமன நிறுவியிறப் பெதிர்வுநிகழ்
வெனுங்காலம் உணரும் ஆற்றல்
தூயமுனி வரரெல்லாம் அல்லமனைத்
தொழுதுதவந் தொடங்கி வாழ்ந்தார். 80
ஏழாவது - மாயை கோலாகல கதி முடிந்தது
கதி 7 - க்குச் செய்யுள் - 436
8. வசவண்ணர் வந்த கதி
[இக் கதிக்கண், அல்லம தேவர் மறைந்தவுடன் மாயை வருந்துகிறாள். மாயையின் பெற்றவர்களும் மற்றவர்களும் மாயையைப் பின் தொடர்ந்து வருந்துகிறார்கள். மாயையின் நற்றாய் மோகினி, பல வகையாகப் புலம்புகிறாள். விமலை அரசனையும் அரசியையும் பார்த்து, ‘மாயை உங்கள் மகள் அல்லள்,’ என்கிறாள். மாயை தன் வரலாற்றைத் தாய் தந்தையர்கட்குத் தெரியப்படுத்திக் கைலையை அடைகிறாள். அரசன், செயலற்று நிற்கிறான். அரசி மேலும் பல வகையாக வருந்துகிறாள்; அசரனுடைய குருவாகிய ஆங்காரன் அரசன் முதலியோரைத் தேற்றுகிறான்.
கைலையை அடைந்த மாயை இறைவனையும் இறைவியையும் வணங்கி அருகில் நிற்கிறாள். இறைவன் இறைவியைப் பார்த்து, ‘உன்னுடைய சூள் வெற்றி பெற்றதா?’ என்று கேட்டு எள்ளி நகையாடுகிறார். உமாதேவியானவள் இறைவனைப் பார்த்துத் ‘தோல்வியால் வருந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ மேலும் எள்ளி நகையாடுதல் மூக்கறையன் முகத்திற்கு நேரே கண்ணாடி காட்டுதலைப்போன்று இருக்கின்ற’ தென்கிறாள். இறைவியின் வருத்தத்தைத் கண்ட இறைவன், ‘ஆடுகளைக் கொல்லுந் தொழிலையுடைய ஒருவன் அரிமாவுக்கு முன் செல்லுதலே பெரிய வீரத் தன்மையாவது போல, மாயை அல்லம தேவருக்கு முன்சென்றதே பெருங் காரியம்’ என்கிறான். இறைவி, ‘அல்லம தேவரைக் கண்டு பிடித்தற்கு வழி யாது?’ என்று கேட்கிறாள். ‘சத்துவகுண மடந்தையை அனுப்பினால் அல்லமதேவரைக் கண்டுபிடிக்கலா’ மென்று இறைவன் பதிலுரைக்கிறான். இறைவி அவ்வாறே அனுப்புகிறாள். இறைவன் அல்லமதேவரை அறியுமாறு நந்திதேவரை உலகிற்கு அனுப்புகிறான். நந்திதேவர் இறைவன் மீது கொண்டுள்ள அன்புப்பெருக்கை அறிவதற்குச் சிவகணங்களையும் உலகிற்கு அனுப்புகிறார். சிவகணங்கள் பற்பல நற்பதிகளிலும் பிறக்கிறார்கள். இவர்களால் உலகிற்கு நன்மை விளையும் என்று தேவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]
நூலாசிரியர் கூறல்
அசைவில் அல்லமற் காயுமை நறகலை
வசவ தேவன் வலிய கணங்கள் தாம்
கசியும் அன்பிற் கயிலையின் நின்றுதென்
திசையில் வந்த திறமுரை செய்குவாம். 1
அல்லமர் மறைந்தவுடன் மாயை வருந்துதல்
தீங்கு காணும் சிறுவிலை நாட்கடன்
வாங்கும் ஓர்பொருள் போக்கும் வறியர்போல்
நீங்க ஞான நெடுந்தகை மாயைநின்
றேங்கும் ஆவி இயக்கமும் இன்றியே. 2
பெற்றவர் வருந்திப் பின்தொடருதல்
மத்த ளங்கொடு வந்தவன் தன்னொடு
பொய்த்த நுண்ணிடை போயினள் என்னவே
சித்த நாணும் துயரமும் தின்றிடப்
பித்தர் போல்பின் தொடர்ந்தனர் பெற்றவர். 3
அரசன் வருந்திப் பின்தொடருதல்
தக்க தந்தைதாய் சாயப் பழிசெயும்
மக்கள் இன்றி மலடர்தாம் ஆதலும்
மிக்க வன்பிணி மேவலும் நல்லவென்
றுக்க நெஞ்சுடன் ஓடினன் மன்னவன். 4
மோகினி தன் மகளை நினைந்து
வருந்துதல்
காய்ப சிக்குக் கவன்று தசைதின
வாய்ப தைக்கும் மறவர் வலையிடைப்
போய்வி ழக்குழக் கன்று புகுந்தவண்
தாய்ப தைப்பது தன்னெதிர் காணுமோ. 5
இதுவும் அது
கண்டு வார்சிலைக் கானவர் பார்ப்பினைக்
கொண்டு போகக் குடம்பைகண் டேங்கியே
துண்ட மாரிரை சோரப் பறவைகள்
மண்டு நோயில் மறுகுதல் காணுமோ. 6
இதுவும் அது
அரில்மி தித்திட் டதர்படப் பூம்பணை
மரமு றித்து மழைமதக் கைம்முக
உரல டிப்பிறை ஒண்மருப் பஞ்செவிக்
கரிந டப்பக் கலங்கி இரியுமோ. 7
இதுவும் அது
பரற்கண் மென்பதம் வைத்துப் பதைக்குமோ
சுரத்து மேனி துவண்டு வெதும்பிநீர்
இரக்கு மோமகள் என்செயு மோஎனத்
தரிக்க ருந்துயர் தாயடைந் தேகினாள். 8
அரசன் வருத்தங்கண்டு ஊரினர் வருந்துதல்
பொன்னை அன்ன புதல்வி பொருட்டிவண்
மன்னர் மன்னன் மனத்தில் வளர்ந்தெழும்
இன்னல் காணவும் ஊழொன் றிருந்ததென்
றுன்னி மாழ்கியவ் வூரர்பின் போயினார். 9
மமகாரன் தன் மகளைக் கண்டு சொல்லுதல்
அயர்ந்து நிற்கும் அரிவையைக் கண்டுநான்
முயன்று மெய்த்தவம் முற்றும் பயின்றுனைப்
பயந்த தற்குப் பயனன் றுதவினை
நயந்தெ மக்கெனத் தந்தை நவின்றனன். 10
‘என்னை ஏன் பிரிந்து வந்தாய்?’ என்று
தாய் அழுதல்
என்னை நீங்கி இழிதொழில் செய்பவன்
தன்னை நாடித் தலைமை இழந்தெனோ
கன்னி நீகொடுங் காட்டில்வந் தாயென
அன்னை யோவென் றரற்றி அழுதனள். 11
விமலை பதில் விளம்புதல்
மகனும் அல்லனவ் வல்லமன் மாயைநும்
மகளும் அல்லள் வரைபுரை தோளினாய்
இகலும் வாட்கண் அரசியும் நீயும்இங்
ககலும் என்று விமலை அறைகுவாள். 12
வருந்துவது அறியாமையென விமலை
கூறுதல்
வினைப்ப யன்கொள வேண்டுநர் ஓரிடம்
தனைப்பொ ருந்துறச் சம்பந்த மாத்திரத்
தெனக்கி னாரிவர் என்றபி மானமொன்
றனைப்பொ ருந்தி அழிவர் அறிவிலார். 13
உலகத்தினர் அனைவரும் உறவினரே எனல்
தனையர் அகியுந் தந்தைதாய் ஆகியும்
உனையு றாத உயிரிலை ஆதலால்
இனையர் கேளிர் இனையர் அயலென
நினைவு றேல்மிளிர் நெட்டிலை வேலினாய். 14
மாயை, தாய் தந்தையர்க்கு உரைத்தல்
வேனெ டுங்கண் விமலை இவைசொலப்
பான லங்கண் பனிமதி வாள்முகப்
பூந றுங்குழல் பொற்றொடி மாயைமுன்
தான டைந்தமை தந்தைக் குணர்த்தியே. 15
மாயை, தாய் தந்தையருக்குத் தேறுதல்
உரைத்தல்
காவி யங்கண் கனியிதழ் மாதுமை
ஏவ வந்தஎன் எண்ணம் முடித்திலன்
