tiruvarutpA of rAmalingka aTikaL
tirumuRai -II - part 3 (verses 1544-1958)
(in tamil script, unicode format )

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
இரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி பாடல்கள் (1544 - 1958)




This etext file has the tiruvarutpA verses in tamil script in unicode format
Author: Ramalinga adigal (aka vaLLaLar)
Etext input: Mr. Sivakumar of Singapore. (www.vallalar.org) . Our sincere thanks go to Mr. Sivakumar for allowing us to present the TSCII format version of tiruvarutpA verses as part of Project Madurai collections.
Proof-reading of TSCII version: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India .

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா

திருமுறைகள் வெளியீடு அட்டவணை


இரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி
பாடல்கள் (1544-1958)

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இ ரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை


80. திரு உலா வியப்பு

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1544 வெள்ளச் சடையார் விடையார்செவ்
வேலார் நூலார் மேலார்தம்
உள்ளத் துறைவார் நிறைவார்நல்
ஒற்றித் தியாகப் பெருமானர்
வள்ளற் குணத்தார் திருப்பவனி
வந்தார் என்றார் அம்மொழியை
விள்ளற் குள்ளே மனம்என்னை
விட்டங் கவர்முன் சென்றதுவே.
1
1545. அந்தார் அணியும் செஞ்சடையார்
அடையார் புரமூன் றவைஅனலின்
உந்தா நின்ற வெண்ணகையார்
ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
வந்தார் என்றார் அந்தோநான்
மகிழ்ந்து காண வருமுன்னம்
மந்தா கினிபோல் மனம்என்னை
வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
2
1546. பொன்னேர் சடையார் கீள்உடையார்
பூவை தனைஓர் புடைஉடையார்
தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த்
திகழுந் தியாகர் திருப்பவனி
இன்னே வந்தார் என்றார்நான்
எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
முன்னே மனம்என் தனைவிடுத்து
முந்தி அவர்முன் சென்றதுவே.
3
1547. காண இனியார் என்இரண்டு
கண்கள் அனையார் கடல்விடத்தை
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல்
ஒற்றித் தியாகப் பெருமானார்
மாண வீதி வருகின்றார்
என்றார் காண வருமுன்நான்
நாண எனைவிட் டென்மனந்தான்
நயந்தங் கவர்முன் சென்றதுவே.
4
1548. செழுந்தெண் கடற்றெள் அமுதனையார்
தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார்
கோலப் பவனி என்றார்நான்
எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங்
கேகு முன்னர் எனைவிடுத்தே
அழுந்து நெஞ்சம் விழுந்துகூத்
தாடி அவர்முன் சென்றதுவே.
5
1549. சால மாலும் மேலும்இடந்
தாலும் அறியாத் தழல்உருவார்
சேலும் புனலும் சூழ்ஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
பாலுந் தேனுங் கலந்ததெனப்
பவனி வந்தார் என்றனர்யான்
மேலுங் கேட்கு முன்னமனம்
விட்டங் கவர்முன் சென்றதுவே.
6
1550. பின்தாழ் சடையார் தியாகர்எனப்
பேசும் அருமைப் பெருமானார்
மன்றார் நடத்தார் ஒற்றிதனில்
வந்தார் பவனி என்றார்நான்
நன்றாத் துகிலைத் திருத்துமுனம்
நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
மென்தார் வாங்க மனம்என்னை
விட்டங் கவர்முன் சென்றதுவே.
7
1551. கண்ணார் நுதலார் மணிகண்டர்
கனக வரையாங் கனசிலையார்
பெண்ணார் பாகர் தியாகர்எனப்
பேசும் அருமைப் பெருமானார்
தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில்
சார்ந்தார் பவனி என்றனர்நான்
நண்ணா முன்னம் என்மனந்தான்
நாடி அவர்முன் சென்றதுவே.
8
1552. ஈமப் புறங்காட் டெரியாடும்
எழிலார் தில்லை இனிதமர்வார்
சேமப் புலவர் தொழும்ஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
வாமப் பாவை யொடும்பவனி
வந்தார் என்றார் அதுகாண்பான்
காமப் பறவை போல்என்மனம்
கடுகி அவர்முன் சென்றதுவே.
9
1553. சூலப் படையார் பூதங்கள்
சுற்றும் படையார் துதிப்பவர்தம்
சீலப் பதியார் திருஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
நீலக் களத்தார் திருப்பவனி
நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
சாலப் பசித்தார் போல்மனந்தான்
தாவி அவர்முன் சென்றதுவே.
10
Back

