thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, unicode format)


சேக்கிழார் அருளிய

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

முதற் காண்டம்

5 திருநின்ற சருக்கம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

5 திருநின்ற சருக்கம்

21 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
 1. திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ 	1266-1
 வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் 	1266-2
 பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் 	1266-3
 ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 	1266-4

 2. தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா 	1267-1
 நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் 	1267-2
 சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் 	1267-3
 மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு 	1267-4

 3. புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின் 	1268-1
 கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர் 	1268-2
 இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் 	1268-3
 வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் 	1268-4

 4. காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் 	1269-1
 பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு 	1269-2
 சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் 	1269-3
 மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை 	1269-4

 5. கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு 	1270-1
 இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் 	1270-2
 புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப 	1270-3
 உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும் 	1270-4

 6. கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட 	1271-1
 மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் 	1271-2
 பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க 	1271-3
 நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் 	1271-4

 7. நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் 	1272-1
 பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் 	1272-2
 துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை 	1272-3
 நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் 	1272-4

 8. மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும் 	1273-1
 உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் 	1273-2
 வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும் 	1273-3
 கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி 	1273-4

 9. மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச் 	1274-1
 செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப 	1274-2
 மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை 	1274-3
 வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை 	1274-4

 10. எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் 	1275-1
 பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும் 	1275-2
 வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி 	1275-3
 மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும் 	1275-4

 11. மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி 	1276-1
 அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் 	1276-2
 பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் 	1276-3
 சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு 	1276-4

 12. இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும்   என்றும் 	1277-1
 மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் 	1277-2
 சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் 	1277-3
 தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர் 	1277-4

 13.  ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை 	1278-1
 ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி 	1278-2
 ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம் 	1278-3
 நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் 	1278-4

 14. மலர் நீலம் வயல் காட்டும் மைஞ்   ஞீலம் மதி காட்டும் 	1279-1
 அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும் 	1279-2
 புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் 	1279-3
 கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள் 	1279-4

 15. தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித 	1280-1
 நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் 	1280-2
 விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்¢லைவேளாண் 	1280-3
 குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் 	1280-4

 16. அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார் 	1281-1
 மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் 	1281-2
 ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் 	1281-3
 திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் 	1281-4

 17. புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் 	1282-1
 மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் 	1282-2
 நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் 	1282-3
 திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் 	1282-4

 18. திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் 	1283-1
 அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ 	1283-2
 உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் 	1283-3
 மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் 	1283-4

 19. மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார் 	1284-1
 காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் 	1284-2
 மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் 	1284-3
 ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார் 	1284-4

 20. மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் 	1285-1
 தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் 	1285-2
 பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த 	1285-3
 சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார் 	1285-4

 21. தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் 	1286-1
 சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் 	1286-2
 முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை 	1286-3
 மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார் 	1286-4

 22. அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் 	1287-1
 முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் 	1287-2
 மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார் 	1287-3
 பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார் 	1287-4

 23.  ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் 	1288-1
 காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் 	1288-2
 பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள 	1288-3
 வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார் 	1288-4

 24. அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு 	1289-1
 மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் 	1289-2
 குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் 	1289-3
 பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார் 	1289-4

 25. கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் 	1290-1
 முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் 	1290-2
 மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல் 	1290-3
 அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார் 	1290-4

 26. வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு 	1291-1
 போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் 	1291-2
 காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை 	1291-3
 நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் 	1291-4

 27.  ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த 	1292-1
 தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை 	1292-2
 மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் 	1292-3
 தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் 	1292-4

 28. மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் 	1293-1
 சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப் 	1293-2
 பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் 	1293-3
 கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் 	1293-4

 29. தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் 	1294-1
 மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த 	1294-2
 காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால் 	1294-3
 பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் 	1294-4

 30. ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து 	1295-1
 பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் 	1295-2
 மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் 	1295-3
 பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார் 	1295-4

 31. வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் 	1296-1
 அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் 	1296-2
 தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் 	1296-3
 செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் 	1296-4

 32.  எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள் 	1297-1
 அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் 	1297-2
 இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய 	1297-3
 வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் 	1297-4

 33. அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற 	1298-1
 பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன் 	1298-2
 என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் 	1298-3
 முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் 	1298-4

 34.  தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா 	1299-1
 உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி 	1299-2
 அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி 	1299-3
 இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் 	1299-4

 35. மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித் 	1300-1
 தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் 	1300-2
 காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் 	1300-3
 ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் 	1300-4

 36. கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் 	1301-1
 மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் 	1301-2
 நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் 	1301-3
 யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் 	1301-4

 37. நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை 	1302-1
 அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின் 	1302-2
 நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால் 	1302-3
 கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் 	1302-4

 38. பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 	1303-1
 மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு 	1303-2
 வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் 	1303-3
 கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 	1303-4

 39. அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் 	1304-1
 பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் 	1304-2
 துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் 	1304-3
 தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் 	1304-4

 40. அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் 	1305-1
 சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண் 	1305-2
 உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய 	1305-3
 வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் 	1305-4

 41. அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் 	1306-1
 செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும் 	1306-2
 தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ 	1306-3
 நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் 	1306-4

 42. பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் 	1307-1
 ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் 	1307-2
 நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் 	1307-3
 சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் 	1307-4

 43. சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் 	1308-1
 குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம் 	1308-2
 அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் 	1308-3
 துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் 	1308-4

 44. புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற 	1309-1
 நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு 	1309-2
 மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் 	1309-3
 பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் 	1309-4

 45. நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில் 	1310-1
 கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் 	1310-2
 கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு 	1310-3
 மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து 	1310-4

 46. தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை 	1311-1
 ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை 	1311-2
 ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள 	1311-3
 வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் 	1311-4

 47.  தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் 	1312-1
 அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் 	1312-2
 சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் 	1312-3
 பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் 	1312-4

 48. மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார் 	1313-1
 உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் 	1313-2
 முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் 	1313-3
 அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி 	1313-4

 49. பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும் 	1314-1
 தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் 	1314-2
 கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய 	1314-3
 மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால் 	1314-4

 50. அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது 	1315-1
 வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் 	1315-2
 கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் 	1315-3
 படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார் 	1315-4

 51. அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் 	1316-1
 விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி 	1316-2
 உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் 	1316-3
 நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார் 	1316-4

 52. அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் 	1317-1
 கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை 	1317-2
 இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் 	1317-3
 தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார் 	1317-4

 53. புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது 	1318-1
 குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை 	1318-2
 கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் 	1318-3
 பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார் 	1318-4

 54. தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி 	1319-1
 ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய் 	1319-2
 ஆ!  ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப் 	1319-3
 போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று 	1319-4

 55. குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு 	1320-1
 மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப் 	1320-2
 பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக் 	1320-3
 கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த 	1320-4

 56.  ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார் 	1321-1
 பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி 	1321-2
 ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் 	1321-3
 தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் 	1321-4

 57.  கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை 	1322-1
 எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த 	1322-2
 நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு 	1322-3
 அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் 	1322-4

 58. என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து 	1323-1
 நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் 	1323-2
 சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய 	1323-3
 அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் 	1323-4

 59. அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் 	1324-1
 எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் 	1324-2
 ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் 	1324-3
 செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என 	1324-4

 60. எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி 	1325-1
 அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு 	1325-2
 உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் 	1325-3
 தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் 	1325-4

 61. பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து 	1326-1
 மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து 	1326-2
 கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் 	1326-3
 செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் 	1326-4

 62. சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக் 	1327-1
 குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று 	1327-2
 இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில் 	1327-3
 திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார் 	1327-4

 63. வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி 	1328-1
 நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் 	1328-2
 இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது 	1328-3
 உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து 	1328-4

 64. தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி 	1329-1
 ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது 	1329-2
 கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது 	1329-3
 மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார் 	1329-4

 65. மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும் 	1330-1
 உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் 	1330-2
 கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் 	1330-3
 பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் 	1330-4

 66. என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச 	1331-1
 நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து 	1331-2
 சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் 	1331-3
 குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் 	1331-4

 67. திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப 	1332-1
 பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு 	1332-2
 உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி 	1332-3
 தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் 	1332-4

 68. நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் 	1333-1
 மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் 	1333-2
 சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு 	1333-3
 ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் 	1333-4

 69. திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக 	1334-1
 வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் 	1334-2
 தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் 	1334-3
 உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் 	1334-4

 70. நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக 	1335-1
 மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் 	1335-2
 கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதில் திருப்பதிகம் 	1335-3
 போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர் நின்று புகன்றனரால் 	1335-4

 71. மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான் 	1336-1
 அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் 	1336-2
 செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர் 	1336-3
 முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே 	1336-4

 72. அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் 	1337-1
 பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் 	1337-2
 இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் 	1337-3
 தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார் 	1337-4

 73. பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம் 	1338-1
 அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் 	1338-2
 மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் 	1338-3
 இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார் 1338-4

 74. மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் 	1339-1
 பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் 	1339-2
 நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று 	1339-3
 யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே 	1339-4

 75. இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் 1340-1
 சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா 	1340-2
 அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் 	1340-3
 மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே 	1340-4

 76.  பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து 1341-1
 அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் 1341-2
 முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் 	1341-3
 நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 	1341-4

 77. மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் 	1342-1
 மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே 	1342-2
 எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் 	1342-3
 கையில் திகழும் உழவாரமுடன் கைக் கொண்டு கலந்து கசிந்தனரே 	1342-4

 78. மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் 1343-1
 தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத் தன்மைப் பதி மேவியதா பதியார் 	1343-2
 பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா 	1343-3
 எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே 1343-4