போவன் அங்கிப் புரிகுழ லோடுநான்
நீவிர் நோவன்மின் என்னை நினைந்தெனா. 16
மாயை, கயிலையை அடைதல்
விரைந்தெ ழுந்து விமலை அணங்கொடு
வருந்து செஞ்சக மாயைஅக் காட்டுளோர்
பிரிந்த ழுங்குரல் பின்தொடர்ந் தேகவே
பொருந்த ருங்கயி லைத்தடம் போயினாள். 17
அரசன் செயலற்று நிற்றல்
அழுது வாய்விட் டரற்றிலன் தன்னுடல்
புழுதி யாடப் புரண்டிலன் மன்னவன்
பழுதி லாததன் பாவைகா ணாமையால்
எழுதும் ஓவியம் என்னநின் றானரோ. 18
மோகினி வருந்துதல்
விழுவள் மீள எழுவள் மெலிந்துநைந்
தழுவள் மேனி அசைந்து நிலங்கையால்
உழுவள் வாய்க்கொண் டுயிர்ப்பள் இறப்பரென்
றெழுவள் கைநெரித் தேங்குவள் அன்னையே. 19
மாயை இருந்த மாளிகை கண்டு
மோகினி வருந்துதல்
பாடும் மாதரும் பந்தும் கழங்குநின்
றாடு மாதரும் ஆகும் அரிவைய
ரோடு மேவி ஒருமகள் வாழ்ந்தஅம்
மாடம் நாளினிக் கண்டுயிர் வாழ்வனோ. 20
மாயை மறைந்த வழி விளங்கவில்லை
துளிக்கும் வார்மதுச் சோலையும் வாவியும்
பளிக்கு மாடமும் பாழ்பட என்மகள்
களிக்கு மானிருங் காட்டினுள் எம்மைவிட்
டொளிக்கு மாறொரு சற்றும் உணர்ந்திலேன். 21
மோகினியும் தோழியரும் கதறுதல்
என்னை நீவிட் டிருப்பினும் பொன்தொடி
உன்னை நான்விட் டுயிர்பிழை யேனென
அன்னை வாய்விட் டரற்றினள் ஆயிடை
மின்ன னாரும் கதறினர் வேலைபோல். 22
ஆசிரியன் அனைவரையுந் தேற்றுதல்
வந்து வேந்தன் வழிமர பாரியன்
நுந்தம் மாமகள் நோன்மை நுமக்குநான்
முந்து கூறில னோதுயர் மூழ்கிநீர்
சிந்தை நோதல் தகாதெனச் செப்புவான். 23
வருந்துவது அறியாமை எனல்
அருந்த வம்பல ஆற்றும் அறிஞரும்
பொருந்த ருங்கயி லைக்குமின் போனமை
தெரிந்து நெஞ்சம் தெளிய அறிந்துநீர்
வருந்தும் தன்மை மடமை மடமையே. 24
உமையின் கூறு உமக்கு மகளாகத்
தோன்றிற்றெனல்
சிலைநு தற்பசுந் தேமொழி மாதுமை
கலைநு மக்குக் கவின்மக ளாகநீர்
தலைமை பெற்றது சாலும் உமையினி
உலகி னிற்பிறர் ஒப்பவர் இல்லையே. 25
மமகாரனும் மோகினியும் அரண்மனை
அடைதல்
என்று கூறக் குரவன் இறைமகன்
மன்றல் வாழ்க்கை மனையொடு துன்பொரீஇச்
சென்று மாடத் திருநக ரிற்புகாக்
குன்ற மாமதிற் கோயிலின் நண்ணினான். 26
(வேறு)
மாறை இறைவன், இறைவியை வணங்கி நிற்றல்
கயிலையில் விமலை யோடும் கவிர்இதழ் மாயை சென்று
வியனில மதனில் தன்னை விடுத்தஞான் றென்ன வானோர்
பயிலவை தன்னிற் புக்குப் பரனையும் இமயம் ஈன்ற
மயிலியல் தனையும வாழ்த்தி வணங்கியங் கருகு நின்றாள். 27
நிலவுலகில் நிகழ்ந்தவைகளை மாயை குறிப்பாகக் கூறதல
பொலிவழி வதனங் கண்ட போதேயம் மாயை நெஞ்சின்
மெலிவினை அறிந்தும் அன்னை வினவலும் சூள்கொண் டேகி
மலர்தலை உதகில் தான்முன் மயங்கிய வாற னைத்தும்
நலியுநாண் அடவ ருந்தி நவின்றனள் குறிப்பின் தோன்ற. 28
இறைவன் புன்னகை புரிதல்
நன்னக மகள்கேட் டுள்ளம் நாணுபு முகங்க விழ்ந்தாள்
பன்னக சயனன் ஆதி பண்ணவர் நெருங்க வைக்கண்
முன்னகை செய்து தீய முப்புரம் மாளச் சொய்தான்
புன்னகை புரிந்தான் பங்கின் புரிகுழல் செருக்கு மாள. 29
இதுவும் அது
அளியனென் றுனக்கு நான்சொல் அல்லமன் அரிய னோமற்
றெளியனோ உரைத்தி நீயென் றிலங்கயில் எறித லேபோல்
வெளியபுன் முறுவல் செய்ய விமலன்வெண் மதியம் கண்ட
நளினமென் மலர்போல் என்தாய் நகைமுகம் ஒடுங்கி னாளால். 30
அதுகண்ட இறைவி வருந்திக் கூறல்
போக்கரும் வலிபு கன்று போய்வரு மாயை சொன்ன
வாக்கினில் வருந்து வேனை வள்ளல்நீ நகைசெய் தெள்ளல்
மூக்கிலி முகத்தின் முன்னர் முகுரங்காட் டுதல்போன்ம் என்ன
மீக்கிளர் இமயம் ஈன்ற மெல்லியல் மெலிந்து சொன்னாள். 31
இறைவன் மறுமொழி
நடம்பயில் எந்தை மங்கை நாணினால் வருந்தி னாளென்
றடைந்தருள் சொல்வன் ஞாலம் அலைக்குமம் மாயை சூளால்
நெடுந்தகை முன்னஞ் சென்ற நிலையேநன் றாடு கொல்வோன்
மடங்கல்முன் வெல்வேன் என்று வருதலே ஆற்றல் அன்றோ. 32
இதுவும் அது
அல்லமன் பெருமை எல்லாம் அனைவரும் அறிந்து கொள்ள
நல்லெழில் மலைம டந்தாய் நன்குணர்த் தினைநீ யென்று
சொல்லுநர் அன்றி நின்னை நிந்தனை சொல்ல வல்லார்
இல்லையென் றியம்ப யாவும் ஈன்றவள் இயம்பு கின்றாள். 33
இறைவி, அல்லமதேவரை அறியும்வழி கேட்டல்
பொறியிலி யேன்செய் தீமை பொறுத்தருள் புரிந்து மெய்ம்மை
அறிவருள் குரவன் ஆகும் அல்லமன் தன்னைக் காணும்
நெறியருள் புரிதி யென்ன நிரைவளை வணங்கிக் கூற
மறிமழு அமர்ந்தி ருக்கும் மலர்க்கைவா னவனு ரைப்பான். 34
இறைவன் உரைத்தல்
மத்தம துறுகுணத்து மாயையை விடுத்த ஆற்றால்
நித்திய குரவன் தன்னை நீயறிந் திலைய ணங்கே
சத்துவ கலைம டந்தை தனையினி விடுத்தி ஆயின்
கைத்தல நெல்லி போலக் காண்குவை அவனை என்றான். 35
சத்துவ குணவடிவியை உலகிற்கு அனுப்புதல்
மிடியட இறப்பல் என்று மேவுமோர் இடத்தில் செம்பொன்
குடமொடு கண்ட வன்போல் கொலைசெய்நாண் துறந்து வந்து
துடியிடை உமையெம் மானைத் தொழுது சத்துவ அணங்கைப்
படிமிசை அலமற் காண்பான் செல்கெனப் பணித்தான் அன்றே. 36
அன்பினால் அல்லமதேவரை அறியலாமென்று
நந்திதேவர் கூறுதல்
அப்பொழு தருகு நின்ற அருள்நந்தி தேவன் அன்னே
ஒப்பரும் பத்தி யென்னும் அஞ்சனம் ஒன்றுண் டாயின்
செப்பரு ஞானா னந்த அல்லம தேவன் என்னும்
வைப்பினை எளிது காண லாமென மகிழ்ந்து சொன்னான். 37
இறைவன் நந்திதேவரைப் புகழ்தல்
அழிவரு நிதிய வைப்பை அஞ்சனம் கொண்டு காணும்
விழியுடை யவன்போல் ஞான மெய்க்குர வனைத்தான் கண்டு