81. சல்லாப வியன்மொழி

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1554. காது நடந்த கண்மடவாள்
கடிமா மனைக்குக் கால்வருந்தத்
தூது நடந்த பெரியவர்சிற்
சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
வாது நடந்தான் செய்கின்றோர்
மாது நடந்து வாவென்றார்
போது நடந்த தென்றேனெப்
போது நடந்த தென்றாரே.
1
1555. கச்சை யிடுவார் படவரவைக்
கண்மூன் றுடையார் வாமத்திற்
பச்சை யிடுவா ரொற்றியுள்ளார்
பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
இச்சை யிடுவா ருண்டியென்றா
ருண்டே னென்றே னெனக்கின்று
பிச்சை யிடுவா யென்றார்நான்
பிச்சை யடுவே னென்றேனே.
2
1556. கருதற் கரியார் கரியார்முன்
காணக் கிடையாக் கழலடியார்
மருதத் துறைவார் திருவொற்றி
வாண ரின்றென் மனைக்குற்றார்
தருதற் கென்பா லின்றுவந்தீ
ரென்றே னதுநீ தானென்றார்
வருதற் குரியீர் வாருமென்றேன்
வந்தே னென்று மறைந்தாரே.
3
1557. கல்லை வளைக்கும் பெருமானார்
கழிசூ ழொற்றிக் கடிநகரார்
எல்லை வளைக்குந் தில்லையுள்ளா
ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
அல்லை வளைக்குங் குழலன்ன
மன்பி னுதவா விடிலோபம்
இல்லை வளைக்கு மென்றார்நா
னில்லை வளைக்கு மென்றேனே.
4
1558. வெற்றி யிருந்த மழுப்படையார்
விடையார் மேரு வில்லுடையார்
பெற்றி யிருந்த மனத்தர்தமுட்
பிறங்குந் தியாகப் பெருமானார்
சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ்
சொல்லி நகைக்க வருகணைந்தார்
ஒற்றி யிருமென் றுரைத்தேனோ
னொற்றி யிருந்தே னென்றாரே.
5
1559. விண்டங் கமரர் துயர்தவிர்க்கும்
வேற்கை மகனை விரும்பிநின்றோர்
வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி
வதிவா ரென்றன் மனையடைந்தார்
தண்டங் கழற்கு நிகரானீர்
தண்டங் கழற்கென் றேன்மொழியாற்
கண்டங் கறுத்தா யென்றார்நீர்
கண்டங் கறுத்தீ ரென்றேனே.
6
1560. விற்கண் டாத நுதன்மடவாள்
வேட்ட நடன வித்தகனார்
சொற்கண் டாத புகழொற்றித்
தூய ரின்றென் மனைபுகுந்தார்
நிற்கண் டார்கண் மயலடைவா
ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
கற்கண் டாமென் றுரைத்தேனான்
கற்கண் டாமென் றுரைத்தாரே.
7
1561. விடையார் கொடிமே லுயர்த்தருளும்
வேத கீதப் பெருமானார்
உடையா ரொற்றி யூரமர்ந்தா
ருவந்தென் மனையி லின்றடைந்தார்
இடையா வைய மென்றார்நா
னிடைதா னைய மென்றேனாற்
கடையா ரளியா ரென்றார்கட்
கடையா ரளியா ரென்றேனே.
8
1562. நாடொன் றியசீர்த் திருவொற்றி
நகரத் தமர்ந்த நாயகனார்
ஈடொன் றில்லா ரென்மனையுற்
றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
மாடொன் றெங்கே யென்றேனுன்
மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
காடொன் றுடையீ ரென்றேன்செங்
காடொன் றுடையே னென்றாரே.
9
1563. சொல்லா லியன்ற தொடைபுனைவார்
தூயா ரொற்றித் தொன்னகரார்
அல்லா லியன்ற மனத்தார்பா
லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
வல்லா லியன்ற முலையென்றார்
வல்லார் நீரென் றேனுன்சொற்
கல்லா லியன்ற தென்றார்முன்
கல்லா லியன்ற தென்றேனே.
10
Back

82. இன்பக் கிளவி

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1564. தில்லை வளத்தார் அம்பலத்தார்
திருவேட் களத்தார் செவ்வணத்தார்
கல்லை வளைத்தார் என்றன்மனக்
கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்தமை
எழிலார் ஒற்றி எனும்நகரில்
ஒல்லை வளைத்துக் கண்டேன்நான்
ஒன்றும் உரையா திருந்தாரே.
1
1565. இருந்தார் திருவா ரூரகத்தில்
எண்ணாக் கொடியார் இதயத்தில்
பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார்
புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
விருந்தார் திருந்தார் புரமுன்தீ
விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
தருந்தார் காம மருந்தார்இத்
தரணி இடத்தே தருவாரே.
2
1566. தருவார் தருவார் செல்வமுதல்
தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
மருவார் தமது மனமருவார்
மருவார் கொன்றை மலர்புனைவார்
திருவார் புயனும் மலரோனும்
தேடும் தியாகப் பெருமானார்
வருவார் வருவார் எனநின்று
வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
3
1567. வந்தார் அல்லர் மாதேநீ
வருந்தேல் என்று மார்பிலங்கும்
தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத்
தந்தார் அல்லர் தயை உடையார்
சந்தார் சோலை வளர்ஒற்றித்
தலத்தார் தியாகப் பெருமானார்
பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும்
பரிசே தொன்றும் பார்த்திலமே.
4
1568. இலமே செறித்தார் தாயர்இனி
என்செய் குவதென் றிருந்தேற்கு
நலமே தருவார் போல்வந்தென்
நலமே கொண்டு நழுவினர்காண்
உலமே அனைய திருத்தோளார்
ஒற்றித் தியாகப் பெருமானார்
வலமே வலம்என்அ வலம்அவலம்
மாதே இனிஎன் வழுத்துவதே.
5
1569. வழுத்தார் புரத்தை எரித்தார்நல்
வலத்தார் நடன மலரடியார்
செழுத்தார் மார்பர் திருஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
கழுத்தார் விடத்தார் தமதழகைக்
கண்டு கனிந்து பெருங்காமம்
பழுத்தார் தம்மைக் கலந்திடநற்
பதத்தார் என்றும் பார்த்திலரே.
6
1570. பாரா திருந்தார் தமதுமுகம்
பார்த்து வருந்தும் பாவைதனைச்
சேரா திருந்தார் திருஒற்றித்
திகழுந் தியாகப் பெருமானார்
வாரா திருந்தார் இன்னும்இவள்
வருத்தங் கேட்டும் மாலைதனைத்
தாரா திருந்தார் சலமகளைத்
தாழ்ந்த சடையில் தரித்தாரே.
7
1571. சடையில் தரித்தார் ஒருத்திதனைத்
தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
புடையில் தரித்தார் மகளேநீ
போனால் எங்கே தரிப்பாரோ
கடையில் தரித்த விடம்அதனைக்
களத்தில் தரித்தார் கரித்தோலை
இடையில் தரித்தார் ஒற்றியூர்
இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
8
1572. உளத்தே இருந்தார் திருஒற்றி
யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
களத்தே வதிந்தார் அவர்என்றன்
கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
இளத்தே மொழியாய் ஆதலினால்
இமையேன் இமைத்தல் இயல்பன்றே
வளத்தே மனத்தும் புகுகின்றார்
வருந்தேன் சற்றும் வருந்தேனே.
9
1573. வருந்தேன் மகளீர் எனைஒவ்வார்
வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
தருந்தேன் அமுதம் உண்டென்றும்
சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
திருந்தேன் மணாளர் எனைப்பிரியார்
என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
மருந்தேன் மையற் பெருநோயை
மறந்தேன் அவரை மறந்திலனே.
10
Back