 79. இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி 	1344-1
 மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம் 	1344-2
 பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் 	1344-3
 புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய் 	1344-4

 80. தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை 	1345-1
 ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப் 	1345-2
 பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் 	1345-3
 மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் 	1345-4

 81. மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் 	1346-1
 நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் 	1346-2
 கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் 	1346-3
 தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் 	1346-4

 82. இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி 	1347-1
 மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு 	1347-2
 சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் 	1347-3
 செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் 	1347-4

 83.  தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் 	1348-1
 பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு 	1348-2
 எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும் 	1348-3
 தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார் 	1348-4

 84. சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் 	1349-1
 முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே 	1349-2
 இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல 	1349-3
 மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் 	1349-4

 85. உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் 	1350-1
 கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் 	1350-2
 அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன 	1350-3
 இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் 	1350-4

 86. அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து 	1351-1
 கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற 	1351-2
 வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் 	1351-3
 கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான் 	1351-4

 87. கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் 	1352-1
 நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு 	1352-2
 உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் 	1352-3
 சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் 	1352-4

 88. விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து 	1353-1
 புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு 	1353-2
 உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே 	1353-3
 கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான் 	1353-4

 89.  தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய 	1354-1
 நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை 	1354-2
 அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் 	1354-3
 கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் 	1354-4

 90. அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று 	1355-1
 மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் 	1355-2
 தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 	1355-3
 பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான் 	1355-4

 91. அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே 	1356-1
 முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து 	1356-2
 விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி 	1356-3
 பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் 	1356-4

 92. சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து 	1357-1
 மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை 	1357-2
 இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என 	1357-3
 நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் 	1357-4

 93. நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் 	1358-1
 கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத் 	1358-2
 தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி 	1358-3
 ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார் 	1358-4

 94.  ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி 	1359-1
 வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் 	1359-2
 ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் 	1359-3
 மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் 	1359-4

 95. பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை 	1360-1
 வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் 	1360-2
 சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத 	1360-3
 புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் 	1360-4

 96. அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் 	1361-1
 பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை 	1361-2
 உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் 	1361-3
 திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் 	1361-4

 97.  ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் 	1362-1
 தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே 	1362-2
 ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று 	1362-3
 மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் 	1362-4

 98. வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் 	1363-1
 தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று 	1363-2
 மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 	1363-3
 ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே 	1363-4

 99. மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் 	1364-1
 பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை 	1364-2
 ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை 	1364-3
 ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் 	1364-4

 100.  ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப் 	1365-1
 பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் 	1365-2
 கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் 	1365-3
 தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள் 	1365-4

 101.  ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் 	1366-1
 தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி 	1366-2
 ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே 	1366-3
 ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் 	1366-4

 102.  அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால் 	1367-1
 இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து 	1367-2
 மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று 	1367-3
 முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் 	1367-4

 103.  ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் 	1368-1
 ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் 	1368-2
 தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் 	1368-3
 பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார் 	1368-4

 104.  நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று 	1369-1
 வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே 	1369-2
 செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் 	1369-3
 வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் 	1369-4

 105. பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள் 	1370-1
 முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால் 	1370-2
 படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய 	1370-3
 அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ 	1370-4

 106. அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப 	1371-1
 வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே 	1371-2
 இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் 	1371-3
 தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார் 	1371-4

 107.  நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் 	1372-1
 தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் 	1372-2
 எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் 	1372-3
 துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் 	1372-4

 108. மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் 	1373-1
 செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப 	1373-2
 உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் 	1373-3
 கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார் 	1373-4

 109. மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம் 	1374-1
 கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் 	1374-2
 பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் 	1374-3
 கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் 	1374-4

 110. கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு 	1375-1
 மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் 	1375-2
 தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் 	1375-3
 வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் 	1375-4

 111. பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா 	1376-1
 மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா 	1376-2
 ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா 	1376-3
 வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால் 	1376-4

 112. இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில் 	1377-1
 படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் 	1377-2
 கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் 	1377-3
 முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே 	1377-4

 113. மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் 	1378-1
 கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச் 	1378-2
 சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று 	1378-3
 ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே 	1378-4

 114. பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர் 	1379-1
 நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல் 	1379-2
 ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் 	1379-3
 சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர் 	1379-4

 115. அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு 	1380-1
 விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் 	1380-2
 சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை 	1380-3
 மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் 	1380-4

 116. வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் 	1381-1
 செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் 	1381-2
 வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம் 	1381-3
 அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் 	1381-4

 117. தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக் 	1382-1
 கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத் 	1382-2
 தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் 	1382-3
 எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் 	1382-4

 118.  ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் 	1383-1
 தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து 	1383-2
 மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி 	1383-3
 ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே 	1383-4

 119.  ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து 	1384-1
 நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக 	1384-2
 நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல 	1384-3
 ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே 	1384-4

 120. யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் 	1385-1
 மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித் 	1385-2
 தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப 	1385-3
 மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் 	1385-4

 121. நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் 	1386-1
 எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் 	1386-2
 பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் 	1386-3
 பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் 	1386-4

 122. அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் 	1387-1
 தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச் 	1387-2
 சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் 	1387-3
 கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் 	1387-4

 123.  ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் 	1388-1
 தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் 	1388-2
 பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் 	1388-3
 வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் 	1388-4

 124. அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த 	1389-1
 வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் 	1389-2
 செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் 	1389-3
 பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர் 	1389-4

 125. அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் 	1390-1
 ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் 	1390-2
 எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று 	1390-3
 செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் 	1390-4

 126.  சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி 	1391-1
 நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று 	1391-2
 அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு 	1391-3
 பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் 	1391-4

 127. பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் 	1392-1
 அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு 	1392-2
 அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் 	1392-3
 கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே 	1392-4

 128. அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத் 	1393-1
 தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் 	1393-2
 தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் 	1393-3
 மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார் 	1393-4

 129. இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் 	1394-1
 வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட 	1394-2
 அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் 	1394-3
 ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ 	1394-4

 130. அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக் 	1395-1
 கருணை நாவரசினைத் திரைக் கரங்களால் 	1395-2
 தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட 	1395-3
 வருணனும் செய்தனன் முன்பு மா தவம் 	1395-4

 131. வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் 	1396-1
 சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட 	1396-2
 ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன் 	1396-3
 பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் 	1396-4

 132. அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை 	1397-1
 மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ 	1397-2
 எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல் 	1397-3
 தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே 	1397-4

 133. தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் 	1398-1
 செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் 	1398-2
 கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற 	1398-3
 விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் 	1398-4

 134.  ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் 	1399-1
 தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று 	1399-2
 வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் 	1399-3
 சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே 	1399-4

 135. மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி 	1400-1
 வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் 	1400-2
 உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் 	1400-3
 செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார் 	1400-4

 136. தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் 	1401-1
 மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் 	1401-2
 பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின் 	1401-3
 காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார் 	1401-4

 137. வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம் 	1402-1
 எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள 	1402-2
 மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம் 	1402-3
 தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் 	1402-4

 138. மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி 	1403-1
 இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் 	1403-2
 தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி 	1403-3
 அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் 	1403-4

 139. மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் 	1404-1
 இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் 	1404-2
 பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் 	1404-3
 தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே 	1404-4

 140. தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் 	1405-1
 நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் 	1405-2
 பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல் 	1405-3
 மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே 	1405-4

 141. கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் 	1406-1
 மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம் 	1406-2
 உண்டாய்¢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் 	1406-3
 தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே 	1406-4

 142. இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த 	1407-1
 மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல 	1407-2
 அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் 	1407-3
 செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே 	1407-4

 143. உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி 	1408-1
 நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே 	1408-2
 எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று 	1408-3
 தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் 	1408-4

 144. அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை 	1409-1
 விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத் 	1409-2
 தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம் 	1409-3
 பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள் 	1409-4

 145. புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் 	1410-1
 பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய 	1410-2
 அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து 	1410-3
 வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான் 	1410-4

 146. வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த 	1411-1
 காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப் 	1411-2
 பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் 	1411-3
 கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் 	1411-4

 147. இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு 	1412-1
 மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் 	1412-2
 பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் 	1412-3
 சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் 	1412-4

 148. திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும் 	1413-1
 அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா 	1413-2
 மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் 	1413-3
 பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார் 	1413-4

 149. கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் 	1414-1
 சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி 	1414-2
 வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் 	1414-3
 பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் 	1414-4

 150.  புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன் 	1415-1
 தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு 	1415-2
 என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று 	1415-3
 பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார் 	1415-4

 151.  பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து 	1416-1
 முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் 	1416-2
 தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை 	1416-3
 நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் 	1416-4

 152. நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற 	1417-1
 ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் 	1417-2
 மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில் 	1417-3
 சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த 	1417-4

 153.  ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் 	1418-1
 தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து 	1418-2
 தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் 	1418-3
 ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் 	1418-4

 154. தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் 	1419-1
 பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் 	1419-2
 பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் 	1419-3
 தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து 	1419-4

 155. வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள 	1420-1
 தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம் 	1420-2
 கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் 	1420-3
 புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார் 	1420-4

 156.  ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற 	1421-1
 வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி 	1421-2
 ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து 	1421-3
 தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார் 	1421-4

 157. நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால் 	1422-1
 மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் 	1422-2
 காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் 	1422-3
 வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார் 	1422-4

 158. முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் 	1423-1
 அருகில் செறிவனம் என மிக்குயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் 	1423-2
 பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிக் கண்டு 	1423-3
 உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன என முன்புள வயல் எங்கும் 	1423-4

 159. அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் 1424-1
 பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் 	1424-2
 பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் 	1424-3
 செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் 	1424-4

 160. அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் 1425-1
 தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் 1425-2
 இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே 	1425-3
 சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை 	1425-4

