tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -VI part II (verses 3872 - 4614)
(in tamil script, unicode format)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (3872 - 4614)




Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி பாடல்கள் (3872 - 4614)

    உள்ளுறை
    39 பொதுநடம் புரிகின்ற பொருள் 20 3872 - 3891
    40. ஆனந்தானுபவம் 12 3892 - 3903
    41. பரசிவ நிலை 10 3904 - 3913
    42. பேரானந்தப் பெருநிலை 10 3914 - 3923
    43. திருவடி நிலை 10 3924 - 3933
    44. காட்சிக் களிப்பு 10 3934 - 3943
    45. கண்கொளாக் காட்சி 10 3944 - 3953
    46. இறை திருக்காட்சி 30 3954 - 3983
    47. உளம் புகுந்த திறம் வியத்தல் 10 3984 - 3993
    48. வரம்பில் வியப்பு 10 3994 - 4003
    49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல் 10 4004 - 4013
    50. ஆண்டருளிய அருமையை வியத்தல் 10 4014 - 4023
    51. இறைவனை ஏத்தும் இன்பம் 10 4024 - 4033
    52. பாமாலை ஏற்றல் 12 4034 - 4045
    53. உத்தர ஞான சிதம்பரமாலை 11 4046 - 4056
    54. செய்பணி வினவல் 10 4057 - 4068
    55. ஆன்ம தரிசனம் 10 4069 - 4078
    56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் 11 4079 - 4089
    57. அருள் விளக்க மாலை 100 4090 - 4189
    58. நற்றாய் கூறல் 104190 - 4199
    59. பாங்கி தலைவி பெற்றி கூறல் 10 4200 - 4209
    60. தலைவி வருந்தல் 24 4210 - 4233
    61. ஞான சிதம்பர வெண்பா 9 4234 - 4242
    62. சிவபதி விளக்கம் 104243 - 4252
    63. ஞானோபதேசம் 104253 - 4262
    64. ஆரமுதப்பேறு 134263 - 4275
    65. உபதேச வினா 114276 - 4286<
    66. நெஞ்சொடு நேர்தல் 104287 - 4296
    67. அஞ்சாதே நெஞ்சே 234297 - 4319
    68. ஆடிய பாதம் 174320 - 4336
    69. அபயம் அபயம் 164337 - 4352
    70. அம்பலவாணர் வருகை 1054353 - 4457
    71. அம்பலவாணர் ஆடவருகை124458 - 4469
    72. அம்பலவாணர் அனையவருகை 124470 - 4481
    73. வருவார் அழைத்துவாடி 54482 - 4486
    74. என்ன புண்ணியம் செய்தேனோ 94487 - 4495
    75. இவர்க்கும் எனக்கும் 54496 - 4500
    76. இது நல்ல தருணம் 64501 - 4506
    77. ஆனந்தப் பரிவு 114507 - 4517
    78. ஞான மருந்து 344518 - 4551
    79. சிவசிவ ஜோதி 334552 - 4584
    80. ஜோதியுள் ஜோதி 304585 - 4614
அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி

39. பொதுநடம் புரிகின்ற பொருள்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3872 அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
அளித்தெனை வளர்த்திட அருளாம்
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
தெய்வமே சத்தியச் சிவமே
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
ஏற்றிய இன்பமே எல்லாப்
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
1
3873 சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
கடவுளே கருணையங் கடலே
சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
தனக்கறி வித்ததோர் தயையே
புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
2
3874 கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
நித்திய நிற்குண(258) நிறைவே
அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
அருட்பெருங் கடல்எனும் அரசே
புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே.
3
(258). நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
3875 தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
சத்திய சாத்தியக் கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
நல்கிய ஞானபோ னகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
4
3876 அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
அறிவென அறிகின்ற அறிவே
சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
துரியநல் நிலத்திலே துலங்கும்
சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
செல்வமே சித்தெலாம் புரியும்
பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
5
(259). சற்புதர் - நல்லறிவுடையவர்.
3877 தத்துவ பதியே தத்துவம் கடந்த
தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
பெறல்அரி தாகிய(260) பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே.
6
(260). பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
3878 மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
விளைவெலாம் காட்டிமெய் வேத
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
நோக்கமே ஆக்கமும் திறலும்
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
நாயகக் கருணைநற் றாயே
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
7
3879 அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
அரும்பெருஞ் சோதியே சுடரே
மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
மருந்தெலாம் பொருந்திய மணியே
உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
8
3880 பரம்பர நிறைவே பராபர வெளியே
பரமசிற் சுகந்தரும் பதியே
வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
வயங்கிய பெருஞ்சுடர் மணியே
கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
கருதிய கருத்துறு களிப்பே
புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
9
3881 வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
கருணைவான் அமுதத்தெண் கடலே(261)
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
ஆனந்த மாம்அனு பவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
10
(261). தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
3882 தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
தரவல்ல சம்புவே சமயப்
புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
புண்ணியர் நண்ணிய புகலே
வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
11
3883 மூவிரு முடிபின் முடிந்ததோர்(262) முடிபே
முடிபெலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
சத்தியத் தனிநடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே
விளைவெலாம் தருகின்ற வெளியே
பூவியல் அளித்த புனிதசற் குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே
12
(262). முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
3884 வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
போனது மாய்ஒளிர் புலமே
ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
விருநிலத் தியல்அருள் ஒளியால்
பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
13
3885 அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
அருள்வடி வெடுத்தெழுந் தருளி
நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
நிலைஎலாம் அளித்தமா நிதியே
மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
வயங்கநல் வரந்தந்த வாழ்வே
பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
14
3886 என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்புடை அரசே அப்பனே என்றன்
அம்மையே அருட்பெருஞ் சோதி
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
என்னுயிர் நாதனே என்னைப்
பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
15
3887 சத்திய பதியே சத்திய நிதியே
சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே
நித்திய வாழ்வருள் நெறியே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே
சித்தியிற் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
16
3888 சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
சிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
17
3889 கலைவளர் கலையே கலையினுட் கலையே
கலைஎலாம் தரும்ஒரு கருவே
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
நித்திய வானமே ஞான
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
மாபலம் தருகின்ற வாழ்வே
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
பொதுநடம் புரிகின்ற பொருளே.
18
3890 மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
கருணையே கரிசிலாக் களிப்பே
ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
அற்புதக் காட்சியே எனது
பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
19
3891 காரண அருவே காரிய உருவே
காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும்
அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே(263) நாரண வலமே
நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளிசெய் பூரண சிவமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
20
(263). தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.

40. ஆனந்தானுபவம்

நேரிசை வெண்பா
3892 கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற(264)
வாணா நினக்கடிமை வாய்த்து.
1
(264). ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
3893 காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று.
2
3894 மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
தாய்க்குத் தனிஇயற்கை தான்.
3
3895 கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
எந்தாய் கருணை இது.
4
3896 கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான்.
5
3897 பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.
6
3898 எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
7
3899 கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
கண்டான்(265) களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
8
(265). கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
3900 கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம்(266) பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை.
9
(266). வரம் - படிவேறுபாடு. ஆ. பா.
3901 தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத மலர்.
10
3902 திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர்.
11
3903 என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாதமலர்.
12

41. பரசிவ நிலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3904. அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
1
3905 எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
2
3906 தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
3
3907 என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
4
3908 எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
5
3909 இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
6
267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.
3910 சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
7
3911 தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
8
3912 எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
9
3913 சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
10

42. பேரானந்தப் பெருநிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3914. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
1
3915 திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
உவந்தர சளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
2
3916 துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
சோதியுட் சோதியே எனது
மதிவளர் மருந்தே மந்திர மணியே
மன்னிய பெருங்குண மலையே
கதிதரு துரியத் தனிவெளி நடுவே
கலந்தர சாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
3
3917 சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
செல்வமே என்பெருஞ் சிறப்பே
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
திருந்தர சளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
4
3918 உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
மந்திரத் தாற்பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
நிறைந்தர சாள்கின்ற நிதியே
பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
5
3919 மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மெய்யறி வானந்த விளக்கே
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
கதிர்நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
பால்அர சாள்கின்ற அரசே
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
6 <
3920 இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
இன்பமே என்னுடை அன்பே
திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
வெளிஅர சாள்கின்ற பதியே
பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
7
3921 அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
அரும்பெருஞ் சோதியே எனது
பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
8
3922 வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மாபெருங் கருணைஎம் பதியே
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
உலகமும் நிறைந்தபே ரொளியே
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
வயங்கும்ஓர் வெளிநடு மணியே
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
9
3923 தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
நண்புகொண் டருளிய நண்பே
வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
வயங்கிய தனிநிலை வாழ்வே
பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
10