கழிமயல் அன்பர் காணக் காட்டுவோன் இவனென் றெம்மை
வழிவழி அடிமை கொள்ளும் வள்ளல்நந் தியைப்பு கழ்ந்து. 38
நந்திதேவர் பெருமை
சத்தியால் யான்பி ணித்த ததளதனைத் தனது தூய
பத்தியால் அவிழ்க்க வல்லோன் பார்க்கின்இந் நந்தி யேதான்
இத்தினால் விலங்கு பூட்டும் இறைவனோ விடுவிப் பானோ
மெய்த்தஆ ரருளி னோன்யார் விளம்புக என்று சொல்வான். 39
நந்திதேவரை இறைவன் நிலவுலகிற் கனுப்புதல்
அல்லமன் என்னும் ஞான ஆனையை அகப்படுத்த
வல்லவொண் பார்வை நீயே ஆதலால் மண்ணிற் போகி
எல்லையில் அன்பர் நெஞ்சத் தின்பருள் நந்தி யென்று
சொல்லினன் உயிரில் தோன்றாத் துணையென இருக்கும் பெம்மான். 40
சிவகணங்கள் நந்தியால் அல்லமரைக் காண இயலாதெனல்
அந்திவண் ணத்தெங் கோமான் அருளினால் இன்ன கூறச்
சுந்தரி தனக்கும் எட்டாத் தூயவன் தன்னைக் காண
நந்திவல் லவனோ என்று நகைசெய்து கணங்கள் தம்முள்
வந்தொரு சிலரு ரைப்ப மங்கைபங் காளன் சொல்வான். 41
இறைவன், நீங்கள் எம்மையும் நந்தியையும் அறியீர் எனல்
நந்தியென் தனையு ணர்ந்தான் நானவன் தனையு ணர்ந்தேன்
சிந்தைசெய் தெம்மை நீவிர் தெறிவுற அறிகி லீரென
றெந்தையெம் பெருமான் கூற இகழ்ந்துரை செய்தோர் எல்லாம்
வெந்துயர் கொண்டு நின்றார் மீளவும் விமலன் சொல்வான். 42
சிவகணங்களை உலகிற் பிறக்குமாறு இறைவன் அருளல்
மாசறு நந்தி பத்தி வார்த்தையால் அறியீர் நீவிர்
காசினி யாதனிற் சென்று கண்களால் அமைக் கண்டு
பேசுதிர் பின்னர் என்று பெருந்தகை நந்தி தன்னோ
டீசனொண் கணங்கள் தம்மை ஏவினன் அருளி னானே. 43
சிவகணங்கள் பிறத்தல்
கண்ணுதல் அருளால் ஏவுங் கணங்களுள் தலைமை பெற்றோர்
மண்ணுல கதனில் வேண்டும் வளம்பதி தோறும் வந்து
நண்ணினர் உலகர் கண்ணின் நரர்வடி வாகத் தோன்ற
எண்ணுறின் எழுநூற் றின்மேல் எழுபதென் றுரைக்கும் எண்ணார். 44
நந்திதேவர் முதலியோர் பிறப்பினால் நலம்
நலம் விளையுமெனத் தேவர்கள் மகிழல்
நந்தியென் கின்ற ஞான ஞாயிறு நிலத்து திப்பின்
முந்துறும் அமணர் என்னும் மூடுவல் இருள்கெட் டோடும்
சந்திர மௌலி சீர்வெண் தாமரை மலரும் என்னா
இந்திரன் முதலாய் உள்ள இமையவர் மனம கிழ்ந்தார். 45
எட்டாவது - வசவண்ணர் வந்த கதி முடிந்தது
கதி 8 - க்குச் செய்யுள் - 481
9. அக்கமாதேவி உற்பத்தி கதி
[இக் கதிக்கண், உடுதடை என்னும் பெயருடைய நகரின் கண் நிருமலன் சுமதி என்னும் பெயருடைய இருவருக்கு, இறைவியால் ஏவப்பெற்ற சத்துவ கலைமடந்தை மகளாகத் தோன்றுதல்; மாதேவி என்று பெயரிடப் பெறுதல்; நற்பண்புகளுடன் மாதேவி வளருதல்; காமன் கலங்குதல்; எங்கும் நன்மை இலங்குதல்; இறைவன் கட்டளைபெற்ற சிவகணங்கள் பலவிடங்களிலும் தோன்றித் தவம், கடவுள் வழிபாடு முதலியன செய்துகொண்டு துலங்குதல்; இங்குளாபுரி என்னும் நகரின் சிறப்பு; மாதரசன் மாதாம்பிகை என்னும் இருவரின் மாண்பு; மாதாம்பிகை வயிற்றில் நந்திதேவர் தோன்றுதல்; அந்நாளில் யாண்டும் நன்மை மிகுந்து விளங்குதல்; குழவியாகத் தோன்றிய நந்திதேவருக்கு இறைவன் திருநீறு பூசிச் சிவக்குறிகட்டி வசவன் என்று பெயரிடுதல்; வசவதேவர் கல்வி கற்றல்; விச்சலன் என்னும் வேந்தன் கலியாணபுரம் என்னும் நகரில் அரசு புரிந்திருத்தல்; வசவரும் அவருடன் கைலையிலிருந்து நிலவுலகில் தோன்றிய நாகாம்பையும் விச்சலபுரம் அடைதல்; விச்சலமன்னன் வசவரை எதிர்கொண்டழைத்துப் போற்றுதல்; வேந்தனும் வசவரும் அத்தாணியிலிருக்குங் காலையில் விண்ணிலிருந்து ஓர் ஓலைச்சுருள் அவையில் விழுதல்; அதைச் சிலர் எடுத்து அரசனுக்குக் கொடுக்க, அவன் வாங்கி வசவருக்குக் காட்டுதல்; அவ்வோலைச் செய்தியை வசவர் அரசனுக்குணர்த்திப் புதையலெடுத்துக் கொடுத்தல்; அரசன் வசவருக்கு அமைச்சுரிமை அளித்தல்; நாகாம்பை ஒரு புதல்வனைப் பெற்று வசவரென்று பெயரிடுதல்; உலகின் பல பகுதிகளிலுந் தோன்றியிருந்த சிவகணங்கள் கலியாணபுரத்தை யடைதல்; வசவர் சிவனடியார்களைப் போற்றுதல்; சிவனடியார்கள் பலவகைக் காரியங்களில் ஈடுபட்டிருத்தல்; வசவர் அல்லமதேவரின் வருகையை எதிர் பார்த்திருத்தல் ஆகிய செய்திகள் கூறப்பெறுகின்றன.]
ஆசிரியர் கூறல்
புரஞ்சுடு சிறுநகைப் புனிதன் பாலமர்
கருந்தடங் கண்ணிதன் கலையும் நந்தியும்
அருங்கண நாதரும் அகல்நி லத்திடை
வருந்திறம் அறிந்தவா வகுத்துக் கூறுவாம். 1
உடுதடை என்னும் ஒரு நகர் உள்ளது எனல்
பெடையொடு சுரும்பினம் பெரிதி ரைந்திடக்
கடிதடம் அளவுவாய்க் காலின் ஓடியே
மடையுடை மதுமழை மலர்பெய் சோலைசூழ்
உடுதடை எனுநகர் ஒன்றுண் டாயிடை. 2
அந்நகரில் நிருமலன் என்பான் சிறந்தவன் எனல்
நன்மையென் பனஎலாம் உடையன் நான்மறைப்
புன்மையென் பனஎலாம் பொருந்து றானெனும்
தன்மைதன் பெயரினால் அறியத் தக்கவன்
நின்மலன் எனஒரு நிகரி லானுளன். 3
நிருமலன் மனைவியாகி சுமதியின் பிறப்பு
அவனெழில் மனையவள் ஆட கத்தினைச்
சுவணமென் குதலெனச் சுமதி யென்பவள்
தவநிலை தன்னினும் தலைமைத் தென்னவே
உவமையில் இல்லறத் தொழுகும் நீர்மையாள். 4
இறைவியின் சத்துவகலை, அச் சுமதிக்கு
மகளாகப் பிறத்தல்
தூநிரு மலனுக்கச் சுமதி தன்னிடைத்
தானொரு மகளெனச் சார்ந்து தோன்றினாள்
ஆனுயர் கொடியினோன் அங்கை தாங்குறா
மானுறழ் சத்துவ கலைம டந்தையே. 5
மகப்பேற்றால் தாய், தந்தையர் மகிழல்
மதிபெறு கடலென மகளை ஈன்றவர்
நதிபெறு சடைமுடி நம்பன் பாலுறு
கதிபெறு மதிநுதல் கரும்பைப் பெற்றுநல்