 161. அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் 	1426-1
 நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் 	1426-2
 செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் 1426-3
 பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்துற்றார் 	1426-4

 162. அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் 	1427-1
 மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் 	1427-2
 கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் 	1427-3
 செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி 	1427-4

 163. நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் 	1428-1
 புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருந்திய மணி போகட்டிப் 	1428-2
 பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று 	1428-3
 எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள் 	1428-4

 164. மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும் 1429-1
 கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே 	1429-2
 ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் 	1429-3
 ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுதுள்புக்கார் 	1429-4

 165. வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா 1430-1
 அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் 	1430-2
 புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன் கோபுரம் அது புகுவார் முன் 	1430-3
 களனில் பொலிவிடம் உடையார் நடநவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார் 	1430-4

 166. நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே 	1431-1
 கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரு நிலை கூடத் 	1431-2
 தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா 	1431-3
 ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் 	1431-4

 167. கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே 	1432-1
 பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின 	1432-2
 பேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு 	1432-3
 ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் 	1432-4

 168. இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் 	1433-1
 அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் 	1433-2
 மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் 	1433-3
 சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் 	1433-4

 169.  பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் 	1434-1
 அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று 	1434-2
 இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலைப் பாடி 	1434-3
 கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் 	1434-4

 170. நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் 	1435-1
 ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் 	1435-2
 கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் 	1435-3
 பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார் 	1435-4

 171. அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் 	1436-1
 திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரங் கொண்டு 	1436-2
 பெருத்து எழு காதலோடும் பெரும் திருத் தொண்டு செய்து 	1436-3
 விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட 	1436-4

 172. மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச் 	1437-1
 சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் 	1437-2
 காவியம் கண்டார் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் 	1437-3
 நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ 	1437-4

 173. சின விடை யேறுகைத் தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 	1438-1
 வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று 	1438-2
 அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி 	1438-3
 நினைவரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் 	1438-4

 174. மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி 1439-1
 நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் 	1439-2
 நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் 	1439-3
 தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார் 	1439-4

 175.  அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை 	1440-1
 பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி 	1440-2
 விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேலி ஆடல் 	1440-3
 புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் 	1440-4

 176.  செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை 	1441-1
 அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த 	1441-2
 நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் 	1441-3
 தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் 	1441-4

 177. கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண் 	1442-1
 விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் 	1442-2
 அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த 	1442-3
 உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார் 	1442-4

 178.  ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே 	1443-1
 ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல 	1443-2
 காழி வரும் பெரும் தகை சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர 	1443-3
 வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த 	1443-4

 179. அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப் 	1444-1
 பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே 	1444-2
 எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 	1444-3
 செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார் 	1444-4

 180. தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் 	1445-1
 கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் 	1445-2
 தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் 	1445-3
 வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் 	1445-4

 181. நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் 	1446-1
 ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் 	1446-2
 காண்டகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு 	1446-3
 மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார் 	1446-4

 182. தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 1447-1
 பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 	1447-2
 எழுதரிய மலக்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை 	1447-3
 அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் 	1447-4

 183. அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த 	1448-1
 செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி 	1448-2
 எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி 	1448-3
 உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம் 	1448-4

 184.  பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான 	1449-1
 வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க 	1449-2
 உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும் 	1449-3
 வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் 	1449-4

 185. அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் 1450-1
 பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய 1450-2
 இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் 1450-3
 தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே 1450-4

 186. பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு 	1451-1
 விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச் 1451-2
 சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் 	1451-3
 கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி 1451-4

 187. பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று 1452-1
 பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி 	1452-2
 அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து 1452-3
 மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் 1452-4

 188. அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத 1453-1
 சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் 	1453-2
 மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற 1453-3
 மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் 1453-4

 189.  ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு 	1454-1
 மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான 1454-2
 நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும் 	1454-3
 காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் 1454-4

 190. மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் 	1455-1
 காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி 1455-2
 பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே 1455-3
 ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார் 1455-4

 191.  ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து 	1456-1
 மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2
 பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் 1456-3
 பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு கைத் தொண்டு போற்றிச் செய்வார் 1456-4

 192. எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு 	1457-1
 மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 	1457-2
 பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 	1457-3
 செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார் 1457-4

 193. சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை 	1458-1
 குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும் 	1458-2
 என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் 	1458-3
 முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் 	1458-4

 194.  கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் 	1459-1
 பூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று 	1459-2
 நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் 	1459-3
 வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் 	1459-4

 195. நன்மை பெருகஅருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் 	1460-1
 மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் 	1460-2
 உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் என்று அவர்தம் 	1460-3
 சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான் 	1460-4

 196.  நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று 	1461-1
 புனையும் திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் 	1461-2
 நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத 	1461-3
 தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் 	1461-4

 197. நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் 	1462-1
 மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து 	1462-2
 பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித் 	1462-3
 தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் 	1462-4

 198. கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் அமர்ந்து அருளும் 	1463-1
 திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் 	1463-2
 பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் 	1463-3
 ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார் 	1463-4

 199.  ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் 	1464-1
 வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து 	1464-2
 காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு 	1464-3
 நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் 	1464-4

 200. அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் 	1465-1
 ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் 	1465-2
 மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் 	1465-3
 செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் 	1465-4

 201. அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் 	1466-1
 தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் 	1466-2
 பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை 	1466-3
 வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண 	1466-4

 202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் 	1467-1
 சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் 	1467-2
 கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் 	1467-3
 பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் 	1467-4

 203. காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார் 	1468-1
 பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் 	1468-2
 வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் 	1468-3
 ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து 	1468-4

 204. திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம் 	1469-1
 பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு 	1469-2
 தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் 	1469-3
 குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் 	1469-4

 205.  ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே 	1470-1
 பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் 	1470-2
 தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள 	1470-3
 ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் 	1470-4

 206. தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் 	1471-1
 தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் 	1471-2
 மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் 	1471-3
 தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் 	1471-4

 207. தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி 	1472-1
 எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச 	1472-2
 உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் 	1472-3
 நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் 	1472-4

 208. அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் 	1473-1
 கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே 	1473-2
 ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் 	1473-3
 பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் 	1473-4

 209. அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது 	1474-1
 இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க 	1474-2
 வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் 	1474-3
 விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் 	1474-4

 210. திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் 	1475-1
 பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து 	1475-2
 தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து 	1475-3
 பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் 	1475-4

 211. புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் 	1476-1
 அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை 	1476-2
 நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் 	1476-3
 தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார் 	1476-4

 212. எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் 	1477-1
 தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் 	1477-2
 தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் 	1477-3
 செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார் 	1477-4

 213. சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த 	1478-1
 ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து 	1478-2
 சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று 	1478-3
 கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார் 	1478-4

 214. அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது 	1479-1
 பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் 	1479-2
 தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு 	1479-3
 செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார் 	1479-4

 215. நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை 	1480-1
 பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து 	1480-2
 சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி 	1480-3
 அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி 	1480-4

 216. நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் 	1481-1
 பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி 	1481-2
 மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக் 	1481-3
 சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார் 	1481-4

 217. பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி 	1482-1
 முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் 	1482-2
 திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் 	1482-3
 மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் 	1482-4

 218.  ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் 	1483-1
 நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் 	1483-2
 காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் 	1483-3
 சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார் 	1483-4

 219. வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் 	1484-1
 கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் 	1484-2
 எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது 	1484-3
 சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார் 	1484-4

 220. பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் 	1485-1
 உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே 	1485-2
 புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று 	1485-3
 அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார் 	1485-4

 221. சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி 	1486-1
 வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி 	1486-2
 ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து 	1486-3
 நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் 	1486-4

 222. கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் 	1487-1
 கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் 	1487-2
 தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் 	1487-3
 புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து 	1487-4

 223.  காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் 	1488-1
 தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி 	1488-2
 ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு 	1488-3
 பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார் 	1488-4

 224. செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து 	1489-1
 கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக் 	1489-2
 கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று 	1489-3
 எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே 	1489-4

 225. மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் 	1490-1
 சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே 	1490-2
 சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் 	1490-3
 பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார் 	1490-4

 226. நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் 	1491-1
 கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் 	1491-2
 பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி 	1491-3
 நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் 	1491-4

 227. நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை 	1492-1
 பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடி 	1492-2
 தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை 	1492-3
 ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில் 	1492-4

 228. நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று 	1493-1
 வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் 	1493-2
 கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி 	1493-3
 ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே 	1493-4

 229. மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில் 	1494-1
 தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து 	1494-2
 மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி 	1494-3
 நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே 	1494-4

 230. திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் 	1495-1
 விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர 	1495-2
 ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் 	1495-3
 பொருப்பரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் 	1495-4

 231. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும் 	1496-1
 பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் 	1496-2
 புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி 	1496-3
 மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை 	1496-4

 232.  ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் 	1497-1
 நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி 	1497-2
 மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் 	1497-3
 ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார் 	1497-4

 233. கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு 1498-1
 வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் 	1498-2
 திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் 	1498-3
 இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே 	1498-4

 234. திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை 	1499-1
 பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர் 	1499-2
 வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற 	1499-3
 அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார் 	1499-4

 235.  சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் 	1500-1
 மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் 	1500-2
 இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் 	1500-3
 முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை 	1500-4

 236. அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை 	1501-1
 மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் 	1501-2
 கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே 	1501-3
 உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் 	1501-4

 237. மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் 	1502-1
 தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக 	1502-2
 நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் 	1502-3
 பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் 	1502-4

 238. அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம் 	1503-1
 சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் 	1503-2
 மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப் 	1503-3
 பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார் 	1503-4

 239. தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் 	1504-1
 பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு 	1504-2
 மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே 	1504-3
 ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் 	1504-4

