thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

8 பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 


40 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்
 1. செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் 	3939-1
 மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர் 	3939-2
 மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் 	3939-3
 பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் 	3939-4

 2. பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால் 	3940-1
 சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற 	3940-2
 பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் 	3940-3
 மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள் 	3940-4

 3. ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் 	3941-1
 தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் 	3941-2
 ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த 	3941-3
 பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் 	3941-4


41 புகழ்ச் சோழ நாயனார் புராணம்
 1. குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி 	3942-1
 நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் 	3942-2
 மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர் 	3942-3
 உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர் 	3942-4

 2. அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும் 	3943-1
 இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க் 	3943-2
 கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும் 	3943-3
 வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் 	3943-4

 3. நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த 	3944-1
 போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் 	3944-2
 மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும் 	3944-3
 ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம் 	3944-4

 4. பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் 	3945-1
 போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும் 	3945-2
 சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக் 	3945-3
 கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம் 	3945-4

 5. படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி 	3946-1
 நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப 	3946-2
 விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் 	3946-3
 தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் 	3946-4

 6. துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும் 	3947-1
 விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத 	3947-2
 உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர் 	3947-3
 வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு 	3947-4

 7. கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை 	3948-1
 தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி 	3948-2
 வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண் 	3948-3
 பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால் 	3948-4

 8. அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் 	3949-1
 மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் 	3949-2
 சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர் 	3949-3
 பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார் 	3949-4

 9. ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து 	3950-1
 பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப 	3950-2
 திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப 	3950-3
 அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் 	3950-4

 10. பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் 	3951-1
 நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக் 	3951-2
 குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி 	3951-3
 முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார் 	3951-4

 11. அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து 	3952-1
 கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத் 	3952-2
 தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் 	3952-3
 மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார் 	3952-4

 12. வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் 	3953-1
 இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி 	3953-2
 சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில் 	3953-3
 முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் 	3953-4

 13. மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன் 	3954-1
 கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த 	3954-2
 ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம் 	3954-3
 நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் 	3954-4

 14. திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி 	3955-1
 முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர் 	3955-2
 உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு 	3955-3
 நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் 	3955-4

 15. சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம் 	3956-1
 அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் 	3956-2
 கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என 	3956-3
 வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார் 	3956-4

 16. விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும் 	3957-1
 துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர் 	3957-2
 அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என 	3957-3
 உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார் 	3957-4

 17.  ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக 	3958-1
 ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப 	3958-2
 ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த 	3958-3
 பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார் 	3958-4

 18. அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து 	3959-1
 கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார் 	3959-2
 படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக 	3959-3
 மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார் 	3959-4

 19. வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற 	3960-1
 அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும் 	3960-2
 உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக் 	3960-3
 கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால் 	3960-4

 20. கயமொடு கயம் எதிர் குத்தின 	3961-1
 அயமுடன் அயமுனை முட்டின 	3961-2
 வயவரும் வயவரும் உற்றனர் 	3961-3
 வியனமர் வியல் இடம் மிக்கதே 	3961-4

 21. மலையொடு மலைகள் மலைந்தென 	3962-1
 அலை மத அருவி கொழிப்பொடு 	3962-2
 சிலையினர் விசையின் மிசைத் தெரு 	3962-3
 கொலை மதக் கரிகொலை உற்றவே 	3962-4

 22. சூறை மாருதம் ஒத்து எதிர் 	3963-1
 ஏறு பாய் பரி வித்தகர் 	3963-2
 வேறு வேறு தலைப் பெய்து 	3963-3
 சீறி ஆவி செகுத்தனர் 	3963-4

 23. மண்டு போரின் மலைப்பவர் 	3964-1
 துண்டம் ஆயிட உற்று எதிர் 	3964-2
 கண்டர் ஆவி கழித்தனர் 	3964-3
 உண்ட சோறு கழிக்கவே 	3964-4

 24. வீடினார் உடலில் பொழி 	3965-1
 நீடுவார் குருதிப் புனல் 	3965-2
 ஓடும் யாறென ஒத்தது 	3965-3
 கோடு போல்வ பிணக் குவை 	3965-4

