அம்மானே உன்னடியேற்கே. 496
அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498
மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499
கூறும் நாவே முதலாக் கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501
அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502
நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504
அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாயே
குழகா கோல் மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505
திருச்சிற்றம்பலம்
Back
34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல்
(திருப்பெருந்துறையில் அருளியது - கலிவிருத்தம்)
பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என்
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா
செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506
நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்
தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே. 507
எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச்
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508
வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509
பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே. 510
கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே. 512
கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513
எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514
வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே. 515
திருச்சிற்றம்பலம்
Back
35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்
(தில்லையில் அருளியது -
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525
திருச்சிற்றம்பலம்
Back
36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு
(தில்லையில் அருளியது - கட்டளைக் கலித்துறை)
பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே. 526
சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம்
கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே. 527
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே. 528
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529
காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய
ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு
மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530
ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத்
தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531
மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532
அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533
விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார்
மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே. 534
கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே
தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே. 535
திருச்சிற்றம்பலம்
Back
37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்
(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)
உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 536
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 537
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 538
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 539
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 540
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 541
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 542
அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 543
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 544
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 545
திருச்சிற்றம்பலம்
Back
38. திருஏசறவு
(திருப்பெருந்துறையில் அருளியது - கொச்சகக் கலிப்பா )
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலினைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546
பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547
ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று
ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548
பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன்
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549
கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்
துற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551
என்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552
மூத்தானே மூவாத முதலானே முடியில்லா
ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554
நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555
திருச்சிற்றம்பலம்
Back
39. திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
(திருவாரூரில் அருளியது - கொச்சகக் கலிப்பா)
பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 556
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. 557
உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாறை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 558
திருச்சிற்றம்பலம்
Back
40. குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை
(தில்லையில் அருளியது - கொச்சகக் கலிப்பா)
ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து
தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்
ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 559
துடியோர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்
செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த
அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 560
என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்
துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த
அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 561
குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்
பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச்
செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை
அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 562
பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்
தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்
சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி
ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 563
கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே
நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்
அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 564
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய
மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்
கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565
இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே
நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்
கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566
பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்
தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்
ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567
கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 568
திருச்சிற்றம்பலம்
Back
41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை
(திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்
தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே
பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி
மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569
ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்
போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி
வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570
நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571
பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்
கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத
அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572
மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி
ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573
வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்
பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்
குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி
அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574
இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை
ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576
பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577
செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்
கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி
அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578
திருச்சிற்றம்பலம்
Back
42. சென்னிப்பத்து - சிவவிளைவு
(திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்)
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்
தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579
அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580
நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582
மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான்
வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583
சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுந் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584
பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587
முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீரப் பணியினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588
திருச்சிற்றம்பலம்
Back
43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல்
(திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே. 589
மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே. 590
அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே. 591
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே. 592
வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற்
பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே. 593
வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 594
நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே. 595
பூவலர் கொன்றையும் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணாற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே. 596
தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 597
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவரந்நதுவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே. 598
திருச்சிற்றம்பலம்
Back
44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை
(தில்லையில் அருளியது - எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்)
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599
உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. 600
என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 601
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602
காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றம தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603
பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604
திருச்சிற்றம்பலம்
Back
45. யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்
(தில்லையில் அருளியது - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605
புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606
தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607
அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608
விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609
புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610
நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611
பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612
சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613
புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614
திருச்சிற்றம்பலம்
Back
46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்
(தில்லையில் அருளியது - கலிவிருத்தம்)
ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615
தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616
திருச்சிற்றம்பலம்
Back
47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை
(திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா)
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 617
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 619
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 620
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623
யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 624
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும். 625
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. 627
திருச்சிற்றம்பலம்
Back
48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்
(திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா )
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 628
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு. 629
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 632
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 633
பேசும் மொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 634
திருச்சிற்றம்பலம்
Back
49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல்
(தில்லையில் அருளியது -சிவ உபாதி ஒழித்தல் -
பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635
ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே
என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637
என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே. 638
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. 639
பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640
சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈறறி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642
திருச்சிற்றம்பலம்
Back
50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம்
(தில்லையில் அருளியது - சிவானுபவ விருத்தம் -
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்
கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த
என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாவே. 643
என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644
சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645
கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 646
தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 647
கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 648
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே. 649
திருச்சிற்றம்பலம்
Back
51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை
(தில்லையில் அருளியது)
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 652
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 653
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658
செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. 659
படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 660
பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி
வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை
சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட
ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 661
திருச்சிற்றம்பலம்
Back
திருவாசகம் முற்றிற்று
Etext of this work (tiruvAcakam) was first released in Mylai, Inaimathi formats in March 1998
The TSCII version was first put up on Dec 12, 2000
This unicode version was last revised on 13 sept.2002
This file was last revised on 9th October 2008
Please send your comments and corrections to the Webmaster(s) of this site
Back to Thirumurai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page