11th tirumuRai collections (pirabandam) - part II

(pAcurams 826 - 1419 - paTTinattup piLLaiyar & nampi ANTAr nampi)
(in tamil script, Unicode format)

பதினோராந் திருமுறை
(நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
இரண்டாம் பாகம் - பாசுரங்கள் 826 - 1419

(பட்டினத்துப் பிள்ளையார் & நம்பியாண்டார் நம்பி அருளியது)



Etext preparation: Mr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Proof.reading: Mr. P.K.Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This Etext file has the verses in tamil script in TSCII-encoding (version 1.7).
So you need to have a TSCII-conformant tamil font to view the Tamil part properly.
Several TSCII conformant fonts are available free for use on Macintosh , Unix and Windows (95/98/NT/3.11)
platforms at the following websites:

http://www.tamil.net/tscii/
http://www.geocities.com/Athens/5180/tsctools.html
In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 2001
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

11th tirumuRai collections of nampi ANTAr nampi - part II
(826 - 1419 pAcurams of paTTinattup piLLaiyAr & nampi ANTAr nampi)

பதினோராந் திருமுறை (நம்பியாண்டார் நம்பி தொகுப்பு)
இரண்டாம் பாகம் - பாசுரங்கள் 826 - 1419


			பொருள் அடக்கம் 
11. பட்டினத்துப் பிள்ளையார்  பாசுரங்கள்
	11.1 கோயில் நான்மணிமாலை                    	40 	( 826 -  865)
	11.2 திருக்கழுமல மும்மணிக் கோவை          		30 	( 866 -  895)
	11.3 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை    		30  	( 896 -  925)
	11.4 திருஏகம்பமுடையார் திருவந்தாதி		       100  	( 926 - 1025)
	11.5 திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது          		10  	(1026 - 1035)

12. நம்பியாண்டார் நம்பி  பாசுரங்கள்
	12.1 திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை	20	(1036 - 1055)
	12.2 கோயில் திருப்பண்ணியர் விருத்தம்			70	(1056 - 1125)
	12.3 திருத்தொண்டர் திருவந்தாதி				90	(1126 - 1215)
	12.4 ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி		       101	(1216 - 1316)
	12.5 ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்	11   	(1317 - 1327)
	12.6 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 	30  	(1328 - 1357)
	12.7 ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை            	 1    	 1358
	12.8 ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்           	49	(1359 - 1407)
	12.9 ஆளுடையபிள்ளையார் திருத்தொகை              	 1    	 1408
	12.10 திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை       	11   	(1409 - 1419)

11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்

11.1 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
கோயில் நான்மணிமாலை (826 - 865)

826. பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் -பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.
1
827 குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே.
2
828 களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்
விரிசடையும் வெண்ணீரும் செவ்வானம் என்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்
எளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்
டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.
3
829 உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாண நீடு .........(5)

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில் ....(10)

தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் ......(15)

வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் .......(20)

அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும் (25)
கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.
4
830. ஆதரித்த மாலும் அறிந்திலனென் ற•தறிந்தே
காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.
5
831. அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோள்எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.
6
832 நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருந்தீ நஞ்சுண் டீரே.
7
833. நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கு யாம்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி .....(5)

மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு
அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று .........(10)

எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
8
834 இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண் டின்பான நான்.
9
835 நானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம்
கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாம்அறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே.
10
836 சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர் தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன் நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள் அன்று முதலெ திரின்று வரையுமே.
11
837 வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக்
கடல்தட வாக மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்கு
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் .....(5)

ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது
அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பெளவம் ஏழே பட்டது பெளவத்தோடு
உலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் .....(10)

உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்து .....(15)

அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய ........(20)

பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு .........(25)

அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாது மொழிந்த தெந்தை வளையாது
கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை ........(30)

மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் ..........(35)

செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும் .........(40)

வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் .........(45)

இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே.
12
838. கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்
துழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்று¨ப்போம் நாம்.
13
839 நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னால்உன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.
14
840. நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள் நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர் அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர் மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர் சிலர்நர குறுவர் அறிவின்றியே.
15
841 அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி வினையெனும்
தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் .....(5)

புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்
துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா ........(10)

உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர வணிந்த தெய்வ நாயக .....(15)

தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
16
842. செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.
17
843. சங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள்தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாய்எங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேல்உன் பசப்பொழியே.
18
844. ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்கநொந்
தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர் சிந்தை யாயொழிவ தல்லவே.
19
845 அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் ....(5)

அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் ....(10)

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்
பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் .......(15)

கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர் .........(20)

ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்
சேயுயர் அகலத் தாயிரங் குடுமி ..........(25)

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு ........(30)

உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற் கரியதும் உண்டோ
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.
20
846 பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதைக் குழாம்.
21
847 பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத்
தாதைதன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்இன்று கொல்லஎண்ணி
ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியே.
22
848 உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎன
நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர்
புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்சுருள் கரிய குழலி னார்குயில்
கருது மொழியி னார்கடை நெடிய விழியி னார்இதழ்
இலவில் அழகி யாரிடை கொடியின் வடிவி னார்வடி
வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே.
23
849 ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக் ......(5)

கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் .......(10)

காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம் வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஓயாது
உருகி நின்னினைந் தருவி சோரக் ...........(15)

கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனஎல்லாம்
நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு .........(20)

வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு .........(25)

நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும் ......(30)

நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர் .......(35)
அம்பலத் தாடும் உம்பர் நாயகனே.
24
850 நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை
மென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.
25
851 மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணம்என்னவே.
26
852 என்னாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம்
தன்னால் அல்லது தீரா தென்னிடர் தகையா துயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர வீசா நின்றது பேசாயே.
27
853 பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் ......(5)

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் ......(10)

கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலும் தேரின்
நீயும்அ• தறிதி யன்றே மாயப் .....(15)

பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் ........(20)

நன்மையிற் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் .............(25)

ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை
நுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் ..........(30)

அறிவில் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி
கறவை நினைந்த கன்றென இரங்கி ......(35)

மறவா மனத்து மாசறும் அடியார்க்கு
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.
28
854 நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்
பிச்சியே நாளைப் பெறும்.
29
855 பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னை
உறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்
றிறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை ஆளுடை யான்செம்பொன் அம்பலத்தே.
30
856 அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக்
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடே
வாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே.
31
857. அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்
புற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் ...(5)

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்
இனைய தன்மைய திதுவே இதனை .....(10)

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே அவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் படாதன சிலவே என்றிவை .....(15)

கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்றும்
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய ......(20)

மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலஎம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை .......(25)

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே ........(30)

நண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லை
இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே, அ•தான்று
நினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே .......(35)

நினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவே
இனிநனி இரப்பதொன் றுடையம் மனம்மருண்டு
புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்
நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் ........(40)

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்பர் உய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.
32
858 வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.
33
859 வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய்உன்னை அன்றிஒன்றைத்
தாழ்வார் அறியாச் சடுலநஞ் சுண்டிலை யாகில்அன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே.
34
860 வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ
டுணங்கிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே
பிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும்
பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும்
மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.
35
861 ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை .....(5)

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் ....(10)

தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத் தைவகை அமளிச்
சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கத்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் .....(15)

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் ........(20)

வார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் .........(25)

நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது ........(30)

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பில்
இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்க அன்றி
இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் ........(35)

வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே.
36
862 ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.
37
863 கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக் கன்புசெய்யா
மிண்டர்மிண் டித்திரி வார்எனக்
கென்னினி நானவன்தன்
தொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.
38
864 தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு
சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்கஞ்சி உண்டி வெறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி
மிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.
39
865 சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்து
அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய .....(5)

செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி ....(10)

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்
கடல்விடம் அருந்தின கருணை போற்றி
தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட ......(15)

வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி .......(20)

பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் ........(25)

சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி .......(30)

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபுல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
பொங்குளை அழல்வாய்ப் புகைவழி ஒருதனிச் ......(35)

சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி .......(40)

கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம்போற்றி
கூறுதற் கரியநின் ஏறு போற்றி .......(45)

ஏக வெற்பன் மகிழும் மகட் கிடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்
தாடும் நாடகம் போற்றி என்றாங்கு .........(50)