 240. சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு 	1505-1
 ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி 	1505-2
 வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் 	1505-3
 ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் 	1505-4

 241. அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் 	1506-1
 துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் 	1506-2
 மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் 	1506-3
 பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் 	1506-4

 242. பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் 	1507-1
 உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண் 	1507-2
 வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள 	1507-3
 எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார் 	1507-4

 243.  ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம் 	1508-1
 ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப் 	1508-2
 பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை 	1508-3
 நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் 	1508-4

 244. திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப் 	1509-1
 பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் 	1509-2
 விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு 	1509-3
 ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் 	1509-4

 245. அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற 	1510-1
 மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் 	1510-2
 முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் 	1510-3
 பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார் 	1510-4

 246. திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் 	1511-1
 பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக 	1511-2
 ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் 	1511-3
 வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார் 	1511-4

 247. செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் 	1512-1
 பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் 	1512-2
 குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப 	1512-3
 அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள் 	1512-4

 248. சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி 	1513-1
 ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து 	1513-2
 கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று 	1513-3
 தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார் 	1513-4

 249. சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் 	1514-1
 கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து 	1514-2
 வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் 	1514-3
 சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை 	1514-4

 250. வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் 	1515-1
 காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் 	1515-2
 ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் 	1515-3
 வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார் 	1515-4

 251. மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு 	1516-1
 நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் 	1516-2
 பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் 	1516-3
 கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் 	1516-4

 252. சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் 	1517-1
 குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு 	1517-2
 முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி 	1517-3
 வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் 	1517-4

 253. கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக 	1518-1
 மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை 	1518-2
 செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று 	1518-3
 உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க 	1518-4

 254. முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத 	1519-1
 பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப் 	1519-2
 பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய் 	1519-3
 அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள் 	1519-4

 255. சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் 	1520-1
 மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் 	1520-2
 நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் 	1520-3
 பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் 	1520-4

 256. வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற 	1521-1
 நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் 	1521-2
 கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் 	1521-3
 செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார் 	1521-4

 257.  கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் 	1522-1
 ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று 	1522-2
 கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் 	1522-3
 ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் 	1522-4

 258. விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் 	1523-1
 அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் 	1523-2
 நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில் 	1523-3
 எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் 	1523-4

 259.  அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு 	1524-1
 பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் 	1524-2
 எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் 	1524-3
 சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் 	1524-4

 260.  ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால் 	1525-1
 தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால் 	1525-2
 காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால் 	1525-3
 வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் 	1525-4

 261.  ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால் 	1526-1
 ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் 	1526-2
 சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே 	1526-3
 ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில் 	1526-4

 262. காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து 	1527-1
 ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப 	1527-2
 மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி 	1527-3
 நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் 	1527-4

 263. வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு 	1528-1
 பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் 	1528-2
 ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச் 	1528-3
 சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார் 	1528-4

 264. மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் 	1529-1
 முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் 	1529-2
 குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு 	1529-3
 சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு 	1529-4

 265. பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் 	1530-1
 அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து 	1530-2
 உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் 	1530-3
 வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் 	1530-4

 266. தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற 	1531-1
 வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி 	1531-2
 அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு 	1531-3
 எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார் 	1531-4

 267.  ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர் 	1532-1
 ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத் 	1532-2
 தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு 	1532-3
 நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர் 	1532-4

 268. உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே 	1533-1
 பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் 	1533-2
 தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு 	1533-3
 எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் 	1533-4

 269. வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம் 	1534-1
 காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு 	1534-2
 நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் 	1534-3
 ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் 	1534-4

 270. அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும் 	1535-1
 இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் 	1535-2
 முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி 	1535-3
 என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் 	1535-4

 271. புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் 	1536-1
 திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில் 	1536-2
 கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை 	1536-3
 நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என 	1536-4

 272. சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் 	1537-1
 பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் 	1537-2
 கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே 	1537-3
 திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில் 	1537-4

 273. அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து 	1538-1
 இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் 	1538-2
 பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார் 	1538-3
 எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல் 	1538-4

 274. அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப் 	1539-1
 பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய 	1539-2
 எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் 	1539-3
 நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் 	1539-4

 275. அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை 	1540-1
 கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று 	1540-2
 பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து 	1540-3
 மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் 	1540-4

 276. மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் 	1541-1
 உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம் 	1541-2
 பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும் 	1541-3
 துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார் 	1541-4

 277. போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி 	1542-1
 ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து 	1542-2
 வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே 	1542-3
 ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள 	1542-4

 278. சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் 	1543-1
 ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல் 	1543-2
 நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் 	1543-3
 பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால் 	1543-4

 279. அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் 	1544-1
 பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் 	1544-2
 துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி 	1544-3
 மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் 	1544-4

 280.  அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து 1545-1
 பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் 	1545-2
 உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த 	1545-3
 தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என 	1545-4

 281. மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் 	1546-1
 நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள 	1546-2
 ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் 	1546-3
 பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார் 	1546-4

 282. பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள 	1547-1
 நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து 	1547-2
 சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து 	1547-3
 நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார் 	1547-4

 283.  ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து 	1548-1
 பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி 	1548-2
 மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு 	1548-3
 மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் 	1548-4

 284.  ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் 	1549-1
 சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் 	1549-2
 கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார் 	1549-3
 போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண 	1549-4

 285. வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி 	1550-1
 அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க 	1550-2
 சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வனவத் தீங்கும் உளவாமோ 	1550-3
 இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் 	1550-4

 286. சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும் 	1551-1
 பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே 	1551-2
 அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத் 	1551-3
 தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர் 	1551-4

 287.  ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் 	1552-1
 காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் 	1552-2
 மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த 	1552-3
 தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் 	1552-4

 288. என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் 	1553-1
 சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர் 	1553-2
 நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி 	1553-3
 ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார் 	1553-4

 289.  போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் 	1554-1
 தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன 	1554-2
 ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் 	1554-3
 தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார் 	1554-4

 290. வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர் 	1555-1
 பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் 	1555-2
 பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் 	1555-3
 தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் 	1555-4

 291. சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் 1556-1
 வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என 	1556-2
 ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து 	1556-3
 சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார் 	1556-4

 292. வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப 	1557-1
 ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த 	1557-2
 வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத் 	1557-3
 தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார் 	1557-4

 293. பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த 	1558-1
 ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி 	1558-2
 நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் 	1558-3
 பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார் 	1558-4

 294. செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் 	1559-1
 மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக் 	1559-2
 கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம் 	1559-3
 பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி 	1559-4

 295. அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் 	1560-1
 கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி 	1560-2
 மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் 	1560-3
 பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் 	1560-4

 296. வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று 	1561-1
 எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே 	1561-2
 அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் 	1561-3
 திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார் 	1561-4

 297.  அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக் 	1562-1
 குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் 	1562-2
 நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய 	1562-3
 செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி 1562-4

 298. கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி 	1563-1
 அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு 	1563-2
 குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் 	1563-3
 தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான் 	1563-4

 299.  ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின் 	1564-1
 மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் 	1564-2
 ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச 	1564-3
 ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் 	1564-4

 300.  தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும் 	1565-1
 நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் 	1565-2
 விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே 	1565-3
 இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் 	1565-4

 301. பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார் 	1566-1
 தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய் 	1566-2
 எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச் 	1566-3
 செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார் 	1566-4

 302. சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி 	1567-1
 இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின் 	1567-2
 சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் 	1567-3
 நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார் 	1567-4

 303. மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது 	1568-1
 பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி 	1568-2
 உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச் 	1568-3
 செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார் 	1568-4

 304. வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும் 	1569-1
 அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே 	1569-2
 மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி 	1569-3
 விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் 	1569-4

 305. காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால் 	1570-1
 மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு 	1570-2
 நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் 	1570-3
 தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம் 	1570-4

 306. அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள 	1571-1
 வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் 	1571-2
 இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப் 	1571-3
 பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார் 	1571-4

 307. நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் 	1572-1
 உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே 	1572-2
 எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய 	1572-3
 தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் 	1572-4

 308. எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் 	1573-1
 அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே 	1573-2
 செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவ என்று உரைப்ப 	1573-3
 ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார் 	1573-4

 309. கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட 	1574-1
 வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம் 	1574-2
 ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் 	1574-3
 பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார் 	1574-4

 310. பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி 	1575-1
 மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து 	1575-2
 மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக் 	1575-3
 கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் 	1575-4

 311. நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் 	1576-1
 காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி 	1576-2
 மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் 	1576-3
 ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார் 	1576-4

 312. செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு 	1577-1
 துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் 	1577-2
 அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் 	1577-3
 தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் 	1577-4

 313. அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம் 	1578-1
 கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த 	1578-2
 உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன் 	1578-3
 பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார் 	1578-4

 314. பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள் 	1579-1
 மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் 	1579-2
 தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார் 	1579-3
 அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் 	1579-4

 315. காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும் 	1580-1
 சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு 	1580-2
 நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச் 	1580-3
 சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார் 	1580-4

 316. செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில் 	1581-1
 புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய 	1581-2
 முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத் 	1581-3
 தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார் 	1581-4


 317. செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம் 	1582-1
 உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித் 	1582-2
 தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று 	1582-3
 வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் 	1582-4

 318.  ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால் 	1583-1
 சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று 	1583-2
 காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் 	1583-3
 சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார் 	1583-4

 319. மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் 	1584-1
 நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம் 	1584-2
 தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் 	1584-3
 ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்£ள் காஞ்சி அலங்கரித்தார் 	1584-4

 320. தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால் 	1585-1
 கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் 	1585-2
 அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி 	1585-3
 இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார் 	1585-4

