|
Home > Temples of India > vaippu sthalam
தெள்ளாறு
இறைவர் திருப்பெயர் : திருமூலட்டானேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டேஸ்வரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10); சுந்தரர் - நள்ளாறு தெள்ளா (7-92-9).
தல வரலாறு
- இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கல்வெட்டு உணர்த்தும் வியப்பான செய்தியொன்று - தெள்ளாற்றில் ஒரு நாள் மாலையில் குளத்திலிருந்து குடிநீர் கொண்டு வீடு
திரும்பிய பெண்களை, குடித்து களித்திருந்த ஒருவன் கேலி செய்து பழிச்சொல் சொல்லி ஏசினான். அப்பெண்கள் ஊராண்மைக் கழக
நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கு விசாரிக்கப்பட்டு தவறு செய்தவனுக்கு திருமூலட்டான நாதர் கோயிலில் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு திருவிளக்கு ஏற்றுமாறு தீர்ப்பு உரைத்து (அவன் செய்த தவறுக்கு பிராயசித்தம் கிடைக்கும் பொருட்டு) தண்டனை தரப்பட்டது.
இத்தண்டனையைத் தந்த நீதிபதியே அவன் மனைவிதான். ஒருநாள் அவனுக்குப் பதிலாக மனைவி நெய் எடுத்துக்கொண்டு கோயிலுக்குச்
சென்றாள். அதைக் கண்ட பெண்ணொருத்தி அவளைக் கேட்க, "ஊராண்மைக் கழகத் தலைவி - நீதிபதி என்ற முறையில் குற்றம் செய்தவருக்குத்
தண்டனை தந்தேன்; இப்போது மனைவி என்ற முறையில் அவருக்காக அவர் செய்யவேண்டிய பணியை நான் செய்கிறேன் இதில் என்ன தவறு?"
என்று அவள் சொன்னாளாம்.
சிறப்புக்கள்
- பாண்டியன் சீமாறன் சீவல்லபன் என்பவனை மூன்றாம் நந்திவர்ம பல்லவன் தெள்ளாற்றில் போரிட்டு வெற்றி பெற்றதாக
வரலாறு கூறுகிறது. நந்திக் கலம்பகம் நூலுக்குரிய தலைவன் இந்நந்திவர்மனே ஆவான்.
- சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் "காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்" என்று போற்றப்படும் கழற்சிங்க
நாயனார் இந்நந்தி வர்ம மன்னனே ஆவார் என்று சொல்லப்படுகிறது. இந்த நந்திவர்மனோடு போரிட்டவன் வரகுணபாண்டியன் மகனான சீமாறன் சீவல்லபன் ஆவான் என்றும் கருதப்படுகிறது.
- கல்வெட்டுக்களில் நந்திவர்மன் "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என்றே குறிப்பிடப்படுகின்றான்.
- கல்வெட்டில் இவ்வூர் "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து, விக்ரம பாண்டிய வளநாட்டு, தெள்ளாறு
நாட்டுத் தெள்ளாறு" என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவாமி "மூலேஸ்வரர்", "தெள்ளாறுடையார்" என்றும், கோயில் "திருமூலட்டானம்
உடையார்கோயில்" என்றும் குறிக்கப்படுகிறது.
- கல்வெட்டுக்களிலிருந்து - 1. காளிங்கராயன் செய்த திருப்பணிகள், 2. சிற்றாமூர்த்தில்லை வனமுடையான் சந்திக் கட்டளை
அமைத்தது, 3. விக்ரம பாண்டியன் காலத்தில் அளிக்கப்பட்ட மானியம் முதலியவை பற்றிய செய்திகள் தெரியவருகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
வந்தவாசி - திண்டிவனம் பேருந்துச் சாலையில் தெள்ளாறு உள்ளது; பேருந்து நிற்கும் இடத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது.
|