83. இன்பப் புகழ்ச்சி

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1574. மாடொன் றுடையார் உணவின்றி
மண்ணுன் டதுகாண் மலரோன்றன்
ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார்
ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
காடொன் றுடையார் கண்டமட்டுங்
கறுத்தார் பூத கணத்தோடும்
ஈடொன் றுடையார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே.
1
1575. . பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார்
பேயோ டாடிப் பவுரிகொண்டார்
பத்தர் தமக்குப் பணிசெய்வார்
பணியே பணியாப் பரிவுற்றார்
சித்தர் திருவாழ் ஒற்றியினார்
தியாகர் என்றுன் கலைகவர்ந்த
எத்தர் அன்றோ மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 2
1576. . கடுத்தாழ் களத்தார் கரித்தோலார்
கண்ணால் மதனைக் கரிசெய்தார்
உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை
ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித்
துதிக்க ஒருகால் அம்பலத்தில்
எடுத்தார் அன்றோ மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 3
1577.. உரப்பார் மிசையில் பூச்சூட
ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
கரப்பார் மலர்தூ வியமதனைக்
கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க
வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
இரப்பார் அன்றோ மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 4
1578. . கருதும் அவரை வெளிக்கிழுப்பார்
காணா தெல்லாங் காட்டிநிற்பார்
மருதில் உறைவார் ஒற்றிதனில்
வதிவார் புரத்தை மலைவில்லால்
பொருது முடிப்பார் போல்நகைப்பார்
பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
எருதில் வருவார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 5
1579. . ஆக்கம் இல்லார் வறுமையிலார்
அருவம் இல்லார் உருவமிலார்
தூக்கம் இல்லார் சுகம்இல்லார்
துன்பம் இல்லார் தோன்றுமல
வீக்கம் இல்லார் குடும்பமது
விருத்தி யாக வேண்டுமெனும்
ஏக்கம் இல்லார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 6
1580.. ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார்
உறவொன் றில்லார் பகைஇல்லார்
பேரும் இல்லார் எவ்விடத்தும்
பிறவார் இறவார் பேச்சில்லார்
நேரும் இல்லார் தாய்தந்தை
நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
யாரும் இல்லார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 7
1581. . தங்கு மருப்பார் கண்மணியைத்
தரிப்பார் என்பின் தார்புனைவார்
துங்கும் அருட்கார் முகில்அனையார்
சொல்லும் நமது சொற்கேட்டே
இங்கும் இருப்பார் அங்கிருப்பார்
எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
எங்கும் இருப்பார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 8
1582. . துத்திப் படத்தார் சடைத்தலையார்
தொலையாப் பலிதேர் தொன்மையினார்
முத்திக் குடையார் மண்எடுப்பார்
மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
புத்திக் குரிய பத்தர்கள்தம்
பொருளை உடலை யாவையுமே
எத்திப் பறிப்பார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 9
1583. மாறித் திரிவார் மனம்அடையார்
வணங்கும் அடியார் மனந்தோறும்
வீறித் திரிவார் வெறுவெளியின்
மேவா நிற்பார் விறகுவிலை
கூறித் திரிவார் குதிரையின்மேற்
கொள்வார் பசுவிற் கோல்வளையோ
டேறித் திரிவார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே. 10
Back

84. திரு உலாத் திறம்

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1584. தேனார் கமலத் தடஞ்சூழும்
திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
வானார் அமரர் முனிவர்தொழ
மண்ணோர் வணங்க வரும்பவனி
தானார் வங்கொண் டகமலரத்
தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
கானார் அலங்கற் பெண்ணேநான்
கண்கள் உறக்கங் கொள்ளேனே.
1
1585. திருமால் வணங்கும் ஒற்றிநகர்
செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
கருமால் அகற்றுந் தொண்டர்குழாம்
கண்டு களிக்க வரும்பவனி
மருமாண் புடைய மனமகிழ்ந்து
மலர்க்கை கூப்பிக் கண்டலது
பெருமான் வடுக்கண் பெண்ணேநான்
பெற்றா ளோடும் பேசேனே.
2
1586. சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர்
சேருஞ் செல்வத் தியாகர்அவர்
ஆல்ஆர் களமேல் விளங்குமுகம்
அழகு ததும்ப வரும்பவனி
நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை
நாடிப் புகுந்து கண்டலது
பால்ஆர் குதலைப் பெண்ணேநான்
பாயிற் படுக்கை பொருந்தேனே.
3
1587. செல்வந் துறழும் பொழில்ஒற்றித்
தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
வில்வந் திகழும் செஞ்சடைமின்
விழுங்கி விளங்க வரும்பவனி
சொல்வந் தோங்கக் கண்டுநின்று
தொழுது துதித்த பின்அலது
அல்வந் தளகப் பெண்ணேநான்
அவிழ்ந்த குழலும் முடியேனே.
4
1588. சேவார் கொடியார் ஒற்றிநகர்
திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
பூவார் கொன்றைப் புயங்கள்மனம்
புணரப் புணர வரும்பவனி
ஓவாக் களிப்போ டகங்குளிர
உடலங் குளிரக் கண்டலது
பாவார் குதலைப் பெண்ணேநான்
பரிந்து நீரும் பருகேனே.
5
1589. சிற்றம் பலத்தார் ஒற்றிநகர்
திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
உற்றங் குவந்தோர் வினைகளெலாம்
ஓட நாடி வரும்பவனி
சுற்றுங் கண்கள் களிகூரத்
தொழுது கண்ட பின்அலது
முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான்
முடிக்கோர் மலரும் முடியேனே.
6
1590. சிந்தைக் கினியார் ஒற்றிநகர்
திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
சந்தத் தடந்தோள் கண்டவர்கள்
தம்மை விழுங்க வரும்பவனி
முந்தப் புகுந்து புளகமுடன்
மூடிக் குளிரக் கண்டலது
கந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான்
கண்ணீர் ஒழியக் காணேனே.
7
1591. தென்னஞ் சோலை வளர்ஒற்றி
யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப்
பிறங்கா நிற்க வரும்பவனி
மன்னுங் கரங்கள் தலைகுவித்து
வணங்கி வாழ்த்திக் கண்டலது
துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான்
சோறெள் ளளவும் உண்ணேனே.
8
1592. சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி
யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
வந்தார் கண்டார் அவர்மனத்தை
வாங்கிப் போக வரும்பவனி
நந்தா மகிழ்வு தலைசிறப்ப
நாடி ஓடிக் கண்டலது
பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான்
பாடல் ஆடல் பயிலேனே.
9
1593. செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச்
சேருஞ் செல்வத் தியாகர்அவர்
மிக்கற் புதவாண் முகத்தினகை
விளங்க விரும்பி வரும்பவனி
மக்கட் பிறவி எடுத்தபயன்
வசிக்க வணங்கிக் கண்டலது
நக்கற் கியைந்த பெண்ணேநான்
ஞாலத் தெவையும் நயவேனே.
10
Back