 321. எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி 	1586-1
 மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி 	1586-2
 குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார் 	1586-3
 அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் 	1586-4

 322. திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து 	1587-1
 கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து 	1587-2
 வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப் 	1587-3
 பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார் 	1587-4

 323. வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம் 	1588-1
 ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச் 	1588-2
 சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை 	1588-3
 நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் 	1588-4

 324.  கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் 	1589-1
 பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் 	1589-2
 விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் 	1589-3
 அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார் 	1589-4

 325. கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் 	1590-1
 செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி 	1590-2
 மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு 	1590-3
 மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள் 	1590-4

 326. சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம் 	1591-1
 நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் 	1591-2
 ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் 	1591-3
 சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார் 	1591-4

 327. அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் 	1592-1
 மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் 	1592-2
 சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித் 	1592-3
 துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால் 	1592-4

 328.  ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் 	1593-1
 பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை 	1593-2
 நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் 	1593-3
 ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் 	1593-4

 329. திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார் 	1594-1
 நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் 	1594-2
 வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப் 	1594-3
 பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார் 	1594-4

 330. நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப் 	1595-1
 பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் 	1595-2
 சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய் 	1595-3
 மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் 	1595-4

 331. திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும் 	1596-1
 பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத் 	1596-2
 தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர் 	1596-3
 மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் 	1596-4

 332. வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும் 	1597-1
 தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி 	1597-2
 உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி 	1597-3
 திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார் 	1597-4

 333. ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி 	1598-1
 நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப் 	1598-2
 பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து 	1598-3
 மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர் 	1598-4

 334. திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த 	1599-1
 பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு 	1599-2
 ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார் 	1599-3
 கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார் 	1599-4

 335. எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத் 	1600-1
 தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் 	1600-2
 முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க 	1600-3
 விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார் 	1600-4

 336.  வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப் 	1601-1
 பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் 	1601-2
 விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் 	1601-3
 கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார் 	1601-4

 337. விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே 	1602-1
 உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள் 	1602-2
 களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது 	1602-3
 வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார் 	1602-4

 338. அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள் 	1603-1
 எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் 	1603-2
 பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள் 	1603-3
 பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார் 	1603-4

 339. திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும் 	1604-1
 விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய 	1604-2
 இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப் 	1604-3
 பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார் 	1604-4

 340.  முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் 	1605-1
 சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும் 	1605-2
 சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி 	1605-3
 எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர் 	1605-4

 341. அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் 	1606-1
 மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி 	1606-2
 மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் 	1606-3
 செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார் 	1606-4

 342.  திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் 	1607-1
 ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப் 	1607-2
 பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் 	1607-3
 மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார் 	1607-4

 343. பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் 	1608-1
 செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து 	1608-2
 தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் 	1608-3
 மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார் 	1608-4

 344. பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில் 	1609-1
 முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் 	1609-2
 சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர் 	1609-3
 மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார் 	1609-4

 345. காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை 	1610-1
 வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் 	1610-2
 காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் 	1610-3
 நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் 	1610-4

 346. மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும் 	1611-1
 சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி 	1611-2
 அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத் 	1611-3
 தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் 	1611-4

 347. சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து 	1612-1
 தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் 	1612-2
 பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம் 	1612-3
 காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார் 	1612-4

 348. அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப் 	1613-1
 பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார் 	1613-2
 துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின் 	1613-3
 செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார் 	1613-4

 349. மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் 	1614-1
 கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல் 	1614-2
 ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் 	1614-3
 தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் 	1614-4

 350. அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச் 	1615-1
 செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் 	1615-2
 எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர் 	1615-3
 கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் 	1615-4

 351. கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் 	1616-1
 திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் 	1616-2
 பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால் 	1616-3
 வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் 	1616-4

 352. அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று 	1617-1
 எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் 	1617-2
 மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் 	1617-3
 பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார் 	1617-4

 353. அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் 	1618-1
 மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் 	1618-2
 பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் 	1618-3
 மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார் 	1618-4

 354. மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் 	1619-1
 போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச் 	1619-2
 சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் 	1619-3
 ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார் 	1619-4

 355.  ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன் 	1620-1
 தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால் 	1620-2
 வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து 	1620-3
 தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார் 	1620-4

 356. வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து 	1621-1
 எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன 	1621-2
 பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல் 	1621-3
 செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார் 	1621-4

 357. இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார் 	1622-1
 பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் 	1622-2
 மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ 	1622-3
 தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் 	1622-4

 358. கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் 	1623-1
 மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட 	1623-2
 மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே 	1623-3
 மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் 	1623-4

 359. மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட 	1624-1
 நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு 	1624-2
 ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச் 	1624-3
 சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் 	1624-4

 360. அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச் 	1625-1
 செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் 	1625-2
 மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் 	1625-3
 தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார் 	1625-4

 361. அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் 	1626-1
 மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த 	1626-2
 நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் 	1626-3
 பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால் 	1626-4

 362. வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று 	1627-1
 நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் 	1627-2
 சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் 	1627-3
 இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார் 	1627-4

 363. மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் 	1628-1
 தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ 	1628-2
 ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப் 	1628-3
 பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர் 	1628-4

 364.  வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை 	1629-1
 அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன் 	1629-2
 கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் 	1629-3
 கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற 	1629-4

 365. கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு 	1630-1
 பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ 	1630-2
 அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால் 	1630-3
 வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி 	1630-4

 366.  மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் 	1631-1
 தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல 	1631-2
 ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் 	1631-3
 மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார் 	1631-4

 367.  ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய 	1632-1
 நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால் 	1632-2
 ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத் 	1632-3
 தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் 	1632-4

 368. அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே 	1633-1
 விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே 	1633-2
 கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம் 	1633-3
 நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார் 	1633-4

 369. தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் 	1634-1
 எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை 	1634-2
 முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை 	1634-3
 பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார் 	1634-4

 370.  ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி 	1635-1
 வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி 	1635-2
 ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப் 	1635-3
 பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் 	1635-4

 371.  ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் 	1636-1
 போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி 	1636-2
 மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி 	1636-3
 மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப 	1636-4

 372. வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி 	1637-1
 உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார் 	1637-2
 எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண் 	1637-3
 பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் 	1637-4

 373. மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு 	1638-1
 உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் 	1638-2
 அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன 	1638-3
 புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் 	1638-4

 374. பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில் 	1639-1
 தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப் 	1639-2
 பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே 	1639-3
 மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் 	1639-4

 375. காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் 	1640-1
 பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர் 	1640-2
 பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத் 	1640-3
 தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க 	1640-4

 376. தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் 	1641-1
 மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக் 	1641-2
 காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் 	1641-3
 தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப 	1641-4

 377. கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் 	1642-1
 மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க 	1642-2
 எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப் 	1642-3
 பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற 	1642-4

 378. அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் 	1643-1
 சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப 	1643-2
 முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே 	1643-3
 நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக 	1643-4

 379. வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் 	1644-1
 தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம் 	1644-2
 கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த 	1644-3
 வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் 	1644-4

 380. கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து 	1645-1
 கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய 	1645-2
 அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் 	1645-3
 தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் 	1645-4

 381. முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா 	1646-1
 அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப் 	1646-2
 பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள் 	1646-3
 இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர் 	1646-4

 382.  ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை 	1647-1
 மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித் 	1647-2
 தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம் 	1647-3
 சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ 	1647-4

 383. ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் 	1648-1
 மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச் 	1648-2
 செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து 	1648-3
 வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து 	1648-4

 384.  மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளடும் என்னும் 	1649-1
 கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் 	1649-2
 வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் 	1649-3
 காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார் 	1649-4

 385. கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் 	1650-1
 கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் 	1650-2
 மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே 	1650-3
 அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர் 	1650-4

 386. நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக 	1651-1
 மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப் 	1651-2
 பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித் 	1651-3
 தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார் 	1651-4

 387. சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச் 	1652-1
 சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு 	1652-2
 நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க 	1652-3
 ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார் 	1652-4

 388.  திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் 	1653-1
 பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று 	1653-2
 விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப 	1653-3
 இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி 	1653-4

 389. அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று 	1654-1
 பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து 	1654-2
 தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத் 	1654-3
 திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் 	1654-4

 390. பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் 	1655-1
 அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும் 	1655-2
 செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு 	1655-3
 எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் 	1655-4

 391. பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் 	1656-1
 கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத் 	1656-2
 தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு 	1656-3
 மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் 	1656-4

 392. தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி 	1657-1
 வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு 	1657-2
 வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப் 	1657-3
 பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் 	1657-4

 393. சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு 	1658-1
 மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து 	1658-2
 கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால் 	1658-3
 எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார் 	1658-4

 394. காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார் 	1659-1
 சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி 	1659-2
 வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் 	1659-3
 தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார் 	1659-4

 395. வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி 	1660-1
 அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின் 	1660-2
 சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் 	1660-3
 சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால் 	1660-4

 396. திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு 	1661-1
 அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என 	1661-2
 உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் 	1661-3
 பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார் 	1661-4

 397. பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே 	1662-1
 உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க 	1662-2
 வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத் 	1662-3
 துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் 	1662-4

 398. கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச் 	1663-1
 செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் 	1663-2
 மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள் 	1663-3
 தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார் 	1663-4

 399. வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால் 	1664-1
 புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில் 	1664-2
 எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் 	1664-3
 சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் 	1664-4

 400. பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் 	1665-1
 நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர் 	1665-2
 எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர் 	1665-3
 மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் 	1665-4