43. திருவடி நிலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3924. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
தென்பர்வான் திருவடி நிலையே.
1
3925 தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே.
2
3926 அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே.
3
3927 இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
தெரிந்தனன் திருவடி நிலையே.
4
3928 பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
தழுவினன் திருவடி நிலையே.
5
3929 மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
நவின்றனர் திருவடி நிலையே.
6
3930 தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
மன்னிஎங் கணும்இரு பாற்குத்
தகையுறு முதலா வணங்கடை யாகத்
தயங்கமற் றதுவது கருவிச்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
என்பரால் திருவடி நிலையே.
7
3931 மன்றஓங் கியமா மாயையின் பேத
வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திருவடி நிலையே.
8
3932 பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
பெரியஓங் காரமே முதலா
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
என்றவற் றவண்அவண் இசைந்த
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
மன்அதி காரம்ஐந் தியற்றத்
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
என்பரால் திருவடி நிலையே.
9
3933 பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே.
10

44. காட்சிக் களிப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3934. அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
1
3935 பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
2
3936 உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
3
3937 உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கி னானை
வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
இறவானைப் பிறவானை இயற்கை யானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
4
3938 அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
5
3939 செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
கையானை என்னைஎன்றும் கையா தானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
6
3940 மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
மந்திரங்க ளானானை வான நாட்டு
விருந்தானை உறவானை நண்பி னானை
மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
7
3941 ஆன்றானை அறிவானை அழிவி லானை
அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை
முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
8
3942 தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை(268) ஆய்ந்தவர்தம் இதயத் தானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
9
(268). ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
3943 நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
நின்றானைப் பொன்றாத நிலையி னானை
நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
என்றானை என்றும்உள இயற்கை யானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
10

45. கண்கொளாக் காட்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3944. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
1
3945 விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்(269)
தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானேநா னாகி என்றும்
தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என்உயிருக் கின்பா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
2
(269). விரைத்தானை மெய்யே என்னை - பி. இரா.பதிப்பு.
3946 நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
3
3947 சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
காற்றானை வெளியானைக் கனலா னானைக்
கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
4
(270). சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.
3948 சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
5
3949 முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
முளைத்தானை மூவாத முதலா னானைக்
களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பி லானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
6
3950 புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு ளானை
அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலா னானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
7
3951 தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண்காண விளங்கி னானை
மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
8
3952 தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
தானேதா னானானைத் தமிய னேனைக்
குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
9
3953 உடையானை அருட்சோதி உருவி னானை
ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
இடையானை என்னாசை எல்லாந் தந்த
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
10