துதிபெறு மலையென மகிழ்ச்சி துன்னினார். 6
நீறுபூசிச் சிவக்குறி யணிதல்
நெறிமுறை நிருமலன் நீறு சாத்தியே
அறிவரும் அஞ்செழுத் தறைந்து மெய்யுணர்
குறியினைத் தரித்தனன் குழவி ஆகிய
பொறிநிகர் வுறுமொரு புதல்விக் கென்பவே. 7
மாதேவி என்று பெயரிடுதல்
இந்துவார் சடையினோன் இடத்த ளேயெனும்
சிந்தையான் மகளைமா தேவி யென்றொரு
சந்தநா மங்கொடு தான ழைத்தனன்
தந்தையா தற்குநல் தவம்பு ரிந்தவன். 8
மாதேவி வளருதல்
அறிவருள் ஆதர வடக்கம் வாய்மைமெய்த்
துறவுநல் லொழுக்கமே தூய்மை என்றிவை
உறவொடு குழவியாய் உடன்வ ளர்ந்திட
மறுவறு சுமதிதன் மகள்வ ளர்ந்தனள். 9
காமன் கலங்குதல்
வாடிய மருங்குலம் மாயை தோன்றுநாள்
கோடிய சிலைகொடு தவங்கு லைப்பவே
ஓடிய மதனன்மா தேவி ஓங்குநாள்
வீடிய சிலையனாய் வீழ்ந்து மாழ்கினான். 10
தீமைகள் கெட்டு நன்மைகள் எங்குந்
திகழ்தல்
விழுந்தன கொடியதீ வினைப்ப ரப்பெலாம்
எழுந்தன நல்லறம் யாவுந் திங்களங்
கொழுந்தென நிருமலன் குமரி ஓங்குநாள்
முழங்கின சிவாகமம் முற்றும் எங்குமே. 11
(வேறு)
சிவகணங்கள் உலகில் தோன்றிப் பற்பல
பெயருடன் விளங்கல்
ஈங்குமா தேவி இன்னணம் இருப்ப
எம்பிரான் ஏவிய கணங்கள்
தாங்கள்வேண் டியவொண் பதிதொறும் முன்செய்
தவத்தர்பால் நன்மக வாகித்
தீங்கிலாச் சித்த ராமையன் மாச்சி
தேவனென் றிடுபெயர் முதலா
ஓங்கு நா மங்கள் வேறுவே றுறக்கொண்
டுற்றனர் நற்றவம் முயன்று. 12
நந்திதேவர் தோன்றுதல்
பயக்குறும் இனிய சங்கர பூசை
பல்வகை நெறிப்பட இயற்றிச்
செயற்கருஞ் செய்கை செய்தவர் இருந்தார்
தென்றிசை கயிலைபோற் சிறக்க
மயக்குறும் அமண வல்லிருள் மெலிய
வயிணவம் எனும்உடு மழுங்க
வியக்குறு சைவம் மலரநல் நந்தி
வெய்யவன் உதித்தமை விரிப்பாம். 13
இங்குளாபுரி என்னும் எழில் நகர்
வாயின்மண் இட்டுக் கொண்டவன் தன்னை
மதித்துநல் நுதலின்மண் இடாமல்
பாயும்வெண் திரையில் துயில்பவன் தனக்குப்
பரிதியொன் றளித்தருள் முக்கண்
நாயகன் தனையே கருதிவெண் ணீற்றால்
நன்னுதல் வீதியை அணியுந்
தூயநன் மறையோர் தமக்கிடம் ஆகும்
துரிசிலா இங்குளா புரியே. 14
அந்நகரின் அருஞ்சிறப்பு
கதிர்விளை செந்நெற் காடுசூழ் கரும்பு
கரும்புசூழ் கதலியங் கதுசூழ்
புதுநறும் பாளைக் கமுகது சூழ்முப்
புடைப்பசுங் காயதெங் கதுசூழ்
உதிர்கனித் தேமாந் தண்பொழில் பார்ப்பார்க்
குயர்வுறு துயர்மிடி புகாமல்
அதிர்முர சியம்பும் வீதியந் நகரிற்
கணிகள்வைத் திடுபடை காட்டும். 15
விருந்தோம்புதல்
விருந்தினுக் கிடுவார் அன்னமந் நகரின்
வேதியர் மடந்தையர் எல்லாம்
பொருந்துமன் னத்திற் கிடுவன விருந்து
புனல்வயற் செங்கம லங்கள்
வருந்துநுண் ணிடைநன் மாதர்கைம் மலர்க்கு
வண்டினைக் கொடுப்பர் பேரின்பம்
தருந்தனி நகர்சூழ் தடங்கள் வண்டிற்குத்
தாள்மலர் கொடுத்திடும் அன்றே. 16
மறையவர் மாண்பு
இந்நகர் வாழும் மறையவர் செய்யும்
யாகதூ மம்படிந் தன்றோ
பொன்னகர் வாழ்நர் நிறைந்தஆ யுளராய்ப்
பொருந்துதல் இந்நகர் மறையோர்
உன்னரும் மனுவால் நெருப்பினை வளர்த்திட்
டொழுகுநீர் காட்டுறின் அன்றிப்
பின்னொரு செயலாற் கலியுகந் தன்னிற்
பெருகுநீர் காணுறப் படுமோ. 17
மாதரசன் என்னும் மறையவன் சிறப்பு
இனையமா நகரின் அந்தணர்க் கெல்லாம்
இறைமைபூண் டுளனொரு மறையோன்
நினைவெலாம் அரன்றா ளினுமுரை எல்லாம்
நிருமலன் துதியினுஞ் செய்யும்
வினையெலாம் அவன்பூ சனையினும் வைத்தோன்
வேதமும் ஒழுக்கமும் வல்லான்
மனையுளான் எனினுந் துறந்தவர்க் கொப்பான்
மற்றவன் நாமமா தரசன். 18
மாதரசன் மனைவி மாதாம்பிகையின்
கற்புச் சிறப்பு
திருந்திய அனையான் தேவிதன் நாமம்
செப்பின்மா தாம்பிகை யென்பாள்
அருந்ததி முதலாங் கற்புடை யார்தம்
அருநிலை ஊறின்றி முற்ற
நிரந்தரம் அவளைக் கைகுவித் திறைஞ்சி
நினைந்துபின் பாயலிற் படுப்பார்
கருந்தடங் கயற்கண் பூண்கொடி அனையாள்
கற்பினை யாவரே புகல்வார். 19
நந்திதேவர் அவட்கு மகனாகத் தோன்றல்
பூங்கொடி அனமா தாம்பிகை பெருமை
புனைந்துரை அன்றுபட் டாங்கே
ஓங்கிய அபர சிவனென வேதம்
உரைத்திடும் அருணந்தி வந்தான்
தாங்குற அவள்தன் வயிற்றிடை அதனால்
தக்கவர் தகவில ரென்ப
தாங்கவர் பயந்த புதல்வனால் தெளிய
அறிமினென் றறைகுவர் பெரியோர். 20
மாதரசன், மாதாம்பிகைஆகிய இவர்
பெருமை
ஐந்தொழில் ஒருவன் திருவுளம் மகிழும்
அறுதொழி லாளன்மா தரசன்
பைந்தொடி கொழுநற் றொழுதெழு தொழிலாள்
பரிந்துதீ வளர்ப்பவன் மறையோன்
செந்திரு அனையாள் விருந்தினர் வயிற்றின்
தீயவிப் பவளிவர் பெருமை
நந்தெழின் மலரோன் சொன்மகள் இருக்கு
நாவினும் புகன்றிடப் படாதே. 21
நந்திதேவர் தோன்ற வானவர் மலர்மாரி
பெய்தல்
இன்னமா தரசன் தேவிதன் வயிற்றின்
இவ்வுல கெலாஞ் செய்புண் ணியத்தான்
மன்னுமார் அளிகள் விருந்துணக் காமர்
வல்லியின் மலர்மலர் வதுபோல்
என்னையா ளுடைய நந்திவா னவன்றான்
எய்திவந் துதித்தனன் அன்று
சென்னியால் அமரர் தொழுதுபூ மாரி
சிந்தினர் துந்துமி முழங்க. 22
அமணர், வைணவர் உள்ளன்பு
எங்குரு நந்தி தோன்றுநாட் புதுமை
யென்சொல்வாங் கண்டுமுட் டென்னும்
வெங்குண அமணர் உளத்தெறி மழுவோன்
வேடங்கண் டஞ்சலி செய்ய
அங்கொரு நேயம் பிறந்தது திருமால்
அடியவர் உளத்தினில் எங்கள்
சங்கரன் இறைவன் எனவொரு ஞானஞ்
சார்ந்தது தமையறி யாமல். 23
நந்திதேவர் பிறந்ததும் உலகில் தீமைகள்
மறைதல்
கொலைகள் வழுக்கா றவாவொடு வெகுளி