 401. பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் 	1666-1
 அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு 	1666-2
 உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் 	1666-3
 புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் 	1666-4

 402.  ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும் 	1667-1
 பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் 	1667-2
 காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் 	1667-3
 தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார் 	1667-4

 403. சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் 	1668-1
 அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் 	1668-2
 முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு 	1668-3
 வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் 	1668-4

 404. எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி 	1669-1
 மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் 	1669-2
 செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் 	1669-3
 கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார் 	1669-4

 405. சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் 	1670-1
 சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே 	1670-2
 பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று 	1670-3
 ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் 	1670-4

 406. திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் 	1671-1
 தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான 	1671-2
 பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து 	1671-3
 மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் 	1671-4

 407. கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் 	1672-1
 நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி 	1672-2
 வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் 	1672-3
 பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார் 	1672-4

 408. தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த 	1673-1
 மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த 	1673-2
 பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி 	1673-3
 துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர் 	1673-4

 409. தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து 	1674-1
 மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால் 	1674-2
 பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி 	1674-3
 நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார் 	1674-4

 410. அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் 	1675-1
 பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி 	1675-2
 செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் 	1675-3
 எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் 	1675-4

 411. தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி 	1676-1
 வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் 	1676-2
 ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் 	1676-3
 தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் 	1676-4

 412. தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் 	1677-1
 பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து 	1677-2
 வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே 	1677-3
 பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார் 	1677-4

 413. பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி 	1678-1
 நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில் 	1678-2
 கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன் 	1678-3
 வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார் 	1678-4

 414. நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் 	1679-1
 மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் 	1679-2
 கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் 	1679-3
 துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார் 	1679-4

 415.  ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் 	1680-1
 பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும் 	                   1680-2
 நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் 	1680-3
 பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார் 	1680-4

 416. அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் 	1681-1
 நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் 	1681-2
 தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் 	1681-3
 பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார் 	1681-4

 417. செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும் 	1682-1
 உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க 	1682-2
 எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி 	1682-3
 வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார் 	1682-4

 418. புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் 	1683-1
 சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த 	1683-2
 நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் 	1683-3
 வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் 	1683-4

 419. வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து 	1684-1
 தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை 	1684-2
 கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் 	1684-3
 பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் 	1684-4

 420. கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய 	1685-1
 உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப் 	1685-2
 பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர 	1685-3
 அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார் 	1685-4

 421.  ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் 	1686-1
 கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க 	1686-2
 ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக 	1686-3
 நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் 	1686-4

 422. இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய 	1687-1
 அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் 	1687-2
 மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் 	1687-3
 சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் 	1687-4

 423. இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி 	1688-1
 உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் 	1688-2
 அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று 	1688-3
 பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார் 	1688-4

 424. மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் 	1689-1
 காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் 	1689-2
 பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க 	1689-3
 யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் 	1689-4

 425. இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த 	1690-1
 மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் 	1690-2
 மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும் 	1690-3
 அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் 	1690-4

 426. மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் 	1691-1
 தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் 	1691-2
 என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற 	1691-3
 முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் 	1691-4

 427. மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் 	1692-1
 புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று 	1692-2
 நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி 	1692-3
 அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் 	1692-4

 428. வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் 	1693-1
 மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் 	1693-2
 யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி 	1693-3
 தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் 	1693-4

 429. அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் 	1694-1
 படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் 	1694-2
 கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் 	1694-3
 முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் 	1694-4


22 குலச்சிறை நாயனார் புராணம்
 1. பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச் 	1695-1
 செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல் 	1695-2
 துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது 	1695-3
 மன்னு வண்மையினார் மண மேற்குடி 	1695-4

 2. அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் 	1696-1
 ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய 	1696-2
 செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை 	1696-3
 வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் 	1696-4

 3. காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே 	1697-1
 வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை 	1697-2
 யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து 	1697-3
 ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் 	1697-4

 4. குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் 	1698-1
 நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் 	1698-2
 அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் 	1698-3
 செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் 	1698-4

 5. உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் 	1699-1
 அலகில் தீமையர் ஆயினும் அம்புலி 	1699-2
 இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில் 	1699-3
 தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் 	1699-4

 6. பண்பு மிக்கார் பலராய் அணையினும் 	1700-1
 உண்ப வேண்டி ஒருவர் அணையினும் 	1700-2
 எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு 	1700-3
 நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் 	1700-4

 7. பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து 	1701-1
 ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை 	1701-2
 ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் 	1701-3
 பாதம் நாளும் பரவிய பண்பினார் 	1701-4

 8. இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த் 	1702-1
 தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ் 	1702-2
 மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் 	1702-3
 ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் 	1702-4

 9. ஆய செய்கையர் ஆயவர் ஆறணி 	1703-1
 நாயனார் திருப் பாதம் நவின்று உளார் 	1703-2
 பாய சீர் புனை பாண்டி மா தேவியார் 	1703-3
 மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் 	1703-4

 10. புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும் 	1704-1
 தென்னர் நாடு திருநீறு போற்றவும் 	1704-2
 மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி 	1704-3
 சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் 	1704-4

 11. வாதில் தோற்ற அமணரை வன் கழுத் 	1705-1
 தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் 	1705-2
 யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் 	1705-3
 வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் 	1705-4


23 பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம்
 1. சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய் 	1706-1
 வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி 	1706-2
 நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து 	1706-3
 மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை 	1706-4

 2. அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் 	1707-1
 சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் 	1707-2
 இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று 	1707-3
 முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் 	1707-4

 3. தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் 	1708-1
 கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார் 	1708-2
 வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் 	1708-3
 புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் 	1708-4

 4. இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் 	1709-1
 மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் 	1709-2
 சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து 	1709-3
 நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் 	1709-4

 5. மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் 	1710-1
 கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் 	1710-2
 செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் 	1710-3
 உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் 	1710-4

 6. நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே 	1711-1
 ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின் 	1711-2
 மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும் 	1711-3
 கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் 	1711-4

 7. இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் 	1712-1
 பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து 	1712-2
 மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் 	1712-3
 சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் 	1712-4

 8. அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார் 	1713-1
 செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே 	1713-2
 மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு 	1713-3
 நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் 	1713-4

 9. மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் 	1714-1
 நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து 	1714-2
 கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று 	1714-3
 எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் 	1714-4

 10. நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு 	1715-1
 காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு 	1715-2
 ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப 	1715-3
 மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் 	1715-4

 11. பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக் 	1716-1
 கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி 	1716-2
 மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் 	1716-3
 குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் 	1716-4


24 காரைக்கால் அம்மையார் புராணம்
 1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் 	1717-1
 ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி 	1717-2
 கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் 	1717-3
 கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால் 	1717-4

 2. வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர் 	1718-1
 தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால் 	1718-2
 அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து 	1718-3
 பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார் 	1718-4

 3. வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின் 	1719-1
 அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே 	1719-2
 பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத் 	1719-3
 தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் 	1719-4

 4. பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம் 	1720-1
 செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய 	1720-2
 மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால் 	1720-3
 அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் 	1720-4

 5. வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை 	1721-1
 அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று 	1721-2
 தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள் 	1721-3
 கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார் 	1721-4

 6. நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 	1722-1
 மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால் 	1722-2
 இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் 	1722-3
 தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார் 	1722-4

 7. நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண் 	1723-1
 பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத் 	1723-2
 தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச 	1723-3
 மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் 	1723-4

 8. வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து 	1724-1
 தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த 	1724-2
 பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு 	1724-3
 முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் 	1724-4

 9. மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று 	1725-1
 உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப் 	1725-2
 பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும் 	1725-3
 சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான் 	1725-4

 10. மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் 	1726-1
 அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே 	1726-2
 இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி 	1726-3
 பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் 	1726-4

 11. அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து 	1727-1
 தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத் 	1727-2
 தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக் 	1727-3
 களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள் 	1727-4

 12. மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள் 	1728-1
 தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன் 	1728-2
 பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன் 	1728-3
 அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் 	1728-4

 13. மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின் 	1729-1
 நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும் 	1729-2
 தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி 	1729-3
 மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான் 	1729-4

 14.  ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற 	1730-1
 பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ் 	1730-2
 ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப் 	1730-3
 பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் 	1730-4

 15. நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் 	1731-1
 செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான 	1731-2
 தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும் 	1731-3
 உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் 	1731-4

 16. பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு 	1732-1
 மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப 	1732-2
 ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே 	1732-3
 ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் 	1732-4

 17. கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு 	1733-1
 மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின் 	1733-2
 பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர் 	1733-3
 உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார் 	1733-4

 18. வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு 	1734-1
 நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப் 	1734-2
 பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து 	1734-3
 ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் 	1734-4

 19. கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட 	1735-1
 வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே 	1735-2
 பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் 	1735-3
 அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் 	1735-4

 20. இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த 	1736-1
 நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு 	1736-2
 வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் 	1736-3
 அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார் 	1736-4

 21. மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத் 	1737-1
 தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர் 	1737-2
 வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப் 	1737-3
 பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் 	1737-4

 22. மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன் 	1738-1
 உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப் 	1738-2
 பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக் 	1738-3
 கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார் 	1738-4

 23. இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின் 	1739-1
 மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த 	1739-2
 நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் 	1739-3
 அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார் 	1739-4

 24. மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி 	1740-1
 தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் 	1740-2
 இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என 	1740-3
 அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் 	1740-4

 25. அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார் 	1741-1
 மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் 	1741-2
 தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் 	1741-3
 கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று 	1741-4

 26. மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் 	1742-1
 உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான் 	1742-2
 முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால் 	1742-3
 பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான் 	1742-4

