|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)
இறைவர் திருப்பெயர் : ரத்னகீரீசர், அரதனாசலேஸ்வரர், மாணிக்கஈசர், முடித்தழும்பர்.
இறைவியார் திருப்பெயர் : சுரும்பார்குழலி.
தல மரம் :
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர் : இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - கால பாசம் பிடித்தெழு.
தல வரலாறு
இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.
மாணிக்கம் வேண்டிவந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் நிரப்பச் சொன்னார், அது எப்படியும் நிரம்பால் இருக்கக் கண்டு, கோபங் கொண்ட அரசன், உடைவாளை ஓச்ச, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து அருளினார். மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு முடித்தழும்பர் என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.
இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. "காகம் அணுகாமலை" என்பர். "காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு " என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர்.
அருகில் உள்ள கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபு.
சிறப்புக்கள்
இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்.
மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.
சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
|