|
Home > Temples of India > vaippu sthalam
கரபுரம் (விரிஞ்சிபுரம் - திருப்பாற்கடல்)
இறைவர் திருப்பெயர் : கரபுரீஸ்வரர் (திருப்பாற்கடல்). மார்க்கசகாயர், மார்க்கபந்தீஸ்வரர் (விரிஞ்சிபுரம்).
இறைவியார் திருப்பெயர் : அபிதகுஜாம்பாள் (திருப்பாற்கடல்). மரகதவல்லி, மரகதாம்பிகை (விரிஞ்சிபுரம்)
தல மரம் : பனை (விரிஞ்சிபுரம்)
தீர்த்தம் : சிம்ம தீர்த்தம் (விரிஞ்சிபுரம்)
வழிபட்டோர் : உமாதேவி, திருமால், பிரமன், கரன் முதலியோர் (விரிஞ்சிபுரத்தில்).
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தெண்ணீர்ப் புனற்கெடில (6-7-7).
தல வரலாறு
- கரபுரம் என்னும் வைப்புத் தலமாக இரு ஊர்கள் குறிக்கப்படுகின்றன; அவை 1. திருப்பாற்கடல், 2. விரிஞ்சிபுரம்.
- 1. திருப்பாற்கடல் :-
- ஒரு சமயம் அவனி நாராயணச் சதுர்வேதி மங்கலத்துள் பல்வேறு வாரியங்களைச் சார்ந்தோரும், சான்றோர்களும் கூடியிருந்த
மகாசபையில், திருக்கரபுரக் கோயிலில் உள்ள சிவப்பிரான் மாகண்ட நன்பெருமாள் அங்கு வந்து திருக்கரபுரத்துப் பெருமானுக்குச்
சொந்தமான தோட்டமும் நிலமும் ஆறு உடைத்து மணல் நிரம்பிக் கிடக்கிறது என்று விண்ணப்பம் செய்தனன். கேட்ட சபையார்
கோயிலுக்கு மேலும் சில நிலங்களையளித்து அவற்றின் வருவாயைக் கொண்டு கரபுரத்து இறைவனுக்கு இருநாழி நெல்லால் கிடைக்கும்
அரிசியைக் கொண்டு அமுது படைக்கவும், மூன்று பொழுது திருவிளக்கேற்றி ஆராதனை செய்து வருமாறும் பணித்து, இதனைச்
சிலாலோகை செய்து வைக்கவும் உத்தரவிட்டனர் என்ற செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது.
- 2. விரிஞ்சிபுரம் :-
- கரன் வழிபட்டதால் கரபுரம் என்றும், பிரமன் (விரிஞ்சன்) வழிபட்டதால் விரிஞ்சிபுரம் என்றும் பெயர் பெற்றது.
- மிளகுப் பொதியை எடுத்துச் சென்ற வணிகனுக்கு இறைவன் வழித் துணையாகச் சென்றதால் விரிஞ்சிபுரம் பெருமான் வழித்துணை நாதர் என்றும் பெயர் பெற்றார்.
சிறப்புக்கள்
- 1. திருப்பாற்கடல் :-
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இடம் பெற்றுள்ள (திருப்பாற்கடல்) திருத்தலமாகும்.
- இவ்வூரில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஆதிரங்கநாதப் பெருமாள் என இரு வைணவ ஆலயங்கள் உள்ளன; இதன் அடிப்படையிலேயே இவ்வூர் "திருப்பாற்கடல்" என்று பெயர் பெற்றிருக்கலாம்.
- இரண்டாம் பராந்தக சோழனின் படைத் தலைவனான "பார்த்திவேந்திராதி வர்மன்" காலத்தில் இவ்வூர்
தொண்டை மண்டலத்துள் படுவூர்க் கோட்டத்துக் காவிரிப் பாக்கமாகிய அவனி நாராயணச்சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்திருந்தது
என்று இக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
- 2. விரிஞ்சிபுரம் :-
- பிராகாரத்தில் சிம்ம தீர்த்தம் உள்ளது; சுதையால் செய்யப்பட்ட பெரிய சிம்மத்தின் வாயினுள் செல்வது போலப்
படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- பிராகாரத்தின் இருகோடியிலும் சிற்பக் கலையழகு வாய்ந்த இரு கல்யாண மண்டபங்கள் உள்ளன; இவையிரண்டிலும் பங்குனிப் பெருவிழாவில் சுவாமிக்குத் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
- இதையடுத்து நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.
- பிராகாரத்தில் பல சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன; அவற்றில் ஒன்று பஞ்சமுக லிங்கமாகவுள்ளது. இவற்றுக்கு மத்தியில் காரைக்காலம்மையார்
மூர்த்தம் மட்டும் உள்ளது.
- சுவாமி சந்நிதி உள்சுற்றில் நால்வர் - பொல்லாப்பிள்ளையார் - நம்பியாண்டார் நம்பி - சேக்கிழார் - தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள்
வரிசையாக உள்ளன.
- கருவறை கஜப்பிரஷ்டை அமைப்புடையது.
- மூலவர் பெரிய ஆவுடையாரில் - உயரமான பாணத்துடன் கம்பீரமாக காட்சிதருகிறார்.
- நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடக்கின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - வேலூர், காஞ்சிபுரம் - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பாக்கத்தை அடைந்து, அங்கிருந்து திருப்பாற்கடல் சாலையில் 2 கி.மீ. சென்றால் (திருப்பாற்கடல்) ஊரையடையலாம். விரிஞ்சிபுரத்திற்கு - வேலூரிலிருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் "செதுவாலை" வந்து அங்கு கைகாட்டி உள்ளவாறு வலப்புறமாக பிரிந்து செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் விரிஞ்சிபுரத்தை அடையலாம்.
|