 27. அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் 	1743-1
 செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் 	1743-2
 கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை 	1743-3
 மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார் 	1743-4

 28.  செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் 	1744-1
 மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி 	1744-2
 எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு 	1744-3
 மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார் 	1744-4

 29.  ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் 	1745-1
 வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான் 	1745-2
 தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் 	1745-3
 ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் 	1745-4

 30. பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி 	1746-1
 ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன 	1746-2
 மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை 	1746-3
 ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் 	1746-4

 31. வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் 	1747-1
 தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி 	1747-2
 அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும் 	1747-3
 துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில் 	1747-4

 32. விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் 	1748-1
 படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி 	1748-2
 நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும் 	1748-3
 வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் 	1748-4

 33. கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் 	1749-1
 புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி 	1749-2
 சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும் 	1749-3
 நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான் 	1749-4

 34. கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில் 	1750-1
 அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி 	1750-2
 இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப் 	1750-3
 படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் 	1750-4

 35. அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும் 	1751-1
 ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து 	1751-2
 மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற 	1751-3
 செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் 	1751-4

 36. பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை 	1752-1
 அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் 	1752-2
 புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு 	1752-3
 முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் 	1752-4

 37. முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் 	1753-1
 இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப் 	1753-2
 பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால் 	1753-3
 பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான் 	1753-4

 38. மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு 	1754-1
 உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத் 	1754-2
 தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு 	1754-3
 கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் 	1754-4

 39. இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் 	1755-1
 கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன 	1755-2
 தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும் 	1755-3
 மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக 	1755-4

 40. விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன் 	1756-1
 வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி 	1756-2
 அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று 	1756-3
 கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே 	1756-4

 41. அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் 	1757-1
 தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு 	1757-2
 மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் 	1757-3
 கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் 	1757-4

 42. மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத் 	1758-1
 தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக் 	1758-2
 காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும் 	1758-3
 தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார் 	1758-4

 43. சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி 	1759-1
 மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து 	1759-2
 குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை 	1759-3
 தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார் 	1759-4

 44. வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும் 	1760-1
 சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த 	1760-2
 பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு 	1760-3
 முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான் 	1760-4

 45. தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும் 	1761-1
 மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே 	1761-2
 யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும் 	1761-3
 பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் 	1761-4

 46. கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும் 	1762-1
 அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப 	1762-2
 உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை 	1762-3
 மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார் 	1762-4

 47. மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் 	1763-1
 நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு 	1763-2
 பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே 	1763-3
 பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான் 	1763-4

 48. என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார் 	1764-1
 மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக் 	1764-2
 கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை 	1764-3
 ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் 	1764-4

 49.  ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத் 	1765-1
 தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால் 	1765-2
 ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் 	1765-3
 பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் 	1765-4

 50.  ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே 	1766-1
 மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் 	1766-2
 ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக 	1766-3
 வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் 	1766-4

 51. மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் 	1767-1
 உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் 	1767-2
 குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற 	1767-3
 தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் 	1767-4

 52. உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை 	1768-1
 அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார் 	1768-2
 பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும் 	1768-3
 நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி 	1768-4

 53.  ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி 	1769-1
 ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் 	1769-2
 காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண 	1769-3
 வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார் 	1769-4

 54. கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் 	1770-1
 கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே 	1770-2
 அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை 	1770-3
 எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார் 	1770-4

 55. வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று 	1771-1
 தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும் 	1771-2
 படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின் 	1771-3
 நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் 	1771-4

 56. தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி 	1772-1
 மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் 	1772-2
 கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச் 	1772-3
 சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே 	1772-4

 57. அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து 	1773-1
 தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும் 	1773-2
 எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன 	1773-3
 நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் 	1773-4

 58.  வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப் 	1774-1
 பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை 	1774-2
 பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை 	1774-3
 ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார் 	1774-4

 59. அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று 	1775-1
 பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச் 	1775-2
 சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால் 	1775-3
 இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார் 	1775-4

 60. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் 	1776-1
 பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் 	1776-2
 மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி 	1776-3
 அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் 	1776-4

 61. கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும் 	1777-1
 நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில் 	1777-2
 ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் 	1777-3
 பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் 	1777-4

 62. அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத 	1778-1
 மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து 	1778-2
 செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம் 	1778-3
 நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே 	1778-4

 63.  ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற 	1779-1
 கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு 	1779-2
 மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி 	1779-3
 ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் 	1779-4

 64. மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் 	1780-1
 இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி 	1780-2
 எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம் 	1780-3
 கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார் 	1780-4

 65. மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி 	1781-1
 கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர் 	1781-2
 எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை 	1781-3
 அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா 	1781-4

 66.  ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது 	1782-1
 கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச் 	1782-2
 சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் 	1782-3
 போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன் 	1782-4


25 அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
 1. தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் 	1783-1
 ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார் 	1783-2
 ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே 	1783-3
 காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார் 	1783-4

 2. களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் 	1784-1
 வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள 	1784-2
 அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும் 	1784-3
 உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் 	1784-4

 3. வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் 	1785-1
 அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால் 	1785-2
 படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள 	1785-3
 முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் 	1785-4

 4. பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின் 	1786-1
 திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர் 	1786-2
 ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் 	1786-3
 விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் 	1786-4

 5. அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார் 	1787-1
 உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக் 	1787-2
 குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் 	1787-3
 வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார் 	1787-4

 6. வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப் 	1788-1
 பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச் 	1788-2
 சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர் 	1788-3
 சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார் 	1788-4

 7. இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு 	1789-1
 அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் 	1789-2
 செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார் 	1789-3
 தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் 	1789-4

 8. என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று 	1790-1
 நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத் 	1790-2
 துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண் 	1790-3
 சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் 	1790-4

 9. அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார் 	1791-1
 தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த 	1791-2
 திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் 	1791-3
 நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார் 	1791-4

 10. கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம் 	1792-1
 அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் 	1792-2
 முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி 	1792-3
 வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் 	1792-4

 11. ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி 	1793-1
 வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் 	1793-2
 தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை 	1793-3
 புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார் 	1793-4

 12.  ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த 	1794-1
 ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே 	1794-2
 வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல் 	1794-3
 கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார் 	1794-4

 13. நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் 	1795-1
 நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன் 	1795-2
 ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே 	1795-3
 வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் 	1795-4

 14.  நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே 	1796-1
 இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச் 	1796-2
 செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத 	1796-3
 வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி 	1796-4

 15.  பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை 	1797-1
 அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே 	1797-2
 மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் 	1797-3
 எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார் 	1797-4

 16. திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர் 	1798-1
 பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற 	1798-2
 அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த 	1798-3
 தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார் 	1798-4

 17. அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம் 	1799-1
 கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய 	1799-2
 உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத் 	1799-3
 தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார் 	1799-4

 18. மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள 	1800-1
 அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர் 	1800-2
 முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி 	1800-3
 உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் 	1800-4

 19. மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே 	1801-1
 ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் 	1801-2
 ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப் 	1801-3
 பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார் 	1801-4

 20. மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் 	1802-1
 அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன் 	1802-2
 முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் 	1802-3
 புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் 	1802-4

 21.  ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன் 	1803-1
 வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத் 	1803-2
 தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும் 	1803-3
 நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் 	1803-4

 22. செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி 	1804-1
 எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று 	1804-2
 மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே 	1804-3
 உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் 	1804-4

 23. தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி 	1805-1
 ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள் 	1805-2
 சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை 	1805-3
 மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார் 	1805-4

 24.  நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று 	1806-1
 ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை 	1806-2
 மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று 	1806-3
 அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே 	1806-4

 25. கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற 	1807-1
 பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும் 	1807-2
 வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக் 	1807-3
 கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் 	1807-4

 26. பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த 	1808-1
 வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் 	1808-2
 அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று 	1808-3
 திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான் 	1808-4

 27. எரிவிடம்  முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம் 	1809-1
 தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து 	1809-2
 விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான் 	1809-3
 பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான் 	1809-4

 28. தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும் 	1810-1
 உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி 	1810-2
 விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று 	1810-3
 துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார் 	1810-4

 29. பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப் 	1811-1
 புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே 	1811-2
 அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று 	1811-3
 விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார் 	1811-4

 30. கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே 	1812-1
 அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப் 	1812-2
 படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் 	1812-3
 குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு 	1812-4

 31. அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் 	1813-1
 திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர் 	1813-2
 இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் 	1813-3
 பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் 	1813-4

 32.  ஆதி நான்மறை நூல் வாய்மை  அப்பூதியாரை நோக்கிக் 	1814-1
 காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே 	1814-2
 மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை 	1814-3
 யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் 	1814-4

 33. அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் 	1815-1
 செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி 	1815-2
 இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் 	1815-3
 மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி 	1815-4

 34.  பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ 	1816-1
 வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை 	1816-2
 தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து 	1816-3
 பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே 	1816-4

 35. நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் 	1817-1
 யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே 	1817-2
 ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் 	1817-3
 பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார் 	1817-4

 36. தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் 	1818-1
 மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று 	1818-2
 சேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய 	1818-3
 பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே 	1818-4

 37. பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின் 	1819-1
 நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள் 	1819-2
 அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச் 	1819-3
 சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் 	1819-4

 38.  ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட 	1820-1
 ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற 	1820-2
 பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும் 	1820-3
 தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார் 	1820-4

 39. புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித் 	1821-1
 திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி 	1821-2
 நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் 	1821-3
 மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார் 	1821-4

 40. திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும் 	1822-1
 பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி 	1822-2
 அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன 	1822-3
 விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் 	1822-4