85. வியப்பு மொழி

நற்றாய் நயத்தல் - திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1594. மாதர் மணியே மகளேநீ
வாய்த்த தவந்தான் யாதறியேன்
வேதர் அனந்தர் மால்அனந்தர்
மேவி வணங்கக் காண்பரியார்
நாதர் நடன நாயகனார்
நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
கோதர் அறியாத் தியாகர்தமைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
1
1595. திருவில் தோன்றும் மகளேநீ
செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார்
மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர்
காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
2
1596. என்னா ருயிர்போல் மகளேநீ
என்ன தவந்தான் இயற்றினையோ
பொன்னார் புயனும் மலரோனும்
போற்றி வணங்கும் பொற்பதத்தார்
தென்னார் ஒற்றித் திருநகரார்
தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொன்னார் சூலப் படையவரைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
3
1597. சேலை நிகர்கண் மகளேநீ
செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை
வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார்
வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
4
1598. தேனேர் குதலை மகளேநீ
செய்த தவந்தான் எத்தவமோ
மானேர் கரத்தார் மழவிடைமேல்
வருவார் மருவார் கொன்றையினார்
பானேர் நீற்றர் பசுபதியார்
பவள வண்ணர் பல்சடைமேல்
கோனேர் பிறையார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
5
1599. வில்லார் நுதலாய் மகளேநீ
மேலை நாட்செய் தவம்எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார்
காமன் எரியக் கண்விழித்தார்
வில்லார் விசையற் கருள்புரிந்தார்
விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
கொல்லா நெறியார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
6
1600. அஞ்சொற் கிளியே மகளேநீ
அரிய தவமே தாற்றினையோ
வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை
மேவார் பூவார் கொன்றையினார்
கஞ்சற் கரியார் திருஒற்றிக்
காவல் உடையார் இன்மொழியால்
கொஞ்சத் தருவார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
7
1601. பூவாய் வாட்கண் மகளேநீ
புரிந்த தவந்தான் எத்தவமோ
சேவாய் விடங்கப் பெருமானார்
திருமால் அறியாச் சேவடியார்
காவாய்ந் தோங்கும் திருஒற்றிக்
காவல் உடையார் எவ்வெவர்க்கும்
கோவாய் நின்றார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
8
1602. மலைநேர் முலையாய் மகளேநீ
மதிக்கும் தவமே தாற்றினையோ
தலைநேர் அலங்கல் தாழ்சடையார்
சாதி அறியாச் சங்கரனார்
இலைநேர் தலைமுன் றொளிர்படையார்
எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
குலைநேர் சடையார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
9
1603. மயிலின் இயல்சேர் மகளேநீ
மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
வெயிலின் இயல்சேர் மேனியினார்
வெண்ணீ றுடையார் வெள்விடையார்
பயிலின் மொழியாள் பாங்குடையார்
பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
குயிலிற் குலவி அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
10
Back

86. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1604. உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும்
ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
வள்ளால் என்று மறைதுதிக்க
வருவார் இன்னும் வந்திலரே
எள்ளா திருந்த பெண்களெலாம்
இகழா நின்றார் இனியமொழித்
தெள்ளார் அமுதே என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
1
1605. மாலே றுடைத்தாங் கொடிஉடையார்
வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
பாலே றணிநீற் றழகர்அவர்
பாவி யேனைப் பரிந்திலரே
கோலே றுண்ட மதன்கரும்பைக்
குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
சேலே றுண்கண் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
2
1606. பொய்யர் உளத்துப் புகுந்தறியார்
போத னொடுமால் காண்பரிதாம்
ஐயர் திருவாழ் ஒற்றிநகர்
அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
வைய மடவார் நகைக்கின்றார்
மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
3
1607. நந்திப் பரியார் திருஒற்றி
நாதர் அயன்மால் நாடுகினும்
சந்திப் பரியார் என்அருமைத்
தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
அந்திப் பொழுதோ வந்ததினி
அந்தோ மதியம் அனல்சொரியும்
சிந்திப் புடையேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
4
1608. என்ஆ ருயிர்க்கோர் துணையானார்
என்ஆண் டவனார் என்னுடையார்
பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார்
புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும்எனை
ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
தென்னார் குழலாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
5
1609. மாணி உயிர்காத் தந்தகனை
மறுத்தார் ஒற்றி மாநகரார்
காணி உடையார் உலகுடையார்
கனிவாய் இன்னுங் கலந்திலரே
பேணி வாழாப் பெண்எனவே
பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
சேணின் றிழிந்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
6
1610. வன்சொற் புகலார் ஓர்உயிரும்
வருந்த நினையார் மனமகிழ
இன்சொற் புகல்வார் ஒற்றியுளார்
என்நா யகனார் வந்திலரே
புன்சொற் செவிகள் புகத்துயரம்
பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
தென்சொற் கிளியே என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
7
1611. எட்டிக் கனியும் மாங்கனிபோல்
இனிக்க உரைக்கும் இன்சொலினார்
தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ்
தலைவர் இன்னும் சார்ந்திலரே
மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல்
வழியே பழிசெல் வழிஅன்றோ
தெட்டிற் பொலியும் விழியாய்நான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
8
1612. காலை மலர்ந்த கமலம்போல்
கவின்செய் முகத்தார் கண்நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார்
சோகந் தீர்க்க வந்திலரே
மாலை மலர்ந்த மையல்நோய்
வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
சேலை விழியாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
9
1613 உலகம் உடையார் என்னுடைய
உள்ளம் உடையார் ஒற்றியினார்
அலகில் புகழார் என்தலைவர்
அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர்எலாம்
கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
திலக முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
10
1614. மாலும் அறியான் அயன்அறியான்
மறையும் அறியா வானவர்எக்
காலும் அறியார் ஒற்றிநிற்குங்
கள்வர் அவரைக் கண்டிலனே
கோலும் மகளிர் அலர்ஒன்றோ
கோடா கோடி என்பதல்லால்
சேலுண் விழியாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
11
1615. உந்து மருத்தோ டைம்பூதம்
ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
இந்து மிருத்தும் சடைத்தலையார்
என்பால் இன்னும் எய்திலரே
சந்து பொறுத்து வார்அறியேன்
தமிய ளாகத் தளர்கின்றேன்
சிந்துற் பவத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
12
1616. ஆடல் அழகர் அம்பலத்தார்
ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
ஊடல் அறியார் ஒற்றியினார்
உவகை ஓங்க உற்றிலரே
வாடல் எனவே எனைத்தேற்று
வாரை அறியேன் வாய்ந்தவரைத்
தேடல் அறியேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
13
1617. தொழுது வணங்கும் சுந்தரர்க்குத்
தூது நடந்த சுந்தரனார்
அழுது வணங்கும் அவர்க்குமிக
அருள்ஒற் றியினார் அணைந்திலரே
பொழுது வணங்கும் இருண்மாலைப்
பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
செழுமை விழியாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
14
1618. பாவம் அறுப்பார் பழிஅறுப்பார்
பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
கோவம் அறுப்பார் ஒற்றியில்என்
கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன்ஐங் கணைமாதர்
தூறு தூவத் துயர்கின்றேன்
தேவ மடவாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
15
1619. உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர்
ஒற்றி நகரார் பற்றிலரைச்
செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத்
தேவர் இன்னும் சேர்ந்திலரே
வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல்
வேளம் பதனால் மெலிகின்றேன்
செயற்கை மடவாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
16
r> 1620. ஊனம் அடையார் ஒற்றியினார்
உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
கானம் உடையார் நாடுடையார்
கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம் உடையார் எம்முறவோர்
வாழா மைக்கே வருந்துகின்றார்
தீனம் அடையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
17
1621. மலையை வளைத்தார் மால்விடைமேல்
வந்தார் வந்தென் வளையினொடு
கலையை வளைத்தார் ஒற்றியில்என்
கணவர் என்னைக் கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன்அம்பு
தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
திலக நுதலாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
18
1622. பிரமன் தலையில் பலிகொள்ளும்
பித்தர் அருமைப் பெருமானார்
உரமன் னியசீர் ஒற்றிநகர்
உள்ளார் இன்னும் உற்றிலரே
அரமன் னியவேற் படையன்றோ
அம்மா அயலார் அலர்மொழிதான்
திரமன் னுகிலேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
19
1623 பவள நிறத்தார் திருஒற்றிப்
பதியில் அமர்ந்தார் பரசிவனார்
தவள நிறநீற் றணிஅழகர்
தமியேன் தன்னைச் சார்ந்திலரே
துவளும் இடைதான் இறமுலைகள்
துள்ளா நின்ற தென்னளவோ
திவளும் இழையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
20
1624 வண்டார் கொன்றை வளர்சடையார்
மதிக்க எழுந்த வல்விடத்தை
உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார்
உடையார் என்பால் உற்றிலரே
கண்டார் கண்ட படிபேசக்
கலங்கிப் புலம்பல் அல்லாது
செண்டார் முலையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
21
1625. உணவை இழந்தும் தேவர்எலாம்
உணரா ஒருவர் ஒற்றியில்என்
கணவர் அடியேன் கண்அகலாக்
கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய்முதலோர்
கூறா தெல்லாம் கூறுகின்றார்
திணிகொள் முலையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
22
1626. வாக்குக் கடங்காப் புகழுடையார்
வல்லார் ஒற்றி மாநகரார்
நோக்குக் கடங்கா அழகுடையார்
நோக்கி என்னை அணைந்திலரே
ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன்
உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
தேக்கங் குழலாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
23
1627. தரையிற் கீறிச் சலந்தரனைச்
சாய்த்தார் அந்தச் சக்கரமால்
வரையற் களித்தார் திருஒற்றி
வாணர் இன்னும் வந்திலரே
கரையிற் புணர்ந்த நாரைகளைக்
கண்டேன் கண்ட வுடன்காதல்
திரையிற் புணர்ந்தேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
24
1628. பெற்றம் இவரும் பெருமானார்
பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
உற்ற சிவனார் திருஒற்றி
யூர்வாழ் வுடையார் உற்றிலரே
எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள்
ஏறா மட்டும் ஏறுகின்றாள்
செற்றம் ஒழியாள் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
25
1629. போக முடையார் பெரும்பற்றப்
புலியூர் உடையார் போதசிவ
யோக முடையார் வளர்ஒற்றி
யூர்வாழ் உடையார் உற்றிலரே
சோகம் உடையேன் சிறிதேனும்
துயிலோ அணையா குயில்ஒழியா
தேகம் அயர்ந்தேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
26
1630. தாமப் புயனார் சங்கரனார்
தாயில் இனியார் தற்பரனார்
ஓமப் புகைவான் உறும்ஒற்றி
யூர்வாழ் உடையார் உற்றிலரே
காமப் பயலோ கணைஎடுத்தான்
கண்ட மகளீர் பழிதொடுத்தார்
சேமக் குயிலே என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
27
1631. ஆரூர் உடையார் அம்பலத்தார்
ஆலங் காட்டார் அரசிலியார்
ஊரூர் புகழும் திருஒற்றி
யூரார் இன்னும் உற்றிலரே
வாரூர் முலைகள் இடைவருத்த
மனநொந் தயர்வ தன்றிஇனிச்
சீரூர் அணங்கே என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
28
1632. காலங் கடந்தார் மால்அயன்தன்
கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
ஞாலங் கடந்த திருஒற்றி
நாதர் இன்னும் நண்ணிலரே
சாலங் கடந்த மனந்துணையாய்த்
தனியே நின்று வருந்தல்அல்லால்
சீலங் கடந்தேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
29
1633. சங்கக் குழையார் சடைமுடியார்
சதுரர் மறையின் தலைநடிப்பார்
செங்கட் பணியார் திருஒற்றித்
தேவர் இன்னும் சேர்ந்திலரே
மங்கைப் பருவம் மணமில்லா
மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
திங்கள் முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
30
Back