கொடுஞ் சொல்பொய் பயனில கூறல்
நிலையழீஇ ஒருவன் செய்ந்நன்றி மறத்தல்
நிந்தனை வஞ்சனை பிறர்தம்
சிலைநுதல் மடவார்க் கருதலென் றினைய
தீமைக ளியாவும்போ யினவால்
நலமலி தரும மூர்த்தியா கியநல்
நந்திவா னவன்புவி வருநாள். 24
நந்திதேவர்க்கு இறைவன் சிவக்குறி
கட்டுதல்
தாடலை தந்திங் கெம்மையாள் நந்தி
தாயகட் டினுநின்று தரைமேல்
ஏடவிழ் மலர்வாள் முகமது தோன்ற
எழுந்தரு ளுதல்முனங் குருவாய்க்
கூடல சங்க மேசன் தாய்க் கொளித்துக்
குறுகிநல் நுதலினீ றணிந்து
வீடருள் பரம சிற்கன லிங்க
மெய்யுறத் தரித்தனன் அம்மா. 25
வசவன் என்று பெயரிடுதல்
தரித்தபின் தனது மேனிதோன் றாமல்
தாயெதிர் நின்றிட பப்பேர்
திரித்துநல் வசவன் என்றுபே ரிட்டுச்
சென்றனன் சிவன்தனைக் குருவாய்
ஒருத்தர்தம் மிடத்திற் பாவனை செய்கென்
றுரைப்பவர் உரைகெடத் தானே
அருட்குரு வடிவாய் வந்தருள் புரிந்த
ஆலமார் சூலபா ணியனே. 26
வசவரின், திருநீறு முதலியன கண்டவர்
மகிழல்
பிறந்தமெய்ஞ் ஞானப் பிள்ளைநல் நுதலிற்
பெருகொளி நீறுமொண் களத்தில்
சிறந்துள அமல லிங்கமுங் கண்டு
செறிந்தவர் அனைவரும் வியந்து
மறைந்தரன் குருவாய் வந்திவை புனைந்து
மகவினை வசவனென் றொருபேர்
அறைந்தனன் என்ன அறிந்தனர் அமலன்
அறிவுள்நின் றறிவிக்க அன்றே. 27
அக்குழந்தை நந்நிதேவரே என யாவரும்
உணரல்
குறில்வழி லகரந் தனிநிலை ஆயுங்
கூடிய தகரமுன் எழுத்தென்
றறிகுறி வடிவந் திரிதல்போல் நந்தி
அடல்விடை மெய்திரிந் துறினும்
நறுமலர் விழியிற் கண்டவர் எல்லாம்
நந்தியே என்றுளம் மகிழ்ந்தார்
பெறுதவம் முயன்ற அன்னையும் பிதாவும்
பெறுமுவ கையினையார் உரைப்பார். 28
வசவதேவர் கலையுணர்வடைதல்
ஈன்றநாள் தொடங்கிச் செய்கடன் முற்றும்
இயற்றினன் மாதர சன்தான்
தோன்றுமோர் குழவிப் பதங்கடந் தெங்கோன்
சோல்குரு முன்னுறுங் காலை
ஆன்றமா மறைகள் முதலவாய்த் தான்முன்
அறிந்துள கலையெலாம அறிந்தான்
சான்றதா மதியம் இரவிவந் திறுப்பத்
தன்கதிர் தானடை குதல்போல். 29
விச்சலன் என்னும் அமணவரசன்
பரமனை இகழ்ந்து நெறியலா நெறிபோம்
பரமத யானையை அடக்க
அரமுறு கூர்மை அங்குசம் என்ன
அரனடி யாரெனும் ஆவிற்
கொருமழ இளங்கன் றெனவருள் வசவன்
ஒழுகுநாள் வளங்கொள் கல்யாண
புரமுற அமண குழாத்தொடு மிக்க
புரவலன் விச்சலன் இருந்தான். 30
வசவதேவர், நாகாம்பை கலியாணபுரம்
சேர்தல்
படியில்கல் யாண புரமெனுந் தூசு
பரசிவ பத்தியாய் விளர்ப்பக்
கொடியபுன் சமண மாசுவர் பிடித்தாங்
குவலயத் திருந்திடும அந்நாள்
அடியவர செல்வம் எனும்வச வேசன்
அங்குடன் வந்தநா காம்பை
உடன்வர வந்தவ் விச்சலன் நகரி
உற்றனன் நற்றவர் நெருங்க. 31
விச்சல மன்னன் வசவேசரை
எதிர்கொண்டழைத்தல்
வந்தனன் வசவ தேவனென் றுரைப்ப
மன்னவன் விச்சலன் அறிந்து
மந்திரி என்று மறைந்தஉட் பகையை
மலிபொடி மூடிய தழலை
வெந்தழல் என்ன அறிந்திடா தெடுப்ப
மென்கைதீண் டுதலென எதிர்போய்
உய்ந்திட அரிதாய்த் தன்மதம் அழிய
உடன்கொடு கோயிலுட் புகுந்தான். 32
அனைவரும் அரசிருக்கை மண்டபத்தமர்தல்
பொருந்துமத் தாணி யிடைத்தவி சொன்று
புறமத கோளரிக் குதவி
இருந்திறற் சிங்கம் சுமந்தபூ வணைமேல்
இருந்தனன் அரசனப் போதில்
அருந்திறல் தானை காவலர் வேந்தர்
அமைச்சர்வெண் கவரிகொள் மாதர்
நெருங்கிநிற் கரிய பேரவை இடத்து
நிகழ்ந்தமை ஒன்றெடுத் துரைப்பாம். 33
(வேறு)
ஓர் ஓலை விண்ணில் நின்று அங்கே விழுதல்
இந்திரன் எதிர்நின் றாடும் ஏந்திழை காதிற் செம்பொன்
சுந்தர ஓலை ஒன்று சோர்ந்தெனச் சுருள்மு டங்கல்
அந்தர முகட்டி னின்றும் அரசன்பே ரவையிடத்து
வந்தெதிர் விழுந்த தொன்று மானிடர் மருண்டு நோக்க. 34
அவ்வோலையை வசவேசருக்கு அரசன் காட்டல்
நின்றவர் எடுத்து வந்து நெடுங்கையிற் கொடுப்ப வாங்கி
வென்றிகொள் மடங்கல் அன்னான் விரித்ததை எழுத்து நோக்கித்
தன்தலை யெழுத்தே யென்னத் தானுணர்ந் திலன்ம யங்கி
வன்திறல் அமண காலன் மலர்க்கையிற் கொடுத்தான் அன்றே. 35
அரசன் அரியணைக்கீழ்ப் புதையல் உண்டெனக்
கூறி நிலத்தைத் தோண்டுதல்
வாங்கிய முடங்கல் நோக்கி வசவநா யகனிவ் வோலை
தாங்குநின் தவிசின் கீழோர் தமனிய வைப்புண் டென்ற
தோங்கிய தூண்செய் தோளாய் உனக்குநான் காட்டு வேனென்
றாங்கதை அகழ்வித் தானவ் வரசர்கோன் அதிச யிப்ப. 36
அரசன் அங்குப் பொற்புதையல் கண்டு மகிழல்
அகழ்ந்திட நிதிய வைப்பொன் றாடக மலைபி லத்தில்
புகுந்திவண் வந்து மெல்லப் புறப்படல் போலத் தோன்ற
மகிழ்ந்தனன் அரசர் கோமான் வசவனைக் கண்டபோதே
நிகழ்ந்தவொண் பயனு ணர்ந்து நெஞ்சகம் நனிவி யந்தான். 37
அரசன் வசவதேவரைப் போற்றுதல்
பயிலுநல் வினையெ மக்குப் பயந்தவிவ் வசவ தேவன்
கயிலைநன் மலைக்கி ரண்டாங் கடவுளே யென்று சொல்லி
இயலுரை மடந்தை பொய்யாள் என்பதைப் புதுக்கி னானச்
செயலினை விழியிற் கண்டோர் தெளிந்துநெஞ் சகம கிழ்ந்தார். 38
அரசன் வசவருக்கு அமைச்சுரிமை அளித்தல்
மந்திரிக் கிழமை நல்கி மரபுளி உரிமை ஆற்றி
மைந்தனைப் புரக்குந் தாய்போல் மற்றெனைப் புரத்தி என்று
சிந்தனை களிப்ப இன்சொற் செப்பியா யிடையி ருப்ப
நந்தியைத் தொடர்பு கொண்டான் நாந்தகத் தடக்கை வேந்தன். 39
விச்சல மன்னன் வசவேசருக்குத் திருமணம் செய்வித்தல்
பெருந்தகை வசவ தேவன் பெருமைக்குத் தக்க வாறே
அருங்கடி மணஞ்செய் வித்தான் அலங்கல்வேல் முருகன் அன்னான்
திருந்திய அம்ம ணத்தின் சிறப்புநாம் விரிப்ப தென்கொல்