 41. மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச் 	1823-1
 சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக் 	1823-2
 கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் 	1823-3
 அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே 	1823-4

 42. மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து 	1824-1
 காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை 	1824-2
 மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் 	1824-3
 நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார் 	1824-4

 43. அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற 	1825-1
 மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த 	1825-2
 இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும் 	1825-3
 செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் 	1825-4

 44. இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும் 	1826-1
 அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் 	1826-2
 செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும் 	1826-3
 நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே 	1826-4

 45. மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற 	1827-1
 மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப் 	1827-2
 கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை 	1827-3
 நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன் 	1827-4


26 திரு நீல நக்க நாயனார் புராணம்
 1. பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும் 	1828-1
 காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச் 	1828-2
 சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் 	1828-3
 வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு 	1828-4

 2. நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார் 	1829-1
 மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி 	1829-2
 அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் 	1829-3
 பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை 	1829-4

 3. ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில் 	1830-1
 ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர் 	1830-2
 நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை 	1830-3
 வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் 	1830-4

 4. சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர் 	1831-1
 ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார் 	1831-2
 ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் 	1831-3
 நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் 	1831-4

 5. வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி 	1832-1
 நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து 	1832-2
 பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே 	1832-3
 காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் 	1832-4

 6. மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை 	1833-1
 நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே 	1833-2
 அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா 	1833-3
 எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார் 	1833-4

 7. ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் 	1834-1
 மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத் 	1834-2
 தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த 	1834-3
 நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் 	1834-4

 8. உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற 	1835-1
 முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன 	1835-2
 குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட 	1835-3
 இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர் 	1835-4

 9. அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் 	1836-1
 துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி 	1836-2
 இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த 	1836-3
 உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் 	1836-4

 10. நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் 	1837-1
 மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித் 	1837-2
 தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி 	1837-3
 நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் 	1837-4

 11. தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம் 	1838-1
 கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை 	1838-2
 நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச் 	1838-3
 சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி 	1838-4

 12. விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று 	1839-1
 எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி 	1839-2
 ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப் 	1839-3
 பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக 	1839-4

 13. பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம் 	1840-1
 சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண் 	1840-2
 புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச் 	1840-3
 சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார் 	1840-4

 14. மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் 	1841-1
 புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில் 	1841-2
 இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் 	1841-3
 நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார் 	1841-4

 15. மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி 	1842-1
 தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர 	1842-2
 முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய் 	1842-3
 உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார் 	1842-4

 16. மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான் 	1843-1
 உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க 	1843-2
 முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக் 	1843-3
 கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார் 	1843-4

 17. அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் 	1844-1
 நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் 	1844-2
 செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு 	1844-3
 பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார் 	1844-4

 18. பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில் 	1845-1
 வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி 	1845-2
 உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக் 	1845-3
 கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள 	1845-4

 19. கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக் 	1846-1
 கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத் 	1846-2
 தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் 	1846-3
 அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார் 	1846-4

 20. போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே 	1847-1
 ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம் 	1847-2
 பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி 	1847-3
 மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் 	1847-4

 21. பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த 	1848-1
 இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி 	1848-2
 அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு 	1848-3
 முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார் 	1848-4

 22. அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்¢ல் 	1849-1
 மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை 	1849-2
 பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் 	1849-3
 சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் 	1849-4

 23. பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ 	1850-1
 மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள் 	1850-2
 விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார் 	1850-3
 சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார் 	1850-4

 24. நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர் 	1851-1
 தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர் 	1851-2
 கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் 	1851-3
 மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர் 	1851-4

 25. கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து 	1852-1
 தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் 	1852-2
 நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து 	1852-3
 ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார் 	1852-4

 26. சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம் 	1853-1
 ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு 	1853-2
 அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் 	1853-3
 பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார் 	1853-4

 27. பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க 	1854-1
 வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப 	1854-2
 உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி 	1854-3
 வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார் 	1854-4

 28. அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக் 	1855-1
 குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில் 	1855-2
 இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும் 	1855-3
 தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார் 	1855-4

 29. சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி 	1856-1
 ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் 	1856-2
 காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது 	1856-3
 நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் 	1856-4

 30. நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு 	1857-1
 இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன 	1857-2
 நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச் 	1857-3
 சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் 	1857-4

 31.  ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று 	1858-1
 ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர 	1858-2
 தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர் 	1858-3
 பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார் 	1858-4

 32. கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் 	1859-1
 அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த 	1859-2
 திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே 	1859-3
 பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார் 	1859-4

 33. பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி 	1860-1
 அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி 	1860-2
 எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும் 	1860-3
 புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார் 	1860-4

 34. பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு 	1861-1
 தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும் 	1861-2
 வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை 	1861-3
 உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் 	1861-4

 35. மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும் 	1862-1
 தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச் 	1862-2
 சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர் 	1862-3
 பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் 	1862-4

 36. சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும் 	1863-1
 நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி 	1863-2
 வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் 	1863-3
 திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர் 	1863-4

 37. பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க 	1864-1
 வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி 	1864-2
 ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே 	1864-3
 திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் 	1864-4

 38. தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில் 	1865-1
 வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி 	1865-2
 இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால் 	1865-3
 ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம் 	1865-4


27 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
 1. வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச் 	1866-1
 செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய் 	1866-2
 பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால் 	1866-3
 எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால் 	1866-4

 2. மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு 	1867-1
 வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் 	1867-2
 சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம் 	1867-3
 காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய் 	1867-4

 3. பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய 	1868-1
 துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன 	1868-2
 புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல் 	1868-3
 மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால் 	1868-4

 4. பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி 	1869-1
 ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் 	1869-2
 இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து 	1869-3
 அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார் 	1869-4

 5. வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார் 	1870-1
 தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார் 	1870-2
 சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை 	1870-3
 யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் 	1870-4

 6. அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல் 	1871-1
 வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல் 	1871-2
 எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் 	1871-3
 தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார் 	1871-4

 7. செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம் 	1872-1
 தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து 	1872-2
 அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின் 	1872-3
 நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார் 	1872-4

 8. நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன் 	1873-1
 அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால் 	1873-2
 பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் 	1873-3
 எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் 	1873-4

 9. எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் 	1874-1
 செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன 	1874-2
 ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் 	1874-3
 அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் 	1874-4

 10.  கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும் 	1875-1
 நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல் 	1875-2
 செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே 	1875-3
 பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார் 	1875-4

 11. அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே 	1876-1
 பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த 	1876-2
 முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி 	1876-3
 உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில் 	1876-4

 12.  வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற 	1877-1
 இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என 	1877-2
 அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச் 	1877-3
 சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால் 	1877-4

 13. சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் 	1878-1
 நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி 	1878-2
 அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் 	1878-3
 முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் 	1878-4

 14. சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி 	1879-1
 ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி 	1879-2
 ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் 	1879-3
 நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய 	1879-4

 15. நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக் 	1880-1
 குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து 	1880-2
 மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் 	1880-3
 உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார் 	1880-4

 16. இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல் 	1881-1
 விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப் 	1881-2
 பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை 	1881-3
 அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் 	1881-4

 17. வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு 	1882-1
 சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் 	1882-2
 முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் 	1882-3
 அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் 	1882-4

 18. பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத் 	1883-1
 தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண் 	1883-2
 குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால் 	1883-3
 அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் 	1883-4

 19. நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப் 	1884-1
 பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம் 	1884-2
 நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின் 	1884-3
 மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க 	1884-4

 20. வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம் 	1885-1
 என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு 	1885-2
 ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும் 	1885-3
 நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் 	1885-4

 21. இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும் 	1886-1
 மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் 	1886-2
 அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் 	1886-3
 நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய 	1886-4

 22. தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள 	1887-1
 யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும் 	1887-2
 மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம் 	1887-3
 காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் 	1887-4

 23. பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத் 	1888-1
 தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே 	1888-2
 இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து 	1888-3
 முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார் 	1888-4

 24. திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால் 	1889-1
 அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத் 	1889-2
 தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண 	1889-3
 எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று 	1889-4

 25.  ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து 	1890-1
 வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ 	1890-2
 சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக் 	1890-3
 காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் 	1890-4

 26.  ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில் 	1891-1
 ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே 	1891-2
 மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து 	1891-3
 தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண் 	1891-4

 27. மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம் 	1892-1
 மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி 	1892-2
 ஞான மறையோய்  ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் 	1892-3
 ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார் 	1892-4

 28.  ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது 	1893-1
 ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு 	1893-2
 மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு 	1893-3
 நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார் 	1893-4

 29. தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும் 	1894-1
 மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால் 	1894-2
 மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த 	1894-3
 கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்¢சிறந்தார் 	1894-4

 30. படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால் 	1895-1
 அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் 	1895-2
 குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து 	1895-3
 நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார் 	1895-4

 31. நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே 	1896-1
 வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் 	1896-2
 ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் 	1896-3
 பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார் 	1896-4

 32. இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து 	1897-1
 நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச் 	1897-2
 சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர் 	1897-3
 மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் 	1897-4


சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
 1. நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின் 	1898-1
 பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கு ஒளியூர்த் 	1898-2
 தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும் 	1898-3
 மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே 	1898-4


திருச்சிற்றம்பலம் 


திருநின்ற சருக்கம் முற்றிற்று.


This webpage was last updated on 16 May 2004

See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures

Back to periya purANam Page
Back to thirumuRai Page
Back to Shaiva Sidhdhantha Home Page