|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
இறைவர் திருப்பெயர் : மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை, பாலசௌந்தரி.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்)
வழிபட்டோர் : பிரமன், லட்சுமி, உமாதேவி முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - துணிவளர் திங்கள் துளங்கி
2. சுந்தரர் - வைத்தனன் தனக்கே.
தல வரலாறு
"பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்று வழங்கப்பெற்றது"; திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது.
கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த 'முயலகன்' நோயைச் சம்பந்தர் தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில், முயலகனுக்குப் பதிலாக பாம்பு உள்ளது. நடராசர் சர்ப்ப நடன மூர்த்தியாக காட்சித் தருகிறார். ( 'முயலகன் என்பது வலிப்பும் வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய்' )
சிறப்புக்கள்
சுந்தரர் பொன் பெற்றத் தலம்.
இத்தல இறைவன், சுந்தரர் தம் பொன்னை மாற்றுக் குறைவதாக உரைத்துக் காட்ட அறிந்த பிரான் - 'மாற்றறிவரதர் ' என்றும்; வன்னிசூழ்ந்த வனத்தில் உள்ளவராதலின் 'சமீவனேஸ்வரர் ' என்றும்; பிரமன் வழிபட்டவராதலின் பிரமபுரீசுவரர் என்றும் விளங்குகிறார்.
முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் 'ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ' எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சந்பந்தர், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன.
சுவாமி சந்நிதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு "கிழி கொடுத்தருளிய திருவாசல்" என்ற பெயரால் குறிக்கின்றது.
இங்குள்ள சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப்பாடும் அமைப்பில் உள்ளது.
இத்தல கல்வெட்டில் "பாச்சில் திருவாச்சிராமத்துப் பெருமானடிகள்" என்று இறைவனின் திருநாமம் குறிக்கப்படுகிறது.
இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது.
கி. பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - சேலம் பேருந்துச் சாலையில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது.
|