புரந்தனை அன்று தொட்டுப் புகன்றுகல் யாணம் என்றால். 40
நாகாம்பை புதல்வனைப் பெறுதல்
இவ்வகை கல்யாணத்தின் இருப்பநா காம்பை என்னும்
தவ்வைநம் வசவ தேவன் தன்பிர சாதந் தன்னால்
எவ்வமில் முத்தி மெய்யோ டிருக்கையின் அளிக்கும் வீர
சைவநல் நெறிவ ளர்க்குந் தனையனை யீன்றாள் அம்மா. 41
நாகாம்பை மைந்தனுக்குப் பெயரிடுதல்
மைந்தனை ஈன்று வந்து வசவநா மம்பு னைந்தாள்
நிந்தையில் கற்பு நங்கை நிகழ்திரு முகங்கள் ஆறும்
அந்தமில் தலங்கள் ஆறாய் அறிவித்தற் குலகில் வந்த
கந்தனென் றுன்ன அந்நா காம்பைதன் மகன்வ ளர்ந்தான். 42
வசவர் மகவீன்று பெயரிடுதல்
வீரமா கேசர் என்னும் மென்பயிர் வளர்க்க வந்த
மாரிபோல் நிகரில் சென்ன வசவதே சிகனி ருப்ப
நேரிலா வசவ நாம நெடுந்தகை மகவொன் றீன்று
சீருலாஞ் சங்கமேச தேசிகன் பெயர்பு னைந்தான். 43
வசவதேவர் அடியார்களைப் புரத்தல்
மொழியினால் நினைவால் வாக்கால் முக்கணான் அடியர் வேண்டிற்
றொழிவிலா துதவித் தாய்போல் ஓம்பினன் புறம தத்தோர்
வழியெலாம் வழக்கு மாற மலிபுகழ்ச் சைவம் என்னும்
பழியிலா வழிந டப்பப் பண்ணினன் வசவ தேவன். 44
உலகில் தோன்றிய சிவகணங்கள் வசவேசர் புகழறிந்து வரல்
அரனடி யவர்க்குத் தேனு ஆகிய வசவன் சீர்த்தி
விரிநிலம் முழுதும் போர்ப்ப வெள்ளிவெற் பினைய கன்று
தரைமிசை வந்தி ருந்த தவரெலாம் உணர்ந்து சென்றார்
பொருவில்கல் யாணத் திற்குப் போதல்போற் கல்யா ணத்தில். 45
வசவேசர் அடியார்களைப் போற்றுதல்
பலரொடு வரினும் எள்ளும் படிதனி வரினும் மிக்க
நலமொடு வரினும் மேனி நலமற வரினுஞ் சீர்சால்
மலைமகள் கணவன் தொண்டர் வரவுகண் ணுறின் எதிர்ந்து
நிலமிசை வணங்கி அஞ்சி நின்றுநன் றாற்று நந்தி. 46
வேறுபாடு கருதாது சினடியார்களைப் போற்றுதல்
சாதியும் குறியும் நீத்துச் சரணரைச் சிவனே என்று
பாதபங் கயம் இறைஞ்சிப் பத்திசெய் குவனந் நந்தி
தீதறு சுவைத்தீங் கண்டாற் செய்தசெங் கரும்பும் வேம்பும்
பேதமொன் றுறாமற் சாதி பெயர்விடுத் தறிதல் போல. 47
சிவனடியார்களின் பலவகை நிலை
மாதர்கள் தமைய கன்ற மலிதுற வினரெண் இல்லார்
கோதையர் உடன் இருந்துங் கொடுமயல் இலரெண் இல்லார்
மேதைகொள் அருச்ச னைக்கு வேண்டுவ முழுதுங் கொண்டு
போதுகள் வழாமல் ஈசன் பூசைசெய் பவரெண் இல்லார். 48
நோன்பு முதலிய நெறிகள்
விரதங்கள் வேறு வேறு மேவிநிற் பவரெண் இல்லார்
பரதஞ்செய் மதர ரிக்கட் பரத்தையர் மனைகள் தோறும்
சுரதஞ்செய் பவரெண் இல்லார் தூயநன் னந்தி நாம
வரதன் தன் அன்பின் வாழும் வழுவின்மா கேசர் அம்மா. 49
வசவதேவர் செயல்
தீதுசெய் சமணர் முன்னர்ச் செயற்கருஞ் செய்கை காட்டி
வாதுசெய் தவர்செ ருக்கு மாய்வுசெய் திமயம் ஈன்ற
சூதுசெய் முலைம டந்தை துணைவனார் தொண்டர்க் கெல்லாம்
யாதுசெய் குவனென் றேவல் இயற்றுவன் வசவ தேவன். 50
வசவதேவர் அல்லமதேவரை எதிர்பார்த்திருத்தல்
உளந்தெளி சரணர் தம்மோ டிம்முறை ஒழுகும் நாளின்
அளந்தறி வரிய சோதி அல்லமன் வரவு நோக்கி
வளங்கெழு திருக்கல் யாண வளநகர் தனில்வான் நோக்கும்
இளம்பயிர் போலி ருந்தான் எம்மையா ளுடைய நந்தி. 51
ஒன்பதாவது - அக்கமாதேவி உற்பத்தி கதி முடிந்தது
கதி 9 - க்குச் செய்யுள் - 532
10. அக்கமாதேவி துறவு கதி
[இக் கதிக்கண், மாதேவி மங்கைப் பருவம் அடைகிறாள். மங்கைப் பருவமடைந்தும் இன்ப நினைவு சிறிதும் அற்று இறைவனையடைய முயலுகிறாள். கௌசிக மன்னன் திருவுலா வருகிறான். அவன் அழகைக் கண்டு நகரமாதர்கள் மையல்கொண்டு கலங்குகின்றார்கள். கௌசிக மன்னன் மாதேவியைக் காண்கிறான். மாதேவியின் பேரழகு மன்னனை மயக்குகின்றது. மாதேவி இன்னாள் என்பதை ஒருவர் மூலம் உணர்ந்து கொள்கிறான். அவளை எவ்வகையினும் அடைய வேண்டுமென்று முடிவு செய்கிறான். மாதருங் குருவும் வலிந்து பலங் காட்டினால் நன்மை செய்யார்கள்; நயத்தினாலேதான் காரியத்தை முடிக்க வேண்டுமென்று துணிகிறான். மாதர்கள் சிலரை நிருமலன்பாற் சென்று மாதேவியை மணம் பேசுமாறு அனுப்புகிறான். நிருமலன் தக்கவரல்லார்க்கு மகட் கொடை வழங்கல் தகுதியன்று என்று மறுத்துரைக்கின்றான். பின்னர் மாதேவியிடமே சென்று பேசுமாறு அனுப்பிவிடுகிறான். மாதேவி அரசன் ஒரு சூள் உரைக்க வேண்டும் என்கிறாள். மணம் பேசவந்த மாதர்கள் மாதேவியும் மன்னனிடம் காதல் கொண்டிருக்கிறாளென்று எண்ணி அரசனிடஞ் சென்று சொல்லுகிறார்கள். அரசன் மாதேவியிடம் வருகிறான். தன்னை வலிந்து தழுவாமலிருப்பதற்குச் சூள் உரைக்குமாறு மாதேவி கேட்கிறாள். அரசனும் அவ்வாறே சூண் மொழி புகலுகிறான். மாதேவி அரசனுடன் அரண்மனையை அடைகிறாள். தனியிடத்தில் மாதேவியைக் கண்ட அரசன் தன் எண்ணத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகிறான். மாதேவி சிவபூசை செய்த பிறகு தன்னன வந்து சேருமாறு கூறுகிறாள். அரசன் ‘நான் உங்கள் இறைவனை வழிபடேன்’ என்கிறான். ‘அப்படியானால் நான் உன் தோளைத்தொடேன்’ என்கிறாள் மாதேவி. பின் தன் ஆடையணிகளை நீக்கிவிட்டுத் துறவுக் கோலம் பூண்டு தெருவிற் செல்கிறாள். தாய் தந்தையர் வந்து பார்த்து நம் மகள் தக்கதே எண்ணினாள் என்று எண்ணிச் செல்லுகிறார்கள். நகர மாந்தர்கள் மாதேவி நிலை கண்டு வருந்துகிறார்கள். மாதேவி அல்லம தேவரைத் தேடிக்கொண்டு காடு மலை கடிநகர் முதலிய இடங்களிற் சுற்றுகிறாள் என்னுஞ் செய்திகள் விரிவாகக் கூறப் பெறுகின்றன.]
