|
Home > Temples of India > vaippu sthalam
திருவேகம்பத்து
இறைவர் திருப்பெயர் : ஏகாம்பரேஸ்வரர், ஏகாம்பரநாதர்.
இறைவியார் திருப்பெயர் : சிநேகவல்லி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : இராவணன்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4).
தல வரலாறு
- 'திருவேகம்பம்' என்பதே இத்தலத்தின் பழம் பெயராகும். இஃது இன்று மாறி, 'திருவேகம்பத்து' என்று வழங்குகிறது.
- மக்கள் பேச்சு வழக்கில் 'திருவேகம்பட்டு' என்று சொல்கின்றனர்.
- கோயிலில் உள்ள பாண்டியர் மற்றும் பிற்காலக் கல்வெட்டுக்களில் "கானப்பேர் கூற்றத்தைச் சேர்ந்த திருவேகம்பம்" என்றே
இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.
- பெருமை வாய்ந்த காஞ்சிபுரத்தையும், அங்குள்ள ஏகாம்பர நாதரையும் நினைவிற் கொள்ளும் வகையில், பாண்டிய நாட்டில்
தோன்றிய பதியே இத் திருவேகம்பம் / திருவேகம்பத்து - ஆகும். இதனாலேயே இவ்வூர் தட்சிண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- இராவணன் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
- கோயிலின் கிழக்கில் அகத்தியர் தீர்த்தம் உள்ளது; கோயிலின் பின்புறம் பெரிய தெப்பக் குளம் உள்ளது.
- இத்தலத்தைச் சூழ்ந்துள்ள நாடுகள் நான்காகச் சொல்லப்படுகின்றன. அவை 1. சிலாமேக வளநாடு, 2. தென்னிலை நாடு,
3. உருவாட்டி நாடு, 4. ராஜவள நாடு என்பன.
- சிற்பங்களும், கல்வெட்டுக்களும் நிரம்பப் பெற்றுத் திகழும் இத்திருக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
பின்பு 16ஆம் நூற்றாண்டில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- இக்கோயிலில் 1. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 2. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், 3. முதலாம் சடைய வர்மன்
விக்கிரம பாண்டியன், 4. முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கல்வெட்டுக்களில் இறைவன் "ஏகம்பமுடைய நாயனார்", "திருவேகம்பமுடைய தம்பிரானார்" என்று குறிக்கப்பட்டுள்ளார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில், காளையார் கோயிலுக்கும் திருவாடானைக்கும் மத்தியில் உள்ளது. சிவகங்கை,
தேவகோட்டை, திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து எளிதாக வரலாம். மதுரை - தொண்டி சாலையில் (மங்கம்மா சாலையில்)
கோயில் உள்ளது.
|