campantar tEvAram 1 part II
(verses 722 -1469)
(in tamil script, unicode format)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - இரண்டாம் பகுதி
பாடல்கள் (722 - 1469)




Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding.
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website

http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை - இரண்டாம் பகுதி


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை -இரண்டாம் பகுதி

1.67 திருப்பழனம்

பண் - தக்கேசி

722 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.
1.67.1
723 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால்
எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.
1.67.2
724 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே.
1.67.3
725 உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப்
பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே.
1.67.4
726 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.
1.67.5
727 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.
1.67.6
728 பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்
பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே.
1.67.7
729 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே.
1.67.8
730 கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே.
1.67.9
731 கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.
1.67.10
732 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.
1.67.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.68 திருக்கயிலாயம்

பண் - தக்கேசி

733 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.
1.68.1
734 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.
1.68.2
735 மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.
1.68.3
736 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.
1.68.4
737 ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.
1.68.5
738 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.
1.68.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.68.7
734 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.
1.68.8
740 ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.
1.68.9
741 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.
1.68.10
742 போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.
1.68.11

சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.69 திரு அண்ணாமலை

பண் - தக்கேசி

743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.1
744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.
1.69.2
745 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.3
746 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.4
747 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.5
748 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.6
749 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.7
750 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.
1.69.8
751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
1.69.9
752 தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.
1.69.10
753 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்
சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.
1.69.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.70 திரு ஈங்கோய்மலை

பண் - தக்கேசி

754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.1
755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.
1.70.2
756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.3
757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.4
758 நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.
1.70.5
759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
1.70.6
760 வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
1.70.7
761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
1.70.8
762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.
1.70.9
763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.
1.70.10
764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.
1.70.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்

பண் - தக்கேசி

765 765
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.1
766 பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.
1.71.2
767 முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்
கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.3
768 பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.4
769 நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.5
770 நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்
தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.6
771 குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.
1.71.7
772 கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.8
773 நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.9
774 நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
1.71.10
775 குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.
1.71.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.72 திருக்குடந்தைக்காரோணம்

பண் - தக்கேசி

776 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.
1.72.1
777 முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.
1.72.2
778 மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.
1.72.3
779 போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.
1.72.4
780 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.
1.72.5
781 மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.
1.72.6
782 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்
கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.
1.72.7
783 வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.
1.72.8
784 கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.
1.72.9
785 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.
1.72.10
786 கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.
1.72.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.73 திருக்கானூர்

பண் - தக்கேசி

787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.
1.73.1
788 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.
1.73.2
789 சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.
1.73.3
790 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.
1.73.4
791 தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.
1.73.5
792 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.
1.73.6
793 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.
1.73.7
794 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.
1.73.8
795 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.
1.73.9
796 ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.
1.73.10
797 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்
பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.
1.73.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.74 திருப்புறவம்

பண் - தக்கேசி

798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.1
799 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக
இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.2
800 பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.3
801 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.4
802 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.5
803 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.6
804 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.7
805 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.8
806 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.9
807 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
1.74.10
808 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.
1.74.11

திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.


திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

1.75 திருவெங்குரு

பண் - குறிஞ்சி

809 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள
உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.1
810 பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி
மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.2
811 ஓரியல் பில்லா உருவம தாகி
ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று
நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.3
812 வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.4
813 சடையினர் மேனி நீறது பூசித்
தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி
உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.5
814 கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.6
815 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.7
816 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.8
817 ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.9
818 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
1.75.10
819 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியு மாடியும் பயில வல்லார்கள்
விண்ணவர் விமானங் கொடுவர வேறி
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.
1.75.11

இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.76 திரு இலம்பையங்கோட்டூர்

பண் - குறிஞ்சி

820 மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.1
821 திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமல னெனதுரை தனதுரை யாக
நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை
கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.2
822 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
காலனாம் எனதுரை தனதுரை யாகக்
கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.
1.76.3
823 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
விளம்புவா னெனதுரை தனதுரை யாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்
கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.4
824 தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக
வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங்
கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.5
825 மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற
வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலா னெனதுரை தனதுரை யாகத்
தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.6
826 நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல றாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.7
827 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலா மெனதுரை தனதுரை யாக
ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரண முழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.8
828 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.9
829 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்
களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
1.76.10
830 கந்தனை மலிகனை கடலொலி யோதங்
கானலங் கழிவளர் கழுமல மென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.
1.76.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரர், தேவியார் - கோடேந்துமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.77 திருஅச்சிறுபாக்கம்

பண் - குறிஞ்சி

831 பொன்றிரண் டன்ன புரிசடை புரள
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.1
832 தேனினு மினியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.2
833 காரிரு ளுருவ மால்வரை புரையக்
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியில் சேரார்
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.3
834 மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்
மலைமக ளவளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத்
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.4
835 விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும்
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.5
836 நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடுமெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.6
837 ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.7
838 கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.
1.77.8
839 நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.9
840 வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1.77.10
841 மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே.
1.77.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.78 திரு இடைச்சுரம்

பண் - குறிஞ்சி

842 வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.1
843 ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.2
844 கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.3
845 கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.4
844 கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.5
845 தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.6
846 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.7
847 தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.8
850 பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.9
851 பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1.78.10
852 மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.
1.78.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இடைச்சுரநாதர், தேவியார் - இமயமடக்கொடியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.79 திருக்கழுமலம்

பண் - குறிஞ்சி

853 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.1
854 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.792
855 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.3
856 எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.4
857 ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.5
858 முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமு மேந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.6
859 கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.7
860 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.8
861 விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.9
862 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
1.79.10
863 கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.
1.79.11

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.80 கோயில்

பண் - குறிஞ்சி

864 கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
1.80.1
865 பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.
1.80.2
866 மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.
1.80.3
867 நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.
1.80.4
868 செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
1.80.5
869 வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.
1.80.6
870 அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.
1.80.7
871 கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.
1.80.8
872 கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
1.80.9
873 பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
1.80.10
874 ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
1.80.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,
தேவியார் - சிவகாமியம்மை.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


1.81 சீர்காழி

பண் - குறிஞ்சி

875 நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
1.81.1
876 துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.
1.81.2
877 ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
1.81.3
(*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. 1.81.4-7
878 இரவ