87. குறி ஆராய்ச்சி

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1634. நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க
நடனம் புரியும் நாயகனார்
அந்தி நிறத்தார் திருஒற்றி
அமர்ந்தார் என்னை அணைவாரோ
புந்தி இலள்என் றணையாரோ
யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
சிந்தை மகிழக் குறமடவாய்
தெரிந்தோர் குறிதான் செப்புவையே.
1
1635. தரும விடையார் சங்கரனார்
தகைசேர் ஒற்றித் தனிநகரார்
ஒருமை அளிப்பார் தியாகர்எனை
உடையார் இன்று வருவாரோ
மருவ நாளை வருவாரோ
வாரா தென்னை மறப்பாரோ
கருமம் அறிந்த குறமடவாய்
கணித்தோர் குறிதான் கண்டுரையே.
2
1636. ஆழி விடையார் அருளுடையார்
அளவிட் டறியா அழகுடையார்
ஊழி வரினும் அழியாத
ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
வாழி என்பால் வருவாரோ
வறியேன் வருந்த வாராரோ
தோழி அனைய குறமடவாய்
துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
3
1637 அணியார் அடியார்க் கயன்முதலாம்
அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
பணியார் ஒற்றிப் பதிஉடையார்
பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
தணியாக் காதல் தவிர்ப்பாரோ
சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
குணியா எழில்சேர் குறமடவாய்
குறிதான் ஒன்றும் கூறுவையே.
4
1638. பொன்னார் புயத்துப் போர்விடையார்
புல்லர் மனத்துட் போகாதார்
ஒன்னார் புரந்தீ உறநகைத்தார்
ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
என்னா யகனார் எனைமருவல்
இன்றோ நாளை யோஅறியேன்
மின்னார் மருங்குல் குறமடவாய்
விரைந்தோர் குறிநீ விளம்புவையே.
5
1639. பாலிற் றெளிந்த திருநீற்றர்
பாவ நாசர் பண்டரங்கர்
ஆலிற் றெளிய நால்வர்களுக்
கருளுந் தெருளர் ஒற்றியினார்
மாலிற் றெளியா நெஞ்சகத்தேன்
மருவிக் கலக்க வருவாரோ
சேலிற் றெளிகட் குறப்பாவாய்
தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
6
1640. நிருத்தம் பயின்றார் நித்தியனார்
நேச மனத்தர் நீலகண்டர்
ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார்
உம்பர் அறியா என்கணவர்
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ
பொருத்தம் பாரா தணைவாரோ
வருத்தந் தவிரக் குறப்பாவாய்
மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
7
1641. கமலன் திருமால் ஆதியர்கள்
கனவி னிடத்துங் காண்பரியார்
விமலர் திருவாழ் ஒற்றியிடை
மேவும் பெருமை வித்தகனார்
அமலர் அவர்தாம் என்மனைக்கின்
றணைகு வாரோ அணையாரோ
தமல மகன்ற குறப்பாவாய்
தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
8
1642. வன்னி இதழி மலர்ச்சடையார்
வன்னி எனஓர் வடிவுடையார்
உன்னி உருகும் அவர்க்கெளியார்
ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
கன்னி அழித்தார் தமைநானுங்
கலப்பேன் கொல்லோ கலவேனோ
துன்னி மலைவாழ் குறமடவாய்
துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
9
1643 கற்றைச் சடைமேல் கங்கைதனைக்
கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
பொற்றைப் பெருவிற் படைஉடையார்
பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
இற்றைக் கடியேன் பள்ளியறைக்
கெய்து வாரோ எய்தாரோ
சுற்றுங் கருங்கட் குறமடவாய்
சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
10
1644. அரவக் கழலார் கருங்களத்தார்
அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
பரவப் படுவார் திருஒற்றிப்
பதியில் அமர்ந்தார் பாசுபதர்
இரவு வருமுன் வருவாரோ
என்னை அணைதற் கிசைவாரோ
குரவ மணக்குங் குறமடவாய்
குறிநீ ஒன்று கூறுவையே.
11
Back

88. காட்சி அற்புதம்


தலைவி இரங்கல்(41)
( 41). இரங்கல்: தொ.வெ., ச.மு.க., ஆ.பா.