 25. வானிலாவு கருங்கொடி 	3966-1
 மேனிலாவு பருந்து இனம் 	3966-2
 ஏனை நீள் கழுகின் குலம் 	3966-3
 ஆன ஊணொடு எழுந்தவே 	3966-4

 26. வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள் 	3967-1
 சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல் 	3967-2
 எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல் 	3967-3
 முரி உற்றன உற்றன மொய்க் களமே 	3967-4

 27. வடிவேல் அதிகன் படைமாள வரைக் 	3968-1
 கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 	3968-2
 கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் 	3968-3
 முடி நேரியனார் படை முற்றியதே 	3968-4

 28. முற்றும் பொரு சேனை முனை தலையில் 	3969-1
 கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப் 	3969-2
 பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச் 	3969-3
 சுற்றும் படை வீரர் துணித்தனரே 	3969-4

29. மாறுற்ற விறல் படை வாள் அதிகன் 	3970-1
 நூறுற்ற பெரும்படை நூழில் படப் 	3970-2
 பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு 	3970-3
 ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே 	3970-4

 30. அதிகன் படை போர் பொருதற்றதலை 	3971-1
 பொதியின் குவை எண்ணில போயின பின் 	3971-2
 நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா 	3971-3
 எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே 	3971-4

 31. அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம் 	3972-1
 இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் 	3972-2
 முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் 	3972-3
 தரணித் தலைவன் கழல் சார் உறவே 	3972-4

 32. மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் 	3973-1
 முன் வந்த கரும் தலை மொய் குவைதான் 	3973-2
 மின்னும் சுடர் மா முடிவேல் வளவன் 	3973-3
 தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் 	3973-4

 33. மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் 	3974-1
 எண்ணில் பெருகும் தலை யாவையினும் 	3974-2
 நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக் 	3974-3
 கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே 	3974-4

 34. கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது 	3975-1
 கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த 	3975-2
 திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி 	3975-3
 புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார் 	3975-4

 35. முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி 	3976-1
 உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் 	3976-2
 திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான் 	3976-3
 அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார் 	3976-4

 36. தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார் 	3977-1
 நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார் 	3977-2
 சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும் 	3977-3
 பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார் 	3977-4

 37. என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார் 	3978-1
 நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து 	3978-2
 மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப 	3978-3
 வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார் 	3978-4

 38. அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக் 	3979-1
 கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார் 	3979-2
 செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப் 	3979-3
 பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார் 	3979-4

 39. கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி 	3980-1
 கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார் 	3980-2
 அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி 	3980-3
 மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் 	3980-4

 40. புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய 	3981-1
 மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப 	3981-2
 செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் 	3981-3
 அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் 	3981-4

 41. முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் 	3982-1
 பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப் 	3982-2
 பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி 	3982-3
 நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 	3982-4


42 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்
 1. கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து 	3983-1
 மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் 	3983-2
 தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி 	3983-3
 நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர் 	3983-4

 2. இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் 	3984-1
 தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல 	3984-2
 மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி 	3984-3
 அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார் 	3984-4

 3. சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி 	3985-1
 யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து 	3985-2
 மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு 	3985-3
 கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார் 	3985-4

 4. ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும் 	3986-1
 வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி 	3986-2
 நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன் 	3986-3
 நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் 	3986-4

 5. ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் 	3987-1
 மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் 	3987-2
 மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த 	3987-3
 ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் 	3987-4

 6. மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார் 	3988-1
 உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு 	3988-2
 கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப் 	3988-3
 பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார் 	3988-4

 7. சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை 	3989-1
 ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார் 	3989-2
 பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து 	3989-3
 மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார் 	3989-4

 8. இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் 	3990-1
 செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் 	3990-2
 பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து 	3990-3
 மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் 	3990-4

 9. விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை 	3991-1
 உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித் 	3991-2
 தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும் 	3991-3
 கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம் 	3991-4


43 அதிபத்த நாயனார் புராணம்
 1. மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் 	3992-1
 தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் 	3992-2
 பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் 	3992-3
 நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் 	3992-4

 2. தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த 	3993-1
 தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் 	3993-2
 காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த 	3993-3
 மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு 	3993-4

 3. பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து 	3994-1
 திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் 	3994-2
 தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் 	3994-3
 கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் 	3994-4

 4. நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த 	3995-1
 பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் 	3995-2
 கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் 	3995-3
 ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் 	3995-4

 5. அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் 	3996-1
 பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் 	3996-2
 மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த 	3996-3
 தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி 	3996-4

 6. புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை 	3997-1
 அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் 	3997-2
 வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த 	3997-3
 கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் 	3997-4

 7. உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த 	3998-1
 கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் 	3998-2
 அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து 	3998-3
 மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் 	3998-4

 8. வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் 	3999-1
 விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் 	3999-2
 தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் 	3999-3
 அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய 	3999-4

 9. அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து 	4000-1
 மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் 	4000-2
 புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் 	4000-3
 வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் 	4000-4

 10.  ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் 	4001-1
 ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் 	4001-2
 பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் 	4001-3
 ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் 	4001-4

 11. முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து 	4002-1
 பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் 	4002-2
 நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் 	4002-3
 விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் 	4002-4

 12. வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் 	4003-1
 ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால் 	4003-2
 ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே 	4003-3
 மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் 	4003-4

 13. மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் 	4004-1
 தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் 	4004-2
 பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று 	4004-3
 மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் 	4004-4

 14. சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து 	4005-1
 கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் 	4005-2
 சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே 	4005-3
 ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் 	4005-4

 15.  ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் 	4006-1
 தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் 	4006-2
 மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் 	4006-3
 பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் 	4006-4

 16. வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற 	4007-1
 ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் 	4007-2
 தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் 	4007-3
 பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் 	4007-4

 17. என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் 	4008-1
 பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் 	4008-2
 ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் 	4008-3
 சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் 	4008-4

 18. அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் 	4009-1
 புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த 	4009-2
 இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் 	4009-3
 முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ 	4009-4

 19. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே 	4010-1
 அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை 	4010-2
 நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து 	4010-3
 அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் 	4010-4

 20. தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு 	4011-1
 மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி 	4011-2
 மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும் 	4011-3
 செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் 	4011-4


44 கலிக்கம்ப நாயனார் புராணம்
 1. உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனைத் 	4012-1
 தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வனரும் தன்மையதாய் 	4012-2
 வரும் மஞ்சு உறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் 	4012-3
 பெருமை உலகு பெற விளங்கும் மேல் பால் பெண்ணாகட மூதூர் 	4012-4

 2. மற்றப் பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் 	4013-1
 கற்றைச் சடையார் கழற்காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் 	4013-2
 அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு 	4013-3
 பற்றிப் பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்று இல்லார் 	4013-4

 3. ஆன அன்பர் தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய 	4014-1
 மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் 	4014-2
 தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே 	4014-3
 ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் 	4014-4

 4. அன்ன வகையால் திருத்தொண்டு புரியுநாளில் அங்கு ஒரு நாள் 	4015-1
 மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர் தமை எல்லாம் 	4015-2
 தொன்மை முறையே அமுது செயத் தொடங்கு விப்பார் அவர் தம்மை 	4015-3
 முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் 	4015-4

 5. திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கிப் போனகமும் 	4016-1
 பொருந்து சுவையில் கறி அமுதும் புனிதத் தண்ணீர் உடன் மற்றும் 	4016-2
 அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீர் அளிக்க 	4016-3
 விரும்பு கணவர் பெருந்தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின் கண் 	4016-4

 6. முன்பு தமக்குப் பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் 	4017-1
 என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் 	4017-2
 அன்பர் உடனே திருவேடம் தாங்கி அணைந்தார் ஒருவர் தாம் 	4017-3
 பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெரும் தகையார் 	4017-4

 7. கையால் அவர் தம் அடி பிடிக்கக் காதல் மனையார் முன்பு ஏவல் 	4018-1
 செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் 	4018-2
 மொய்யார் வாசக் கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் 	4018-3
 மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துள் கருதுவார் 	4018-4

 8. வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை 	4019-1
 குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு 	4019-2
 மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை 	4019-3
 தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார் 	4019-4

 9. விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து 	4020-1
 துளக்கில் சிந்தை உடன் தொண்டர் தம்மை அமுது செய்வித்தார் 	4020-2
 அளப்பில் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று 	4020-3
 களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள்நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் 	4020-4

 10.  ஓத மலிநீர் விடம் உண்டார் அடியார் என்றுணரா 	4021-1
 மாதரார் கை தடிந்த கலிக் கம்பர் மலர்ச் சேவடி வணங்கி 	4021-2
 பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த 	4021-3
 காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம் 	4021-4


45 கலிய நாயனார் புராணம்
 1. பேருலகில் ஓங்கு புகழ்ப் பெரும் தொண்டை நன்னாட்டு 	4022-1
 நீருலவும் சடைக் கற்றை நிருத்தர் திருப்பதியாகும் 	4022-2
 காருலவும் மலர்ச் சோலைக் கன்னிமதில் புடை சூழ்ந்து 	4022-3
 தேருலவு நெடு வீதி சிறந்த திருஒற்றியூர் 	4022-4

 2. பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் 	4023-1
 வேடம் உடையவர் பொருள் போல் ஆகாசவெளி மறைக்கும் 	4023-2
 ஆடு கொடி மணி நெடுமாளிகை நிரைகள் அலை கமுகின் 	4023-3
 காடனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் 	4023-4

 3. பன்னு திருப்பதிக இசைப் பாட்டு ஓவா மண்டபங்கள் 	4024-1
 அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு 	4024-2
 பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி 	4024-3
 செம் நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திருமடங்கள் 	4024-4

 4. கெழு மலர் மாதவி புன்னை கிளைஞாழல் தளை அவிழும் 	4025-1
 கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை 	4025-2
 முழு மணமே முந் நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் 	4025-3
 செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு 	4025-4

 5. எயிலணையும் முகில் முழக்கும் எறிதிரை வேலையின் முழக்கும் 	4026-1
 பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியாப் பதி அதனுள் 	4026-2
 வெயில் அணி பல் மணி முதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும் 	4026-3
 தயில வினைத் தொழில் மரபில் சக்கரப் பாடி தெருவு 	4026-4

 6. அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார் 	4027-1
 மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் 	4027-2
 தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் 	4027-3
 முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார் 	4027-4

 7. எல்லையில் பல் கோடி தனத்து இறைவராய் இப்படித்தாம் 	4028-1
 செல்வ நெறிப் பயன் அறிந்து திருஒற்றியூர் அமர்ந்த 	4028-2
 கொல்லை மழவிடையார் தம் கோயிலின் உள்ளும் புறம்பும் 	4028-3
 அல்லும் நெடும் பகலும் இடும் திருவிளக்கின் அணி விளைத்தார் 	4028-4

 8. எண்ணில் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வரப் 	4029-1
 புண்ணிய மெய்த் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே 	4029-2
 உண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினைச் செயல் ஓவி 	4029-3
 மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்தாக 	4029-4

 9. திருமலி செல்வத்துழனி தேய்ந்து அழிந்த பின்னையுந்தம் 	4030-1
 பெருமை நிலைத் திருப் பணியில் பேராத பேராளர் 	4030-2
 வருமரபில் உள்ளோர் பால் எண்ணெய் மாறிக் கொணர்ந்து 	4030-3
 தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் 	4030-4

 10. வளம் உடையார் பால் எண்ணெய் கொடுபோய் மாறிக் கூலி 	4031-1
 கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாறத் 	4031-2
 தளருமனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் 	4031-3
 களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் 	4031-4

 11. செக்கு நிறை எள் ஆட்டிப் பதம் அறிந்து தில தயிலம் 	4032-1
 பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் 	4032-2
 தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை 	4032-3
 மிக்க திரு விளக்கு இட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார் 	4032-4

 12. அப் பணியால் வரும் பேறு அவ் வினைஞர் பலர் உளராய் 	4033-1
 எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே 	4033-2
 ஒப்பில் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்ட அதன் பின் 	4033-3
 செப்பருஞ் சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார் 	4033-4

 13. மனம் மகிழ்ந்து மனைவியார் தமைக் கொண்டு வள நகரில் 	4034-1
 தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி 	4034-2
 சின விடையார் திருக் கோயில் திரு விளக்குப் பணிமுட்டக் 	4034-3
 கன வினும் முன்பு அறியாதார் கை அறவால் எய்தினார் 	4034-4