என்றும் போற்றினும் என்தனக் கிறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
40

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல

11.2 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருக்கழுமல மும்மணிக் கோவை (866 - 895)

866 திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூறு
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த ...(5)

வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை ...(10)

இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின் ....(15)

பொலிவினொடு மலர மறையோர்
கழுமல நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்கு
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்து ....(20)

உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி
முதலில் காலம் இனிது வீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோவென் றழைப்பமுன் னின்று ....(25)

ஞான போனகத் தருள்அட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யாரென
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன் என்றும் ...(30)

பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
1
867 அருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.
2
868 ஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே.
3
869 கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் நிறத்து மதனுடை அடுசினத் ...(5)

தைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் .....(10)

பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து .....(15)

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய் ......(20)

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்கு .......(25)

எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.
4
870 மானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.
5
871 ஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத்
தெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்
தெளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே.
6
872 அருள்பழுத் தளித்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத் தாடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் ...(5)

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி ....(10)

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியும் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யான்அவர்
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் .....(15)

வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவை
தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே ....(20)

காலமும் சென்றது யான்இதன் மேலினி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் ......(25)

இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல் நின்கடனே.
7
873 கடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் - உடலாம்
முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.
8
874 தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேஅலர்கொண்
டெழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுவா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென்
றால்ஓர் வசையில்லையே.
9
875 வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து
வேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக .......(5)
அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் .......(10)

காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை ......(15)
ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
போவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி ......(20)
இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்
அன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி .......(25)
ஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த தெந்தைநின்
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை ....(30)
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றும் துணிவுபோன் றெனவே.
10
876 எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.
11
877 போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேயிணை யாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே.
12

(பின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப் பிரதிகளில் கண்டவை. திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர் வித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப் பெற்றவை. மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது என்பது இலக்கணம்.)

878 சார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும
கருணை முதுவெள்ளம் பெருகு திருநயன
கைவலம் நெல்லியங் கனியது போலச்
சைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்¨
வரன்முறை பகர்ந்த திருமலர் வாய .....(5)

பவளவரை மீதில் தவளமின் என்னச்
செப்பரு மார்பணி முப்புரி நூல
பேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்
பின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்
மாயைமா மாயை ஆயபே யினுக்கும் ...... (10)

அஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல
அருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்
துங்க இதயத்தும் தங்கு பொற்பாத
துன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்
அளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் ......(15)

சந்திர திலகம் சிந்துரம் மருவலின்
உறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்
சாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்
பணைஎழு மரவம் பிணையொடு மேவலின்
காமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் ......(20)

அளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி
னாடக மருவி நீடறை பெருதலின்
நாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்
அகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்
மலையா சலமென நிலைசேர் மாட .......(25)

மாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை
நேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்
காழிமா நகரம் தூழிதே ரமர்ந்த
அமையா அன்பின் உமையாள் கொழுந
தெரியநான் முகன்பணி பெரியநா யகநின் ......(30)

பொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்
மேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்
பரம்பரை தவறா வரம்பெரு குரவன்
மருளற இரங்கி அருளிய குறிஎனும்
நிந்தையில் கனக மந்தரம் நிறுவி ......(35)

மாண்அறிவென்னும் தூணிடைப் பிணித்த
நேசம் என்னும் வாசுகி கொளுவி
மதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய
பேரா இன்பச் சீர்ஆ னந்தம்
பெறலறும் அமுதம் திறனொடும் பெற்று .......(40)

ஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு
பிறப்பிறப் பென்னும் மறப்பெரும் பயத்தால்
பன்னாட் பட்ட இன்னாங் ககற்றி
என்னையும் தன்னையும் மறந்திட்
டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. ......(45)
13
879 பொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்
மருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சே
பூந்தராய் நாதரைநீ போற்று.
14
880 போற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன்
ஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லை
தூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக்
கீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே.
15
881 இன்றென உளதென அன்றென ஆமென
உரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி
பல்வித மாகச் சொல்வகைச் சமய
மாகிய பயம்பில் போகுதல் குறித்த
நிலையில் துறைபல நிலையுள துறைசில .....(5)

பொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்
மயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்
வன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்
நரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்
வெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் .....(10)

ஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்
காயமென அமைத்த மாயநா வாயில்
இருவினை என்ன வருசரக் கேற்றிக்
காமம் உலோபம் ஏமமா மோகம்
மிதமறு குரோதம் மதமாச் சரியமென் .....(15)

றுரைபெறு யவனர் நிரையுற இருத்தி
நெடுநீர் என்னப் படுநெடு நாணில்
தங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி
அற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்
தடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் .......(20)

தானம் ஆதி யான தீவுகளிற்
செல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி
இவ்வா றியங்கும் அவ்வா றதனுள்
முன்பார் கால வன்பார் தாக்கத்
தொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம . ...(25)

அக்கடல் நீருள் புக்கறி வழிவுழி
மறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்
கடுநர கென்னும் படுகுழி அழுந்தி
உளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்
இம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று ....(30)

முற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்
ஓதா துணர்ந்த நாதா தீத
அருவுரு என்னும் பொருள்முழு துடையோய்
யாவரும் நின்வய மேவரப் புரிவோய்
கரையறும் இன்பப் புரைதவிர் நிமல .......(35)

சாந்தணி வனமுலை ஏந்திழை பாக
ஞானமா மணநிறை மோனமா மலரே
வித்தகம் பழுத்த முத்திவான் கனியே
பரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்த
திருத்தகு நீழல் அருட்பெருந் தருவே ...(40)

பத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த
பசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்க
தோற்றம் போல வீற்றுவீற் றமைந்த
தீங்கனி பணைதொறும் தாங்குமா தணையும்
வித்துரு மத்திணை ஒத்தசெந் தளிரும் .....(45)

ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்
மேலிடு வண்டெனும் நீலமா மணியும்
மரகதம் என்ன விரவுகாய்த் திரளும்
மறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும்
கிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும் ....(50)

எண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி
மேவிய பெரும ஆவி நாயகனே
கணபணக் கச்சைப் பணஅர வசைத்த
மட்டலர் புழுகணி சட்டை நாயகன்
எனுமீ காமன் மன்னினன் புரப்பநீ ....(55)

வீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்
தோணியே பற்றெனத் துணிந்து
காணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே.
16
882 கண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான
வண்டேனுண் டேமகிழும் வண்டானேன் – பண்டே
அளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக்
குளிர்சிவா னந்தமிலங் கும்.
17
883 கும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர்
வம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்
கொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்
அம்பிட்ட கட்சிச்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே.
18
884 ஆகுவா கனனைத் தோகைவா கனனை
உற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனை
ஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே
கற்றவர் கருதும் நற்றவக் கரும்பே
இருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே .......(5)

கதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே
நிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனே
துன்பமொன் றறியா இன்பவா ரிதியே
மறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே
விறலரி பிரமன் பெறலரும் பொருளே .....(10)

சிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த
ஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்
சுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்
நவமணி தெளித்துக் குவவின கூர்நுதித்
தூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் .......(15)

இமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப
நீலமே காரமும் கோலமார் குயிலும்
துப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்
தகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்
மேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் ......(20)

நன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்
இனமெனக் கருதி மனமுவந் தணைத்த
உயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்
கூறுபட நோக்கினர் வேறுபா டறியா
வளனொடு செறிந்த அளவிலா மாடத் ...(25)

துறைதரு கற்பு நிறைகுல மடவார்
அளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்
குலாவிய புருவமும் நிலாவிரி குழையும்
நறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்
தத்துநீர் உவரி முத்தமா லிகையும் ......(30)

பிரளய வெள்ளத் திரளினும் அழியாத்
திருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்
சந்திர விம்பமும் இந்திரத் தனுவும்
இலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்
வாரா மின்னும் தாரா கணமும் ...(35)

ஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்
காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த
காழிநா யகனே வாழிபூ ரணனே
ஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்
பொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும் ......(40)

ஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்
ஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும்
மொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த
காளிமச் சீருண நீள்இயற் கனக
மாமெனக் கூறும் தோமறு மொழியும் .......(45)

கருட தியானம் மருள்தப வந்தோர்
நோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்
ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்
பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்
அங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப ....(50)

இயலும் பட்டாங் கயல்அல என்னல்
சரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த
பேதையேன் பாசத் தீவினை அகற்றித்
திருவருட் செல்வம் பெருகுமா றுதவி
அளித்தருள் பேரின் பாகும் ....(55)

களித்திடும் முத்திக் காழிவான் கனியே.
19
885 காழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ
காழிக் குமரன் கவிகையினை - ஆழிக்கட்
கண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும்
கொண்டனள்என் றன்னமே கூறு.
20
886 கூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும்
மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்ட
நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம்
தேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே.
21
887 செருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி
எம்ம னோரின் இறந்துபிறந் துழலும்
மம்மரிற் பெரிய வானவர் குழுவை
மெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்
வழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே ...(5)

புறவார் பசும்புற் கறவாக் கற்பசு
வாயிடைச் செருகித் தூயநீர் உதவி
அருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்
பேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்
எட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி ....(10)

ஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி
உறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்
கருதி முயலுந் திருவிலி போலவும்
இலகுவால் அரிசி உலைபெய எண்ணி
வெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் ....(15)

அருநிலம் உழுததின் எருமிகப் பெய்து
வித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்
சித்தத் துன்னும் மத்தர் போலவும்
வாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி
இம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா ....(20)

திடருறும் மாந்தர் புடவியிற் பலரால்
அன்னவா றெளியனும் உன்னிமதி மயங்கா
தெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி
என்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்
சேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து ......(25)

நாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்
பெருகிய அன்பென வருநீர் நிறைந்த
இதய வாவிப் பதுமமா மலரின்
குணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்
கண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் ....(30)

தறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்
றசைவற் றிருக்க இசையத் தருதி
நிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்
உந்திய வன்ன உருமரு வுதலான்
மந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் ......(35)

இதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால்
வேதமே ஒப்பென ஓதுகோ புரமும்
ஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்
நூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்
பலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் ......(40)

முத்தரை வியக்கும் பத்திமை அதனால்
சிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும்
வெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால்
கட்டா மரைபல மட்டார் தலினால்
அஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் .........(45)

இந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்
எங்கணும் நிறைந்த வெங்குரு நாதா
கருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே
கருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே
சிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் ........(50)

ஆகமார் வனமுலை அணையும்
போகமார் இதழிப் பூங்கண் ணியனே.
22
888 கண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல்
உண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப்
புகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்
அகலுமே பாசவிருள் அன்று.
23
889 இருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான்
சுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன்
பருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம்
பெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெருகுவளே.
24
890 பெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்
காயினும் சிறந்த நேயநெஞ் சினனே
யாகக் கழனியின் யோகத் தபோதனர்
ஆனபேர் உழவர் மானமோ டாக்கிய
முயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை ........(5)

உதிரம் என்னும் முதிர்சா றொழுக
நகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச்
சுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்
டரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே
குங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் .....(10)

பெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக
பாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி
வெளிய கற்பூரம் களிகொள் கத்தூரி
நறுமணம் எவையும் உறுமுறை பொருந்தி
உண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் ......(15)

நெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்
மதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரும்
வருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்
முதல்உப கரணம் பதனொடு மரீஇத்
தளவரும் பென்ன வளமலி போனகம் .....(20)

மாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்
நன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்
பாடகச் சீரடிப் பான்மொழி மடவார்
நாடகத் தொழில்பயில் நீடரங் கெவையும்
கலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும் ......(25)

உள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்
வள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்
பூமகள் உறையு ளாமென விளங்கும்
பெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே
ஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் .......(30)

வளமலி நான்முகக் களமருன் ஏவலின்
உரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட
மண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்
சராசரத் தொகுதி விராயவித் திட்டுப்
பாதவ மிருகம் பறவை மானிடர் ......(35)

ஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப
மாவுறை மருமக் காவ லாளர்
வளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்
புரிபயன் பெறுவான் அரிதர வியற்றி
மெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி .......(40)

புலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி
அற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்
பூதசா ரத்தனுப் பூத மகாதனு
பூத பரிணாமம் புகலுறு யாக்கை
மூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் ........(45)

பொன்னில நிரயம் இந்நிலம் என்னும்
இடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள்
ஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்
சேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்
அரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் ....(50)

புரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்
மாசுகம் நீயுறும் வண்மை
பேசுக கருணைப் பெரியநா யகனே.
25
891 பெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்
கொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால்
விடையாய் புகலி விமலா மவுன
விடையாய் பிறியா விடை.
26
892 விடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப்
படையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண்
சடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூ
விடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே.
27
893 விளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்
எழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி
குறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே
ஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி
குழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் .....(5)

நற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்
திருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்
கேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்
மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்
பற்பல உதவுங் கற்பகத் தருவு ....(10)

நந்தா வளன்அருட் சிந்தா மணியும்
வாமமாம் மேனிய காம தேனுவும்
அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
கடவுளர் அணிமணித் தடமகு டங்கள்
காற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி ......(15)

முனிவர் ஆசி நனிபல மொழியக்
கரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்
கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா
இசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற
முடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண் ........(20)

அமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்
இந்தி ராணி வந்தரு கிருப்பக்
கருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்
செங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்த
பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் .....(25)

அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்
பழமறை கனிந்து மழவுபெற் றிருந்த
செந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்
பனுவ லாட்டி இனிதுவந் திருப்ப
வண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து .....(30)

பொற்றா துண்ணா முற்றா இன்பப்
பிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்
நெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது
திண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி
எம்மால் எவையும் இயன்றன என்னச் .....(35)

செம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்
திதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி
வருமுலை சுமந்த திருமகள் பச்சைப்
பசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்
கடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் ....(40)

தண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்
ஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்
காமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்
துத்திநெய் பரந்து பைத்தபை அகலில்
அணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் ......(45)

சுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல்
மறுவிலா நீல வரைகிடந் தென்ன
அறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்
அழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்
கற்றவர் கருத்தின் உற்று நோக்குழி ......(50)

இந்திர சாலம் முந்துநீள் கனவு
வெண்டேர் போல உண்டெனத் தோன்றி
இலவாம் ஆதலின் நலமல ஆங்கவை
நிலைபே றுடையது நின்னருட் செல்வம்
அன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் .....(55)

அதனால்
எளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி
மரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த
அரமியம் அதனை விரிகுழை பொதுளி
அரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் .....(60)

ஆடக அலங்கல் அணியணி நிறைத்த
சேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்
துணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்
மொய்க்கும்வண் சிறையுளி மைக்கரு நிறங்கள்
பளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் .......(65)

பித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்
வந்ததிங் கிரவெனச் சந்தத மடவார்
வார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்
புல்லிய கலவிப் புதியதேன் நுகரும்
மல்லலங் காழி வளநகர் வாண .....(70)

குறிகுணங் கடந்த மறுவில்மா மணியே
உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண
அந்த மாதி முந்தையே தவிர்ந்த
அனாதி முத்த என்ஆதி நித்த
அருவுரு வில்லா ஒருபெரும் பொருளே .......(75)
அளவையின் அடங்கா தொளிர்சுக நேய
உருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே
நலங்கனி பெரிய நாயகி
கலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே.
28
894 பணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா
புணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க்
கரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மா
வரைக்காசென் றான்அதற்கு மான்.
29
895 மானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க
ணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்
ஏனைப் பெரும்பொருள் கல்விமெய் செல்வம் இருந்தளிப்பார்
தேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே.
30

திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல


11.3 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (896 - 925)

896 தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு ...(5)

ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளித்
திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி ....(10)

நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் ...(15)

திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து
நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி ...(20)

அரத்த ஆடை விரித்து மீதுறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் ....(25)

நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் ....(30)

பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவும் ....(35)

தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்த
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் ...(40)

இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று ...(45)

எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும் ...(50)

அரவும் மதியமும் விரவித் தொடுத்த
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணம் கருத்தையும் கடந்து ...(55)

சேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து ...(60)

வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
இனையவண் ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒரு வயிற்றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க ...(65)

வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்கு
உலகம் ஏழும் பன்முறை ஈன்று
மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் ....(70)

திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
1
897 பொருளும் குலனும் புகழும் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்
கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை
மருதாஎன் பார்க்கு வரும்.
2
898 வருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்ற