46. இறை திருக்காட்சி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3954. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அரசை
மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
வள்ளலை மாணிக்க மணியைப்
பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
தீபத்தைக் கண்டுகொண் டேனே.
1
3955 துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
என்பொலா மணியை என்சிகா மணியை
என்னிரு கண்ணுள்மா மணியை
அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
எந்தையைக் கண்டுகொண் டேனே.
2
3956 சிதத்திலே(271) ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
பரம்பர வாழ்வைஎம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
மருந்தைமா மந்திரந் தன்னை
இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
இறைவனைக் கண்டுகொண் டேனே.
4
(271). 271. சிதம் - ஞானம்
3957 உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
பொருளைஎன் புண்ணியப் பயனைக்
கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
குருவைஎண் குணப்பெருங் குன்றை
மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
4
3958 புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
பொற்சபை அப்பனை வேதம்
சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
ஜோதியைச் சோதியா தென்னை
மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
மன்னிய பதியைஎன் வாழ்வை
எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
இறைவனைக் கண்டுகொண் டேனே.
5
3959 பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
பதியுமாம் ஒருபசு பதியை
நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
நல்கிய கருணைநா யகனை
எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
இறைவனை மறைமுடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
6
3960 பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
சாமியைத் தயாநிதி தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான
வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
ஒருவனைக் கண்டுகொண் டேனே.
7
3961 ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
8
3962 என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
9
3963 புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே.
10
3964 ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
உடையஎன் ஒருபெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
தலைவனைக் கண்டுகொண் டேனே.
11
3965 துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
அன்புளே கலந்த தந்தையை என்றன்
ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
இனிதமர்ந் தருளிய இறையை
வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
வள்ளலைக் கண்டுகொண் டேனே.
12
3966 நனவினும் எனது கனவினும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
13
3967 கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
ஆவியை ஆவியுட் கலந்த
பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
பேசுதற் கரும்பெரும் பேற்றை
விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
விளக்கினைக் கண்டுகொண் டேனே.
14
3968 களங்கொளுங் கடையேன் களங்கெலாந் தவிர்த்துக்
களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
துள்ளகத் தூறும்இன் அமுதை
வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
குருவையான் கண்டுகொண் டேனே.
15
3969 சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண் டேனே.
16
3970 ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
ஆகம முடிஅமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக்
காரிய காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச்
சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
பொருளினைக் கண்டுகொண் டேனே.
17
3971 சுத்தவே தாந்த பிரமரா சியத்தைச்
சுத்தசித் தாந்தரா சியத்தைத்
தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
சமரச சத்தியப் பொருளைச்
சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
தெளிந்தபே ரானந்தத் தெளிவை
வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
மெய்மையைக் கண்டுகொண் டேனே.
18
3972 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நீதியைக் கண்டுகொண் டேனே.
19
3973 அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
20
3974 சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
சமரச சத்திய வெளியைச்
சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
21
3975 அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
அறிந்திடப் படாதமெய் அறிவைப்
படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
கடைக்கணித் தருளிய கருணைக்
கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே.
22
3976 பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
நல்கிய நண்பைநன் னாத
இயமுற வெனது குளநடு நடஞ்செய்
எந்தையை என்னுயிர்க் குயிரைப்
புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
பொற்புறக் கண்டுகொண் டேனே.
23
3977 கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
ககனத்தைக் காற்றினை அமுதை
நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
நின்மல நிற்குண நிறைவை
மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
வரவுபோக் கற்றசின் மயத்தை
அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
அன்பினிற் கண்டுகொண் டேனே.
24
3978 மும்மையை எல்லாம் உடையபே ரரசை
முழுதொருங் குணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
வியப்புற அளித்தமெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என்பே
ரன்பனைக் கண்டுகொண் டேனே.
25
3979 கருத்தனை எனது கண்அனை யவனைக்
கருணையா ரமுதெனக் களித்த
ஒருத்தனை என்னை உடையநா யகனை
உண்மைவே தாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
றம்பலத் தருள்நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான
நிலையனைக் கண்டுகொண் டேனே.
26
3980 வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
விளைவையும் விளைக்கவல் லவனை
அத்தெலாங்(272) காட்டும் அரும்பெறல் மணியை
ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
சபைத்தனித் தலைவனைத் தவனைச்
சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
27
(272). அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.
3981 உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே.
28
3982 புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
29
3983 பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
பரமனை என்னுளே பழுத்த
கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
தந்தையைக் கண்டுகொண் டேனே.
30

47. உளம் புகுந்த திறம் வியத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3984. வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
1
3985 படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
2
3986 உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
3
3987 தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
4
3988 இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
5
3989 உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
6
3990 மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஒரு வெளியில்
மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
7
3991 சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
8
3992 பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
உற்றறிதற்(273) கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்(274) அரசே
கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
9
(273). உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
(274). பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
3993 கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
10

48. வரம்பில் வியப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3994. பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
அவன்தனை மறுப்பவர் யாரே.
1
3995 மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
மன்னுருத் திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
குறுபெருந் தொழில்பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
அவன்தனை மறுப்பவர் யாரே.
2
3996 தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
ஒருதனிப் பெரும்பதி உவந்தே
புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
பொறுத்தருட் பூரண வடிவாய்
என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
எந்தையைத் தடுப்பவர் யாரே.
3
3997 பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
பாலதோ பால்உறா அதுவோ
ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல்வகை யாதோ எனமறை முடிகள்
விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
4
3998 வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
வருபர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
பராபர உணர்ச்சியும் பற்றா
உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
5
3999 படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
பரம்பர ஒளிஎலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
கடவுளைத் தடுப்பவர் யாரே.
6
4000 அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
பேசநின் றோங்கிய பெரியோன்
களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
கருணையா ரமுதளித் துளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
வள்ளலைத் தடுப்பவர் யாரே.
7
4001 உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
உளவுயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
கருத்தெலாம் இனிதுதந் தருளித்
தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
தந்தையைத் தடுப்பவர் யாரே.
8
4002 அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
தையகோ ஐயகோ அறிவின்
மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
திருவுளம் தடுப்பவர் யாரே.
9
4003 கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
கொள்கையாய்க் கொள்கையோ டளவா
அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
வண்மையைத் தடுப்பவர் யாரே.
10

49. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4004. அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
1
4005 திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
2
4006 பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
3
4007 மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணி