thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் (தொடர்ச்சி) - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் முதல்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் (தொடர்ச்சி) 


29  ஏயர் கோன் கலிக் காம நாயனார் புராணம்
 1. நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும் 	3155-1
 மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால் 	3155-2
 ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான் 	3155-3
 பீடு தங்கிய திரு மங்கலப் பெயர்த்தால் 	3155-4

 2. இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில் 	3156-1
 மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் 	3156-2
 நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல்லடிச் செம் 	3156-3
 பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு 	3156-4

 3. விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி 	3157-1
 முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் 	3157-2
 மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் 	3157-3
 உழவு அறாத நல் வளத்தன ஓங்கிருங் குடிகள் 	3157-4

 4. நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக் 	3158-1
 காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமி 	3158-2
 பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும் 	3158-3
 சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால் 	3158-4

 5. இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான் 	3159-1
 மன்னிய நீடிய வளவர் சேனாபதிக் குடியாம் 	3159-2
 தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய 	3159-3
 பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால் 	3159-4

 6. அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார் 	3160-1
 கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் 	3160-2
 தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சாந்து 	3160-3
 பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் 	3160-4

 7. புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க் 	3161-1
 அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து 	3161-2
 நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று 	3161-3
 துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார் 	3161-4

 8. நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு 	3162-1
 இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத் 	3162-2
 தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு 	3162-3
 மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன் 	3162-4

 9. திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி 	3163-1
 கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் 	3163-2
 ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து 	3163-3
 பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் 	3163-4

 10. தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த 	3164-1
 வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் 	3164-2
 வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று 	3164-3
 ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் 	3164-4

 11. செந் நெல்லும் பொன்னன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின் 	3165-1
 இன்னல்ல அமுதும் முதல் எண்ணில் பெரும் வளங்கள் 	3165-2
 மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதாக வழுவாமல் 	3165-3
 பன்னெடு நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார் 	3165-4

 12.  ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற 	3166-1
 வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப் 	3166-2
 போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை 	3166-3
 மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் 	3166-4

 13.  வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க 	3167-1
 இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து 	3167-2
 துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே 	3167-3
 அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார் 	3167-4

 14.  ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி 	3168-1
 நீரூரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப் 	3168-2
 பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல் 	3168-3
 காரூரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல் 	3168-4

 15. அவ்விரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே 	3169-1
 எவ்வுலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்து 	3169-2
 செவ்விய பொன் மலை வளத்தார் திரு அருளின் செயல் போற்றிக் 	3169-3
 கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் 	3169-4

 16. நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு 	3170-1
 யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் 	3170-2
 போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து 	3170-3
 தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் 	3170-4

 17. குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோதில் வாய்மைத் 	3171-1
 தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று 	3171-2
 பண்டெலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட 	3171-3
 அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று 	3171-4

 18.  மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் 	3172-1
 இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டு 	3172-2
 பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று 	3172-3
 இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் 	3172-4

 19. விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி 	3173-1
 அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி 	3173-2
 எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும் 	3173-3
 தண்ண்¢லவு அணிந்தார் தமே தரில் அன்றி ஒண்ணாது என்று 	3173-4

 20.  ஆளிட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதியான 	3174-1
 கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி 	3174-2
 வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் 	3174-3
 மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும் 	3174-4

 21. பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி 	3175-1
 மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் 	3175-2
 புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் 	3175-3
 நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால் 	3175-4

 22. தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே 	3176-1
 உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச் 	3176-2
 செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய் 	3176-3
 நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர் 	3176-4

 23. பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி 	3177-1
 நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து 	3177-2
 பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் 	3177-3
 ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் 	3177-4

 24. கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி 	3178-1
 மேவி அவர் தம் மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் 	3178-2
 சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின் 	3178-3
 ஏவலினால் அவ்விரவு பூதங்கள் மிக்கு எழுந்து 	3178-4

 25. குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து 	3179-1
 வண்டுலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே 	3179-2
 அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி 	3179-3
 கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல் 	3179-4

 26. அவ்விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு 	3180-1
 எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து 	3180-2
 நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு 	3180-3
 இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் 	3180-4

 27. நீக்க அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும் 	3181-1
 போக்க அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார் 	3181-2
 பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இந் நெல்லுப் 	3181-3
 போக்கும் இடம் அரிதாகும் எனப் பலவும் புகல்கின்றார் 	3181-4

 28. வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் 	3182-1
 இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் 	3182-2
 பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என 	3182-3
 வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் 	3182-4

 29. அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்குப் பறை அறைந்த 	3183-1
 பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு 	3183-2
 அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார் 	3183-3
 மணியாரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார் 	3183-4

 30. நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள் 	3184-1
 செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைக் 	3184-2
 தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி 	3184-3
 இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் 	3184-4

 31. குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் 	3185-1
 அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி 	3185-2
 நிலவிய வன் தொண்டர் அ·து இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சி 	3185-3
 பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் 	3185-4

 32. தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் 	3186-1
 காவல் கொண்டு தனியாளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி 	3186-2
 நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் 	3186-3
 பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் 	3186-4

 33. மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி 	3187-1
 ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண 	3187-2
 ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக் 	3187-3
 கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார் 	3187-4

 34. தூய மணிப் பொன் தவிகில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால் 	3188-1
 சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்ட செழும் புனலால் 	3188-2
 மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப 	3188-3
 ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் 	3188-4

 35. பூந்தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை 	3189-1
 வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு 	3189-2
 தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் 	3189-3
 ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி 	3189-4

 36. வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து 	3190-1
 மாறிலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி 	3190-2
 ஈறில்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி 	3190-3
 ஆறு புணைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார் 	3190-4

 37. செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார் 	3191-1
 நங்கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் 	3191-2
 தங்கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த 	3191-3
 பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா 	3191-4

 38.  ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த 	3192-1
 தேனார் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த 	3192-2
 மானார் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர் 	3192-3
 தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார் 	3192-4

 39. அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக் 	3193-1
 கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத் 	3193-2
 தொடி சேர் தளிக்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப் 	3193-3
 படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார் 	3193-4

 40. கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து 	3194-1
 காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சி 	3194-2
 மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி 	3194-3
 நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர் 	3194-4

 41. வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி 	3195-1
 ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தொடும் 	3195-2
 சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் 	3195-3
 கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை 	3195-4

 42. சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப் 	3196-1
 பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால் 	3196-2
 மறப்பில் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி 	3196-3
 நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் 	3196-4

 43. அங்கு நின்றும் எழுந்து அருளி அளவில் அன்பின் உள் மகிழச் 	3197-1
 செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி 	3197-2
 மங்கை பாகர் தம்மைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று 	3197-3
 எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார் 	3197-4

 44.  நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர் 	3198-1
 என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி 	3198-2
 மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் 	3198-3
 சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து 	3198-4

 45. இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி 	3199-1
 நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப் 	3199-2
 புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய் 	3199-3
 உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் 	3199-4

 46. செறி புன் சடையார் திருவாரூர்ப் திருப் பங்குனி உத்தரத் திருநாள் 	3200-1
 குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவறுக்க 	3200-2
 நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் 	3200-3
 இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார் 	3200-4

 47. சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி 	3201-1
 முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித் 	3201-2
 தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து 	3201-3
 நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார் 	3201-4

 48. சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய 	3202-1
 வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் 	3202-2
 அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப 	3202-3
 மறி வண்கையார் அருளேயோ மலர்கண் துயில் வந்து எய்தியதால் 	3202-4

 49. துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப் 	3203-1
 பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன் 	3203-2
 அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய 	3203-3
 வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார் 	3203-4

 50. சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண் 	3204-1
 பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் 	3204-2
 வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்வே விரிசுடர்ச் செம் 	3204-3
 பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி 	3204-4

 51. தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல் 	3205-1
 கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு 	3205-2
 மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழிமாலை 	3205-3
 பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து 	3205-4

 52. பதிகம் பாடித் திருக் கடைக் காப் பணிந்து பரவிப் புறம் போந்தே 	3206-1
 எதிரில் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி 	3206-2
 நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் 	3206-3
 பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர் 	3206-4

 53. செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி 	3207-1
 எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி 	3207-2
 ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று 	3207-3
 உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் 	3207-4

 54. வளம் மல்கிய சீர்ப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி 	3208-1
 அளவில் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த் 	3208-2
 தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும் 	3208-3
 உளமன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார் 	3208-4

 55. வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் 	3209-1
 அந்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் 	3209-2
 சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் 	3209-3
 முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார் 	3209-4

 56. பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச் 	3210-1
 சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி 	3210-2
 வலம் மாக வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் 	3210-3
 தலமார்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை 	3210-4

 57. பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில் 	3211-1
 நீடு மறையால் மேம் பட்ட அந்தண் ஆளர் நிறைந்து ஈண்டி 	3211-2
 நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவாடைஉடன் 	3211-3
 மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து 	3211-4

 58. வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் 	3212-1
 சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் 	3212-2
 முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கி 	3212-3
 பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் 	3212-4

 59. படங்கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவிய 	3213-1
 விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி 	3213-2
 அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் 	3213-3
 தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள் 	3213-4

 60. வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால் 	3214-1
 தேசு மிக்க திருஅருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் 	3214-2
 பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் 	3214-3
 மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார் 	3214-4

 61. செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி 	3215-1
 விழுநீர் மையினில் பெரும் தொண்டர் விருப்பின் ஓடும் எதிர்கொள்ள 	3215-2
 மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கி 	3215-3
 தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள் 	3215-4

 62. புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிசைத்து 	3216-1
 முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில் 	3216-2
 பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து 	3216-3
 இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில் 	3216-4

 63. விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு 	3217-1
 உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் 	3217-2
 வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து செம்கணான் 	3217-3
 தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ் சொல் மாலை சாத்தினார் 	3217-4

 64. சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூடப் 	3218-1
 பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்ணோர் பாகத்து அண்ணலார் 	3218-2
 தீர்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து 	3218-3
 மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர் 	3218-4

 65. மன்னு மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள் 	3219-1
 பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன் 	3219-2
 அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை 	3219-3
 முன்னி புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார் 	3219-4

 66. பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை 	3220-1
 திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி 	3220-2
 உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து 	3220-3
 மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார் 	3220-4

 67. செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் 	3221-1
 மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் 	3221-2
 கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம் 	3221-3
 மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார் 	3221-4

 68. அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் 	3222-1
 மங்கைப் பாகர் வலம் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் 	3222-2
 தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் 	3222-3
 திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார் 	3222-4

 69. நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி 	3223-1
 எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய 	3223-2
 சொல்லூத்¢யமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி 	3223-3
 அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார் 	3223-4

 70.  அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளிக் 	3224-1
 கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின் 	3224-2
 கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் 	3224-3
 முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் 	3224-4

 71. தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை 	3225-1
 மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் 	3225-2
 சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு 	3225-3
 பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண் 	3225-4

 72.  மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று 	3226-1
 குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து 	3226-2
 நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் 	3226-3
 அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் 	3226-4

 73. அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து 	3227-1
 பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக் 	3227-2
 குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப் 	3227-3
 புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து 	3227-4

 74.  அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி 	3228-1
 தன்னேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து 	3228-2
 மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து 	3228-3
 பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார் 	3228-4

 75. செய்ய சடையார் திரு ஆனைக் காவில் அணைந்து திருத் தொண்டர் 	3229-1
 எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே 	3229-2
 ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து 	3229-3
 மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார் 	3229-4

 76.  மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் 	3230-1
 நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி 	3230-2
 இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் 	3230-3
 உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி 	3230-4

 77. வளவர் பெருமான் மணியாரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் 	3231-1
 கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போக ஏதம் உற 	3231-2
 அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித் 	3231-3
 தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார் 	3231-4

 78. சாற்றி அங்குத் தங்கு நாள் தயங்கும் பவளத் திருமேனி 	3232-1
 நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் 	3232-2
 போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவில் அன்பர் மருவிய தொண்டு 	3232-3
 ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் 	3232-4

 79. சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி 	3233-1
 முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி 	3233-2
 நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் 	3233-3
 நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று 	3233-4

 80. அன்பு நீங்கா அச்சம் உடன் திருத் தோழமைப் பணியால் 	3234-1
 பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் 	3234-2
 முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் 	3234-3
 என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் 	3234-4

 81. நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால் 	3235-1
 உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி 3235-2
 எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் 	3235-3
 வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் 	3235-4

 82. இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப 	3236-1
 மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள 	3236-2
 மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி 	3236-3
 எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் 	3236-4

 83. அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் 	3237-1
 எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் 	3237-2
 பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு 	3237-3
 துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார் 	3237-4

 84. கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி 	3238-1
 வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் 	3238-2
 கொண்டது ஓர் மயலல் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று 	3238-3
 அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார் 	3238-4

 85. பரவி அப் பதிகத் திருக் கடைக் கப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக் 	3239-1
 கரவில் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி 3239-2
 விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக் 	3239-3
 குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில் 	3239-4

 86. கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன் குறுகிச் 3240-1
 சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து 	3240-2
 பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி 	3240-3
 இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினில் எடுப்ப 	3240-4

 87.  அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும் 	3241-1
 எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத் 	3241-2
 திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் 	3241-3
 நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம் 	3241-4

 88. உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை 	3242-1
 நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் 	3242-2
 பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக் 	3242-3
 குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் 	3242-4

 89. அத் திருப்பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து 	3243-1
 மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க 	3243-2
 நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக் 	3243-3
 கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார் 	3243-4

 90. காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை உருக்கப் 3244-1
 பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் 	3244-2
 தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ 	3244-3
 ஆண் தகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் 3244-4

 91. அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பு அனார் இன்ப வெள்ளத்து 	3245-1
 மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவி 	3245-2
 பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால் 	3245-3
 என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார் 	3245-4

 92.  ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும் 	3246-1
 பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து 	3246-2
 மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து 	3246-3
 சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடிமலையில் 	3246-4

 93. வீடு தரும் இக் கல் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி 	3247-1
 நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப் 	3247-2
 பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி 	3247-3
 தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் 	3247-4

 94. செம் பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் 	3248-1
 நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட 	3248-2
 உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் 	3248-3
 இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார் 	3248-4

 95.  ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி 	3249-1
 ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் 	3249-2
 போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச் 	3249-3
 சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார் 	3249-4

 96.  அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் 	3250-1
 பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று 	3250-2
 எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புணைந்து உடன் எய்தினார் 	3250-3
 திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே 	3250-4

 97. அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில் 	3251-1
 ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் 	3251-2
 இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே 	3251-3
 முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் 	3251-4

 98. நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடுள்ளணைந்து 	3252-1
 ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று 	3252-2
 ஏடு உலாம் மலர் தூவி எட்டினெடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் 	3252-3
 பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார் 	3252-4

 99. அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால் 	3253-1
 பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து 	3253-2
 எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் 	3253-3
 தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் 	3253-4

 100. வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை 	3254-1
 தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னித் 	3254-2
 தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து 	3254-3
 கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார 	3254-4

 101. செப்பரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி 	3255-1
 ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு 	3255-2
 மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் 	3255-3
 முப்புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு 	3255-4

 102. நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் 	3256-1
 இன்றி யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன 	3256-2
 குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் 	3256-3
 சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல 	3256-4

 103. கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் 	3257-1
 வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி 	3257-2
 அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று 	3257-3
 கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார் 	3257-4

 104. கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம் 	3258-1
 பீடுயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க 	3258-2
 ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி 	3258-3
 நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார் 	3258-4

 105. தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் 	3259-1
 புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து 	3259-2
 நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் 	3259-3
 தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று 	3259-4

 106. நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் 	3260-1
 கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது 	3260-2
 தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ 	3260-3
 வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட 	3260-4

 107. பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டாயிரம் பொன் 	3261-1
 நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி 	3261-2
 தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று 	3261-3
 கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் 	3261-4

 108.  அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் 	3262-1
 மருளுற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் 	3262-2
 தெருளுற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்றில் இட்டிப் 	3262-3
 பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்3262-4

 109. என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர் 	3263-1
 வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில் 	3263-2
 பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போது கின்றார் 	3263-3
 அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று 	3263-4

 110. மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் 	3264-1
 ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் 	3264-2
 காவியங் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று 	3264-3
 வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார் 	3264-4

 111. மாடுள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் 	3265-1
 நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் 	3265-2
 ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச் 	3265-3
 சேடுயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் 	3265-4

 112. பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் 	3266-1
 நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் 	3266-2
 மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன் 	3266-3
 சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார் 	3266-4

 113.  ஆடிய திருமுன்பான அம் பொனின் கோபுரத்தின் 	3267-1
 ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் 	3267-2
 நாடகம் செய்யதாளை நண்ணுற உள் நிறைந்து 	3267-3
 நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய 	3267-4

 114. பரவுவாய் குளறிக் காதில் படி திருப் படியைத் தாழ்ந்து 	3268-1
 விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை 	3268-2
 உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் 	3268-3
 கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள 	3268-4

 115.  மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல் 3269-1
 அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் 	3269-2
 தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும் 	3269-3
 நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி 	3269-4

 116. மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திரு வீதி மேவித் தாழ்ந்தே 	3270-1
 ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி 	3270-2
 மாளாத பேர் அன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத் 	3270-3
 தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார் 	3270-4

 117. கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ3271-1
 ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப் 3271-2
 போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி 	3271-3
 சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில் 3271-4

 118. கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும் 3272-1
 மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி 3272-2
 எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது 3272-3
 புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி 	3272-4

 119. திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில் 3273-1
 உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் 	3273-2
 பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென் 	3273-3
 கருப்பு வயல் வாழ் கொளி புத்தூரை நீங்கிக் கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது 	3273-4

 120. கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு 3274-1
 தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று 	3274-2
 வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் 3274-3
 தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார் 3274-4

 121. எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும் 	3275-1
 சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி 3275-2
 அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி 3275-3
 முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் 3275-4

 122. காட்டு நல் வேள் விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் 	3276-1
 நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி 	3276-2
 ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு 	3276-3
 பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து 	3276-4

 123. எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி 	3277-1
 நஞ்சாரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி 	3277-2
 மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும் 	3277-3
 செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார் 	3277-4

 124. செல்வமலி திருவாரூர்த் தேவரொது முனிவர்களும் 	3278-1
 மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு 	3278-2
 எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப் 	3278-3
 பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார் 	3278-4

 125. மூவாத முதல் ஆகி நடுவாகி முடியாத 	3279-1
 சேவாரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள் 	3279-2
 ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து 	3279-3
 தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் 	3279-4

 126. பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்றப் 	3280-1
 பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி 	3280-2
 எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து 	3280-3
 மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் 	3280-4

 127. நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் 	3281-1
 தூய மணி முத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் 	3281-2
 கோயிலின் மாளிகை மேல் பாற்குளத்தில் அவர் அருளாலே 	3281-3
 போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல 	3281-4

 128.  என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று 	3282-1
 மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் 	3282-2
 நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் 	3282-3
 பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று 	3282-4

 129.  ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் 	3283-1
 பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி 	3283-2
 ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப் 	3283-3
 பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர் 	3283-4

 130. மற்றதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி 	3284-1
 முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர் 	3284-2
 கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து 	3284-3
 அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும் 	3284-4

 131. நீற்றழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று 	3285-1
 மாற்றுறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள 	3285-2
 ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ 	3285-3
 சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர் 	3285-4

 132.  முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை 	3286-1
 தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என 	3286-2
 மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் 	3286-3
 பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றிசைத்து 	3286-4

 133.  முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள் 	3287-1
 சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் 	3287-2
 இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு 	3287-3
 எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் 	3287-4

 134.  ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் 	3288-1
 காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் 	3288-2
 கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று 	3288-3
 நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் 	3288-4

 135. கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் 	3289-1
 வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற 	3289-2
 அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர் 	3289-3
 இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார் 	3289-4

 136. ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து 	3290-1
 மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க 	3290-2
 நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு 	3290-3
 மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர் 	3290-4

 137. மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் 	3291-1
 பாட்டுவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் 	3291-2
 ஓட்டறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல் 	3291-3
 காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார் 	3291-4

 138. கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம் 	3292-1
 நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கித் 	3292-2
 திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார் 	3292-3
 விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் 	3292-4

 139. வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து 	3293-1
 அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் 	3293-2
 சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சேயிழையாருடன் அமர்ந்தார் 	3293-3
 கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார் 	3293-4

 140. அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் 	3294-1
 பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் 	3294-2
 தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் 	3294-3
 துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார் 	3294-4

 141. பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி 	3295-1
 உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப 	3295-2
 கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் 	3295-3
 எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் 	3295-4

 142. இன்புற்று அங்கு அமர்நாளில் ஈறில் அரு மறை பரவும் 	3296-1
 வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே 	3296-2
 அன்புற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும் 	3296-3
 பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார் 	3296-4

 143. பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும் 	3297-1
 கரியுரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் 	3297-2
 துரிசறு நல் பெரும் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் 	3297-3
 புரிவுறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு அணைந்தார் 	3297-4

 144. விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக் 	3298-1
 கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து 	3298-2
 மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் 	3298-3
 புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார் 	3298-4

 145. அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் 	3299-1
 மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் 	3299-2
 திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து 	3299-3
 பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி 	3299-4

 146. திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் 	3300-1
 பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி 	3300-2
 மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த 	3300-3
 பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார் 	3300-4

 147. வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி 	3301-1
 உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் 	3301-2
 நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் 	3301-3
 திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் 	3301-4

 148. தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து 	3302-1
 பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் 	3302-2
 மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி 	3302-3
 நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில் 	3302-4

 149. நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் 	3303-1
 புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் 	3303-2
 பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் 	3303-3
 தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் 	3303-4

 150. நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி 	3304-1
 ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு 	3304-2
 என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் 	3304-3
 அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார் 	3304-4

 151. அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் 	3305-1
 செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் 	3305-2
 ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் 	3305-3
 மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் 	3305-4

 152.  மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது 	3306-1
 விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் 	3306-2
 அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி 	3306-3
 உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார் 	3306-4

 153. அம் கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக் 	3307-1
 கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக் 	3307-2
 கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப் 	3307-3
 பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் 	3307-4

 154. திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் 	3308-1
 பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி 	3308-2
 அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் 	3308-3
 பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் 	3308-4

 155. மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று 	3309-1
 தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி 	3309-2
 நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய் 	3309-3
 மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் 	3309-4

 156. உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி 	3310-1
 பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் 	3310-2
 கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து 	3310-3
 தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார் 	3310-4

 157. வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென் 	3311-1
 பான் நல் மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே 	3311-2
 ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் 	3311-3
 மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து 	3311-4

 158. குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத் 	3312-1
 திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன் 	3312-2
 வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால் 	3312-3
 பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி 	3312-4

 159.  ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச் 	3313-1
 சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன் 	3313-2
 காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி 	3313-3
 ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என 	3313-4

 160. வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு 	3314-1
 இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப் 	3314-2
 பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச் 	3314-3
 சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி 	3314-4


 161. எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் 	3315-1
 பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த 	3315-2
 உண்ணிறைந்த ஆரமுதாய் ஒருகாலும் உலவாதே 	3315-3
 புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் 	3315-4

 162. சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து 	3316-1
 பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி 	3316-2
 அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக் 	3316-3
 கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார் 	3316-4

 163. சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் 	3317-1
 அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை 	3317-2
 இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து 	3317-3
 மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் 	3317-4

 164. குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு 	3318-1
 அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு 	3318-2
 வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப் 	3318-3
 பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார் 	3318-4

 165. கண்ணார்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப் 	3319-1
 பண்ணார்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி 	3319-2
 உண்ணாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி 	3319-3
 நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் 	3319-4

 166. அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று 	3320-1
 மின்னார் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக் 	3320-2
 கன்னாடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி 	3320-3
 தென்னாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார் 	3320-4

 167. சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து 	3321-1
 ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் 	3321-2
 பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் 	3321-3
 போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார் 	3321-4

 168. திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய் 	3322-1
 நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப் 	3322-2
 பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர் 	3322-3
 கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார் 	3322-4

 169.  திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் 	3323-1
 பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு 	3323-2
 வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் 	3323-3
 செரு நாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள் அணைந்தார் 	3323-4

 170. மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை 	3324-1
 மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி 	3324-2
 ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் 	3324-3
 கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார் 	3324-4

 171. நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து 	3325-1
 குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து 	3325-2
 சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப் 	3325-3
 பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார் 	3325-4

 172. தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள் 	3326-1
 தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி 	3326-2
 வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே 	3326-3
 எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார் 	3326-4

 173. தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார் 	3327-1
 ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித் 	3327-2
 தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி 	3327-3
 பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் 	3327-4

 174. பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய் 	3328-1
 நாடிய நல்லுணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி 	3328-2
 ஆடக மா மதில் புடை சூழ் ஆலக்கோயிலின் அமுதைக் 	3328-3
 கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார் 	3328-4

 175. அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக் 	3329-1
 கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை 	3329-2
 தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில் 	3329-3
 புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார் 	3329-4

 176. வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் 	3330-1
 மின் தங்கு வெண் தலையோடு ஒழிந்து ஒரு வெற்றோடு ஏந்தி 	3330-2
 அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் 	3330-3
 சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார் 	3330-4

 177. மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட 	3331-1
 இப்பொழுதே சோறிரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன் 	3331-2
 அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் 	3331-3
 செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்றிரப்பார் 	3331-4

 178. வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் 	3332-1
 கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் 	3332-2
 புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் 	3332-3
 கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார் 	3332-4

 179. இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் 	3333-1
 அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப 	3333-2
 பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேணி 	3333-3
 நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் 	3333-4

 180. வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த 	3334-1
 ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப 	3334-2
 ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே 	3334-3
 நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார் 	3334-4

 181. திருநாவலூராளி சிவ யோகியார் நீங்க 	3335-1
 வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே 	3335-2
 பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் 	3335-3
 உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி 	3335-4

 182.  முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை 	3336-1
 அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி 	3336-2
 புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து 	3336-3
 மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார் 	3336-4

 183. வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் 	3337-1
 முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச் 	3337-2
 சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே 	3337-3
 அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் 	3337-4

 184.  அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய 	3338-1
 வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து 	3338-2
 நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம் 	3338-3
 இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார் 	3338-4

 185. மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி 	3339-1
 அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச் 	3339-2
 செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப் 	3339-3
 பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார் 	3339-4

 186.  ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி 	3340-1
 நீண்ட மதில்கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து 	3340-2
 பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப 	3340-3
 ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் 	3340-4

 187.  ஆழி நெடுமால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் 	3341-1
 பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச் 	3341-2
 சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு 	3341-3
 வாழி மணிப் பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் 	3341-4

 188. கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர 	3342-1
 ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த 	3342-2
 மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ் 	3342-3
 செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார் 	3342-4

 189. வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய்யன்பால் 	3343-1
 வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து 	3343-2
 சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த் 	3343-3
 தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் 	3343-4

 190. சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி 	3344-1
 நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி 	3344-2
 ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம் 	3344-3
 பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் 	3344-4

 191.  ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் 	3345-1
 பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் 	3345-2
 காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் 	3345-3
 யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார் 	3345-4

 192. அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து 	3346-1
 செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் 	3346-2
 தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் 	3346-3
 பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள் 	3346-4

 193. பாடல் இசையும் பாணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர் 	3347-1
 ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார் 	3347-2
 நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால் 	3347-3
 மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார் 	3347-4

 194. செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை 	3348-1
 அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் 	3348-2
 மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம் 	3348-3
 நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார் 	3348-4

 195. மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம் 	3349-1
 தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப் 	3349-2
 பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெரும் தொண்டர் 	3349-3
 சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார் 	3349-4

 196. தடுக்கலாகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் 	3350-1
 இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி 	3350-2
 அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும் 	3350-3
 அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் 	3350-4

 197. வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை 	3351-1
 அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் 	3351-2
 மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி 	3351-3
 இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் 	3351-4

 198. வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல் 	3352-1
 இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி 	3352-2
 நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து 	3352-3
 திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார் 	3352-4

 199. அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் 	3353-1
 தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப் 	3353-2
 பொங்கு புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத் 	3353-3
 திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார் 	3353-4

 200. அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள 	3354-1
 எண்ணில் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார் 	3354-2
 வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள் 	3354-3
 சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால் 	3354-4

 201. வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் 	3355-1
 புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி 	3355-2
 அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் 	3355-3
 பிரமன் தலையில் பலியுவந்த பிரானார் விரும்பும் தொண்டர் 	3355-4

 202. ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின் 	3356-1
 பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச் 	3356-2
 சுற்றம் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர் 	3356-3
 கொற்ற மழவேறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார் 	3356-4

 203. வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் 	3357-1
 கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி 	3357-2
 ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன் 	3357-3
 ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் 	3357-4

 204.  ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் 	3358-1
 நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில் 	3358-2
 கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப் 	3358-3
 பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார் 	3358-4

 205. பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்றப் புறம் போந்து 	3359-1
 நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத் 	3359-2
 தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம் 	3359-3
 கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார் 	3359-4

 206. இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக 	3360-1
 அந்தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநித்திதையார் 	3360-2
 வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் 	3360-3
 சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம் 	3360-4

 207. நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் 	3361-1
 மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் 	3361-2
 பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார் 	3361-3
 ஆலாலஞ் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் 	3361-4

 208. மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி 	3362-1
 தலையாம் உணர்வு வந்து அணையத் தாமே அரிந்த சங்கிலியார் 	3362-2
 அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு 	3362-3
 நிலையாயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார் 	3362-4

 209. சீர் கொள் மரப