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1645. பூணா அணிபூண் புயமுடையார்
பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
ஊணா உவந்தார் திருஒற்றி
யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
நீணால் இருந்தார் அவர்இங்கே
நின்றார் மீட்டும் நின்றிடவே
காணா தயர்ந்தேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
1
1646. ஓட்டில் இரந்துண் டொற்றியிடை
உற்றார் உலகத் துயிரைஎலாம்
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின்
அருகே எளிய ளாம்எனவே
ஏட்டில் அடங்காக் கையறவால்
இருந்தேன் இருந்த என்முன்உருக்
காட்டி மறைத்தார் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
2
1647. ஈதல் ஒழியா வண்கையினார்
எல்லாம் வல்ல சித்தர்அவர்
ஓதல் ஒழியா ஒற்றியில்என்
உள்ளம் உவக்க உலகம்எலாம்
ஆதல் ஒழியா எழில்உருக்கொண்
டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
காதல் ஒழியா தென்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
3
1648. தொண்டு புரிவோர் தங்களுக்கோர்
துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
வண்டு புரியுங் கொன்றைமலர்
மாலை அழகர் வல்விடத்தை
உண்டு புரியுங் கருணையினார்
ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
கண்டுங் காணேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
4
1649. அடியர் வருந்த உடன்வருந்தும்
ஆண்டை அவர்தாம் அன்றயனும்
நெடிய மாலுங் காணாத
நிமல உருவோ டென்எதிரே
வடியல் அறியா அருள்காட்டி
மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
கடிய அயர்ந்தேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
5
1650. கொற்றம் உடையார் திருஒற்றிக்
கோயில்உடையார் என்எதிரே
பொற்றை மணித்தோட் புயங்காட்டிப்
போனார் என்னைப் புலம்பவைத்துக்
குற்றம் அறியேன் மனநடுக்கங்
கொண்டேன் உடலங் குழைகின்றேன்
கற்றிண் முலையாய் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
6
1651. ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார்
ஆதி நடுவீ றாகிநின்றார்
நீல மிடற்றார் திருஒற்றி
நியமத் தெதிரே நீற்றுருவக்
கோல நிகழக் கண்டேன்பின்
குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
7
1652. சலங்கா தலிக்கும் தாழ்சடையார்
தாமே தமக்குத் தாதையனார்
நிலங்கா தலிக்கும் திருஒற்றி
நியமத் தெதிரே நின்றனர்காண்
விலங்கா தவரைத் தரிசித்தேன்
மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
கலங்கா நின்றேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
8
1653. நிரந்தார் கங்கை நீள்சடையார்
நெற்றி விழியார் நித்தியனார்
சிரந்தார் ஆகப் புயத்தணிவார்
திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப்
பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
9
1654. அளித்தார் உலகை அம்பலத்தில்
ஆடி வினையால் ஆட்டிநின்றார்
தளித்தார் சோலை ஒற்றியிடைத்
தமது வடிவம் காட்டியுடன்
ஒளித்தார் நானும் மனம்மயங்கி
உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்
களித்தார் குழலாய் என்னடிநான்
கனவோ நனவோ கண்டதுவே.
10
Back

89. ஆற்றாக் காதலின் இரங்கல்

திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1655. மந்தா கினிவான் மதிமத்தம்
மருவும் சடையார் மாசடையார்
நுந்தா விளக்கின் சுடர்அனையார்
நோவ நுதலார் கண்நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதமலி
ஒற்றி யூரில் உற்றெனக்குத்
தந்தார் மையல் என்னோஎன்
சகியே இனிநான் சகியேனே.
1
1656. பூமேல் அவனும் மால்அவனும்
போற்றி வழுத்தும் பூங்கழலார்
சேமேல் வருவார் திருஒற்றித்
தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
தேமேல் அலங்கல் முலைஅழுந்தச்
சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
தாமேல் அழற்பூத் தாழாதென்
சகியே இனிநான் சகியேனே.
2
1657. கருணைக் கொருநேர் இல்லாதார்
கல்லைக் கரைக்கும் கழலடியார்
அருணைப் பதியார் ஆமாத்தூர்
அமர்ந்தார் திருவா வடுதுறையார்
இருணச் சியமா மணிகண்டர்
எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
தருணத் தின்னும் சேர்ந்திலர்என்
சகியே இனிநான் சகியேனே.
3
1658. ஆரா அமுதாய் அன்புடையோர்
அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீரா வினையும் தீர்த்தருளும்
தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருஒற்றிப்
பரமர் தமது தோள் அணையத்
தாரார் இன்னும் என்செய்கேன்
சகியே இனிநான் சகியேனே.
4
1659. துதிசெய் அடியர் தம்பசிக்குச்
சோறும் இரப்பார் துய்யர்ஒரு
நதிசெய் சடையார் திருஒற்றி
நண்ணும் எனது நாயகனார்
மதிசெய் துயரும் மதன்வலியும்
மாற்ற இன்னும் வந்திலரே
சதிசெய் தனரோ என்னடிஎன்
சகியே இனிநான் சகியேனே.
5
1660. எங்கள் காழிக் கவுணியரை
எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர்
திங்கள் அணியும் செஞ்சடையார்
தியாகர் திருவாழ் ஒற்றியினார்
அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில்
அணைத்தார் அல்லர் எனைமடவார்
தங்கள் அலரோ தாழாதென்
சகியே இனிநான் சகியேனே.
6
1661. காவி மணந்த கருங்களத்தார்
கருத்தர் எனது கண்அனையார்
ஆவி அனையார் தாய்அனையார்
அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
பூவின் அலங்கல் புயத்தில்எனைப்
புல்லார் அந்திப் பொழுதில்மதி
தாவி வருமே என்செயுமோ
சகியே இனிநான் சகியேனே.
7
1662. மலஞ்சா திக்கும் மக்கள்தமை
மருவார் மருவார் மதில்அழித்தார்
வலஞ்சா திக்கும் பாரிடத்தார்
மாலும் அறியா மலர்ப்பதத்தார்
நிலஞ்சா திக்கும் ஒற்றியினார்
நினையார் என்னை அணையாமல்
சலஞ்சா தித்தார் என்னடிஎன்
சகியே இனிநான் சகியேனே.
8
1663. நாக அணியார் நக்கர்எனும்
நாமம்உடையார் நாரணன்ஓர்
பாகம் உடையார் மலைமகள்ஓர்
பாங்கர் உடையார் பசுபதியார்
யோகம் உடையார் ஒற்றியுளார்
உற்றார் அல்லர் உறுமோக
தாகம் ஒழியா தென்செய்கேன்
சகியே இனிநான் சகியேனே.
9
1664. தீர்ந்தார் தலையே கலனாகச்
செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
தேர்ந்தார் தம்மைப் பித்தடையச்
செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத்
தேடி வரும்அத் தீமதியம்
சார்ந்தால் அதுதான் என்செயுமோ
சகியே இனிநான் சகியேனே.
10
1665. ஆயும் படிவத் தந்தணனாய்
ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
தோயும் கமலத் திருவடிகள்
சூட்டும் அதிகைத் தொன்னகரார்
ஏயும் பெருமை ஒற்றியுளார்
இன்னும் அணையார் எனைஅளித்த
தாயும் தமரும் நொடிக்கின்றார்
சகியே இனிநான் சகியேனே.
11
Back