நூலாசிரியர் கூறல்
தன்னைக் காண வெள்கணை பாயத் தடுமாறும்
மன்னைக் காலுஞ் சோறென விட்டருள் மாதேவி
மின்னைப் போலும் அல்லம தேவன் விளையாடும்
கொன்னைக் கானில் தேடிஅ டைந்தமை கூறுற்றாம். 1
மாதேவி மங்கைப் பருவம் அடைதல்
கொங்கைப் பொறையைக் கொண்டு மருங்குற் கொடிவாட
அங்கைக் குடநெய் பெய்தழல் என்ன அழகெய்தி
நங்கைக் கிணைகண் டிலமுல கெங்கணும் நாமென்ன
மங்கைப் பருவம் நண்ணினள் முற்றுணர் மாதேவி. 2
மாதேவி இறைவனையடைய முயலுதல்
வாதித் தொன்றோ டொன்றெழல் போல்முலை வந்துற்றும்
பேதைப் பெண்போற் காமம் உளத்திற் பிறவாமல்
பாதிப் பெண்மே னியனெனும் இன்பப் பதிதன்னைச்
சாதித் தெய்துஞ் சாதன மோடு தலைப்பட்டாள். 3
மாதேவி இறைவனையடையும் பருவத்தினள்
எனல்
தன்னை அறிந்திடை ஈடற முக்கண் தலைவன்பால்
பின்னம் அறும்படி மேவு பெரும்பரு வப்பெண்ணைக்
கன்னல் நெடுஞ்சிலை மன்மதன் வேரிக் கணைபாயும்
மன்னும் இளம்பரு வத்தினள் என்பர் மறைப்புற்றார். 4
மாதேவி மாதவம் புரிந்துகொண்டிருத்தல்
வண்டு படாதலர் சண்பக மேயென மாறாகிப்
பண்டர னோடமர் செய்மதன் வண்டு படாமேனி
கண்டிடும் ஒண்சுட ரேயெனு மாறு கவின் பொங்க
ஒண்தவ நின்மலன் மாதமர் நாள்களின் ஓர்நாளில். 5
கௌசிகமன்னன் உலாவருதல்
வீரங் குறைவில் மும்மத வேழம் மிசைகொண்டு
தாருந் தோளும் பொங்க மதிக்குடை தன்மேலா
மாரன் கரிமேல் வந்தனன் என்ன மணிப்பொற்றேர்
ஊருந் தெருவிற் கௌசிக மன்னன் உலாவந்தான். 6
உலாவருஞ் சிறப்பு
இயங்கள் தரங்க நெடுங்கடல் என்ன எழுந்தார்ப்ப
உயங்கு மருங்குல் மடந்தையர் பாடி உடன்போத
வயங்கள் இவர்ந்திள மைந்தர் மருங்கின் அடுத்தேகப்
புயங்கள் அலங்கல் இலங்க விசும்பிறை போல்வந்தான். 7
கௌசிக மன்னனைக் கண்ட மங்கையர் காம
மயக்கம்
மாணும் நெடுங்கரி மீது புரந்தனில் வந்தானைக்
காணும் மடந்தையர் ஏதும் உணர்ந்திலர் காமத்தால்
நாணும் இழந்தனர் தூசும் இழந்தனர் நன்றாகும்
பூணும் இழந்தனர் ஆவி இழந்திலர் போனார்கள். 8
மாதர்கள் வண்டுகளை நோக்கிக் கூறல்
நல்ல மதந்தான் ஒண்கவு ளின்பால்நன் றுண்ணச்
செல்லு சுரும்பே வெங்கரி யின்தாழ் செவியூடு
மெல்ல நடந்தே போவென மெள்ள விளம்பென்று
சொல்லி மறங்கூர் வேலன கண்ணார் துயர்கின்றார். 9
கௌசிகமன்னன் மாதேவியைக் காணுதல்
கோதையர் மாலால் இவ்வகை நோவக் கொடிமாட
வீதியின் ஊடு வருந்திறல் மன்னன் வினையில்லா
மாதவன் ஆகும் நின்மல னுக்கோர் மகளாகும்
காதொடு காதுங் கண்மட மாதைக் கண்டானே. 10
கௌசிகமன்னன் காமன் கணையால் கலங்குதல்
கண்டன னோஇலை யோஎனும் முன்னங் கழைவாங்கிக்
கொண்டனன் வாளி சொரிந்தனன் ஓடிக் கொடுமாரன்
உண்டிலை யோவென ஆவி தளர்ந்தே உம்பல்மேல்
மண்டலம் ஆளும் மன்னன் இருந்தான் வசமற்றே. 11
இம்மாது ‘யாரோ?’ என்று எண்ணுதல்
கொங்கைப் பாரத் தான்மலர் வாசங் கூடாமல்
இங்கிப் பாரிற் போது மலர்க்கண் எழில்மாவோ
மங்கைக் கோலங் கொண்டு நிலத்தில் வருமின்னோ
அங்கைக் காந்தட் பொற்றொடி யாரோ அறியேனே. 12
கௌசிகமன்னன் அடைந்த காமப்பெருக்கு
வஞ்சி நடந்தே என்னெதிர் வந்தே மயல்செய்தாள்
நெஞ்சு தளர்ந்தேன் மாலின் விழுந்தேன் நிலைகாணேன்
அஞ்சலை என்றே இன்றணை யாளேல் அனல்காணும்
பஞ்சு படும்பா டங்கசன் அம்பாற் படுவேனே. 13
‘மாதேவி யார்?’ என அறிந்துவர ஒருவனை
விடுத்தல்
என்ன நினைந்தே மன்னவன் வெந்தீ இழுதாகி
முன்னர் மருங்கே நின்ற ஒருத்தன் முகநோக்கிப்
பொன்னென வந்தவ் வாய்தலின் நின்று புறப்பட்ட
கன்னி அணங்கார் நீயறி கென்றான் காமுற்றே. 14
மன்னன் மாதேவியை அறிந்து ‘இவளை
எவ்வாற்றானும் கொள்வேன்’ எனல்
ஓடி அறிந்தே அன்னவன் வந்தங் குரைசெய்ய
வாடு மருங்குல் மங்கையை இன்னான் மகளென்று
நீடிய வெந்துயர் மன்னன் அறிந்தெந் நெறியாலும்
கூடுவன் இந்த அணங்கினை என்று குறித்தேகி. 15
மாதேவியைத் தூதினால் அடைய எண்ணுதல்
கோயிலின் மேவி இருந்துயர் ஞானக் குறிகூறும்
தூயவ ராகிய ஆரியர் தாமுஞ் சுடர்செம்பொன்
சேயிழை யாரும் வலிந்துறில் இன்பு செயாரென்று
வாயிலி னாலணை வேனென மன்னன் மனத்தெண்ணி. 16
(வேறு)
மன்னன் நிருமலனிடம் மணம் பேச
மாதர்களை அனுப்பல்
தூது வல்லநன் முதுக்குறை மாதரைத் துணிந்து
நீதி வல்லவன் நிருமலன் மகள்தனை நீவிர்
தீதில் எம்மனைக் கிழத்தியாம் படியுரை செய்து
போது மின்களென் றேவினன் வியனிலம் புரப்பான். 17
நிருமலன் பெண்கொடுக்க மறுத்தல்
ஐய அன்னதே செயகுவம் எனப்புகன் றகத்தில்
பைய வந்துநல் நிருமலன் திருமுகம் பார்த்து
வைய மன்னவன் கருத்தினை வகுத்தனர் மறுத்துத்
துய்ய மங்கைமர் எமக்கடா திதுவெனச் சொன்னான். 18
‘தானாக வந்த திருமகளை நீர் மறுக்கிறீர்’
எனல்
வேந்தன் மாமனை நும்மகள் ஆயினவ் வேந்தன்
சார்ந்த வாழ்வெலாம் நுமவென அறிகிலீர் தானே
போந்த ஓர்திரு மகள்வர வினைப்புறம் போக்கும்
மாந்தர் யாருளர் என்றுமங் கையர்சொல வகுப்பான். 19
‘தகுதியற்றார்க்குப் பெண்கொடுத்தல் தகா’ தெனல்
இம்மை சேர்பயன் கருதியே தகாதவர் இடத்தில்
கொம்மை வார்முலை மகட்கொடை நேர்ந்தவக் கொடியார்
அம்மை ஆழ்நிரை யத்திடை வீழ்ந்தனர் அழுந்தித்
தம்மை நோக்குநர் ஒருவரும் இன்றியே தளர்வார். 20
தீயன செய்தலினும் உயிர்விடதல் நன்றெனல்
தமக்க டாதது செய்துயிர் வாழ்வது தன்னில்
சுமைக்க டாதமெய் விடுத்தலே நன்றெனச் சொல்வர்
எமக்க டாதது புகன்றனிர் மங்கைமீர் இச்சொல்
நுமக்க டாததென் றியம்பலும் மங்கையர் நுவல்வார். 21
அரசன் ஏற்றல் தகாதெனல்
உறையில் வாளொடு மாவழங் குறுவனத் தோடி
மறவன் ஓர்பொருள் தருகென இரத்தலை மானும்
இறைவன் வாழ்குடி தன்னிலொன் றொருபொருள் இரத்தல்
அறவ னாகிய நீயிதை அறிந்திலை அந்தோ. 22
நிருமலன் மாதர்களைத் தன் மகளிடம் அனுப்புதல்
என்று மாதரார் கூறலும் நிருமலன் எங்கள்
மன்றல் வார்குழல் பேதையோ வல்லள் நும்மனத்தைச்
சென்று கூறுமின் அவள்மனம் இசைந்துரை செய்யின்
நன்று போமினென் றியம்பினன் அவர்மனம் நயந்து. 23
மாதர்கள் மாதேவிபாற் கூறுதல்
மங்கை பாலடைந் தறைகுவர் மதன்வலி மாயக்
கொங்கை மாமுகிழ்ப் பூங்கொடி நீயருள் கூர்ந்தே
எங்கள் கோமகன் ஆருயிர் நிறுத்தினை என்னில்
அங்கண் மாநிலத் துயிர்க்கெலாம் அன்னையா குவையால். 24
அரசன் ஒரு சூள் உரைப்பின் நல்லது என்றல்
என்ன ஓதலும் நிருமலன் ஈன்றருள் என்தாய்
மன்ன னான்மனை துறக்குமோர் சூழ்ச்சியை மதித்துப்
பொன்ன னீர்அர செனக்கொரு சூளினைப் பொருந்திப்
பன்னு மாயினீர் பணித்தது நன்றெனப் பகர்ந்தாள். 25
மாதர்கள், அரசனிடஞ் சென்று செய்தி கூறல்
தூது சென்றவர் பொற்கொடி சொல்லிய சொல்லால்
காதல் கொண்டனள் என்றுளந் திரிந்துதாய் கருதி
மாது நின்பெருங் கருணைசெய் வதற்கெங்கள் மன்னன்
யாத றைந்தனை அதுசெயத் தக்கவன் என்று. 26
(1 - [பாடம்] தெரிந்து.)