 14. பணி கொள்ளும் படம் பக்க நாயகர்தம் கோயிலினுள் 	4035-1
 அணி கொள்ளும் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில் 	4035-2
 மணி வண்ணச் சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் எனத் 	4035-3
 துணிவுள்ளங் கொள நினைந்து அவ் வினை முடிக்கத் தொடங்குவார் 	4035-4

 15. திரு விளக்குத் திரி இட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப 	4036-1
 ஒருவிய எண் ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக் 	4036-2
 கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண் நுதலார் 	4036-3
 பெருகு திருக் கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி 	4036-4

 16. மற்றவர் தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்து அருள 	4037-1
 உற்றவூறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் 	4037-2
 பற்றிய அஞ்சலியினர் ஆய் நின்றவரைப் பரமர் தாம் 	4037-3
 பொற்புடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள் புரிந்தார் 	4037-4

 17. தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து 	4038-1
 மே வரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் 	4038-2
 யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை 	4038-3
 நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் 	4038-4


46 சத்தி நாயனார் புராணம்
 1. களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் 	4039-1
 குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை 	4039-2
 அளவும் ஆணைச் சயத் தம்பம் நாட்டிய 	4039-3
 வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் 	4039-4

 2. வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் 	4040-1
 பெரும் சிறப்புப் பெறப் பிறப்பு எய்தினார் 	4040-2
 விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும் 	4040-3
 அரும் சிலம்பு அணி சேவடிக்காள் செய்வார் 	4040-4

 3. அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை 	4041-1
 இத்தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை 	4041-2
 வைத்த நாவை வலித்து அரி சத்தியால் 	4041-3
 சத்தியார் எனும் திருநாமமும் தாங்கினார் 	4041-4

 4. தீங்கு சொற்ற திருவிலர் நாவினை 	4042-1
 வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து 	4042-2
 தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் 	4042-3
 ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர் 	4042-4

 5. அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி 	4043-1
 மன்னு பேருலகத்தில் வலி உடன் 	4043-2
 பண்னெடும் பெருநாள் பரிவால் செய்து 	4043-3
 சென்னி ஆற்றினர் செந்நெறி ஆற்றினர் 	4043-4

 6. ஐயம் இன்றி அரிய திருப்பணி 	4044-1
 மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர் 	4044-2
 வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார் 	4044-3
 செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர் 	4044-4

 7. நாயனார் தொண்டரை நலம் கூறலார் 	4045-1
 சாய நாவரி சத்தியார் தாள் பணிந்து 	4045-2
 ஆய மா தவத்து ஐயடிகள் எனும் 	4045-3
 தூய காடவர் தம் திறம் சொல்லுவாம் 	4045-4


47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

 1. வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி 	4046-1
 வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் 	4046-2
 செய்ய சடையார் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார் 	4046-3
 ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் 	4046-4

 2. திருமலியும் புகழ் விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 	4047-1
 பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துப் 	4047-2
 தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன் 	4047-3
 அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் 	4047-4

 3. மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம் 	4048-1
 பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் அரசாட்சி 	4048-2
 இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழச்சி 	4048-3
 நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் 	4048-4

 4. தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண் 	4049-1
 அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களான எலாம் 	4049-2
 கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த 	4049-3
 வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் 	4049-4

 5. பெருத்தெழு காதலினால் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் 	4050-1
 திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை 	4050-2
 நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் 	4050-3
 விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் 	4050-4

 6. அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி 	4051-1
 இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச் 	4051-2
 செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே 	4051-3
 எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார் 	4051-4

 7. இந்நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி 	4052-1
 பன்னெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ் 	4052-2
 மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் 	4052-3
 கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார் 	4052-4

 8. பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த 	4053-1
 ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக் 	4053-2
 கையணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய 	4053-3
 செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் 	4053-4


சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
 1. உளத்தில் ஒரு துளக்கம் இலேம் உலகு உய்ய இருண்ட திருக் 	4054-1
 களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு 	4054-2
 வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெரும் திருவாரூர்க் 	4054-3
 குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் 	4054-4



திருச்சிற்றம்பலம் 


பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 13 July 2004

See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures

Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page