90. திருக்கோலச் சிறப்பு

தலைவி வியத்தல் - திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1666. பொன்னென் றொளிரும் புரிசடையார்
புனைநூல் இடையார் புடைஉடையார்
மன்னென் றுலகம் புகழ்ஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
மின்னென் றிலங்கு மாதரெலாம்
வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
இன்னென் றறியேன் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 1
1667. அள்ளிக் கொடுக்கும் கருணையினார்
அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற
வள்ளல் பவனி வரக்கண்டேன்
துள்ளிக் குதித்தென் மனம்அவரைச்
சூழ்ந்த தின்னும் வந்ததிலை
எள்ளிக் கணியா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 2
1668. அனத்துப் படிவம் கொண்டயனும்
அளவா முடியார் வடியாத
வனத்துச் சடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
மனத்துக் கடங்கா தாகில்அதை
வாய்கொண் டுரைக்க வசமாமோ
இனத்துக் குவப்பாம் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 3
1669. கொழுதி அளிதேன் உழுதுண்ணும்
கொன்றைச் சடையார் கூடலுடை
வழுதி மருகர் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
பழுதில் அவனாந் திருமாலும்
படைக்குங் கமலப் பண்ணவனும்
எழுதி முடியா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 4
1670. புன்னை இதழிப் பொலிசடையார்
போக யோகம் புரிந்துடையார்
மன்னும் விடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
உன்னும் உடலம் குளிர்ந்தோங்க
உவகை பெருக உற்றுநின்ற
என்னை விழுங்கும் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே.5
1671 சொல்லுள் நிறைந்த பொருளானார்
துய்யர் உளத்தே துன்னிநின்றார்
மல்லல் வயற்சூழ் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
கல்லும் மரமும் ஆனந்தக்
கண்ணீர் கொண்டு கண்டதெனில்
எல்லை யில்லா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 6
1672. நீர்க்கும் மதிக்கும் நிலையாக
நீண்ட சடையார் நின்றுநறா
ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும்
பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
யார்க்கும் அடங்கா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 7
1673. கலக அமணக் கைதவரைக்
கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
வலகை குவித்துப் பாடும்ஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
உலக நிகழ்வைக் காணேன்என்
உள்ளம் ஒன்றே அறியுமடி
இலகும் அவர்தந் திருஅழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 8
1674. கண்ணன் அறியாக் கழற்பதத்தார்
கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
வண்ணம் உடையார் திருஒற்றி
வாணர் பவனி வரக்கண்டேன்
நண்ண இமையார் எனஇமையா
நாட்டம் அடைந்து நின்றனடி
எண்ண முடியா அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 9
1675. மாழை மணித்தோள் எட்டுடையார்
மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
வாழை வளஞ்சூழ் ஒற்றியூர்
வாணர் பவனி வரக்கண்டேன்
யாழை மலைக்கும் மொழிமடவார்
யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
ஏழை யேன்நான் அவரழகை
என்னென் றுரைப்ப தேந்திழையே. 10
Back

91.சோதிடம் நாடல்

தலைவி கழிமிகு42 காதல்
42. மிகுகழி என முற்பதிப்புகளிற் காணப்படுவது சிறப்பன்று.

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1676. பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 1
1677. பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 2
1678. அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 3
1679. எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்
தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 4
1680. தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 5
1681. பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 6
1682. தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார்
மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன்
துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான்
ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 7
1683. வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 8
1684. ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
9
1685. அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
10
Back

92. திருஅருட் பெருமிதம்

செவிலி கழறல்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1686. விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
1
1687. கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
2
1688. மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
3
1689. நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
4
1690. திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
5
1691. மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
6
1692 மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
7
1693. விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
8
1694. நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
9
1695. உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
10
Back

93. காதற் சிறப்புக் கதுவா மாண்பு

தலைவி கழற் றெதிர்மறுத்தல் -- திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1696. உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகில் புகழார் கா