மன்னன் மாதேவியிடத்திற்கு வருதல்
உள்ளம் ஆர்வமோ டேகியம் மடந்தையர் உரைப்ப
வள்ளல் ஆகிய மன்னவன் மனம்நனி மகிழ்ந்து
தெள்ளும் ஆரமு தனையவள் இருந்துழிச் சென்றான்
எள்ளு காமநோய் கொண்டவன் என்செய இசையான். 27
மாதேவியைக் கண்டு மன்னன் கருதுதல்
வல்லி கொங்கையைப் பொன்மலை என்னவே மதியான்
இல்லு றுங்குடம் ஆகவே எண்ணினன் நுதலை
வில்வெ னும்படி நினைத்தனன் வெண்பிறை என்னான்
சொல்லு வன்றனக் ககப்படு மடந்தையாய்த் துணிந்து . 28
அரசனை உறுதிமொழி கூறும்படி மாதேவி கேட்டல்
அருள்செய் தென்னைநீ அளித்திடும் அதற்குநான் செய்வ
துரைசெய் நானது செய்வனென் றரசர்கோன் உரைப்ப
வரைசெய் தோளினாய் என்னைநீ வலிந்துபுல் லாமைக்
கொருசொல் உண்மைசொல் என்றனள் ஒருவுடை ஓதுங்கி. 29
அரசன் உறுதிமொழி கூறத் தொடங்குதல்
நின்க ருத்திசை வாலன்றி நின்னையான் வலியேன்
என்ப தற்கொரு சூளுரைக் குவன்முகில் எழுந்த
மின்கொ டிச்சிறு மருங்குலாய் கேளென வெள்வேல்
புன்பு கர்க்கருங் கடாக்களிற் றரசர்கோன் புகல்வான். 30
(வேறு)
விருந்தோம்பாதான் முதலியோர்
வந்தநல் விருந்தி ருப்ப மனையினுற் றருந்து வானும்
பந்தியின் உணவு வேறு பண்ணுபா தகனுந் தாயும்
தந்தையும் உணவுண்ணாத சழக்கனும் உச்சிப் போதின்
நொந்தவர் தமைநோக் காமல் நுகர்ந்திடு கொடியன் தானும். 31
விலக்கப்பட்ட உணவுண்போன் முதலியோர்
நிந்தைசெய் உணவி னானும் நிருமலன் பூசை யின்றி
வந்துண வருந்து வானும் மறுத்தவூன் நுகர்விப் பானும்
தந்தநல் வினையாற் செல்வஞ் சார்ந்தவர் தம்மைக் கண்டு
சிந்தனை பொறாத ழுங்கித் தீர்வினுண் மகிழ்வான் தானும். 32
கன்றுக்குப் பால் விடாமல் கறப்பவன் முதலியோர்
கன்றுண விடாமல் ஆன்பால் கறந்துகொள் பவனுஞ் செய்த
நன்றிகொல் பவனுங் கோடி நடுநிலை தவறு வானும்
கொன்றுயிர் பதைப்ப நோக்குங் கொடியனும் போர்க் களத்தில்
தன்தலை வனைவி டுத்துச் சாய்ந்துபோம் மடமை யானும். 33
அடைக்கலம் புகுந்தோரைக் காப்பாற்றாதவன் முதலியோர்
அடைக்கலம் எனவந் தானை அளித்திடா தகற்று வானும்
கொடுக்குதும் எனவு ரைத்துக் கொடானுமொண் கொடைவி லக்கி
விடுக்குறு மவனும் பாவ வினையிடத் துதவி யாகி
நடக்குறு மவனுந் தேர்ந்து நட்டபின் வஞ்சிப் பானும். 34
குரவர்மொழி தவறும் கொடியன் முதலியோர்
குரவர்தம் உரைக டக்குங் கொடியனுந் துறந்து ளார்தம்
வரவெதிர் கண்டெ ழாத மறவனும் அறிந்தான் போன்று
கரவினில் அருநூல் கற்குங் கயவனும் புதியர் ஆகி
இரவினில் வந்த நல்லோர்க் கிடங்கொடா தகற்று வானும். 35
புறங்கூறுவோன் முதலியோர்
முன்புகழ்ந் துரைத்துப் பின்னர் முறுவல்செய் திகழ்வான் தானும்
தன்பெருங் கிளைதல் கூர்ந்து தளர்வுற வாழ்கின் றானும்
அன்புகொண் டொருவன் வைத்த அரும்பொருள் கவர்கின் றானும்
துன்புறுந் தொழில்செய் வித்துச் சொல்பொருள் இலையென்பானும். 36
கற்பிலா மனையாளுடன் வாழ்வோன் முதலியோர்
கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனும் மற்றோர்
பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானும்
சொற்பொருள் உணர்த்தி னானைத் தொழஉளம் நாணு வானும்
விற்பன அலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும். 37
வயல் முதலிய இடங்களில் மலசலங் கழிப்போன்
முதலியோர்
நலமலி வயலில் ஆற்றிற் நந்தனத் தால யத்தில்
சலமலம் ஒழிப்போன் தானும் தனிவழி விலக்கு வானும்
விலைமொழி பொய்த்து விற்கும் வெய்யவா ணிகனும் தாழ்ந்த
குலமிலி தன்குற் றேவல் கூலிகொண் டியற்று வானும். 38
நட்புக்காலம் அறிந்த மறைபொருளைப் பகைக்காலம்
வெளியிடுவோன் முதலியோர்
உறவுசெய் தறிந்த சொல்லை உவர்த்துழிக் கூறு வானும்
பிறர்பிழை தனையே நாடிப் பிறரொடு பேசு வானும்
முறைவழு வுறுகொ டுஞ்சொல் முனிவிடை மொழிகு வானும்
அறிவழி மனைவி சொல்லின் வழிநிற்கும் அறிவி லானும். 39
நட்பினரைப் பிரிப்போன் முதலியோர்
கலந்தவர் தமைப்பி ரித்துக் கலகங்கண் டிடவல் லானும்
புலந்தரு நூலின் இல்லாப் பொருளினைக் கூறு வானும்
நலந்தனை அழுக்கா றெய்தி நகைத்திகழ கிற்போன் தானும்
மெலிந்தவர் இடத்து மிக்க வெகுளியைப் பெருக்கு வானும். 40
பிறர் பொருளால் அறஞ்செய்வோன் முதலியோர்
புண்ணியம் பிறர்பொ ருட்குப் புரிபவன் தானும் இந்த
மண்ணிடை இன்பத் திற்கா மறுமைசெய் தொழில்வி டுக்கும்
தண்ணிய அறிவி லானும் தவத்தரை இகழ்கிற் பானும்
பண்ணிய வினையில் என்றும் பாவமே பயில்கின் றானும். 41
இம்மொழி கேட்ட மாதேவி அரசனுடன் செல்ல
உடன்படல்
ஆவனான் உண்மை நீயா தறைந்தனை அதுசெய் தன்றி
மேவுவேன் ஆயி னென்று வேள்விரும் பழகன் கூறக்
காவிநேர் விழிமா தேவி கருத்திசைந் தற்றே ஆயின்
போவம்வா என்று சொன்னாள் புரவலன் உவகை பூத்தான். 42
மாதேவி அரண்மனையை அடைதல்
கோயிலின் முன்னர்ச் சென்றான் கொற்றவன் சிவிகை ஏற்றி
ஆயிழை மடந்தை நல்லார் அருகுசூழ் வுற்றுச் செல்லப்
போயினள் அரசர் கோமான் புக்குழிப் புக்காள் ஒள்வேல்
சேயரி நெடுங்கண் செவ்வாய்த் திலகவா ணுதல்மா தேவி. 43
மாதேவியைத் தனியே கண்ட மன்னன் வேண்டுதல்
மடந்தையைத் தனிக்கண் டங்கி மருவிய அரக்கே போல
உடைந்துநெக் குருகி ஆற்றா உள்ளமோ டிளம்பூங் கொம்பே
கடந்திடற் கரிய காமக் கடல்கடந் தேறக் கொங்கைக்
குடந்தரத் திருவு ளத்திற் கோடியென் றரசி றைஞ்ச. 44
மாதேவி கூறல்
காவலன் காம மிக்க கழிபடர் கிளவி கண்டு
பாவைபுன் முறுவல் செய்து பண்பெனுந் தொடரால் யாப்புண்
டோவல்செய் யாது நிற்கும் ஒருகளி றனையாய் யான்சொல்
ஏவல்செய் திட்ட பின்னர் என்னொடு பேசு கென்றாள். 45
மாதேவி அரசனைச் சிவபூசை செய்துவருமாறு கூறல்
ஏதுநான் செய்வ தன்ன தியற்றுவன் அறைதி என்ன
ஓதினான் அரசன் ஓத ஒண்தொடி அயன்மால் தேடும்
சோதிமா சிவலிங் கத்தைத் தூயையாய்க் கரபீ டத்தில்
போதினால் அருச்சித் தென்னைப் பொருந்துதி பின்னர் என்றாள். 46
மாதேவி கூறிய மொழி, பாலைநிலத்தில் நீருண்ணாது
தடுத்ததை ஒக்கும் எனல்
எல்லையில் காமம் பொங்க இளமுலை ஞெமுங்கத் தோளால்
புல்லுவன் என்றெ ழுந்த புரவலன் தனைத்த டுத்துச்
சொல்லிய தன்னம் அன்னாள் சுரத்துள்நீர் முகந்து வாயில்
செல்லுமொண் கரத்தை ஓடிச் சென்றுபற் றுதலை ஒக்கும். 47
அமண அரசன் உள்ளத்தில் சிவநேயம்வரல் அரிதெனல்
முகையிடை முருகுண் டாயின் முளையிடை விளைவுண் டாயின்
மகவிடை மதன இன்பம் வருவதுண் டாயின் சைவப்
பகையொட |